Saturday, October 08, 2022

தினம்

 "தினம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?" என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் ஒரு நண்பர் கேட்டார். ”அது கடன் சொல்” என்றே எல்லோரும் சொன்னார்.  சங்கதத்திற்கு அடிபணியும் போக்கு நம்மில் ஊறிக் கிடக்கிறது போலும். உண்மை அதுவல்ல. குறிப்பிட்டசில கற்களையோ, மரங்களையோ ஒன்றோடு ஒன்றைத் தேய்த்துப் பெற்ற பொறியால் தீ என்பது மாந்தருக்குக் கிடைத்தது. தேய்>தீய்>தீ என்பது தமிழ் மூலம் கொண்ட சொல். எவ்வளவு குட்டிக்கரணம் அடித்தாலும் இது சங்கத ஊற்றுக் காட்டாது. இந்தச் சொல் தமிழில் ஒளிக்கும் பயனுற்றது. 

தீ-தல் என்ற வினைச்சொல் தீ என்னும் பெயரிலிருந்து எழுந்தது. தீ-தல் என்பது , தீய்ந்து போதல் என்ற சொல்நீட்சியை அடுத்து உருவாக்கும். தீய்ந்து போதல் என்பது பேச்சு வழக்கில் தீய்ஞ்சுபோதல், தீந்தல், தீஞ்சல் போன்ற பல வடிவங்களை உருவாக்கும். இவை எல்லாம் தமிழே. இது வடபால் மொழிகளில் கடன் போகையில் தீன்>தின் என்று திரிவுறும். சொல்லின் தோற்றத்தை மறந்துபோன நாம் மீளக் கடன்வாங்கி தினம் என்ற சொல்லை உருவாக்குவோம். ஒளி நிறைந்த பொழுது என்று அதற்குப் பொருள். 

தின் என்னும் திரிவு  தமிழ்மூலங் கொண்ட சொல். வடபால் மொழிகளில் இது பெரிதும் பயனானது. மறவாதீர். இது சங்கதமூலம் கொண்டதல்ல. பல தமிழ்ச் சொற்களை, வடபால் மொழிகளுக்குக் கொடையாய்க் கொடுத்துவிட்டு :நாள் மட்டுமே தமிழ்ச்சொல்” என்று இன்று நாம் சொல்லிக் கொள்வது நம் அடிமைத் தனம். day எனும் ஆங்கிலச்சொல் கூடத் தேய்>தீய்>தீ யோடு தொடர்பு கொண்டது. ஒளியுள்ள பொழுது என்று அதற்குப் பொருள்.  

தெய்வம், தேவன் , தீவு>தீபம்  போன்ற சொற்கள் கூட நம் தீ-யில் உருவானவை தாம்.

  


No comments: