Tuesday, July 21, 2020

ஆனந்தம் -3

இனி நந்தி என்ற சொல்லைப் பார்ப்போம். வயிறு பெருத்த எருதை நந்தி என்பார்.  இங்கும் பெருகல் பொருளே அடிப்படை. எருதுப் பொருள் சங்கதத்தில் இல்லை. one of the attendants of siva என்று மட்டுமே அங்கு கொடுப்பார். அதாவது நந்தியைத் தேவராக்கும் தொன்மம் மட்டும் குறிப்பர். சிசுனதேவனை (அதுதாங்க, சிவனைக் கேலியாகச் சிசுனதேவன் என்பர்.) அவர் ஏற்றபின் நந்தியைத் தேவர் என்றாரே, அப்பிற்காலக் குறிப்பு மட்டுமே  சங்கத அகரமுதலியிலுள்ளது.  (இதே போல் நந்தகோபன் சொல்லிருக்கும். cowherd என்பார். ஆனால் cow = நந்தி சொல்ல மாட்டார். நான் புரிந்துகொண்ட வரை, ”நந்தின்” சொற்பயன்பாடு சங்கதத்தில் பின்னால் தான் எழுந்தது.

தமிழில் பல இடங்களில் நகரமும் தகரமும் போலிகள். நந்தியின் போலி துந்தி>தொந்தியும் வெளித்தள்ளும் வயிறு குறிக்கும். இச்சொல்லும் அங்கில்லை.. நந்தியென்ற பெயர் சிவனுக்கும் உண்டு. திருமூலருக்குப் பிடித்த சொல். அதைச் சங்கதம் ஏற்கும். ஆனால் எருது ? ஏற்கவில்லை. நந்தியோடு தொடர்புடைய வேறு சொற்களும் தமிழ் அகரமுதலியிலுண்டு,  ,அவற்றையும் சங்கதத்தில் காணோம். இவ்வளவு ஏன்? நந்தவனம் = மரங்களை நட்டு வளர்க்கும் தோட்டம், மோனியர் வில்லியம்சில் இல்லை. இன்னும் வியப்பான  இன்னொரு செய்தியும் பார்ப்போம்.

நத்தலென்பது தமிழில் ஒற்றைப் பரிமான முன்வரல், நகர்ச்சி காட்டும் உயிரியின் செயலைக் குறிக்கும். சங்குப் பூச்சிக்கும் இதே வகை ஒற்றைப் பரிமான நகர்ச்சி உண்டு. சங்கதத்தில் ”நந்திர்கு” நத்தைப் பொருளில்லை. 55000, 60000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரைவழி நகர்ந்துவந்த ஆதி மாந்தன் நத்தை, சங்கு போன்ற உயிரிகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் சாப்பிட்டே உயிர்வாழ்ந்ததாய் தொல்லியலும் மாந்தவியலும் சொல்கின்றன. இந்த வழிப்பாதையில் கடற்கரை ஓரங்களில்  நத்தைக் கூடுகள் நிறையக் கிட்டுவதாய்த் தொல்லியலார் சொல்கிறார்.  அதைப பற்றிய  ஆய்வும் அண்மைக் காலங்களில் சோமாலியா, தெற்கு ஏமன் கடற்கரைகளில் தீவிரமாகியுள்ளது.

இப்பழக்கம் உண்மையானால், நந்து, நத்தை போன்ற சொற்கள் ஆதி மாந்தரிடம் வெகுநாள் இருந்திருக்கும். ஆதி மாந்தரே (இவரை நெய்தல் மாந்தர் coastal people -என்பார் Spencer Wells) ஈரான். கூர்சசரம், மராட்டியம், கருநாடகம் வழி பழந்தமிழ்க் கடற்கரைக்கு வந்தார். அப்படி வந்தபோதே இவரிடம் மொழியிருந்தது என்றும் ஆய்வாளர் சொல்கிறார். அம்மொழி தமிழா, அதன்பின் தமிழெழுந்ததா என இன்று தெரியாது. ஆயினும் நந்து, நத்தை, நாகு என்பவை தவிர இவ்வுயிரியைக் குறிக்க வேறு சொற்கள் தமிழில் இல்லவேயில்லை   அதேபொழுது நந்து/நத்தை போன்றவை நிலம்வழி இந்தியாவினுள் நுழைந்த steppe மக்களிடமும் இல்லை. சங்கதத்தில் śambūka (snail),jala-manthara (water snail), vṛntāka (sea snail) போன்ற சொற்களே உள்ளன. ஓர்ந்து பாருங்கள். நந்து தமிழா, சங்கதமா?

என்னைக் கேட்டால் நிறைவுப் பொருளில் ”நந்தம்” பெரும்பாலும் தமிழில் இருந்து சங்கதம் போனதென்பேன். அங்கிருந்து  இங்கு வந்திருப்பின் நந்தென நத்தைக்கு நாம் சொல்லியிருக்க முடியாது. (நிறைவில் எழுந்த நந்தும் நத்தையான நந்தும் வெவ்வேறு வேரில் தோன்றியனவாய்த் தோன்றவில்லை. நந்தலுக்கு நகர்தல்  பொருளிருந்தால் பெருகல், வளர்தல், தழைத்தல் எனும் எல்லாமே நந்தோடு தொடர்புடைய பொருள்கள் தாம்) இப்போது சிக்கலுக்குள் வருகிறோம்.”நந்தம்” சொல்லை வடக்கிலிருந்து தமிழ் கடன்கொண்டது என்போமெனில் நத்தையில் ஏன் disconnect தென்படுகிறது? எண்ணிப் பாருங்கள். 55000 ஆண்டுகள் முன்வந்த AASI முந்தியவரா? கி.மு.1800 -1500 இல்  உள்நுழைந்த steppe மக்கள் முந்தியவரா? - (இதற்குத் தோதாகத் தான் சில ஆய்வாளர் தமிழரை அடிப்படை AASI ஓடு தொடர்புறுத்தாமல், சிந்து மக்களோடு சேர்ப்பார். தொடர்புகளைத் திரிப்பதில் அவ்வளவு முனைப்பு.

இனி நந்தின் சொற்பிறப்பு காண்போம். நுல்>நுல்+ந்+து>நு(ல்)ந்து>நுந்து>நந்து என இச்சொல் வளரும். நுந்தென்ற வடிவம் சங்கதத்தில் இல்லை. நுந்துதலும் முந்துதலும் ஒன்றிற்கு ஒன்று போலிகள். இரண்டிற்குமே  முன்வரல் பொருள் உண்டு. நுந்து, நுல்லில் கிளைத்த பெயர்ச்சொல் நுந்து, பின்னால் வினைப் பகுதியாகி நுந்தினேன்/ நுந்தினாய்/நுந்தினான்/ நுந்தினாள்/ நுந்தினர்/ நுந்தியது/ நுந்தின என்றெலாம் அமையும். நுல் பகுதியிலிருந்து நுந்து எனும் பகுதி உருவாகியிருக்கிறது. நுல் எனும் வேரைச் சங்கதம் காட்டாது. நுல்> நுல்வு>நூவு>நூவுதல் என்பது நீரை முன்தள்ளுதல். தோணியில் போகும் போது நீரை நூவியே/நாவியே நாம் நகர்கிறோம்.  நூவுதலுக்கு ”நீரை முன் இரைத்துப் பாய்ச்சுதல் = to irrigate” என்ற பொருளும் உண்டு. விளக்குத் திரியைத் தூண்டும் செயலையும் நூவுதல் என்பார், 

கட்டுரை முடிவிற்கு வந்துவிட்டோம். நான் நுல்லில் வளர்ந்த சொற்களை இங்கு கூறவில்லை. அவை ஏராளம். நந்தோடு தொடர்புடையவற்றை மட்டுமே கூறுகிறேன். நந்த காலம் = உச்சிக்கு அப்புறம் கிழக்கே நிழல் நீண்டு செல்லுங் காலம். பிற்பகல் என்றுஞ் சொல்கிறோம். நத்தம் = residential area. ஊர் வளர்கிறதெனில்  குடியிருப்புப் பகுதி வளரவேண்டும். எனவே வளரும் பகுதி நத்தமாயிற்று. (அழிந்து போன ஊருக்கும் நத்தம்  என்ற பெயர் எழலாம். முன்னால் கெடுதல் பொருள் பற்றிச்சொன்னேன்.)  பொன்னியின் செல்வனில் எதிர்முனையில் வருவாளே? நந்தினி. அவள் பெயரின் பொருள், “காமதேனுவின் மகள்”. நந்துதல் = தள்ளுதல், தூண்டுதல். அந்த திரியைச் சற்று நந்து. சோலை நன்கு விளங்கட்டும்,.

நுந்தலின் ஒலிப்பில் நகரம் தவிர்த்தது நுதல். முன்னுள்ள நெற்றி. நகரமும் மகரமும் போலிகள். எனவே முதலும் முன்வந்த பொருளைக்  குறிக்கும். நுந்து, நந்து தமிழில்லையானால் முதலும் தமிழில்லை. (ஒரு சொல்லை மட்டும் பாராதீர், ஒரு தொகுதி பார்த்து, “வடசொல்லா, தென்சொல்லா” என முடிவு செய்யச் சொல்வதன் முகன்மையை உணருங்கள்.) எந்தப் புனைவிலா நூலிலும் ”என்ன சொல்லப் போகிறோம்?” என முதலில் குறித்துப் பின் நூலுக்குள் விளக்குவது ”நுதலிப் புகுதல்” எனப்படும். நுதியும் நுனியும் ஒரே பொருளின் இரு வடிவங்கள்.

இனி முகரச் சொற்களைக் காண்போம். முத்தி= நிறைவு. பிறவிச் சுழற்சியின் முடிவாய் முத்தியைச் சொல்வர். அற்றுவிகம், செயினம், புத்தம், சிவம், விண்ணவம், வேதம் எனப்பல நெறிகள் முத்தியை நாடும். விதம் விதமான சொற்களால் அழைக்கும். First என்கிறோமே, முதல்; அதுவும் நுந்தோடு தொடர்புள்ளதே. முதலிலுள்ளவன் தலைவன்,. முதலி என அழைக்கப் பட்டான். இன்று சாதிப்பெயரானதால், முற்பொருள் பலருக்கும் தெரியாது போகிறது.  நத்தை போலவே மெதுவாய் முந்தி (=நகர்ந்து) ஒற்றைக் கோட்டில் போவதால் முதலை எனும் உயிரிப்பெயர் எழுந்தது.  முந்தல், முற்பிறந்தவன் என்ற பொருளில் வளர்ந்து, முது, முதியன், முந்தையனென்ற சொற்களை உருவாக்கியது. ஒரு பழத்தின் பருப்பு அதன் சதைக்கு வெளியே முந்தித் துருத்திக் கொண்டு இருந்தது முந்திரி. இன்னொரு முந்திரியும் உண்டு. பின்னத்தில் 1/320 என்பது முந்திரி எனப்படும். முந்து இருப்பது முந்து+இரி = முந்திரி,

மேலே கூறிய இத்தனை சொற்களையும் மறுத்தே ஆனந்தம் தமிழில்லை என்று சொல்ல முடியும். என்னைக் கேட்டால், ஆலும் நந்தமும் தமிழ். இரண்டையும் முதலில் கூட்டுச் சொல்லாய்ச் சேர்த்தது சங்கதம்..

அன்புடன்,
இராம.கி.

No comments: