Monday, July 20, 2020

ஆனந்தம் - 2

ஆனந்தமெனும் அறுபுலச் சொல்லுக்கும் பின் ஏதோவோர் ஐம்புலச் சொல்/நிகழ்வு அடியிலிருக்குமே?  அது என்ன? ஓர் இயலுமை சொல்கிறேன். யாரோ வறியவர் 2 நாள் சாப்பிடாது பசியால் துடித்து நாடி வருகிறார். இரக்கமுள்ள நீங்கள் உணவளித்து, ஓம்புகிறீர்கள். சாப்பிட்டவுடன்,  “வேறு ஏதேனும் வேண்டுமா?” எனக் கேட்கிறீர்கள். “வயிறு நிறைந்தது, ஆனந்தம்” என்கிறார். நிறைவு- ஆனந்தம் தொடர்பு விளங்குகிறதா? physical action இன் முடிவில்  mental expression ஆய் ”ஆனந்தம்” எழும். இன்னும் பல இயலுமைகளை எண்ணலாம். நான் புரிந்து கொண்ட  வரை ”ஆனந்தத்தின்” முதற்பொருள் பெருக்கமும் நிறைவுமே. fulfilment உங்கள் வயிறோ, வேறு சினைகளோ, அதைக் காட்டிக் கொடுக்கின்றன.
     
இதன் இணைச்சொல்லான மகிழ்ச்சிக்கும் மகுதல்> மிகுதல் பொருளுண்டு. சிவகங்கை மாவட்டத்தில் மழையால் ஏரிநிறைந்து பெருக்கெடுத்தால், ”கண்மாய் மகுந்து வழிகிறது” என்பார். மகுந்து இழிதல் (இறங்குதல்) மகிழ்தலாகும். இங்கும் பெருக்கெனும் பூதிகச் செயல் முதலாகும். fulfilment. அதற்கப்புறமே satisfaction. இனி, “இன்பம்” பார்ப்போம். இல்> இன்> இன்பு> இன்பம் எனச் சொல் வளரும். இல்லல் = பொருந்தல், ஏன அளவிற்கும் மேல் உள்ளீடு நிறைந்தால், பொருந்தினால் பெருமகிழ்ச்சி, பெருநிறைவு, பேரின்பம், beyond satisfaction ஏற்படத் தான் செய்யும். இன்னொன்றும் சொல்லலாம். முன்சொன்னது போல், ஆனந்தம், தனிச்சொல் அல்ல, ஒரு கூட்டுச்சொல். ஆல்+நந்தம் = ஆனந்தம். சங்க நூல்களில் கூட்டுச்சொல் தேடின், கிடைக்காது போகலாம். நந்தமே போதுமென இருந்தார் போலும். அச்சொற்கூட்டு சங்ககாலத்தில் எழவில்லை. கிடைத்த தரவுகளின் படி, பற்றி>பத்திக் காலத்தில் எழுந்தது.

ஆல் = அகலின் திரிவு. கிளைகளும், விழுதுகளும் விட்டு அகன்றுபோகும் மரம் அகல>ஆல மரமாகும். அகலல் என்பது, பெரும்பாலான இடங்களில் செடி கொடிகளைப் பொறுத்து, 2 பரிமான விரிவை உணர்த்தும். நீள அகலம் எனும்போது அகலம் 2 ஆம் பரிமானத்தையே குறிக்கும்.  இங்கே ஆல், நந்தத்தின் முன்னொட்டு, சங்கதத்திலும் அப்படியே. ”ஆல்” அங்கு ”ஆ” ஆகும். மோனியர் வில்லியம்சும்,  ஆநந்தத்தை (அங்கு னகரமில்லை.. ஆநந்தம் என்பார்.) ஆ+ நந்தம் என்று பிரித்து, ”அம்” ஈற்றைத் தள்ளி. ”ஆ”வை முன்னொட்டாக்கி (அதன் பொருள் அகல, நிறைய என்பார்) நந்தைப் பாணினியின் தாதுபாடம் iii, 30 என்பதாகக் காட்டி, பல  பயன்பாடுகளை முன்சொன்னபடி இருக்குவேதம் தொடங்கிக் காட்டும். ஆக, ஆல்+நந்தம் என்ற கூட்டு இருக்கு வேதத்திலேயே பதியப் பட்டுள்ளது. இதுபோல் கூட்டு ஆக்கும் புதுச்சிந்தனை இன்னொரு மொழியில் ஏற்படுவதில் வியப்பில்லை. 

இக் கூட்டு தமிழில் பத்தி இலக்கியங்களில் தான் முதலில் பதியபட்டது என்பதும் உண்மை. சங்கதத்தில் nandati வினைச் சொல்லிற்கு, to rejoice, delight, to be pleased or satisfied with என்று பொருள் சொல்வர். (2ஆம் பொருள், நிறைவைச் சுட்டுவோர், பெருக்கெனும் முதற் பொருள் சுட்டார்.) இப்பொருள் சங்கதத்தில் எப்படி வந்ததென்றுஞ் சொல்லார். தமிழில் பிரிப்பது போல் சங்கதத்திலும் ஆ(ல்)+நந்தம் என்று பிரிப்பதும் விந்தையே. அடிப்படைப் பொருள் தமிழைப் போலவே நந்தமென்ற சொல்லினுள் இருப்பது இன்னும் வியப்பாகிறது. இங்கே சங்கதத் தாதுக்கள் பற்றி இடைவிலகல் சொல்லவேண்டும். பலரும் சங்கதத் ”தாது”வும் தமிழ் “வேர்ச்சொல்லும்” ஒன்றெனல்க் கருதுவார்.  கிடையாது. இரண்டும் வெவ்வேறு.

தாது என்பது செடி, மரம் போன்றவற்றின் அடித் தண்டு/ மரம் போன்றது. அதனால் தான் சங்கதத்தில் 2200, 2300 தாதுகளை அடையாளங் காட்டுகிறார். வேரோ, தண்டிற்கும் கீழ்ப்பட்டது. எம் மொழியிலும் 2200, 2300 வேர்கள் உள்ளதாய்க் கேள்விப்பட்டதில்லை. அடிப்படையில் தாது என்பது வினை, பெயர்ச்சொற்களில் வரும் பகுதியே. ”நடந்தேன்” இல்  இலக்கணக் கூறுகள்/ morphemeகளைப் பிரித்தபின் எஞ்சுவது ”நட” எனும் பகுதி. இதையே சங்கதத்தில் தாதென்பார். ”நட” எப்படி வந்தது? இதற்கும் கீழே உள்ளது என்ன? - எனில் சங்கத இலக்கணம் விடை சொல்லாது.  பெரும்பாலும் சங்கத அகரமுதலிகளில் தாதுக்களுக்குக் கீழே யாரும் போவதில்லை. இங்கேயும் nand தாதுவை அடையாளங் காட்டி நகர்வார்.

தமிழில் அப்படியில்லை. இன்னும் ஆழம் போவோம். எனைக் கேட்டால் தமிழ் வேர்ச்சொற்கள் பெரும்பாலும் 100க்குள் என்பேன். (வேறு கட்டுரையில் சொல்வேன். தரவுகள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திலேயே உள்ளன.) இப்படிச் சிற்றெண்ணிக்கையில் இருந்தே சில விதிகளைக் கொண்டு பெருந்தோப்பாய்த் தமிழ்மொழி எழுந்துள்ளது. சரி.  ஆலை ஒதுக்கி, நந்தம் ஆய்வோமா? காலப் பரிமானத்தில் உணரும் ”பெருகல், தழைத்தல், விளங்கல்” என்ற பொருள்களில் (i.e. all these meanings denote dynamic processes), 

30 இடங்களிலும் [நந்த (11), நந்தி(7), நந்திய (7), நந்தும் (2), நந்தின(1), நந்துக (1), நந்துவள் (1)],
நந்தன் எனும் இயற்பெயரில் 2 இடங்களிலும், 
நத்தை/சங்குப் பொருளில் 4 இடங்களிலும்,
நந்தியாவட்டைப் பூவைக் குறித்து 1 இடத்திலும்

ஆக 37 இடங்களில் ஆக்கப்பொருளில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டில், ”நந்து” பயிலும். கெடுதல், அகலல் பொருளில் 6 இடங்களில் பயிலும். பதினெண் கீழ்க்கணக்கிலும், ஐம்பெருங் காப்பியங்களிலும்  ”நந்தம்” பழகியது. (தொகுக்காது, ஒரு காட்டு மட்டும் தருகிறேன். ”நில நலத்தால் நந்திய நெல்லே போல”- நாலடி 179) ஆக நந்தம் பெரிதும் பழகிய சொல்லே. அதன் தொடக்கம் கி.மு.600 க்கும் முந்தியுமாகலாம். இன்னொரு குறிப்பும் உண்டு. ஆல்+நந்தம் ஒரு வரிசையெனில், நந்து+ஆல்+ வட்டை = நந்தியால் வட்டை இன்னொரு வரிசை.  அடிச்சொற்களை இப்படி மாற்றிப் பொருத்திச் சொல்விளையாடுவது முதல்மொழியால் மட்டுமே முடியும். கடன் வாங்கி முடியாது. நந்து + ஆல்  வரிசையைச் சங்கதத்தில் நான் கண்டதில்லை. 

இனி நந்தன் எனும் மாந்தப் பெயருக்கு வருவோம். இப்பெயர் (மோரியருக்கு முந்தைய அரச குலத்தார் பெயர்) கெடுதற் பொருளில்  எழுந்திருக்க வழி யில்லை. ”பெருகியவன், பெரியவன் பொருளே இருந்திருக்க முடியும். நந்தருக்கும் தமிழருக்கும் நல்ல உறவே இருந்தது. அவரின் செல்வத்தை வியந்து மாமூலனார் பாடுவார். நந்தர் காலத்திற்கு முன்னும் அங்கு தமிழர் இருந்ததைத்  தமிழரே உணருவதில்லை. அக்காலத்தில் வடபுலத்தில் தமிழிய மொழிகள் இருந்தன. தமிழிய மொழிகளிடை வடமேற்கு மொழியான பாஷா ஊடுருவியது. பாகதம் என்ற கலப்பு மொழி அதன்வழி உருவானது. பாகதத்துள் தமிழ்ச்சொற்கள் பலவுமுண்டு. அதை ஆய்வு செய்யத்தான் ஆட்களைக் காணோம்.   

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இன்னும் ஒரு பகுதியுண்டு.

No comments: