Wednesday, August 06, 2014

தமிழெழுத்தும் கிரந்தமும் ஒருங்குறி ஊடாடலும் - பரத்தீடு

இதுவும் ஒரு பழைய பரத்தீடு.  பொதுவிற் சேமிக்கவேண்டுமென்று இங்கு இடுகிறேன்.

கிரந்தத்தின் இற்றைநிலை: SMP இல் குறியேற்றம் பெறுகிறது.

7 தமிழ்க் குறியீடுகளை கிரந்தத்துள் கொணரும் முயற்சிகள் துண்டு துண்டாக இப்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ”முதலில் குறில் எகரத்தையும் ஒகரத்தையும் உள்ளே கொண்டுவருவோம், பின் ளகரத்தைக் கொணர்வோம், அப்புறம் ழகரம், முடிவில் றகரம், னகரம்” என்று திட்டம் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. எகர, ஒகரச் சான்றுகள் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில தமிழநாட்டுச் சமய மடங்கள் இன்னும் தங்கள் முயற்சிகளை விடவில்லை.

திரு. நா. கணேசன் தன் முயற்சியால் கிரந்த எழுத்தில் தமிழ்நூல்களை வலையேற்றிவிட முயன்றுகொண்டு தான் இருக்கிறார்.

சமயஞ் சார்ந்த ஒருசில வலைத்தளங்கள் தமிழின்/தமிழியின் கதியை குப்புறச் சாய்க்கும் வேலைக்கு அணியமாகவே உள்ளன.

தமிழ் கெட்டுச் சீரழிந்தால் யாருக்கு என்ன கவலை சொல்லுங்கள்?

விழியில் விளக்கெண்ணெய் விட்டு, கொட்டக் கொட்ட அகல விரித்து ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு வரும் முன்னீடுகளை (proposals) இணையத்திற் பார்த்திருக்கும் தமிழரைத்தான் எங்குங் காணோம். இவருக்கு உள்ளூர் ”விவகாரங்களே” விரிந்து கிடக்கிறது. அப்புறமெங்கே ஒருங்குறிச் சேர்த்தியத்தின் வல்லாண்மை பற்றிக் கவனம் கொள்ள முடியும்?
  


அன்புடன்,
இராம.கி.

No comments: