Thursday, July 08, 2021

சாப்பாடு - 2

"இதற்கு மறுமொழியாய், என்னை இனவெறி பிடித்தவனென்று முத்திரை குத்துவது ஒரு புறம் இருக்கட்டும்..(இந்தக் குத்தல்களையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. நான் இன வெறியனா, இல்லையா என்பது என்னோடு பழகியோருக்குத் தெரியும் .இங்கு யாரிடமும் என் நேர்மையை நிறுவிக்கத் தேவையில்லை.) அதேபோல பாவணரை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். இங்கு அதெல்லாம் பேச்சில்லை. சப்பு என்பதற்கு பர்ரொ எமனோவின் அகரமுதலியில் திராவிடச்சொல் என்று போட்டிருக்கிறதே? அதற்கு உங்கள் மறுமொழி என்ன? அதையும் மறுப்பீர்களா? இலக்கியங்களிலும் கல்வெட்டிலும் வராவிட்டால் எந்தச் சொல்லும் தமிழில்லையா? ஒலிக்குறிப்புச் சொல் என்பதற்கு உங்கள் மறுமொழி என்ன? சப்பி இடாது, சப்பி ஆடாது, தமிழன் கறியை உண்டு கொண்டிருந்தானா? நான் எப்படிக் கோழிக்கறி சாப்பிடுகிறேன்? அல்லது அவக்கு அவக்கென முழுங்கிச் சாப்பிடுகிறேனா? எனக்குப் புரியவில்லை. ’சொன்னதே சொல்வீர்கள்’ என்றால் we agree to disagree என்று சொல்லி விடலாம். சாப்பாடு பற்றிய இவ்வுரையாடலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்“ என்று சொல்லி உரையாடலிலிருந்து விலகிக்கொண்டேன். 

மீண்டும் மணிவண்ணன், “மன்னிக்கவும் இராம.கி. நம்மை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இது போன்ற விவாதங்களில் கறுப்பு அடிமைகளென்று குறிப்பிடுவதில்லை. ஆனால், இன்னும் நீங்கள் “வெள்ளைத் தொரைமார்” என்று குறிப்பிடுவது கடுமையாகக் கண்டிக்க வேண்டிய இனவெறிக் கூற்று. அதை நீங்களாக விட்டுவிடுவது தான் பண்பாடு. ஒருவருடைய இனவெறி அவருடைய சொல்லிலேயே தெரிந்துவிடும். பண்பற்ற சொற்களைத் தவிர்ப்பது நல்லது.

சப்பு என்பதிலிருந்து சாப்பாடு எப்போது வந்தது? அது தெலுங்கிலும் மலையாளத்திலும் எப்போது வந்தது? பண்டைத் தமிழிலேயே அது வழக்கில் இருந்ததென்றால் ஏனது எழுத்தில் வரவில்லை? வாதம் சப்பென்ற சொல்லைப் பற்றியல்ல. சாப்பாடு, சாப்பிடு என்ற சொற்களைப் பற்றியது மட்டுமே. தமிழ் நெடிய எழுத்து மரபைக் கொண்டது. தமிழ் அளவுக்கு இலக்கிய, கல்வெட்டு, செப்பேடு மரபுகள் கொண்ட மொழிகள் உலகிலேயே மிகவும் அரிது. பண்டைத் தமிழில் சாப்பாடென்ற சொல் இருந்திருந்தால் அது எழுத்தில் வராமல் போயிருக்கும் வாய்ப்பே இல்லை. இது அடிப்படைக் கருத்து. 

தமிழ் சமஸ்கிருதத்தைப் போலல்லாமல் ஒரு வாழும் மொழி. அதனால், ஒவ்வோராண்டிலும், பல சொற்களைப் புதிதாகச் சேர்த்திருக்கும், பல சொற்களைக் கழித்திருக்கும். நன்னூலார் குறிப்பிட்டது அதையும் சேர்த்துத் தான். இன்றும் தமிழ் அப்படித் தான் இயங்குகிறது. அப்படிச் சேர்க்கும் போது புதிய சொற்களில் பல இரவற் சொற்களாக இருப்பதையும் பார்க்கிறோம். கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலான மரபு அதுதான். மணிப்பிரவாளம் தோன்றிய மரபும் அப்படித்தான். சப்பு என்ற சொல்லிலிருந்து சாப்பாடு தோன்றினால், தெலுங்கிலும் மலையாளத்திலும் அப்படித் தானா? ஏன் இந்த 3 மொழிகளிலுமே சாப்பாடு என்ற சொல் 15 ஆம் நூற்றாண்டு வரை எழுத்தில் வரவில்லை? சப்பு என்பதிலிருந்து சாப்பாடு வந்தது என்பது நிறுவ முடியாத கற்பனை என்பது என் கருத்து “ என்று கூறினார். 

இப்படி முன்முடிவு கொண்டவரை மாற்ற முடியாதென்று வந்ததற்கு அப்புறம், ”இனிமேலும் வாதத்தில் கலந்து கொள்வது சரியில்லை, தனிக் கட்டுரை எழுதுவோம். இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் அது இருக்கட்டும்” என்ற முடிவிற்கு வந்தேன். கட்டுரைச் சுட்டியை மட்டும் முகநூலிற் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். முகநூலில் வாதம் தொடர்ந்தது.  

செ. இரா. செல்வக்குமார், “சப்புக்கொட்டி சாப்பிடுகின்றான் என்றோ சப்புகின்றான். குழந்தை கை சப்புகின்றது (கை சூப்புகின்றது) என்றெல்லாம் சொல்லிக் கேட்டதேயில்லையா? பாவாணரை ஏற்க வேண்டாம், அவர் சொன்னதை நம்ப வேண்டாம். ஆனால் திறந்த உள்ளத்துடன் ஐயப்பாட்டோடு இருந்தாலும் திறந்த மனத்துடன் அணுகுங்கள். ஏற்க முடியாவிட்டால் தவறில்லை. அவரைப் பழிப்பது நிச்சயமாக ஒருவரின் அறியாமை, அவர் புலமையை, அவரின் பன்மொழிப் புலமையை, வாணாளெல்லாம் உழைத்தாக்கிய அறிவுக் கொடையை மறுப்பது அறியாமையாகும். 

பாவாணர் சொல்வனவற்றுள் நானும் ஏற்காதனவும், தவறென உணர்ந்தவையும் உண்டு. மரே எமெனோவைவிட ஆயிரம் மடங்கு அல்ல நூறாயிரம் மடங்கு தமிழும் தமிழின் உள்ளாழமும் அறிந்தவர் பாவாணர். மொழியியல் கூறுகளின் அறிவில் ஏறத்தாழ ஒத்த அறிவுடையவராக இருக்கலாம் அல்லது மரே எமனோ ஓரிரு மடங்கு கூடுதலான அறிவுடையவராகவும் இருக்கலாம். தோடா மொழியில் பாவாணரை விட 100 மடங்கு அறிவுடையவர் மரே எமனோ. ஆனாலும் தமிழைச் சரிவர அறியா எமனோவின் தோடா மொழியறிவும் குறைவுடையதே. கோலாமி மொழியிலும் கூடுதலான அறிவு பெற்றவர், ஆனால் அதுவுங்கூட  2-3 நிலை தாண்டிய பெயர்ப்பு வகை அறிவே. இலத்தீனும் பல கிளையான பிற்காலப் பேச்சு இலத்தீனும் (வல்கர் இலத்தீன்) எசுப்பானியமும் இத்தானியமும் பிரான்சியமும் போர்த்துகேயமும் அறியாமல் காட்டலான (Catalan) மொழி ஆய்வு செய்வதைப் போல.” என்று கூறினார். 

நண்பர் தமிழ நம்பி, “வேறு மொழியில் இச்சொல்லுக்கு வேரிருக்கிறது என்று காட்டமுடியாத நிலையிலும், இச்சொல் தமிழ்ச்சொல்லில்லை என்று கூறுவதில் விருப்பமுடைய ஒரு மனப் போக்கிற்கு எந்தச் சான்றும் ஏற்புடையதாக இருக்காது என்பதே உண்மை!” என்று கூறினார். அடுத்து Kingsley Jegan Joseph என்பார், "சப்பு" கண்டிப்பாக தமிழ்தான். "கசப்பு" அதற்கு கண்டிப்பாக தொடர்புடைய சொல் தான். மணி, இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இந்த வேர்ச்சொல் வேறு மொழியில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து. இதற்கான இலக்கணச் சான்று எனக்கு எதுவும் தோன்றவில்லை என்றாலும் இதில் வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன். 

அப்போ, கூவு->கூப்பாடகும் போது, கொள்/கொள்கை->கோட்பாடாகும்போது, புறம்->புறப்பாடாகும்போது, சப்பு ஏன் சாப்பாடாகக்கூடாது? இது "சப்பு" என்ற வேர்ச்சொல்லின் ஒரு பயன்பாடு மட்டுமே. இதே பயன்பாடு மற்ற பல வேர்ச் சொல்களுக்கும் பொதுவானதே. இதுவும் கண்டிப்பாக தமிழ் தான் என்பது என் கருத்து. இதையும் ஏற்றுக் கொண்டீர்களானால், அப்புறம் தமிழ் தானே?” என்றார். பின் இரத்தின சபாபதி கந்தசாமி என்பார் https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/1510028865702264 என்ற சுட்டியில் உள்ள மகுடேசுவரன் கோவிந்தராஜணின் “சாப்பாடு என்றால் என்ன ? சாப்பிடு தமிழ்ச்சொல்லா?” என்ற இடுகையைச் சுட்டிக்காட்டினார். 

அந்த இடுகையில் “உண்பது, தின்பது ஆகியவற்றுக்கு மாற்றாகச் சாப்பிடுவது என்று சொல்கிறோம். உண்டுட்டேன், தின்னுட்டேன்’ என்று கூறுவதற்கு வெட்கப்பட்டு ‘சாப்பிட்டேன்’ என்கிறோம். சாப்பிடுதல் என்றால் என்ன தெரியுமா ? சா என்பது சாவைக் குறிக்கும். சாக்காடு என்றால் இறப்பு. சாப்பறை என்றால் இறப்புக்கு அடிக்கப்படும் பறை. சாப்புதல் என்றால் வருத்திக்கொல்லுதல், அழித்தல். தெலுங்குப்பட ‘சப்பேஸ்தானு’ வசனத்தை நினைவு கொள்க. நீங்கள் ஏதேனும் ஓர் உயிரை வேட்டையாடிக் கொன்று அதை உங்கள் வயிற்றுக்கு உணவாக இட்டால் அது ‘சாப்பிடுவது’ ஆகும். சாப்பு இடுவது. சாப்பு ஈடு சாப்பு ஆடு ஆயிற்று. கொன்று பெற்றதை வயிற்றுக்கு இடுவது. மாமிசக் கறிவிருந்தைச் சாப்பாடு எனலாம். மாமிசம் இல்லாத இடத்தில் காய்கறிகளோடு உண்ண வேண்டும். அதுதான் சாப்பாடு ஆகும். தடபுடலான பெரிய விருந்துதான் சாப்பாடு. அதை உண்பதுதான் சாப்பிடுவது.” என்று வரும். 

இதன்பின் Kingsley Jegan Joseph, “அதாவது, சங்க இலக்கியத்துல "பண்ணு" என்ற வேர், பல வெறு வடிவங்களில் புழங்கினாலும், "-னேன்" என்ற வடிவம் "ஆடினேன்", "பாடினேன்" என்ற பல வேர்ச் சொல்களோடு சேர்ந்து புழங்கி இருந்தாலும் கூடப் "பண்ணினேன்" என்ற ஒரு சொல் சங்க இலக்கியத்தில் தென்படவில்லை என்றால், அச் சொல்-வடிவம் அப்பொழுது பயன்பாட்டிl இல்லை என்று சொல்லவருகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு மணிவண்ணன், “பண்ணு என்ற வேரைப்பற்றி ஐயமில்லை. ஆனால், சாப்பாடு, சாப்பிடு என்பவை சப்பு என்ற வேரிலிருந்து வந்திருக்கும் என்று என்னால் ஏற்க முடியவில்லை. இந்த அடிப்படைச் சொல் 15 ஆம் நூற்றாண்டு வரை எழுத்தில் வராததற்குக் காரணம் என்ன?” என்றார். "பண்ணினேன்" கூட அடிப்படை சொல் தான். ஆனா சங்க இலக்கியம் எதிலும் படித்ததாய் நினைவு இல்லையே? வேரும் தமிழ் வேர் தான், உருவமும் பொதுவாகவும் பழமையாகவும் புழங்குகிற உருவம் தான். ஆகவே தமிழ்தான் :) கொள்-கோட்பாடு ஆகும்போது அந்த முதலெழுத்தும் நெடிலாகுது பாருங்க.” என்று Kingsley Jegan Joseph மறுமொழி கூறினார். 

இதற்கு Lalitha Raja, “உண்மை அய்யா, சப்பு என்ற சொல் தமிழ்ச்சொல் தான்.. அது எவ்வாறு சாப்பிடு ஆனது என்பதற்கான, சான்று தானே கேட்டேன்?. சப்பிடு> சாப்பிடு என்று மருவியதென்றால், அது ஒரு சொல்லுக்கான ஆக்கமாகக் கொள்ளுதல் சரியல்லவே? இதைப் போன்று, வேறு சில சொற்களுக்கும் முறையான மாறுபாடுகளையும் காட்டுதல் வேண்டும் அல்லவா?.இன்று வழக்கிலுள்ள இதை மட்டுமே குடித்தல், மற்றும் உண்ணுதல் என்ற இரண்டிற்கும் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள், இதைப் பல தமிழ் மொழியியல் அறிஞர்கள் என்று ஒரு மராட்டிய சமஸ்க்ருத கணனி மொழியியலாளர் என்னிடம் எள்ளலாகவே கூறினார். அதனால் வந்த தர்க்கமிது” என்றார். Kingsley Jegan Joseph, “இதில் மருவலேயில்லை. ஒரு வேர்ச்சொல்லின் வடிவ ஆளுமை மட்டுமே. இதே வடிவம் பல்வேறு வேர்ச்சொற்களுடன் இணைந்து வருவது கவனிக்க” என்றார். .

இதற்கு மறுமொழி கூறிய Lalitha Raja, “அவர் தமிழர்களின் சொற்பயன்பாட்டை குறை கூறினார்.. அவர் சொன்ன கூற்று.. “Tamil people use only caapaatu for both kaanaa (உண்ண), piinaa(குடிக்க), This is evidence from many tamil scholars.." எதோ நாம் உண்/திண், குடி என்ற சொற்கள் இல்லாதவர்கள் போற் பேசியது, என்னைச் சீண்டியது.. நான் அவரிடம் உண்/திண், குடி என்பவை அதனினும் பழமை யானவை என்று கூறினேன். மேலும் இது தீர்வு கிடைக்கவேண்டிய தர்க்கம், இதில் ஏன் சிலர் வன்சொற்களை பயன்படுகின்றனர் என்று தெரிய வில்லை..தயவுசெய்து, விளக்கங் கேட்டால் சரியான, முறையான சான்றோடு சொல்லுங்கள், விளக்குங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார். ...

மீண்டும் மணிவண்ணன், “சாப்பிடு என்பது consume என்பதற்கு இணையான பொருளில் தமிழில் ஆளப்படுகிறதென நினைக்கிறேன். அதனால்தான் தண்ணி சாப்பிடு, ரொட்டி சாப்பிடு, இட்லி சாப்பிடு, காப்பி சாப்பிடு, ஜூஸ் சாப்பிடு என்ற எல்லாவற்றுக்கும் வருகிறது. அந்த இந்திக்காரரிடம் முதலில் நேற்று, இன்று, நாளைக்குக் கல், ஆஜ், அவுர் கல் என்ற முறைகேட்டைப் பற்றிக் கேளுங்கள். சாப்பிடு என்ற சொல் தமிழில் ஆளப்படுவது உண், தின், குடி, பருகு என்ற எல்லாவற்றுக்கும் பொதுவாக வருகிறது. இது சீராக இல்லை. தமிழ் போன்ற செம்மொழியில் இத்தகைய ஆட்சி பொருந்தவில்லை. இது தொல் பழஞ் சொல்லாக இருந்திருந்தால் இலக்கியத்தில் வராமல் இருந்திருக்காது. எல்லாத் திராவிடமொழிகளிலும் இருந்திருக்கும். ஆனால் இது பின்னால் தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் வந்து சேர்ந்திருக்கிறது. இது ”சோறு சாப்பிடு”, “தண்ணி சாப்பிடு” என்று இரண்டுக்கும் பொதுவாக வந்திருக்கிறது. தண்ணியில் ஊனுணவு ஏதுமில்லை. இப்படிப் பொத்தாம் பொதுவாக, நுட்பமில்லாமல் வந்து ஒட்டியிருப்பது மட்டுமே இது இரவற்சொல் என்பதைக் காட்டுகிறதெனக் கருதுகிறேன்” என்றார். 

Sankara Narayanan G கவிஞர் மகுடேசுவரனின் இடுகைக்கு மறுமொழியாய் மணிவண்ணன் எழுதியது: “முற்றிலும் தவறான கருத்து. வரதராஜர் கோயில் தெலுகு கல்வெட்டில்தான் முதலில் சாப்பாடு என்ற சொல் பழகிவருகிறது. அதன் பிறகே சொல் வழக்கிற்கு வந்தது. சம்பேஸ்தானு என்பதற்கும் சாப்பாடு என்ற சொல்லுக்கும் நீராடும் தொடர்பு கூட இல்லை. கோயில் ப்ரஸாதத்திற்கே சாப்பாடு என்ற சொல் வழக்கிலிருந்து பிறகு பொதுவழக்காகியிருக்கிறது. தெலுகுச் சொல்லே. ஆனால் இந்தப் பொருளில்லை”

முடிவாக “1860 இல் வெளிவந்த வீரமாமுனிவரின் சதுரகராதியின் திருத்திய பதிப்பில் “சாப்பாடு”, “சாப்பிடு” என்ற சொற்களில்லை. சாப்பாடு என்பது தமிழின் அடிப்படைச் சொல்லாக இருந்திருந்தால், அது 19 ஆம் நூற்றாண்டு கூட வேண்டாம், 18 ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்திருந்தால் ஏன் அது சதுரகராதியில் இடம்பெறவில்லை? 1852 இல், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வெப்ஸ்டர் ஆங்கிலம் தமிழ் அகராதியில் சாப்பிடுதல் என்ற வினைச்சொல் இருக்கிறது. ஆனால், சாப்பாடென்ற சொல்லைக் காணவில்லை. திருவேங்கட சதகம் எந்த நூற்றாண்டெனத் தெரியவில்லை. அது 19 ஆம் நூற்றாண்டு நூலாக இருந்தால் சாப்பாடென்ற சொல் தமிழுக்குள் 19 ஆம் நூற்றாண்டில் புகுந்திருக்கும் வாய்ப்பிருக்கிறதெனக் கணிக்கலாம்.” என்று மணிவண்ணன் கூறினார்.

உரையாடல் அங்கு இன்னும் போகிறது. கட்டுரைப் பின்புலம் புரிவதற்காக முகநூல் உரையாடலை எடுத்துக்கூறினேன். பொறுத்துக்கொள்ளுங்கள். இனி என் கட்டுரைக்கு வருவோம்.

அன்புடன், 

இராம.கி.

No comments: