Thursday, February 26, 2009

இலங்கை இனக்கொலை பற்றிய அறிக்கைகள்

இலங்கையின் மேலுள்ள இனக்கொலைக் குற்றஞ்சாட்டலை ஆய்ந்தறிவதற்காக, அமெரிக்க மேலவை உட்குழுவின் முன்னால் அளிக்கப்பட்ட அறிக்கைகளை கீழே உள்ள சுட்டியில்

http://voicefromtamils.blogspot.com/2009/02/us-subcommittee-to-hear-genocide.html

படிக்கலாம். இதில் இரு அறிக்கைகள் வெள்ளைக்காரர்கள் அளித்தது. மூன்றாவது ஈழத் தமிழர் அளித்தது. யாரேனும் சில ஈழத் தமிழர்கள், மற்ற தமிழரும் அறியும் வகையில், இந்த அறிக்கைகளைத் தமிழாக்கிப் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும். வாய்ப்பிருக்கும் தமிழகத் தமிழர்கள் இவற்றைத் தமிழ் மிடையங்களில் (குறிப்பாக அச்சுத் தாளிகைகளில்) வெளிவர வைத்தால் நன்றாக இருக்கும்.

இப்படி நான் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. (என்னை மன்னியுங்கள்.) பொதுவாகத் தமிழர்கள் சொன்னால், மற்ற தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ”அவனும் பழுப்பு, நானும் பழுப்பு, அவன் பேச்சை நானென்ன நம்புவது?” என்ற எகத்தாளம் நம்மிடையே நிறையவே உண்டு. இந்த எண்ணம் சிற்றகவையில் இருந்தே நம்மிடம் வருவதனால், பழுப்பு நிறத்தவர் பேச்சை தமிழர்கள் சட்டென்று நம்புவதில்லை. மிகுந்த விளக்கங்கள் தரவேண்டும். ஆனால், வெள்ளைக்காரர்கள் சொல்லுவதை அப்படியே நம்புவார்கள். (அந்த அளவிற்கு நம்மில் அடிமைப் புத்தி விரவிக் கிடக்கிறது); எனவே தான் இந்த அறிக்கைகள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதால், மொழிமாற்றம் செய்யச் சொல்லுகிறேன்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “தமிழர் பற்றிய அறிக்கைகள் ஒருபக்கம் உலகெங்கும் சொல்ல வேண்டும்; அதற்கு ஆங்கில மொழியில் அறிக்கைகள் வேண்டும். இன்னொரு பக்கம் அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் (குறிப்பாக 6.5 கோடி இந்தியத் தமிழர்கள்) உணரவேண்டும்; அதற்குத் தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்யப்படவேண்டும். [இதை நம் போன்றோர் செய்யாததனால் தான் இந்து நாளிதழ் போன்றவர்கள் தமிழரை ஏமாற்ற முடிகிறது.]”

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

சரியாச் சொன்னீங்க !
இது பற்றிய தகவல்கள் நம்ம ஊர் பத்திரிக்கைகளில் வராது.