Sunday, May 03, 2009

திசைகள் - 6

வடக்கு எனும் திசையை உத்தரம், உதக்கு, உதீசி, பிங்கலம், மதி திசை ஆகிய சொற்களால் பிங்கலம் 1-17 ஆம் நூற்பா குறிக்கும். இதுபோகப் புண்ணிய திசை என்ற சொல்லாலும் வடதிசை சிலம்பிற் குறிக்கப் பட்டுள்ளது. வடக்கு என்ற சொல்லையும் நாம் ஆய வேண்டியிருக்கிறது.

உத்தரம், உதக்கு, உதீசி ஆகிய வரிசைச் சொற்களைப் புரிந்து கொள்ள, நாம் சென்ற பகுதியில் அறிந்து கொண்ட தச்சுப் பாளங்களுக்குத் திரும்பிப் போகவேண்டும்.

முன்சொன்னது போல், புவிக் குழம்பின் மேலே திரைந்து கிடக்கும் தச்சுப் பாளங்கள் நம் புவி ஏற்பட்டதில் இருந்து இடைவிடாது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்றிருக்கும் பாளங்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்து குழம்பின் மேல் அதே இடத்தில் மிதந்திருக்கும் என்று சொல்லவே முடியாது; மேலும் அவற்றின் வடிவமும், அமைப்பும் என்றுமே ஒன்று போல இருப்பதாகவும் சொல்ல முடியாது. முற்றிலும் குழம்பாய் இருந்த புவி, குளிர்ந்தபோது ஏற்பட்ட பாளத் துண்டுகளின் திட்கமும் (thickness) கூட ஒரே அளவாய் இருப்பதில்லை. அஃகுதைக் (oxide) குழம்பின் மேல்மட்டத்தில் இருந்து கணக்குப் போட்டால், திட்கம் கூடிய இடங்கள் மலைகளாகவும், திட்கம் குறைந்த இடங்கள் கடற்பள்ளங்களாயும் உள்ளன. இதே போல சில பாளங்களின் நிரவற் திட்கம் (average thickness) கூடியும், சில பாளங்களின் நிரவற் திட்கம் குறைந்தும் இருக்கின்றன.

இப்பாளங்களில் இந்தியப்பாளம் பற்றிய செய்திகளைச் சென்ற பகுதியில் பார்த்தோம். எந்தக் காலமும் இந்தியப்பாளம் இதே வடிவில் இருந்ததில்லை. அதன் வடிவம் காலத்திற்குக் காலம் மாறுபட்டே வந்தது. ஒருகாலத்தில் இது கோண்டுவன நிலம் எனும் பெரிய கண்டப்பகுதியாய் இருந்தது. பின்னால் 90 நுல்லிய (million) ஆண்டுகளில் இது இந்தியத் துணைக்கண்டப் பாளம், ஆசுத்திரேலியன் பாளம் என 2 பகுதிகளாய் உடைந்தது. பின் 50 இல் இருந்து 55 நுல்லிய ஆண்டுகளில் இந்தியத் துணைக்கண்ட விளிம்பும், இந்துமாக் கடலின் அடிப்பகுதியின் ஒரு பாக விளிம்பும் உருகி ஒட்டிக் கொண்டு இந்திய ஆசுத்திரேலியன் பாளமாகப் புதிய வடிவங் கொண்டது. இப்பாளம் 55 நுல்லிய ஆண்டுகளாய் வடக்கு நோக்கி ஓராண்டிற்கு 8 அணுங்குழை (inches) என்ற விரைவில் 2000 கி,மீ.யில் இருந்து 3000 கி.மீ நகர்ந்தது. அப்படி நகர்ந்தபோது ஆசியப் பாளத்தோடு முட்டி, உலகின் மிகப்பெரும் மலைத்தொடரான இமயத்தைத் தோற்றுவித்தது. இன்று இந்தியப்பாளம் ஓராண்டிற்கு 2 அணுங்குழை நகர்வதால், இம்முட்டல் இன்றும் நடந்துகொண்டுள்ளது; அதனால் இமயமலை இன்றுங் கூட மேலெழுந்து கொண்டிருக்கிறது.

இப்புவியற் கரணியங்களால், வட இந்திய நிலத்தில் சாய்வு ஏற்பட்டு, வடக்குத் திசை மலைகளாய் உயர்ந்தும், அதன் கீழுள்ள சமவெளி தாழ்ந்தும் இருக்கிறது. இதன் கரணியமாகவே சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற பேராறுகளும், மற்ற துணையாறுகளும் வடக்கே தோன்றி, மேற்கில் அரபிக் கடலிலும், கிழக்கில் வங்காள விரி குடாவிலும் கலக்கின்றன.

இந்த உயர்வு தாழ்வு கொண்ட வட இந்திய நில அமைப்பை ஒட்டியே உத்தரம், உதக்கு, உதீசி போன்ற சொற்கள் ஏற்பட்டன.

தமிழில் ஊ> ஓ போன்ற வேர்கள் உயர்ச்சிப் பொருளைக் குறிப்பன. உகத்தல் என்ற வினைச்சொல் உயர்தலைக் குறிக்கும். “உகப்பே உயர்வு” என்பது தொல்காப்பியம் உரியியல் 8 ஆம் நூற்பா. உகைத்தல் என்பதும் உயர எழும்புதலையே குறிக்கும். க/வ போலியில் உகத்தல்>உவத்தலாகி உயருதலைத் தொடர்ந்து குறிக்கும். உவணம், உயரப் பறக்கும் பருந்தைக் குறிக்கும். உவத்தல் = தெய்வத்தை ஏத்தல்.  உவத்தன்>உவச்சன்> ஓச்சன்>ஓசன் என்றாகிப் பூசாரியைக் குறிக்கும். ஒருவனின் ஆற்றலை உயர்த்தும் வகையில் தூண்டிவிடுவது ஊக்குதலாகும். ஊங்கு எனும் பெயர்ச் சொல் உயர்வு, மிகுதி ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும். ஊங்கின் வளர்ச்சியாய் ஓங்கு, ஓங்கல் போன்றவை உயர்ச்சிப் பொருளைக் குறிக்கும். [ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி - ஆண்டாள்]. ஓங்கு>ஓக்கு>ஓக்கம் என்றவளர்ச்சியிலும் உயரம், பெருமை எனும் பொருட்பாடுகள் உணர்த்தும், ஓச்சுதல் என்பதும் உயர்த்துதலைக் குறிக்கும். ஓச்சு>ஓச்சம் = உயர்வு. ”கடிதோச்சி மெல்ல எறிக” என்ற 562 ஆம் குறட்பாவையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். ஊ என்னும் வேரின் வளர்ச்சியில் உத்தம், உச்சம், உச்சி போன்ற சொற்களும் உயரமான இடத்தைக் குறிக்கும்.

இதே பொருளில் தான் உ+தரம் = உத்தரம் எனுஞ் சொல் உயரப் பொருளை உணர்த்துகிறது. நம் வீடுகளில் கூரைகளைத் தாங்கித் தூண்டுகளின் மேல் உயரத்தில் இருக்கும் beam உத்தரம் என்றே சொல்லப் படுகிறது. [கோணமான அல்லது வளைவான கூரைகளின் குறுக்கே உத்தரங்கள் அமைவதால் அவற்றை விட்டங்கள் என்பதுமுண்டு. வட்டத்தின் குறுக்கே விட்டம் (diameter) அமைவதை இங்கு நினைவுகொள்ளுங்கள். விட்டமும், உத்தரமும் வீட்டுக் கூரையைப் பொறுத்து ஒரு பொருட்சொற்களே.] ”உத்தரப் பலகை” என்ற ஆட்சி சிலம்பின் அரங்கேற்று காதையில் மாதவியின் நாட்டிய அரங்கில் இருக்கும் உத்தரங்களின் மேல் உள்ள பலகையைக் (ceiling) குறிக்கும்.

சூரியன் காலையிற் தோன்றி உயர எழுவதையும் உதித்தல் என்கிறோம். ”உதயம்” என்பது உதித்தலில் தோன்றும் இருபிறப்பிப் பெயர்ச்சொல். உகத்தல், உவத்தல், உயர்த்தல், உத்தல், உச்சல் ஆகியவற்றைப் போல உதத்தலும் உயர்ச்சிப் பொருளையே குறிக்கிறது.

[அக்கால ”ஜனபதங்கள்” விரிந்து கிடந்ததும், பின்னால் மகதப் பேரரசு வளர்ந்ததும், உத்தரப்பாதை, தக்கணப்பாதை ஆகியவை இந்திய அரசியல், பொருளியலை நிலைபெற வைத்ததையும் உணர்ந்தால், உத்தரம் என்னும் திசை உத்தரப் பிரதேசம், பீகார், வங்காளம் போன்ற இடங்களை வைத்தே த் துணைக்கண்டத்தில் உணரப்பட்டது என்பது புரியும். உத்தரம், உதக்கு என்ற சொற்கள் நல்ல தமிழ்வழக்கில் அமைந்திருக்க, உதித்தலில் எழுந்த உதீசி இருபிறப்பியாகிறது. ஈகாரம் வடமொழிப் பலுக்கலை உணர்த்துகிறது.]

இதே ஊகாரத்தில் உப்புதல் என்பது எழுதல், பருத்தல், வீங்குதல்  பொருட் பாடுகளைக் குறிக்கும். உம்பர் என்ற சொல் மேல், மேலிடம் என்பதையும், உம்பரம் என்ற சொல் மேலிடம், ஆகாயம் என்ற சொற்களையும் குறிக்கும்.

உயர்தல் என்று பொதுவாய்க் குறிக்கும் வினைச்சொல்லுங் கூட ஊ எனும் வேரிற் தோன்றியதே. அது போக ஊர்தல் எனுஞ் சொல் ஏறுதல், ஏறிச் செல்லல் ஆகிய பொருட்பாடுகளையும், ஊர்தி எனுஞ் சொல் ஏறிச்செல்லும் வண்டியையும், ஊர்த்தல், ஒன்றின் மேல் ஏறி நிற்றலைக் குறிக்கும். ”நடவரசனின் ஊர்த்த நடம்” வடமொழிப் பலுக்கில் ஊர்த்வம் ஆகும். இன்னும், ஊர்த்து என்பது ஓர்த்தெனத் திரிந்து உயர்தலைக் குறிக்கும்.

ஊங்கெனும் சொல் முதன்மிகையில் நகர மெய் பெற்று நூங்கு ஆகி உயர்வு, பெருமை, மிகுதி ஆகியவற்றைக் குறிக்கும். நூங்கர், வானுயர்ச்சியில் உள்ள தேவரைக் குறிக்கும். ஊங்கு>நூங்கு>நூக்கு>நூக்கம் என்ற வளர்ச்சியில் உயரத்தைக் குறித்து, கூடவே sissoo wood, black wood, தோதகத்தி போன்ற உயர் மரவகைகளையும் குறிக்கும். (இம்மரம் 50 அடி உயரம் வளரும். பனிமலை அடிவாரத்திற்குத் தெற்கே இந்தியா முழுவதும் காணப்படும் இலையுதிர் மரமாகும்.) இதுபோக, malabar blackwood cast Indian rosewood Dalbergia genus, foreign rosewood, Swietence mahogany ஆகியவற்றையும்  நூக்கம் குறிக்கிறது.

மேனோக்கித் தள்ளுவதை நூக்கல் என்றும் தமிழிற் சொல்லுகிறார்கள் (pushing or thrusting aside. "நூக்கிப் புறத்திரு போகென்னும் இன்னாச்சொல்” நாலடி 326). தள்ளுவதை நூக்குதல் என்பது வடவார்க்காட்டு வழக்கு. “எடுத்தவே யெக்கி நூக்குயர்பு” என்பது பரிபாடலில் 16ஆம் பாட்டின் 45 ஆம் அடி. நூவுதல் என்பது திரியைத் தூண்டுதல் என்று பொருள்படும். நோக்கு>நோக்கம் = உயர்ச்சி (வின்சுலோ) height, elevation என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இந்த ’ந’கரப் பின்புலத்தோடு, ஊர்த்து எனும் சொல்லைப் பொருத்தினால், வடக்கைக் குறிக்கும் இந்தையிரோப்பியச் சொல்லான நூர்த், நோர்த், என்ற இணைச்சொல் நம் கவனத்திற்கு வந்துவிடும். [தமிழிலிருந்து தோன்றியது என்று சொல்லவில்லை. ”ஒரேவிதச் சிந்தனை தமிழிய மொழிகளிலும், இந்தையிரோப்பிய மொழிகளிலும் உள்ளன” என்று மட்டுமே சொல்கிறேன். ஏதோ ஒரு தொடர்பு 2 மொழிக் குடும்பங்களுக்கும் இருக்க வேண்டுமென்று சொல்கிறேன். தமிழிய மொழிகளுக்கும் இந்தியிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள தொடர்பை என் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றிலும் விடாது சொல்லி வருகிறேன். அதே பொழுது, ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டது போல், அதைப் புரிந்துகொண்டு, பலரும் ஏற்பதற்குத் தயங்குகிறார்.]

O.E. nord, from P.Gmc. *nurtha- (cf. O.N. nordr, O.Fris. north, M.Du. nort, Du. noord, Ger. nord), possibly ult. from PIE *ner- "left," also "below," as north is to the left when one faces the rising sun (cf. Skt. narakah "hell," Gk. enerthen "from beneath," Oscan-Umbrian nertrak "left"). The same notion underlies Ir. tuaisceart "north." The usual word for "north" in the Romance languages is ultimately from English, cf. O.Fr. north (Fr. nord), borrowed from O.E. norð; It., Sp. norte are borrowed from O.Fr. North-easter "wind blowing from the northeast" is from 1794. North American first used 1766, by Franklin. Northwest Passage first attested 1600. Northerner in U.S. geo-political sense is attested from 1831. Northern lights "aurora borealis" first recorded 1721. North Star "Pole Star" is M.E. norde sterre (1398, cf. M.Du. noirdstern, Ger. nordstern).

அடுத்து வடக்கெனும் சொல், பெரும்பாலோர் நாம் அறிந்த பெருமரமான ஆல மரத்தில் எழுந்ததாகவே சொல்கிறார். அது சரியான விளக்கம் அல்ல. வடக்கைப் புரிந்து கொள்ள இதனோடு தொடர்புள்ள ”வாடை, வடந்தை” என்ற 2 சொற்களின் பிறப்புகளை அறியவேண்டும். ”மார்கழி மாசம் வந்துருச்சா? [பனிமுடங்கலில் (Winter solstice, Dec 22/23) பின்பனிக் காலம் தொடங்கி விட்டதாகக் கொள்ளுகிறோம்.] ஒரே குளிரு, வாடை, வெட வெடன்னு ஆட்டுது” என்கிறோம் இல்லையா? அது என்ன “வெட வெடப்பு”? இதை ஆங்கிலத்தில் shivering என்று சொல்லுவார்கள்.

அதிக அளவில் வேகத்துடன் உடல் நடுங்குவதை வெடவெடத்தல்/வெடு வெடுத்தல் என்கிறோம். எதிர்பாராத முறையில், திடீரென்று நடப்பதைக் கூட ”வெடுக் (unexpectedly, suddenlym sharply, curtly)” என்று சொல்லுகிறோம். ”வெடுக்” என்பது ஒடிதலின் ஓசைக்குறிப்பு (noise of breaking), திடீரெனக் குறிப்பு (suddennness and unexpectedness) குத்து நோவுக் குறிப்பு, (shooting pain).

கடுங் குளிரில் மாட்டிக் கொண்டாலும் இதே குத்து நோவுக் குறிப்பை உணருவோம். கடுங் குளிர் காற்று அடிக்கிறது. நம்முடைய நெற்றியில் இரண்டு பக்கமும், காதுமடலுக்கு அருகில் வெடுக் என்று, விண் என்று, தெறிக்கிறது, வலிக்கிறது, நோவுகிறது, இல்லையா? இதே போல சினத்தால், கோபத்தால், படபடத்தாலும், கடுகடுத்தாலும் கூட வெடுவெடுத்தல் என்றே சொல்லுகிறோம். குளிரால் ஏற்படும் நடுக்கக் குறிப்பும் வெடுவெடுத்தல் என்று பேச்சுவழக்கிற் சொல்லப்படும். விடுவிடு என்பதும் சுறுசுறுப்பாய் இருக்கும் குறிப்பு, (onomatopoic expr.of being active and busy), அச்சம் முதலியவற்றால் மெய்ந் நடுங்கும் குறிப்பு (expr. of shivering of body out of fear etc.), சினங் கொள்ளும் குறிப்பு (being angry) ஆகியவற்றைக் குறிக்கும்.

”விண் விண் என்று தெறித்தது” என்று சொல்லும் போதும் இந்த உடல் நோவு குறிக்கப் படுகிறது. புண் முதலியன தெறித்து நோவெடுத்தற் குறிப்பும் (throbbing pain, as of a boil.) கூட இதே போன்று சொல்லப் படுகிறது. விண் எனும் ஓசைக் குறிப்பால் மணியடிக்கும் சத்தங் கூட (onomatopoic expr.signifying tinkling, as of a bell) உணர்த்தப்படும்.

விடு விடு எனும் ஒலிக் குறிப்பில் கிளைத்த விடைத்தல், விரைத்து நிற்றலைக் (to stiffen up, straighten up) குறிக்கும். குளிராலாவதும் விடைத்தலே.  இதோடு தொடர்புடைய விறைத்தல் எனும் வினைச்சொல் மரத்துப்போதல் (to grow stiff, as from cold, to become numb), குளிர் முதலியவற்றால் நடுங்குதல் (to shiver, as from cold) ஆகியவற்றைக் குறிக்கும். இதேசொல் கன்னடத்தில் பெரெ என்றும், மலையாளத்தில் விரக்க என்றும், மற்ற தமிழிய மொழிகளில் Ko.verk; Tu.beRagu, Te.veRaagu, Kui.braa என்றும் அமையும். விறைப்பு எனும் பெயர்ச்சொல் numbness, stiffness.as from cold என்னும் பொருளிலும், நடுக்கம் (shivering) எனும் பொருளிலும் அமையும் "குளிர் என்ன விறைப்பு விறைக்கிறது?” என்ற சொல்லாட்சியை இங்கு நினைவுகூரலாம். மற்ற தமிழிய மொழிகளில் Ma.virakka; Ko.veru; To.peR; Ka.biRasa, biRasu, biRusu, biRu; Tu.birgaL, biRsu; Te. biRusu, birusu என்று அமையும். “வெடுவெடென்று உடல் விறையலாகி” எனும் போது குளிர்நடுக்கம் (shivering) என்பதே உணர்த்தப் படுகிறது.

விடு என்னும் ஒலிக்குறிப்பிற் தோன்றி, பின் விடு>வெடு>வெட>வட என்ற வளர்ச்சியில் குளிர்ப்பொருளும், அதற்கு அப்பாற் திசைப் பொருளும் பிறந்தன. வட>வடக்கு என்பது வெடவெடக்கும் குளிர்த்திசையைக் குறிக்கிறது. வடக்கிருந்து வருவது வாடை. இது வடந்தை என்றும் வடந்தல் என்றும் தமிழில் சொல்லப் பெறும். வடந்தைக் காற்று குளிர் காற்று. இந்தை யிரோப்பிய மாந்தன் தெற்கிலிருந்து தான் வடக்கே போயிருக்க வேண்டும் என்று சொல்வதற்கு வடந்தல்>vadanther>vidanther>winther>winter என்ற சொல்லும் ஒரு கரணியமாகும்.

winter என்பதற்கு ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகள் O.E., "fourth season of the year," from P.Gmc. *wentruz (cf. O.Fris., Du. winter, O.S., O.H.G. wintar, Ger. winter, Dan., Swed. vinter, Goth. wintrus, O.N. vetr "winter"), possibly from PIE *wed-/*wod-/*ud- "wet" (see water), or from *wind- "white" (cf. Celt. vindo- "white"). The Anglo-Saxons counted years in "winters," cf. O.E. aenetre "one-year-old." O.N. Vetrardag, first day of winter, was the Saturday that fell between Oct. 10 and 16. The verb meaning "to pass the winter (in some place)" is recorded from 1382. Winterize is from 1938, on model of earlier summerize (1935). Wintergreen as a type of plant is recorded from 1548 என்று குறித்திருப்பார்.

வெடுவெடுக்கும் காலம் வாடைக் காலம் / winter period என்பது இன்னும் சரியான விளக்கமாய்த் தெரிகிறது. [மேலே சொன்னது போல். இந்தை யிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஏதோவொரு பழந்தொடர்பு இருந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன். மற்ற ஆய்வாளர்ள் இதைக் கருதிப் பார்ப்பாராக!]

வட என்ற சொல்லை வைத்து வட மரப் பெயர் ஆலுக்கு எப்படி ஏற்பட்டது என்பது அடுத்துநிற்கும் கேள்வி. ஆலின் சொற்பிறப்பு மிக எளிது. அகல மரம் ஆல மரம் ஆயிற்று. அம்மரத்தின் சிறப்பே அதன் அகற்சி தான். நன்கு வளர்ந்த மரம் 70, 100 அடி உயரம் போனாலும், அதே அளவும், அதற்கு மேலும் கூட அகற்சி பெறுவது உண்டு. [எல்லோருக்கும் தெரிந்த சென்னை அடையாற்று ஆலமரத்தை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்.] ஆல மரம் இந்தியத் துணைக்கண்டத்திற்கே விதப்பாக, இமயமலைக்கும் கீழுள்ள சமவெளியில் வளரும் மரம். ஒரு காலத்தில் வடக்கே, குறிப்பாக இற்றை உத்தரப் பிரதேசம், பீகார், வங்காளம் போன்ற மாநிலங்களில் பெரிதும் காணப்பட்டதால், இந்த மரத்திற்கு புதலியற் பெயர் கொடுக்கும் போது Ficus Benghalensis என்றே பெயர் இட்டார். அதாவது வங்காளத்து ஆலமரம். இந்தி, வங்காளி, பஞ்சாபியில் ஆலமரம் bar, bor என்றும் மராத்தியில் wad என்றும் சொல்லப் பெறும்.

ஊருக்கு ஓர் ஆலமரம் அமைந்து அங்கேயே பொதியில், அம்பலம் போன்றவை அமைந்ததாலும், ஊரின் வணிகர் அங்கிருந்தே தம் கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டார். பேச்சுவழக்கில் வணிகர் மரம் என்றும் சொல்லப் பட்டது. அதையே banyan tree என்றும் சொல்லத் தொடங்கினார்.

ஆலமரத்திற்கு இணையாக மேற்சொன்ன சொற்களுக்கு வேரைப் புரிந்து கொள்ள தமிழுக்கே வரவேண்டும். நீள, அகலம் கொண்ட செவ்வகங்கள் மட்டுமின்றி வட்டமெனும் வகையிலும் அகலம் தொல்மாந்தர் வாழ்க்கையில் உணரப் பட்டதால், வட்டம், நிலப்பரப்பைக் குறித்தது. இன்று கூடத் “தாலுகா” என்பதற்கு வட்டம் என்றும், “ஜில்லா” விற்கு மாவட்டம் என்றும் சொல்கிறோம் இல்லையா? ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்கூட “வட்டகை” என்ற சொல் குறு நிலப்பரப்பைக் குறித்தது.

இதே போல வட்டமாய் அகலும் மரம் வட்ட மரம்>வட மரம் ஆயிற்று. இந்த வடமரம் உத்தர திசையில் பெரிதும் காணப்பட்டதாலும் (இது தெற்கேயும் வளர்ந்தது, ஆனாலும் ஒப்பீட்டு அளவில் வடக்கே அக்காலத்தில் இது மிகுதி), உத்தர திசைக்கு வேறொரு பொருளில் (வெடுவெடுக்கும் குளிர்ப் பொருளில்) வடதிசை என்றசொல் ஏற்பட்டதாலும், வடமரமும், வடதிசையும் ஒரே காரணத்தால் எழுந்தனவோ என்று அறிஞர் மயங்குகிறார். ஆனால், எப்படித் தென்திசையும், தென்னை மரமும் போலி உறவு காட்டுகின்றனவோ, அதே போல வடதிசையும், வடமரமும் போலியுறவு காட்டுகின்றன. வட திசையின் சொற்பிறப்பு வேறு; வட மரத்தின் சொற்பிறப்பு வேறு.

அடுத்துப் பிங்கலம் என்ற சொல்லும், மதி திசை, புண்ணிய திசை என்ற சொல்லும் மிகப் பிற்காலத்தில் சமய வளர்ச்சியில் ஏற்பட்டிருக்க வேண்டும். இமயமலை என்பது பொன்மலை என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் பல இடங்களில் (பொற்கோட்டு இமயம்) ஆளப்பட்டிருக்கிறது. பிங்கலம், பொன் நிறத்தைக் குறிக்கும் சொல். பொன்னிறத் திசை பிங்கலத் திசையாயிற்று. பூரணை மதியும் பொன்னிறமாய்ப் பல இடங்களிற் சொல்லப் பட்டிருக்கிறது. பொன்னிறமே மதித் திசைக்கும் காரணமோ என்று நான் எண்ணுகிறேன். இன்னும் பல தரவுகளைப் பார்க்க வேண்டும்.

அடுத்துப் புண்ணிய திசை என்பது ”குயிலாயம் (கைலாயம்) வடக்கே உள்ளது, அங்கே இறைவன் இருக்கிறார்” என்ற தொன்மம் பற்றி எழுந்த சொல்லாகும். இக்கருத்து சிவநெறியாருக்கு மட்டுமல்லாமல், அற்றுவிகம், செயினம் போன்ற நெறிகளுக்கும் உகந்ததே. ஏனெனில் அவரின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதருக்கும், சிவ நெறியில் சொல்லப்படும் ‘ஆலமர் செல்வனுக்கும்’ எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாவகையிலும் பொருத்தம் உண்டு. புண்ணியன் இருக்கும் திசை புண்ணிய திசை - அவ்வளவு தான்.

இதுகாறும் இத்தொடரில் திசைகள் பற்றியெழுந்த பல்வேறு சொற்களைப் பற்றிச் சொல்லிவந்தேன். இந்த விளக்கங்களை அறுதியானவை என்று கொள்ளாது, படிப்போர் சிந்தனையை மேலும் தூண்டுவதாய்க் கொண்டால், மிகநல்லது. நான் தவறிய இடங்களையும் எனக்குச் சுட்டிக் காட்டுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

R.DEVARAJAN said...

//ஊருக்கு ஓர் ஆலமரம் அமைந்து அங்கேயே பொதியில், அம்பலம் போன்றவை அமைந்ததாலும், ஊரின் வணிகர்கள் அங்கிருந்தே தங்கள் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டார்கள். அதனால் பேச்சுவழக்கில் வணிகர் மரம் என்றும் சொல்லப் பட்டது. அதையே banyan tree என்றும் சொல்லத் தொடங்கினார்கள்.//

வணிகர் என்பது ‘பனியா’ (Baniya) ஆகி அதிலிருந்து banyan tree எனும் வழக்காறு தோன்றியிருக்கலாம். பனியா என்பது வணிக இனத்தைக் குறிக்கும் சொல்.

தேவ்

சேவற்கொடியோன் said...

அய்யா.. வடக்கு நமக்கு நீளமான(விரிந்த) திசை என்பதால் வடக்கு எனப்பெயர் பெற்றது என்று மா.சோ. விக்டர் அவர்கள் ஒரு வகையில் விளக்குகிறார்.. சான்றாக உப்பி விரிவதால் வடை, நீளமாக இருக்கக்கூடிய கயறு வடம், என்று வடு/வட என்ற வேரைக் காட்டுகிறார்.. தொல்காப்பியம் சுட்டும் நால்வகை சொற்களில் ( இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல் ) இதிலுள்ள வடசொல் பொருட்டு விளக்கும் பொழுது, தொல்காப்பியர், தமிழைக் கருவாக வைத்து இலக்கணம் யாத்தமையால் தமிழ் வழங்கும் இதயப் பகுதியில் இருந்து நகர்ந்து செல்லச் செல்ல வழங்கும் சொற்களே வடசொல் என்ற புதிய பார்வை முன்வைக்கிறார்.. திரிசோல் என்பதற்கு இயற்சொல்லுக்கு மாறான திரிந்த நிலையில் உள்ள சொல் என்று முடிக்கிறார்.. இது பற்றி உங்கள் கருத்து ?

இராம.கி said...

நான் சொல்லவேண்டியவற்றை மேலே கட்டுரையில் சொல்லிவிட்டேன். வடக்கு என்ற சொல்லைப் பற்றிய அவர் கருத்தை நான் ஏற்கத் தயங்குவேன்.