Tuesday, May 28, 2019

நாத்தி - 3

 இந்தியாவிற்குள் மாந்தக் குடியேற்றம் 4 முறை, நடந்திருக்கலாமென ஈனியல் ஆய்வு சொல்லும். முதற்குடியேற்றம் (NRYC - M130) 65000 ஆண்டுகள்முன் மேற்குக்கடற்கரை வழி நடந்ததென்றும்; 2 ஆம் குடியேற்றம் (NRYF - M20) 30000 ஆண்டுகள்முன் ஏற்பட்டதென்றும் (இது எவ்வழியென அறியப்படவில்லை. இதிலிருந்து NRYH என்ற கூட்டமும் உருவானது). 3 ஆங் குடியேற்றம் (R1a1) 9000 ஆண்டுகள்முன் வடமேல் மேற்கு (North West West) நிலவழி ஏற்பட்டது என்றும். 4 ஆங் குடியேற்றம் (இவர் R1a1 இல் இருந்து சற்றே வேறுபட்டவர். இவரே ஆரியர் என்று அறியப்பட்டவர்.) 3500 ஆண்டுகள்முன் வடவட மேற்கு (North North West) நிலவழி என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இற்றை இந்திய மக்கள் தொகையில் 30000 ஆண்டுகள் முன் குடியேறிய (NRYF - M20) மக்களே 50% அளவு ஆவார். இவரே திராவிடர் ஆகலாமென்றும் சொல்வர். ஆனால் இன்று, இற்றைத் திராவிடருள் மற்ற 3 குடியினரும் பெரிதுங் கலந்துவிட்டனரென்றே ஈனியல் சொல்லும்.

திராவிடப் பழம்மொழியான தமிழ் எப்போது எழுந்ததென்று இன்னும் தெரியாது. பென்னம்பெரும் உரையாடல்கள் இன்னும் நடக்கின்றன. ஒரு பக்கம் தமிழின் அகவை குறைப்பதும், இன்னொரு பக்கம் அதை உயர்த்துவதும் நடந்துவருகின்றன. முந்தைத்திராவிடர் ஒருவேளை கடற்கரைவழி வந்திருப்பாரானால், மேற்குக்கடற்கரை நெய்தலே அவருக்கு முதலிற்பழக்கமாகும். (என் முந்தைக் கட்டுரைகளில் இதுபற்றி நெடுகப் பேசியுள்ளேன்.) தென்னிந்தியப் பூகோள அமைப்பால் மேற்குநில நெய்தலுக்கு அப்புறம் மேற்குத்தொடர்ச்சிமலை சார்ந்த குறிஞ்சியே பழங்குடிகளுக்குத் தென்படும், குறிஞ்சி வாழ்வு பெரும்பாலும் வேடுவச்சேகர (Hunter Gatherer) வாழ்வே. முதலில் தாய்வழிக் குமுகத்திலிருந்து பின் தந்தைவழிக் குமுகத்திற்கு இத்திணையார் மாறியிருக்கலாம். (அதாவது மருமக்கள் தாயத்திலிருந்து மக்கள் தாயத்திற்கு மாறியிருக்கலாம்.) தாய்வழிக் குமுகத்தில் குடும்பம், தனிச்சொத்து, அரசு போன்றவை கிடையாது. தந்தை வழிக் குமுகாயம் ஏற்பட்டபின்னரே இவையெழுந்தன.

இந்நிலையில் பழந்தமிழர் குறிஞ்சியிலிருந்து கீழிறங்கி முல்லைக்கு வந்தார். முல்லையில் அரசு ஏற்பட்டதைக் கோனென்ற சொல்லே எளிதிலுணர்த்தி விடும். கிழார், கோன், வேள், வேளிர், அரையன், மன்னனென்ற சொற்கள் எல்லாம் முல்லைத்திணையிலேயே ஏற்பட்டுவிட்டன. வேந்தன் என்பது மருதம் ஏற்பட்டபின் எழுந்திருக்கலாம். மாந்தரிடம் முதலிலேற்பட்ட சொத்து என்பது மாடுகளே. முல்லை வாழ்க்கையில் ஆணாதிக்கம் ஏற்பட்டுவிட்டது. மருவிக்கொண்ட மருமகள் தன் மாமனார் வீட்டிலும்/குழுவோடும் சேர்ந்து வதியும் பழக்கமும் அதன்பின்னே ஏற்பட்டது. நாத்தனார் என்னும் உறவு ஆணாதிக்க முல்லையில் தோன்றவே பெரும்வாய்ப்புண்டு. ஊனோடு, கான்பழங்களும், காய்கறிகளும், புன்செய்ப் பயிர்களுமே முல்லையில் உணவாயின. நெல்பயிரிடல் என்பது முல்லை வாழ்க்கையில் எழவில்லை. தவிர, நெல் நம்மூரிலெழுந்த கூலமும் இல்லை.

தொடக்க காலத்தில் காவிரிச் சமவெளியும் ஒரு காடுதான். அங்கே மருதம் முதலில் ஏற்படவில்லை. ஆனால் அங்கும் மாந்தர் அலைந்துதிரிந்தார். நெல்லும் நீர்ப்பாசனமும் நம்மூரில் நுழைந்தபின்னரே மருதத்திணை ஏற்பட்டது. ஏறத்தாழ 8000-5000 ஆண்டுகள்முன் சீன யாங்ட்சி ஆற்றங்கரையில் இருந்தோ, யுன்னானிலிருந்தோ, தென்கிழக்கு ஆசியாவிலிருந்தோ, இந்தியாவினுள் நெல் நுழைந்திருக்கலாம் என்பதே பழம்புதலியலாரின் (paleobotanists) முடிவு. எல்லாவற்றிற்கும் சிந்துசமவெளியைத் தூக்கிப்பிடிக்கும் போக்கை நான் ஏற்பதில்லை. நெல் இந்தியாவின் வடமேற்கிலிருந்து வரவில்லை. தவிர, சிந்துசமவெளியாருக்கு, தென்கிழக்காசியா எனும் நிலம் இருந்ததே தெரியாது. (நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் பற்றி இத்தொடரில் பேசமுடியாது. வேறுதொடரில் செய்வேன்.)

இப்போதைக்கு நாற்றுநடும் பழக்கம் நெல்பயிரிடலுக்கு அப்புறமே வந்தது என்ற செய்திமட்டும் போதும். அதாவது 8000-5000 ஆண்டுகளுக்கு அப்புறமே அப்பழக்கம் வந்தது. நாத்தனாரெனும் உறவோ அதற்கும் முன்னே ஏற்பட்டு விட்டது. எனவே நாற்றைவைத்து நாத்தனார் என்றசொல் எழ வாய்ப்பில்லை. அடுத்து ”நா+ துணையார்= பிறந்தகத்திலிருந்து, புகுந்தகத்திற்கு வந்த பெண்ணுடன் உறைந்து, ஆறுதலும் தேறுதலும் தரும், கணவனின் தமக்கை அல்லது தங்கை” எனும் விளக்கம் சொல்லைமாற்றி பொருள்சொல்வதாகும். நாத்தூண்நங்கை என்பதை நாத்துணை என்பது “கதா காலாட்சேபம்” செய்வோரின் திரிபுமுறை. அது பொருந்தியதைப் புகல்வது போன்றது.. முற்றிலும் முறையற்றது. நாத்தூண்நங்கை என்பதை நாத்துணையார் என்று தந்திரமாய்த் திருத்துவது பேச்சரங்கத்தில் சரிவரலாம். ஏரணத்திற்குச் சரிவராது. நாத்தூண் நங்கை குறித்த ”புகுந்தவீட்டார், பிறந்தவீட்டைத் தாழ்த்திப்பேசினால், புதுப்பெண் தன் வீட்டுப்பெருமையைத் தூணாகநின்று காப்பவளென்று, பொருள்படும்” என்ற  3 ஆம் விளக்கமும் எடுபடாது. ஏனெனில் தூணென்ற பெயர் அங்கில்லை. நாத்து ஊழ்நங்கையில் வரும் ”ஊழ்நங்கை” இலக்கணப்படி வினைத்தொகை. இருபெயரொட்டுப் பண்புத்தொகை இல்லை. . .

அடுத்து வடமொழி வழி சொல்லும் நாலாம் விளக்கத்திற்கு வருவோம். நநந்த்ரி, நநாந்த்ரி போன்றவை வடசொல் தோற்றங் காட்டலாம். ஆனால், மோனியர் வில்லியம்சு பார்த்தால், இவற்றிற்கு எந்த வேர்ச்சொல்லும் கொடுக்கப்படவில்லை. நநந்த்ரி என்பது எந்தச் சான்றுமின்றி அகர முதலிகளில் மட்டுமே பயில்கிறதென மோனியர் வில்லியம்சு அகரமுதலியே சொல்லும். நநாந்த்ரி என்றசொல் இருக்கு வேதம் 10 ஆம் மண்டலம் 85,46 இல் பயில்வதாய்ச் சொல்லப்படும். (இருக்கு வேதத்தை ஆய்ந்தோர் முதல் மண்டலமும், 10 ஆம் மண்டலத்தில் 84 ஆம் போற்றிக்கு அப்புறம் வரும் பாக்கள் பிற்சேர்க்கை என்பார். மற்ற மண்டலங்கள் பொ.உ.மு.1200 என்பார். .இங்கு சொல்லப்படும் பிற்சேர்க்கை எப்போது நடந்ததென்று தெரியாது. இருக்குவேதம் எழுத்துவடிவில் வந்துசேர்ந்தது பொ.உ.500 களுக்கு அப்புறமே.) 10 ஆம் மண்டலம் 85 - 45, 46 இல் வரும் வரிகள் கீழேயுள்ளன.   

10.085.45a imÀÎ tvam indra mÁËhvaÏ suputrÀÎ subhagÀÎ kÃÉu |
10.085.45c daÌÀsyÀm putrÀn À dhehi patim ekÀdaÌaÎ kÃdhi ||
10.085.46a samrÀjÈÁ ÌvaÌure bhava samrÀjÈÁ ÌvaÌrvÀm bhava |
10.085.46c nanÀndari samrÀjÈÁ bhava samrÀjÈÁ adhi devÃÍu ||

இதன்பொருளாய்

10.085.45a. Bounteous Indra, make this bride blest in her sons and fortunate.
10.085.45c. Vouchsafe to her ten sons, and make her husband the eleventh man.
10.085.46a. Over thy husband's father and thy husband's mother bear full sway.
10.085.46c. Over the sister of thy lord, over his brothers rule supreme.

சொல்வர். கணவன் வீடு வந்துசேர்ந்த மருமகள் நிறையப் பிள்ளைகள் பெறுவதற்கும், கணவனின் கவனிப்பு சிறப்பாய் அமைவதற்குமான இந்திரனின் ஆசிவேண்டியும், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனாரின் நல்ல கவனிப்பு நாடியும் சொல்லப்படும் பா இதுவாகும். ஆழ்ந்து ஓர்ந்தால் இது ஆணாதிக்கம் ஏற்பட்டபிறகு எழுந்த கண்ணி என்பது புலப்படும். நநாந்த்ரி என்ற சொல் சங்கதம், பாகதம், பாலி தொடர்பான இந்திக் மொழிகள் தவிர வேறு இந்தையிரோப்பியன் மொழிகளில் கிடையாது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ஆரியர் இந்தியாவினுள் நுழைந்தபோது வேடுவச் சேகர நிலையிலில்லை. முல்லைவாழ்க்கையில் தம் ஆடு மாடுகளுடன் தாம் அவர் உள்நுழைந்தார். அவருடைய குமுகமும் அந்நிலையில் ஆணாதிக்கக் குமுகம் ஆகிவிட்டது. அவர் நுழைந்தபோது வட தமிழர்/திராவிடர் நகர நாகரிகம் கடந்து மருத நாகரிகம் (கோதுமை, நெல் வழியாக) அடைந்துவிட்டார். மாடமாளிகை கூட கோபுரம் என்பன மருதவாழ்வில் தான் எழும்,

தமிழர்/திராவிடரைப் பார்த்தபின்னரே, நநாந்த்ரி என்ற இச்சொல் ஏற்பட்டிருக்கலாம். ”நாத்தி”க்கு அருகில் முன்சொன்னதுபோல் பல்வேறு திராவிடச்சொற்கள் உள்ளன. தமிழிய மொழிகளிலிருந்தே பாகதமும், பாலியும், சங்கதமும் பெற்றன என்று சொல்வதே முறையாகத் தெரிகிறது. ஆனால், பெயரனைத் தாத்தன் ஆக்குவது என்று முடிவு கட்டிவிட்டவருக்கு நான் சொல்வது ஏற்காது. அவரோடு வாதாடுவது பொருளற்றது. இதுவரை சொன்னக ருத்துக்களால், நாத்தி என்ற சொல் குறைந்தது பொ.உ.மு.1500 க்கு அருகில் தமிழிய மொழிகளில் இருந்திருக்கலாம் என்பதே என் கூற்றாகும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: