Thursday, September 29, 2011

மாணிக்கவாசகர் காலம் - 4

கதைத் தொடக்கம்:

மாணிக்க வாசகரும் மற்றோரும் தானைவேல் வாகைமாறனைச் சூழ்ந்து திருவோலக்க மண்டபத்தில் இருக்கும் போது குதிரைத் துறைக்காரன் தங்கள் அரசக்குதிரைகள் “சீதவெம்மை, வாதநோய், ஆதிவெப்பு, கண்டமாலை, கவுசி, மகோதரம், மண்டசாலம், வெஞ்சூலை, அலகுநோய், தண்டைநோய், பிரமேகம், தலைக்கனம்” எனப் பல்வேறு வாதைகளிற் பாதிக்கப்பட்டதைச் சொல்லி, ”மற்ற குதிரைகளும் இதுபோல் நோய்வாய்ப்படும் நிலையில் உள்ளதால், புதுக் குதிரைகள் வாங்கியே குதிரைப்படையைக் காப்பாற்ற முடியும்” என்றுஞ் சொல்கிறான்.

ஆக, 4,5 குதிரைகள் அல்ல, கணக்கற்ற குதிரைகள் நோய்வாய்ப் பட்டுள்ளன. ஒரு குதிரைப்படையே இல்லாகும் நிலை பாண்டிய நாட்டிற்கு ஏற்படுகிறது. அடுத்த நாட்டின் மேல் (இது பெரும்பாலும் சோழநாடு. வரகுணனுக்குச் சிவ லோகம் காட்டிய திருவிளையாடலில் சோழனே பாண்டியன்மேற் படை எடுத்து வருகிறான்.) படையெடுக்க விழையும் பாண்டியன், நிலையின் கனத்தை உணர்கிறான். தன் சொந்த நிலவறையிலிருந்து வேண்டிய செல்வம் எடுத்துப் போய் “தாவு மா இறங்கும் பட்டினத்தில்” குதிரைகளை வாங்கிவரச் சொல்கிறான்.

அரசகட்டளை கேட்ட மாணிக்கவாசகர் சோழப் பெருந்துறையில் குதிரை வாங்கப் புறப்படுகிறார். அவர் ஏன் சோழநாட்டிற்குப் போகிறார்? - ஆழப் புரிந்துகொள்ள வேண்டிய கேள்வி. சோழநாட்டுப் பெருந்துறை பாண்டித் தொண்டியில் இருந்து வடக்கே 20/25 கி.மீ.தொலைவு கொண்டது. மிழலைக் கூற்றத்தில் (இற்றைப் புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி வட்டம்) உள்ளது.

மிழலைக் கூற்றம் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே மாறி மாறி வந்த பகுதி. அடிப்படையில் சோழநாடே. (தெள்ளுநீர் வெள்ளாறுபாய் திருமிழலை நாட்டுப் பெருந்துறை” என்று சிவலோக நாயகி பொன்னூசலில் ஒரு தொடர் வரும்.) கோயிற் கல்வெட்டுக்களில் இத்தலம், ”மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம், பிரமதேசம், தனியூர், திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” என்று குறிப்பிடப்படும். புவுத்திரம் என்பதன் மூலம் ”கடலுக்கு அருகிலுள்ளது” என்று விளங்கும்.

பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்தில் இன்றிருப்பது மண(ல்)மேற்குடி.  அதற்கும் மேற்கில் ஆற்றொட்டி உள்ளதை மணலூர் என்பார். [இம் மணலூரையும் ஆய வேண்டும். கீழடி மணலூரும் இதுவும் தொடர்புற்றனவோ என்ற ஐயமுண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைத்தொலைவு ஏறத்தாழ 22/23 கி.மீ.

திருப்பெருந்துறை இயற்கைத் துறையல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்கவேண்டுமெனில், ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதிலாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைக் கழியாய் அது இருக்கவேண்டும். ஆற்று வெள்ளக் காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலன்றி ஆற்றுக் கழிமுகத்திலுள்ள சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை குதிரைகளை இறங்கமுடியா அளவுக்கு கீழைத் தொண்டியின் கடல் அலைகள் சரவல் தந்தனவோ?ஞாவகப்படுத்திக் கொள்க. தொண்டியிற் கழிகள் கிடையா.]

கழியும் துறையும் பொருளில் ஒன்றே. இதுபோற் கோவும் பெருவும் ஒன்றே. ”பெருந்துறையே கோகழி, கோகழியே பெருந்துறை.” கோகழிப் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடுவோர் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து,  ஊர் நிலவமைப்பைச் சுற்றிப் பார்த்ததிலை போலும். occam's razor சிந்தனையையும் கேள்வியுற்றது இல்லை போலும். திருவாசகப் பாக்களை அலசுகையில் கோகழி பற்றிப் பேசுவோம்.

மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டென அவக்கரமாய்ச் சொல்வோர், மன்னர்களின் வலிமை, இன்மைகளைப் பார்க்கத் தவறுகிறார். மாணிக்க வாசகர் காலத்துப் பாண்டியன், குலைந்துபோன குதிரைப் படையை மீளக் கட்டமுற்படும் ஒரு வலிகுறைந்த அரசன். அவன்காலச் சோழனும் கூட வலிந்தவன் இல்லை. அப்படியிருப்பின், பாண்டிய முதலமைச்சன் ”ஏதோ தன் சொந்தத் தோட்டத்திற் புகுவது போல்” சோழநாட்டுப் பெருந்துறையுள்  குதிரை வாங்க நுழைந்திருக்க முடியாது. தேங்காயைப் பிடித்து அமுக்கியது போல சோழன் மாணிக்கவாசகரைச் சிறைக்குள் தள்ளியிருப்பான். (நினைவு கொள்க;  பாண்டியனின் குதிரைப்படையை மீளுருவாக்கப் புறப்பட்டவர் மாணிக்க வாசகர். வெறும் 4,5 குதிரை வாங்க வந்தவரல்ல அவர். இப்படையை மீண்டும் கட்ட விடாது தடுக்கவே உருப்படியான சோழன் முனைந்திருப்பான்.)

இன்னொரு விதமாய் எண்ணினால், எல்லைப் பகுதிகளில் அதிகாரமில்லாத சோழ அரசர் ஆண்ட காலம் அது. குதிரை வாங்கப் புறப்பட்ட அடுத்த நாட்டுப் பேரமைச்சன் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கி சோழநாட்டின் எல்லை மீற முடிந்துள்ளது. நமக்கு வியப்பாகவில்லையா? அப்படியெனில், பாண்டியன், சோழன் இருவருமே வலிகுறைந்த காலம் அதுவோ? எந்த நூற்றாண்டு? 9 ஆம் நூற்றாண்டு விசயாலயன் காலமா? இருக்காதே? தஞ்சை/ பழையாறையில் இருந்து பெருந்துறைக்குச் சோழன் தாவி வரமுடியுமே? தஞ்சையில் இருந்து 90 கி.மீ. கூட இருக்காதே? பெருந்துறையில் பாண்டிய அமைச்சன் குதிரை வாங்க வந்த செய்தி சோழனுக்குத் தெரியாது போனதோ?

மாணிக்க வாசகர் பெருந்துறையில் இருந்த காலம் எத்தனை நாட்களோ தெரியாது; அது 11 மாதங் கூட இருந்திருக்கலாம். பெருந்துறையிலிருந்து மதுரை வரை இப்பகுதிகள் எல்லாம் அக்காலத்தில் பெருங்காடுகளே. கானப்பேர் என அக்காடுகளுக்குப் பெயரிருந்தது அப் பேற்றை, அடர்த்தியை,  நமக்கு உணர்த்தும். சிவகங்கைக் காடுகள் அழிக்கப்பட்டது 19 ஆம்  நூற்றாண்டுக் கிழக்கிந்தியக் கும்பனியின் கர்னல் அக்னியூவால்  தான். அதுவரை உள்ளூர் ஆட்கள் கூட நுழையவொண்ணாப் பெருங்காடாய் அது இருந்தது. சங்க காலத்திலிருந்து அப்படியே. கானப்பேர் கடந்து கோட்டை பிடித்தனாலேயே ஒரு சங்ககாலப் பாண்டியன், ”கானப்பேர் எயிற் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்று பெயருற்றான். அக்காட்டின் நடுவே எங்கெல்லாம் ஊர்கள் எழுந்தனவோ, அங்கெல்லாங் கோயில்களும் எழுந்தன. திருப்பூவணம், திருக்கானப்பேர், திருப்புத்தூர், திருவாடானை, திருப்புனல்வாயில். எல்லாம் ஒரு பாதைக்கு அருகில் உள்ளவையே. திரு உத்தரகோசமங்கை மட்டும் சற்று தள்ளியிருந்தது.

மாணிக்க வாசகர் மதுரையிலிருந்து திருக் கானப்பேர் வழியாக வந்து  இடைத் தங்கிப் பின் பெருந்துறை செல்கிறார். நம்பியார் திருவிளையாடல் அப்படித் தான் சொல்கிறது. கானப்பேரும் 12 ஆம் நூற்றாண்டில்  கானையம்பதி என்றும் பெயர் பெற்றிருந்தது. காளையார் கோயில் அப்போது கோயிலுக்கு மட்டுமான பெயர். இன்று ஊருக்கும் அதே பெயர். 12 ஆம் நூற்றாண்டிலேயே சுந்தரேசர், சோமேசர், காளையீசர் என்று 3 திருநிலைகள் அங்கு இருந்தன. அவை மூன்றும் எப்பொழுதெழுந்தன? தெரியாது. கானப்பேருக்கு கந்தவனம் என்ற பெயரும் இருந்தது. நம்பியார் புராணம் பதிப்பித்த  உ.வே.சா. ஒரு பொன்னே போலுங் குறிப்புங் கொடுக்கிறார். அதை அப்படியே தருகிறேன்.

----------------------
விக்கிரம சோழன் மகள் சுகந்த கேசியை மணம் புரிந்த வரகுண பாண்டியர், அவளுடைய அழகின் மிகுதியைக் கண்டு அத்தலத்திற் சிவபெருமானுக்கு அர்ப்பணஞ் செய்தனர் என்பதும் அவளுடைய கூந்தலின் நறுமணம் எங்கும் பரவியது பற்றி அத்தலம் சுகந்தவனம் அல்லது கந்தவனம் என்று பெயர் பெற்றது என்பதும் அத் தலபுராண வரலாறுகள்.
----------------------

இத் தலபுராணம் தேடிக் கொண்டுள்ளேன். ஆயினும் உ.வே.சா. மூலம் கிடைத்தது அருஞ்செய்தி. திருக்கோவையாரிற் சொல்லப்படும் வரகுண பாண்டியனின் மாமன் பெயர் விக்கிரம சோழனாகும். ஆக வரகுணன் மேற் படையெடுத்து வந்தது அவனுடைய மைத்துனனே. Typical Tamil behavior. அண்ணன் தம்பி, மாமன் மச்சான் பூசல்கள் நம்மை எவ்வளவு அலைக் கழித்துள்ளன?

நாமறிந்து ஒரு விக்கிரம சோழன் குலோத்துங்கனுக்குப் பின் பொ.உ. 1118-1135 இல் ஆட்சி செய்தான். இவர் சொல்லும் வரகுணனோ 9 ஆம் நூற்றாண்டு (பொ.உ.862/863). கால உறவுகள் கொஞ்சமும் பொருந்தவில்லையே? வேறொரு விக்கிரம சோழன் 9 ஆம் நூற்றாண்டில் இருந்ததாய் வரலாற்றில் தெரிய வில்லையே? நாம் எல்லோரும் சேர்ந்து மாணிக்கவாசகர் காலத்தை 12 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுவோமா? அன்றி அடம்பிடித்து 9 ஆம் நூற்றாண்டென்று சொன்னால் அக்காலத்தில் இருந்த சோழன் விசயாலயன் ஆயிற்றே? (பொ.உ. 848-881) என் செய்வோம்? விசயலாயனின் கடைசிப் பத்தாண்டுகளில் அவன் மகன் ஆதித்த சோழன் தானே நடைமுறையிற் சோழ அரசனாய் இருந்தான்?

யாரோவொரு பாண்டியன் வரகுணனாகி அவன் காலத்துச் சோழ மாமன் விக்கிரமனாகிய காலம் பின் எது? அதைக் காணாது குத்துமதிப்பில் மாணிக்க வாசகர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றால் எப்படி? வரலாற்றுப் பட்டகைகள் ஒப்புக்குத் தானா? அவற்றின் அடிப்படையில் எம்முடிவுங் கிடையாதா? உண்மையில் உ.வே.சா. கொடுத்த காளையார் கோயிற் புராணச்செய்தி போதுமே, 9 ஆம் நூற். வரகுணன் பொருத்தத்தை சுக்குநூறாய் உடைத்தெரிய?
உடனே சிலர் நாணிக் கொள்வரோ? கோயிற் புராணங்கள் கற்பனை என்று சொல்லி ஒதுக்குவாரோ? தம் கருதுகோளை உண்மை என்று சாதிக்க என்ன வேண்டுமாயினும் சொல்வது சிலருக்கு வரலாற்றியல் அறம் போலும் .:-)))))))

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Anonymous said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Anonymous said...

கவுசி (as in 'avanukku enna கவுசி') is still in use in our village, yet I don't know what this means....