Sunday, February 28, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 4

தேர் சென்ற டத்தோ கெராமத் வீதி சற்று பெரியது. குறிப்பாக Times Square க்கு முன்னால், 6 ஒழுங்கையாவது அமையுமளவிற்குப் பெரியது. தேர் வரும் வழியில், 100, 150 அடிக்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் இருந்ததுபோற் தோன்றியது. Times Square - இலும், அதற்குச் சற்று முன்னிருந்த காமாட்சியம்மன் ஆலயத்திற்கு அருகிலும், தண்ணீர்ப் பந்தல்கள் இருந்தன. அவற்றில், நேரத்திற்கேற்ப வருவோர், போவோர் ஏதாவது அருந்தவும், கொறிக்கவும், சாப்பிடவும், கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். கூடவே தண்ணீர்ப் பந்தல்களிற் காதைப் பிளக்கும் அளவிற்கு ”பற்றிப் பாட்டுகளும்” ஒலித்துக் கொண்டிருந்தன. தண்ணீர்ப் பந்தற்காரர்களின் சளைக்காத விருந்தோம்பல் என்னைப் பெரிதும் கவர்ந்தது.

இது தவிர, முன்னே சொன்னது போல் தேர்போகும் சாலையின் நடுவே மூட்டை மூட்டையாகவும், பெருத்த குவியல்களாகவும் கிடந்த சிதறு தேங்காய்கள் பன்னூறாயிரங்களைத் தாண்டி நுல்லியக் (million) கணக்கில் இருக்கும் போற் தோன்றியது. சாலையின் பலவிடங்களில் ஆங்காங்கே கடைபோட்டுப் பல்வினைப் பொருள்களும், DVD களும் விற்றுக் கொண்டிருந்தார்கள். நடந்துவரும் மக்களோ, தங்களுடைய தேர்ந்த ஆடைகளில் ஒய்யாரமாய்க் குடும்பம் சூழ ஏதோ மகிழ்வுலா (picnic) போவது போல் நடந்துவந்து கொண்டிருந்தனர். இவர்களின் ஊடே, தேரை எதிர்பார்த்துத் தண்ணீர்ப் பந்தல்களுக்கு அருகிற் பற்றியில் ஆழ்ந்த பல்வேறு சீனர்கள், தமிழர்கள், மலாய்க்காரர்கள். எனப் பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த சூழ்நிலையை ஓரளவாவது விவரிக்க வேண்டுமெனில் ஒரு தென்னமெரிக்கக் காட்சியைத் தான் ஒப்பிட்டுச் சொல்லவேண்டும். நேரடியாகவோ, திரைப்படம் அல்லது தொலைக்காட்சி வழியாகவோ பிரசீலின் (Brazil) ரியோ டி ^செனைரோவின் கொண்டாட்டம் (Rio de Janeiro Carnevale)” பார்த்திருக்கிறீர்களா? ஏசு உயிர்த்தெழுவதற்கு முன் நடந்த இறப்பு நிகழ்வை நினைந்து தாமும் அவ்வலியை உணருமாப் போல, 40-46 நாள் நோன்பிருக்க முனைவோர், நோன்பிற்கு முன்னால் பசந்தத்தைக் (Lent) கொண்டாடுவதாய் அமையும். ஒரேயொரு வேறுபாடு. அந்தக் கொண்டாட்டம் நோன்பிற்கு முன்னால் அமையும். தைப்பூசமோ நோன்பிற்கு அப்புறம் ஒருசிலர் காவடியெடுக்க, மற்றவர் அவரோடு உடன்சேர்ந்து வருவது என்று அமையும். [உடம்பை விட்டு உயிர் விலகும் நிகழ்வைத் தாரை, தப்பட்டையோடு, குதித்து, பூத்தெறித்து கொண்டாடுவோர் நம்மவர் ஆயிற்றே? நம்முடைய பழஞ் சமயமான ஆசீவகத்தின் கூறுகளான ”கடைசிப் பாட்டு, கடைசியாட்டம்” போன்ற இறப்பை ஒட்டிய கொண்டாட்டச் சடங்குகள் இன்றும் நடைபெறுகின்றன அல்லவா?.]

ரியோ கொண்டாட்டத்தில் பல்வேறு சாம்பாப் பள்ளிகள் கூட்டங் கூட்டமாய் தாளக்கருவிகள் பலவற்றை இசைத்துக் கொண்டு, தங்களுடைய பட்டேரியா (Bateria) இசைக்குழுவுடன் ஆட்டம் போட்டு ஊர்வலமாய் வருவார்கள். அவர்கள் ஆடுவது சாம்பா ஆட்டம் என்று சொல்லப்படும். சாம்பா ஆட்டம் ஆப்பிரிக்காவில் இருந்து, கருப்பின அடிமைகளால் கொண்டுவரப்பட்ட துள்ளாட்டம். பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட நம்மூர் தப்பாட்டம் போலவே அமையும். பினாங்குப் பூசத்தில் விதம் விதமான தப்பாட்டங்களும், பறையாட்டங்களும் இசைக்கலைஞர்களோடு வீறு கொண்டு இயம்புவதைக் கூர்ந்து கவனித்தால், தைப்பூசத் திருவிழாவும், ஓரளவு ரியோ கொண்டாட்டத்தின் சில கோணங்களைக் காட்டத் தொடங்கிவிட்டதென்றே சொல்லவேண்டியிருக்கிறது.

காலை 10.30 மணிக்கு தேர் சிவன்கோயிலுக்கு அருகில் தேர் வந்து சேரும் என்று சொன்னது 12 ஆகியும் வரவில்லை; அந்த அளவிற்குத் தேர் மெதுவாக ஊர்ந்தது போலும். வெய்யில் சுள்ளென்று அடித்து ஏறிக் கொண்டிருந்தது. இந்தச் சூட்டில் காவடிக் காரர்கள் நடக்காமல் இருக்கும் வகையில், பினாங்கு நகராட்சியினர் சாலையில் நீரைத் தொடர்ந்து தெளித்துக் கொண்டிருந்தனர். சிவன் கோயிலின் உள்ளே இருந்த பந்தலில் நானும், என் மனைவியும் இரண்டு சாப்பாட்டுத் தட்டுகளைப் பெற்றுக் கொண்டு எங்கள் பசியைத் தணித்துக் கொண்டோம்.நான் வருவோர், போவோரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அருகில் யாரோ சற்றுப் பலக்கவே, தனக்குத் தெரிந்தவரைப் பார்த்து விசாரித்துக் கொள்கிறார்கள். ”ஆ.....அண்ணே, எப்படியிருக்கிங்க, பார்த்து ரொம்ப நாளாச்சது, கேயெல்லுலெ இன்னுங்கூட அதிகக் கூட்டமா இருக்கும், இல்லையா?” தெரிந்தவர்களைப் பார்த்து முகமன் சொல்லிக் கொள்வது நடந்து கொண்டேயிருக்கிறது. நம்மூரைப் போலில்லாமல் அருச்சனைத் தட்டுகளில் சற்று செல்வநிலையைக் காட்டுமாப் போலத் தேங்காய்கள், விதவிதமான பழங்கள், ஒரு பட்டுத் துணி, ஊதுபத்தி, சூடம், வெற்றிலை என வகைவகையாய் நிறைந்திருந்தன. இளஞ்சிறார்கள் Times Square க்கு முன்னால் இருந்த செயற்கை நீரூற்றுகளின் ஊடே புகுந்து தண்ணீரில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்டமும், பாட்டமும், கூத்தும், ஓடிப் பிடித்தலும் நடந்து கொண்டிருந்தன.

நாங்கள் Times Square கட்டிடத்துக்குள் உள்லே புகுந்து மூடிக் கிடந்த கடைகளை கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். மீண்டும் கட்டிடத்தின் முகப்பிற்கு வந்தால் மக்களின் செறிவு கூடிக் கொண்டே வந்தது. தேரைப் பார்க்குமாப் போல் இருந்த இடங்களில் எல்லாம் நெரிசல் கூடிக் கொண்டிருந்தது.ஆடி அசைந்து பிற்பகல் 1.30 மணியளவில் தொலைவில் KOMTAR கட்டிடத்துக்கு அருகில் தேர்க் கூம்பு தெரிந்தது. அடுத்த அரை மணியளவில் தேர் காமாட்சியம்மன் கோயிலை நெருங்கிற்று. சிதறுகாய்க்காரர்கள் சுறுசுறுப்பானார்கள். ஓவ்வொர் தேங்காய்க் குவியலுக்கருகிலும் குவியலுக்குத் தகுந்தாற்போல் ஆட்கள் கூடிச் சாலையில் சிதறுகாய்களை உடைக்கத் தொடங்கினார்கள்.

சிவன் கோயிலுக்கு எதிரிலேயே இருந்த குவியற் தேங்காய்களின் எண்ணிக்கை 10000 தாண்டியிருக்கும். ஒரு சீனர் ஊதுவத்திக் கொத்திகளை ஏற்றி மூன்றுதடவை மேலும் கீழுமாய் ஆலத்திபோற் சுற்றியெடுத்து, அடுத்து நண்பர்களைக் கொண்டு உடைத்தார். இது போல மலாய்க்காரர், தமிழர். எல்லோருக்கும் தண்டாயுதபாணி வேண்டப்பட்ட தெய்வம் போலும். சிதறுகாய்களின் தெறிப்பாலே தான் பூசத் திருவிழாவைச் சிதறுகாய்த் திருவிழா என்று சொன்னேன்.

சாலையைக் கழுவியது போல் இளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த இடத்தில் சிறுகாய் உடைப்பது முடிந்தவுடன், அடுத்த பத்தடிடியில் இன்னும் சிதறுகாய் உடைப்பு. முதற் பத்தடியைத் துப்புரவாக்க, இரண்டு பெரிய குவியேற்றிகள் (shovel loaders) முன்னே வந்து, தேங்காய்ச் சிரட்டைகளைக் குவியலாக்கி அப்படியே சாலையின் ஓரத்தில் தள்ளின. பெருகிவந்த இளநீர் சாலைப்பரப்பு எங்கும் பரவிக் கழுவினாற்போல் ஆகியது. பின்னாற் துப்புரவுத் தொழிலாளர்கள் சாலையைக் கூட்டி தேர் நகரும்படியும், ஆட்கள் நடக்கும் படியும் செய்தனர். அவர்களுடைய மட்டைத்தூறு சாலையை மெழுவும் செய்தது. எல்லாம் ஒரு 4,5 நுணுத்தங்களுக்குள் (minutes) முடிந்தன. இப்படிச் சிதறுகாய் உடைப்பதும், இளநீராற் சாலையைக் கழுவுவதும், சிரட்டைகளை அகற்றுவதும் பத்தடிக்கு ஒரு தடவை நடந்தன. தேர் அவ்வளவு மெதுவாக நகர்ந்ததில் வியப்பேயில்லை.

ஏற்கனவே வந்து சிவன்கோயிலில் இளைப்பாறி உணவருந்திய காவடிக்காரர்கள் ஒன்றரை மணியளவில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டார்கள். எங்கு பார்த்தால் “அரோகரா”வும் விதவிதமாக வேல்களை விளிக்கும் கூப்பாடுகளும் பெருகின. 2 மணியளவில் தேர் சிவன் கோயில் அருகே வந்து சேர்ந்தது. அருச்சனைகளும், தீவ ஆரதனைகளும் முடிந்து அங்கிருந்து அடுத்த அரைமணியிற் புறப்பட்டது. தேர் தண்ணீர்மலை அடிவாரம் போய்ச்சேர இரவாகிவிடும் என்றார்கள். நாங்கள் எதிர்த் திசையில் நடந்து தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்து, களைப்பாறிச் சற்றே கண்ணயர்ந்தோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: