Thursday, September 05, 2019

சிலம்பு ஐயங்கள் - 13

 காடுகாண்காதையில் வரும் கானுறை தெய்வம் ஓர் இனக்குழுத் தெய்வம். அவள் (அலர்மேல்மங்கை, குசுமாண்டிணி, இலக்குமி, அம்பிகா எனும்) பூங்கண் இயக்கியாகவோ, (பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி எனும்) கொற்றவையாகவோ, அன்றி பத்மாவதி, சக்ரேசுவரி, சுவாலமாலினி, ஜீனவாணி போன்ற இயக்கிகளில் ஒருவராகவோ ஆகலாம். அற்றுவிக, செயின, புத்த, சிவ, விண்ணவ நெறிகள் இனக்குழுத் தெய்வங்களை ஒருபால் ஏற்று, மறுபால் தமக்கேற்ப அவரை மாற்றியதும் உண்டு. [நாடுறைத் தெய்வங்களும் மாறியுள்ளன. நமக்குத் தெரிந்த காஞ்சி காமக்கண்ணி ஒரு காலத்தில் புத்தநெறியில் பரவிய தாராதேவி தான். இன்றவள் காஞ்சி காமாட்சியாய் (காம அக்ஷி; காமத்தை/க்ராமத்தைக் காப்பவள்) மாறிக் காட்சியளிக்கிறாள். இத்தகை மாற்றங்கள் தமிழ்நாட்டில் ஏராளம்] இவற்றைக் கும்பிடுவதாலேயே சமயநெறி வழுவியதாய் யாரும் எண்ணுவதில்லை. (மாங்காடு, திருவேற்காடு, பெரிய பாளையம்,  சமயபுரம் போகக்கூடாதென்று சொல்லுங் கூட்டம் எவ்வளவு?)

பொதுவாய்ப் பல சமயங்களும் இனக்குழு நிகழ்வுகளை ஒருபக்கம் கவனியாது காட்டி, மறுபக்கம் அமைதியாய் அவற்றை ஒத்து, தம் நடை முறைகளை வளர்க்கின்றன; செழிக்கின்றன. இற்றைக்காலக் கிறித்தவ, இசுலாம் நெறியினருங் கூட இவற்றைச் சிலபோது விலக்காது தம் நெறிக்குத் தக்க உருமாற்றிக் கொள்வர். கூர்ந்து பார்த்தால் எல்லா நெறிகளிலும் இவ் வகை நீக்குப்போக்குகள் உண்டு. பெரும்பாலும் மதத் தீவிரவாதிகளே இனக் குழுப் பழக்கங்களை அடியோடு ஒதுக்கச்சொல்வர். (தீவிரவாதிகள் எம் மதத்தில் தான் இல்லை?) எனவே சமணனான கோவலன் (அவன் செயினனா, அற்றுவிகனா, புத்தனா? - சிலம்பிற் தெரியாது.) கானுறை தெய்வத்தைத் தொழுவதும் மந்திரஞ் சொல்லுவதும் கொஞ்சங் கூட வியப்பன்று. அவன் சொன்னதைப் புரிந்துகொள்ளு முன் மந்திரங்கள் பற்றிய இடைவிலகல் நமக்குச் சரியான புரிதலைத் தரும்.

எல்லா மந்திரங்களும் “ஓம், ஹாம், ஹூம், ஹ்ரீம், சூ, மந்திரக்காளி...” என்று அமைவதாகவே சிற்றகவையில் நாம் பார்த்த கதைப்படங்களாலும் (cartoons), பாட்டி கதைகளாலும், அம்புலிமாமா இதழ்களாலும், பின்னால் திரைப்படம், தொலைகாட்சிகளாலும் எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் அப்படிக் கிடையாது. பெரும்பாலான மந்திரங்கள், ”என்னைக் காப்பாற்று” என்பதை அடிப்படையாய்க் கொண்டன. தமிழில் ஓம்புதல் என்பது காப்பாற்றலைக் குறிக்கும். விருந்தோம்புதல் எனில் விருந்தினருக்கு உணவிட்டுக் காப்பாற்றல் ஆகும். ”தொடர்ந்து துன்பத்திற் சிக்கி நான் வீழ்ந்து வருகிறேன். இதைத் தடுத்து என்னைக் காப்பாற்று”, என்றே மக்களிடம், பெரியவரிடம், தலைவனிடம், எல்லாம் வல்ல இறைவனிடங் கூட, வேண்டுகிறோம். தடுத்தாட்  கொள்ளுதலைச் சிவ, விண்ணெறிகளிற் சூழ்க்குமமாய்ச் சொல்வர். உல்> ஒல்> ஒ> ஓ> ஓம் என்பது ”தடுத்தலை” உள்ளடக்கிக் காப்பாற்றும் பொருளைக் காட்டும். ”ஓம்” முழுக்க முழுக்க நல்ல தமிழ்ச் சொல். அதைச் சங்கதமென நினைப்பது தவறு. பொதுவாய் 100க்கு 99 மந்திரங்களில் ”ஓம்” இருந்தே தீரும்.

["எனைக் காப்பாற்று” எனும் மந்திரங்கள் குறைந்தது 5000 ஆண்டுகளாய் நாவலந் தீவில் உள்ளன. சிந்துவெளியில் 2 ”ஒ” எழுத்துக்களில் ஒன்று இன்னொன்றைக் குறுக்கே வெட்டுவதாக்கி, ம் ஒலியை + வடிவாய் நடுவில் வைத்து, மூன்றையும் பிணைத்துச் சுழற்(சுவத்திக)குறி அமைத்தார் என இரா.மதிவாணன் சொல்வார். அவரை நம்பாதோர் இன்னும் தடுமாறுவார். மதிவாணனோ சிந்துசமவெளி எழுத்தைப் படித்துவிட்டதாய்ச் சொல்கிறார். இப்புலத்தினுள் நான் போக விழையவில்லை. ஓம் என்ற சொல் இங்கு எழுந்ததால் இதைச் சொன்னேன்.]
     .     
கோவலன் சொல்லும் மந்திரத்திற்கு முன்னர் காடுகாண்காதையின் 128-132

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண்டு ஓதி
வேண்டிய தொன்றின் விரும்பினிர் ஆயின்
காண்டகு மரபின அல்ல மற்றவை

என்ற 128-132 ஆம் வரிகளில் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் பற்றி மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வான். ஐந்தெழுத்து சிவநெறிக்கும், எட்டெழுத்து விண்ணவத்திற்கும் ஆனதென்றே இற்றைக் காலத்திற் பலருங் கொள்கிறார். ஆனால் மாங்காட்டுப் பார்ப்பானோ (வேதங் கலந்த) விண்ணவ நெறியாளன். அவன் சொல்லும் ஐந்தெழுத்து விண்ணவ மந்திரம்  ஆகலாம். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் சிவ, விண்ணவ நெறிகளோடு வேத நெறி கலந்து தமிழரிடையே புதுநெறிகளை உருவாக்கினாலும், இவற்றின் அடிப்படைகளும் பழம் நடைமுறைகளும், இன்னும் தமிழ் வழியே உள்ளன. ஆழ்ந்து பார்த்தால், சிவ, விண்ணவ மந்திரங்கள் சற்றே ஓசை மாறிய தமிழ் மந்திரங்களே. வடக்கு வேத மந்திரங்கள் இவற்றிலிருந்து  வேறுற்றவை. பொதுவாய்ச் சிவனையும் விண்ணவனையும் அவை கூப்பிட்டழைக்கா. (அரிதாய் உருத்திரனையும், விண்ணுவையும் அழைப்பதாய்ச் சில மந்திரங்கள் சொல்வர்.)
      .
முதலில் ஐந்தெழுத்து மந்திரம் பார்ப்போம். எல்லாச் சிவன்கோயில் சுவர்களிலும் ”சிவசிவ” என இன்றும் பெரிதாய் எழுதுவர். இதோடு ஓம் சேர்த்தால் நாம் தேடும் ஐந்தெழுத்துக் கிடைத்துவிடும். ”ஓம் சிவசிவ” என்பதே சிவநெறியில் முதலிலெழுந்த ஐந்தெழுத்து மந்திரம். (கட்டளைப் பாக்களில் எழுத்தெண்ணும் போது மெய்யெழுத்தை எண்ணமாட்டார். கவனங் கொள்ளுங்கள் இங்கே ஓம் என்பது ஓரெழுத்து;) ”சிவனே காப்பாற்று” என்பது தான் இம் மந்திரப் பொருள். அதேபோல் ”ஓம் நாராயணா” எனும் ஐந்தெழுத்து மந்திரம் பெருமாள் கோயில்களிலுண்டு. (நாராயணன் நீரில் உள்ளவன் ஆவான் .”நாரணன்” என்ற என் கட்டுரையைப் பாருங்கள். http://valavu.blogspot.in/2009/08/blog-post_28.html

இனிக் குழைதலுக்கும் வணங்குதலுக்குமான சொற்களைப்பார்ப்போம். நுள்> நுள்வு> *நுவ்வு> *நும்மு> நுமு> நமு என்ற சொல் தளர்ந்து, குழைவதைக் குறிக்கும். பொதுவாகக் குழைந்த பொருள் மென்மையாகிப் பின் வளையும், வணங்கும். குழைதற் பொருளில் திருவாய்மொழியின் ஒன்பதாம் பத்தில் ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாம் பாட்டில் (திவ். திருவாய் மொழி 9:9:3)

இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
  இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
  துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
  தாமரைக் கண்ணும்செவ் வாயும், நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளூம்
  பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ!
 
என நம்மாழ்வார் நாயகி பாவத்தில் ”நமுதற்” சொல்லின் மூலம் ”என் இணை முலைகள் குழைந்துபோயின” என்பார். நமுத்துப் போவதை நமத்துப் போவதாயும் சொல்கிறோமே? ”அப்பளத்தை வெளியே வைத்ததால் நமத்துப் போனது” நமத்துப் போதல்> நமர்த்துப்போதல் என்றும் பேச்சு வழக்கிற் சொல்லப்படும். ரகரமும் லகரமும் பலவிடங்களிற் போலிகள். நமர்த்துப் போதல் நமல்த்துப் போதலும் ஆகும். தான் கொண்ட பற்றியாற் குழைந்து போனவன் இறைவனை வணங்கவே செய்வான். நமுதல் நீண்டு நமல்தல்/நமலுதலாகி வணங்கற் பொருளைக் குறிப்பது முற்றிலும் இயற்கையே. சங்ககால முடிவிலெழுந்த நமல்தல்/நமலுதல் என்ற வினைச் சொல்லிற்கு வணங்குதலென்று பொருள். இதன் காட்டைத் திருவாய் மொழியின் மூன்றாம் பத்தில் மூன்றாம் பதிகத்தில் 7 ஆம் பாட்டில் (திவ். திருவாய் மொழி 3:3:7)

”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே”

என்று நம்மாழ்வார் சொல்வார். நமன்றெழும் என்பது ”வணங்கியெழும்” என்று பொருள் கொள்ளும். நமனுதலுக்கும் வணங்கற் பொருளுண்டு. நமனிகை என்பது அடியார் வணங்கும் உட்கருவறை (inner sanctuary). தென்னகக் கோயில் நிருவாகத்தார் யாரும் தேர்ந்தெடுத்த சிலரைத் தவிர மற்றெவரையும் உட்கருவறைக்குள் புகவிடார். தீட்டுப் பட்டுவிடுமென்பார். ஆனால் காசி விசுவநாதர் கோயிலில் (செல்வ வளம், பண்டாரிக்கு நெருக்கம், அதிகாரிகளுக்கு நெருக்கம் என்ற உலக வழக்கம் பொறுத்து) நமனிகைக்குள் யாரும் போய் விசுவநாதனைத் தொடலாம். (நான் தொட்டுள்ளேன்.) பாலால் முழுக்கு ஆட்டலாம். வில்வமுமிடலாம். அது பொதுவான வடபுலப் பழக்கம்.  தென்புலப் பழக்கமோ மிகக் கட்டுப்பெட்டியானது. எல்லோரையும் விடாது.

அன்புடன்,
இராம.கி.

No comments: