Wednesday, June 01, 2022

சரவல்/சிரமம்

ஏறத்தாழ ஓராண்டிற்குமுன்,”தமிழ்நாட்டு நிதி அமைச்சரின் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழ் பேசவும், படிக்கவும் அவர் சரவல் படுகிறார்” என்ற முன்னிகையை என் முகநூல் பக்கத்திலிட்டேன். இதில் வரும் ”சரவலைச்” “சிரமம்” எனும் இருபிறப்பிச் சொல்லிற்கு  மாற்றாய் நெடுநாட்கள் பயில்கிறேன். இடுகை படித்த கவிஞர் தாமரை “சரவல்-சிரமம்' மொழியாக்கம் குறித்து நீங்கள் எழுதியதிருந்தால் பதிவிடுங்கள். சிரமம் என்பதையே இதுகாறும் பயன்படுத்தி வந்தேன்” என்றார். தமிழில் தொடங்கித் திரிந்து புழங்கும் ”சிரமத்திற்கு”,“இளைப்பு, களைப்பு, உழைப்பு, படைக்கலப் பயிற்சி” என்று தமிழ் அகரமுதலிகளில் பொருள் கூறுவார். Monier-Williams இன் சங்கத - ஆங்கில அகரமுதலியில், 

1) Śram (श्रम्):—1. śram [class] 4. [Parasmaipada] ([Dhātupāṭha xxvi, 95]) śrāmyati (in later language also śramati, te; [perfect tense] śaśrama, 3. [plural] śaśramuḥ or [Śāṅkhāyana-brāhmaṇa] śremuḥ, p. śaśramāṇa, [Ṛg-veda; Mahābhārata]; [Aorist] āśramat, [Atharva-veda], [subjunctive] śramat, [Ṛg-veda]; śramiṣma, [ib.; Brāhmaṇa]; [future] śramitā, [Mahābhārata]; śramiṣyati [grammar]; [infinitive mood] śramitum, [ib.]; [indeclinable participle] -śramya, [Brāhmaṇa]),

—to be or become weary or tired, be tired of doing anything (with [infinitive mood]; also [impersonal or used impersonally] na mā śramat, ‘may I not become weary!’), [Ṛg-veda] etc. etc.;

—to make effort, exert one’s self ([especially] in performing acts of austerity), labour in vain, [ib.] :—[Passive voice] śramyate ([Aorist] aSrAmi, [grammar]), [Mahābhārata; Kāvya literature] etc. (cf. vi-√śraṃ) :—[Causal] srAmayati ([Aorist] aśiśramat), to make weary, fatigue, tire, [Kāmandakīya-nītisāra; Harivaṃśa; Subhāṣitāvali];

—to overcome, conquer, subdue, [Rāmāyaṇa];

— (śrāmayati), to speak to, address, invite (āmantraṇe), [Dhātupāṭha xxxv, 40] ([varia lectio] for grām cf. grāmaya) :—[Desiderative] See vi-śiśramiṣu.

2) 2. śram ind. [gana] svar-ādi.

3) Śrām (श्राम्):—See [Causal] of √1. śram.

என்ற விவரந் தந்து, இதன் தாதுவாய் śram (”Dhātupāṭha xxvi, 95”) என்பதைக் குறிப்பார். (ஒரு வேலையை விடாது செய்கையில் நமக்கு இளைப்பும், களைப்பும், சோர்வும் வரும் அல்லவா? இது உடலுழைப்பிலும் வரலாம், அறிவுழைப்பிலும் வரலாம்.  śram இன் பொருள்களாய்,  ”சோர்வு, தளர்வு, தள்ளாடு, துயரம், துன்பம், தொய்வு, தொல்லை, தொ(ல்)ந்தரவு, வருத்தம்” போன்று பலவற்றைச் சொல்லலாம்.  இவையெல்லாமே குத்தல் வேர்ப்பொருளில் கிளைத்தவை. (மோனியர் வில்லியம்சு அப்படிச் சொல்லாது. பொதுவாய், சங்கதத் தூதுகள் என்ப்வை வேர்கள் அல்ல. அவை வெவ்வேறு தொகுப்புகளைக் குறிக்கும்.) ஒரு செயலை விருப்பமின்றிக் கடமையெனச் செய்யும்போது குத்துவது போன்ற இருப்புக் கொள்ளா உணர்ச்சி இயல்பாய் எழும். 

மேலுள்ள பொருள்களில், தகரச்சொற்கள் அதிகமென்பதால், அவற்றின் பிறப்பை முதலில் பார்ப்போம்.  முதலில் வருவது. துல்> துன்> துன்பு> துன்பம். அடுத்து, தொல்> தொல்> தொல்லை= துன்பம். தொலைதல்= தளர்தல்.  தொல்> தொ(ல்)ந்தரித்தல் = வருத்தல். துன்புறுத்தல் என்பன எழும்.; தொ(ல்)ந்தரவு= தொந்தரவு;. வருத்தத்தில், உடம்பு தொளதொளக்கும். தொல்> தொள்> தொளதொளத்தல், இதன் நீட்சி, தொள்>தள்> தளர்> தளர்த்தி> தளர்ச்சி.  துள்> தொள்> தொள்கு-இன் வளர்ச்சியாய் சேற்றுச் சொல் எழும். தொள்ளுதல் = நெகிழ்தல், தொள்> தொள்ளம் =  சேறு, தொள்> தொள்ளி> தொளி = சேறு, தொள்> தொய்> தொய்யல் = சேறு. தொய்யில் = குழம்பு; தொள்> தொய்> தொய்தல்= தளர்தல்; தொள்> தொள்ளாடு> தள்ளாடு. தொள்> தொய்> தொய்தல்= சோர்தல். துள்> (துய்)> துயர்> துயரம். தொய்யல் = துன்பம் என்பன அடுத்தடுத்த வளர்ச்சியைக் காட்டும். இதே பொருள்களில் சகரச்சொற்களும் வளரலாம். 

சுல்>சூல்>சூலம் = குத்தும் ஆயுதம்

சுல்>சூலை = வெப்புநோய்; 

சுல்>சுள்>சுரம் = நடக்கையில் குத்தும் பாலை நிலம், உடம்பைக் குத்தும் நிலை (- எனவே நோய்), குத்தும் (எரிச்சலைத்த் தரும்) கள், குத்தும் படிக உப்பு, சுரம் என்பதுதான் பெரும்பாலும் śram என்பதற்கு இருபிறப்பி அடிப்படையாகலாம். குத்தும் வேரில் சோர்வு, தளர்வு, தள்ளாடு, துயரம், துன்பம், தொய்வு, தொல்லை, தொ(ல்)ந்தரவு, வருத்தம்” போன்ற பொருள்களில் வளர்ந்திருக்கலாம்.  śram என்பதை மீளக் கடன்வாங்கையில் சிரமம் என்றாகும்.,

சுல்>சுள்>சுர்>சுரங்கம் = குத்தித் துளைத்த நீள் துளை, பாதை.

சுல்>சுள்>சுர்>சுரசுரத்தல்>சருச்சரையாதல்>சர்ச்சரையாதல் = கரடுமுரடாய்க் குத்தும்படி இருத்தல். சுரசுரப்பு = roughness.

சுல்>சுள்> சுர்>சுரண்டுதல் = குத்தித் துளைத்தல்; 

சுல்>சுள்>சுர்>சுரணை = குத்தும் உணர்ச்சி

சுல்>சுள்>சுர்>சுரவை = சுர் என்று குத்தித் தெறிக்கும் வீக்கம்.

சுல்>சுள்>சுர்>சுரன்>சூரன்>சூரியன் = குத்தும் ஞாயிறு

சுல்>சுள்>சுர்>சுரி = குத்தி உருவான துளை

சுல்>சுள்>சுர்>சுரிகை = குத்தும் உடைவாள்.

சுல்>சுள்>சுர்>சுரிமுகம் = துளையுள்ள பக்கம்.

சுல்>சுள்>சுர்>சுரியூசி = பனையேட்டில் துளையிடுங் கருவி

சுல்>சுள்>சுர்>சுரீரெனல் = குத்தல் ஒலிக்குறிப்பு.

சுல்>சுள்>சுர்>சுரை = குழி.

சுல்>சுள்>சுர்>சுரைக்காய் = குழியுள்ள காய்.

அடுத்து, 

சுல்>சுள்>சள்>சள்ளுதல் = இளகுதல்.

சுல்>சுள்>சள்>சள்ளல் = சேறு

சுல்>சுள்>சள்>சழு>சழுங்கு>சழுக்கம் = நெகிழ்ச்சி

சுல்>சுள்>சள்>சழ>சழங்கு>சழங்குதல் = சோர்தல்; சழங்கு>சழக்கம் = தளர்ச்சி

சுல்>சுள்>சளை>சளைத்தல் = தளர்தல், சோர்தல்

சுல்>சுள்>சள்>(சாள்)> சாளை = வடியும் வாய்நீர்

சுல்>சுள்>சொள்>சொளு. சொளுத்தல் = சேறாதல், சோறு குழைதல்

சுல்>சுள்>சொள்>சோர்; சோர்தல் = தளர்தல்; சோர்வு = தளர்ச்சி

சுல்>சுள்>சள்>சர்>சருவுதல் = தொந்தரவு செய்தல், போராடுதல்; சருவல் = தொந்தரவு 

சுல்>சுள்>சள்>சர்>சருச்சை>சர்ச்சை = ஒருவர் நிலை இன்னொருவருக்குக் குத்துவதாவது. தகறாறு.

சுல்>சுள்>சள்.சர்>சரம் = குத்தும் அம்பு, போர், சரமாரி = அம்புமழை; சரடு = அம்புத் தொடர்ச்சி = கயிறு.

சுல்>சுள்>சள்>சர்>சரட்டை>சிரட்டை = கரடான கொட்டங்கச்சி

சுல்>சுள்>சள்>சர்>சரல்>சரள்>சரளை = குத்தும் கல்.

சுல்>சுள்>சள்>சர்>சரவம் = குத்தும் கூரிய நகங் கொண்ட பறவை. இதை sarabham என்று சொல்லித் சங்கதம் எடுத்துக் க்ள்ளுங்,  இது சிங்கத்தைக் கொல்லும் பறவையாம்.

சுல்>சுள்>சள்>சர்>சரவம் = சுரத்தில் திரியக் கூடிய ஒட்டகம்.

சுல்>சுள்>சள்>சர்>சரவல் = சரவை = தொந்தரவு, துன்பம், coarseness, roughness, தொல்லை, (தொல்லை தரும்) தெளிவற்ற எழுத்து; சரவையெழுத்து = திருத்தப்படாத முதற்படி; “சரவல் இல்லாமல் எழுதிக்கொண்டு வா” என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு இந்தச் சொல்லைத்தான் நான் விரிவுபடுத்தினேன்.



  


1 comment:

Anonymous said...

“சரவல் இல்லாமல் எழுதிக்கொண்டு வா” என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு.
இந்தகூற்று எனக்குப் பிடித்திருக்கின்றது. இங்கே எவரும் நீங்கள் புதிதாக இட்டுக்கட்டின சொல்லு என்று குறை சொல்ல இடமில்லை. தமிழன்னையைக் கொலுவேற்றும் உங்கள் தமிழ்ப்பணி வாழ்க வாழ்க!

நட்புடன்
ந.குணபாலன்