Monday, February 04, 2019

மேகலையும் கேசியும்

”ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்கள் சில தமிழல்ல என உரைக்கப்படுவது சரியா? சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டல கேசி. என்பவற்றில் மேகலை, கேசி என்ற சொற்கள் சங்கதமாகுமா?” என்றும் சொற்களம் முகநூற்குழுவில் கேட்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் ”அதிகாரம்” தமிழே. மேகலை என்றசொல் எளிதானது. அதுவும் தமிழே. அதையறியச் சில மொழி மரபுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியங்கள் என்பன அகரமுதலிகள் அல்ல. அவை ஒருசில குறிப்புகளை மட்டுமே தரும். இலக்கியச் சொற்களின் எல்லா வடிவங்களையும் சட்டெனக் கண்டுவிட முடியாது. சற்று ஏரணம் உடன்சேர்த்து நுணுகியறிய வேண்டும். அடிப்படையில் மேகலையென்பது வேலைப்பாடுள்ள செல்வரின் ஒட்டி யாணம். உடு>ஒடு+யாணம்= ஒட்டுயாணம்>ஒட்டியாணம். உடு= உடலின் நடுப்பகுதி. (இடையென்பார்.) இடையிற்கட்டும் பொன்னாலான யாணம் ஒட்டியாணம். யாணம் என்பது கயிறு, வளையம். கலையாணம் என்பது வெவ்வேறு கற்கள் பொருத்திய யாணம்.

இக்கற்கள் வயிரம்போல் பல்வேறு பட்டதாகலாம். கற்கள்பாவிய அணிகலன் கலை எனப்படும். கற்களில் ஒன்பான் மணிகள் நிறைந்திருந்தால் அவை மணிகள் மேவிய கலையாணமாகும். மணிமேகலை யாணம் என்பது பெருஞ் செல்வர் அணிகலன், ஒவ்வொரு மொழியாரும் தம் பேச்சுநடையில் நீளச் சொற்களைச் சுருக்கிப்பேசுவது இயல்பு. மணிமேகலையாணம், மணிமேகலை என்றே சுருக்கப்பட்டது. அதுவே இலக்கியங்களில் பழகியது. இடம்பொருள் ஏவல்தெரிந்து, பொருள்தரும்படி யாணத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். தமிழ்ப்பேச்சில் பல கூட்டுச்சொற்களில் முன்சொல்லையோ, பின்சொல்லையோ தொக்கி, எல்லோர்க்கும் பொருள்தெரியின், ஒருசொல் புழங்குவது நமக்கியல்பு. காட்டாக, மின்சாரம், தொழில்நுட்பத்தில் சாரம், தொழிலை விட்டுப் புழங்குகிறோமே? தவறாய் உணர்கிறோமா, என்ன?

[இது தமிழில்மட்டும் நடப்பதல்ல. சங்கத்திலுமுண்டு. பல நூற்றாண்டுகளாய் வெறும் ஆற்று நீரையே பார்த்திருந்த, கடலைக் கொஞ்சமுமறியாத ஆரியர், முதன்முதல் கண்ணுக்கெட்டிய தொலைவு அகண்ட கடலைக் கண்டபோது, ”எக்கச்சக்கமான நீர்= குவிந்த நீர்” என்றே சொல்லியுள்ளார். குமுத்தம், சங்கதத்தில் சமுத்ரமாகும். நம்முடைய சலம் (=நீர்) அங்கு ஜலமென்று பலுக்கப்படும். ஜலசமுத்ரமென்பது கடலுக்குச் சங்கதர் இட்ட பெயராகும். நாளாவட்டத்தில் ஜலந்தவிர்த்துச் சமுத்ரம் என்றாலே பொருள் புரிந்து கொள்ளுமாறு புழக்கம் ஏற்பட்டது.]

அடுத்தது சீவக சிந்தாமணி. சீவகன் வடநாட்டுப்பெயர். சிந்தாமணி, ஓர் இரு பிறப்பி. சிிந்தை தமிழ். சிந்தாமணி தமிழும் பாகதமும் கலந்த சொல். வளையாபதியில் வரும் வளையத்தை இக்காலத்தில் வலயம் (வட்டம், region) என்று சொல்வதுபோற் புரிந்துகொள்ளவேண்டும். அது கையிலிடும் வளையம் அல்ல. வளையாபதி என்பான் யாரோவோர் அரசத்தலைவன். அவன்கதை முற்றிலும் நமக்குத் தெரியாது. சிலகுறிப்புகள் மட்டுமேயுண்டு. அடுத்தது குண்டலகேசி. கேசிக்கு முன், முடியென்ற சொல்லைப் பார்ப்போம். முடியும் முன்சொன்ன ஜலசமுத்ரம் போலத்தான்., முடியைத் தனித்துப்பார்த்தால் ”முடிவுள்ளது, ஏதோ முடிவது” என்றே பொருள் கொள்ளும். மயிர்முடி/முடிமயிர் என்பதன் தொகைப்பெயராய்க் கொள்கையில் பொருள் மேலும் விளங்கும். ஓரவையிற் மயிரென்பது நாகரிகமற்றது எனக் கருதியே இடக்கரடக்கலாய் நாம் முடியென்கிறோம். மயிரின் அடிப்படைப்பொருள் கருமையே. கார், கேசம், நவிர், இருமமெனும் வேறு சொற்களாலும் இதை உணர்த்துவோம்.

காரின் முதலொலிப்பைக் குற்றி, ஹகரமாக்கி hair என ஆங்கிலத்தில் சொல்லப்படும். இந்தையிரோப்பிய, தமிழிய உறவு தெரியாத ஆங்கிலச் சொற்பிறப்பியலார் hair (n.) Old English hær "hair, a hair," from Proto-Germanic *hēran (source also of Old Saxon, Old Norse, Old High German har, Old Frisian her, Dutch and German haar "hair"), perhaps from PIE *ghers- "to stand out, to bristle, rise to a point" என்பார். இருமம்>இரோமம்>ரோமம் என்பதில் முதலிகரந் தொலைத்து அதே கரும்பொருளைச் சங்கதமும் உணர்த்தும். இதிலும் பல ஆய்வாளர் தமிழுறவு அறிய மாட்டார். 75000 ஆண்டுகள்முன் ஆப்பிரிக்கா விட்டு வெளிவந்த கருப்புமாந்தன் கருமயிர் கொண்டிருந்தான். ஆப்பிரிக்காவிலேயே அவன் பேசினானா, அன்றி ஆசியா வருகையில் பேச்சு உருவானதா? தெரியாது. ஆனால் செம்மயிரும் (reddish hair), பொன்மயிரும் (golden hair), வெள்மயிரும் (blond hair) அப்போது தோன்றவில்லை. கருமயிர்க் குறிப்பு தமிழின் ஆதிப் பழந்தன்மையை உணர்த்தும்.

கல்>கால்>காள்>கார் போலவே காள்>காயும் கருமைப்பொருள் குறிக்கும். காய்தலென்பது உலர்தல், எரிதல், கரியாதலை அடுத்தடுத்துக் குறிக்கும். காயம், கருநீல வானங் குறிக்கும். ஆகாயம்= அகல விரிந்த கருநீல வானம். எனவே அது வெளி. விண்ணவனை மாயோன், காயாம்பூ வண்ணன் என்பதும் அதே பொருளில் தான். காயாம்பூ= கருநீல வண்ணப்பூ. காயல்= கரிய உப்பங்கழி. காயாம்பூ காசாம்பூ என்றும் சொல்லப்படும். காசு, கருநீலத்தையும், குற்றத்தையும் குறிக்கும். சிலம்பில் (2:74) கோவலன் ”காசறு விரையே - குற்றமிலா நறுமணமே!” என்கிறான். காசமும், கருமை, வெளியைக் (space) குறிக்கும். காசம்>காசரம்= இருள். பல்வேறு மருத்துப்பொருள்களைக் காய்ச்சி கருக்கவைத்துப் பெறுவது காசாயம். ககரச் சொற்களைக் கெகரமாக்கிப் பலுக்குவது ஒருசில வட்டாரப் பழக்கம். பலம்>பெலம், கட்டு>கெட்டு என்ற வட்டாரத்திரிவு போல் காள்>காய்> காயம்> காசம்>கேசம், காசரம்>கேசரம் என்ற சொற்களும் வளரும். பின் அதுவே பொதுவழக்கில் நிலைத்துப் போகலாம். .

கேசவன்= காயாம்பூவண்ணன். கேசரர்= விண்ணவர், வானவர். கேசர மாருதம்= விசும்பில்பரவிய மென்காற்று. கேசரம், தலைமுடியையும். கேசம்நிறைந்த சிங்கத்தையும் குறித்தது. கேசரியும் சிங்கத்தைக் குறிக்கலாம். கேசதம்/கேசதாரகம்= கரிசலில் விளையும் கரிசலாங்கண்ணி. கேசகாரம்= கருநிறம் அடர்ந்த கரும்பு. கேசரின்/கேசவம் நீலோற்பல விதையையும், சிறுநாகப் பூவையும், நிறைமயிரையும் குறித்தன. கேசாரி= குதிரையின் பிடரி மயிர். கேசரந்தம்= மயிர் களையும் சடங்கு. கேயம்= நஞ்சயம் (arsenic); கேசி= அவுரிச் செடி. கேசி தமிழில்லெனில், மேற்சொன்ன சொற்களும் தமிழில்லாது போகும். குண்டலகேசியில் வரும்கேசி ஒரு வகையில் கருநிறத்தாள். இன்னொரு வகையில் கருமயிர் கொண்டவள். கேசி சங்கதம் போல் தெரியும். ஆனால் அடிப்படை தமிழே. (பாலி., பாகதம், சங்கதம் போன்றவற்றில் இதன் புழக்கம் மிகுதி,
         .
நாளாவட்டத்தில் மயிருக்குக் கரும்பொருளை விட வேறு தகை சொல்வதே முகன்மையானது. (நாம் சந்திக்கும் பலருக்கும் கருப்பு மயிரெனில் அதை விதப்பாக்க முடியுமோ? வேறெதோ சொல்லக் குறுகுறுக்கும் அல்லவா?) காட்டாக, உளை(மயிர்) பிடரிமயிரைக் குறிக்கும். (மயிரைச்சொல்லாது வெறும் உளையென்பதும் ஒரு வகையில் மரபுதான். குதிரையின் பிடரி, பல்வேறு விலங்குகளின் பிடரி, இம்மயிர்களையும் உளை(மயிர்) எனலாம். பிறைக்குறிக்குள் மயிரைப் பலநேரஞ் சொல்லாது விடுவோம். அதேபோல், ஓரி(மயிர்)= பிடரி(மயிர்) (இங்கும் மயிர் தொக்கி நிற்கும்.); கதுப்பென்பது பற்றி இருப்பதென்று பொருள்கொள்ளும். தலையில் பற்றியது மயிர் தானே? பற்றுப் பொருளில் பங்கி, பந்தம் என்பனவுமுண்டு..மார்பில் வளர்ந்த புறமயிர் மாராட்டம்> மராட்டம் ஆகும். பிற்றை>பித்தை= பின்பக்கம் எனும் வழக்கை நோக்கின், பித்தை(மயிர்)= முதுகுமயிர் புரியும். நவிரென்பது கருநிறத்தோடு உச்சிமயிர் என்றும் பொருள்கொள்ளும்.

மயிர் சிலர்க்கு அடர்த்தியாகும். சிலர்க்கு ஓரியாகும் (ஒல்லி>ஓலி>ஓரி; அதாவது அடராதிருக்கும்.) கவர்ச்சியான அடர்மயிரை கொத்துமயிர் என்பார். ஒல்>ஒது>ஒதி>ஓதி= செறிந்தமயிர். குல்>குற்று> குத்து>குச்சு என்பதும் கொத்தைக் குறிக்கும். கொத்தான தருப்பைப்புல்  குச்சைப்புல்>குசைப்புல் ஆகும். குச்சு(மயிர்) மெல்லோசைபெற்று குஞ்சு(மயிர்)> குஞ்சி(மயிர்) ஆகும். இதிலும் கொத்துப்பொருள் உண்டு. குத்து>குந்து> கூந்து>கூந்தல் கொத்துமயிரைக் குறிக்கும். குழு(மயிர்)>குழை(மயிர்)>கூழை(மயிர்) என்பதும் கொத்தைக் குறிப்பதே.

மயிர் வளர வளர, மயிரிழைகள் தளைப்படும். தளை(மயிர்) சரியான பயன்பாடு தான். மயிர் சிக்கிவுஞ் செய்யும். சிக்கற்படுவது, சிகை, சிகையின் விதப்பாய்ச் சிக்கம்>சிங்கம் என்றசொல் எழுந்தது. இதையறியாதோர் சிங்கம் தமிழில்லை. தமிழனுக்குப் புலிதான் தெரியும் என்பார். சங்க இலக்கியம் பார்த்தால் சிங்கம் நன்கு தெரிந்த விலங்கென்றே சொல்லவேண்டியுள்ளது. சிக்கியது சிகழும். சிகழிகை என்பதன் பொருளும் சிக்குமயிர் தான். செழித்துவளர்வது செழி> செடியாகும். மரமாகும் செழித்து வளர்ந்ததெல்லாம் செடிதான். ’செழி” சங்க இலக்கியத்திலுண்டு.. ஆனால் அதிலிருந்து உருவான செடி சங்க இலக்கியத்திற்குப் பின் உருவானது. செழித்தது திரண்டால், சடைக்கும்; சடிலும் சடை, சடிலம் என்ற இரண்டு மயிர்த்திரளைக் குறிக்கும். செழியன் என்ற சங்ககாலப் பெயர் சடையன் ஆகிப் பின் சடில>ஜடிலவர்மனாகும். பாண்டிய வரலாறு அறியாதோர் தடுமாறுவர்.   .

அடுத்த பார்வை மயிரின் அமைப்பு பற்றியது. சிலருக்கு அலையலையாய்த் தோற்ரும். அலம், அலகு போன்றன வளைவைக் குறிக்கும். அலகம்>அளகம் = என்பது அலைத்தோற்றம் கொள்ளு மயிர் (wavy hair) சிலருக்கு கோளம் கோளமாய்ச் சுருண்டு கொள்ளும், காட்டாக ஆப்பிரிக்கருக்கு அப்படி அமையும். கோதம புத்தருக்கும் அப்படித்தான் காட்டுவர். குண்டலம் எனில் அந்தப் பொருள் தான். குண்டல கேசம் = குண்டலமாய்த் தோற்றும் கேசம். குண்டலம்>குந்தலம்>குந்தளம் என்றும் அது திரியும். சிலருக்கு சுருள் சுருளாய் புரித் (spiral) தோற்றங் காட்டும். மிகுந்து சுருளாவதைச் சுரியல் என்பார். சிலருக்கு குழலாய் cylindrical தோற்றங் காட்டும்..சிலருக்குக் குண்டலாமாகாது, சுருளாது, குழலாது தொங்கலாய் நீண்டு தெரியும்.

இந்த மயிர்க்கற்றையை பெண்கள் பின்னிக்கொள்வார். பொதுவாகப் பெண்கள் தம் மயிரை மூன்றாய்ப் பிரித்துச் சடைபின்னுவதைப் பார்த்திருப்போம். அதை ஐம்பாகமாய்ப் பிரித்துப் பின்னுவது ஐம்பால் எனப்படும் .இத்தகைய பின்னல் பெரும்பாலும் தலைவிகள், செல்வந்தருக்குச் சொல்வர். மிகுந்த நேரம் எடுக்கும் பின்னல் அது. பின்னலைப் பின்னகம் என்றுஞ் சொல்வர். கதிர்த் தோகை போல் பின்னிச் சடையாக்குவது குரல், நீளமுடியைச் சுற்றி முடிச்சிட்டுக் கொண்டைபோடுவது இன்னொரு பழக்கம். அதைக் கொப்பிக் கொள்வது கொப்பு. கொண்டைமுடிக்குத் தம்மிலம் என்றும் பெயருண்டு. கொண்டையை முடிச்சுப் போடுவது முச்சி. ஆண்கள் ஒரு சிறுகற்றையைத் தனி நீளத்திற்குத் தெரியும்படி வைப்பது குடுமி, அது சற்று நீண்டுபோனால் குடிலமாகும், கோடாலி முடிச்சிற்கு கோடீரம் என்று பெயர். பெண்கள் தம் முடியைச் சடையாக வேய்ந்துகொள்வது வேய்நி>வேணி. இன்னும் சிரோத்தம், விலோதம் என இரு சொற்கள் உண்டு. அவை சங்கதமா, தமிழ்த்திரிவா என்று எனக்கு இன்னும் தெரியவில்லை

ஆகக் குண்டலகேசி என்பதும் தமிழ்தான். அதேபோல் நீலகேசியும் தமிழ்தான். பிங்கலகேசி என்பது பொன்மயிர் (blonde hair) உடையவளைக் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி.