Sunday, July 09, 2006

ஒப்பந்த மானுறுத்தலாய்க் காட்சிதரும் கல்வி வாணிகம் - 3

எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது என்று தெரியவில்லை; 70களில் இருந்தே தமிழ்த் திரைப்படங்களில் நாயகனோ, நாயகியோ "கான்வெண்ட்" படித்தவராகவும், அவனை/அவளை முதலில் காட்டும் போது நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவது போலவும் காட்டுவார்கள்; இதைப் பார்த்த நாட்டுப்புற மக்கள் முற்றிலும் மயங்கிப் போய், ஒரு இருபது ஆண்டுகளில் ஆங்கிலப் பள்ளிகளின் பக்கம் முற்றிலும் சாய்ந்தது ஒன்றும் வியப்பு இல்லை; நம்மூரில் திரைப்படத் தாக்கம் அறிந்தது தானே? தமிழைத் தூக்கி எறிவது திரைப்படங்களிலேயே வெகு நாட்களாய் நடந்தது. கண்ணெதிரில் பார்த்துக் கொண்டு பலரும், அரசியற் கட்சியினர் முதற்கொண்டு, பேசாமற் தான் இருந்தார்கள். [இதில் பேராயமும் (congress), கழகத்தாரும் (D.K, DMK, ADMK.....), பொதுவுடைமையரும் (CPI, CPM) என எவருமே விலக்கில்லை.] பிள்ளையின் எதிர்காலமே "மம்மி, டாடி" என்று தங்களை அழைப்பதிலும், தஃசு புஃசு என்று ஆங்கில வாசகங்களை அள்ளி விடுவதிலும் தான் இருக்கிறது என்று முடிவு கட்டிய பிறகு, அது திரைப்படத்தின் மூலம் அழுந்தச் சொல்லப்பட்ட பிறகு, எந்தக் குதிரையிலும் பந்தயம் கட்ட நம் மக்கள் அணியமாகி விடுகிறார்கள். அதன் பின்னால், தனியார் பள்ளிகள் புற்றீசலாய்ப் பெருகாமல் வேறு என்ன செய்யும்? ஆங்கிலத்தில் சொல்லுவது போல் "we get what we deserve". நாம் இன்னொருவரை ஈயடிச்சான் படியெடுக்க முனைந்த பிறகு, நம் வரலாற்றையே மறுதலிக்க முன் வந்த பிறகு, கல்வி வணிகர்கள் என்பவர்கள் சோதியக்காரர்கள், குருக்கள்மார், சாமியார்கள் போல நாம் 'கடைத்தேற வழிகாட்டும்' பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். ஏழை, பணக்காரன் என எல்லோருமே இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகள் சேர்ந்தால் எதிர்காலம் சோதிமயம் என்ற கனவுகள் விரியக் காண்கிறார்கள். (கனவுகள் பின்னால் கலைந்து போவதை யாரும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.)

இந்தத் தனியார் கல்வி எப்படித்தான் இருக்கிறது? கனவுகள் விரியக் காத்திருக்கும் பெற்றோர்கள் மதிப்பெண்களின் கவர்ச்சியில் எதை வேண்டுமானாலும் மறக்க முற்படுகிறார்கள். இந்த ஆண்டு இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில், பன்னிரண்டாம் வகுப்பில் நூற்றுக்கு நூறுபேர் தேர்ச்சி என்றவுடன் "நாம் நல்ல இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம்" என்று எண்ணி விடுகிறார்கள். "பிள்ளையின் மற்ற தேவைகள் என்ன? ஏந்துகள் (facilities) என்ன? வாய்ப்புகள் (opportunities) என்ன? நம் பிள்ளை முழு வளர்ச்சியுள்ள பிள்ளையாய் வெளிவருவானா? அவள் அறிவு மேம்படுமா? இல்லை வெறும் மனப்பாடத் தேர்ச்சி மட்டுமே கிட்டுமா?" என்ற கேள்விகள் எல்லாம் பெற்றோர் மனத்தில் ஏற்படுவதில்லை. அப்படிச் சில கேள்விகளைக் கொண்டுவரும் பெற்றோர்களும், மற்றவர்களால் பித்தர்களாகவே அறியப் படுகிறார்கள்.

நம்முடைய எதிர்ப்பார்ப்பு குறுகத் தொடங்கியவுடன், பள்ளி/கல்லூரியின் பொறுப்பாளர்கள் அந்தக் குறுகு எதிர்பார்ப்பைப் பிடித்துக் கொண்டு விடுகிறார்கள். "உங்களுக்கு உங்கள் பிள்ளை 95 க்கு மேல் மதிப்பெண் எடுக்க வேண்டும் தானே? கவலைப்படாதீர்கள், எங்கள் ஆசிரியர்கள் உங்கள் பிள்ளைகளை பயிற்சி கொடுத்து வளைத்து நிமிர்த்திவிடுவார்கள்; பள்ளிக்குள்ளேயே ஏழெட்டுத் தேர்வுகள் எடுத்து பிள்ளைகளை வடிகட்டிவிடுவோம்" என்று சகட்டு மேனிக்கு வாக்குறுதிகள் கொடுப்பார்கள். தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் சனநாயகம், நாகரிகமாய்ப் பிள்ளைகளை நடத்துதல் என்பதை எல்லாம் பேசிக்கொள்வதோடும், அதைப் பற்றிப் படிப்பதோடும் சரி; ஆசிரியர் "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்" என்ற கொள்கை வைத்திருந்தால் அதை எதிர்க்கும் பெற்றோரை தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம். எத்தகைய அடக்கு முறைக்கும் நம் மக்கள் முணுமுணுக்கக் கூட மாட்டார்கள்; "படிக்கப் போன இடத்தில் வேறு என்னடா உனக்கு வேலை?" என்று தங்கள் பிள்ளைகளைக் கோவிக்கக் கூடச் செய்வார்கள், அடிப்படையில் இன்னும் குருகுல மனப்பான்மை என்பது தமிழ்நாட்டுப் பெற்றோரை விட்டுப் போகவே இல்லை.

கிட்டத்தட்ட இன்றையக் கல்வி என்பது ஒப்பந்த மானுறுத்தல் (contract manufacturing) போலத்தான் என்று ஏன் சொல்லுகிறேன்?

"இந்திந்த வாய்ப்புக்கள் இருக்கின்றன, இன்னின்ன ஏந்துகள் இருக்கின்றன. எங்களால் உங்கள் மாணவனை இப்படி எல்லாம் மேம்படுத்த முடியும்" என்று இந்தப் பள்ளிகூடக்காரர்கள் ஒப்பந்த மானுறுத்தலுக்கான செலவை அதிகமாகச் சொல்லிப் பெற்றோரிடம் வாங்கக் கூடிய பணத்தை முன்னுரைத்துக் கேட்பார்கள்; பெற்றோரும் அதற்கு ஒப்புக் கொண்டு அவர்கள் பிள்ளைகளை உள்ளே அனுப்புகிறார்கள்; ஆனால் வரவாக வந்து சேர்ந்த பணத்தை வைத்துக் கொண்டு, ஏற்கனவே பெற்றோரிடம் முன்னுரைத்த செலவைச் (quoted expenditure) செய்யாமல், குறைந்த செலவே செய்து, இந்த பள்ளிப் பொறுப்பாளர்கள் இடையில் பொலுவெடுக்கப் பார்ப்பார்கள். இந்தப் போக்கு ஒப்பந்த மானுறுத்தல்காரர் செய்வதுதானே? "இத்தனை பெரிய விளையாட்டு வெளி, அகலமான கட்டடங்கள், வகுப்புகளின் நீள-அகலம், மாணவர் - ஆசிரியர் வகுப்பு வீதங்கள், உழையக ஏந்துகள் (laboratory facilities), நூலகம் என்றெல்லாம் சொல்லுகிறார்களே, இவையெல்லாம் முடிவில் இருக்கின்றனவா? அல்லது வெறும் மொம்மலாட்டமா?" என்று பெற்றோர்கள் எங்கே கவனிக்கிறார்கள்? கல்வியாண்டு தொடங்கினால், அடுத்தடுத்து வகுப்புத் தேர்வுகள், வடிகட்டல்கள், மனப்பாடம், வாந்தியெடுப்பு, காலாண்டு, அரையாண்டு, முடிவுத் தேர்வு எனக் கல்வியாண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்களை மட்டுமே பார்ப்பவர்களாய் ஆகிப் போகிறார்கள்; இது போக விதப்பு வகுப்புகள் (special classes), கூட்டுப் பயிற்சி வகுப்புக்கள் (coaching classes), இன்னும் ஏதேதோ, என்று பிள்ளைகளை வறுத்தெடுப்பதில் குறியாகிப் போனதை இந்த ஒப்பந்த மானுறுத்தல்காரர்கள் தங்களுக்கு வாய்ப்பாய் ஆக்கிக் கொள்ளுகிறார்கள்; எங்கெல்லாம் பணம் காய்க்குமோ, அங்கெல்லாம் பழுக்க வைத்துவிடுகிறார்கள்.

இந்தக் காலத்தில் பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது பணம், பணம் என்று ஒரே பாடாய்ப் போகிறது. எல்லா வருக்கத்தாரும், தங்களின் வரவு நிலைக்கும் மேலேயே பணம் கொட்ட வேண்டியிருக்கிறது. முன்னால் சொன்னது போல், ஒவ்வொருவரையும் பார்த்து இன்னொருவர் ஈயடிச்சான் படியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பணக்காரனைப் பார்த்து நடுத்தர வருக்கம்; அவனைப் பார்த்து தொழிலாளி வருக்கம்; அவனைப்பார்த்துச் சிலும்பைப் பாட்டாளி (lumpen proletariet) வருக்கம். இப்படி ஒரு குமுகாயத்தையே பைத்தியக்காரர்கள் ஆக்கிக் கொண்டு கல்வி வணிகர்கள் திரிகிறார்கள்; யாரும் ஒன்றும் சொல்லக் காணோம். ஆங்கிலக் கல்வி என்னும் கானல் நீரை நோக்கித் தமிழ்க் குமுகாயமே தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. முடிவில் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல், அறிவியலும் தெரியாமல், கணக்கும் போட வராமல், எதையெடுத்தாலும் ஒப்புவிக்கத் தெரிந்த பிள்ளைகளை, கிட்டத் தட்ட சொந்த புத்தியில்லாத சோணங்கி "இயந்திரன்"களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் ஒப்பந்த மானுறுத்தல்காரரிடம் தரம் என்பதை எப்படிக் கொண்டுவருவது?

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Sri Rangan said...

தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியக்துக்கு!


"தேசியம்,தேச இறைமையோடு தொடர்புடையது.இது திடமான முடிந்த முடிவுகளோடு இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும்.இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம் முற்போக்காகவும்,பிற்போக்காகவும் இருக்கிறது.தேசிய இறைமையின்றிப் பரந்துபட்ட மக்கள் வாழ்வையும,; அவர்களது பண்பாட்டுக் கருவ+லங்களையும் காப்பாற்ற முடியாது.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அதன் பொருண்மிய வாழ்வுக்கும் ஒரு சவாலாகும்.இதைப் புரட்சிகர அரசியலால் மட்டுமே எட்ட முடியும்.இது மட்டுமே தேசியத்தை முற்போக்காகக் கட்டமைக்கும்.மற்றெல்லாச் சூத்திரங்களும் மக்களைக் காவு கொள்ளும் குறுந் தேசிய வெறியாக மாறியே தீரும்!"


திரு.இராம.கி அவர்கள்தம் கட்டுரை ஒருபக்க உண்மையைப் பேசுகிறது.தாய் மொழிக் கல்வியின் அவசியமும்.அதுசார்ந்து கற்றலும் மிக மிக அவசியமானதுதாம்.ஒரு குழந்தையின் நினைவிலி மனதானது தாய்மொழியின் கற்கை நெறிகளுக்கமைய தீரத்துடன் கிரகிக்கும் ஆற்றலைப் பெறுவதை நாம் அறிவதற்கு எந்த வெளியுலகப் பண்டிதர்களையும் தேடி அலையத் தேவையில்லை.இதையறிவதற்கு நமது முன்னோர்களின் செழுமைமிக்கப் படைப்புகளையும்,இன்றைய நமது படைப்புகளையும் சீர்தூக்கி அணுகும்போதே இன்றெமது ஆற்றல்களை நாம் எங்ஙனம் இழந்துள்ளோமெனப் பார்க்க முடியும்.


கல்வி என்றைக்கும் அதிகாரத்தின் பாதுகாப்பு அங்கமாக இருந்து வருகிறது.அது இந்தப் புவிப்பரப்பின் எந்தப் பகுதியிலும் இதே நோக்கோடுதாம் இயங்கி வருகிறது.பண்டையக் காலமானாலுஞ் சரி அல்லது இன்றைய நவீனக் காலமானாலுஞ் சரி அதன் உள்ளடக்க நோக்கத்தில் எந்த மாற்றமும் கிடையாது.


இன்றையக் கல்வியானது சமூகத்தில் மனிதர்களின் நோக்கு நிலையிலிருந்து தீர்மானிப்பதாக எவரும் கற்பனையே செய்ய முடியாது.கல்வியென்பது இந்தவுலகத்தின் பொருளாதாரத்தின் தேவைகளுக்கேற்ப தகவமைத்து வழங்கப்படுகிற அன்றைய- இன்றைய நிலையானது மிகவும் கயமைத்தனமானது.இது மானுட வளர்ச்சிப் போக்குக்கமையத் தீர்மனிப்பதற்கேற்றவாறு தீர்மானிக்காது பொருளாதார உறவுகளுக்கேற்றபடி தீர்மானிக்கப்பட்டு,அதன் இருப்புக்கேற்ற கல்வியாகப் பரிமாறப்படுகிறது.இது மனித சமுதாயத்தின் அனைத்துப் பரப்புக்கும் வழங்கப்பட்டு மக்கள் சமுதாயத்தை அறிவுடைய நிலைக்கு உயர்த்துவதில்லை.இந்தக் கல்வியைத் தகவமைத்துக் கட்டிக்காப்பது எந்த நலன் என்பதைப் பார்க்காது நாம் அதன் சமூகவிரோதப் பரப்பை அறியமுடியாது.இன்றைய இந்த வர்த்தகச் சமுதாயமானது மிகவும் பின்தங்கிய சமூகப் பாத்திரத்தை வகிக்கிறது.இது இயற்கை விஞ்ஞானத்துக்குக் கொடுக்கும் பாரிய முன்னுரிமையைச் சமூகஞ் சார்ந்த-மக்கள் நலன் சார்ந்த சமூக விஞ்ஞானத்துக்கு வழங்குவதில்லை.மாறாக மன்னர்களின்,போர் குற்றவாளிகளின் வீர தீரக் கடந்தகாலக் கண்றாவிகளைச் சமூக விஞ்ஞானமாகக் காட்டிக் கதைவிடும் தரணத்தில் மக்கள் நலன் சார்ந்து புகட்டும் கல்வி இல்லாது போகிறது.


இந்தச் சந்தர்ப்பமானது மிகவும் திட்டமிட்ட அரசியல் பொருளியல் நலன்களின் தீர்மானகரமான திட்டமிடல்களோடு பின்னிப் பிணைந்து தோற்றுவிக்கப்படுகிறது.இத்தகைய தரணத்தில் நாம் எமது கல்விக் கொள்கை,அதன்மீது ஆதிக்கஞ் செய்யும் நலன்கள் என்பது பற்றிய சரியான மதிப்பீட்டை முன்வைத்தே கல்வி குறித்த மாயைகளை உடைத்தெறிந்து புதியவற்றை மக்கள் சமுதாயத்தின் நலன் நோக்கில் பேச முடியும்.


உலகத்தின் எந்தப் பாகத்திலும் கல்வியானது தனித்துவமான ஒரு செயற்பாடாக எதன்பொருட்டும் கட்டுப்படுத்தப்படாது, முற்றிலும் மக்கள் நலன்சார்ந்து இயங்கவில்லை.வருங்காலத்தில் "தாம் வந்தடையும்" நிலைமைகளைக் குறிவைத்தே கல்வி வழங்கப்படுகிறது.இன்றைய வர்த்தகத்தின் அதீதத் தேவைகளை நிறைவு செய்வதற்கான கல்வியை மட்டும் வழங்க முற்படும் சமூக வளர்ப்பு முறைகள் அந்தச் சமுதாயத்தின் ஆணிவேரான பொருளாதாரத்தின்மீது எந்தப் பங்கமும் வராத திட்டமிடல்களோடு இந்த உலகை எதிர்கொள்ள முனைகிறது.


இது எவரால்-ஏன் ,எதன்பொருட்டு இங்ஙனம் ஊக்குவிக்கப் படுகிறது?


இந்தக் கேள்விக்குச் சுருங்கக் கூறின்:இது முதலாளியக் கல்வி.அந்த வகையில் முதலாளியத்தின் நலன்களைப் பேணும் வர்க்க நலனே அதைத் தீர்மானிக்கிறது,தகவமைக்கிறது,கட்டிக்காக்கிறது.ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான கல்விக் கொள்கைகள் இருப்பினும்,அதன் உள்ளடக்கத்திலும்,எதிர்பார்ப்பிலும் மாற்றமில்லை.எனவே இதைத் தீர்மானிப்பவர்கள் முதலாளிகள்!-ஆளும் வர்க்கம்.


இங்கே ஒழுங்கமைந்தவொரு வர்த்தகம் தேசம் கடந்து நடைபெறுகிறது.அது கடந்த காலத்தைப் போன்று தேசிய எல்லைகளுக்குள் தமது நலன்களை,இலாபங்களைக் கனவு காணுவதில்லை.இன்றைய வர்த்தகத்தில் கல்வியின் பாங்கு மிகவும் முக்கியமானது.இது தேசம் கடந்த வர்த்தகத்தின் மிகையான தேவைகளைப் ப+ர்த்தி செய்வதற்கேற்றவாறு தீர்மானிகப்பட்டு- மக்கள் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்களுக்காவே திட்டமிடப்பட்டு, அவர்களை முதன்மைப்படுத்தி படைக்கப்படுகிறது.இந்தக் கல்வி எல்லோருக்குமான தனிச் சிறப்பான சட்ட திட்டங்களை வெறும் சட்டவாதத்துக்குள் மட்டுமே நிலைநிறுத்தி வைத்திருக்கிறது.நடைமுறையில் அது மிகவும் ஒடுக்குமுறையானது.அது உழைப்பவர்களுக்கு எட்டாக் கனியாகப்பட்டு மேட்டுக் குடிகளின் தனிச் சொத்துடமையாகக் காப்பாற்றப்படுகிறது.வளர்ச்சியடைந்த மக்கள் சமுதாயத்தின் இன்றைய நவீனத்துக்குப் பின்பான காலக்கட்டமானது புவிப்பரப்பில் பின்தங்கிய மக்கள் சமுதாயத்தை வெறும் பொருள்சார்ந்த உறவுகளோடு மட்டுமே இனம் காணுகிறது.இந்த இனம் காணலில் நம்மை அவர்களது ஜந்திரத்தின் ஒரு உறுப்பாகவும,; எந்த நேரத்திலும் இந்த உறுப்பைக் கழட்டி வீசமுடியுமெனும் மனப் பாங்கோடுதாம் சகல கல்விக் கொள்கைகளும் நமது சமுதாயத்தை வந்தடைகிறது.நமக்காக முன் மொழியப்படும் இன்றைய கல்விக் கற்கை நெறிகளைத் தீர்மானிப்பவர்களே சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும்தாம்.


இவர்களிடமிருந்து உள்வாங்கப்படும் நமது தேசத்தின் கல்விக் கொள்கைகள் மக்கள் சமுதாயத்தின் நலன் நோக்கில் எந்தச் சந்தர்ப்பத்திலும் திட்டமிடப்படமாட்டாது.இது அராஜகமானவொரு சமூக விரோதப் போக்காகும்.இந்தச் சமூக விரோதிகளின் மடியில் கிடந்துகொண்டு அதை(கல்விக் கொள்கை-மக்களுக்கும் கல்விக்குமுள்ள எதிர்பார்ப்பை) மாற்றிவிடத் துடிக்கும் நமது கல்வியாளர்களால் எப்போதும் ஆரோக்கியமான கல்வியை மக்கள் நலனின்பொருட்டுத் திடமாக வலியுறுத்த முடியாது.


பாடசாலைகள்,பேராடும் பல்கலைக்கழகங்கள் யாவும் இந்தவுலகத்தின் அதிகார வர்க்கத்தின்-ஆளும் வர்க்த்தின் கருத்தியல் தளமாகும்.அது தான் சார்ந்து இயங்கும் சமூகப் பாத்திரத்தை முதன்மைப்படுத்தியே அனைத்து வழங்களையும் குவிக்கிறது.இங்கே நடைபெறும் பேரதிர்ச்சியான சமூக அழிப்பு வெறும் போராக நடைபெறுவதில்லை.அது மாறாக மக்கள் மனங்களைக் காயடிப்பதாக வீரியத்தோடு கருத்தியல் யுத்தமாக நடை பெறுகிறது.


உலகத்தின் இன்றைய அதீத வர்த்தகத் தொடர் விருப்புறுதியானது ஒழுங்கமைந்தவொரு கலாச்சாரத் திணிப்பை வற்புறுத்துகிறது.இது நுகர்வுச் சந்தையின் அதீத விருப்புக்கும், வாங்கும் திறனுக்கும் ஏற்றவாறு கல்வியைத் தீர்மானிக்கிறது.இந்த நோக்கோடு மாறிவரும் வர்த்தகச் சூழலானது ஒரு மக்கள் கூட்டத்தை எந்த முரண்பாடுகளுமற்றவொரு பாரிய பண்பாட்டொருமை(நுகர்வுக் கலாச்சாரம்)யோடுகூடிய திசைவழி நோக்கி உந்தித் தள்ளுகிறது.அதற்கேற்றவாறு ஒரு மொழி வழிப்பட்ட கல்வியையும்,அதுசார்ந்த அகப் புறப் பண்பாட்டுருவாக்கத்தையும் குறிப்பட்ட முறைமைகளுக்கமைய உருவாக்கிவிட்டுள்ளது.


எல்லோருக்கும் கல்வியை-வளர்ச்சியை பகிர்ந்துகொள்ள முடியாதவொரு மனித ஆற்றலானது வெறும் பொருள் சார்ந்தவுலகோடு தன்னைக் காட்டிப்போடும் இன்றைய நிலையில், எந்த இனமும் தமது பாரம்பரிய மொழியையோ அல்லது பண்பாட்டு விழுமியங்களையோ அல்லது ஒரு நாடு தனது தேசிய அலகுகளையோ காப்பாற்றிவிட முடியாது, திணறுகிற இன்றைய அவமானமிக்க உலக அரசியலில் நாம் இதை இனம் கண்டு போராடுவதற்கேற்ற மாற்றீடாக எதை முன்னிறுத்துகிறோம்?


வெறும் மேம்போக்கான மனவிருப்பு கல்விக் கொள்கைகளை மாற்றிட முடியாது.இங்கே திடமான தேச,பொருளாதார,மக்கள் நோக்கு நிலைகள் புரட்சிகரமான முறையில் உருவாக வேண்டும்.அது முற்றிலும் மனித சமுதாயத்தின்-குறிப்பிட்ட இனங்களின் பாரம்பரிய மொழி,பண்பாட்டு வாழ்வோடு பின்னிப்பிணைந்ததாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு மக்கள் இனங்களும் தமது நலன்களை வெறும் பொருளாதார நலன்களுக்கமையத் திட்டமிடாது முழுமொத்த மக்களுக்குமான நலன்களைத் திடமாக மதித்துச் செயற்படுவதற்கேற்ற போராட்டமும் அதிகார மாற்றமும் அவசியமானது.அநுகூலமானவொரு சூழல் இல்லாதபோது அதைத்தேடிச் சூழ்நிலைகளை உருவாக்கும் போராட்ட யுத்திகள் இன்றிக் கல்வியையோ அல்லது மற்றெந்த உரிமைகளையோ மக்கள் நலன் சார்ந்த நோக்கில் நம்மால் படைக்க முடியாது.


தாய்மொழிக் கல்வியின் இன்றைய குழப்பகரமான பாத்திரம் தடீரெனத் தோற்றம் பெற்றதில்லை.இது திட்டமிட்ட அரசியலின் விளைவு.இதை நாம் பற்பல சந்தர்பங்களின் இனம்கண்டபோதும் "மேட்டுக்குடி மனதான நமது கல்விப் பெருந்தகைக் காரூண்யம்" இதை எதிர்பதற்கு வக்கற்று,வசதியுள்ளவனுக்குக் கல்வியென வாய் கிழியக் கத்துகிறது.இங்கே எந்தத் தனிநபர் முன்னெடுப்பும் இதைத் தோற்கடிக்க முடியாது.நாம் மக்கள் நலனின் அடிப்படையில் திரட்சியுற்றுத் திடமானவொரு போராட்ட இலக்கை முன்வைத்துப் போராடாமல் வெறும் திராவிடப் பாரம்பரியத்தின் போராட்ட அணுகுமுறையால் தமிழையோ அல்லது அது சார்ந்த வாழ்வையோ காத்துவிட முடியாது.அல்லது "இப்படிப் போய்விட்டார்களே மக்கள்!"என்று ஆதங்கப்பட்டு மக்கள் மீது குறை காண்பதால் ஆவது ஒரு மண்ணுமில்லை.


மக்கள் எப்போதும் தமது வயிற்றுப்பாட்டுக்கே முன்னுரிமை வழங்குவார்கள்.இதை எந்தப் பேய் சாத்தியப்படுத்தினாலும் அந்தப் பக்கம் மக்கள் போவார்கள்.இதை எம்.ஜீ.ஆர். அரசியல் வெற்றியில் நாம் மிகுதியாக இனம் காணலாம்.ஏன் இன்றைய கருணாநிதி அவர்களின் வெற்றியிலும் "அரிசி அரசியலே"வெற்றி பெற்றது என்பதை அவரது பழுத்த சாணக்கியத்திலும்,அவர் ஆற்றும் திடீர்ச் செயற்பாடுகளிலும் நாம் மாசறுவின்றியுணரமுடியும்.


தொடர்ந்து எல்லையில்லாது இயங்கும் நிதி மூலதனத்தில், தேசங்களின் இறைமையே இல்லாது போனபின் அந்தந்தத் தேசங்களின் தேசிய அலகுகள்(தேசயிறமை,பண்பாடு,வாழ்வியல் மதிப்பீடுகள்,மொழி,ஆத்மீகக் கட்டுமானங்கள்,கல்வியெனும் இன்னபிற...) மட்டும் எங்ஙனம் உயிர் வாழ முடியும்?


தமிழ் இனி மெல்லச் சாகும்!-அது சார்ந்த எந்த வாழ்வியல் மதிப்பீடும் நீண்ட ஆயுளோடு நிலைத்திருக்க முடியாது.


"மம்மி,டாடி"க் குஞ்சுகளும்"தாயே-ஐயா"பிச்சைக் குஞ்சுகளும் ஒத்த கயிற்றால் கட்டுண்டு கிடப்பது இந்த சர்வதேசிய வர்த்தக மொழியான ஆங்கிலத்தில்தாம்.இதுதாம் வர்த்தகச் சமுதாயத்தின் இன்றைய விய+கத்துக்குக் கிடைத்த பாரிய வெற்றி.இது திடீர் வெற்றியல்ல.அமெரிக்காவின் திட்டமிட்ட வர்த்தகக் கலாச்சாரப் போராட்டத்தின் நெடுநாளைய முன்னெடுப்பின் வெற்றியாகும்.கொலிவ+ட்டின் திடமான காய் நகர்த்தல் இந்த வெற்றியைக் கனிய வைத்தது,இது முதலாளியத்தில் மிக முன்னேறிய கருத்தியல் தளங்களில் ஒன்றாகும்.


நாம் வாழும் சமுதாய நிலைமைகளை விளங்குவது மட்டுமல்ல அதை மாற்றியமைக்கும் திட்டத்தை வலியுறுத்திக் கொண்டேதாம் இத்தகைய நிலைமைகளை நாம் பேசமுடியும்.எமது எதிர்கால இருப்பே இந்த வகைப் போராட்டவுணர்வோடுதாம் சாத்தியமாகும்.இங்கே மொழியையும் அது சார்ந்த பண்பாட்டையும் புரட்சிகரமான அணுகுமுறைகளோடு பொருத்தும்போது மட்டும்தாம் நாம் காத்துவிட முடியும்.இதற்காக நாம் பற்பல நடைமுறைகளைத் திட்டமிட வேண்டும்.இதை ஈழத்தில் நாம் மெலிதாக இனம் காணமுடியும்(புலிகளின் வரலாற்றுத் திரிப்புகளை நாம் பேசவில்லை).எனினும் அந்த மண்ணில்கூட ஆளும் வர்க்கம் புரட்சிகரத் தன்மையற்று, வர்த்தகச் சமுதாயத்தை முறியடிப்பதில் நோக்கற்று, அதனோடு சமரசஞ் செய்து அதனோடு ஐக்கியமாகும் நிலையில்... இத்தகைய சிறிய முற்போக்கான நடைமுறைகள்கூட இறுதியில் தோல்வியைத் தழுவும்.தமிழ் வழி வாழ்வு மெல்லப் பொருட்காட்சிச் சாலைக்குப் போய்க் கொண்டு இருக்கும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
09.07.2006