Wednesday, August 15, 2018

துரு-தல்

"துர்நாற்றத்தில் உள்ள துர் தமிழ்ச்சொல்லா?" என்றொரு நண்பர் சொற்களம் முகநூல் குழுவில் கேட்டார், இன்னொரு நண்பர், “அது வடசொல்” என்றார். நம் பள்ளியாசிரியர் dur என்றே சொல்லிக் கொடுத்ததால் இது வட மொழித் தோற்றங் காட்டுகிறது. (ஜலம் தமிழா?) ஆனால் அதனுள்ளே தமிழ் வேர் உண்டு. இன்னுஞ் சொன்னால் ஏராளம் இணைச்சொற்கள் அதில் மறைந்துள்ளன. அதேபொழுது தமிழ் வினைச்சொற் பகுதி ”ர்” என முடியாது. வரு/வா, என்பதை வர் என்போமோ? துர்நாற்றத்திற்கு மாறாய்த் துருநாற்றம் எனில் முழுச்சொல்லும் வினைத்தொகையாகும். துரு-தல், அல்லது துருவு-தல் = துளைத்தல். “என்னப்பா இது? கூவம் பக்கம் காலார நடந்து வந்தாலே நாற்றம் மூக்கைத் துருவுதே?” "என்ன செய்யுறது? மூக்கை மூடிக்க” என்ற உரையாடல் உங்களுக்குத் தெரியாதா, என்ன?

துல் என்பது துளைக் கருத்து வேர். துல்>துன்>துன்னுதல் = உழுதல், கிண்டுதல், துன்னூசி = கலப்பைக் குத்தி. இன்பம் என்பது இனிப்பானது. இங்கே நாக்குச் சுவையோடு ஒப்பிட்டு ஒரு நிகழ்வைச் சொல்கிறோம். இன்பத்தின் எதிரான துன்பம் என்பது மூக்கின் வழி முகர்ந்து பார்ப்பதோடு ஒப்பிட்டுச் சொல்லப் படுவது. சில மணங்களை நுகரும்போது மூக்குச் சவ்வில் எரிச்சல் ஏற்படுகிறது அல்லவா?? அது துளைப்பதுபோல் உள்ளதாம். துன்பம் தீரும்வரை துளைச்சலும் இருக்கும். துல் என்பது துல்> (துள்)> (துய்)> (தய்)> தை என்ற படியும் திரியும். முள்தைத்தல் = முள் உள்ளிறங்குதல். இன்னுஞ் சொன்னால்

துல்> துள்> துழ> துழவு> துழாவு = கிண்டுதல்;
துல்> துள்> தொள்> தொய்; தொய்தல் = உழுதல்.
துல்> துள்> துற> துறப்பு = திறவு; துறவை = திறந்த வெளியிடம்;
துல்> துள்> தூள்> தூணி = தோண்டப் பட்ட கலம், 
துல்> துள்> தொள்> தொழுவை = மடு;
துல்> (தள்)> தழு> தாழ்> தாழ்வு.
துல்> துள்> தொள்> தொடு. தொடுதல் = தோண்டுதல்;
தொள்> தோள்> தோண்டு> தோண்டி; தோண்டு> தோணி = தோண்டபட்ட மரக்கலம்
தேடு> தேட்டம் = தேடுதல்.

இது மட்டுமல்ல. துல்>துரு>துரி>தூரியம்= குடைந்து செய்யப்பட்ட இசைக் கருவி. இரும்பில் ஏற்படும் pitting corrosion ஐத் துரு என்றும், அதில் ஏற்படும் இரும்பு அஃகுதையை (Iron oxide) துருவு என்றுஞ் சொல்வோம். துருவு என்பது துருசு என்றுஞ் சொல்லப்படும். துருந்துதல் = துளையைப் பெரிது ஆக்குதல். ஆராய்தல். துல்> துள்> துர> துரப்புதல் = துளைத்தல், தேடுதல்; துர> திர> திரக்குதல் = தேடுதல். துருவும் வேலைக்குப் பயன்படும் கருவி துரப்பணம் எனப்படும். துரப்பு = மலையிற் குடையப்பட்ட பாதை. தோட்டந் துரவு = தோட்டத்தில் தோண்டப்பட்ட கிணறு. பெருங் கிணறு. மணற் கேணி. துருவம் = ஒரு கோளத்தில் தோண்டினால் கிடைக்கும் ஆகப் பெரிய chord. இதைத்தான் முப்பரிமான விட்டம் என்கிறோம். புவியின் துருவமும் இதே பொருள் தான். தேங்காய்த் துருவல்/ = தேங்காய்க் கொப்பறையைத் துருவி உண்டாக்கும் துருவு. துருவு மணை, திரிமணை என்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்படும், துருவுதல் = தேடுதல், ஆராய்தல், துளைத்தல், கடைதல், தேங்காய் முதலியன கடைந்து சீவுதல், துன்புறுத்தல்

மூக்கை எரிச்சல்பட வைக்கக்கூடியது ”கெட்டது” எனப் பொருள் கொள்ளப் பட்டது. இது விதப்பு நிலையை பொதுமைப்படுத்தியதாகும். நாளாவட்டத்தில் துல்லுவது, துள்ளுவது, துருவுவது, துய்வது என எல்லாவற்றிற்கும் கெடுதல் பொருள் வந்து சேர்ந்தது, முன் சொன்ன துய் என்பது திய்> தீய எனத் திரிந்து இன்னும் பல சொற்களைக் “கெட்ட” என்ற பொருளில் உருவாக்கும். பலரும் ”தீய” என்பதும் தீ(ய்)மை எனும் நெருப்போடு தொடர்புள்ளதென்று தடுமாறுவர். அப்படிக் கிடையாது. அது தவறான முடிபு. தீய என்பது துல்> துள்> துய்யோடு தொடர்புடையது. பார்ப்பதற்குத் தீ என்ற நெருப்போடு தொடர்பு காட்டுகிறது. தீஞ்சுவையில் வரும் தீ நெருப்போடு தொடர்பு உடையதா? இல்லையே? அது தேனோடு தொடர்புடையதல்லவா? இங்குவரும் தீய என்பது துல்> துள்> துய்யோடு தொடர்புற்றது.

முடை என்பதும் கெட்ட என்றே பொருள் கொள்ளும்.  துருநாற்றம், தீயநாற்றம் என்பதற்கு மாறாய் முடைநாற்றம் என்றுஞ் சொல்லலாம். (மீண்டுஞ் சொல்கிறேன். துருவை (thuru) துர் (dur) என்று சொல்லி வடசொல் ஆக்காதீர்.   துருக்கடம்> துர்க்கடம் = இடர்ப்பாடு. துருக்கதன், துருக்கதி, துருக்கந்தம், துருக்கருமம், துருக்குணம், துருக்குறி, துருச்சன், துருநாள், துருத்தெய்வம், துருநடத்தை, துருநாற்றம், துருப்புத்தி, துருமரணம், எனப் பலவும் ருகரத்தை மெய்யெழுத்தாக்கி வடசொல்லாய்ப் புரிந்து கொள்ளப் பட்டன. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், துரு> துர் என்பதன் பொருள் கெட்டது என்றும். அது துளைப் பொருளில் கிளைத்தது என்றும், புரியும். இப்போது அறுபுலன் சொற்களாய்த் தெரிபவை (கெட்ட என்ற பொருள்கொண்ட துர் இதிலொன்று) எல்லாம் ஒரு காலத்தில் ஐம்புலனச் சொற்களில் இருந்து கிளைத்தனவென்று திரு. டி. பக்கிரிசாமி கூறியதை என் முந்தையக் கட்டுரைகளில் பலதடவை கூறியுள்ளேன். நல்லது என்பது அறுபுலச்சொல். அதன் ஐம்புலன் அடிப்படை நல்>நெல் என்னும் ஒளிப்பொருளே. ஐம்புலன்/ அறுபுலன் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் ஒருமுறை விளக்கவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: