Saturday, July 30, 2011

இலக்கியம் - இலக்கணம் - 3

"இன்னுஞ் சொன்னால் ஒருவேளை ஏற்கவே இயலாது போகலாம். இலுத்ததைத்தான் (>இழுத்தது) வெள்ளைக்காரன் இழுத்தர்>எழுத்தர் (letter) என்று சொல்லுவான். 'அதன் சொற்பிறப்பு எங்கேயிருந்து வந்தது என்று தெரியவில்லை' என்று அவர்கள் அகரமுதலியிற் சொல்லுவார்கள்."

mid-12c., 'graphic symbol, written character,' from O.Fr. lettre, from L. littera (also litera) "letter of the alphabet," of uncertain origin, perhaps from Gk. diphthera "tablet," with change of d- to l- as in lachrymose. In this sense it replaced O.E. bocstæf, lit. "book staff" (cf. Ger. Buchstabe "letter, character," from O.H.G. buohstab, from P.Gmc. *bok-staba-m). The pl. litteræ in Latin meant "epistle, written documents, literature," a sense first attested early 13c. in M.E., replacing O.E. ærendgewrit, lit. "errand-writing." School letter in sports, first awarded by U. of Chicago football coach Amos Alonzo Stagg.

"இதோடு நிறுத்த மாட்டார்கள். 'literature' என்று அவர்கள் ஊரிற் சொல்லுகிறார்களே, அதுவும் 'letter' என்பதில் இருந்து எழுந்தது என்று சொல்லுவார்கள்.

late 14c., from L. lit(t)eratura "learning, writing, grammar," originally "writing formed with letters," from lit(t)era "letter." Originally "book learning" (it replaced O.E. boccræft), the meaning "literary production or work" is first attested 1779 in Johnson's "Lives of the English Poets" (he didn't include this definition in his dictionary, however); that of "body of writings from a period or people" is first recorded 1812.

"நாமோ இலுக்குதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், இலுத்தல்>இழுத்தல்>எழுத்து என்ற விரிவிற்கும், இலக்கியம் என்ற சொல்லிற்கும் உள்ள உறவை ஐயப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்." .

இல்லுதல்>இலுங்குதல்>இலுக்குதல்>இலக்குதல்
இலுக்கு>இலக்கு = எழுத்து, குறி
இலக்குகளால் இயன்றது இலக்கு + இயம் = இலக்கியம்

"தம்பி நீ சொல்வது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஆனால் இலக்கியம் என்ற சொல் சங்க இலக்கியத்திலே இல்லையாமே?"

எழுத்து என்ற சொல் இருக்கு அண்ணாச்சி. அந்தப் பெயர்ச்சொல் எங்கிருந்தோ குதித்து வரவில்லை. அது இலுத்தலில் இருந்து ஏற்பட்ட வளர்ச்சி. வேறெப்படியும் எழுத்தென்ற சொல் எழ முடியாது. இலுத்தலில் இருந்து இன்னொரு வளர்ச்சி ஈல்தல். ஈலின் திரிவு ஈர்த்தல் என்றாகும். அந்த ஈர்த்தலும் எழுதுதல் என்ற பொருள் கொடுக்கும். கலித்தொகையில் ஒரே பாட்டில் இருவேறு சொற்களில் எழுதற் செய்தி வரும்.

நெய்தல் நெறிக்கவும் வல்லன்: நெடுமென்தோள்
பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன்’ இளமுலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்;தன் கையில்
சிலைவல்லன் போலும் செறிவினான்; நல்ல
பலவல்லன் தோளாள் பவன்

- (கலித் 143.31-35).”

”இங்கே ஈர்த்தல், எழுதல் என்ற இரண்டு சொல்லும் ஒரே பொருளைக் குறிப்பன. அதோடு இல்>ஈல் உறவையும் குறிப்பன. இல்லில் இருந்து எழுத்தும் இலக்கியம் ஓரெட்டுத் தான்.”
.
"அண்ணாச்சி, பொதுவாய்ச் சொல்கிறேன். சங்க இலக்கியம் என்பது நமக்குக் கிடைத்த தொகுதி. இதைக் கொண்டுதரப் பலர் உழைத்திருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவருக்குக் கிடைக்காமற் போனது ஏராளம். கிடைத்தும் தவறவிட்டது எக்கச் சக்கம். சங்க இலக்கியம் என்பதை ஏதோ அகரமுதலி மாதிரி நாமெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது. நம்முடைய ஆகூழ் அவ்வளவு தான். இருப்பதை வைத்து இல்லாததை ஊகிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் இல்லாது பிற்காலத்திற் புழங்கிய சொற்கள் உருவான காலம் எதுவென்று யாருக்குத் தெரியும்?"

"தம்பி, கடினமான கேள்வியைக் கேட்கிறாய். printed book salvation பார்க்கிறவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்களிடம் உன் ஏரணம் பலிக்காது. ஏதொன்றையும் அச்சிற் பார்த்தாற் தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்."

"அப்படியானால் பலவற்றையும் நிறுவுவது கடினம் அண்ணாச்சி. இப்பொழுது, ஒரு வினைச்சொல் சங்க இலக்கியத்திலிருக்கும். அதோடு பொருந்திய பெயர்ச்சொல் இருக்கவே இருக்காது. இயலுமையைப் பார்க்கக் கூடாது என்றால் எப்படி? அதே போலப் பெயர்ச்சொலிருக்கும். வினைச்சொல் நேரே கண்ணுக்குத் தெரியாது. எப்படி வந்தது என்று ஓர்ந்து பார்க்க வேண்டாமா? வினைச்சொல் இல்லாமல் பெயர்ச்சொல் எப்படியெழும்? ”மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்பது எப்படி? அப்பொழுது தொல்காப்பியம் தவறா? இலக்கித்தல் என்ற சொல் எழுதற் பொருளில் கி.பி.8 ஆம் நூற்றாண்டுச் சிந்தாமணியில் வந்திருக்கிறது. அதன் பெயர்ச்சொல் இலக்கியம் என்றில்லாது வேறு என்னவாய் இருக்க முடியும்.?"

"இவ்வுருவு நெஞ்செனும் கிழியின் மேலிருந்து இலக்கித்து” - சீவக 180

"எனக்குத் தெரிந்து சிந்தாமணி தான் இலக்கித்தல் என்ற வினையை முதலிற் குறிக்கும் எடுகோட்டு (reference) நூல். அதற்கு அப்புறம் 9 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில் இலக்கியம் என்ற சொல் வந்திருக்கிறது. அதிலும் ம் என்கிற எழுத்துப் பிழை ஏற்பட்டு உதாரணம் என்ற பொருளில் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த எழுத்துப் பிழை இயலுமையைக் கூடப் பலரும் ஏற்க மாட்டேம் என்கிறார்கள். சற்று விளக்கிச் சொல்கிறேன்."

"திவாகரம் 1834 ஆம் சூத்திரத்தில் இருந்து பாருங்கள். ஓர் ஒழுங்குமுறை தென்படும்."

"1834. நூல் என்பதன் பெயர் இங்கு கொடுக்கப்படுகிறது: திவாகரத்தில் இந்நூற்பா தான் மொத்த நூல் பற்றிப் பேசுவது. நூல் என்பது இலக்கியமாகவும் இருக்கலாம்; இலக்கணமாகவும் இருக்கலாம். அதிகாரம் என்ற முதற்சொல் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயரில் ஆளப்பட்டிருக்கிறது. ஆரிடம், பனுவல், ஆகமம், பிடகம், தந்திரம் ஆகிய சொற்கள் நூல் பற்றிய வேறு பெயர்களாய்க் குறிப்பிடப் படுகின்றன. இவைகள் எல்லாம் பொதுவான நூல்கள். விதப்பான “இலக்கியம்” என்று சொல்லமுடியாது. அதேபொழுது இலக்கியம் என்பதும் நூல் தான். ஆகமம் என்ற சொல் பாட வேறுபாட்டில் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது."

"1835. பாயிரத்தின் பெயர்: நூலின் முதற்பகுதி. நன்னூல், தொல்காப்பியம் போன்றவற்றில் வரும் முதற்பகுதி. இப்பொழுது நூலுக்குள் வந்துவிட்டோம். அடுத்திருக்கும் நூற்பாக்களில் வரப்போகும் பெயர்கள் நூலுக்குள் உள்ள பகுதிகளின் பெயர்கள். நூலைப் பற்றிய பெயர்கள் அல்ல."

"1836 மூதுரையின் பெயர்; இது பெரும்பாலும் பழைய உரை (commentary) என்றே பொருள் கொள்ள முடியும்."

"1837. பாடத்தின் பெயர்: பாடம் என்பது தான் ஆசிரியர் எழுதிய சரியான உண்மையான உள்ளீடு (proper actual content written by the author)."

"1838 நூற்பா - அகவலின் பெயர்: இது இலக்கணத்தில் வரும் விதப்பான சொல் நூற்பா - சூத்திரம். சூத்திரங்களால் ஆனது பாடம். பாடம், பாயிரம் போன்றவை சேர்ந்தது நூல். நூற்பா என்பது அகவல் யாப்பில் வரும்."

"1839 ஓத்தின் பெயர். இது நன்னூற் பாயிரத்தில் விளக்கப் படும். ஒரு குறிப்பிட்ட வரிசை (அல்லது தலைப்பு) பற்றிய நூற்பாக்களின் தொகுப்பு."

"1840 படலம் என்னும் பெயர். இதுவும் நன்னூற் பாயிரத்தில் வரும். வெவ்வேறு தலைப்புக்களின் அடியில் உள்ள நூற்பாக்களின் தொகுப்பு."

"1841 வேற்றிசைப்பா என்னும் பெயர். அகவலில் இருந்து மாறி விருத்த நடையில் இருக்கும் பாக்கள். இது சருக்க முடிவிலும் இலம்பக முடிவிலும் வரும் என்று கி.பி.8 ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டு நிலையை/வழக்கத்தைக் கூறுகிறது."

"1842 உரைப்பொருளின் பெயர்: விரித்துக் கூறும் உரைப்பொருள் பற்றியது."

"1843 பொழிப்பு என்னும் பெயர்; நூலுக்குள் வரும் நூற்பாக்களுக்கான பொழிப்பு."

"1844. பதிகம் என்னும் பெயர்: சிலப்பதிகாரத்தில் வருவது போன்ற பதிகம். கிட்டத்தட்ட உள்ளீட்டுச் சுருக்கம் (content summary)."

"இனி 1845 இல் இலக்கியத்தின் பெயர் வாராது. அது உண்மையில் இலக்கிய உதாரணம். அங்கே ம் என்பது ஏடெடுத்து எழுதுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய, இயலுகிற, மீச்சிறிய பிழை."

"இலக்கியம் உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய

என்று படிப்பதற்கு மாறாக,

இலக்கிய உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய

என்று படித்துப் பாருங்கள். முழுப்பொருளும் விளங்கும். இலக்கிய உதாரணம் என்பது இலக்கியத்துள் ஒன்றை எடுத்துக் காட்டலாகும். இந்தக் காலத்தில் உதாரணம் என்று யாரும் எழுதுவதில்லை. எடுத்துக் காட்டு என்பதும் கூடக் காட்டு என்று சுருங்கிவிட்டது. ஞாபகம் என்பதும் எடுத்துக் காட்டைப் போல் அமைவது தான். ஒன்றைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஞாபகம் வர, அதையும் எடுத்துக் காட்டைச் சொல்வது போல விளக்கத்தை வலுப்படுத்தும் நடையாய் அமையும். பிசி என்பது ஒருவகைப் புதிர், சோடிப்பு, விடுகதை. இதுவும் எடுத்துக்காட்டுப் போலத்தான் ஒன்றை விளக்கும் போது அமையும். (இந்தச் சொல் தென்பாண்டி நாட்டில் அகவை முதியோரிடம் அறியவேண்டிய சொல்.)"

"இந்த எடுத்துக் காட்டல், ஞாபகம், பிசி என்ற மூன்று பொருளும் ஒன்று போல் அமைந்திருக்க, இலக்கிய உதாரணம் என்பது முதற்சொல்லாக நூற்பாவில் “ம்” என்பது இல்லாது போயிருந்தாற்றான் சரியாக வரும். இலக்கியம் என்ற சொல் இங்கு குறிப்பிட்ட நூற்பாவில் பயன்பட்டிருக்கிறது. அந்த வகையில் இது குறிப்பிடத் தக்க பதிவு ஆனால் அது நூல் என்ற பொருளில் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. உதாரணம் என்ற பொருளில் அல்ல. அந்த 1845 ஆம் நூற்பாவை ஒழுங்காகப் புரிந்து கொண்டால் இலக்கியம் என்ற சொல் திவாகரத்தில் எடுத்தாளப் பட்டிருப்பது புரியும்."

"தம்பி, நிறையப் பேர் நீ தொட்டுக் காட்டும் எழுத்துப் பிழையை ஏற்க மாட்டார்கள்."

"அண்ணாச்சி! கிடுகுப் (critical) பொருக்கில் ஒரு நூலைப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் contextual reading என்பார்கள். எழுத்துப் பிழை இங்கு இருந்திருக்கலாம் என்று நான் உணர்த்துகிறேன். ஏற்பதும் ஏற்காததும் வாசிப்போர் உகப்பு. நான் சுவடியைப் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் எல்லோரும் வானுலகஞ் சேர்ந்துவிட்டார்கள். இருப்பவர்கள்தான் ஊகிக்க வேண்டும். 'வேண்டுமென்ற இடத்தில் பிழையிருப்பதாகக் கொள்வேன். வேண்டாமென்றால் மறுப்பேன்' என்றால் நான் சொல்ல என்ன இருக்கிறது?"

"சரி விடு. இலக்கியப் படிப்பில் இதுவோர் இக்கு"

"இலக்கியம் என்ற சொல்லிற்கு இன்னோர் இக்கு எடுத்துக்காட்டுகிறேன் அண்ணாச்சி."

"திருவாசகம் 51 பகுதிகள் கொண்டது தில்லை நடவரசன் திருமுன்னில் இறைவனே செப்பேட்டில் எழுதிப் படியில் வைத்ததாய் ஒரு தொன்மமுண்டு. அந்தச் செப்பேடு எங்கு போனதோ, யாருக்கும் தெரியாது. இப்பொழுது நாம் படிக்கும் திருவாசகம் செப்பேட்டில் இருந்து பெறப்பட்டதாய்த் தெரிய வில்லை. காலகாலமாய்ச் சுவடியிலெழுதி 100, 150 ஆண்டுக்கொருமுறை ஏடு பெயர்த்துத் தான் திருவாசகம் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே அதிலும் சில்லேடுகள் செல்லரித்துப் போய், சில பதிகங்கள் குறைப்பாடலோடு வந்து சேர்ந்தன. அதாவது சில குறைப்பாடல்களில் எழுத்துப் பிழைகள் இருந்தோ, எழுத்துக்கள் இல்லாதிருந்து அவ்விடத்தில் எழுத்துக்கள் பெய்தோ, வந்து சேர்ந்திருக்கின்றன. திருமந்திரத்தில் செம்பதிப்பு வந்தது போல சுவடிகள் ஒப்பிட்டு செம்பதிப்பு வெளியிட்ட திருவாசகத்தை நான் பார்த்ததில்லை."

"திருவாசகத்தில் 48 ஆவது பகுதி ’பண்டாய நான்மறை’ என்னும் பதிகம் அதுவொரு குறைப்பத்து. ஏழு பாடல்கள் தாம் உண்டு. ஏழாம் பாடல் மிகவும் பேர் பெற்றது ஏனென்றால் அதில் மணிவாசகர் ’மணிவார்த்தை’ என்ற சொல்லால் தன் பெயரை வெளிப்படுத்திக் கொண்டதாய்ப் பலரும் ஊகிக்கிறார்கள். முதலிற் பாடலைப் பார்ப்போம்"

பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து

- திருவாசகம் பண்டாய நான்மறை 48.7

”இந்தப் பாட்டிற்குப் பொழிப்பு என்ன தெரியுமா? ’பேசும் பொருளுக்கு இலக்கிதமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்.’ என்ன சொல்லுகிறார் மாணிக்க வாசகர்? அதுவென்ன இலக்கிதம்? நானும் துருவித் துருவிப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. இந்தவொரு பாட்டைத் தவிர இலக்கிதம் என்ற சொல் தமிழில் எந்த நூலிலும் எங்கும் வரவில்லை. அதனாலேயே அகரமுதலிகளில் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டு அந்த அகரமுதலியில் எடுத்துக் காட்டாய்க் குறிக்கப் பெற்றிருக்கிறது. எந்தப் பொருளும் சொல்லப்படவில்லை. நான் மயங்காது இருக்க முடியவில்லை"

"நான் இளமையில் பொறியியல் முதலாண்டிற் படிக்கும் போது, எங்களுக்குக் குடிமைப் பொறியியல் (civil engineering) சொல்லிக் கொடுக்கும் போது சாலை போடுவதற்கான சல்லிக்கல் (road metal) பற்றிச் சொல்லித் தரவேண்டும். எங்கள் ஆசிரியருக்கு ஆங்கிலம் சற்று வாராது. இப்படித் தொடங்குவார். “Road metal is ......" கொஞ்ச நேரம் இடைவெளி கொடுத்து நிறுத்துவார். திடீரென்று "road metal" என்று முடித்து எங்களைபெல்லாம் பார்த்துப் புன்முறுவல் செய்வார். அவர் road metal என்பதை எங்களுக்கு விளக்கிவிட்டாராம். அந்த நிலை தான் இங்கு அகரமுதலியில் இலக்கிதம் என்ற சொல்லைப் பார்த்தால் எனக்கு ஏற்படுகிறது. ”இலக்கிதம் என்பது இலக்கிதம். Road metal is road metal." இப்படி விளக்கம் சொல்வதற்கு ஆங்கிலத்தில் அதாகுவியல் (tautology) என்று பெயர். அதை அதாலே விளக்குவது."

"மாறாக இலக்கிதம் என்பதை எழுத்துப் பிழை என்று கொள்ளுவோமே? தகரத்தை யகரமாய்க் கொண்டால் என்னவாகிறது?"

பேசும் பொருளுக்கு இலக்கியமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து

"இப்படிப் பாட்டிருந்தால் பொருள் என்னவாகும்? ”பேசும் பொருளுக்கு இலக்கியமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்” என்ற பொருள் மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது. பேச்சுக்கு மீறிய மணி வார்த்தைகள், பேசும் பொருளுக்கு இலக்கியமாய், குறிக்கோளாய் அமைகின்றதாம். சிவநெறிக்கு திருவாசகம் இலக்கியமாய் அமைகிறது. பிறப்பறுத்தல் என்றால் வீடுபேறு. அவருடைய சமய வாழ்வின் உச்ச கட்டம். அந்த இடத்தைச் சொல்லும் போது குறிக்கோளைச் சொல்லுகிறார். இலக்கியம் என்கிறார். இலக்கியம் என்ற சொல்லின் முழுப்பொருளும் எழுத்து, குறி (அடையாளம்) ,இயல்பு, ஒழுங்கு எல்லாம் வந்து சேருகிறதே?."

"இப்படிச் சரியான பொருள் கிடைக்கும் போது இலக்கிதத்தை எடுத்துக் கொள்வேனா? இலக்கியத்தை எடுத்துக் கொள்வேனா? தகரமா? யகரமா? - என்று கேட்டால் ”எனக்குத் தெரியாது. யகரமாய் இருந்தால் புது வரையறை தேவையில்லை. இருக்கும் வரையறையை வைத்தே பொருள் சொல்லிவிடலாம்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. சரி இதை மணிவாசகர் காலம் எதுவென்று சொல்லலாம்?"

"மாணிக்கவாசகர் வரலாற்றைக் குழப்பிக் கொள்பவர் பலர். அவர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்று சொல்லிப் பின்னுக்குத் தள்ளுபவரும் உண்டு. இல்லை அவர் தேவார மூவருக்கும், கல்லாடருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் முந்தியவர் என்று சொல்லி அதை நிறுவ முயன்ற மறைமலை அடிகளாரும் உண்டு. அளவுக்கு மீறிய சிவநெறித் தாக்கம் கொண்டு மறைமலை அடிகளார் சொல்லுகிறார் என்று அவருடைய மாணிக்க வாசகர் கால ஆய்வைக் குறை சொல்லி ஒதுக்குபவர் பலரும் இதுவரை முடிவான எதிர்ச்சான்று கொடுத்ததாய் எனக்குத் தென்படவில்லை.”

”தமிழாய்வில் மாணிக்க வாசகர் காலம் என்பது இன்னும் முடிவுறாத ஆய்வு. என்னுடைய சாய்வு மறைமலை அடிகளார் பக்கம் தான். மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். [அது தமிழ் உலகம் மடற்குழுவிலோ, அகத்தியர் மடற்குழுவிலோ வந்தது. எனக்கு நினைவில்லை. இன்னொரு முறை அதைத் தேடி என் வலைப்பதிவிற் கொண்டு சேர்ப்பேன்.] மாணிக்க வாசகரின் காலம் மூன்றாம் நூற்றாண்டாய் இருக்கலாம். அது களப்பிரர் காலம் என்றே நான் கொள்ளுகிறேன்."

"அப்படிக் கொண்டால், இலக்கியம் என்ற சொல் மூன்றாம் நூற்றாண்டு ஆளப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்."

அன்புடன்,
இராம.கி

No comments: