Sunday, March 23, 2008

ஏழு சுரங்கள் - 3

தமிழ்ச் சுரப்பெயர்கள் காரணப்பெயர்களாய் இருப்பதை முந்தைப் பகுதியிற் பார்த்தோம். இனி, சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் எனும் சங்கதப் பெயர்களின் விளக்கத்தை தமிழ்வழியே பெற முயல்வோம்.

முன்பே சொன்னது போல் பல சங்கதச் சொற்களின் தொடக்கம் பாகதத்துள் உள்ளது. அதேபொழுதில், சமகால மொழிகளான பாகதத்திற்கும் பழந்தமிழுக்கும் உறவு இருந்துள்ளது. நான் தமிழின் பாற்பட்டு, ஒரு பக்கமாய்ச் சொல்நகர்ச்சியை விவரித்தாலும், இருபக்க பரிமாறல் நெடுங்காலம் நடந்துள்ளது. குறிப்பாக, அற்றுவிக (ஆசீவிக), செயின, புத்த நெறிகளின் ஊடாட்டத்திலும், 'சாரிபுத்தன்' போல ஏது சாற்றம் (Logic) கற்கக் காஞ்சி வந்த கல்விப் பயிற்சியிலும், மகதத்திற்கும் தமிழகத்திற்கும் நடைபெற்ற வணிகத்திலும், இப்பரிமாற்றத்தைப் பார்க்கவேண்டும். பின்னால் வேதநெறி தெற்கே ஆழமாய்த் தொடர்புற்ற பின்னால், இது படிப்படியாகச் சங்கதம் நோக்கி மாறியுள்ளது.

[பல நேரம் சொல்லிணைகளை ஆயும்போது, தமிழோடு பாகதத்தைப் பார்க்காமல், சட்டெனச் சங்கதத்துள் நுழைவது, நம்மைக் குழப்பத்திற்கே கொண்டு செல்கிறது. பாகதம் - சங்கதம் என்ற இரட்டையில் பாகதம்  என்பது முந்தையது ; சங்கதம் பிந்தையது. பாணினி இலக்கணம் சொல்லியது பாஷா என்னும் பாகத வட்டார மொழிக்கும், அதனோடு சேர்ந்த சந்தம் எனும் செய்யுள் வழக்கிற்குமே ஒழிய, சங்கதத்திற்கு அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் பாணினி காலத்தில் ”சங்கதம்” என்ற சொல்கூட ஏற்படவில்லை. இதை எத்தனையோ முறை சொல்லியுள்ளேன், சங்கதம் என்ற மொழியை யாரும் குறைசொல்லவில்லை; தமிழ், பாகதம் ஆகிய ஊற்று வளங்களை முற்றிலும் மறைத்து எல்லாமே சங்கதமென முன்வைக்கும் முற்றாளுமையை மட்டுமே குறைசொல்கிறோம் "பொய்யுடை யொருவன் சொல்வன்மை யினால் மெய்போலும்மே, மெய் போலும்மே" என்ற வாக்கை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பல காலம் நான் சொல்வது போல தமிழ் என்பது முந்தியது; தொல்காப்பியன் வரையறுத்த செந்தமிழ் பிந்தியது. "செந்தமிழ் சீரழிந்து, தமிழில் பேச்சு வழக்குத் தளைத்தது" என்று நாம் சொல்லப்புகுவது எப்படி முட்டாள் தனமோ, அதைப் போல, "பாணினியின் சந்தமே பின்னால் சங்கதமாகி, அடுத்துப்  பாகதமாகி, மேலும் அவப்பிரம்சம் ஆகி, முடிவில் இற்றை வடபுல மொழிகள் உருவாகின" என்று சொல்வது தலைகீழான பேச்சு. பேரனைத் தாத்தன் என்பதும், தாத்தனைப் பேரன் என்பதுமாய் பாகதம் - சங்கதத்திற்கு இடையே ஒரு தவறான சிந்தனை எப்படியோ இந்திய மொழி ஆராய்ச்சியில் கலந்து விட்டது. இதற்கு மொத்தக் குமுகாயமே காரணமாய் இருக்கும் பொழுது, குறிப்பிட்ட ஒரு சாராரை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இனிமேலாவது யார் தாத்தன், யார் பெயரனென்று சரியாகப்புரிந்து ஆய்வு தொடர்ந்தால், இந்தியவியலில் இதுவரை நடந்த பல்வேறு குழப்பங்களைத் தீர்க்கலாம்.]

தமிழுக்கும் பாகதத்திற்கும் இடையே காணும் பலுக்கல் திரிவுக்குக் காட்டாக அத்தன் என்ற சொல்லைப் பார்க்கலாம். இது பாகதத்தில் adhdha என்று அதிரொலியில் (voiced) அமையும். அதுபோல அச்சனென்பதும்  அதிரொலியில் ajja ஆகும். இன்னும் சொன்னால், வர்த்தனம் (வார்த்தையால் ஆனது வார்த்தனம்>வர்த்தனம்; வார்த்தது வார்த்தை; வார்த்தல் வினையைப் பொழிதல் வினைபோல் புரிந்துகொள்ளலாம்.) வஜ்ஜனம் (பின்னிதுவே வசனம் என்று தமிழில்) ஆகும். இதேபோற் திரிவுகள் வேதமொழியிலும் உண்டு. அதில் ”முழுகு”, ”மஜ்ஜ்” என்றாகும். ஆங்கிலத்தில் merge  ஆவதுபோல் இதைக் கொள்ளவேண்டும். எலும்பின் உள்ளிருக்கும் மாவு போன்ற மூளைப் பொருள் மஜ்ஜ என வேதமொழியிலாகும். ஆங்கிலத்தில் அது marrow என்றும், செருமனில் marg என்றுமாகும். இதுபோற் சடை, jadaa  என்றும், செரியகம்> சீரகம், jeera என்றும், சுரம் (=காய்ச்சல்),  jura> jvara என்றும், சொலி>jvali என்றும், புகு puj என்றும் ஆவதை எண்ணிப் பார்க்கலாம்.

இன்னுஞ்சொன்னால், வணிகன் vanij என்றும், வித்து>விதை என்பது viija>biija என இருக்குவேதத்தில் ஆவதையும் எண்ணிப் பார்த்தால், க எனும் அடைப்பு வெடிப்பொலி (stop plosive) முதலில் ga என அதிர் வெடிப்பொலியாய் (voiced plosive) பலுக்கப்பட்டுப் பின் இந்தையிரோப்பிய மாற்றொலிப்பில் ஜ எனும் வேறு அதிரொலியாய் ஆவது முற்றிலும் வடபுல இயற்கையே என்பது புரியும். இதேபோல் தகரம், ஜகரம் ஆகும் வழக்கை விதை>வீஜ வழி புரிந்து கொள்ளலாம். மேலையர் நம் மதுரையை மெஜுரா என்று பலுக்கியதும், விவரந் தெரியாமல் போலிக் குரவத்தில் (=கௌரவத்தில்) நம்மவர் 1960கள் வரை அதைத் தாங்கித் திரிந்ததையும் (இது போல டூட்டுக்கோரின், ட்ரிச்சி, டாஞ்சூர் என்றெல்லாம் தமிழர் ஒயிலாடிக் கொண்டிருந்த காலம் உண்டு.) இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

ஆகக் ககரம், சகரம், தகரம் என்பவை இடம், பொருள், ஏவலுக்கேற்ப, வட புலத்திற் ஜகரமாகவது பெரிதும் நடந்துள்ளது. இம்முறையில் சர், சல் என்னும் ஒலிக்குறிப்பின் வழியாக உருவாகிய சத்தம், சருகம் எனும் தமிழ்ச்சொற்கள் வடபுலப் பலுக்கில் ஷட்ஜமாய் மாறுவது கொஞ்சமும் வியப்பில்லை. முன் சொன்னது போலச் சத்தம், சருகம் என்பவை குரல் எனும் அடிப்படை ஒலிப் பொருளையே குறித்தன. இந்தப் பார்வையில், குரலும் சட்ஜமும் ஒரே பொருள் உணர்த்துகின்றன. "ஆறு சுரங்களை உருவாகக் காரணமானது" என்றெலாம் பொருந்தப் புகல வேண்டியதில்லை. செவ்வியல் இசையிலிருக்கும் தமிழ்த் தொடர்பை முற்றிலும் மறுக்க வேண்டிய தேவையிருப்பவர் மட்டுமே 6 சுரங்கள் பற்றி இட்டுக்கட்டிப் பொருந்தப் புகல்வார்.

இனி ரிஷபமெனும் சுரத்தைப் பார்ப்போம். ரிஷபமெனில் காளை என்றே வடமொழியில் பொருள். அப்படியானால், ரிஷபத்திற்கும் துத்தத்திற்கும் என்ன தொடர்பு?

இந்தியக் காளையின் விதப்புத் தோற்றங்களாய் விலங்கியலில் 2 குறிப்பார்; ஒன்று அதன் உயர் திமில் (சிந்துவெளி முத்திரைகளில் எருத்தின் திமில் சிறப்பாகக் காட்டப்படும்,) இன்னொன்று காளையின் பெருத்த வயிறு. காளை குறிக்கும் சொற்களான எருது, ஏறு போன்றவை, உயர் திமிலை வைத்தே எழுந்தன. விடை, நந்தி போன்ற சொற்கள், தொந்தி முன்தள்ளிப் பருத்து விடைத்து இருப்பதைக் குறிக்கும். ”விடைமா” வில்  வரும் 'மா'வெனும் விலங்குப் பெயரைத் தவிர்த்து விடவமென்றும் காளையைச் சொல்வதுண்டு.  முன்வந்து கிடக்கும் பெருவயிறு துந்தி>தொந்தி (அதேபோல் நுந்தி> நந்தி) என்று சொல்லப்படுகிறதே? துந்துதலின் பிறவினைச்சொல்லான துத்துதலும் முன்வந்து கிடத்தலையே குறிக்கும்; துருத்துதலும் முன்வந்து கிடத்தலே! துருத்தல் துரித்தலாகியும் அதே பொருள் குறிக்கும். துரியம், துரந்தரம், தூரியம், தூர்வகம் போல் இருபிறப்பிகள்  பொதியெருதைக் குறிக்கும் சொற்களே. தூரி என்ற சொல்லும் கூடப் பொதுவான எருதைக் குறிக்கும். துத்தம் என்ற சொல் உயர்ந்தது, முன்தள்ளிப் பெருத்தது என்று அதன் இயல்பை உணர்த்தற்கு மாறாய், துத்தம் எனும் பருப்பொருள் விலங்கைக் (முதலில் பெருவயிற்றைக் குறித்துப் பின்னால் எருதைக்) குறித்து அதை விடவம்>விடபம்>விஷபம்> வ்ரிஷபம்> ரிஷபம் என்ற இயல்திரிவில் வடபுலத்தில் புரிந்துகொள்ளப் பட்டது போலும்.

மூன்றாவது சுரப் பெயரான காந்தாரம் என்பது சங்கதம் விரவிக்கொண்ட நற்றமிழ்ப்பெயரே! காய்ந்த ஆரம்>காய்ந்தாரம்>காந்தாரம். (ஆரம் =  ஒலி; ஆர்தல்>ஆரித்தல் என்பது ஒலித்தல் வினையையும், ஆர ஆரித்தல் என்பது நிறைந்தொலித்தல் பொருளையும் சுட்டும்.) உள்ளிருக்கும் யகரம் தொகுத்த காரணத்தால், காந்தார மூலம் நமக்குச் சட்டென்று தெரியாமல் போகிறது. ”காய்ந்தாரமே”  பகையொலிப் பொருளை எனக்கு உணர்த்தியது. கைக்கிளையைக் காய்க்கிளை> கய்க்கிளை என்பதில் பொருளுண்டோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கியது. காய்க் கிளை (>கய்க்கிளை)= காய்ந்த ஆரம்= காய்ந்தாரம் = பகை யொலி. [காந்தாரம் என்ற சொல் சுரத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ்ப்பண்ணுக்கும் பெயராய் இருக்கிறது.]

நாலாம் சுரம் மத்யமம். முன்சொன்னது போல, உழைக்கு ஒலி, பக்கம், என்பவை போக, உள்ளிருத்தல் பொருளும் உண்டு. உள் எனும் கருத்தை நள் என்ற சொல்லும் தமிழில் உணர்த்தும். நள்+து = நட்டு>நடு; நட்ட நடு என்கிறோம் இல்லையா? நடுவில் உள்ளது நட்டுமம். மத்ய அரசு என்னாமல், நடுவண் அரசு என்னும் இக்காலப் புழக்கத்தை எண்ணினால், இதைப் புரிந்து கொள்ளலாம். நகர/மகரப் போலியாலும், வடக்கே போகப் போக, அதிர்வுப் பலுக்கல் கூடுவதாலும், நட்டுமம்>மத்திமம் என்றாவதில் வியப்பில்லை. மத்திமா எனும் பாகதச்சொல் மத்யமா எனச் சங்கதத்தில் திரியும். (நடுமம் = median என்ற சொல்லையும் ஓர்ந்துபாருங்கள். centre இற்கு நடுவம் என்று புழங்காமல் மையமென்றோ, கூர்ந்தமென்றோ பயிலலாம். "கிடைத்ததை அள்ளிப்போட்டு மொழிபெயர்ப்பை முடித்துக்கொள்" என்ற அவக்கர நாட்டத்தால், தமிழ்நடையைத் தடுமாற வைக்கிறோம். 'இயக்குநர்' என்ற சொல் இந்நாட்டில் ஏற்படுத்திய குழப்பம் இன்று கொஞ்சங்கொஞ்சமாய் 'நெறியாளர்' மூலம் குறைகிறது அல்லவா?)

ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்படும். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்ற பழமொழி போல, 'ஐந்து என்பது பஞ்ச' என்று பொருந்தப் புகல்வதைக் காட்டிலும், இளிதல் = இணங்குதல், ஒன்றுதல் பொருளோடு தொடரும் 'பொஞ்சுதலோடு' பொருத்திப் பார்த்தால், இன்னும் சிறப்பாகும். பொஞ்சுதல் என்பது பொந்துதலின் பேச்சுவழக்கே. பொந்துதல் என்பது பொருந்துதல் என்றும் தமிழில் வழங்கும். பொந்திகை = இணக்கம், மன நிறைவு, பொருந்தாமை = இணக்கமின்மை போன்றவற்றை எண்ணிப் பார்க்கலாம். பின்னால் ஐந்தாம் சுரம் என்றுகுறிக்கும் ”பஞ்சமம்” எதுகையாய் ஒலிக்க, இணங்குதல் கருத்து மறைந்து ”ஐந்தாவது” எனும் கருத்து நிலைப்பட்டது போலும். (பொக்குளம் metathesis முறையில் கொப்புளமென்றும், குமுடி,  குடுமி என்றும் மாறுவது பேச்சுவழக்கில் இயற்கையே. குமுடி மூலை என்பது தில்லைச் சிவனடியார் ஆறுமுகசாமியின் ஊர். வட்டியைக் - interest - குறிக்கும் பொலிசை, பலிசையாய்ப் பல்லவ, சோழர் கல்வெட்டுக்களில் மாறியதையும் எண்ணிப் பாருங்கள்.)

அன்புடன்,
இராம.கி.

3 comments:

Anonymous said...

சமசுகிருதம் பிந்தியது பிந்தியது என்று தான் சொல்லுகிரிரே தவிர அதற்கு எந்த காரணமும் இதுவரை சொல்லவில்லை. உங்கள் இந்த கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை.

அதை பற்றி ஒரு பதிவு போட்டால் என்ன?

Vijayakumar Subburaj said...

...
> பல காலம் நான் சொல்லுவது
> போல தமிழ் என்பது முந்தியது;
> தொல்காப்பியன் வரையறுத்த
> செந்தமிழ் பிந்தியது.
...

தமிழையும் (எழுத்து, சொல்) தமிழரையும் (பொருள்) விளக்க முயன்ற தொல்காப்பியம் (தொண்மை + காப்பு + இயம் - பழமையைக் காக்கும் நூல்) தமிழின் தோற்றம் பற்றி ஆராயாமை வியப்புக்குரியது. சற்றே சிந்திக்க, இந்த இடத்தில் தொல்காப்பியரின் இயலாமை விளங்குகிறது. தமிழுக்கு இலக்கணம் கூறும் பொருட்டு எழுந்த (இப்போது இல்லாத / கிடைக்காத) முதல் இலக்கண நூலிலும் தமிழின் தோற்றம் வரையறுக்கப் படாமலிருக்க வேண்டும். அவ்வாறு கூறப்பட்டிருந்தால், தொல்காப்பியமானது அதை வழிமொழிந்திருக்கும், இல்லையேல், மாற்றுக் கருத்தையாவது உதிர்த்திருக்கும்.

Unknown said...

இராம.கி அவர்களே,
ஏழு சுரங்கள் பதிவு மூன்றையும் படித்து மிக மகிழ்ச்சி.
உண்மை உரை, பயன் நிறை, பதிப்புகளை அளிக்கும் திறன், ஊக்கம், முயற்சி யாவையும் பாராட்டி, நன்றி தெரிவிக்கின்றேன்.
நலம் மேன்மேலும் சிறந்து விளங்குக.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
மார்ச்சு 23, 2008