Friday, September 30, 2011

மாணிக்கவாசகர் காலம் - 5

பதிகங்கள் பிறந்த கதை:

சரி கதைக்கு வருவோம். கானப்பேரை விட்டகன்ற மாணிக்க வாசகர் மொய்யார் பொய்கைத் திருப்பெருந்துறையைச் சேருகிறார். ஆடிக்காற்று அடிக்கிறது. குதிரைக் கலங்கள் துறையில் அணையாதுள்ளன. அவை வந்து சேர நாட்களாகுமென்று காத்து நிற்கிறார். தெய்வப் பணியில் கவனம் செல்கிறது. இற்றை ஆவுடையார் கோயிலுக்கு முன் வேறு சிறிய கோயில் இருந்திருக்க வேண்டும். (மாணிக்கவாசகருக்கு உபதேசங் கொடுத்த ஆதி கைலாய நாதர் கோயிலும் அங்கு தான் உள்ளது. 

திருவாசகப் பகுதிகளை மாணிக்கவாசகர் வரலாற்றோடும், நம்பியார் திருவிளையாடல், கடவுண்மா முனிவரின் திருவாதவூர்ப் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் போன்ற நூற்செய்திகளை ஏரணத்தோடும் கூடவே பொருத்தினால், குதிரைவாங்கத் திருப்பெருந்துறை வந்த இடத்தில் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபின், மணிவாசகர் முதலிற் பாடியது சென்னிப் பத்து என்றே தோன்றுகிறது. ”நமச்சிவாய” என்ற அறிவோதலுக்குப் (உபதேசத்தின்) பின் இறைவன் பெயர்களை விதவிதமாய் எடுத்தோதி, அவன் சேவடியின் கீழ் தன் சென்னி மன்னியதையே ஆழ்ந்து இப்பதிகத்திற் பேசுகிறார். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலில் எழுந்த பதிகங்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

அதற்கடுத்து அச்சோப் பத்து எழுந்ததாய் நம்பியார் சொல்கிறார். [இது தில்லையில் வெளிப்பட்டதாக யாரோ உரையார் சொல்வது பொருத்தமாய்ப் படவில்லை. இறைவன் தனக்குச் ”சிவாய நம” என ஓதியருளியதை ”அச்சோ” என வியந்து அச்சூட்டோடு திருப்பெருந்துறையில் சொல்லாது தில்லை வரைக்கும் காத்திருந்தா மணிவாசகர் தன் உணர்வை வெளிப்படுத்துவார்? இதுபோற் குருவிடம் எட்டெழுத்து மந்திரங் கேட்ட இராமானுசர் கோட்டியூர் கோபுரத்திலேறி ஊருக்கெலாம் உடன் சொல்லாது, ஆறவமர திருவரங்கம் வந்தா மற்றோர்க்கு ஓதினார்?]

இறைவனும் அவன் சீடருமாய் ஆயிரம் பேர் கூடியிருக்க, அச் சிறிய ஊரிற் தன்னை ஆட்கொண்ட அதிசயம் மாணிக்கவாசகரைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறது. மூன்றாம் பத்தாய் அதிசயப் பத்து எழுகிறது. எங்கெலாம் கோகழி என்கிறாரோ அங்கெலாம் குருமணியைச் சேர்த்தோ, இன்னொரு வகையிலோ மாணிக்கவாசகர் இடத்தை அடையாளங் காட்டுகிறார். அதிசயப் பத்து 7 ஆம் பாடலிற்கூட “இடர்க் கடற்கழித் தலைப்படுவேனை” என்று சொல்லித் துன்பக்கடலைச் சொல்கிறார்; தான் கடற்கழி இடத்தில் வந்திருப்பதையுஞ் சொல்கிறார். அப்பாடலை ஆழ்ந்து படிப்போருக்கு இது புரியும். திருவண்டப் பகுதி 66 ஆம் வரிகளில் இருந்து 69 ஆம் வரிவரை,

பரமா நந்தப் பழங்கடல் அதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய

என்று படித்தும், அதுவின்றி முன்முடிவாக ”வடுகப் பிள்ளை” என்று கொண்ட காரணத்தால், திருப்பெருந்துறைக்குள் மலையைத் தேடி கருநாடகத்தில் அலைகிறவருக்கு நாமென்ன சொல்லலாம்? ”ஐயா, ”வரை” க்கு மலை மட்டும் பொருளல்ல. நீர்க்கரைப் பொருளும் உண்டு” என்று சொல்லலாம். ”நாட்பட்ட பழங்கடலின் நீர் கருமுகிலில் தோன்றி, திருப்பெருந்துறை நீர்க்கரையில் ஏறி எல்லாத் திசைகளிலும் மின்னொளி காட்டி விரிய” என்று பொருள்பார்த்தால் ”மழை வரப்போகிறது” என்பது சட்டெனப் புரியுமே? கண்ணெதிரிலுள்ள ஆவுடையார் கோயிலை விட்டு வேறெங்கோ தேடின் எப்படி?

நாலாம் பத்தாய் கோயில் திருப்பதிகம் அந்தாதி அமைப்பில் எழும். இதையும் யாரோ ஓர் உரையாசிரியர் தில்லையில் எழுந்ததாய்த் தவறாகக் குறித்தார். இப் பதிகத்தின் ஆறாம் பாடலில்

“நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே”

என்ற வரிகள் “பெருமானே, இன்று உன்னை இங்கு கண்டேன்” என்று தெளிவாக உரைக்கும் போது, எப்படி உரையாசிரியர் வழுவினாரென்று தெரியவில்லை. மாணிக்கவாசகர் என்றைக்குத் தன் குருமணியைக் கண்டாரோ, அன்றே தான் கோயில் திருப்பதிகமும் எழுந்திருக்கிறது. அதில் என்ன ஐயப்பாடு? அருளிச் செயல் யாருக்காக நடந்தது? இப் பதிகம் முழுக்கத் பெருந்துறையிற் பாடப்பட்டதே.

அதைத் தொடர்ந்து புணர்ச்சிப் பத்தும் செத்திலாப் பத்தும் எழுகின்றன. பித்துப் பிடித்தவாறு மணிவாசகர் இறைவனைப்பற்றிப் பாடிக்கொண்டே இருக்கிறார். திருப்பெருந்துறையிலே சின்னாட்கள் தொடர்ந்து தங்குகிறார். தங்கும் இடத்தில் கொண்டுவந்த செல்வம் குறைகிறது. [எப்படிக் குறைகிறது என்ற விவரம் தெளிவாக இல்லை.] ஆடிக்காற்று அடங்கும் போது கலங்கள் துறை பிடிக்கின்றன. குதிரைகள் இறங்குகின்றன. ஆனால் வேறு வழிகளிற் செலவாகிய பணம் குறைந்த காரணத்தால் குதிரைகள் வாங்கப் படவில்லை.

பிரார்த்தனைப் பத்து, (இந்த அந்தாதிப் பதிகத்தின் முதற் பாட்டடியே “கலந்து நின்னடியாரொடு அன்று வாளா களித்திருந்தேன்” என வெளிப்படுகிறது. இறைவன் வாசகரை ஆட்கொண்ட நாளுக்குச் சின்னாட்கள் கழித்துப் பிரார்த்தனைப் பத்து எழுந்திருக்கலாம்.) ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து ஆகியவை தொடர்ந்து வருகின்றன. இதற்குப் பின் திருப்புலம்பலும், வாழாப் பத்தும், எண்ணப்பத்தும் எழுந்ததாக நம்பி திருவிளையாடல் சொல்கிறது.

[இப்போது கிடைக்கும் திருப்புலம்பல் வெறும் 3 - ஏ பாட்டுக்களுடன், அதுவும்  முதற்பாட்டு திருவாரூரனையும், 2 ஆம் பாட்டு பெருந்துறையானையும், 3 ஆம் பாட்டு குற்றாலத்தானையும் குறிப்பதாக முன் கூறினோம். ஒருவேளை நம்பியார் காலம் 12 ஆம் நூற்றாண்டில் இது பெருந்துறைப் பாட்டுக்களைக்  குறித்து, ஆரூருக்கு வேறு பதிகமும், குற்றாலத்திற்கு இன்னொரு பதிகமும் இருந்தன போலும்? இதேபோல் எண்ணப்பத்தும் குறைப்பட்ட பதிகமே. இதில் வெவ்வேறு வகை ஆசிரிய விருந்தங்கள் கலந்து நிற்கின்றன.]

ஆக ஆட்கொள்ளப் பட்டபின் எழுந்த பதிகங்களாய் மொத்தம் பன்னிரண்டு பதிகங்களை அடையாளம் காணலாம்.

[அப்புறம் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத் தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம், திரு வெம்பாவை, திருச்சதகம் ஆகியவை திருப்பெருந்துறையில் எழுந்ததாய் நம்பி திருவிளையாடல் சொல்லும். அது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. அவை பற்றிய விளக்கத்தை ஒரு சில பத்திகளுக்கு அப்புறம் காணுவம். இனி வரலாற்றின் வழி தொடருவம்.]

இப் 12 பதிகங்களைக் கேட்டவர் அதிசயித்து, ”இவர் பெருத்த சிவனடியார்” என்றெண்ணி வாசகரைச் சூழ்ந்து போற்றுகிறார். பித்தம் தலைக்கேறிய வாசகர் தாம் கொணர்ந்த பொருளை வந்தோர்க்கு பல்வேறு காரணங்களுக்கு எனப் பரிந்து கொடுக்கிறார். சின்னாட்கள் கழிகின்றன. திறையாய்ப் பெற்று நிலவறையில் பாண்டியன் வைத்திருந்த பொருள் கரைந்து போனது. இப்படி நடந்த செய்தி பாண்டியனைச் சேருகிறது. [சிவகங்கைப் பக்கம் பொதினம் - business - நடத்துவோர் 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் பொதுக்கணக்கு, தனது கணக்கு என்று 2 கணக்கு வைத்திருப்பார். பொதுக் கணக்கு - business entity account தனது கணக்கு - own account. இங்கே குதிரை வாங்கப் பணம் எடுத்தது சொந்த நிலவறையில் இருந்தாகும். அதாவது தனது கணக்கு. அதிற் செல்வம் குறைந்தால் கன்னாப் பின்னாவெனப் பாண்டியனுக்குச் சினம் வரத்தான் செய்யும். :-)))))) சினமுற்ற அரசன் ஓலை விடுக்கிறான்.

”தென்னவர் பரவும் தென்னவன் ஓலை: தென்னவன் பிரம ராயனே காண்க!
பொன்னிறை அறையில் பன்முதல் கொண்டு புரவிகொண்டு அணைவான் பரிவொடும் போனான்
என்னினைந்து இன்னம் வந்திலன் அமைச்சற்கு இப்படிச் செய்யத் தக்கதோ கடிது
மன்னிய ஆடல் புரவி கொண்டு அடைவின் வருவது கருமம்; மற்றது பழுதால்”

அங்குமிங்கும் அலையாது தான் சொல்ல வந்ததைப் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லும் ஒரு மடல். final warning from the king. இப்படித்தான் நம்பியார் திருவிளையாடல் நமக்குத் தெரிவிக்கிறது. [பாட்டின் தோரணை அரசனின் அகவை மாணிக்கவாசகருக்கும் கூடியதோ என்று எண்ண வைக்கிறது.] மீண்டும் இறைவனிடம் முறைப்பாடு நடக்கிறது. ”பெருந்துறை அந்தணர் முந்நூற்றுவரின் (தில்லை மூவாயிரவர் போல திருப்பெருந்துறை என்பது 300 பேர் கொண்ட சதுர்வேத மங்கலம்.) நிலத்தை முன்னாள் காப்பாற்றிக் கொடுத்த இறைவன் தம்மையும் இக்கட்டிற் காப்பாற்றிக் கொடுக்குமாறு” மாணிக்க வாசகரிடமிருந்து வேண்டுகோள் எழுகிறது. கூடவே “போற்றியென் வாழ்முதலாகிய பொருளே! புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டு” என்று திருப்பள்ளியெழுச்சிப் பதிகம் எழுகிறது.

[இங்கே கவனிக்க வேண்டும். பள்ளியெழுச்சிப் பதிகம் எழுந்தது பெருந் துறையில்; அதனோடு தொடர்புசொல்லி இன்று நாம் ஓதும் திருவெம்பாவை எழுந்தது திருவண்ணாமலையில். ஒரு சில ஆர்வலர் திருப்பாவையையும், திருவெம்பாவையும் ஒப்பீடுசொல்லி மாணிக்கவாசகர் ஆண்டாளுக்குப் பிந்தியவர் என்று சொல்ல முற்படுவார். அச்சிந்தனை எனக்குப் புரிபட வில்லை. அவர் அதைத் தெளிவாக வரையறை செய்து வெளியிடுவாரானால் பின்வினையாற்றலாம்.]

”கனத்த புரவி வந்துசேரும்; கருணையுற வேண்டும்” என்றவோலை இறைவன் அறிவுறுத்தலின் பின் மாணிக்கவாசகரிடமிருந்து பாண்டியனுக்கு ஓலை எழுகிறது. அதனைத் தொடர்ந்து வாசகரும் மதுரை செல்கிறார்.

மதுரை வந்த மாணிக்கவாசகரை மண்டபத்தில் இருத்தி முதலில் மன்னன் என்ன கேள்வி கேட்கிறான் தெரியுமோ? “குதிரை வாங்க எடுத்துப்போன மறங்கடிப் பொருளுக்கு எவ்வளவு வாசி (discount) வாங்கினாய்? [மறங்கடிப் பொருள்= வெற்றி, திறை, தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருளை மறநிலைப் பொருளென பிங்கலம் சொல்லும்.] குதிரைகள் எத்துறையில் இருந்து வந்தன? என்னென்ன நாடுகள்? எவ்வளவு குதிரைகள் உயர்தரம்? எவ்வளவு போதுந்தரம்? என்னென்ன நிறங்கள்? எனக்காக வாங்கும்போது நீதி துலங்கிய கணங்களுண்டா? கூசாமற் சொல்?” ஆக ஐயப்படும் பாண்டியனுக்கு “வாசி” தான் பெரிதாகத் தெரிந்திருக்கிறது.

மறங் கடி பொருள் தனக்கு வாசி எவ்வளவு கொண்டீர்?
இறங்கிய துறை, நாடு ஏதேது? எவ்வளவு உயர்பு? போது?
நிறங்கள் தாம் என்ன? எமக்கேற்றானது என்போது நீதி
பிறங்கிலக் கணங்கள் என்னை? பேசிடீர் கூசலன்றி

பார்த்தீர்களா? உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை முற்றிலும் உலகியல் நோக்குற்ற இவனா சிவலோகம் தேடிய வரகுணன்? இல்லவே இல்லை. அந்த வரகுணன் வேறு. இவன் வேறு. இவன் ஒருகால் வரகுணன் மகனாகலாம். முழுக்க முழுக்கத் தன்னாட்டை  வலியின்மையிலிருந்து விடுவித்து, அதை வலிதாக்கி, மாற்று நாடு பிடிக்கத் துடிக்கும் பேராசைக்காரன் இவன். சிவ லோகம் தேடிய வரகுணன் மாணிக்கவாசகருக்குப் பிரம்படிகள் கொடுக்கச் சொல்வானோ?

சுற்றி வளைத்து ஊகிக்கிறோம். மணிவாசகர் அமைச்சர் பொறுப்பிலிருந்தது பெரும்பாலும் வரகுணன் மகனிடம் தான் போலும். இவன்காலத்தும் ஒரு சோழர் படையெடுப்பு நடக்கிறது. அதை விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலிற் பார்ப்போம்.

குதிரைகள் ”மாராட்டகம் - maharashtram, காம்போசம், ஆரியம், சாம்பிராணி (இரான்)” ஆகிய இடங்களில் இருந்து இறங்கியதாக மாணிக்க வாசகர் சொன்னதாக நம்பியார் திருவிளையாடல் சொல்கிறது. இவ்விடங்கள் 12 ஆம் நூற்றாண்டு விவரிப்பு. மாணிக்கவாசகர் கால விவரிப்பல்ல. இங்கு ஓர் குறிப்புமுண்டு. சாம்பிராணி தவிர, மற்ற எல்லாமே இந்தியத் துணைக்கண்ட இடங்கள் தாம். அதாவது, குதிரைகள் முதலில் வந்திறங்கி மீண்டும் மறு ஏற்றுமதியாகும் நாடுகள். இதன் பொருளென்ன? குதிரை வணிகக் கடைக் கோடியில் தமிழர் இருந்திருக்கிறார். எனவே பெரும்பாலும் இவருக்குக் குதிரைகளின் கடைத்தரம் வந்திறங்கவே வாய்ப்புண்டு. பெரும்பாலும் மேற்குக் கரையினரை விட இவர் குதிரை வணிகத்தில் கட்டளையிடும் உயரத்தில் இருந்திருக்க மாட்டார். Most probably they were at the receiving end (in all senses). அதன் காரணத்தால் குதிரை வாங்குவதில் இவர் கணக்கற்ற பொன் செலவழித்திருக்க வேண்டும்.

குதிரைகள் பற்றிப் பல்வேறாய் விவரித்த மாணிக்க வாசகர் சொக்கன் ஆலயத்திற்குள் புகுந்து மீண்டும் இறைவனை வேண்டுகிறார். “அஞ்சேல்” என்ற இறைவனின் வாக்கு இவருக்கு நம்பிக்கை தருகிறது. வீட்டுக்கு வருகிறார். உறவினர் தாம் கேள்விப் பட்டதைச் சொல்லி மாணிக்கவாசகரை மீண்டும் கலவரப் படுத்துகிறார். ”இறைவனின் உதவியால் நிலைமை சரியாகும்” என அவருக்கு மணிவாசகர் சொல்கிறார். அரசன் மதுரை நகரில் உள்ள குதிரைப்பந்தி, வையாளி (குதிரையும், தேரும் போகும் வியதி>வீதி), சங்க மண்டபம், பண்டசாலை, கொந்த விழலம் (குந்தங்கள் = ஈட்டிகளை வீசியெறியும் இடங்கள்), கல்மாடம், மாமடம், கோபுரங்கள், சொக்கனின் பெரிய கோயில், தோரண வாயில், வீதி ஆகியவற்றை அலங்கரித்து ”மதுரை இந்திரன் எழுப்பிய ஊர்” என்று சொல்லும் வகையிற் சோடிக்கிறார்.

இதோடு ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல் முடிகிறது. இதனோடு தொடர்புடைய பதிகங்கள் மொத்தம் 13. அடுத்து நரி குதிரையான திரு விளையாடல் தொடங்குகிறது.

இறைவன் தன்னை ஆண்டுகொண்டு அருளியதைத் திருவாசகம் எங்கும் மணிவாசகர் அகச்சான்று தருகிறார். அவற்றிற் சில இடங்களை இங்கு தங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். இந்த அருளிச்செயலை மறுப்பவர் மாணிக்கவாசகர் சொல்வதேயே மறுப்பவர் ஆவார். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலையே மறுப்பவர் ஆவார். அவரிடம் மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டென வாதாடிக் கொண்டிருப்பதில் பயனேயில்லை.
---------------------------------

அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்

(ஞாலம்>ஜாலம்)
- கீர்த்தித் திருவகவல் 42-43

திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியில் கரந்த கள்ளமும்

- கீர்த்தித் திருவகவல் 54-55

என்நேர் அனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்

- திருவண்டப் பகுதி 147-149

அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையை

- போற்றித் திருவகவல் 75-76

மெய்திரு வேதியன் ஆகி வினைகெட
கைதர வல்ல கடவுள் போற்றி

- போற்றித் திருவகவல் 88-89

என்னையும் ஒருவன் ஆக்கி யிருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி

- போற்றித் திருவகவல் 129-130

மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறீ லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்மை அன்பருன் மெய்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாகம் நோக்கியும்
கீறி காதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

- திருச்சதகம் 91

செங்கண் நெடுமாலும் சென்றிடத்தும் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெம்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 1

இதேபோல திருவம்மானை 2-14 ஆம் பாடல்கள்.

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 11

நான்தனக்கு அன்பின்மை நானுந்தா னுமறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாரும் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 13

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 14

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கொத்தும்பீ

- திருக்கோத்தும்பி 17

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அரியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ

- திருத்தெள்ளேணம் 1

ஆவா அரியயனிந் திரன்வானோர்க் கரியசிவன்
வாவாவென் றென்னையும்பூ தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவா ரடிச்சுவ டெந்தலைமேற் பொறித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ

- திருத்தெள்ளேணம் 7

பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென்தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ

- திருப்பூவல்லி 10

ஆணோ, அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யவாட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவி
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ

- திருப்பொன்னூசல் 5

கொந்தண வும்பொஇற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண நாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தன ராமிவ நென்றிங் கென்னையும் ஆட்கொண் டருளூம்
செந்தழல் போற்றிரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய்

- குயிற்பத்து 10

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறைக் கோயிலுங் காட்டி
அந்தண நாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே

- திருப்பள்ளியெழுச்சி 8

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தனைவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே

-புணர்ச்சிப் பத்து 10

அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகிறேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதமெனக்குப் புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே

- குழைத்தபத்து 10

நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல்லார் எம்பிரானாவாரே

- திருவார்த்தை 7

அன்புடன்,
இராம.கி.

No comments: