Saturday, November 30, 2019

சதுரங்கம் - 4

நாற்படை அளவுகள் சிச்சிறிதாய் பெரிதாகின. அவற்றின் அளவுகளைப் பார்ப்போம். கொஞ்சம் வியந்துபோவோம். முதலில் வருவது பட்டி. ஒரு நாட்டுப்படையின் முதலலகு பட்டி/பண்டி/ பத்தி/பந்தி என்றழைக்கப் பட்டிருக்கலாம். (சரியான சொல் ஏதென என்னாற் சொல்ல முடியவில்லை. ஆனால் படைக்கும் பட்டிக்கும் ஏதோ தொடர்பு தெரிகிறது.) இன்றும் பட்டி, கால்நடைத் தொகுதியையும், கால்நடைகள் கட்டுமிடத்தையும் குறிக்கிறது. (முல்லை நில ஊர்கள் பட்டியெனப்பட்டன.) ’பண்டி’ வண்டியையும், யானையையுங் குறித்தது. வடபுல நூல்களிலும் (மோனியர் வில்லியம்சு அகர முதலி, மகாபாரதம், அல்பெருனியின் பயணக்குறிப்புகள்), தமிழ் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும், இலக்கியங்களிலும் குதிரைகட்டுந் துறை “பந்தி” எனப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு பெரும் பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாய் உடையார் புராணத்தில் இச்சொல் வரும். இங்கே பட்டியெனவே பயில்கிறேன். மற்ற சொற்களை ஆய்ந்து சரியான முடிவிற்கு வரவேண்டும்.

மகாபாரதப்படி 1 பட்டியில் 1 தேர், 1 யானை, (தேரை/யானை சுற்றி) 3 குதிரைகள் (தேரும், யானையும் குதிரைக்கணக்கில் ஒன்று போலக் கருதப்பட்டன), ஒவ்வொரு குதிரையைச் சுற்றி 5 காலாள்கள் இருந்ததாய்ச் சொல்வர். குதிரைகளுக்கும் ஆட்களுக்குமான மொத்தக் கணக்கைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவேண்டும். (அரபுப் பயணி அல்பெருனி இதில் தவறினார்.) 1 தேரிழுக்க 4 குதிரைகள் எனில் பட்டியில் மொத்தம் 4+3+3= 10 குதிரைகள் இருந்தன. ஆட்களைக் கணக்கிட்டால் யானைத்தலைவன், முன்னால் யானைப்பாகன், பின்னால் துணை யானைப்பாகன், தலைவன் வேல்வீச யானை மேலிருந்து உதவும் 2 வீரர், யானையோடு கீழ் ஓடிவரும் உதவியாளென 1 யானைக்கு 6 பேருண்டு. இதுபோல் தலைவன், தேர்ப்பாகன், மெய்க்காவலன், தலைவனுக்குத் தளவாடம் கொடுத்து உதவும் 2 வீரர், தேர்ப்பழுது பார்க்கும் தச்சனென 1 தேருக்கும் மொத்தம் 6 பேருண்டு. எனவே மகாபாரதப் படி, 1 பட்டியில் 2*[6+3*(1+5)] = 48 ஆட்களிருந்தார். எனவே ஒரு பட்டியில் தேர், யானை, குதிரைகள், ஆட்களின் விகிதம் (1:1:10:48). இந்தக் கணக்கில் யானை, குதிரை, தேரொடு சேராத தனிக் காலாட்கள் இருந்தாரா என்பது தெரியவில்லை. 16 கணபதங்களுக்குச் சற்று முன்னிருந்த குரு, பாஞ்சால அரசுகளில் இதுவே வழக்கம் போலும்.

மாறாகக் குடிலரின் அருத்தசாற்றப் படி பார்த்தால், 1 தேர் அல்லது 1 யானையைச் சுற்றி 5 குதிரைகள், 1 குதிரை சுற்றி 6 காலாட்கள் என்றுவரும். இக்கணக்கின் படி தேர்:யானை:குதிரைகள்:ஆட்கள் ஆகியோரின் விகிதம் 1:1:(4+5):.2*[6+5*(1+6)] = (1:1:14:92) ஆகும். மகத அரசில் இதுவே பழக்கம் போலும். (பாரதக் காப்பியம் பொ.உ.மு. 1000-800 ஐ ஒட்டிய கதையைச் சொல்லும். அக்காப்பியம் பொ.உ.மு.400 களில் எழுதப்பட்டு படிப்படியாக இடைச் செருகல்கள் பெற்று பொ.உ.400 வரை எழுதப்பட்டுக்கொண்டே வந்தது. படை பற்றிய விரிவான குறிப்புகள் பெரும்பாலும் இக் காலகட்டத்தின் பிற்பகுதியில் வரையப்பட்டிருக்கலாம்) பட்டிக்கு மேலும் அக்காலத்தில் படையணிகளுண்டு. இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். சங்கதப் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் சங்கதப் பெயர்களே உள்ளன. தமிழ்ப்பெயர்களை பெருமாய்விற்கு அப்புறமே என்னால் அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது. அவற்றைக் கீழே சொல்லியுள்ளேன்.

3 பட்டிகள்              = 1 படைமுகம் [சேனாமுகம். மகாபாரதக் கணக்கு (3:3:30:144),                        அருத்தசாற்றக் கணக்கு (3:3:42:276)];
3 படைமுகங்கள் = 1 குழுமம்        [குல்ம.              மகாபாரதக் கணக்கு (9:9:90:432),                        அருத்தசாற்றக் கணக்கு (9:9:126:828)];
3 குழுமங்கள்       = 1 கணம்           [கண,                மகாபாரதக் கணக்கு (27:27:270:1296),                அருத்தசாற்றக் கணக்கு (27:27:378:2484)]);
3 கணங்கள்         = 1 வானி            [வாகினி.         மகாபாரதக் கணக்கு (81:81:810:3888),                அருத்தசாற்றக் கணக்கு (81:81:1134:7452)];
3 வானிகள்          = 1 தானை          [ப்ரிதனா        மகாபாரதக் கணக்கு (243:243:2430:11664)         அருத்தசாற்றக் கணக்கு (243:243:3402:22356)];
3 தானைகள்       = 1 குமம்              [சமூ                  மகாபாரதக் கணக்கு (729:729:7290:34992)         அருத்தசாற்றக் கணக்கு (729:729:10206:67068)];
3 குமங்கள்          = 1 சேனை           [அனீகினி       மகாபாரதக் கணக்கு (2187:2187:21870:104976) அருத்தசாற்றக் கணக்கு (2187:2187:30618:201204)];
10 சேனை            = 1 அக்கவானி. (அக்க்ஷௌகினி அல்லது அக்குரோனி).

மேற்சொன்ன 2 கணக்குகளையும் அணிவகுப்புகளையும் அறிய, The Arthashastra-Kautilya -Penguin Classics- edited by L.N.Rengarajan 1992 என்ற பொத்தகத்தைப் படியுங்கள் . அருமையான ஆய்வுப் பொத்தகம். அருத்த சாற்றம் படித்தால், நம் புறப்பொருள் இலக்கியங்கள் இன்னும் தெளிவாய்ப் புரியும். (தெரிந்தோ, தெரியாமலோ நம்முடைய பல நூல்கள் சங்கதத்தில் வந்துவிட்டன. அவற்றைப் படிக்கும்போது தான் நாம் எவற்றை இழந்தோமென்று புரிகிறது. நம் நூல்களின் பெருமையும் புரிகிறது. 

எட்டுப்பதி (அஷ்டபதி) எனும் வேறொரு ஆட்டத்தில் சதுரங்கம் தொடங்கியது போல் தெரிகிறது. இதைச் சதுராஜி என வடக்கே அழைத்துள்ளார். https://en.wikipedia.org/wiki/Chaturaji அவ்வாட்டத்தில் 4 பேர் விளையாடுவர். ஒவ்வொருவரிடமும் 8 காய்களுண்டு. எட்டுப்பதி ஆட்டம் இப்போதையச் சதுரங்கப் பலகையிலேயே (8*8 = 64 கட்டப் பலகை) ஆடப்பட்டது. 8 காய்கள் ஒரு பட்டி (படை)யை குறிப்பதாய்க் கொள்வர்.  ஒரு படையில் 1 தலைவன், 1 யானை, 1 இவுளி, 1 தேர் என 4 காய்களும், இவற்றின் முன் 4 காலாளும் ஆக மொத்தம் 8 காய்கள் 8 பதியில் நிலை கொள்ளும். (இந்த ஆட்டத்தில் இருக்கும் 64 பதிகளில் தாம் கொண்ட 8 பதிகள் போக அடையவேண்டிய பதிகள் 56 என்பர். பழைய இந்தியாவில் ஒரு வேந்தன் சூறையாடிப் பெறவேண்டிய நாடுகளும் 56 என்பர்).

4 பேர் ஆடுவதால், மொத்தம் 32 காய்கள் ஆட்டத்தில் ஈடுபடும். (4 பேரும் 4 வேந்தரைக் குறிக்கிறார்.) நாலு படைக் காய்களுக்கும் வெவ்வேறு வண்ணம் பூசப்பட்டிருக்கும்.  இக்காய்கள் நகரச் சில சதுரங்க விதிகள் போக, எந்தக் காய் நகரவேண்டுமென நிறுவ நீள்பகடைத் துணையும் உண்டு. ஒரு நீள் பகடையில் 2, 3, 4, 5 என்ற எண்கள் மட்டுமே பொறித்திருக்கும்.  ஓர் ஆட்டத்தில் 2 நீள்பகடைகள் பயன்படுத்துவர். நீள் பகடைகளுக்கு மாறாக அறுமுகப் பகடைகளைப் பயன்படுத்தலாம். 6 முகப் பகடைகளில் 1 ஆம் எண் விழுந்தால், 2 இன் விதி பொருத்தியும். 6 ஆம் எண் விழுந்தால்,  5 இன் விதி பொருத்தியும் இதிலாடுவர். இரு நீள் பகடைகளைக் கொண்டு ஆடுவதாய் இப்போது கொள்வோம். விழும் பகடை எண்களுக்குத் தக்க படையுறுப்புகளை நகர்த்தவேண்டும். 

2 விழுந்தால் தேரையும், 3 விழுந்தால் இவுளியையும், 4 விழுந்தால் யானையையும், 5 விழுந்தால் காலாள் அல்லது தலைவனையும் நகர்த்தலாம்.  சதுரங்கம் போலவே தேர் குறுனத் திசையில் பலகை விளிம்பு வரை வேண்டும்படி நகரும். நெடுக்கு/கிடைத் திசையில் யானை நகரும். தலைவன் குறுனம், நெடுக்கு, கிடை என 3 திசையிலும் நகர்வான். காலாள் நெடுக்கில் மட்டும் ஒரு கட்டம் நகரலாம். இவுளி நகர்ச்சி சற்று விதப்பானது. கோண நகர்ச்சியில் நெடுக்கிலும் கிடையிலும் சேர்த்து 3 கட்டம் “ட” எழுத்தைப் போல் நகரலாம்.  இது முன்சொன்ன மகாபாரதக் குறிப்பிற்கு ஒத்துவருகிறது. அதில் தேர்/யானையை ஒட்டி 3 குதிரைகள் ஓரடுக்காய் நகருமென்றேன். இங்கு 1 குதிரை 3 கட்டம் என்பது ஏதோவொரு தொடர்பு காட்டுகிறது.   இப்போது பகடைகளைக் குலுக்கிப் போட்டால் 2, உம் 4 உம் விழுவதாய்க் கொள்வோம். இதன்மூலம் ஓர் ஆட்டக்காரர் தேரையும் யானையையும் விரும்பியபடி நகர்த்திக் கொள்ளலாம். இனி, அடுத்தவர் பகடை உருட்டித் தன் நகர்ச்சியைப் பார்ப்பார்.

அன்புடன்,
இராம.கி.

No comments: