Wednesday, March 15, 2006

சமயம்-2

இந்த 'உம்>அம்'முங்கிற "பொருந்தல் கருத்து" வேர் ரொம்ப வளமான வேருங்க.

ஊம்>ஊமுதல்>உம்முதல்= உறிஞ்சுதல்; (ஊமுதலைத் தொடர்ந்து இடக்கர் அடக்கலா ஒரு சொல் இருக்கு; அதை இங்கே சொன்னாச் சவையிலெ தப்பாயிரும்; தனியாயிருந்தாச் சொல்லலாம்; அதனாலே தவிர்க்கிறேன்.)

உம்மம்>அம்மம் = அம்மாவின் முலைப்பால்; உம்முதல் = வாய் பொருத்தி பாலை உண்ணுதல்; உறிஞ்சுதல்

உம்>அம்>அம்முதல் = பொருந்துதல்
அம்முதல்>அம்புதல்= கூடுதல்
அம்பல் = குவிந்த மொட்டு, சிலர் அறிந்து கூறும் புறங் கூற்று (அம்பலும் அலரும் களவு - தொல். 1085). யாழ்ப்பாணத்துலே அம்பல்ங்கிற சொல்லாலெ இந்தப் புறங் கூற்றைச் சொல்லுவாகன்னு கேள்விப் பட்டிருக்கேன்.

அம்பல்>அம்பலம் = கூடுகிற இடம். அந்தக் காலத்திலே கோயில் தானே, அண்ணாச்சி, கூடுகிற இடம். ஊரிலே நல்லது, கெட்டது எல்லாமே கோயிலை வச்சுத் தான். ஊர்க் கூட்டம் கூட, கோயிலில் தான்; (இது தமிழ்த் திரைப்படத்துலே மட்டும் இல்லை, அண்ணாச்சி; உண்மையும் அதுதான். எங்கூர்லெ ஊர்க் கூட்டத்தைப் புள்ளிக் கூட்டம், கரைக் கூட்டம்னு கூடச் சொல்றது உண்டு.) மலையாளத்திலே கோயிலை அம்பலம்னு தான் சொல்லுவாக. இதே மாதிரி கன்னடம் துளுவிலேயும் கூட இருக்கு.

சிற்றம்பலம்>சிதம்பரம் (வடமொழி எழுத்துப் பெயர்ப்பு); தில்லையிலே இருக்கிற நடவரசன் அம்பலம் ஒரு காலத்துலே சிறு அம்பலம் தான். பின்னாடித் தான் பொற்கூரை வேய்ந்து பொன்னம்பலம் ஆகிப் பேரம்பலம் ஆனது. இன்றைக்குக் கோயில் பரப்பில் பார்த்தால் மதுரை பெரிசா, தில்லை பெரிசான்னு சொல்ல முடியலை. சிலபேர் வீட்டுலே மதுரைதான் பெரிசு; சிலபேர் வீட்டுலே தில்லைதான் பெரிசு. என்ன சொல்றீக?:-)

திருச் சிற்றம்பலம்னு சொல்ல வேண்டிய சிவநெறியாளர்கள் சிதம்பரம்னு புரியாமச் சொல்லி நல்ல சொல்லை மறக்காதீக. தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை. பொன்னம்பலத்துலே தான் சோழர்கள் முடி சூடிக் கொள்றது. வெள்ளம்பலத்துலே (மதுரை வெள்ளியம்பலம்) தான் பாண்டியர்கள் முடி சூடிக் கொள்றது. அம்பலம்னா அரண்மனைன்னும் அருத்தம் உண்டு. அரண்மனையோட தொடர்பு கொண்டவுகளைத் தான் அந்தக் காலத்துலேர்ந்து அம்பலகாரர்னு சிவகங்கைப் பக்கம் சொல்லுவாக.

அம்பாரம் = பெருந் தொகுதி "யானைமேலே அம்பாரம்"னு கேள்விப்பட்டு இருப்பீகளே?

அம்முதல்>அமைதல் = பொருந்துதல். "நல்லா அமைஞ்சிருச்சு" ன்னு சொன்னா சீராகப் பொருந்தியிருக்கிறதுன்னு பொருள். அமைதல்லேர்ந்து வந்ததுதான் அமைதி. ஒன்று பட்டு அமைந்த பிறகு பேச்சுக்கு அப்புறம் எங்கே இடம், அண்ணாச்சி? வெறும் மோனம் தானே? (இதையும் புரியாம, மௌனம் னு பலபேர் சொல்றோம். இந்த ஔகாரமே தமிழுக்குத் தடங்கல் தாங்க. ஔகாரத்திலே வர்ற சொற்களையெல்லாம் கூர்ந்து கவனிச்சா அதுகள்லே நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளெ மறைஞ்சு கிடப்பதைப் பார்க்கலாம். இப்பக் கவுண்டர்னு கோயமுத்தூர் பக்கம் சொல்றாங்க. எருமையூரிலே (மைசூரில்), கருநாடகத்திலே, கவுடர்னு சொல்றாக. ஆனாக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தா கவுண்டர்ங்கிறது கோடரின் திரிபுன்னு விளங்கும். கொங்கு நாடு, மேடான சிறு சிறு குன்றுகள் உள்ள நாடு. கொங்கை என்பதும் இந்த மேட்டுப் பொருளில் வந்தது தான். பழைய கொங்கு நாடு மிக மிகப் பெரிசு. இன்றைய கோவை, ஈரோடு, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களோடு, தென் கன்னடம், ஏன் கொங்காணம் (Goa) வரைக்கும் கூட அது நீளும். அதே போல கோடு என்பதும் மேடு, குன்று, மலை என்று பொருள் கொள்ளூம். மேட்டு நிலத்து ஆட்கள் கோடர்கள்; நல்லியங் கோடன், செங்கோடன் போன்ற சொல்லாட்சியைப் பாருங்க. கோடர் கௌடர்/கௌண்டர் ஆன கதை இதுதான். இதே போல தான் குரவம் கௌரவம் ஆச்சுது. குரவர்கள்னா, பெரியவங்க, மதிக்கப் படவேண்டியவங்கன்னு பொருள். சிவநெறியிலே சமயக் குரவர்கள் நால்வர்னா, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்னு சொல்லுவாக. கௌரவம்னா மதிக்கப் படவேண்டிய தன்மை தானே! கடைசிலே கௌரவம்னா வடமொழிலேர்ந்து வந்ததுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். அதைக் குரவம்னு மாத்திப் பலுக்குங்க அண்ணாச்சி, நல்ல தமிழாயிடும். மறுபடியும் சொல்றேன். ஔ- ன்னாவிலே இருக்கிற சொற்களை எல்லாம் நல்லாப் பாருங்க!)

அமைதல்>அமைத்தல். இந்தக் காலத்துலே அமைப்பாளர்னு சொல்றோமே; அது 20ம் நூற்றாண்டு சொல்லாட்சி. அதது இருக்குற இடத்துலே பொருத்தி வச்சாத் தாங்க அது அமைப்பு; அப்படிப் பொருத்தி வைக்கிறவர் அமைப்பாளர்; அதைவிட்டு கந்தர கோளமா, போட்டது போட்டபடி கிடந்தா, அமைப்புன்னு எப்படிச் சொல்லுவோம்? திகைச்சுப் போயிற மாட்டோ ம்?

இப்படி ஒழுங்கா, அரச காரியங்களைப் பார்த்து அமைக்கிறவர் அமைத்தர்>அமைச்சர்; வட தமிழிய மொழிகளில் அமைத்தர்>அமாத்தியர் ன்னு ஆவார். அதேபோல அமைத்தர்>அமைந்தர்>அமந்தர் ஆகி மந்திரியும் ஆவார். அமைந்தர் என்பது administer என்று இந்தையிரொப்பிய மொழிகளில் முன்னொட்டுச் சேர்ந்து திரியும். நம்ம என்னடான்னா, administration - க்கு வார்த்தை இல்லைன்னு தடவுறோம். அமைப்புத் துறை தாங்க administration. உங்க நிறுவனத்துலே, இனிமே இதைப் பயன்படுத்துங்க.

அமை>அமையம் = பொருந்திவரும் நேரம்.
அமை>அவை>அவையம்= எல்லோரும் சேர்ந்து சம்முன்னு பொருத்தமா உட்கார்ந்திருக்கிற இடம். அதாவது ஒரு assembly. அரசனின் "அறங் கூறு அவையம்" -- இது போல ஏகப்பட்ட அவையம் எடுத்துச் சொல்லலாம்.

அம்>அமர்தல் = பொருந்துதல். ஒரு இடத்தில் உட்காருதல் என்பதும் பொருந்துதல் தான்
அமர்>அமரிக்கை = அடக்கம். "இருப்பதே தெரியாத படிக்கு அமரிக்கையா இருந்தாருங்க!" - ன்னு சொல்றோமில்லே? அதே நேரத்துலே அமளிங்கிறது ஆரவாரத்தோடு இருக்கிறது. சிலபேர் அமரிக்கையும் அமளியும் ஒண்ணுன்னு நினைச்சுக்கிட்டு மாறிப் பயன்படுத்தியிர்றதும் உண்டு.

விளக்கு அமர்ந்து போச்சுன்னா அடங்கி, ஒடுங்கிப் போச்சுன்னு அருத்தம்
"அமர்த்துடா அவனை"ன்னு சொன்னா "பேச விடாதே"ன்னு பொருள்.
அம்முதல்>அமுங்குதல் = ஒடுங்குதல்; "அவன் குரல் அப்படியே அமுங்கிருச்சு"
அம்முகிற காரணத்தால் அம்மி, (துவையல் அரைக்கிறோம் இல்லெ; அப்ப தேங்காயை அமுக்கி நசிச்சுத் தட்டையாக்கி.... அப்படி வந்த சொல் அது.);
அமுங்கு>அமுக்கு>அமுக்கம்>கமுக்கம் = அடங்கி, செய்தியை வெளியே சொல்லாமல் இருத்தல்
இந்த கமுக்கம் தான், இன்றையத் தமிழில் "கம்முன்னு கிட" என்று வருகிறது. "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்தில் வரும் ஆண்டாளு (மனோரமா ஆச்சி) ஞாவகம் வருதோ?
அம்>அமிழ்>அமிழ்தல் = நீரில் அமுங்குதல்

அம்>அமல்தல் = நெருங்குதல் "வேய் அமல்கல்" - கலித்தொகை 45
அமர்=போர். ஒருத்தருக்கு ஒருத்தர் பொருதுறதுதானே போர். அதனாலே இந்தப் பொருளும் இதற்கு உண்டு. அமர்>அமரம் = போர் மறவருக்கு விடப் பட்ட மானியம்.

அம்>அம்பு>அம்பர் = ஒருவகைப் பிசின்; ஒட்டுதல் பொருள்.
அம்முதல்>அம்புதல்>அப்புதல் = தட்டையாகச் செய்தல், ஒட்டுதல் பொருத்துதல்
அப்புதல்>அப்பளம்>பப்படம். = தட்டையாகச் செய்த உளுந்துப் பண்டம்.
அப்பளித்தல் = தட்டையாக்குதல்

இதோடு அகரத்தை முடிச்சிக்குவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: