Wednesday, April 10, 2019

கொல்/பொன் - 2

பொல்லெனும் வேரில் ஒளி/பொலியெனும் கருத்தும் பொன்னெனுஞ் சொல்லும் ஏற்பட்டன. பொலமென்றாலும் பொன்னே. (ஏராளமான சங்கத்தமிழ் வரிகளுண்டு. வேந்தனரசைக் கேட்டால் அடுத்தடுத்து விவரிப்பார்.) தகதக வென ஒளிர்ந்ததால் தங்கமானது. கொல்லெனும் மஞ்சட்பொருட் சொல்லும் அதற்குப் பயன்பட்டது. கொல்லின் தொடர்ச்சியாய் ஒருமலைக்கே கொல்லி யெனப் பெயரிட்டார். அடுத்து நாம் காணவேண்டியது, பொன்னெனும் விதப்புச் சொல்லுக்குப் பொதுமைப் பொருள் எப்படியேற்பட்டது என்பதாகும். தமிழில் (மட்டுமல்ல, பல மொழிகளிலும்) விதப்புச் சொல்லே முதலில் உருவாகும்.. பின் பயன்பாட்டில் கொஞ்சங்கொஞ்சமாய் பொதுமைப் பொருள் பின் வந்துசேரும். இவ்வழக்கத்தை ”மொழியியல் விதி” என்றே சொல்லலாம்.

காட்டாக, மாட்டுப்பாலில் திரளுங் கொழுப்பை நெய்யென்போம் [நுள்>நெள்> நெய்; தோலில் ஒட்டினால், நெருங்கித் தங்கினால், சட்டென நெய் விலகாது. நெடுநேரம் நீரில் அலசினாலும் போகாது நிலைக்கும். சிகைக்காய்த் தூள்போல் ஏதேனுமிட்டு அலசினாற்றான் விலகும். பழம்மாந்தனுக்கு அதுவே வியப்பு ஆகும். சிகைக்காய்போல் ஒன்றை அறியும்வரை நெய்யின் ஒட்டு/நெருக்கம் உள்ளத்தில் தைக்கும். அந்நெருக்கத்தைத் தொடுவுணர்வில் அவனுணர்வான். அதிற்கிளைத்த விதப்புச்சொல் நெய்.] மாட்டுப்பாலில் பெற்றதுபோல் மற்ற விலங்குகளிலும் நெய் பெற்றபின், மாட்டுவிதப்பில் (from the specificity of cow) இருந்து முதல்நிலைப் பொதுமைப்பொருள் வந்தது. (மாட்டிலிருந்து எல்லா விலங்கிற்கும் வந்த பொதுமை.) விலங்குநெய்க்குக் பழகியவன் அடுத்து எள் விதையிற் பெற்றநெய்யை ”எள்நெய்” என விதப்பான். அடுத்தவளர்ச்சியில் மற்றபருப்புகளில் நெய்பெற்றபோது, எள்நெய்>எண்ணெய் என்னும் விதப்புச் சொல் இரண்டாம் நிலைப் பொதுமைப்பொருள் கொள்ளும்.

அடுத்த வளர்ச்சியில் கடலை எண்ணெய், புங்க எண்ணெய், விளக்கு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்ற சொற்களில் பொதுமைப்பொருள் விரிந்தது. உள்ளே மறைந்துநின்ற எள்ளை இப்போது யார் நினைவுகூர்கிறார்?! நல்லெண்ணெய் என்கிறோமே அது good oil ஆ? இல்லை. எண்ணெய் பொதுமை ஆனபின் நல்ல என்பதைச் சேர்த்து விதப்பாக்கிய சொல். நல்ல= கருத்த. கருத்த எள்ளில் பெறப்படும் எள்நெய் நல்லெண்ணெய். (எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என 3 பிரிவுகளுண்டு. கருப்பு எள் அதிக மருத்துவப் பண்பு கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து உண்டு என்பார். வெள்ளை, சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதாம்.) இன்று கருத்த எள்ளில் மட்டுமின்றி எல்லா எள்ளிலும் எள்நெய் எடுக்கிறார். ”மரச்செக்கு” என்பதே அடையாய் மிஞ்சுகிறது. 

இன்னும் அடுத்தவளர்ச்சியில் தாவர எண்ணெய்க்கு மட்டுமின்றி பாறை/கல்/மண்ணில் பெறும் எண்ணெய்களுக்கும் பாறை(எள்)நெய், கல்(எள்)நெய், மண் (எள்)நெய் என்போம். மொழிவளர்ச்சி என்பது இப்படித்தான் பெரும்வியப்பு ஆகும். மக்கள் சிந்தனையோட்டத்தை யாரளக்க முடியும், சொல்லுங்கள்? காலம் ஓட ஓட, விதப்புப்பொருள் பொதுப்பொருளாகும், மீள வேற்றுருவில் விதப்பாகும். இப்படி மாறிமாறி, இயங்கியலில் (dialectics) சொல்வது போல் (எதிர்களின் ஒன்றிப்பாய் மீண்டும் எதிர்களாய் - unity of opposites and one becoming into oppoosing twio) நீள்சுருளில் (helical) சொல்வளர்ச்சி மொழிகளில் ஏற்படுகிறது. பொன்னிற்கும் அப்படியொரு வளர்ச்சி தமிழில் ஏற்பட்டது.

[இன்னொரு மொழியியல் விதியையுஞ் சொல்கிறேன். எங்களூரைச் சேர்ந்த திரு, பக்கிரிசாமி ”அறுபுலன் சொற்கள் ஐம்புலன் சொற்களிலிருந்தே தொடங்கும்.” என்பார். நல்லது, கொடியது, பண்பு, சிறப்பு, அறம் போன்ற கருத்துமுதற் சொற்களை (conceptual words; இவற்றை அறுபுலன் சொற்கள் என்பார்) ஐம்புலன்களால் (கண்ணால், காதால், மூக்கால், வாயால், தொடு உணர்வால்) அறிய ஒண்ணுமோ? How does a conceptual word form? எண்ணிப் பாருங்கள். நெல்லை ஐம்புலனால் அறியலாம். நெல்லிருந்தால் அரிசி. அதன் வழி சோறு. நாம் பசியாறலாம். பசியாறினால் மனம் அமைதி யுறும். அதனால் தான் ”நல்”, ’நெல்லிற் பிறந்திருக்குமோ?’ என ஐயுறுகிறோம். சென்னையில் சிலகாலம் நான் வசித்தபகுதி சோழகங்க நல்லூர். அது பல்லவ அரசரால் பார்ப்பனர் அல்லாதாருக்குத் தானமாய்க் கொடுக்கப்பட்டது. ஏரிவேளாண்மை இருந்த ஊர். இங்கே நெல்லூர்>நல்லூர் ஆயிற்று. இது போல் தமிழகமெங்கும் பல நல்லூர்கள் உள்ளன. அவையெல்லாம் நெற்பின்புலம் காட்டுகின்றன.

இன்னொன்றையும் பார்க்கலாம். இப்போது நான் சென்னையில் வசிக்கும்பகுதி திருமங்கலம். இது பார்ப்பனருக்கு பல்லவ அரசன் தானமாய்க் கொடுத்த ஊர் இது மங்கல்>மங்கள்>மஞ்சளில் பிறந்த சொல். கொடுவெனும் தின்மைப் பொருள் வளைவுகுறிக்கும் கொடு”வெனும் ஐம்புலன்சொல்லில் கிளைத்தது, பண்பெனும் அறுபுலன்சொல் பள்>படு எனும் ஐம்புலச்சொல்வழி to set பொருளில் கிளைத்தது. எல்லோரும் போற்றும் அறுபுலன் சொல்லான ”அறம்” எப்படிப் பிறந்தது? வெட்டொன்று துண்டிரண்டாக கொள்கை, சட்டம், ஆணை, என அறுத்ததில் பிறந்தசொல் அறம் (அறுத்தல் என்பதை ஐம்புலனால் அறிய முடியும் தானே?) இதுபோல் ஒவ்வொரு அறுபுலன் சொல்லிற்கும் பின் ஓர் ஐம்புலன் சொல்லுங் கருத்துமிருக்கும் அதைச்சரியாய் அடையாளங் காண்பதிற்றான் நாம் பலநேரம் தவறுகிறோம். நம் சிந்தனையில் பொருள் முதல் வாதம் தொலைத்துக் கருத்துமுதல் வாதம் ஊடிவிடுகிறது. தடுமாறி விடுகிறோம். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? If you cannot feel it with your senses, you can never define it. A certain materiality has to stand at the back of every idea word.]   . 

சரி, பொன்னுக்கு வருவோம். முதலில் பொன் என்பது, ஒளிபொருந்திய தங்கத்தை, விதப்புப்பொருளை மட்டுமே முதலில் குறித்தது. பின் அதன் பொருள் விரிந்து மாழையெனும் பொதுப்பொருளைக் குறிக்கத் தொடங்கியது. தங்கால் பொற்கொல்லனார் காலத்தில் கொல்லிற்குப் பொதுப்பொருள் வந்து விட்டது போலும். நற்றிணை 13 இல் 6-7 ஆம் வரிகளில் “கொல்லன் எறி பொன் பிதிரின் சிறுபல தாஅய் வேங்கை வீ உகும் மலை” என்ற சொற்றொடரில் இதைச் சரியாயறியலாம். சூடாய்ச் சிவந்த மாழையில் சுத்தியலால் அடிக்கும் போது பொறிகள் தெறித்தெழுமே, அவற்றைப் ”பொன்பிதிர்” என்று புலவர் குறிக்கிறார். இது விதப்புத் தங்கமா? பொது மாழையா? அடுத்து வருவது,,

நல் இணர் வேங்கை நறுவீ கொல்லன்
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கிச்
சிறுப;ல் மின்மினி போல

எனும் அகநானூறு 202 ஆம் பாடலின், 5-7 ஆம் வரிகள். இங்கும் பிதிர்வு சொல்லப்படுகிறது, ”பிதிர்த்தல்” என்பது எல்லா மாழைகளுக்கும் ஏற்படலாமே? ”பொன்” இங்கே தங்கத்தைக் குறிக்கிறதா? ”மாழை” எனும் பொதுப்பொருள் அல்லவா குறிக்கிறது? இப்பொதுப்பொருள் வழக்கத்திற்றான் வெண்பொன் (வெளிர்ந்த பொன்), செம்பொன், இரும்பொன் என்ற சொற்கள் எழுந்தன. அகராதிகளிலும் இவையுள்ளன. காட்டுக்களையும் தேடமுடியும். ஒருமுறை நீங்கள் தேடிப்பாருங்களேன். சரி கொல்லிமலையில் கொல்/பொன் கிடைத்ததை எப்படிநாம் அறிகிறோம்? இளஞ்சேரல் இரும்பொறையை பதிற்றுப்பத்தின் 81 ஆம் பாடலில் 22-26 ஆம் வரிகளில் பெருங்குன்றூர் கிழார்.கீழ்க்கண்டவாறு சொல்வார். 
.
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயர்க் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை ஆயத்து
               
இதற்குப் பொருள் சொல்கையில் உரையாசிரியரிலிருந்து சற்றுநான் வேறு படுவேன். ”காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” = காந்தள்மாலை அணிந்த செழுங்குடிச் செல்வர். அதாவது கொழுத்த பணக்காரர். ”கலிமகிழ் மேவலர்” = ஆரவாரமும் மகிழ்ச்சியும் மேவியவர். பணக்காரன் மகிழ்ந்து கிடக்கும் போது தானே கொடை தருவான். ”இரவலர்க்கு ஈயும்”= இரவலர்க்குக் கொடுக்கும்..செல்வர் இங்கு என்னகொடுப்பார்? சொத்தா? இல்லையே? செலாவணியுள்ள பொற்காசுகள் தானே? அக்காலக் காசுகள் எல்லாம் தட்டை ஆனவை அல்ல. குன்றிமணி, கழஞ்சு, காணம், வேப்பங்கொட்டை மாதிரிச். சற்று தட்டையான குண்டுருவம் (flattened spheroid) பெற்றும் இருந்ததாகவே பல சங்க இலக்கிய வரிகள் சொல்கின்றன.

இக்காசுகள் எப்படியிருக்கின்றனவாம்? என்று பெருங்குன்றூர் கிழார் இரு மலர்களை உவமிக்கிறார். கொல்லிமலையில் வண்டுகள் மொய்க்கும் பெருவாய் மலரும் (இருவாட்சி), பசும்பிடியும் (இக்காலப் ”பசிய மஞ்சள்” நிறங் கொண்ட மனோரஞ்சிதம்) இவ்வகைத் தங்கத்திற்கு கிளிச்சிறை என்றொரு பெயர்சொல்வர். மின் உமிழ்ந்ததுபோல் இருந்ததாம். மின் = ஒளி;. தங்கம் நிறைந்த செல்வர்களின் ஆயம் இங்கே “சுடரிழை ஆயம்” எனப்படுகிறது. கொல்லியில் தங்கம் நிறையக் கிடைத்ததால், கொல்லித்தங்கத்தை பெருவாய் மலருக்கும், பசும்பிடிக்கும் புலவர் உவமிக்கிறார். இரண்டும் இயற்கையில் கிடைப்பன. தங்கமும் இயற்கையில் கிடைப்பது. கொல்லிச் செல்வருக்கு தங்க்கம் அதிகமாகவே கிடைத்தது. ஏனெனில் திறந்த கட்டுச் சுரங்கம் (open cast mine) அங்கிருந்தது.

(தங்கத்தில் 4 வகையுண்டு. முதல்வகை, சாதரூபம்- பிறந்தபடியே இயல்பாய் இருப்பதற்குள்ள பெயர். இரண்டாவது, கிளிச்சிறை- கிளிச்சிறகுபோல கொஞ்சம் பசுஞ் (பச்சைச்) சாயல்கொண்ட பொன்; மூன்றாவது, ஆடகம்- கொஞ்சம் குங்குமச்சாயல் கொண்டது; ஆடகன்= பொன்னிறமுடைய இரண்யகசிபு, ஆடகமாடம் = பொன்பதித்த உப்பரிகை. திருவனந்தபுரப் பெருமாளை ஆடகமாடத்துப் பெருமாளாய்ச் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் சொல்வார். நாலாவது, சாம்பூநதம்= ஒளிசாம்பி, மங்கிப்போன பொன். மேலே சாதரூபம், சாம்பூநதம் ஆகிய இரண்டும் வடமொழி வடிவில் இருப்பது மனதிற்கு ஒரு மாதிரியாய் இருக்கும்; என்ன பண்ணுவது? இடைக் காலத்தில்,நம்மவர் அளவுக்கு மீறி வடமொழியைப் பயன்படுத்தினார். இதுக்கெல்லாம் தமிழ் எதுவோ, அது தெரியாமலே போனது.. வேண்டுமெனில் புதுப்பெயர் வைத்துக்கொள்ளலாம். என்னசெய்வது? தமிழில்பேசினால் இளக்காரம், தஸ்ஸு புஸ்ஸென்றால் உயர்த்தியென நினைக்கும் அடிமைப் புத்தி நம்மைவிட்டுப் போகவில்லையே!)

சரி சுரங்கம் அது இது என்று இராம.கி. சொல்கிறானே? அதற்கு ஆதாரம் என்ன? தாயங்கண்ணனாரால் அகநானூறு 213 ஆம் பாட்டில் 11-15 ஆம் வரிகளில் இவ் விவரிப்புச் சொல்லப்படும்.(தாயங்கண்ணனார் மாமுலனார் மாதிரி. பாட்டுள் வரலாறுச் செய்தியிலையெனில் அவருக்கு இருப்புக் கொள்ளாது. இவர் போன்ற புலவரால் தான் நம்மால் வரலாற்றை மீட்டெடுக்க முடிகிறது.) 

------------------------------------------பகல்செலப்
பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
பெருமரம் கொன்ற கால்புகு வியன்புனத்து
எரிமருள் கதிர திருமணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை

”பகல்முடிந்து கதிர்சாயும் நேரத்தில், பெருமரங்கள் வெட்டியதால் காற்றுப் புகும் அகன்றவனத்துள் எரிப்பதுபோல் கண்ணை மருட்டிக் கதிர்விடும் மணிக் கற்கள் இமைக்கும் சேரனின் கொல்லிக் குடவரை” என்று இவ்வரிகளுக்குப் பொருள்சொல்வர். ”பெருமரம் கொன்ற கால்புகும் வியன்புனம்” என்பது தெள்ளத்தெளிவாகச் திறந்தகட்டுச் சுரங்கமுள்ள இடத்தைக் குறிக்கிறது. இச்சுரங்கம் எப்படி உள்ளதாம்? அதில் தங்கக் கீற்றுகளும், மணிக்கற்களும் ஒளிவிடுகின்றனவாம். மறவாதீர். இருள்மங்கும் நேரம். ”எரிமருள் கதிர“ என்ற சொற்கூட்டு தங்கத்தை அன்றி வேறெதைக் குறிக்கமுடியும்? மணிகள் இருந்தால் அதை ”எரிமருள் கதிர” என்றுகுறிப்பாரா? மறவாதீர், தேய்த்துப் பாளபளப்பு ஏற்றாதவரை, பாடஞ் செய்யாதவரை, இயற்கையில் கிடைக்கும் மணிக்கற்கள் ஒளிவிடா. இங்கு ஒளிவிடுகிற காட்சி தெள்ளத்தெளிவாய்ச் சொல்லப்படுகிறது. திரு என்பது இங்கே பொற்செல்வத்தையும், மணி என்பது மணிக்கற்களையும் தான் குறிக்கின்றன.
       
இன்னொரு பாட்டில் (புறம் 156) 405 ஆம் வரிகளில் பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடும் போது ”பிறங்குமிசைக் கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்” என்பார் மிறங்குமிசை என்பது இளிபொருந்திய என்றுபொருள் பிறங்கு என்ற பெயரடை பொதுவாய் metalic lustre க்குத் தான் சொல்வது. 

நான் இன்னும் பல சங்க இலக்கிய வரிகளை எடுத்துக் கூறலாம் ஆனால் கொல்/பொன் பற்றிச் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேனென்று எண்ணுகிறேன். வேறேதும் தோன்றின் பின்னால் செய்வேன்,

அன்புடன்,
இராம.கி.

1 comment:

வேந்தன் அரசு said...

இங்கு "கொல்லன் எறி பொன் பிதிரின்" என்பது காய்ச்சிய இரும்புத்தூள். "தூண்டில்ப்பொன் மீன் விழுங்கியற்று. யாவரும் பார்க்கக்கூடியது இரும்பை காய்ச்சி அடிப்பது. தங்கத்தை அடிப்பதை நான் பார்த்ததில்லை.