Friday, September 28, 2018

மறைக்காடு - 5

அடுத்தது சம்பந்தரின் இரண்டாம் திருமுறை 91 ஆம் பதிகம். மறைக்காட்டுப் பெயர்ச் சிக்கலுக்கு விடைசொல்லும்படியான பதிகம். இதைப் படித்தபிறகு தான் நான் தெளிந்தேன்.

984 ”பொங்கு வெண்மணற் கானல் பொருகடல் திரைதவழ் முத்தம் கங்குல் ஆரிருள் போழும் கலிமறைக் காடமர்ந்தார்” [வெண்மணற் கானலைப் பொருதும் பொங்குகடலின் திரையில் தவழ்ந்துவந்து தன்னுடைய ஒளியால் கங்குலின் ஆரிருளைப் போழும் முத்தோடு, (சலசலவென கலியோசை யெழுப்பும்) மறைக்காட்டில் அமைந்தவர். இங்கே கானலுக்கும் கடல்நீருக்கும் இடையிருக்கும் வெண்மணல் சொல்லப்படுகிறது. திரை=திரள். முன்னொரு பாட்டில் சொல்லிய நீர்மடிப்பு இதுவாகும். இதை அலையென்று புரிந்து கொள்ளக் கூடாது. சற்று வேறுபட்டது. கழியில் திரளையே காணமுடியும். திரையில் தவழ்ந்துவந்த முத்தம் நிலவொளியை மறுபலித்து (ப்ரதிபலித்து) ஆரிருளைப் போழுகிறதாம். போழுதல் = பிரித்தல். வள்ளுவத்தில் ”போழப் படா முயக்கு” என்று பிரிக்கப் படாத. தழுவலைச் சொல்லி ஒரு நயத்தக்க குறள் வரும். சம்பந்தர் பாட்டெழுந்த காலம் முழு நிலவு துலங்கிய காலம் (பூரணைக் காலம்) போலும். கலி= துள்ளியொலிக்கும் சிற்றலை யோசை. எல்லாக் கழிகளிலும் கேட்கும். கலிப்பாட்டு= தூள்ளோசைப் பாட்டு. இற்றை இசைப்பாட்டுக்களிற் பலவும் -குறிப்பாய்க் ‘கானா’ப் பாட்டுகள்- கலியோசையில் எழுபவையே.]

985 ”கானலங்கழி ஓதம் கரையொடு கதிர்மணி ததும்பத் தேனலங்கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே” (கானலங்கழியின் ஓதத்தால் கரையொடு ஒளிவிடுகிற முத்து வெளிப்பட தேன்மணங் கமழும் சோலை கொண்ட திருமறைக்காட்டில் அமர்ந்தாரே. கதிர்மணி = ஒளிவிடும் முத்து. 964, 965 ஆகிய இரு பாட்டுக்களிலும் திருமறைக்காடருகே முத்துக் கிடைத்தது பெரிதும் பேசப்படுகிறது.) 

986 ”கலிமறைக் காடமர்ந் தாரே” (கலிக்கும் மறைக்காடு மட்டுஞ் சொல்லப் படுகிறது)

987 ”ஏழை வெண்குருகு அயலே இளம்பெடை தனதெனக்கருதித் தாழை வெண்மடற் புல்கும் தண்மறைக் காடமர்ந்தார்” (இதுவரை மறைக்காட்டின் தாவரங்களையே பேசிய சம்பந்தர் இப்பாடலில் ஒரு பறவை பற்றிப் பேசுகிறார். பொதுவாக கழிக்கானல்களில் பறவைகளின் வருகை மிகுதி. பறவைகளைப் பார்ப்பதற்கே பிச்சாவரம் போவோருண்டு. ”எளிய வெண் நாரை தன்பக்கத்தில் தன் இளம்பெடை உள்ளதென்று கருதி தாழைவெண் மடலைத் தழுவிக்கொள்ளும் தண்ணிய மறைக்காடு அமர்ந்தார்” என்பது நல்லதொரு கற்பனை. தாழையின் வெண்மடல் குருகின் இளம்பெடைக்கு உவமை ஆகிறது.. தாழை மறைக்காட்டில் இருக்கவேண்டுமெனில் கொஞ்சமே உப்புக் கலந்த நந்நீரும் கழிக்குப் பக்கத்தில் உள்ளதென்று பொருளாகிறது. இதைச் சுந்தரரும் உணர்த்துவார்..)

988 ”மரவநீடுயர் சோலை மழலை வண்டு யாழ்செயு மறைக்காட்டு இரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெனல் ஆமே” [இது முகன்மையான குறிப்பு. மரவு/மரவம்.மரை என்பது இங்குள்ள ஒரு தாவரத்தையும் குறித்திருக்கிறது. மரவம் நீடுயர்ந்த சோலையும், மழலை வண்டு யாழ் செய்யும் மறைக் காட்டில் இரவிலும் காலையிலும், பகலிலும் இறைவனை ஏத்துதல் நல்லதாம். முன் சொன்ன புன்னைகள் போக இன்னொரு அலையாற்றித் தாவரமான மரா/மரவம் (Sonneratia apetala) இங்கே பேசப் படுகிறது. இக் கழிக்கானல் மரவத்தை, (தமிழிலக்கியங்களிற் வேறு கருத்திற் சொல்லப்படும் மரா/மரவம்/மராஅம் ஆன) செங்கடம்பு (Neolamarckia cadamba), வெண்கடம்பு (Mitragyna parvifolia), பயினி (Vateria indica) ஆகியவற்றோடு குழம்பக் கூடாது.

கழிக்கானல் மரவம் போக, கடரிச்சீரா (Ceriops roxburghiana), கூம்புக்காய்க் கொந்தளை (Bruguiera conjugata), உருளிக்காய்க் கொந்தளை (Bruguiera cylindrica), திப்பரத்தைத் தண்டலம் (Lumnitzera racemosa), நெய்தற் கடப்பை (Barringtonia acutangula), கடல்மா உதளை (Carbera odallum), வெள்ளை அலையாற்றி (Avicenna officianalis) என்ற தாவரங்களும் அலையாற்றிக் காடுகளிலுண்டு. இவையும் மேற்சொன்ன புன்னை வகையைச் சேர்ந்தவை தாம். கழிக்கானல்கள் பெரும்பாலும் புன்னையாலும், மரவத்தாலும் பெயரறியப் பட்டன. திருமறைக் காட்டிற்கும் இவையே காரணமாகலாம். இந்த விளக்கம் 19/20 நூற்றாண்டில் எழுந்த விளக்கமாகலாம். மரவம் என்ற தாவரஞ் சிறந்தால் மரக்கானம்; புன்னை சிறந்தால் புன்னையங்கானல், புன்னைக்காயல் என்றமையும். இங்கு மரவம் சிறந்தது போலும். எனவே இதை மரவக்காடு, மரைக்காடு என்று அழைக்கலாம். (தமிழறிஞரில் பலரும் மரை மானைக் குறிப்பிடுவதற்கு நான் பார்த்தவரை எந்த இலக்கியச்சான்றும் இல்லை. வேதம் வழிபட்டது என்று சமயச் சார்பாளர் சொன்னதால், அதற்கு மறுப்புச் சொல்ல முனைந்த தமிழறிஞரிடம் ஏற்பட்ட எதிர்வினையே மான் விலங்கை விளக்குவதாய் உருவான ’மரைக்காடு’ போலும். குமரிக்கண்டம் போல் ’விலங்கை ஒட்டிய மரைக்காடு’ என்ற கருத்து ஏற்பட்டது போலும். அழிந்து போன குமரிநிலம் இருந்தது உண்மை. குமரிக்கண்டத்திற்கு இதுகாறுஞ் சான்றில்லை. எதிர்காலம் எனக்குத் தெரியாது.) 

கழிக்கானல் மரவம் என்பது கடலும் நிலமுஞ் சேரும் சதுப்பிடத் தாவரம். ’பூவா மறைமா (Sonneratia apetata)’ என ச,சண்முகசுந்தரம் (முன்னாள் வனத்துறைத் தலைவர்) தன் “தமிழ்நாட்டுத்தாவரங்கள்” நூலிற் சொல்வார். apetala என்பது அகவிதழ்கள் (petals) இல்லாதைக் குறிக்கும். ”பூவா” எனும் பெயரடையின் பொருளும் இது தான். வங்காளச் சுந்தரவனத்தில் (sunderbans) இது செழிப்பாக வளரும். சென்னை அடையாற்று முகத்துவாரம், பிச்சாவரம் (பிக்கு>பிக்சு> பிச்சு= பிற்றையது/பின்னது. இதுவும் இரு பிறப்பிச் சொல்லே. ஆவரம்= சுற்றி வருதல், மூடுதல் எனவே மறைப்பு. ஆவரணம்>ஆபரணம்= சுற்றிவரும் உடுப்பு, நகை. பிச்சு+ஆவரம்= பிச்சாவரம். ஒருவகையில் பிச்சாவரமும் ஒரு மறைக்காடே), மராக்கானம் (மரவக்கானம். எயிற்பட்டினத்தை மறைத்த மரவக்காடு. எயிற்பட்டினம் இன்றழிந்து, மராக்கானம் மட்டுமே மிஞ்சியுள்ளது. வேடிக்கை பாருங்கள். இதுவுமொரு மரைக்காடே). தவிர முத்துப்பேட்டை அலையாற்றிக் காடுகளிலுள்ள திருமறைக்காடு என முவ்வேறு இடங்களின் அமைப்பு ஒற்றுமை புரிகிறதா? இன்னுமா மறைக்காட்டின் பொருள் புரிய வில்லை? ஏதோவொன்றை மறைக்கிற காடு மறைக்காடு. திருமறைக் காட்டில் கோடிக்கரையின் கோட்டையை ஒருகாலத்தில் மறைத்தது.

கழிமுகச் சதுப்புநிலங்களில் மராமரம் கடல்நோக்கிப் பரவி நிலத்தைக் கெட்டிப்படுத்தும். கெட்டியான இடங்களில் இது வளராது. கடற்பக்கம் வேரோடிப் புதிதாய் விரியும். மொத்தத்தில் கடலைத் தூர்த்து கழனியாக்கும். (எதிர்காலத்தில் ஆழிப்பேரலை, கடல்மட்ட உயர்வு ஏற்பட்டால் தமிழகத்தைக் காப்பாற்ற இக்கானல்களை வளர்க்கவேண்டும். ஊழல் அரசுகள் இதைச் செய்யுமா?) 8-10 மீ. உயரம் வளரக் கூடிய மரா மரத்திற்கு மூச்சுவிடும் குத்து வேர்கள் (pneumatophores) உண்டு. இதன் வெடித்த பழங்களின் சதையிலுள்ள விதைகள் நீரில் மிதந்து சென்று இதர செடிகள் தடுத்து நிறுத்தும் இடங்களில் நிலைத்துப் பின்முளைத்து வேரூன்றி வளரும். இப்படித்தான் இம்மரங்கள் கடல் உட்புகுதலைத் தடுக்கின்றன. சரி. ’மரை’ப்பெயர் இத்தாவரத்திற்கு எப்படி எழுந்தது? மருவுதல்= கலத்தல் நிலமுங் கடலும் கலக்கும் சதுப்பு இடத்தில் வளர்வதால் இவை மரவங்களாயின. மரவக் காடு மராக் கானமான கதையை முன்னாற் பார்த்தோம். முத்துப்பேட்டை வட்டாரத்திலும் இவற்றை மரவக்காடெனலாம். ஆனால் அப்படியொரு பெயருக்கு நேரடிச் சான்று இல்லை. சுற்றிவளைத்து வேண்டுமெனில் இதை உணரலாம். அதேபொழுது அம்மில் முடியும் தமிழ்ப்பெயர்கள் ஐகார முடிபும் மாற்றாகக் கொள்வதால், மரவம் மரையாகலாம். என்னைப் பொறுத்தவரை மரவத் தாவரம் மரை மானைக் காட்டிலும் ’மரைக்காடு’ என்பதற்குச் சரியான காரணமாய்த் தெரிகிறது. தமிழகத்தின் முவ்விடப் பெயர்க்காரணத்தை அது விளக்குகிறது.
       
989 ”மல்கு வெண்திரை யோத மாமறைக் காடது தானே” (பெருகிய வெண்திரை ஓதமுள்ள மாமறைக்காடது தானே).

990, 991 ”மறைக்காடே”

992 ”கண்டலங்கழி யோதம் கரையொடு கதிர்மணி ததும்ப வண்டலங் கமழ் சோலை மாமறைக்காடது தானே”. [கண்டல் நிறைந்த கழியின் ஓதத்தால் கரைகளில் ஒளிவிடும் முத்துக்கள் ததும்ப, வண்டு நிறைந்து மணந்தரும் சோலைகள் கொண்ட மறைக்காடு அதுதானே. இங்கே கண்டல், இன்னொரு வகை அலையாற்றித் தாவரங்களைக் குறிப்பிடுகிறது. பல உரையாசிரியர் இதை முள்ளுள்ள தாழை என்றமைந்து போவர். தாழை எல்லா நெய்தல் நிலங்களிலும் வளர்வது. கழிக்கானலிலும் இருக்கலாம். ஆனால் கண்டல், கழிக்கானல்களில் மட்டுஞ் சிறப்பாய்வளர்வது. துவரிக் கண்டல் (Kandelia kandel. (சிலரிதைக் கண்டலார்ச் சுரபுன்னை-Rhizophora Candelaria என்பர்), நரிக்கண்டல் (Aegiceras corniculatum; Black mangorove) போன்றவையும் அலையாற்றித் தாவரங்கள் தான்.] 

993 ”பெரிய சீர்மறைக்காடே” = திருமறைக்காடு என்பதைச் சீர்மறைக்காடு என்று சொல்கிறார்.

994 ”மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந்தாரை”: (நீருலவும் பொழில்சூழ்ந்த மாமறைக்காடு அமர்ந்தாரை. மை = நீர். உயரோதம் தாழோதம் என்று மாறிமாறி வருவதால் நீர் இங்கே உலாவுகிறதாம்.)

அன்புடன்,
இராம.கி.

No comments: