Wednesday, March 19, 2008

ஏழு சுரங்கள் - 2

சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயர்களுக்கும் உள்ள உறவைச் சட்டென்று ஆய்வின்றிச் சொல்ல முடியாது இருக்கிறது. சட்ஜம் என்பது குரல் என்றும் (இப்படிச் சொல்வது மேவுதிப் போக்கு - majority trend), இல்லையில்லை சட்ஜம் என்பது இளியே என்றும் (இப்படிச் சொல்வது நுணதிப் போக்கு - minority trend), இருவேறு கருத்துக்கள் தமிழிசையாளரிடம் உண்டு. நான் இக்கேள்வியை ஆய்வு செய்தவனில்லை. மேவுதியாரோடு இணங்கி, பெயர்க்காரணங்களை மட்டும் இங்கு நான் சொல்ல முற்படுகிறேன்.

இசையறிஞர் முனைவர் வீ.பா.க. சுந்தரம் தன் ஆய்வில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்கள் எப்படி எழுந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். [தமிழிசையில் ஆர்வம் கொண்டு, ஆய்வுக்கண் கொண்டு பல்வேறு செய்திகளை அணுக விழைவோர், கீழ்வரும் அவருடைய நான்கு நூல்களையும் உசாத் துணையாய்க் கொள்வது நல்லது. தவிர, இசைத்தமிழ் பற்றி அறிவது, இயற்கையைச் சுவைக்கவும், கலைநுகர்வைப் பெருக்கவும், உதவி செய்யும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 79, பிரகாசம் சாலை (பிராடுவே) சென்னை 108, வெளியீட்டு ஆண்டு 1986

தமிழிசை வளம், பதிப்புத் துறை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை 625 021, வெளியீட்டு ஆண்டு 1985

தமிழிசையியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 005, வெளியீட்டு ஆண்டு 1994

தமிழிசைக் கலைக் களஞ்சியம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி 620 024 - 4 மடலங்கள், வெளியீட்டு ஆண்டுகள் 1992, 1994, 1997, 2000]

அதேபொழுது சங்கதப் பெயர்களுக்கு காலங்காலமாய்ச் சொல்லிவந்த விளக்கத்தையே அவர் எடுத்துரைக்கிறார். இந்த 2 வரிசைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில், இங்கே என் முன்னீடுகளை எடுத்து வைக்கிறேன்.

முதலில் தமிழ்ச் சுரப் பெயர்களைப் பார்ப்போம். இங்கே வீ.பா.க.சு. வின் ஆய்விற் பெரிதும் சார்ந்து, இரண்டே சுரங்களில் மட்டும் அவரோடு ஓரளவு வேறுபட்டு, நான் சொல்ல முற்படுகிறேன்.

குரல் என்பதைப் 'ஒன்றோடு ஒன்றின் சேர்க்கை அதாவது பற்றுதல்' எனும் பொருளில் எழுந்த சொல்லாகவே அவர் உரைப்பார். (அவர் கூறிய விளக்கத்தில், குரவை என்பது கைப்பற்றி ஆடும் ஆட்டம்; குரால் என்பது தாய்ப்பற்றுடைய குட்டி; குரவர் என்பவர் பற்றுடைய குரு, பெற்றோர்.) நானோ, குரலைக் குர் எனும் ஒலிக்குறிப்பிலெழுந்த சொல்லாய்க் காண்பேன். ஒலி எனும் பொருளில் எழும் அடியோசைக்குக் (voice) குரலென்றே பெயர். குரத்தம் (= ஆரவாரம்), குரம் (= ஒலி), குரவை>குலவை (= மகிழ்ச்சியொலி), குருமித்தல் (= பேரொலி செய்தல்), குரைத்தல்>குலைத்தல் (= ஆரவாரித்தல்), குலிலி (= வீராவேச ஒலி), குழறுதல்/குளறுதல் (= பேச்சுத் தடுமாறல்), குளிறுதல் (= ஒலித்தல்), குறட்டை (= உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி) என வரும் பல்வேறு தொடர்புடைய சொற்களையும் குரலோடு எண்ணிப் பார்த்தால், குர் என்னும் ஒலிக்குறிப்பே குரலுக்கு அடிப்படை என்பதை உறுதிசெய்யும். தவிர சிவநெறியாளரின் பதினோராம் திருமுறையில், தேவார மூவர்க்கு மூத்தவரான காரைக்கால் அம்மையாரின்,

துத்தம் கைக்கிளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடி
.....................
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திரு ஆலங்காடே

எனும் பாடலில் ஓசை என்ற சொல்லே குரல் எனும் சுரத்தைக் குறிக்கும். பொதுவாக மற்ற சுரங்கள் குரலிலிருந்து கிளைத்தவையாகவே இசையியலாளர் சொல்வார். சங்க இலக்கியமான மலைபடுகடாத்தில்,

குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பு

என்று வரும் 23 ஆம் அடியும் இதை உறுதி செய்யும்.

அடுத்து, துத்தமென்ற சொல்லுக்கு உயர்ந்ததென்ற பொருளையே வீ.பா.க.சு காட்டுவார் (துத்துதல் = உயர்த்துதல்; துத்தியது துத்தம். துத்தின் விரிவான துருத்து என்பதும் உயர்ந்ததை, வெளிவந்ததைக் குறிப்பதே. துத்து, துருத்து என்பதில் இருந்து பல்வேறு சொற்கள் கிளைக்கும்.) துத்திய குரல் = உயர்ந்த குரல் என்பதில் குரலை உள்ளார்ந்து வைத்து வெறுமே துத்தம் என்பது  ஏற்புடைத்தே. உயர்ந்தது என்பதோடு 'முன்தள்ளிப் பெருத்தது' என்றும் துத்தத்திற்குப் பொருளுண்டு. மொத்தத்தில், அவர் விளக்கத்தை அப்படியே மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்.

மூன்றாவதாக, கைக்கிளைக்குக் கிளை = உறவு என்ற பொருளில் 'சிறுமை ஒலி உறவு' என்று அவர் அமைதி காணுவார். செவ்வியல் இசையில் இயல்புத் தொனிப்பில் (just intonation) ஒவ்வொரு சுரமும் படிப்படியாக அதற்கு அடுத்ததோடு ஒத்திசைப் புறக்கூட்டில் (harmonic progression) இருந்தாலும், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவும்போது, சில பொருத்துகள் ஒத்திசைந்தும், சில ஒத்திசையாமலும் அமைவது, எந்த இனிமையைத் தேடிக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்தது. பொதுவாய் முதற்சுரமும், நாலாஞ்சுரமும், அதேபோல முதற்சுரமும், ஐந்தாஞ்சுரமும் கேட்பதற்கு இனிமையாய் மிகுந்த ஒத்திசை கொண்டன என்பார். இதற்கு மாறாய், முதற்சுரமும், மூன்றாஞ்சுரமும், முதலும் ஆறாஞ்சுரமும், அவ்வளவு ஒத்திசையாமல், குறைந்து இருப்பதாகவே இசையிலாளர் கொள்வர்.

முனைவர் வீ.பா.க.சு.விலிருந்து சிறிதே மாறுபட்டு, கைக்கிளை என்ற சொல்லைச் சிறுமைக் கிளை என்றுகொள்ளாது (கை எனும் முன்னொட்டு சிறு என்னும் பொருளைத் தமிழில் உணர்த்தும். கைக்குட்டை என்னும் சொல்லை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்), அதைக் காய்க்கிளையின் மரூஉ என்றே புரிந்து கொள்கிறேன். [இப்படிச் சொல்வதற்கு மணிப்பவளச் சொல்லான காந்தாரம் கூட ஒரு காரணம். அதைக் கீழே விளக்குவேன்.] சிறுவர் ஒருவரோடு ஒருவர் நட்பாய் இருப்பதை பழம் என்றும், எதிராய் இருப்பதைக் காய் என்றும் சொல்லும் பரந்த வழக்கை ஓர்ந்து பார்த்தால், காய்க்கிளை என்று சொல்லுவதில் உள்ள சீர்மை புலப்படும். கிளை என்பதற்கு ஒலி என்றே பொருள் கொள்ளலாம்.

கிளவுதல் என்ற பழையவினை தமிழில் ஒலித்தலென்றே பொருள் கொள்ளும். (இரட்டைக் கிளவி என்று சொல்லுகிறார் அல்லவா?) இன்னும், கிளவி என்ற சொல்லைக் clause என்பதற்கு இணையாய்ப் பொருள் கொள்வதையும், பேசிக்கொண்டே ஆடும் ஆட்டத்தைக் கிள்ளாக்கு என்பதையும், கிளி, கிள்ளை (= பேசும் கிளி) போன்ற பெயர்ச் சொற்களையும் கூர்ந்து பார்த்தால் கிளத்தல்>கிளை என்பதில், ஒலித்தல்>ஒலி என்ற பொருள் இருந்திருக்க வேண்டுமென உணரலாம். அவ்வகையில் காய்க்கிளை என்பது காய்ந்த ஒலி என்றும், பொருந்தா ஒலி என்றும், பகையொலி என்றும், பொருள் கொள்ளும்.

அடுத்துள்ள நாலாம் நரம்பு உழையாகும். உள்>உளை>உழை என்று இச் சொல் ஒலிப்பொருளில் விரியும். உளைதலின் திரிபான ஊளை என்பதும் பேரொலிப் பொருளைக் கொடுக்கும். howl என்ற மேலையர் சொல்லையும்  எண்ணிப் பார்க்கலாம். தவிர உழைக்கு உள்ளாதல், பக்கம் என்ற பொருளும் உண்டு. இந்நரம்பை, குரலோடு சேர்ந்த உள்ளிருக்கும் நட்பு நரம்பு என்றே இசையியலார் சொல்வார். குரலுக்குப் பக்கத்தில் நெருங்கி, நள்ளி இருக்கக் கூடிய உள்நரம்பு உழை நரம்பு ஆகும். (நள்ளுவது நட்பு. உள்ளிருத்தல் நடுவில் இருத்தல்.) இதில் முனைவர். வீ.பா.க.சு.வுடன் முழுதும் உடன்படுகிறேன்.

ஐந்தாவது இளி எனும் நரம்பு. ஒன்று இன்னொன்றோடு இணங்குதலை, அதாவது ஒன்றுதலை, தமிழில் இளிதல் வினையால் சொல்லலாம். இளி நரம்பை, கிளை நரம்பு என்றுகூடத் தமிழிசையிற் சொல்வதுண்டு. (தென் மாவட்டங்களில் இவனுக்கிவன் கிளைகாரன் என்றுசொல்லி சுற்றத்தையும், நண்பரையும் ஒருங்கிணைத்தாற் போற் குறிக்கும் சொல்லாட்சி உண்டு.) இதிலும் என் கருத்து வீ.பா.க.சு. கருத்தே.

ஆறாவது நரம்பிற்குப் போவதற்கு முன் ஏழாவது நரம்பின் பெயரைப் புரிந்து கொள்வது நல்லது. ஏழாம் நரம்பு, தாரம் எனப்படும். இது ஒரு சுரவரிசையில் இருக்கும் ஏழு நரம்புகளிலேயே, மிக உயர்ந்த, நீண்ட, உச்ச நரம்பு ஆகும். 'உச்சம் தாரம் ஓங்கும் வல்லிசை' என்று திவாகர நிகண்டின் நூற்பாவை வீ.பா.க.சு. குறிப்பார். தார் என்பதற்கு மேலோங்கியது, நீண்டது என்ற பொருள் உண்டு. (தாராளம் என்ற சொல்லை இங்கு நினைவு கூருங்கள்.)

ஆறாம் நரம்பான விளரி என்பது, தாரத்தோடு ஒப்பிடத் தன் அதிர்விற் சற்று குறைந்தது. பேச்சுவழக்கில் கொஞ்சம் குறைந்த கருப்பை வெளிர்கருப்பு என்கிறோம் அல்லவா? வெளிர்தலும் விளர்தலும் ஒரே பொருளுள்ள சொற்கள் தாம். எனவே தாரத்தில் விளர்த்தது விளர்தாரம். இங்கு தாரம் என்ற ஈற்றுச் சொல்லை உள்ளார்ந்து வைத்து, விளரி என்றே சுருங்கச் சொல்லப்படுகிறது. (ஏற்கனவே மூன்றாஞ்சுரத்தை குரலுக்குக் காய்க்கிளை என்று சொல்லிய காரணத்தால், இன்னொரு காய்ந்த சுரமான ஆறாஞ்சுரத்தையும் குரலோடு பொருத்தாதுல், வேறுவகையில் தாரத்தோடு பொருத்திச் சொன்னார்.)

ஆகச் சுருங்கச் சொன்னால், தமிழ்ப்பெயர்களின் பெயர்க்காரணம் கீழ்வருமாறு அமையும்.

குரல் என்பது அடிப்படை ஒலி
குரலுக்குத் துத்தம் என்பது குரலுக்கு உயர்ந்த ஒலி
குரலுக்குக் காய்க்கிளை என்பது குரலொடு காய்ந்த கிளை, அதாவது குரலுக்குப் பகையொலி
குரலுக்கு உழை என்பது குரலுக்குப் பக்கமான ஒலி = குரலுக்கு நள்ளிய ஒலி (நள்ளுதல் = நெருங்குதல்)
குரலுக்கு இளி என்பது குரலுக்கு இணங்கிய ஒலி
தாரத்தின் விளரி என்பது தாரத்திலும் வெளிரிய ஒலி
தாரம் என்பது குரலைப் பார்க்க மிக மிக நீண்ட ஒலி

ஒரு சுரவரிசையை வட்டம், மண்டிலம், தானம், தாயி என்ற சொற்களால் தமிழிசையில் குறிப்பார். இவை அத்தனையும் தமிழ்ச் சொற்களே. ஒரு மண்டிலம் முடிய, அடுத்த மண்டிலம் வந்துவிடும். மண்டிலம் என்ற சொல்லை சிலம்பில் ஆய்ச்சியர் குரவை 13 ஆம் அடிக்கு ஆன அடியார்க்கு நல்லார் உரை கீழ்க்கண்டவாறு உரைக்கும்.

வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓரேழ் தொடுத்த மண்டிலம் ஆகும்

வட்டி வருவது வட்டம் (வட்டுதல் = வளைதல்); மண்டித்து வருவது மண்டிலம் (மண்டலம் = region என்ற சொல்லும் நிலம் குறித்த வட்டம் தான். சிவகங்கைப் பக்கம் வட்டகை என்றசொல் மண்டலத்தைக் குறிக்கும். மண்டிலம் என்ற கருத்தீட்டு வட்டத்திற்கும். மண்டலம் என்னும் பருப்பொருள் வட்டகைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர்ந்து கொள்வது தமிழ்நடை சிறக்க வழிவகுக்கும். (இசையில் வரும் மண்டிலம் போல யாப்பில் ஒருவகைப் பாவினத்திற்கும் மண்டிலம் என்ற பெயருண்டு. காட்டாக, காய் - காய் - மா - தேமா எனும் ஒழுங்கு வாய்பாட்டில், 4 சீர்களையும் 8 அரையடிகளையும், அதோடு எதுகை மோனை அழகுகளையும் சேர்த்து, மீள மீள மடித்து வரும் பாவினம், எண்சீர் ஆசிரிய மண்டிலம் எனப் படும். பின்னால் மண்டிலம் என்ற சொல்லைப் புழங்காது வட்டம்>வ்ருத்தம்>விருத்தம் என்ற இருபிறப்பிச் சொல்லையே நம்மவர் புழங்கியிருக்கிறார். இன்றைக்கு விருத்தம் என்றால் புரிந்து, அதேபொழுது மண்டிலம் என்றால் புரியாமல் தடுமாறும் மரபுக் கவிஞர் உண்டு. அந்த அளவிற்கு வடமொழி/மணிப்பவளச் சொற்கள் நம்மிடையே ஊடுருவியுள்ளன. ஆங்கிலத்தில் verse என்பது  விருத்தத்தோடு தொடர்புடையதே.)

தமிழிசையில் ஒவ்வொரு பண்ணிற்கும் மண்டிலம் சொல்லும்போது ஆரோசை (=ஆரோகணம், ஏறிவரும் ஓசை), அவரோசையில் ( = அவரோகணம், அவல்ந்து வரும் ஓசை; அவல் = கீழ்) சுரங்களைச் சொல்வார். மண்டிலத்தின் இன்னொரு சொல்லான தானம் என்பது, தண்டு கொண்டு நிலைத்து நிற்பது என்று பொருள்கொள்ளும். (சங்கத மயக்கத்தில் உள்ளவர் தானத்தையும் தமிழில்லை என்பார்.) வட்டம், மண்டிலம், தானம் என்பது போகத் தாயி என்ற சொல்லும் இதே கருத்தைக் குறிக்கத் தமிழிலுண்டு. தாயக்கட்ட ஆட்டத்தில் தாயமென்ற சொல்லை உன்னிப்பார்த்தால் தங்கும் இடம் என்றபொருள் புரிபடும். தாயித்தல் = தங்குதல். (தாயி என்பதோடு முன்னால் ஸ் என்பதைச் சேர்த்து ஸ்தாயி ஆக்கி வடமொழி பயின்று கொள்ளும். தானம் என்பது வேறொரு வகையில் ஸ்தானம் ஆகி நிலத்தைக் குறிப்பதுபோல இதைப் புரிந்து கொள்ளலாம். இந்துஸ்தானம் < இந்துத்தானம் < சிந்துத்தானம் = சிந்து ஆறு பாயும் நிலம்)

ஓர் இசை மண்டிலத்தை மொத்தம் 22 சுருதிகளாய்ப் (அலகுகளாய்ப்) பிரிப்பது தமிழர் மரபாகும். அதோடு எழு சுரங்களுக்கும் 4,4,3,2,4,3,2 என்று அலகுகளைப் பிரிப்பர். இந்த ஏழு சுரங்களும் ஒன்றின் பின் ஒன்றாய்க் கிளைத்தது இயல்பான வளர்ச்சியே. எப்படி நீரின் உறைநிலை (freezing point), கொதிநிலை (boiling point) ஆகியவற்றைக் கொண்டு செல்சியசு, வாரன்ஃகீட் போன்ற வெம்மை அளவுகோல்கள் எழுந்தனவோ, அது போலக் குரல் தாரம் என்று இரு ஈறுகளை வைத்துக் கொண்டு மற்ற சுரங்களை அடையாளங் காட்டும் நடைமுறை இது. இசை வளர்ச்சியில், ஏழு சுரங்களைப் பன்னிரண்டு அரைச் சுரங்களாய் நீட்டி அவற்றில் சிலவற்றை வெவ்வேறு வகையில் உகந்தெடுத்து, பெருமடக்கு (permutation), பிணைப்பு (combination) முறைகளில், ஆரோசை, அவரோசை வரிசைகளை அமைப்பதைப் பண்ணுவது என்பார். பண்ணிய இசை பண்ணாயிற்று.

பன்னிரண்டு அரைச்சுரங்களுக்கான தமிழ்ப்பெயர்களையும், இணை கொண்ட வடசொற்களையும், மேலைக் குறியீடுகளையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

குரல் - சட்ஜம் - C
மென் துத்தம் - சுத்த ரிஷபம் - D flat
வன் துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் - D
மென் கைக்கிளை - சாதாரண காந்தாரம் - E flat
வன் கைக்கிளை - அந்தர காந்தாரம் - E
மெல்லுழை - சுத்த மத்யமம் - F
வல்லுழை - ப்ரதி மத்யமம் - F sharp
இளி - பஞ்சமம் - G
மென் விளரி - சுத்த தைவதம் - A flat
வன் விளரி - சதுஸ்ருதி தைவதம் - A
மென் தாரம் - கைசகி நிஷாதம் - B flat
வன் தாரம் - காகலி நிஷாதம் - B

காட்டாக, முல்லையாழ் என்றும், செம்பாலைப் பண் என்றும் பழங்காலத்தில் சொல்லப்பட்ட பண்ணை அரிகாம்போதி அராகமாக இன்று சொல்வார்.

அதன் ஆரோசை ச ரி2 க2 ம ப த2 நி ச்
அதன் அவரோசை ச நி த2 ப ம க2 ரி2 ச்

இப்படிப் பல்வேறு பண்கள் வெவ்வேறு சுரங்களைக் கொண்டு அமையும்.

ஒவ்வொரு சுரத்தையும் அதன் அதிர்ச்சிப் பருவெண்ணால் (vibrational frequency) ஒலித்துக் காட்டலாம். 12 அரைச்சுரங்களின் ழுழு அரங்கும் (full range) ஒரு மண்டிலமாகும். இசையியலில் மெலிவு மண்டிலம் (மந்த்ர ஸ்தாயி), சமன் மண்டிலம் (மத்திய ஸ்தாயி), வலிவு மண்டிலம் (தார ஸ்தாயி) என மூன்று மண்டிலங்களைச் சொல்வார். காண்க, - சிலம்பு அரங்கேற்று காதை 93-94 ஆம் அடிகள்.

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன்

ஒவ்வொரு மண்டிலத்திலும் ஒரு குரற் சுரம், ஒரு துத்தச் சுரம் ....... முடிவில் ஒரு தாரச் சுரம் என அமையும். அதேபொழுது, சமன் மண்டிலத்தில் வரும் குரற் சுரத்தின் பருவெண் மெலிவுமண்டிலத்தில் வரும் குரலின் பருவெண்ணைக் காட்டிலும் 2 மடங்கு இருக்கும். இதேபோல வலிவுக் குரல், சமன் குரலைப் போல் இருமடங்குப் பருவெண் கொண்டது. சிலம்பின் வழி இசையாய்வு செய்த சென்னைப் பல்களைக்கழக முன்னாள் பூதியற் பேராசிரியர் திரு. வீரபாண்டியன், ஒரே மண்டிலத்துள் இருக்கும் 7 சுரங்களுக்கு, கீழ்க் கண்ட பருவெண் மடங்குகளை இருவேறு முறைகளில் குறிப்பார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

இயல்புத் தொனிப்பு முறை (Just intonation)

ச  ரி2  க2  ம1  ப  த2  நி2  ச்
1    9/8  5/4  4/3  3/2  5/3 15/8 2

சிலம்பில் வரும் ஆராய்தல் தொனிப்பு முறை

ச  ரி2   க2      ம1  ப    த2      நி2      ச்
1   9/8  (9/8)^2  4/3  3/2  27/16  (4/3)^2  2

ஆகத் தமிழில் வரும் சுரப் பெயர்கள் எல்லாம் தானாய் எழுந்ததாய்த் தெரியவில்லை; இசையியலை நன்கு புரிந்து இசையடவு (musical design)செய்த ஒருவர் வேண்டுமென்றே ஆராய்ச்சிப் பொருளோடு இட்டிருக்கும் காரணப் பெயர் என்றே தெளிவாகத் தெரிகிறது. அதோடு, சங்கதப் பெயர்களுக்குக் கொடுத்த விளக்கங்கள் போலத் தான்தோன்றித் தனமாய் அல்லாமல், உள்ளார்ந்த ஏரணத்தோடு இவை இருப்பதையும் உணருகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Unknown said...

மீச்சிறப்பு ஐயா!