Sunday, August 20, 2006

பஞ்சு

அண்மையில் சம்பந்தம் பற்றி சொல் ஒரு சொல் பதிவில் ஒரு பின்னூட்டு இட்டிருந்தேன். பின்னால் பழைய கட்டுரைகளைக் குடைந்து கொண்டிருந்த போது, 20/10/2001 ல் நண்பர் கணேசனோடு தமிழ் இணையம் (tamil.net) மடற்குழுவில் "பஞ்சு" என்ற சொல் பற்றி உரையாடிக் கொண்டிருந்த இடுகை மீண்டும் கிடைத்தது. அப்பொழுது சவுதியில் இருந்தேன். இப்பொழுது அதைச் சற்றே சரி செய்து இங்கே இடுகிறேன். உங்கள் வாசிப்பிற்கு. அன்புடன், இராம.கி. 

 அன்பிற்குரிய திரு. கணேசனுக்கு, 
-------------------------------------------- 
At 04:53 PM 10/20/2001 +0000, you wrote: 
 பஞ்சு: சொல்லாராய்ச்சி 
------------------------------ 

பஞ்சு என்ற சொல்லுக்குத் திரி, இழை என்றபொருள்கள் உண்டு. விதை நீக்கிய பருத்தியை பந்தாகச் செய்து திரி, நூல், இழை போன்றன செய்யப்படும். பந்து என்ற சொல் பஞ்சு என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. F. கிட்டெல் என்னும் பாதிரியாரின் கன்னடப் பேரகராதியைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்தன: கன்னடத்தில், 

1) பஞ்சு = A torch (பந்தம் என்னும் தமிழ்ப்பதத்தை ஒப்பிடுக.) 
2)பஞ்சிகெ = The ball or roll of cotton from which the thread is spun. (தமிழின் பந்து என்பதுடன் ஒப்பிடுக). 
தமிழில் பந்து -> பஞ்சு என்றாவதற்கு மேலும் சில சான்று தரலாம். 
விந்தம் (விந்தியமலை) தமிழில் விஞ்சை என்று வரும் (பெருங்கதை), 
ஸந்த்யா என்னும் வடசொல் ஸஞ்ஜெ என்று கன்னடத்தில் ஆகும். 
இது போலவே பந்து -> பஞ்சு என்றானதாகத் தெரிகிறது. 
பந்தி என்றால் இழைபோல வரிசையான அணி. 
பந்திப்பாய் = மிகக் குறுகலான, ஆனால் மிக நீண்ட பாய். 
இந்த பந்து <-> பஞ்சு தொடர்பை வேறொரு சொல்மூலமும் காணலாம். 
<->பஞ்சம் = வரட்சி, வறுமை. 
<->கன்னடத்தில் பஞ்ஜெ என்றால் மலடி/வறடி. 
<->சமற்கிருதத்தில் வந்த்யா என்றால் மலடி. 
<->பூமியைப் பெண்ணாக உருவகம் செய்தல் மரபு. 
<->நிலமகள் அழுத காஞ்சி - புறம்; 
<->நிலம் என்னும் நல்லாள் - குறள். 
<->பஞ்சம் பூமி கொள்ளும்போது, "நிலமகள் மலடுபட்டாள்" என்றல் பொருத்தமே. பஞ்சம், (வரட்சி), பஞ்ஜெ (மலடி) போன்ற சொற்கள் *பந்து என்பதுடன் தொடர்புடையது என்று திருத்தமாகக் காட்டுவது வடமொழிச் சொல்லாகிய வந்த்யா (இது *பந்த்யா என்னும் திராவிடச் சொல்லிலிருந்து வந்திருக்கவேண்டும்). 
<->வந்தி என்னும் வறுமைக் கிழவி பிட்டு விற்றதை மதுரைத் திருவிளையாடல் பேசும். 
<->பந்திலிருந்து இழைத்தெடுப்பது திரி, நூல்; 
<->கன்னடம் துணி வெளுப்போர் திருமணங்களில் பிடிக்கும் பந்தத்தைக் பஞ்சி என்றும், நூல்திரிக்கும் பந்தைப் பஞ்சிகெ என்றும் சொல்வர். 
<->பஞ்சம்(< *பந்தம்) கொண்டு இளைப்பதை வந்தி/பஞ்சை என்ற சொற்கள் காட்டும். குழந்தையில்லாமல் இளைக்கும் தாய் தான் பஞ்ஜெ (மலடி) என்பர் கன்னடியர். 
<->பஞ்சு சொல் பற்றி உங்கள் கருத்தென்ன? 
<->அறிய ஆவல். 
<->அன்புடன், 
<->நா. கணேசன் 
<-> ------------------------------------------------- 
<->
<->பஞ்சு பற்றிய உங்கள் மடல் கண்டேன். ஏற்கனவே பாலாவுக்கு எழுதுவதாக ஒப்புக் கொண்ட பயன்/ஊதியம் பற்றிய மடல் அரைகுறையாகக் கிடக்கிறது. அடுத்து counsel என்பதற்கு என்ன சொல்வது என்று ஆசீப் கேட்டிருந்தார். இதற்கு விடை எழுந்தும், அதை எழுத்தில் வடிக்காது இருக்கிறேன். இயற்கையாகவே உள்ள வேலைப்பளு. (அது தடைப்பட்டுப் போனால், "எதற்காக வந்தாய் இந்தியாவில் இருந்து?" என்ற கேள்வி எழும். சம்பளம் வாங்குகிறேனே!) நடுவே அவ்வப்போது இணையத்தில் சூடான வாக்குவாதங்கள் வரும் போது, மொழியியல் பற்றி எழுதுவது தடைப் பட்டுப் போகிறது. இது மாதிரி மடல்களுக்கு உடன் விடையிறுக்க வேண்டிய கட்டாயம். என்ன பண்ணுவது? உங்களுக்கு விடையிறுப்பதில் சுணக்கம். இனி சொல்லுக்கு வருகிறேன்.
<->
<->தஞ்சைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ப.அருளி தன் "தமிழ், சமற்கிருதம் அற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்" என்ற பொத்தகத் தொடரின் மூன்றாவது தொகுதியில் பந்து என்ற சொல்லைப் பற்றி எழுதியிருக்கிறார். மொத்தம் 5 தொகுதிகள்; படிக்க வேண்டிய, படி எடுக்க வேண்டிய பொத்தகங்கள். சென்னைக் கன்னிமாரா நூலகத்தில் நான் படியெடுக்க முனைந்த போது, என்னால் மூன்றாம் தொகுதியைப் பெறவே முடியவில்லை; மற்ற நான்கை மட்டுமே படி எடுக்க முடிந்தது. பல காலம் முயன்றும், அந்தத் தொகுதி மட்டும் அகப்படவே மாட்டேன் என்கிறது. ஒருவேளை தொலைந்து போனதோ, என்னவோ? எனவே, நானறிந்த வகையில் தொடருகிறேன். 
<->
<-> முதலில் நாம் காணவேண்டிய வேர்ச் சொல் "பல்" இதைப் பற்றி புலவர் இரா. இளங்குமரன் "தமிழ் வளம் - சொல்" என்ற பொத்தகத்தில் எழுதியுள்ளார். 
<->
<->இந்தச் சொல் முதலில் வெண்மைப் பொருளைக் குறித்து, பின் "பல்" என்னும் உறுப்பைக் குறிப்பதாயிற்று. கண்கள் இரண்டு; காதுகள் இரண்டு; பற்களோ நிறையவே இருக்கின்றன. பொருள் நீட்சி பெற்று பல்>பல என்று பன்மைப் பொருளைக் குறிப்பதாயிற்று. பல்லுக்கு நாம் நிறையவே கடன் பட்டிருக்கிறோம். இப்படிப் பல்கிய சொற்கள் பலப் பல. அதில் சில சொற்களை மட்டும் இப்பொழுது பார்ப்போம். 
<->
<-> முதலில் "பத்து" தமிழில் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் (வட இந்திய மொழிகள், இந்தையிரோப்பிய மொழிகள் ஆகியவற்றிலும் கூட) சில மாந்தனின் உறுப்புக்களில் இருந்து கிளர்ந்தவை தான். (இந்த எண்ணுப் பெயர்கள் பற்றிய நீண்ட கட்டுரை அவற்றின் பெயர்கள், குறியீடுகள், வளர்ச்சி இதையெல்லாம் விவரிக்கும் வகையில் பாதி எழுதப்பட்டதோடு கிடக்கிறது. "இன்று ரொக்கம், நாளை கடன்" என்று கிடக்கும் அந்தக் கட்டுரைக்கு என்று விடிவு பிறக்குமோ? அறியேன். இருப்பினும் இங்கே பத்தை விளக்குமுன், மற்றவை பற்றி கீழே சுருக்கமாக எழுதுகிறேன்; ஒருவேளை புரிபடாமற் போனால், மன்னியுங்கள். முழு விளக்கம் அந்தக் கட்டுரையில் தான் இருக்கிறது.) 
<->
<->முதலில், ஒன்று என்ற எண், ஊனோடு தொடர்பு கொண்டது (மரக்கறிக்காரர் மன்னிக்க! ஊன் தான் மாந்தனை உருவாக்கியது.); 
<->
<->இரண்டு என்பது ஈருவதோடு (துமிப்பதோடு) தொடர்பு கொண்டது; 
<->
<->மூன்று என்பது மூக்கு/துயிக்கை (ஆமாங்க, யானைத் துதிக்கை தாங்க) ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது.(துய்=முக்குத்துளை; துய்ம்பு>தூம்பு = துளையுள்ள குழாய்; தூம்பு>தூப்பு> tube; இரண்டு துளை கொண்ட மூக்கு மூன்று தோல் கொண்டது; குறியீடும் அப்படித்தான்; துய்>த்ருய்>த்ரி என வட மொழியில் மாறும். தமிழில் மூக்கு என்ற சொல்லை ஒட்டியே மூன்று என்ற சொல் கிளர்ந்தது.) 
<->
<->ஐது என்ற சொல் கய்யு (கை)/செய்யோடு தொடர்பு கொண்டது. (செய்கு, சகரம் இழந்து அய்கு/அய் ஆகும். இன்னொரு பக்கம் கன்னடம், துளு வழியே இது பள்>பய்யோடும் தொடர்பு கொள்ளும் பள்>பண்ணு> பண்டு = கை.  பண்டு> பந்து>பஞ்சு = கை. பண்ணு>பாணி = கையில் ஏதோ கொண்டிருத்தல்.  தண்ட பாணி= தண்டத்தைக் கையில் வைத்திருக்கும் முருகன். பள்>பய்=ஹய்=அய். ) 
<->
<->நாலு என்பது நலிந்த (குறைந்த) கையோடு தொடர்பு கொண்டது; நலி+கை> நலிகை>நாலிகை>நாலுகை>நாலு (ஏற்கனவே பலமுறை நான் சொல்லுவது போல, பாமரரிடம் தான் சரியான சொல் இருக்கிறது; படித்தவர்கள் நீட்டி முழக்கி வடிவத்தைக் குலைத்து விடுகிறோம். பொத்தகம் ஒரு எடுத்துக் காட்டு; ககரம் மெலிந்து ஒலித்து, சில பொழுது முற்றிலும் இல்லாமல் போவதற்கு தென் தமிழ்நாடு நல்ல காட்டு: அவுக வர்றாக> அவுஹ வர்றாஹ>அவா வர்ரா)) 
<->
<->ஆறும், ஏழும் எழுந்தவகை உணரச் சற்று நேரம் பிடிக்கும். ஒரு+கை> ஒறுகை> அறுகை> அறுகு> அறு> ஆறு என்று ஆனது (இங்கும் ககரம் காணாமல் போகிறது);
<->
<->இதே போல, இரு+கை> இருகை> இலுகை> எலுகை> எழுகை> எழுகு> எழு> ஏழு என்று ஆனது. (ககரம் மறைந்து போகிறது) 
<->
<->அடுத்தது எட்டு; அய் +துய்>அய்தூ>அய்து>எய்து>எள்து>எட்டு; எள்+ந்+து> எண்டு> எண்ணு அப்புறம் பத்து என்பதைப் பார்ப்போம். அதற்குப் பின் ஒன்பதிற்கு வருவோம். 
<->
<->பல்+து>பல்து>பஃது>பத்து (பல்>பன்; பன்னிரண்டு என்ற எண்ணின் முன்னொட்டு) பத்து>பது; பது+இன்னொன்று = பதினொன்று 
<->
<->தொள்+ந்+பது>தொண்பது (குறைந்த பத்து; தொள்ளுதல் = குறைபடுதல்) தொள்+ந்+து>தொண்டு = குறைந்தது (அதாவது பத்திற்குக் குறைந்தது) தொண்பது> ஒன்பது.  
<->
<->மொத்தத்தில், "ஊன், ஈர், மூ/துய், கய், பல்" இந்த ஐந்தை வைத்துத் தான் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் தோன்றி இருக்கின்றன. இதே நிலை தான் 
<->
<->இந்தையிரோப்பிய மொழிகளிலும். பல்லில் இருந்து பத்து வந்தது போல தந்தத்தில் இருந்து வந்தது தான் ten. 
<->
<->தொண்டு துவண்டது போல, நொண்டு நுவண்டு போனது; நுவனு>nine ஆனது. 
<->
<->அய்கும் துய்யும் சேர்ந்தது தான் அய்குது>eight. 
<->
<->செய்யும் துவமும் சேர்ந்தது தான் septa; 
<->
<->செய்யும் ஏகமும் சேர்ந்ததுதான் செய்யெக்ஸ்>-six 
<->
<->அய், பய்(பை) (பண்ணுதலின் அடி பய். மேலே பள்>பண்>பண்ணு பற்றிச் சொன்னதைக் கவனியுங்கள்) ஆகி five ஆனது. 
<->
<-> ஊறு ஏற்படுவது குறைவு ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுவது தான். ஊறு>four; 
<->
<->துய்>த்ருய்>த்ரி>three; 
<->துமி>துவி>two; 
<-> ஊண்>ஊணு>ஒண்ணு>one; ஊண்>ஊட்டு>உகட்டு; உள்>ஊண்; உள்> உள்கு> உள்கம்>ஊக்கம்>ஏகம் 
<->
<-> மேலே உள்ளதை விரித்துச் சொல்லாத வரை, நீங்கள் ஏற்கப் போவதில்லை. எனவே, அதைப் பிறிதொருமுறை சொல்லுகிறேன். 
<->
<->இப்பொழுது பல்லிற்கு வருவோம். பல்>பல்து = பெருகுதல் பல்து> பலுது> பருது>பருத்து+இ=பருத்தி = பருத்துக் காணப்படும் பொருள். அதுபோல, பத்து + ஐ = பத்தை, வெள்ளைப் பூண்டில், சுளையாகப் பருத்துக் கிடப்பது பத்தை இதைப் பல் என்று சொல்வாரும் உண்டு. "வெள்ளைப் பூண்டு ஒரு பல்லுக் கொடுங்க" பல்லைப் போன்ற கொட்டையையும், பலவாகச் சுளையும் கொண்ட கனி பலாக் கனி. பலாச் சுளை போல, பருத்தியிலும் பருத்திச் சுளை உண்டு. பருத்தி எடுக்கப் பயன்படும் கொலுக்கு, பல் பல்லாக இருக்கும். இப்படி பல்லப் படுவது தான் ginning and combing. பல்ல(பன்ன)ப் பட்ட பருத்தி பன்னல். (ginned cotton). இதனால், பருத்திக்கே பன்/பன்னு/பஞ்ஞு என்ற பெயர்கள் உண்டு. பஞ்ஞு என்ற பழந்தமிழ்ச் சொல் சேரநாட்டில் ஒரு விதமாகப் பலுக்கப் பட்டு, மற்ற இருநாடுகளிலும் பஞ்சு என்று இன்னொரு விதமாக வழங்கப் பட்டது. இந்தப் பஞ்சையும், மேலே, பண்டிலிருந்து (கையிலிருந்து) விளைந்த பந்து>பஞ்சையும் சேர்த்துக் குழப்பக் கூடாது. பருத்தி ஐந்து பந்துகளாய் வெடிப்பது இணைந்து எழும் இயற்கை விளைவு. அதற்குங் கூடப் பொருளிருக்கலாம். ஆனால் அஞ்சு என்பது கையிலிருந்தே எழுந்தது.

இனிப் பெருகிப் போனது என்பது பொத்தை/பொந்தை என்றும் அழைக்கப் பட்டது. அவன் பொந்தையாக பொதுப் பொது என்று இருக்கிறான் என்றால் பெருத்து இருக்கிறான் என்று பொருள். பொந்து= பெருத்துக் கிடக்கும் தன்மை; பொந்து>பந்து= பெருத்து உருண்டு கிடக்கும் பொருள்; பந்தில் பெரியது பந்தம் (தீவட்டிப் பந்தம்); பந்தம் என்றால் கட்டு, முடிச்சு என்றும் பொருள் (பொன்/பொற்காசு முடிச்சு). இந்தப் பொற்காசு முடிச்சை போட்டியில் வைத்து விளையாடுவதால் அது பந்தயம் ஆயிற்று. பந்து என்ற சொல்லின் அடிப்பொருள் பல்ல(பன்ன)ப் படாத பருத்திக்குப் பொருந்தும். பஞ்சு என்பது விதை எடுத்து சீவி, நூற்பதற்கு அணியமாக உள்ள பொருளைக் குறிக்கும். 

இந்த நுணுகிய பொருள் வேறுபாட்டை நாம் உணர வேண்டும். (பருத்தி raw cotton; பஞ்சு refined cotton). பன்னியது இந்தையிரோப்பிய மொழிகளில் spinning என்றும் ஆயிற்று. (நாம் நூற்றல் என்றே சொல்லுகிறோம்.) பருத்தி, கொட்டை (cotton), பஞ்சு (sponge), நூல், பனுவல், இழை (இது தான் filament, file என்பதோடு தொடர்பு கொண்டது. நாம் file என்பதைத் தமிழ்ப் படுத்த இழையை விட்டுக் கோப்பைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம்), திரியீடு (thread), பாவு (warp), ஊடு (weft), துணி இன்னும் நெசவு பற்றிய சொற்களையெல்லாம் உலகத்திற்குக் கொடுத்து, முடிவில் நாம் தொலைந்து நிற்கிறோம்; இனிமேல் தான் மீட்க வேண்டும் 

அய்யா. ஏகப் பட்டது பொருள் தெரியாது போய்விட்டது. பஞ்சைப் பற்றித் தெரிந்த தமிழன், இந்தப் பருத்திப் பஞ்சிழையைக் காட்டிலும், இலகுவான, நொய்வான (denier குறைந்தது) பஞ்சை ஒரு மரத்தில் கண்டான். அது இலவம் பஞ்சாயிற்று. (இங்கே கொட்டை கிடையாது; உடனே பருத்தி வராமல், பஞ்சு என்ற சொல் வந்து விட்டது பாருங்கள்). அந்த மரம் இலவம் பஞ்சு மரம் ஆகி, நாளடைவில் இலவ மரம் ஆனது. 

நீங்கள் சொன்ன பந்திப் பாய். அதுவும் பல்லோடு தொடர்பு கொண்டதுதான். பல்+து>பற்று = கெட்டியாகப் பிடித்துக் கொள் பற்று+இ = பற்றி >பத்தி>பக்தி = இறைமேல் கொண்ட பிடிப்பு; (சிக்கெனப் பிடிப்பேன் எங்கு எழுந்து அருளுவது இனியே!) பல்+ன்+து = பந்து= அடுத்தடுத்த வரிசை (பற்கள் இருப்பதைப் போல) பந்து+அம் = பந்தம்= நமக்கு அடுத்தடுத்து உள்ளவன் = சொந்தக்காரன் பந்து+இ = பந்தி = அடுத்தடுத்து வரிசையாய் இருப்பது; (அந்தத் திருமண வீட்டில் 10 பந்தி நடந்துதான் என்றால் அவ்வளவு வரிசைச் சாப்பாடு நடந்தது என்று பொருள்.) 

பத்தி என்றாலும் வரிசைதான். (சிவகங்கை மாவட்ட வழக்கு. "தம்பி, பத்திலெ உக்காருங்க" - இங்கே பந்தி என்ற பொருள் கிடையாது. இது வேறு வரிசை. செட்டி நாட்டில், வளவில் இருந்து இரண்டாம் கட்டுக்கும் பந்திக் கட்டுக்கும் இடையில் உள்ள குறுகிய இடமும் பத்தி என்றே அழைக்கப் படும்.) பந்திக்குப் போடும் பாய் பந்திப் பாய். 

அடுத்தடுத்து அணிசேர்த்து வரிசையாக்கும் வேலை விரிவாக்கப் பட்டு, ஓலை வேய்வதற்கும் பயன்பட்டது. (வேய்வு>weave; மறுபடியும் பாருங்கள் நெசவுச் சொல்). ஓலை வேயப் பட்ட கொட்டகை, பந்தப் பட்டதால் (கட்டப் பட்டதால்) பந்தல் என்று ஆயிற்று. ஓலையில் வேய்வது ஒரு கட்டு, வரிசை, பிடிப்பு, பற்று; 

இப்படிப் பன்னுவது பின்னுவதும் ஆயிற்று. பின்னல் = embroidery; பந்தனை = கட்டு. அடுத்தது பஞ்சம். இங்கே பேராசிரியர் ப. அருளி தெரிவிக்கின்ற செய்திகளை முதலில் பார்ப்போம். 
 ---------------------------------------------------------- 
"புய்" என்னும் பழம் பெரும் மூல வேரில் இருந்து கிளம்பி "பொய்" என்னும் அரிய கிளை வேர் கிளைத்தது. இதன் பொருள் = துளை என்பதே. புய்+அல் =புயல்= பொழியும் மழை, நீர், முகில், கடுவளி புய்>பெய் = பொழி. புய்> பொய்> பொயி>பொழி = துளை வ்ழி ஒழுகு புய்>பொய்>பொயி>பொசி = துளை வழி ஒழுகு (நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோட புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்) முந்தையத் தமிழ மாந்தன் துளித்துளியாக மேல் நின்று கீழ் வீழ்ந்த மழைத் துளிகளைக் கண்ணுற்று, இத்துளிகள் இவ்வாறு விழ, துளைகள் வழியாகவே ஒழுக்கு நிகழ வேண்டும் என்று தவறாகக் கருதினான் என்ற வரலாற்றை, இச்சொல் தோற்றங்களின் பாங்கு தெரிவிக்கின்றது. பொய் = உள்ளீடின்மை, துளை ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய கிளைவேர் பொய்= துளை, பொந்து, மரப் பொந்து, உண்மையின்மை, பொய் சொல்லுகை, பயன்படாமை, கெடுதல், அவிதல், தவறுதல், வஞ்சித்தல்' 
-------------------------------------------------- 

 இனி நம் சொல்லுக்கு வருவோம். மழை பொய்த்துப் போனது; வானம் பொய்த்துப் போனது. இடம் பொசிந்து போனது (அழிந்து போனது.) பொய்ந்து>பொய்ஞ்சு>பொசிஞ்சு பொய்ஞ்சம்>பொஞ்சம்>பஞ்சம் = அழிந்த நிலை; பயன்படாது போன நிலை; கெட்டுப் போன நிலை; அவிந்து போன நிலை, தவறிப் போன நிலை. இப்படிப் பயிர் விளையாது இருந்த காலமும் பஞ்ச காலம் ஆயிற்று. பயிர் போன்று குழவி பெறாத தாயும் கன்னடத்தில் மலடி என்ற பொருளில் பஞ்சகி என்று அழைக்கப் பட்டாள் போலும். ஆக இந்தப் பஞ்சம் பொய் என்னும் வேரில் கிளைத்தது. மேலே கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன். 
 
அன்புடன், 
இராம.கி.

Saturday, August 19, 2006

காய்கறிகளும் கலப்பு வழக்கமும்

இந்து நாளிதழ் (ஆகசுடு 18) படித்துக் கொண்டிருந்தேன். கோயம்பேட்டில் இன்றையக் காய்கறிவிலை (ஒரு கிலோவுக்கு) கொடுக்கப் பட்டிருந்தது. படித்த போது, ஒன்றிரண்டு காய்கறிகளின் தமிழ்ப் பெயர் குத்துமதிப்பாகத் தான் நினைவிற்கு வந்தது. எங்கு தேடினும் சட்டென்று மட்டுப் படவில்லை. என்ன ஆயிற்று எனக்கு?

கொஞ்சம் கொஞ்சமாய் வேரழிந்து, மரபு தடுமாறிப் போகிறோமோ என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

ஒரு பக்கம் ஆங்கிலச் சொற்களின் தடுமாற்றம், இன்னொரு பக்கம் இணையான தமிழ்ச் சொற்களைத் தேடுதல் எனக் கொஞ்சம் அலைந்து தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இந்த அலைச்சலைப் பார்த்த போது, மொத்தத்தில் ஒரு கலப்பு வழக்கத்திற்கு அணியமாகிறோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மெல்லத் தமிழ் இனி.......

கத்திரிக்காய் Brinjal Rs 4.00
Common Hedge (இந்தப் பெயரைப் படித்தவுடன் பெருந்தடுமாற்றம். இது முள்ளங்கியாக இருக்குமோ என்று ஓர் அய்யம்.) Rs 5.00
வெள்ளரிக்காய் Cucumber Rs 5.00
அவரைக்காய் Field beans Rs 10.00 (இதை அந்தக் கால ஆங்கிலம்-தமிழ் அகரமுதலிகள் sabre beans என்று அழைக்கின்றன. field beans என்று எப்பொழுது ஆனதென்று தெரியவில்லை.)
புடலங்காய் Snake Gourd Rs 4.00
வள்ளிக் கிழங்கு (அல்லது கருணைக் கிழங்கா தெரியவில்லை; ஏனென்றால் white yam என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்) Yam Rs 7.00
களைக் கோசு Kales root Rs 7.00 (இதுவும் நான் புரிந்தது சரிதானா என்று தெரியவில்லை)
முருங்கைக் காய் Drumstick Rs 6.00
பாகற் காய் Bitter gourd Rs 5.00
கொத்து அவரங்காய் Cluster Beans Rs 5.00
முட்டைக் கோசு Cabbage Rs 4.00
குருக் கிழங்கு Carrot Rs 15.00 (ஆங்கிலப் பெயரையே 100க்கு 99 பேர் பயன்படுத்துகிறார்கள்; உருளைக்கிழங்கு, தக்காளி என்றெல்லாம் புதுப்பெயர் வைத்தவர்கள், இதை ஏன் விட்டார்கள் என்று தெரியவில்லை. குரு = அரத்தச் சிவப்பு)
பச்சை மிளகாய் Green Chillies Rs 10.00
இஞ்சி Ginger Rs 12.00,
விதை அவரை Beans Rs 15.00 (இதையும் ஆங்கிலப் பெயரே சொல்லி அழைக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.)
அக்காரக் கிழங்கு Beetroot Rs 4.00 (பெரும்பாலும் ஆங்கிலப் பெயர் தான் சொல்லி அழைக்கிறார்கள்;அக்காரம் = இனிப்பு)
உருளைக் கிழங்கு Potato Rs 9.00 (தமிழ்ப்பெயர் நிலைத்துவிட்டது.)
பெரிய வெங்காயம் Onion Bellary Rs 5.00 (பெரிய வெங்காயம் என்பதைத் தென் தமிழ் நாட்டில் தான் சொல்லுகிறார்கள். வட தமிழ் நாட்டில் பெல்லாரி தான்.)
சின்ன வெங்காயம் Onion Small Rs 12.00
வெண்டைக் காய் Ladys finger Rs 7.00 (தக்காளி என்பது எந்த மொழிச்சொல் என்று தெரியவில்லை. ஒருவேளை போர்த்துக்கீசியச் சொல்லாக இருக்குமோ?)
சீமைத் தக்காளி Tomato Hybrid Rs 5.00
உள்ளூர்த் தக்காளி Tomato local Rs 4.00
வாழைக் காய் Plantain (100 nos) Rs 200.00

அன்புடன்,
இராம.கி.

Friday, August 11, 2006

தில்லை - 5

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை தானுமைத் தனமாக (auomatic) பல தடவை சொல்லிய  நம்மில் பலர், தென்னாட்டிற்கு மறுதலையாக வரும் "எந் நாடு" எதைக் குறிக்கிறதென ஓர்ந்து பார்த்திருப்போமா என்பது ஐயப்பாடே. தென்னாடு என்பது முன் நான்சொன்ன தக்கணத்தைக் குறிக்கிறது; தென்னாடுடைய சிவன பெயரும் தக்கண மூத்தோனையே குறிக்கிறது. தக்கண மூத்தோன் பற்றிய விவரிப்புகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சங்க இலக்கியத்தில் காட்சியளிக்கின்றன. தென்னாட்டுச் சிவநெறி கொஞ்சம் கொஞ்சமாய் வடபுல நாடுகளில் பரவிய போது, முதலில் இலிங்க வழிபாடு என்ற கருத்தீடு அங்கு ஏற்கப்படவில்லை; சில வேத வாக்கியங்களில் அக்கருத்தீட்டைச் "சிசுனதேவ வழிபாடு" என்று கேலி செய்து முற்றிலும் இழிவு படுத்தியதுமுண்டு. பின் தக்கண மூத்தோன் என்ற மாந்த வகைப் படிமம்/குறியீடு அறிமுகமான போதே, சிவ நெறியைக் கவனிக்கத் தலைப் பட்டார். இன்றும் வடபுலத்தில் அதுபோலும் படிமங்களே பரவியுள்ளன, வடபுலத்தாரைத் தம்வயப்படுத்தும் போக்கிலேயே "எந்நாட்டவர்க்கும்" என்ற சொல்லாட்சி எழுந்திருக்க முடியும்.

[திராவிடம்/தமிழம் என்றாலே முறைப்பும், மனம்நிறை வெறுப்பும், இன்று  சிலருக்கு வருகிறதே, அவர் சிவன்கோயில்களில் எழும் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி" என்ற பதாகை முழக்கத்திற்கு (அது ஏறத்தாழ tribal முழக்கமே; "வெற்றிவேல், வீரவேல்" என்பதும், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்பதும் இக்காலத்திலும் தமிழர், இனக்குடியாரென உணர்வதை நிறுவிக்கொண்டு இருக்கின்றன.), பெருமானக் குருக்கள், ஓதுவார், பத்தரென எல்லோருமாய் எழுப்பும் நிறை முழக்கத்திற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பாரா, என்ன? திராவிடத்தை ஒழிக்க வேண்டுமெனில், சிவன் கோயிலை அல்லவா இவர் ஒழிக்க வேண்டும்? தக்கண மூத்தோனென்ற கருத்தீட்டை அல்லவா நிறுத்தவேண்டும்? தென்னாடு, தக்கணம், திராவிடம் என்பவையெலாம் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிற்கொன்று தொடர்பு உடையவையே. தென்னாடென்பது தமிழ்ச் சொல்; தக்கணம் இருபிறப்பி; திராவிடம் என்பது தமிழத்தின் பாகதத் திரிவோடு, பின்தொடர்ந்த சங்கதத் திரிவால், ஏற்பட்ட சொல்.]

சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் உருவகித்தவர் தென்னாட்டாரே! வேதங்களிலும், அவற்றின் விளக்க நூல்களிலும், சிவன், விண்ணவன், கொற்றவை (கொற்றவையைத் துர்க்கை என்பார்; கொற்றை = கோட்டை = துருக்கம்; துருக்கம் , துர்க்கை என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும்.) எல்லாம் விளிம்புநிலையில் அன்றி முதற் தெய்வங்களாய்ச் சொல்லப் பட்டதேயில்லை. தென்னாட்டின் ஐந்திணைத் தெய்வங்கள் ஆன சேயோன், மாயோன், வேந்தன், வாரணன், கொற்றவைக்கு இணையாகப் பின்னாளில், உருத்திரன்/சுப்ரமண்யன், விண்ணு/விஷ்ணு, வேந்தன்/இந்திரன், வாரணன்/வருணன், போன்ற வடபால் தொன்மங்களோடு பொருத்தினாலும், அவையெல்லாம் விளிம்புநிலைப் பொருத்துகளாகவே இருந்தன. (சுப்ரமண்யன் என்பது கண்டு நாம் மருளவேண்டாம்; சிவ பெருமான் என்ற தமிழ்க் கூட்டுச்சொல்லே வடவர்பலுக்கில் "ஷிவ் ப்ரம்மண்"  ஆகும்; அப்பனுக்கும் மகனுக்குமாய் இக்கருத்தீடு பிரியும்; முடிவில் "சிவ்" என்னும் முன்னொட்டுச் சொல் சு எனும் ஓரெழுத்து ஒரு மொழியாய்ச் சுருங்கும். ப்ரம்மண் நீண்டு ப்ரம்மண்யன் ஆகும். முடிவில் நம் சொல்லையே அடையாளம் காணமுடியாது நாம் தவிப்போம். சு எனத் தொடங்கும் இரு பிறப்பிச் சொற்கள் எல்லாமே சிவ - red- எனும் முன்னொட்டில் கிளைத்தவை. மஞ்சள்/குங்குமம் அணிந்த சிவ மங்கலி பேச்சுவழக்கில் சு மங்கலி ஆவாள். தாலிக்கு மாறாய் மஞ்சளணிவது தென்னாட்டுப் பழக்கமே. அவ்வளவு ஏன்? தாலியணிவதும் தென்னாட்டுப் பழக்கமே.)

வடபுலக் கங்கைக்கரையில் வேள்விநெறி பரவியபோது, அரசருக்கும், பெரு நிலக் கிழாருக்கும், செல்வந்தருக்கும் நன்மை கொடுப்பதாய்ச் சொல்லி அவரை அண்டியே வேதியர் வேள்விகளைச் செய்து இருக்க முடிந்தது; அதே பொழுது, பொதுமக்களோ, வேதநெறியில் ஈடுபடாமல், தத்தம் ஆளுமைக்குத் தக்க, சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் வணங்கினார். இச் சிவ, விண்ணவ, கொற்றவைப் பரவல் தென்புலத்திலும் நடந்தது.  மேல் தட்டிற்கொன்று, கீழ்த்தட்டிற்கு ஒன்றெனச் சமய இடைவெளி வேதியருக்கு இடைஞ்சலாய் அமைந்தது. பொதுமக்கள் சற்றுதள்ளியே அவரை வைத்தார்.

கி.மு. 600 களுக்குச் சற்றுமுன் (எத்தனை நூற்றாண்டுகள், ஒன்றா, இரண்டா என்பது தெரியாது), மெய்யியல் (philosophy) வரிதியான கேள்விகளுக்கு வேத நெறி உள்ளாக்கப் பட்டது. பொதுமக்களிடையே அற்றுவிகம் (ஆசீவகம்), செயினம், புத்தம் எழுப்பிய தாக்கத்தை அறிந்த அரசரும், மற்றோரும் வேறு வழியின்றி நெறிமாறத் தொடங்கினார். அதுவரை தியை (ஒளியுள்ள வானம்- dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்> வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) எனச் சிறு தெய்வங்களையே பரவிய வேதநெறியார், ஆகமநெறியைப் (ஆகிவந்த நெறி ஆகம நெறி. இதுவும் மரபு நெறி தான். ஆனால் தென்புலம், பொதுவான வடபுலம் ஆகியவற்றின் நெறி) பார்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய்க் கலவைநெறி எழத் தொடங்கிச் சிவநெறி (அதேபோல விண்ணெறி) என்பதாய்ப் பெருந்தெய்வ வணக்கமாய் மாறியது. கலவைநெறி உருவான பின்னரே, குருக்கள்மார் மக்களிடை ஏற்கப்படும் நிலைக்கு வந்தார். [எப்போதுமே வெளியிலிருந்து திணிக்கப் பட்டு மக்களுடன் ஒன்றா மதம் மக்களிடையே நிலைக்காது. உள்ளூர்ப் பழக்கங்களை அணைத்து ஒன்றுபடும் மதமே மக்களை ஈர்க்கும்.] வேதாகமக் கலவைநெறி எழுந்த கதை இது தான்.

வேளும்சடங்கு செய்வது வேள்வி. வேள்வி செய்தவர் வேள்தர் (>வேதர்); வேளும் போது (= வேண்டும் போது) கூறிய பரவு (pray) வாசகங்கள் வேள்தம் (>வேதம்., வித் எனும் கருத்துமுதல் வேரில் ”வேதம்” பிறந்ததாகக் கருத்து முதல் உரையாளர் சொல்லப் புகுவார்; அது பொருந்தப் புகல்வதென நான் சொல்வேன். வேள்தல் (= வேண்டல்) - ஐயே நான் அடிப்படையாகக்குவேன். ஏனெனில், இன்றும் கடவுளை, தெய்வங்களை, வேண்டத்தான் செய்கிறோம். வேண்டல் வேதநெறியா, சிவநெறியா, விண்ணெறியா எனப்பாராத பொதுச் சொல். வேள்விகளுக்குச் சற்றும் தொடர்பிலா வகையில், இறைவனுக்கு இடையாளனாய் சங்க இலக்கியங்களில் கூறப்படும் வெறியாட்டு வேலனும் (நாட்டுப் புறங்களில் சாமியாடி என்பார்), இன்று வரை வேளன்>வேளான் எனப்படுகிறான். காட்டாக, சிவகங்கை மாவட்டத்தில் அய்யனார் கோயில் பூசாரியார், வேளார்>வேளகாரர் என்றழைக்கப் படுவார். அதுபோலச் சங்க இலக்கியத்தில் வேள்வி செய்யாது வேறுதொழிலில் ஆட்படும் பார்ப்பாரை வேளாப் பார்ப்பாரென்பார். இச்செய்திகளை ஒருங்கே எண்ணின், வேளுதல்  வினையின் ஆழம் புரியும்.] "வேள்வியின் மூலம் வேளுதல்" என்பது ஒருவகை நெறி. வேள்வி அல்லாது இறைவனை வேண்ட முடிவது இன்னொரு வகை நெறி. முன்னால் சொன்னபடி, மேல்தட்டு வருக்கத்திற்கு மட்டுமே வேள்வி பயன்பட்டது. வேள்வியில் "எஜமானன் - யாகம் ஏற்படுத்துபவன்" என்ற ஒன்று எப்பொழுதுமுண்டு. பொதுமக்கள் பரவுவதாய்ச் சொல்லி யாகத்தைச் செய்ய முடியாது. {yaagam is a structured way of praying; it has series of rites.]

கலவைநெறியை உருவாகிய பின்தான், வேதியர் அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகியவற்றை எதிர்த்துப் பொதுமக்களைத் தம்பக்கம் திருப்ப முடிந்தது. கி.மு.600 களுக்கு அண்மையில் வட புலத்தில் வேதப் பழக்கம் குறையத் தொடங்கியது. புது விளக்கங்கள் வேத நடைமுறைக்குக் கற்பிக்கப் பட்டன. கீழ்நிற்றங்கள் (உபநிடதங்கள்) எழுதி, மெய்யியற் பொருட்பாடுகள் கூறப்பட்டன. வேதியர் கொஞ்சம் கொஞ்சமாய் தெற்கே வரத்தொடங்கினார். சங்க காலத்திலேயே பார்ப்பனர் தாக்கம் தமிழகத்தில் இருந்ததே என்று சிலர் கேட்பார்; இதில் பெருமைப்படவும், வெட்கப்படவும் ஒன்றுமில்லை. வேதியர் பெயர்ச்சி தென்னாட்டில் ஏற்பட்டது ஒரு பட்டகை (fact). அவ்வளவுதான்.

வேத நெறி பின்பற்றும் மரபாளர் தெற்கே கோதாவரிக்கு வந்த பின்னால், அவரின் விதியாளரால் தாலி கட்டிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார். (ஓரளவு பார்ப்பனரல்லாத தென்னாட்டுப் பெண்களையும் மணஞ்செய்திருக்க வேண்டும் என்றே ஆய்வாளர் எண்ணுகிறார். குறிப்பாக மராட்டியப் புடவைக் கட்டுமுறை ஓர்ந்துபார்க்க வைக்கிறது.) முறைப்பெண்ணைத் திருமணம் செய்யும் தென்னாட்டுப் பழக்கம் ஏற்கப்பட்டது. பெண்களோடும், வேதம் அறியாதாரோடும் (பெருமானரல்லாதாரோடும்) உடனிருந்து விருந்துண்ண அனுமதிக்கப் பட்டார். பழையது சாப்பிட ஒப்புதல் கிடைத்தது. பெருமானர் விலங்குகள் சாப்பிடுவதில் புதிய பட்டியல் கூட ஏற்பட்டது. இவற்றை ஆபஸ்தம்பச் சாற்றமும், பௌதாயணச் சாற்றமும் (சாற்றம் = சாத்திரம்) விளக்கமாய்க் கூறுகின்றன. இப்படி விளங்கங்களை நான் எழுதும் காரணம், வேதியரில் சிலர் ”வேதம் ஏதோ தான்தோன்றி- சுயம்பு ” என்பதுபோல் பல மூதிகங்களைக் கிளப்புவதை மறுக்கவே. பொறுமையாக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு முன் நடந்தவைகளைப் பார்ப்பது, அதிலும் வேதம் போன்றவற்றைப் பார்ப்பது, இன்று மிகவும் அரிதாகிவிட்டது. கொடிமரபை (பரம்பரையை) மறுதலிப்பதே இன்று பலருக்கும் வழக்கமானது.

நாவலந்தீவின் பல பண்பாட்டு வழக்கங்களும் இதுபோலத் தென்னாட்டு. வட நாட்டுக் கலவை வழக்கங்களே. இன்றைக்குத் தம் தென்னாட்டு (=திராவிட) ஊற்றுகைக்கு வெட்கப்படும் சில மெத்தப் படித்த மேதாவிகள், வேதத் தன்மையை மட்டுமே நம்முன் வலியுறுத்திப் போகலாம்; ஆனால் உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். (மேனிலைப் பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியுள் நுழையும் போது, தம் நாட்டுப்புறத் தகப்பனையோ, அல்லது தாயையோ, உடன் படிக்கும் மாணிவரிடை அறிமுகம் செய்து வைக்க வெட்கப்பட்டுத் தன் கொடிவழி பற்றிப் பொய்சொல்லித் திரியும் சில முட்டாள்களையும், தம் தாய்வழிக் கொடி பாண்டித் தமிழர்களிடம் இருந்தே பிறந்ததென்று "மகாவம்சம்" சொல்வதை வாய்ப்பாக மறந்து, தம் தந்தை வழிக் கொடியான ஆரியத் தோற்றத்தை மட்டுமே விண்ணாரம் பேசி, அதேநேரம் தாய்வழி உறவான தமிழரை ஈழததீவிலிருந்தே விரட்ட முற்படும், சிங்கள முட்டாள்களையும் இங்கே எண்ணாதிருக்க முடியவில்லை.)

இதுபோன்ற பெருமானரின் பரவலை 3 அலைகளாய்ப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் கூறுவார். (The Brahmin in the Tamil Country - Prof. N.Subrahmanian, Retd. Prof.of History, Madurai Kamaraj University, ENNES publications, Madurai, year 1989) கி.மு. 1000-800, கி.மு.500-200, கி.பி 300-500 என்று அவர் பகுப்பார். இந்த அலைகள் இரண்டா, மூன்றா என்பதில் ஆய்வாளரிடையே வேறுபாடுண்டு. ஆனால், குத்தர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் சாரிசாரியாய் பெருமானர் தெற்கே பரவியது கி.பி. 500க்குப் பிறகே. அதற்கு முன் எழுந்த அலையை புத்தர், மாவீரர் காலத்திற்கு சற்று பின்னாலென நான் கருதுகிறேன். இந்த அலையின் உயர்ச்சியாய், அதனூடே செயினரும் [குறிப்பாக பத்ரபாகு (இற்றைக் கர்நாடகச் சமண வெள்ளைக்குளத்து -ஸ்ரவண பெள குளா - கோமடேசுரர் சிலையை நினைவுக்குக் கொணர்க), உடன் அரசு துறந்துவந்த சந்திரகுத்த மோரியன், அவன் மகன் பிந்துசாரன் நம் தகடூர் வரை எடுத்து வந்த மோரியர் படையெடுப்பு], புத்தரும் (பிந்துசாரனின் மகன் அசோகன் புத்த மதத் துறவிகளைத் தெற்கிற்கும் ஈழத்திற்குமாய் அனுப்பியது - அதில் அவன் மகனொருவன் கூட இருந்திருக்கலாம்), அதையொட்டி முன்னும் பின்னும் வந்த பெருமானர் எனப் படித்தானத்தில் இருந்து தகடூரும், காஞ்சியும் இன்னும் மற்ற ஊர்களுக்கும் வந்து சேர்ந்த பயணங்கள் மிகப் பல.

வந்தாரில் பலரும் தமிழ்க்குமுகத்தில் ஏற்கப் பட்டார்; பெருமானருக்குத் தலைநகர்களில் சேரிகளும், மற்ற இடங்களில் ஊர்களும் (பெரும தாயங்கள்; தந்தது தாயம்; பெருமருக்குத் தந்தது பெரும தாயம். பெரும தாயம் பின் ப்ரம்ம தேயம் என்று திரிவு கொள்ளும்) தரப்பட்டன. அவ்வூர்களின் பெயரே பிரிவுக்குப் பெயராயின. காட்டாக இற்றை மரபுப் பெருமானரில் (smartha brahmins) பெருகணப் (ப்ருகச்சணம்) பிரிவினர் கண்டரமாணிக்கம், மலை நாடு, நிலகனூர், மாங்குடி, பலமன் நேரி, மூச நாடு, குளத்தூர், மருதஞ்சேரி, சத்தியமங்கலம், பூரூர் என்ற ஊர்களில் குடியேறினார்; எண்ணாயிரவர் (அஷ்டசஹஷ்ரம்) அத்தியூர், அறிவர்பாடி, நந்திவாடி, அறுகுளம் - shatkulam என்றவற்றில் குடியேறினார். (இன்னும் முகன்மையான வடமர் பெருமளவில் வந்தது குத்தர், பல்லவர் காலத்தில். அவரைப் பின்னால் பார்ப்போம்.)

இதேபோல நம்பூதிகள் கோகர்ணம் (இன்றைய கோவா) வழியாக துளு நாட்டில் நுழைந்து 32 ஊர்களிலும், சேரலத்தில் 32 ஊர்களிலும் குடியேறினார். இவருள் ஏற்பட்ட பிரிவுகளை ஆடு, ஏடு, பிக்சை, பிச்சை, ஓது, சாந்தி, அடுக் களை, அரங்கு, பந்தி, கடவு என்று பத்தாகச் சொல்வார். நம்பூதிகளைப் போலவே பழக்கம் கொண்ட தீக்சிதர் தில்லையிலும், சோழியர் திருக் கடையூர், மடலூர், விசலூர், புதலூர், செங்கணூர், திருமறைக்காடு, ஆவுடையார் கோயில் என்ற ஊர்களிலும் குடியேறினார்.

இன்னும் பல தமிழ்ப் பெருமானப் பிரிவினர் (பொன்முடியார் - hiranya kesis, முக்காணி, கணியாளர், சங்கேதி, குருக்கள், வாத்திமார் எனப் பலர்) உண்டு. இவரெலாம் எப்போது வந்தார், எப்படி உருவானார் என்ற மாந்தவியல் விவரங்களை யாரும் சேர்த்து ஆய்ந்து வைக்கக் காணோம். மொத்தத்தில் நல்ல வரலாற்றுச் செய்திகள் தொகுக்கப் படாமல், அவரவரிடமுள்ள மூதிகப் பழக்கங்களால், தொலைந்து போய்க் கொண்டுள்ளன. (எப்படி மாலத்தீவில் ஊர் மக்களின் தமிழ்த் தோற்றத்தையும், மற்ற செய்திகளையும் சேகரித்து வைக்காமல், தொல்லியல் கண்டுபிடிப்புக்களைத் தொலைக்க வைத்து, அரபு நுழைவுக்கு முன் தமக்கு வரலாறே இல்லாததுபோல் ஆக்குகிறாரோ, அதே போல் சொல்லலாம். மலேசியாவிலும் கடாரம், ஜோகூர் மாநிலங்களில் உள்ள கி.பி. 800 முந்திய சின்னங்களை, மலாக்கா சுல்தான் பர மேசுரவர்வன் இசுலாத்திற்கு மாறியதன் முன் இருந்தால் அவற்றைக் கட்டக முறையில் (sytematic) ஒழித்துக் கட்ட முயல்கிறாரோ அதுபோல் இதைச் சொல்லலாம். பெருமானரே கூட "அல்லிருமை - அத்வைதம்” மெய்யியலைப் பெரிதாகக் கருத, வரலாற்றுத் தொலைப்பைக்  கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆதி சங்கரர் பற்றியும், அவருக்கு முந்தைய வேதம், அரணகம் - ஆரண்யகம், பெருமானம் - ப்ராமண்யம், கீழ்நிற்றம் - உபநிடதம் என்ற கருத்துமுதல் வாதத்தைப் பெருமிதமாகப் பேசுவதே போதுமென இவருக்கு ஆனது. மாந்தவியல், குமுகவியல், வரலாறு இன்னபிற பெரும்பாலோருக்குத் பொருட்டாவதில்லை. தம் திராவிடப் பின்புலம் பேச அவர் நாணுகிறார்.)

நம்பூதிகள் மட்டும் விதிவிலக்கு. அவர் வரலாற்றை மாந்தவியல் முறையில் தேடித்தேடி, கூடிய மட்டும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்திப் பதிவு செய்துள்ளார். வடமொழிப் பாதிப்பை உயர்த்தினாலும், தமிழ் வடமொழிக் கலப்பைச் சொல்லிக்கொள்ள அவர் வெட்கப்படுவதில்லை. சங்க இலக்கியத்திலே அவர் சேரலத்தில் தங்கிய முதலூர் (செல்லூர்) சிறப்பாகப் பதியப் பட்டுள்ளது (அகநானூறு 216). (நம்பூதிகள் அதர்வ வேதம் பின்பற்றார். அதன் காரணத்தாலேயே தக்கணபதத்திற்கு வெகுகாலம் முன்பே, கி.மு. 500க்கு முன்பே, வந்திருக்கலாமென்று ஆய்வாளர் எண்ணுவார்.) இவர் போலவே உள்ள தீக்சிதர், சோழியர் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, August 06, 2006

தில்லை - 4

ஒரு பெருமாள் கோயிலுக்குப் போகிறோம்; மாயவனைச் சேவித்த பின்னால், அங்குள்ள பட்டர், நாம் குனிந்து ஏற்றுக் கொள்ள, சடாரியையை நம் தலையில் வைக்கிறார்; பின்னர் துழாயும், நீரும் தருகிறார். நீரை என்ன செய்கிறோம்? கொஞ்சம்போல் வாய்க்குள் குடித்து, மிஞ்சியதை நாமே நம் தலையில் தெளித்துக் கொள்கிறோம். சிவன் கோயிலுக்குப் போனாலும்,  சிலபோது அங்கு கொடுக்கும் திருநீரை (தெளிநீர் = ஆராதனை செய்யப்பட்ட தூய நீர்) தலையில் தெளித்துக் கொள்வதுண்டு. (சிவனை முழுக்கு விழைந்தோன் - அபிஷேகப் பிரியன் - என்றும் சொல்வார்.) சிவன்கோயிலில் ஏன் இப்படித் திருநீர் (திருநீறு அல்ல) போன்றவற்றைத் தலையில் தெளித்துக் கொள்கிறோம் என ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா?

வீட்டில் பூசை செய்கிறோம். பூசை முடியு முன், இறைப் படிமத்திற்கு முன் வைத்த பூசைநீரை நம் தலையில் தெளித்துக் கொளகிறோம். ஏன்? கோயில் குடமுழுக்கு நடக்கிறது; கும்பத்தில் சொரிந்ததுபோக மீந்ததை, கோபுரத்தில் இருந்த வாக்கில் குருக்கள் தெளிக்கிறார். அத்துளிகள் தம்மேல் படாதா என்று கூட்டம் முட்டி, மோதி, வாங்கிக்கொள்ளப் பார்க்கிறது. தெளிநீரைத் தம்மேல் கொள்ள அவ்வளவு முனைப்பு பலருக்கும் ஏன்? நம் வழிபாடொட்டிய பல நிகழ்வுகளில் நீருக்கு ஏன் இவ்வளவு சிறப்புக் கொடுக்கிறோம்?

இக்கால வேத - ஆகமக் கலவைநெறியில் (இதை இந்துமதம், சனாதன தருமம் என்று பலர் சொல்கிறார்; நான் வேதாகம நெறி என்பேன். அதில் முக்கால் வாசிக்கும் மேல் நம்மூர் தொடர்பு கொண்டது), வேத நெறிப் பழக்கங்களும், ஆகம நெறிப் பழக்கங்களும் பிரித்துப் பார்க்க இயலா வகையில், அதில் பின்னிப் பிணைந்து, கிடக்கின்றன. எவை ஆகம நெறியில் வந்தவை, எவை வேதநெறி வழி வந்தவை என அடையாளம் காணலாம் எனினும், முற்றிலும் செய்வது சரவலே. எல்லாவற்றையும் பிராமணீயம் என்று சொல்லி இழக்க முற்படும் பகுத்தறிவுக் கூட்டம் நம் ஊரை வெற்றிடமாக்கவே முற்படுகிறது. இம்மறுப்பால், வேதநெறி தழைத்தோங்கவே வழி செய்கிறோம்.

பொதுவாக (வேதநெறி மதங்களுக்கு மாறாக உள்ள) சிவநெறி, விண்ணெறி போன்ற ஆகம வழி மதங்களில் நீருக்கு மேலான உரிமை கொடுப்பார். ஆனால், ஊற்றுகை (original) வேதநெறியாரோ, தெய்வத்திற்குப் படைக்க வேண்டின், வேள்விக்குண்டத்தில் "ஆகுதி"யாக இட்டுவிடுவார். (இற்றை மரபாளரில் - ஸ்மார்த்தரில் - ஊற்றுகை வேதநெறியாராய் இருப்போர் மீக்குறைவு. பலரும் கலவை நெறியே பின்பற்றுகிறார். பழம்போக்கில் பார்த்தால், உத்தர மீமாஞ்சை பின்பற்றும் ஊற்றுகை மரபாளர் சிவன் கோயில், விண்ணவன் கோயில் என எக்கோயிலுள்ளும் வரார். கேரளத்து நம்பூதிகள் பூருவ மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்.) (ஆகுதி = ஆகியது, ஆகிப் போனது = ஹோ கயா; வேறெந்தப் பொருட்பாடும் இதற்கு இல்லை. துருவித் துருவி வடமொழியுள் அருத்தம் தேடவேண்டாம்.) நெருப்பெனும் இடையாளி, வேண்டும் தெய்வத்திடம் கொண்டு செல்வதாக வேதக்காரர் விளக்கம் கொடுப்பார். அவருக்கு எல்லாமே நெருப்புத் தான். நெருப்பே எல்லா வற்றையும் தூய்மை செய்கிறது என்பது அவரின் புரிதல். ஐம்பூதங்களில் நெருப்புக்குக் கொடுக்கும் முதன்மை வேதநெறிக்கே உள்ளது.

ஆகம நெறியிலோ, நெருப்போடு மற்ற பூதங்களும் வழிபாட்டில் புகுந்து வரும். ஐம்பூதங்களையும் விடாது வழிபாட்டில் கொண்டு வருவார். குறிப்பாக நீர் எனும் பூதம். ஒரு படையல் செய்தால் தெய்வப் படிமத்தின் முன் காட்டி கொஞ்சமாய் நீரைத் தெளித்து வைத்துவிடுவார். நாம் விழையும் தெய்வம் நம் ஈடுபாட்டைப் பார்த்து அதை மனப்பூருவமாய் எடுத்துக்கொள்வதாய் ஆகமக்காரருக்கு ஐதீகம். பின் அப்படையலை பத்தர்கள் (ஒன்றைப் பற்றி நிற்பவர் பற்றர்கள்> பத்தர்கள்> பக்தர்கள். இச்சொல்லின் தமிழ்வேரைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது போல இது இறைப் பற்று.) எல்லோரும் பங்குபோட்டுக் கொள்வார்.

கருப்பருக்கு ஆடுவெட்டினும்  ஆட்டைப் பலிபீடத்திற்கு (நம் கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதற்கே முதலில் பலிபீடங்கள் இருந்தன. இன்று சில கோயில்களில் கால மாற்றத்தால், விலங்குகளைப் பலியிட வேண்டாம் எனும் எண்ணத்தால் உந்தப்பட்டு, சோற்றையும், மற்றவற்றையும் வைத்துப் "பலி" தருகிறோம்; அவ்வளவு தான். சில நாட்டுப்புறக் கோயில்களில் இன்றும் விலங்குகளைப் பலிகொடுக்கும் பழக்கம் உண்டு.) முன் கொணர்ந்து காட்டி சற்று நீர்தெளித்து அது சிலிர்த்துக் கொண்டவுடன், பலி கொடுப்பார். பலி கொடுத்த விலங்குக் கறியை பின் வெட்டி வேகவைத்து, கூடவே கூட்டாஞ் சோறும் வடித்துக் கருப்பருக்கோ, சூலாயுதத்தின் முன்னோ, படையல் செய்து,  படையல் கொடுத்த எல்லோருமாய்ப் பங்குபோட்டுச் சாப்பிடுவார். ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளியும் சென்னைக்கு வடமேற்கே, பெரிய பாளையம், ஆரணிப் படுகையில், கிடாவெட்டிப் பவானி அம்மனுக்குப் பலியிட்டுக் கூடியாக்கி உண்ணும் காட்சி பரவலாக நடப்பது தான். [கூட்டம் கொள்ளாது; ஒரு தடவை போய்ப் பாருங்கள். நாட்டாரியல் பழக்கங்கள், பண்பாடுகள் என்ன, என விளங்கும்.

பெருமானப் பழக்கம் (braminized practices) இல்லாத கோயில்கள் நாளா வட்டத்தில் பெருமான ஆக்கத்துள் வந்துசேரும் நடைமுறைகளையும் காணலாம். திருவேற்காடும், மாங்காடும் இப்படி முழுதும் மாறிவிட்டன. பெரிய பாளையம் விரைவில் மாறிக் கொண்டுள்ளது. கிடா வெட்டுவது இப்போது கோயிலுக்கு வெளியில் வெகுதொலைவில்; இன்னும் சிறிது நாளில் இப்பழக்கம் நின்றே போகலாம். யாருக்குத் தெரியும்?] அது ஏன் ஆட்டின் மேல் நீர் தெளிக்கிறார்? (சிலர் குறும்புத்தனமாய் ஆட்டின் ஒப்புதல் கேட்பதற்காக தண்ணீர் தெளிப்பதாகச் சொல்வார்:-)).

வேறொன்றும் இல்லை; இறை வழிபாட்டில், ஆராதனை (ஆலுதல் = மேலும் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றுதல்; தீவம், நீர், இன்னும் மற்ற பொருட்களை இப்படி இறைப்படிம முன் வட்டமாய்ச் சுற்றிக் காட்டுவோம். ஆலாதனை> ஆராதனை ஆகும். இசைக்கச்சேரியில் ஆலாவனை செய்வாரும் ஏற்றி இறக்கி வட்டமாய்ச் சுரம் பாடுகிறார். கோயில்களில்  கருவறையைச் சுற்றிவரும் வழி சுற்றாலை - சுற்றும் வட்டம் - ப்ரகாரம் - எனப்படும்.) செய்யப் பட்ட நீரைத் தெளித்தால், இறைவனுக்கு நேர்ந்து கொண்டதாக அருத்தமாம். அவன் அருளுக்கு ஆளாகி விடுகிறோமாம். இறைப் பணியில் ஈடுபடும் போது, நீர் தெளிப்பது  ஒரு குறியீடு. சில போது, எதற்கும் ஒப்பாமல், விட்டேற்றியாக இருப்பவரைப் பார்த்து "அவரைத் தெளிச்சு விட்டாச்சுப்பா?" என்கிறோம் அல்லவா? அதன் உட்பொருளைச் சற்று ஓர்ந்து பாருங்கள்.

இறைமையை ஒட்டி ஒரு பொருளுக்குப் புனிதம் கற்பிக்க நீர் தெளிப்பது முழுக்க முழுக்கத் தென்னாட்டுப் பழக்கம். [இன்று வடபுலத்திலும் பரவி வருகிறது. காட்டாக வடநாட்டு இலிங்கங்களின் மேல் இடைவிடாது நீர் ஒழுக  வைத்திருப்பார்.] கோயிலுக்கருகில் குளம் வெட்டுவது, கோயில் குளத்தில் முழுகி எழுவது, குளித்துப் பின் சாமி கும்பிடுவது, ஈரத்தோடு கோயிலுக்குள் போவது, என இறை வழிபாட்டில் நீருக்கு முகன்மை கொடுப்போம்.

நீரின் குணங்கள் பல. நீருக்கமைந்த பெயர்களும் ஒவ்வொரு குணத்தால் அமைந்தன. காட்டாக, நீர் என்ற சொல் ஈர்க்கும் குணத்தால், ஈரமென்ற சொல்லின் நீட்சியால் ஏற்பட்டது.  (இதேபோலப் பல குணங்களால் எழுந்த நீர்ப்பெயர்களைச் சொன்னால் சொல்லவருவது தவறிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.) ஒரேயொரு விலக்காய், நீரின் இன்னொரு குணத்தால் ஏற்பட்ட சொல்லை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

நீரின் மேற்பரப்பு, ஏனவடிவிற்குத் தகுந்தாற் போல் உருவம் கொள்ளும்; தவிர மேலே ஏற்படும் அசைவிற்குத் தக்கத் துள்ளும்; துள்ளல் கூடினால் தளும்பும்; பின் தெறிக்கும். துள்ளல் = குதித்தல். துள்ளும்போது துள்ளித்ததால், பரப்புத் தந்த விசையால் (பரப்புத் தந்தம் = surface tension; தந்து = நூல், கயிறு. தந்தித்தல் = நூற்றல்; நூற்கும்போது கொடுக்கும் இழுவிசையைத் தந்தவிசை - tensile force - என்கிறோம். tensile force ஐ மிக எளிதாகத் தந்தவிசை எனலாம்.  compressive force = அமுக்கு விசை.) பல்வேறு பரப்பு விசை, ஈர்ப்பு விசைகளால் துளியாகிப் போகும். துள்ளுவதில் துளி பிறக்கும் கதை இது தான்.

துள்ளல் தளும்புதற்கும், தொளதொளப்பதற்கும் வழிவகுக்கும். தந்த விசை கூடக்கூட இழுபடும் கம்பி, நூல், இன்னும் இது போன்றவை, தொளுங்கிப் போகும். எப்படி நெகிழ்வது நீளலுக்குக் காரணமோ, அதுபோல் தொள்வதும், தந்தவிசையின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுவதே. துளித்தம்>தெளித்தம் என்ற ஆக்கம் இருபிறப்பிச் சொல். துளிக்கக் கூடிய பொருள் . துளுத்தம்> தூள்த்தம்> தூத்தம் என்று பலுக்கப படும். பொத்தகம் புஸ்தகம் ஆனது போல், மீத் திருத்தத்தில் (hyper correction) தூத்தம்>தீத்தம்>தீர்த்தம் ஆகும்.

தெளிப்பது பிறவினை; தெறிப்பது தன்வினை. (தெறியின் வேர் துல்> துறு> தெறு என்றும், தெளியின் வேர் துல்> துள்> தெள்> தெளி என்றும் விரியும்.) துண்டுதுண்டாகப் பிரிவுதும், பிரிந்தவை கூடி பெரிது ஆவதும் நீருக்கும், நீர்போல் நீர்மங்களுக்கும் உள்ள குணம். இன்று தீர்த்தம் என்றால்தான் பலர்க்கும் புரிகிறது. அதன் தமிழாழம் புரிபடாது போகிறது. வேதநெறியில் தெளிக்கும் பழக்கம் கிடையாதபோது, தெளித்தம்> தீர்த்தம் என்றல்லாது, வேறெப்படித் ”தீர்த்தம்”  தோன்றி யிருக்கும்?

தீர்த்தம் கிடைத்தால் இறைவனின் அருள் பெற்றவராய், அவன் பணியில் இணைகிறவராய் ஆகிவிடுவதாய், நம்மூர்த் தொன்மம் நவில்கிறது. எனவே consecrate பண்ண வேண்டுமானால், (மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலியில் வெறுமே consecrate என்று மட்டுமே போட்டிருக்கும். அதன் மரபுவழித் தொடக்கங்கள் தென்னாட்டில் அல்லாமல் நாவலந்தீவில் எங்கும் கிடையாது.) தெளித்தத்தைத் தெளிக்க வேண்டும். ஆகம வழியில், எல்லாச் சடங்குகளிலும் தெளிப்பதில்லாமல் இல்லை. குருவிடம் மாணக்கன் படிப்பு முடிந்தவுடன் தெளிவிக்கப் பெற்று (இங்கே உள்ள 2 பொருட்பாடுகளையும் எண்ணிப் பாருங்கள்.) தெளிவிக்கை (தீக்ஷை) பெறுகிறான். தெளிவிக்கப் பட்டவன் தீக்ஷிதன் ஆகிறான். தெளிவித்த பின்னால் தான் எல்லாச் சடங்கும் உரைகளும் முற்று முழுதாகின்றன. தீர்க்கம் என்ற சொல்லிற்கு "முற்று முடிவு" என்ற பொருள் சடங்குகளை ஒட்டியே எழுந்தது. (கவனிக்க: தீர்க்க சந்தி, தீர்க்க விராமம் என்ற வடமொழிச் சொற்கள்.)

இவ்வளவு தூரம் தீர்த்தம் பற்றிச் சொன்னதற்குக் காரணமுண்டு, தீக்ஷிதர் என்பவர் வேதநெறியையும் ஆகமநெறியையும் கலந்த சமயநெறியில் உருவானவர். அக்கலவை வடபுலத்தில் உருவாகி இருக்கலாம்; அல்லது தென்புலத்தில் எல்லைநகரான படித்தானத்தில் உருவாகி இருக்கலாம். என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஆயினும் அதன்வளர்ச்சியின் உச்சகட்டம் தில்லையில் தான். அவ் வளர்ச்சியின் முகடு (mode) நடவரசன்  கருத்தீடு ....... நாம் இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும்.

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை, குறிப்பாகத் தில்லையில் பலரும் கூறும் வாசகத்தின் உட் பொருள் பார்த்தால், "அதென்ன, எந்நாட்டவர்க்கும்? யாரந்த எந்நாட்டவர்?" என்ற கேள்வி யோசிக்க வைக்கிறது. அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

திருச்சிற்றம்பலம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 02, 2006

தில்லை - 3

தில்லை - 1 எனும் பகுதியில், என் நினைவில் இருந்தபடி 4 புலியூர்களைச் சுட்டி, அவற்றில் 2 பெயர்களை மட்டுமே சொல்லியிருந்தேன். இப்போது, வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட, பு.மா. ஜெய செந்தில்நாதன் தொகுத்த, "திருமுறைத் தலங்கள்" என்ற பொத்தகத்தைப் பார்த்து, விட்டுப்போன புலியூர் பெயர்களையும், நான் செய்த தவறொன்றையும், கண்டுபிடித்தேன். அடுத்த செய்திகளுக்குப் போகுமுன் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.

முதலில் நான் செய்த தவறு. இற்றை மாவட்டத் தலைநகரான பெரம்பலூர் என்பது முன்னாளில் பெரும்புலியூர் எனினும், சிவநெறி குறித்தது இன்னொரு பெரும்புலியூராம். இப் பெரும்புலியூரானது, திருவையாறு - கல்லணை, திருக் காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் தில்லைத்தானத்தின் வலப்புறம் பிரியும் கிளைச்சாலையில் 4 கி.மீ சென்றால் உள்ள ஊரெனக் குறிப்பிட்டுகிறார். {பெரும்புலியூர்க் குழப்பத்தை மேலும் ஆய்ந்து, தெளிவுபெற வேண்டும்.]

பெரும்பற்றப் புலியூரோடும், பெரும் புலியூரோடும் சேர்த்து காவிரியின் வடகரைப் பகுதியிலுள்ள இன்னொரு புலியூர் ஓமாம்புலியூர். (அது என்னமோ தெரியவில்லை எல்லாப் புலியூர்களும் காவிரிக்கு வடபாலே உள்ளன. வலைப் பதிவுப் பின்னூட்டில் திரு. பா. முரளிதரன் சொன்னது சரி. கொள்ளிடக் கரையில் ஓமாம்புலியூர் உள்ளது.] காட்டுமன்னார் குடியில் இருந்து ஓமாம் புலியூருக்குப் பேருந்துச்சாலை உண்டு. தக்கணமூத்தியாய் உமாதேவிக்கு ஓங்காரப் பொருளை இறைவன் உரைத்ததாய் இங்கொரு தொன்மம் உண்டு. ஓமம் என்பது வேள்வியே; ஓமம் நடக்கின்ற, ஓமம் ஆகின்ற புலியூர் = ஓமம் ஆம் புலியூர்>ஒமமாம் புலியூர், ஓமாம் புலியூரெனத்  திரிந்தது.

இனி நடுநாட்டுப் புலியூர்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று கடலூர்ப் பகுதியாய் இன்றிருக்கும் திருப்பாதிரிப் புலியூர். [வலைப்பதிவுப் பின்னூட்டில் திரு. குழலி சட்டென்று சொன்னார். முற்றிலும் சரி. கடலூரின் பெயர்க்காரணமும் ஒரு மரத்தை ஒட்டியதே. கடையாழல் ஊர்>கடாலூர்>கடலூர்; கடையாழல் >  கடைஞாழல்; ஞாழல் மரம் = புலி நகக் கொன்றை மரம். சிவனுக்கு வேண்டிய மரம். கடை, கொல்லையைக் குறிக்கும்; புழைக்கடை என்கிறோம் அல்லவா?] "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" என்ற அப்பர் பாடல் இங்கு எழுந்தது. அப்பருக்குச் சிறப்பான தலம். செயினம் பெரிதும் ஓங்கியிருந்து பின் அழிந்த தலமும் இதுவே.

நடுநாட்டில் இன்னொரு புலியூர், எருக்கத்தம் புலியூர்; இன்றைய மக்கள் வழக்கில் இராசேந்திரப் பட்டணம் எனப்படுகிறது. விருத்தாசலம் - செயங் கொண்டம் பேருந்துச் சாலையிலுள்ள தலம். சென்னை - தஞ்சை நெடுஞ் சாலையில் சேத்தியாத் தோப்பை அடுத்து திரு முகிழ்நம் (ஸ்ரீ முஷ்ணம்) - விருத்தாசலம் பாதையில் ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ளது. வெள்ளெருக்கம் தலமரம். "வெள்ளெருக்கந் தலைமுடியான் வெப்பெடுத்த திருமேனி" பாடல் நினைவு கொள்ளுங்கள்.

இந்த 5 புலியூர்களையும் இணைப்பது இறைவனின் தக்கண மூத்தித் தோற்றம். நரைத்த சடை (தில்லைப் பூந்தளிர், பாதிரிப் பூ, வெள்ளெருக்கம் பூ என எல்லாமே இதைக் குறிப்பதாம்.) 5 புலியூர்களிலும் வேள்வி பெரிதாகப் பேசப்படும். இவைபோகத் தொண்டை நாட்டிலுள்ள சென்னைக் கோடம் பாக்கம் நண்பர்கள் கமலும், KVR-உம் தில்லை - 1 வலைப்பதிவுக்கு வந்த பின்னூட்டில் சொல்லியிருந்தார். அது தொண்டைநாடு என்பதாலும், பாடல்பெற்ற சிறப்பான சிவன் கோயில் அங்கில்லாததாலும், கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாதென எண்ணுகிறேன்.

இந்த அளவில் சென்ற பகுதியில் எழுப்பிய "இறைவனுக்கு ஏன் வெவ்வேறு தோற்றங்கள்?" என்ற கேள்விக்குப் போவோம்.

இறைவன் ஒருவனே. ஆனாலும் பலவாறாக உருவகஞ்செய்து அழகுபார்ப்பது நாவலந்தீவில் பலருக்குமுள்ள பழக்கம். சேயோனும், மாயோனும் இன்னபிற உருவகங்களும் ஒன்றே என எல்லோர்க்கும் தெரியும். இருந்தும் சேயோனை நுணுகிப்பார்த்து ஒருகாலத்தில் அப்பன், மகன் என இருவராய் உருவகஞ் செய்வர்; பின் அவர் தோற்றங்கள் பலவகை வடிவங்களைக் காட்டும்; கூடவே ஆனைமுகன் வந்து சேர்வான். கொற்றவை தாயாவாள்; மாயோனும் பல தோற்றரவுகள் (அவதாரங்கள்) கொள்வான்;  எல்லாமே நமை ஈர்க்கும் பல் வேறு கருத்தீடுகள்; ஒன்றை, ஈராக, நாலாகப் பலவாக விதப்பிப் பரவுவது (பரவுதல் = to pray) தமிழரில் பலரும் செய்யும் ஒன்று. அவ்வகையில் நடவரசன் கருத்தீடு, தென்னாடுடைய சிவன் கருத்தீட்டிலிருந்து, களப்பிரர் காலத்திற்கு அப்புறம் உருவாக்கப்பட்டதென ஆய்வாளர் சொல்கிறார். எதிலிருந்து குறிப்பாக எழுந்தது எனும் போதே தில்லை வனமும், இற்றைக் கோயிலின் உள்ளிருக்கும் மூலத்தானமும் [நடவரசனின் பொன்னம்பலத்திற்கு வெளியே வடக்கில் (ஆனால் கிழக்குப் பார்த்தாற் போல் திருமுகம்) உள்ளது] நம் சிந்தனைக்கு வருகின்றன.

இறைபற்றிய சிந்தனைகள், சமயக் கொள்கைகள் என்பவை பொதுவாக சமய நெறிகளில் நெடுநாள் கழித்து ஏற்பட்டவை. முதலில் இருந்தவை வெறுமே வழிபாடுகளும், தொன்மக் கதைகள் மட்டுமே. சிவச்சிந்தனை முடிபுகள் (சைவ சித்தாந்தம் : பதி - பசு - பாசம்), சரணாகுதி மெய்யியல் (விண்ணெறிச் சிந்தனை), அல்லிருமை [அத்வைதம் - குறிப்பாக மரபாளர் (ஸ்மார்த்தர்) பின்பற்றுவது], இருமை (துவைதம் - மாத்வர் பின்பற்றுவது), விதப்பு அல்லிருமை (விசிஷ்ட அத்வைதம் - பெரும்பாலான விண்ணவர் பின்பற்றுவது) போன்ற புரிந்துணர்வுகள் எல்லாம் நெடுங்காலம் தமிழர் எண்ணிப் பார்க்காதவையே.

அந்நாளில், சமயக் கேள்விகளைக் கொள்கைவழி கேட்கத்தொடங்கியவர் உலகாய்தரே (உலகை ஆய்பவர் உலகாய்தர் = materialists, rationalists. பலரும் தவறாக லோகயுதர் என்பார். ஆயுதமும் ஆய்தலும் வெவ்வேறானவை. ஆய்தல் = தேடல்) பின்னால் உலகாய்தச் சிந்தனை எழுச்சியில் கேள்வி கேட்கத் தொடங்கியவர் சாங்கியரும், விதப்பியரும் (விஷேசிஷம்), அற்றுவிகரும் (ஆசீவகரும்), செயினரும், புத்தருமே. இம்மாற்றுச் சிந்தனை நெறியாரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லும்படி வடபுலத்தில் உபநிடதங்களும், மீமாஞ்சையும் (பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை) எழுந்தன. நம்மூரில் ஆகம வழி சாற்றங்கள் (சாற்றம்> சாத்தம்>சாத்ரம்) எழுந்தன (குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு திருமூலரின் திருமந்திரம்; இக்கருத்துகள் முளைவடிவில் திருவாசகத்திலும் உள்ளன.).

பொதுவாக நம்பா மதங்களின் எதிர்வினைகள் கி.மு.6ம் நூ.வில் மிகுத்தது மகதப்பேரரசில் தான். தமிழகம் சிலகாலம் மெய்யியல் உரையாடலில் உள்நுழையாது தொய்வில் இருந்தது உண்மையே. இக்கேள்விகள் கேட்கு முன், வட புலத்தில் வேதநெறிப் பழக்கங்கள் இருந்தன; சடங்குகள் இருந்தன; கூட்டம் கூட்டமாக விலங்குகள் வேள்விகளுக்கு ஆகுதிகள் ஆக்கப் பட்டன. ஆனால் மெய்யியல் அப்போது ஏற்படவில்லை. என்னதான் இன்றைய வேத நெறிக்காரர் காலத்தைக் குழப்பி உபநிடதங்களை முன்கொண்டு போக முயன்றாலும், அவை பெரிதும் ஏற்பட்டது நம்பா மதங்களின் எதிர்வினைக்கு மறுமொழியாகவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பும் மதங்களை, நம்பா மதங்களும், மரபு எதிர்ப்பு மதங்களும் கேள்வி கேட்பதோடு மட்டுமன்றி, அரசனையும் பொதுமக்களையும் தம்பக்கம் பேரளவில் அணிதிரட்டத் தொடங்கினார். பேரரசுகளும், குடியரசுகளும் வேதநெறியிலிருந்து மாறத்தொடங்கின. இதனால், அதுவரை வடபுலத்தில் அரசச் சார்போடிருந்த வேதநெறி பெரிதும் ஆடிப்போயிற்று. சாரி, சாரியாக வேதநெறியர் புரவலர்தேடி இடம்பெயரத் தொடங்கினார். இனி வேதநெறியர் தெற்கே வந்த வழியைப் பார்ப்போம்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள், இற்றை ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. அம்மாநிலங்கள் பெருங்காடுகளாய் அன்றிருந்தன. காடுகள் குறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகவே மக்களின் நகர்ச்சியும், வணிகமும் நடந்தன. முகன்மையாக 2 பாதைகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகத்தில் (Rajgir) இருந்து பாடலி, வேசாலி, குசிநாரா, கபிலவத்து, சாவத்தி, அத்தினாபுரம், தக்கீலம் (= தக்கசீலம் = பெஷாவர்) வரை போகும் பாதைக்கு உத்தர பாதை என்று பெயர். இதேபோல் ஏறத்தாழ நேபாள எல்லையிலுள்ள சாவத்தியில் (saavatthi) இருந்து அயோத்தி, கோசம் (kosam), பில்சா (Bhilsa), விஞ்சை (Ujjain - உச்சயினி), எல்லோரா (இப்பாதையிலிருந்து அசந்தா வெகு தொலைவு இல்லை.) வழி,கங்கை, தொழுனை (=யமுனை), நருமதை, தபதி  ஆறுகளைக் கடந்து, கோதாவரி வடகரையிலுள்ள படித் தானம் (prathisthana>paithan) வரை வந்துசேர்வது தக்கணப் பாதை. (இந்தி, மராத்தியில் படித்தானம், பைத்தான் எனப் பெறும்; வடமொழியில் பிரதித்தானம். இக்கால அவுரங்காபாதிற்கு அருகில், ஏறத்தாழ 50 கி.மீ.யில் கோதாவரிஆற்றின் கரையிலுள்ள ஊர் படித் தானம். சிலம்பில் வரும் நூற்றுவர் கன்னர் - சதகர்ணி - களின் தலை நகர் இது. இன்றைக்கும் சுற்றுலா முறையில் அவுரங்க பாத், தவளகிரி, பைத்தான், எல்லோரா, அசந்தா போன்றவற்றை பார்ப்பது நன்றாக இருக்கும்.)

இது தவிர கங்கைக்கரை ஒட்டி மேற்கே செலின் பாடலியிலிருந்து வாரணசி வழி கோசத்தை அடையமுடியும். இதேபோல் இன்னொரு நீட்சி, தெற்கே படித் தானத்திற்கு நேர்மேற்கே துறைமுகமான சோபாரா. [இற்றை மும்பைக்கு நெருக்கமாய்ச் சற்று வடக்கே வந்துசேரும். சோபாரா தான் யூத அரசன் சாலமன் கதையில்வரும் Ophir ஆகலாம் என்பர். அப்படியெனில் சோபராவின் இருப்பு 3000 ஆண்டுகளுக்கு மேலுமிருக்கும். சோபாராவுக்குச் சற்றுமுன்னே வட மும்பையில் இருப்பது கன்னேரிக் குகைகள்.] மகதத் துறைமுகங்களில் சோபாராவும், நருமதையின் புகர்முகத்து பாருகச்சையும் (Bhaarukaccha> Broach) முகன்மை யானவை. நாவலந்தீவின் வடபுல அரசியல், வணிக, பண்பாடு, கலை, மொழி மற்றும் மெய்யியல் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், மேற்சொன்ன 2 பெரிய பாதைகளையும், பாடலியிலிருந்து வாரணசி போகும் தொலைவையும், படித்தானத்திலிருந்து கடல்நோக்கி சோபாரா / பாருகச்சை செல்லும் வழியையும் அறிந்துகொள்ள வேண்டும். படித்தான முகன்மை நமக்கும் பெரிதே. சிலம்பில் நூற்றுவர் கன்னரைப் பார்த்து, உதவிபெற்றுச் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்றதும் முடிவில் கங்கையின் தென்கரையை முட்டியதும் தக்கணப் பாதை வழிதான்.

மகதமும், அதைச் சுற்றியுள்ளவரும் கொஞ்சம் கொஞ்சமாய் வேத நெறியில் இருந்து மற்ற நெறிகளுக்கு மாறியதால், வேதநெறியர் பலரும் தக்கணப்பதம் (தெற்குப் பாதை) வழி வரத்தொடங்கினார். தென்னகத்தினுள் வேதநெறியர் படித்தானம் வழியாக நுழைந்தார். (படித்தானத்திற்கு அருகில் சிலகாலம் தங்கி வாழ்ந்ததால் தான், கங்கைக்கடுத்து கோதாவரி நம்மூர்ப் பெருமானர் பரவலில் நிறைந்திருக்கும். கோதாவரியும் அவரால் புனிதமான ஆறாகக் கொள்ளப் படும். இன்றைக்கும் வேதநெறிப் பெண்களின் புடவைக்கட்டு, மாராட்டியக் கட்டிற்கு ஒப்பாகும். படித்தானமருகில் ஓரிரு நூற்றாண்டுகள் ஆவது அவர் தங்கியிருந்திருக்க வேண்டும். விசுவாமித்திரர், பரசுராமர், சுக்கிராச்சாரியர்  கதைகள், அகத்தியர் தெற்கே மக்களைக் கூட்டிவந்த கதை போன்றவை, வேதநெறியாளர் தக்கணம் சேர்ந்து தென் குமுகாயத்தில் ஒன்றுகலந்த செய்திகளைத் தொன்மவழி உறுதிசெய்கின்றன.)

படித்தானத்திலிருந்து கருநாடக மாநிலம் (கடம்பரின் அரசு - முதல் அரசன் மயூர சன்மன்; இவனே நம்பூதிகளைத் தெற்கே கொண்டுவர உறுதுணையாக இருந்தவன்.) வழியாகத் தகடூர் வந்துசேரும் பாதையையும், தகடூரில் இருந்து காஞ்சிவரும் பாதையையும், அதேபோலத் தகடூரிலிருந்து கரூர் வரும் பாதைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இக்கட்டுரை தொடங்கும்போது தயங்கித்தயங்கியே எழுதத் தொடங்கினேன். படிப்பவர் தயவுசெய்து சொல்லும் பொருளைத் தவறாகப் புரிந்து திசை திருப்பாமல், பொதுநலம் நோக்கிப் படிக்குமாறு வேண்டுகிறேன். வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் சொன்னது போல பெருமானர் 3 பெரும் அலையாய் தக்கணம் வந்துசேர்ந்தார். அவரின் உட்பிரிவுகளும் தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ளத் தேவையானவையே. பெருமானரின் 3 அலைகளைப் பற்றியும், தக்கணமூத்தி எனும் கருத்தீடு, ஆடலரசனாய் மாறியிருக்கக் கூடிய வாய்ப்பையும் அடுத்துப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, July 31, 2006

தில்லை - 2


தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என்பவை தமிழரை எப்பொழுதுமே கட்டிப் போடுபவை. குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே நூற்றுக்கும் மேல் ஒரு பட்டியல் உண்டு. (நடிகர் சிவகுமார் அடுத்தடுத்து அந்தப் பூக்களின் பெயரை அப்படியே ஒப்பித்துப் பல மேடைகளில் பெயர் வாங்குவார்.) அப் பட்டியலில் தில்லையும் உண்டு. ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் 2.5-7.0 நுறு மாத்திரி (centi meter; நூறு என்பதின் குறுக்கம் நுறு. தென்மொழி ஆசிரியர் இறைக்குருவன் இதை அறிமுகப் படுத்தினார்.) அளவுக்கு பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயை (shade) உடைய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே திசம்பர் - சனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகசுடு - அக்டோபர் மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.

அந்த மரத்தின் இரண்டு செய்திகள் தமிழரை ஈர்த்தவை. ஒன்று அச்சம் தரும் மரம் என்ற செய்தி; இன்னொன்று மனத்தைக் கவரும் குழல் போன்ற பூந்தளிர் பற்றிய செய்தி; குறிப்பாக ஆண்பூந்தளிர். ஆண்மயிலின் தோகை போலத் தில்லையின் ஆண் பூந்தளிர்கள் நம்மை ஈர்க்கும். சற்றுத் தொலைவில் இருந்தும் நம்மைக் கவர்ந்து, அகவை கூடிய முனிவரின் நரைத்த சடை போல இந்தப் பூங்கதிர்கள் தோற்றமளிக்குமாம். "தில்லைத் தளிருக்கு முனிவர் சடை உவமையா, முனிவர்களின் திரண்டு கிடந்த சடைக்குழல்களுக்குத் தில்லைப் பூந்தளிர் உவமையா?" என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. புறநானுறு 252ல் மாரிப் பித்தியார் என்ற பாடினி பாடுகிறார். இந்தப் பாடலை 251ம் பாடலோடு சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்டு, பிள்ளைகளோடும், சுற்றத்தாரோடும் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று வீடுபேறு பற்றிய கருத்தில் ஆட்பட்டுத் தவம் மேற்கொண்டு, காட்டில் உறைகிறான். அவன் துறவு நிலை பற்றி வியக்கின்ற புலவர், இந்தப் பாடலில் தில்லையை உள்ளே கொண்டு வருகிறார்.:

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்ளிலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

"கறங்கு வெள் அருவி" என்பது சங்க இலக்கியத்தில் ஒரு குழூஉக் குறி. குற்றாலம் போனவர்களுக்குச் சட்டெனப் புரியும். "ஒரே சத்தம் (= கறங்கு) போட்டு அருவி கீழே இறங்குகிறதாம்; அவ்வளவு சத்தம் போடணும்னா, நீர்வரத்து ரொம்பக் கூட என்று புரிஞ்சுக்கொணும்; வேகமும் கூடவே இருக்கும். அந்த நிலையிலே, அருவியிலே நுரை கொழிஞ்சி தள்ளும்; வெள் அருவியாய்த் தெரியும். அந்த அருவியிலே ஏறினதாலே (=ஆடுனதால் = அருவியில் குளித்ததால்) கொஞ்சம் கொஞ்சமாய் முடி நிறம் மாறிப் போச்சாம்; வேறெ ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஒளி விழுந்த மாதிரி ’டால்’ அடிக்குது; அய்யாவுக்கு நரை விழுந்திருச்சு. நரை விழுந்த முடி, தில்லைத் தளிர் மாதிரி புலபுலன்னு சடைசடையாய்த் திரண்டு காட்சியளிக்குதாம்."

இதுவரைக்கும் சரி, இனி மூன்றாவது வரியில் தான் இந்தக் கவிதைக்கே ஆன முரண் இருக்கிறது; தில்லையின் தளிர் போல விளங்கும் சடை கொண்ட இந்த முனிவர் என்ன இலை பறிக்கிறார் தெரியுமோ? "அள்ளிலைத் தாளி." மூலிகை அறிவு இருந்தால் தான் இங்கு பொருள் விளங்கும். அல் என்றால் "நெருங்கிய" என்று அருத்தம். "நெருங்கிய இலை கொண்ட தாளி" என்னும் செடியில் இருந்து முனிவர் இலை பறிக்கிறார்; சிரிப்பு வருகிறது மாரிப் பித்தியாருக்கு.

ஏனென்றால் "தாளிச பத்திரி" என்று இன்று சொல்லப் படும் (Flacourtia Calaphracia) அள்ளிலைத் தாளி பொதுவாகப் பசியைத் தூண்டுவதற்கும், கழிச்சல், சுரம், நாட்பட்ட இருமல் போன்றவற்றைப் போக்குவதற்குமாக உள்ள மூலிகை; கருப்பிணிப் பெண்கள் நல்ல மகப் பேறு (சுகப் பிரவசம்) ஏற்படுவதற்காக உட்கொள்ளும் மூலிகையும் இதுவாகும்.

வேறு ஒன்றுமில்லை; "நரை விழுந்து தில்லைப் பூந்தளிர் போலச் சடைகொண்ட முனிவர், கருப்பிணி உட்கொளும் மூலிகையிலையைப் போய்ப் பறித்துக் கொண்டிருக்கிறாரே?" என்று புலவர் கேலி பாடுகிறார். (முனிவர் பசியில்லை என்று பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஊறால் பறித்திருக்கலாம்; நமக்குக் காரணம் தெரியாது. பாடினியாரும் காரணம் சொல்லவில்லை. உரையாசிரியரும் முரணைப் போட்டு உடைக்கவில்லை; பொதுவாக, முரண் என்பது இப்படித்தான். ஒன்று கிடக்க இன்னொன்றாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது.

அடுத்த இரண்டு வரிகளில் பாடினியின் கேலி இன்னும் கூடுகிறது. "துறவு கொள்ளுவதற்கு முன்னால், வீட்டுக்கார அம்மா பேச்சை அப்படியே கேட்டு, வேண்டப் பட்டதைத் தேடிக் கொண்டுவந்த ஆள்தானே இவருன்னு" ஒரு போடு போடுகிறார்..

கவிதை ஒருபக்கம் இருக்கட்டும். நமக்கு முகன்மையான செய்தி தில்லைப் பூந்தளிரை முனிவர்களின் புரிசடைக்கு இணையாக ஒப்பிட்டது. தில்லை என்ற மரத்தின் பெயரே அந்தத் தளிர் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டது. துல்லுதல் என்பது தோன்றுதல்; தோன்றுவது கொஞ்சம் மஞ்சளாய்த்தான் தெரியும். துலங்குதல் என்ற சொல் கூட துல் என்னும் வேரில் தோன்றியது தான். மஞ்சளாய் ஒளி நிறைந்ததாய், தெரிவதைத் துலங்குதல் என்று சொல்கிறோம். ஏனத்தின் கழிம்புகளையும், கறைகளையும் போக்கி விளக்குவதைத் துலக்குதல் என்று சொல்லுகிறோம். துல்லுவது துள்ளுவது என்றும் ஆகும். துள்ளுவது பின் துளிர்க்கும்; அது சற்றே திரிந்து தளிர்க்கும். துல்லுவது தில்லையானதும் இதே போல் தான்.

அந்தப் பூந்தளிர் ஒன்றே தில்லை மரத்தைப் பார்த்தவுடன் சட்டென்று காண்பவர் மனத்தில் தைக்கும் காட்சி. "தளிர்க்குழல் - முனிவர் சடை" என்ற இரட்டைப் பிணை, நெய்தல் நிலத் தமிழனை அப்படியே ஈர்த்திருக்க வேண்டும். கலித்தொகை 133 ல் முதலைந்து வரிகள் இன்னொரு காட்சியைக் காட்டுகின்றன. (நெய்தற் கலி; ஆசிரியர் நல்லந்துவனார்; அந்துவன் = அப்பன்; இந்தக் காலத்தில் அப்பன் என்று எத்தனை பெயர்கள் முடிகின்றன; அது போல அந்துவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்தன் = தலைவன், பெரியவன், பெருமான். மலையாளத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரை அச்சன் என்று சொல்கிறாரே, குமரியில் ஆசான் என்று சொல்கிறாரே, அது போலப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தனர் = பெருமானர். அந்தனர்>அந்தணர் என்று ஆகும். அந்தனர் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். தொடக்கத்தில் அது ஒரு குலத்தை, சாதியைச் சுட்டும் சொல் அல்ல. பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இச்சொல்பற்றி நிறையச் சொல்லலாம். எனினும் விடுக்கிறேன்.)

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்
பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

நெய்தலில் காற்று அடித்துக்கொண்டே இருப்பதால் அங்கும் இங்குமாய் மணல் மேடுகள் மாற்றி மாற்றி ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அம்மணல் மேடுகளை எக்கர் என்பார். இம்மணல் மேடுகளுக்கு அருகில் கடலோதக் கழி இருக்கிறது. கழிக் கரையிலுள்ள முள்ளியின் மலர் கருப்பு. மா நிறம் என்பது கருநிறம் தான். (அதேபொழுது மிகக் கருப்பு என்று பொருள்கொள்ளக் கூடாது.) மாமலர் முண்டகம் என்பது அம் முள்ளியைத்தான் குறிக்கிறது. கூடவே அருகில் தில்லை மரங்கள் உள்ளன; முனிவன் சடை போலப் பூந்தளிர்கள் தொங்குகின்றன; கொஞ்சம் தள்ளினாற் போலக் கல்லால மரமும் (Ficus tomentosa) இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டில் அது நேரடியாகக் கூறப் படவில்லை. பொதுவாக, நெய்தற் கழியில், வறண்ட உதிர்புக் காடுகளில், பெரும்பாலும் பாறை விரிசல்களுக்கு நடுவில்) இருப்பது இயற்கையே.

கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லைமரமும் செறிந்து வளர்ந்திருக்கும் அக் கடற்கரைச்சோலையில், மணல் மேட்டில், தோற்றம் எப்படித் தெரிகிறதாம்? சீர்மிகு சிறப்பினோன் உடகார்ந்திருப்பது போல் தெரிகிறதாம். "யார் அந்தச் சீர்மிகு சிறப்பினோன்?" பொதுவாகப் பார்த்தால் தென்னாட்டு முனிவன்; விதப்பாகப் பார்த்தால் "தக்கண முகத்தோன்". என்ன இது புதுச்சொல் என்று மருள வேண்டாம். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்கிறோம் அல்லவா? தக்கணத்தில் தோன்றியவன் தக்கண முகத்தோன். (தக்கு = தாழ்வு. இமய மலையைப் பார்த்தால் நாவலந்தீவின் தென்பகுதி தாழ்ந்து கிடக்கிறது. தாழ்ந்து கிடக்கும் பகுதி, தக்கிக் கிடக்கும் பகுதி, தக்கணம் எனப்படுகிறது; மேலே கிடக்கும் மலையைப் பார்த்தால் கீழே கிடக்கும் பகுதி கிழக்குப் பகுதி ஆனது போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தக்கணம் என்ற சொல் தமிழ் தான். அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம். முகத்தோன் = தோன்றியவன்; முகத்தோனை மூத்தோனாகிப் (மூத்தோர் என்பவர் நமக்கு முன்னால் தோன்றியவர் என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா?) பின் வேறு ஈற்றால் மூத்தி என்று சொல்லி, பின்னால் வடமொழிப் பலுக்கிற்காக, ரகரத்தை நுழைத்து மூர்த்தி ஆக்குவர். தக்கண மூர்த்தி இன்னும் திரிந்து தக்ஷிணா மூர்த்தி ஆவார். நாம் அதன் தொடக்கமே தெரியாமல் மருள்வோம். தென்னாடுடைய சிவனுக்கு வடபுலத்துப் பெயரா இருக்கும்?) இந்தத் தக்கண மூத்தியின் மயிர்க்குழல்கள் நரை தட்டிப் போய் தில்லைப் பூந்தளிர் போலக் காட்சியளிக்கின்றன. முண்டக மலர் அவன் கண்டம் (கழுத்து) போலக் காட்சியளித்திருக்கலாம். மறுபடியும் தொண்டைக்குள் நஞ்சு என்ற உருவகத்தை இங்கு பொருத்திப் பாருங்கள்.

இவன் முனிவன் என்றால், இம்முனிவனுக்கு அருகில் ஒரு குண்டிகை (கலசம் அல்லது செப்புக் கலம்) இருக்க வேண்டுமே? எங்கும் நாம் தேட வேண்டாம். கழியில் உள்ள வளைந்து கிடக்கும் தாழையின் பழம், குடம் எனத் தொங்குகிறது. தாழையின் வளைசலைக் குறிக்க, கொக்கின் கழுத்தையும் நெய்தற் கலி பாடிய நல்லந்துவனார் உவமை சேர்க்கிறார். இந்த வரிகள் முழுக்க ஒரே உவமை மயம். ஆனாலும் காட்சி தெளிவாகப் புலப்படுகிறது. சொல்லுக்குள் சிவனை, தக்கண முகத்தனை, முழுதாகக் கொண்டுவந்து விடுகிறார் இந்தப் பாடலாசிரியர். "இப்பேர்ப்பட்ட துறைவனே! நான் சொல்லுவதைக் கேள்" என்று மேற்கொண்டு போகிறார்.

"தக்கண முகத்தோனை முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் தில்லையோடு தொடர்வுறுத்திப் பதிவு செய்த இடம்" நானறிந்த வரை இது தான். இந்த நெய்தற் கலிதான். அதுவரை அவன் "ஆல் அமர் செல்வன், நுதல்விழியோன், கொன்றை விரும்பி" இப்படித்தான் பலவாறாக சங்க இலக்கியங்களில் வழுத்தியிருக்கிறார். ஏன் இந்த வெவ்வேறு தோற்றங்கள் என்ற கேள்வி நமக்குள் இனி அடுத்ததாக எழும்.

அன்புடன்,
இராம.கி.

தில்லை - 1

பிச்சாவரம் போயிருக்கிறீரோ? குறைந்தது அரை நாளாவது பார்க்க வேண்டிய இடம்; குறிப்பாக அங்கே உள்ள கழிக்கானல் (`=mangrove). அது அசையாத நீர்ச் சேர்க்கையால் ஆன வெறும் உப்பங்கழி அல்ல. அதற்கும் மேலானது. ஓயாத அசைவு இருக்கும் "ஓதக் கழி" (tidal backwaters) என்று தான் அதைப்பற்றிச் சொல்ல வேண்டும். ஓதம் என்ற சொல்லைக் கண்டு மருள வேண்டாம். உயர்ந்து வருவது ஓதம். உயர் ஓதம் (high tide) இருக்கும் போது, கழியில் (backwaters) நீர் பெருகும். தாழ் ஓதத்தில் (low tide) நீர் வடிந்து போகும். இக் காலத்தில், கழிக் கானலை, அலையாத்திக் காடுகள் என்று சொல்கிறார். (கேட்பதற்குக் கொஞ்சம் செயற்கையாய், அருவியை நீர்வீழ்ச்சி என்று சொல்லிப் பழகுவதைப் போல, எனக்குத் தோன்றுகிறது. பழைய பெயரை மீட்டுக் கொண்டுவரலாம். தலையாலங் கானம் (கானம் = காடு), ஆலங் கானம், கானப்பேர் போல இதைக் கழிக்கானம் என்றும் சொல்லலாம். மாமல்லைக்கும் தெற்கே மரக்காணம் என்று சொல்லப்பட்டு வரும் மரக்கானமும் ஒருகாலத்தில் கழியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னென்ன மரங்கள் அங்கிருந்தன என்று சொல்லத் தெரியவில்லை; ஆய்ந்து பார்க்க வேண்டும். சங்க காலத்து எயிற் பட்டினம் தான் (சிறுபாணாற்றுப் படை) மரக்கானம் ஆயிற்று என்று சொல்வார். பார்த்தீங்களா, வரலாற்றைச் சொல்லத் தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மீண்டும் சொல்லப்புகுந்த மையக் கருத்திற்கு வருவோம்.)

பொதுவாகக் கானலில் நிறைந்து கிடக்கும் புன்னை மரம் பற்றிப் பலருக்கும் தெரியும்; [ஓடங்கள், நாவாய்கள், கப்பல்கள் எனப் பலவும் நாவலந்தீவிலும், சுமேரிய நாகரிகத்திலும் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்த  புன்னை ஒரு முகன்மை மரம் தான். ஆனால் அதை இன்னொரு முறை பார்க்கலாம்.] இப்பொழுது, தில்லை பற்றி முதலிற் பார்க்கலாம் :-) அப்படியே தில்லை நடராசனைப் பற்றியும் பார்க்கலாம்.

யாரோ அங்கே புன்சிரிக்கிறிங்க! என்னடா இது, திரும்பவும் சிக்கலுக்குள்ளே வர்றானேனு பார்க்கிறீரோ? சித்தம் சிவனுக்குள்ளே! புரிதல் கோளாறை அப்படியே விட்டுட்டுப் போறதை, நெஞ்சு ஒத்துக்கிடலை.

தில்லை ஆடலரசனின் முன்பு தமிழ் படிப்பதில், ஒரு சில கருத்துக்கள் அண்மையில் எழுந்தன; வலைப்பதிவு உலகம் கொஞ்சம் சூடாகிப் பின் ஆறி அடங்கிய நேரத்தில், மீண்டும் தில்லை பற்றியும், அதன் தொடர்பான மற்ற செய்திகள் பற்றியும், இங்கு பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் திணைகள் சார்ந்த புவியியல், மரங்கள், மரபுகள், வரலாறு, தொன்மம் இப்படிப் பலவற்றையும் தெரிந்து கொள்ளாமலே நம்மில் மிகப்பலரும் காலத்தைக் கழிக்கிறோம். அப்படிக் கழிப்பதோடு மட்டுமல்லாது, வெறுமே கருத்துமுதல் வாதமாய் ஒரு சிலர் எடுத்துரைக்கவும் செய்கிறார்; மாற்றாருக்கு கோவம் எதனால் எழுகிறது என்று புரிந்து கொள்ளவும் முற்படாமல், வெறும் அறிவுய்தித் (intelligentia)தனத்தோடு நிகழ்வுகளை நோக்கி, நேர்த்தியான வழக்குரைஞர் போல, அதேபொழுது அரைகுறை உண்மைகளை அப்படியே திரித்து, மிகப் பலருக்கும் சொக்குப் பொடியும் போடவைத்து ...... , பலரும் வல்வழக்குகள் ஆடிக் கொண்டிருக்கிறார். இவ் வல்வழக்கு அறிஞரின் அடிப்பொடிகளோ, தமிழ் என்றாலே ஏதோ வெறியன் என்று பட்டம் கட்டத் துடித்து எழுகிறார்! சரி, கொஞ்சம் அமைதியாய் இருப்போம் என்று காத்திருந்தேன். முடிந்த முடிவுக்காரர், கருத்துமுதல் வாதிகளோடு எத்தனை முறை வாதாடினாலும் ஒன்றும் மாறப் போவது இல்லை; ஆனால் நொதுமலாக (neutral) இருக்கும் நிறையப் பேருக்காகவாவது, உண்மைகளையும், ஒழுங்கான புரிதல்களையும், பொதுவாகத் தெரிந்ததையும் சொல்லிப் பரிமாறிக் கொள்வோமே என்ற எண்ணம் தான் இப் பதிவு.

தில்லை மரத்திற்கு Excoecaria agallocha L. என்று புதலியலில் ஒரு பெயருண்டு. "அகிலைத் தில்லை" என்று அம் மரத்திற்கு தமிழ்ப் புதலியற் பெயர் கொடுத்திருக்கிறார். (அகில் மரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், அகில் என்ற சொல்லும் உள்ளே வருகிறது. அகில்கட்டை நமக்கு பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து காலங்காலமாய் வந்து கொண்டிருந்தது.) கடற்கரையோரப் பகுதிகளில், சதுப்புநிலப்பகுதிகளின் ஓரத்தில் தில்லை மரம் வளர்கிறது. நெய்தலும் மருதமும் கலந்த பகுதிகளில் இது காணப்படும். [ஒரு காலத்தில் சென்னைக்கு அருகிலுள்ள அடையாற்றுக் கானலிலும், இன்னும் மற்ற ஆற்றுக் கழிமுகங்களிலும் இதுபோன்ற நெய்தல் திணையும், அதில் தில்லை மரங்களும் இருந்திருக்க வேண்டும். காலம் பெரும்பாலானவற்றை அழித்துவிட்டிருக்கிறது.] இக் கழிமுகங்களில் தான் பொதுவாகப் பட்டினங்கள் எழுந்தன. பட்டினங்களில் தான் வணிகமும் எழுந்தது; உல்கும் (excise duty), சுங்கமும் (customs duty), வரியும் (tax) திளைத்தன. அரசு இயந்திரம் பட்டினம் எங்கும் ஆல் போலப் பரவிக் கிடந்தது.

பணம் என்று போகத் தொடங்கிவிட்டால், அப்புறம் வேள்வி, ஓமம், யாகம் போன்றவற்றை நம்பித் தேடிப்போகும் கூட்டம் தவிர்க்க இயலாத வகையில் அக் காலத்தில் ஏற்பட்டு விடும். [இக் காலத்திலும் யாரோ ஒரு சாமியார் சொன்னார் என்றொப்பி, தனக்குப் பிடித்த கோயிலில் ஒரு திருப்பணி செய்தால், தான் செய்பவற்றிற்கு மாற்று ஏற்பட்டு விடும் என்று நம்பிச் செல்வம் படைத்தவர் செய்துகொண்டு தான் இருக்கிறார்.] அதன் விளைவாக, இயல்பாகவே, வேதநெறி பயிலும் கூட்டத்தினர் (வேதநெறியாளரை சங்கத வழக்கில் வைதீகர் என்று சொல்வார்.) பட்டினம் இருக்கும் இடங்களை நோக்கி வடபுலத்தில் இருந்து விரும்பி வந்தார். 

வேதநெறி சிறந்தது, மகதத்தின் அருகில் இன்றையக் காசியை இருப்பிடமாகக் கொண்ட கோசலத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் தான். நான் சொல்லும் காலம் கி.மு. 600க்கு அண்மையில். வேதநெறியாளர் வடபுலத்தில் இருந்து தெற்கே குறைந்தது மூன்று அலைகளில் வந்தார்; ஆர்வம் உள்ளவர் கோயில்களில் கொட்டிக் கிடக்கும் கல்வெட்டுக்களைப் படிக்கலாம். இல்லாவிட்டால், பார்ப்பனர் பற்றிய பேராசிரியர் ந. சுப்பிரமணியனின் அருமையான பொத்தகத்தைப் படிக்கலாம். வரலாறு என்பது நாம் நினைத்தபடி இடைப்பரட்டுவது(interpret) அல்ல. செய்திகளை நம் விழைவு போல அங்கே திரிக்க முடியாது. வடபுலத்தில் இருந்து தக்கணம் புகுந்த நகர்ச்சிகள் (movements) தெளிவாக ஆவணம் செய்யப் பட்டிருக்கின்றன.

கொஞ்சம் அவக்கரப் படாமல், தில்லை மரத்தை மற்றும் காடுகளைப் பார்ப்போம்.

தில்லை மரம் கொஞ்சம் அலாதியானது. ஒருபக்கம் அது அச்சம் தரும் மரம்; இன்னொரு பக்கம் நம்மைப் பெரிதும் ஈர்க்கும் தன்மையது. இச் சிறு மரத்தின் எந்தப் பகுதியை ஒடித்தாலும் அலரி (= அரளி) மாதிரிப் பால் தெறிக்கும். அந்தப் பால் நம் உடம்பில் பட்டால் அரிக்கும்; எரியும்; சிவந்து போகும்; கண்ணில் பட்டாலோ, கண்ணெரிச்சலோடு, கொஞ்சம் கொஞ்சமாய் தற்காலமாகவோ, சிலபொழுது முற்றிலுமோ, கண்பார்வை போகவும் செய்யலாம். இதனாலேயே இந்த மரத்தை blinding tree என்று ஆங்கிலத்தில் சொல்வார். (மேலையருக்கு இந்த அச்சமே முகன்மையாய்ப் பட்டது. அப்படியே இதன் பெயர் இடப்பட்டது. நமக்கோ ஈர்க்கும் தன்மை முகன்மையாய்த் தெரிந்தது. அதுவே அந்த மரத்தின் பேருக்குக் காரணம் ஆனது.) இச் சிறுமரம் 6 மாத்திரி (மீட்டர்) உயரம் வளரக்கூடியது நல்ல சூழ்நிலை (அதாவது நீர் ஒழுங்காக ஏறி, வடியும் சூழல்) இருந்தால் 10 மாத்திரி கூட வளருமாம். பொதுவாகத் தில்லை மரம், பசுமை குன்றாத மரம். மரத்தை வெட்டிப்போட்டால், துண்டுகள் நீரில் மிதக்கும். ஒரு கொம்பில் ஏற்படும் இலைகளின் வளர்ச்சி பார்ப்பதற்கு ஒரே ஒழுங்கில் காட்சியளிக்காது மாற்றொழுங்கில் (alternative ஒன்று மாற்றி ஒன்றாய்) காட்சியளிக்கும். இலைகள் நீண்ட கோழிமுட்டை வடிவில் முனையுடன் இருக்கும். இளம் இலைகள் பூஞ்சை (pink) நிறத்திலும், முற்றிய இலைகள் ஆழ்சிவப்பு (deep red) நிறத்திலும் இருக்கும். தில்லம் என்ற சொல் தில்லை மரத்தின் விதையைக் குறிக்கும். இறைவன் தொண்டைக்குள் நஞ்சு என்ற கருத்தீடு பிறந்தது தில்லை மரத்தின் தூண்டுதலால் இருந்திருக்கலாம் என்றே ஓர்மை ஏற்படுகிறது..

இன்றைக்குப் பிச்சாவரத்திற்கு அருகில் கடல் இருந்தாலும், ஒரு காலத்தில் கடலும், கழியும், இன்றைக்குச் சற்று தள்ளி இருக்கும் பெரும்பற்றப் புலியூர் (=சிதம்பரம்) வரை நெருங்கித் தான் இருந்தது என்று புவியியலார் சொல்கிறார். [சிதம்பரத்தில் வெள்ளம் வந்தால் ஊரெலாம் தத்தளிப்பதும் அதன் தாழ்புவி (low level of ground) நிலையை நமக்குணர்த்தும்.] அவ்வூர் முழுதும் ஒரு காலத்தில் தில்லை வனமாகத்தான் இருந்தது. சோழ நாட்டில் 4 புலியூர்கள் இருந்தன என்பார்கள். அதில் இது ஒன்று (காவிரிக்கும் வடபால் உள்ளது). இன்னொன்று பெரும்புலியூர் (இன்றைக்குப் பெரம்பலூர் என்றால் தான் பலருக்கும் விளங்கும்.) மீதம் இரண்டும் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பற்றம் என்ற முன்னொட்டை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெரியபாதம் தான் பெரும்பற்றம் என்று குறிக்கப் பட்டது. பற்றம்> பத்தம்> பாதம் என்று விரியும் சொல்லைப் பார்த்தால், பற்றிக் கொள்வதும் பதிவதும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை என்று புரியும்.

பெரிய பாதம் கொண்டவரை வ்யாக்ர பாதர் என இருபிறப்பிச் சொல்லால் வடமொழியாளர் மொழிபெயர்ப்பார். (வியல்ந்து கிடப்பது = அகண்டு கிடப்பது. வியல்ந்த கோள் வியாழன். வியல் என்ற முன்னொட்டு "பெரும்" என்ற பொருளைக் குறிக்கும். வியக்கிறான் என்றால் வாயை அகலத் திறந்து பெரிதாக விரிக்கிறான் என்று தமிழில் பொருள் கொள்வர். வியத்தல்/வியக்குதல் என்பது பொதுவாக வாய்அகலும் செயலைக் குறிக்கும். வழக்கம் போல வடமொழிப் பலுக்கில் ரகரம் நுழைந்து, வியக்கம் வியக்ரம் ஆகும். வியக்க பாதர், வியக்ர பாதர் ஆன கதை அது தான். 

யாரோ ஒரு முனிவர் சற்றே பெரிய பாதம் கொண்டவர். அம்முனிவர் தில்லை வனத்தில் இருந்திருக்கிறார். அவருக்கும் ஆடலரசனுக்கும் இடையே ஒரு தொன்மம் இருந்திருக்கிறது. அவர் பெயரால் இது பெரும்பற்றப் புலியூர் என்றும் அழைக்கப் படுகிறது. இன்னொரு முனிவரையும் இந்த ஊரோடு தொடர்புறுத்துவார். அவர்பெயர் பதஞ்சலி. அவரை நாட்டியத்தோடு தொடர்பு படுத்தும் தொன்மமும் உண்டு. இங்குமே பாதம்> பதம் என்ற சொல் உள்ளே இருப்பதைப் பார்க்கலாம். நம்மூர் ஆட்களை, ஊர்களை, செயல்களைப் புரிந்து கொள்ளத் தமிழ்தான் பயன்படுமே ஒழிய வடமொழி அல்ல. இருந்தாலும் ஒரு சிலர் இப் பழக்கத்தை விடாமலே, வடமொழியின் உள்ளே தேடு தேடென விதம் விதமாய்த் தேடிக் கோண்டிருப்பார். :-)

பெரும்பற்றப் புலியூர் இன்றைக்குச் சிதம்பரம் என அழைக்கப் படுகிறது. அது உண்மையில் சிற்றம்பலம். அப்பெயரைக் கூப்பிடக் கூப்பிட ஒரு சிலரின் பலுக்கத் திரிவால், அது சித்தம்பரம் ஆயிற்று. பின்னால் சிதம்பரம் என்று திரிந்தது. இதை அறிந்துகொள்ளாது, சித்தம் + பரம் = சிதம்பரம் என்றெலாம் சொல்லப் புகுவதைப் பார்க்கும் போது, பொருந்தக் கூறுவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். (அந்த அம்பலம் சின்ன அம்பலம்; ஆனால் குறிப்பிடத் தக்க அம்பலம்; அதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.) சிலருக்குச் சித்தம்பரம் என்று கூறுவது மனத்திற்கு நிறைவாய், உகப்பாய் இருக்கலாம். ஆனால், வரலாறு அப்படி இல்லை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். பொதுவாகத் தமிழ் ஊர்களில் பெரும்பாலானவை அப்படிக் கருத்துமுதல் வாதத்தில் பெயரிடப் படுவன அல்ல. இயற்கை, குமுகம், மாந்தர் பெயர் என இப்படித்தான் ஊர்ப்பெயர்கள் 100க்கு தொன்னூற்று தொன்பது விழுக்காடு எழுகின்றன.

அன்புடன்,
இராம.கி.

Friday, July 28, 2006

அளவுச் சொற்கள் - 3

minimum பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்தப் பதிவில் வேறு பத்துச் சொற்களைத் தருகிறேன். இன்னும் பட்டியலில் பல சொற்கள் இருக்கின்றன.

இருபத்தாறாவது அளவுச் சொல்லான meagre என்பதைப் பார்ப்போம். குறைந்து இருப்பதை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள். தமிழில் "அவன் நொய்ந்து போய்க் கிடக்கிறான்" என்னும் போது "குறைப்பட்டுக் கிடக்கிறான்" என்றே பொருள் கொள்ளுகிறோம். நொய்தலின் பெயர்ச்சொல் நோய். நொடித்துப் போதல், நொகுத்துப் போதல் என எல்லாமே குறைப்பட்டுப் போவது தான். குறைப்படுதல் என்பது தகுதியிலும் (quality) நடக்கலாம்; எண்ணுதியிலும் (quantity) நடக்கலாம். நொகை எண்கள் என்று negative எண்களைச் சொல்லுகிறோம். அதே போல எண்ணில் குறைப்பட்டுக் கொஞ்சமாய் இருத்தலை சற்றே திரித்து நூகை என்று சொல்லலாம். நூகிக் கிடத்தல் என்பதும் நொய்ந்து கிடப்பதே. meagre = நூகை. "இவ்வளவு நூகையாக பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?"

இருபத்து ஏழாவது சொல் mean என்பது. இதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நாப்பண் என்றே கூறும். நடுவண் என்பதைப் போன்று உள்ள சொல் நாப்பண். நடுவிற்கும் நடுவானது நாப்பண். ஒரு முறை நண்பர் மதுரபாரதி இதை மடற்குழுவில் பழைய காட்டுக்களை எடுத்துக் காட்டி அருமையாக விளக்கியிருந்தார். நாப்பண் என்பதை நாவண் என்றும் சொல்லலாம். mean = நாவண். "இன்றைய ஒரு நாட்பொழுதின் நாவண் வெம்மை (temperature) என்ன?" என்ற கேள்வி கேட்கக் கூடியது தான்.

இருபத்தி எட்டாவது சொல் median. ஏற்கனவே கூறிய படி, நடுவம் என்ற சொல்லே இதைக் குறிக்கும். இதே பொருளில் பெயரடையாக (adjective) வரும் பொழுது medial என்பதை நடுவல் என்று குறிக்கலாம்.

இருபத்தி ஒன்பதாவது சொல் medium. பலரும் இதை ஊடகம் என்றே மொழிபெயர்க்கிறார்கள். சில காலம் முன்புவரை நானும் அப்படிப் புழங்கி இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பெரும்பாலான இடங்களில் மிடையம் என்ற சொல்லையே நான் இப்பொழுது புழங்குகிறேன். ஏனென்றால் ஊடுதல் (to go in between or to osmose) என்ற வினை, ஒன்றின் ஊடே செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இது வேதிப் பொறியியல் (chemical engineering), மற்றும் பூதி வேதியலில் (physical chemistry) osmosis என்ற செலுத்தத்திற்குச் (process) சரியாகப் பொருந்தி வரும். நுணுகிய துளைகள் இருக்கும் ஒரு படலத்தின் (film) வழியே சில மூலக்கூறுகள் (molecules) ஊடுவது உண்டு. அந்தச் செயல் ஊடுகை (osmosis) என்று இந்த இயல்களில் சொல்லப் படும். அந்த ஊடுகைக்குத் துணை போவது ஊடகம் (osmotic membrane) என்னும் மெம்புனை(membrane)யாகும். அந்த ஊடுகைக்கு எதிராக, அதாவது கரைபொருளுக்கு (solute) மாறாகக் கரைமத்தையே (solvent) ஊட வைக்கும் செலுத்தத்தை எதிர் ஊடுகை (reverse osmosis) என்று சொல்லுவார்கள். medium என்பதற்கு ஈடாக, மிடையம் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் மிடைத்தல் என்பது மேற்பட்டுத் தெரிதல். மிடையும் மேடும் ஒருபொருட்சொற்கள் தான். மேட்டில் இருந்து எழுந்தது மேடை என்னும் சொல். ஒரு குமுகாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை மேற்படுத்திக் காட்டுவது, மிடைத்துக் காட்டுவது மிடையம். இங்கே இவர்கள் வெறுமே விளக்குப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள். "பொதுவாக மிடையக்காரர்கள் நிகழ்வுகளின் ஊடே சென்று செலுத்தம் செய்வது உகந்தது அல்ல" என்றே பலரும் சொல்லுகிறார்கள். தவிர அகநானூற்றின் ஒரு பகுதிக்குப் பெயரான மணிமிடைப் பவளம் என்ற சொல்லையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். மணிகளுக்கு இடையே கிடக்கும் பவளம் என்று அதற்குப் பொருள். மிடையம் என்பது குமுகயாத்தின் இடையே கிடக்கும் ஒரு நிறுவனம் தான். இப்படி இதைப் பற்றி நான் எழுதிக் கொண்டே போகலாம். எனக்கென்னவோ மிடையம் என்ற சொல் media-விற்குச் சரியான பொருள் தருவதாகவே படுகிறது. ஆனால், எந்தச் சொல் நிலைக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல நான் யார்? என்னால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

முப்பதாவது சொல் mega; முன்பே சொன்னது போல் மீ என்னும் ஓரெழுத்து ஒருமொழி மிகுந்த நிலையை, மிகப் பெரிதான நிலையைக் குறிக்கும் சொல்; அதன் இன்னொரு சொல்லாட்சியே இந்த மீகிய என்ற பயன்பாடு.

முப்பத்தொன்று micro; தமிழிற் பல இடங்களில் மகரமும், நகரமும் போலி என்று அறிவோம். இந்தப் போலிப் பயனக்கத்தால், முதல் என்பது நுதலாகும்; முப்பது நுப்பதாகும்; முடங்குவது நுடங்குவதாகும். இதே வகையில் எண்ணிப் பார்த்தால் நூகிய என்ற சொல் மூகிய என்று மாறி மிக நுண்ணிய பொருளைக் குறிப்பது புரியும். இப்பொழுது தமிழில் திரிந்த சொல்லைப் பயனாக்காமல், நூகிய என்பதையே ஆளலாம்.

முப்பத்திரண்டாவது சொல் middle; இதற்கான இணைச்சொல் நடு; நான் கூடுதல் விளக்கம் தர வேண்டியதில்லை.

முப்பத்தி மூன்றாவது சொல் mild; மெல்லியது mild ஆகும். இந்தச் சொல், தகுதி (quality) நோக்கியே முதலில் எழுந்தது; நாளாவட்டத்தில் எண்ணுதிக்கும் (quantity) பயன்படுத்துகிறார்கள். வாயில் போட்டு மெல்லுகிறோமே அந்தச் செயலால் தான், ஆதி மாந்தருக்கு, கடினமான பொருள் மெல்லியதானது. பின்னால் அரைத்தல் என்ற சொல்லும் மெல்லுதலுக்குப் பகரி(substitute)யாய் எழுந்தது. அப்படி மெல்லுகிற காரணத்தால் ஒரு சுவையும் அவருக்குப் புலப்படுகிறது. கூடவே ஒரு மணமும் எழுகிறது. ஆங்கிலத்திலும் மேலை மொழிகளிலும் மணத்தைக் குறிக்கும் சொல்லான smell என்பது கூட இந்த மெல்லும் செயலால் எழுந்த சொல் தான். இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், தமிழிய மொழிகளுக்கும் உள்ள உறவில் இந்தச் சொல்லையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முப்பத்தி நான்கு milli; முன்னால் சொன்ன முறையில் இது நுல்லி என்று தமிழில் வரும். நுல்லில் பிறந்த சொற்கள் பலவுண்டு. நுல் என்பது நுணுகு, நூகு எனப் பல சொற்களுக்கும் வேராக அமையும். மகர நகரப் போலி பற்றி முன்னால் சொல்லியிருக்கிறேன். million என்னும் எண் தொகுதியை நுல்லியம் என்றே தமிழில் சொல்லலாம். இந்தக் காலத்தில் கோடி இலக்கம் என்று சொல்லுவதற்கு மாறாக நுல்லியம் என்று உலக வழக்கில் பழகுவதே முறை என்று சொல்லுவோரும் உண்டு. நுல்லியத்தின் மடங்குகளைக் குறிக்க, இரும நுல்லியம் (billion), மும்ம நுல்லியம் (trillion). நால்ம நுல்லியம் (quadrillion), ஐம நுல்லியம் (quintillion), அறும நுல்லியம் (sechstiliion), எழும நுல்லியம் (septillion), எண்ம நுல்லியம் (octillion), தொண்ம நுல்லியம் (nanillion) என்றே பழகலாம். பன்மடங்கு நுல்லியத்தை (zillion) பன்ம நுல்லியம் என்றே சொல்லலாம்.

முப்பத்தி ஐந்து mine. இதன் இணைச்சொல் நுணங்கு என்று ஆகும். நோண்டு என்றும் இன்னொரு வளர்ச்சி உண்டு. நுல்லுவது என்பது இன்னொரு வகையில் துளைப்பது என்ற பொருளைக் கொடுக்கும். துல்>துள்>துளை; துல்>துள்>தோள்>தோண்டு என்று ஆவது போல் நுல்>நுள்>நோள்>நோண்டு என்று ஆகும். நோண்டிவரும் சுரங்கம் mine என்படுகிறது. சுரங்கம் என்பது கூட சுரிக்கின்ற (தோண்டுகின்ற) செயலால் பிறந்த சொல் தான். நுணங்கின் பெரியது நுணங்கம். ஆங்கிலத்தில் mine என்ற சொல் ஒப்புமை அடிப்படையில் அளவுச் சொல்லாக ஆகிறது. A minefull of wealth. ஒரு நுணங்கம் அளவுக்குச் செல்வம் அவனிடம் கொட்டிக் கிடந்தது.

இந்தப் பதிவில் சொல்லிய அளவுச் சொற்களின் தொகுதி கீழ்வருமாறு:

meagre = நூகை
mean = நாவண்
median = நடுவம், medial = நடுவல்
medium = மிடையம்
mega = மீ, மீகிய
micro = நூகிய
middle = நடு
mild = மெல்லிய
milli = நுல்லி
mine = நுணங்கு, நோண்டு,

பதிவில் கூறிய மற்ற சொற்கள் வருமாறு:

negative = நொகை
temperature = வெம்மை
adjective = பெயரடை
to osmose = ஊடுதல்
chemical engineering = வேதிப் பொறியியல்
physical chemistry = பூதி வேதியல்
process = செலுத்தம்
film = படலம்
membrane = மெம்புனை
molecules = மூலக்கூறுகள்
mine = நுணங்கம் (=சுரங்கம்)
osmosis = ஊடுகை
osmotic membrane = ஊடகம்
solute = கரைபொருள், கரையம்
solvent = கரைமம்
substitute = பகரி
reverse osmosis = எதிர் ஊடுகை
million = நுல்லியம்
billion = இரும நுல்லியம்
trillion) = மும்ம நுல்லியம்
quadrillion = நால்ம நுல்லியம்
quintillion = ஐம நுல்லியம்
sechstiliion = அறும நுல்லியம்
septillion = எழும நுல்லியம்
octillion = எண்ம நுல்லியம்
nanillion = தொண்ம நுல்லியம்
zillion = பன்ம நுல்லியம்

அன்புடன்,
இராம.கி.

Friday, July 14, 2006

அளவுச் சொற்கள் - 2

முன்னால் இட்ட பதிவில் பதினேழு அளவுச் சொற்கள் வரை பார்த்திருந்தோம். (கூடவே மற்ற தொடர்புள்ள சொற்களையும் பார்த்தோம்.)இனி macro என்னும் பதினெட்டாவது அளவுச் சொல்லிற்குப் போவோம். இந்தச் சொல், பின்னூட்டின் வழியாக நண்பர் ஒருவர் முன்னர் கேட்ட சொல். இது பல இடங்களில் முன்னொட்டாகவும் புழங்குகிறது. macroscopic என்ற சொல்லாட்சி நினைவிற்கு வருகிறதா? macro என்பதற்கு இணையாக மாக, மாகிய ஆகியவற்றைச் சொல்லலாம். முன்னரே சொன்னது போல் மாத்தல் என்ற வினை, தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.

மதித்தல் என்ற வினைகூட இந்த மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் என்ற பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மகுதல் > மாதல் >மாகுதல் சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணியதாய் (திண்மம் = solid) இருந்து விட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும், புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக எங்கள் சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். மக ஈசன் மகேசன் (= பெரிய ஈசன்) என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதை இன்னும் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சிலர் சொல்லுவார்கள். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார்கள் அல்லவா? மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் சற்று பெரியவர்கள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர்கள் (ஆனாலும் அவர் மாந்தர் தான்) மாக்கள்.

மாகுதல் என்ற வினை அடிப்படையில் மாதல் போன்ற பொருள் கொண்ட வினைதான். மொழி நீட்சியில் அதைப் புழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய என்னும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் என்ற வினை வாகாய் அமையும்.

macro meter = மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர (standard) அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். அந்த முன்னொட்டுக்களை எல்லாம் இந்தப் பதிவுத் தொடரில் பார்ப்போம். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைந்து மாக்ர என்று ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம்.

இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. ஏனென்றால் உணர்ச்சி வயப்பட்டு பலரும் தடம் மாறிப் போகிறார்கள். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர்கள் முன்னே போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்திற்குள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இந்த ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம். பொதுவாய், இயற் சொற்களின் பலுக்க விதப்பில் ரகர, யகர, வகர ஒலிகள் நுழையும் சொற்திரிவு முறைகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை நாம் இனங் காண முடியும். (பலரும் என் மேல் கோவம் கொள்ளுவதே இந்த இணைப்பை இனங் காட்டுவதால் தான். இந்த இனங் காட்டுதலில் சங்கதத்தின் பெருவுதி - priority - குறைந்து போவது சிலருக்குப் பிடிப்பதில்லை.)

பத்தொன்பதாவது, magnitude என்பது. தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவமானம் என்பது முற்றிலும் தமிழே; வடமொழியல்ல. அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) தன்னைப் பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் அளவுகோல் வந்து விடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத் தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20ல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளும் உண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்லுவோம்.

இருபதாவது சொல் magnify என்பதாகும். இங்கே வெறும் அளவு மட்டும் இல்லாமல், பெரியாதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப் படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.

இருபத்தொன்றாவது சொல் major; இது பெரும்பாலும் பெயரடையாக வருகின்ற சொல். மேவுதல் என்ற வினை உயர்ந்து கிடத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பெயரடையில் மேவு, மேவிய என்றும், தனிப்பெயராக வரும்போது மேவர் என்றும் சொல்லலாம். இதைப் போலியாய்த் திரித்து மேயர் என்றும் சொல்லலாம்; அதோடு அதை major என்பதின் ஆங்கிலத் திரிவான mayor என்பதற்குப் பொருத்தமாய் வைத்துக் கொள்ளலாம். Army major யை "அரண மேவர்" என்று சொல்லலாம். அரணம் தான் வடமொழி வழக்கில் இராணுவம் என்று திரிந்திருக்கிறது. நாட்டு அரணைக் காப்பாற்றும் பெரும்படை அரணம் என்று சொல்லப்படும். அரத்தம், இரத்தம் ஆனது போல் அரங்கனை, ரெங்கனென்று சொல்லுவதைப் போல், பல ஒலிப்பு மாற்றங்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இருபத்திரண்டாவது சொல் majority; மேவுதலில் இருந்து இதை மேவுதி என்று சொல்லலாம். மேதகை, மேன்மை என்னும் போது உயர்ச்சி என்ற பொருளே வந்து இங்கே எண்ணளவில் கூடி இருக்கும் தன்மை புலப்படாமல் போகலாம்.

இருபத்தி மூன்றாவது many; இதைப் பல என்றே வழக்குத் தமிழில் பயில்கிறோம். கூடவே நனி என்ற பழைய சொல்லைப் புழக்கத்தில் கொண்டுவந்து, சொல்லின் இணை தன்மையை ஆழ்ந்து உணரலாம். தவிர, நனி என்பதைப் பயிலாமல் போனால் பின்னால் பலருக்கும் அது புரியாமல் போகலாம்.

இருபத்தி நாலாவது சொல் mass; இது மிகவும் சரவற் படுத்துகிற சொல். தமிழில் இன்னும் நிறை என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். நிறை என்பது நிறுத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்ட பெயர்ச் சொல்லானால் அது எடையைத்தான் குறிக்கும். (எடுத்தது எடை; நிறுத்தது நிறை. இரண்டுமே weight என்பதைக் குறிக்கும் சொற்கள்.) இன்னொரு விதத்தில் நிறைந்தது என்ற வினையில் வருகின்ற நிறை என்னும் பெயர்ச்சொல் filling என்ற பொருட்பாட்டைத் தான் குறிக்கும். இதில் பெறப்படும் கருத்து volume என்னும் முப்பரிமானம்.

volume என்பதைக் கீழே அடுத்த பகுதியில் பார்ப்போம். volume என்பதற்கும், mass என்பதற்கும், weight என்பதற்கும் வேறுபாடு காட்டிய பின் தான் அறிவியற் சிந்தனை பெரிதும் வளர்ந்தது. தமிழில் இன்னும் சரியாக இதை உணர்த்திக் காட்டாது இருக்கிறோம். இந்தப் பொருள் கனமாக இருந்தது என்னும் போது அது weight ஆக இருந்தது என்று தான் பொருள். அதே பொழுது இதற்கு முரணாக, ஒரு பொருளின் கன அளவு என்றால் அதன் volume யைக் குறிப்பிடுகிறோம். இந்தக் குழப்ப முரண் நெடுநாளாய் நம்மிடம் இருக்கிறது. தவிர, mass என்பதை எப்படிக் குறிப்பது என்றும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறோம்.

உலகம் என்பது பொருட்களால் ஆனது; இந்தப் பொருட்கள் வெளி(space)யில் இருக்கின்றன. விரிந்து கிடக்கும் வெளியில் ஒரு பொருள் அடைந்து கிடக்கும் இடம் அதன் volume. வெளி என்பது கிட்டத்தட்ட ஒரு கலன் போன்றது. அந்தக் கலனின் அளவைக் குறிக்கும் சொல் volume ஆகும். ஆனால் mass என்பது கலனுள் நிறைந்திருக்கும் பொருள். ஒரு கலனுக்குள் வெவ்வேறு பொருட்களை அடைக்கலாம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு mass யைக் காட்டலாம். mass என்பதன் தன்மையைப் (massyness) பொருண்மை என்று தமிழில் குறிப்பார்கள். பொருள் இருக்கும் தன்மை பொருண்மை. இது உண்மையில் density என்பதோடு தொடர்பு உள்ளது. ஆனால் பொருண்மையும் அடர்த்தி என்பதும் வெவ்வேறு என்றும் ஒரு சிலர் தெளிவில்லாமல் சொல்லுவார்கள். (density என்பதையே பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.)

உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய் நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் அங்கே துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது massyness ஐக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass என்னும் வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?

"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை (அல்லது மதுகை) என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் (அல்லது மதுகையாய்) என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன்.

இருபத்தைந்தாவது சொல் maximum; மிகுந்து கிடப்பதின் நெடில்வழக்கு மீது கிடத்தல். மீ என்னும் ஓரெழுத்தொரு மொழியைப் பயன்படுத்தி மீகுமம் என்ற சொல்லைப் பயிலலாம்.

இந்தப் பகுதியில் பரிந்துரைத்த அளவுச் சொற்கள் வருமாறு:

macro = மாக, மாகிய
magnitude = மாகனம், (மானம் என்பது தனித்து வரும் போது சரிவராது; ஆனால் கூட்டுச் சொற்களில் சரிவரும்.)
magnify = மாகப் படுத்து
major = மேவு, மேவிய, மேவர்
majority = மேவுதி
many = பல, நனி
mass = மொதுகை, மதுகை
maximum = மீகுமம்

இவை போகப் பயின்ற மற்ற சொற்கள் வருமாறு:

solid = திண்மம்
macro meter = மாக மாத்திரி, மாகிய மாத்திரி
standard = செந்தரம்
priority = பெருவுதி
army = அரணம் (=இராணுவம்)
mayor = மேயர்
massyness = பொருண்மை
space = வெளி
weight = நிறை, எடை
filling = நிறைத்தல்

maximum என்பதற்கு எதிரான minimum என்ற சொல்லை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

அளவுச் சொற்கள் - 1

என்னுடைய வலைப்பதிவில் முன்பு ஒரு நண்பர் கொடுத்த பின்னூட்டில் "micro, macro, mega போன்றவற்றை தமிழில் எப்படி விதப்பாகச் (specific) சொல்லுவது?" என்று கேட்டிருந்தார்.
-----------------------------------------------------------
அவர் கேட்டிருந்த சொற்கள் எல்லாம் அளவுக் கருத்து பற்றிய முன்னொட்டுச் சொற்கள். அளவுச் சொற்களைக் கையாளும் போது நம்முடைய பேச்சில் தகுதி (quality), எண்ணுதி (quantity) என்ற இரண்டிலுமாய்த் துல்லியம் காண வேண்டும். ஆங்கிலத்தில் அளவு பற்றிய பல்வேறு முன்னொட்டுச் சொற்களை அடுக்கி, இடத்திற்குத் தகுந்தவாறு, பயன்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளும் நாம், தமிழ் என்று வரும் போது மட்டும், பொதுமையான சில அளவுச் சொற்களைத் தெரிந்து கொண்டு, விதப்பானவற்றை அறிய மாட்டேம் என்கிறோம். அளவு பற்றிய எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே வைத்து ஏதோ ஒரு வகையில் ஒப்பேற்றி விடுகிறோம். பொதுவாக நம்முடைய மொழியைக் கையாளுவதில் நமக்கு ஓர் அலட்சியம் இருக்கிறது, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொல் தொகுதியை கூட்டிக் கொள்ளாதே இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். (இதை மிகுத்துச் சொன்னால் பலருக்கும் என்மேல் கோவம் வரக்கூடும்.) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு தருகிறேன். ஒருபொழுது திண்ணை வலையிதழில் ஒரு நேர்காணல் உரையாடலில் பங்காளர் ஒருவரின் (மிகப் பெயர் பெற்ற, அண்மையில் மறைந்த ஓர் எழுத்தாளர்) வாசகம் படித்தேன்.

"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."

இதைப் படித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்நாளைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஏன் இந்த அளவு தமிங்கிலம் பயில்கிறார்கள்? இதில் என்ன தமிழில் சொல்ல முடியாத பெரிய கலைச்சொல் பொதிந்து கிடக்கிறது?

"நான் என்ன நினைக்கிறேன்னா, எது செந்தமிழ், எது சாதாரணத் தமிழ்னு தெளிவா அடையாளம் காணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் செந்தமிழ்க்காரர்கள்ன்னு தான் சொல்ல முடியும்"

என்று கூட ஒரு தமிழறிந்த கூட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தமிங்கிலம் இவர்களுக்குப் பழகிப் போகும் என்றால், அப்புறம் இன்றையத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசி இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பேசாமல் குமரியில் மூன்று தடவை சுற்றிவந்து இந்தத் தமிழ் என்னும் மொழியைத் தூக்கி எறிந்துவிடலாமே? அதைவிடுத்து ஏன் இப்படிச் சல்லியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

பொதுவாக இந்தப் பழக்கம் ஒரு நோய் போலவே நம்மில் மிகுதியானவரைப் பீடித்திருக்கிறது. தமிங்கிலம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து என்றைக்கு அதற்கு முடிவு கட்டுவோம்?
---------------------------------------------------------------
நண்பர் கேட்ட சொற்களோடு இன்னும் சில தொடர்புள்ளவற்றைச் சேர்த்து இங்கே கொடுத்திருக்கிறேன். பதிவை ஐந்து பகுதிகளாக்கி அனுப்புகிறேன்.

அளவு என்ற பெயர்ச்சொல் அள்ளுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்தது. அள்ளுதல் என்பது முதலில் நெருங்குதலைக் குறித்துப் பின் சேர்த்தல் அல்லது கூட்டுதல் என்ற பொருளைக் குறிக்கும். அள்ளுதலில் இருந்து அள்+து>அட்டு>அட்டுதலும், அட்டு>அடு>அடுதலும் ஆகிய வினைகள் பிறக்கும். அட்டுதல் என்பது சேர்த்தல் என்ற பிறவினையையும், அடுதல் என்பது சேர்தல் என்ற தன்வினையையும் குறிக்கும். அடுதல் என்ற தன்வினையில் இருந்து அடுவித்தல் என்ற இன்னொரு பிறவினையும் பிறக்கும். அட்டுதலும் அடுவித்தலும் ஒரே பொருள் கொண்டவை தான். கூட்டுதல், சேர்த்தல் என்றே இவை பொருள்படும். அடுவித்தல் என்ற சொல், பலுக்கச் சோம்பலில் அதுவித்தல்>அதியித்தல்>அதித்தல் என்றும் திரியும். to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல். please add 2 and 3; 2 யையும் 3 யையும் கூட்டு. addition = கூட்டல், அடுவம், அதியம்; additive = கூடுதலான, அதிவான

கூட்டுதல் என்ற பொருளில் உள்ள தொகுதியில் நான் எடுத்துக் கொள்ளும் முதற் சொல் ample; இதற்கு இணையாய் அமலை என்று தமிழில் சொல்லலாம். "அவனும், நானும், எல்லோரும்" என்று ஓர் உம்மைச் சேர்த்துச் சொல்லுகிறோம் இல்லையா? அந்த உம் என்னும் இடைச்சொல் கூட்டப் பொருளைச் சுட்டிக் காட்டும். உம்முதல் என்பது சேருதலே. உம்முதல்>அம்முதல் என்று திரியும். அம்முதல்>அம்புதல்>அப்புதல் என்பதும் ஒன்றின் மேல் ஒன்றை சேர்த்துக் கொண்டு வருவதைக் காட்டும். அம்முதலில் இருந்து பிறந்த சொல் அமலை. இது செறிவுப் பொருளைக் காட்டும். இது தவிர மிகுதி என்ற பொருளையும் திவாகரம் காட்டும். மெல்லின இணை, மெல்-வல் இணையாகத் திரிந்து, பிறகு வல்லின இணையாக மாறுவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம் தான். அம்மா என்று இயலொலி அம்பா என்று ஆகி பின் அதன் பொருள் நீண்டு இன்னொரு பெற்றோரைக் குறிக்கும் வகையில் அப்பா என்று திரியும். அதே போல "வந்நு" என்னும் வினைச்சொல் "வந்து" என்று திரியும். பண்ணுதல் என்னும் வினையில் இருந்து பண்டம் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இவையெல்லாம் இந்த மெல்லிணை>மெல்வல்>வல்லிணைத் திரிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். அமலைக்கும் ample க்கும் உள்ள இணை இப்பொழுது புரிகிறதா?

அடுத்த சொல் average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் என்பதைச் சொல்லலாம். ஒரு படியில் அரிசியை முகந்து அளக்கிறோம். படியின் முகவாயில் அரிசி குவியலாய்க் கிடக்கிறது. அதை கையால் சரி செய்து தட்டையாக்கிப் போடுவதை நிரவுதல் என்று சொல்லுகிறோம். கொள்கலனில் ஏற்ற இறக்கமாய் கிடக்கும் கூலப் பொருளை ஒரே மட்டமாய் ஆக்குவதும் நிரவல் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் average என்கிறார்கள். average = நிரவை, நிரவல்

மூன்றாவது சொல் big = பெரிய; இதற்கு விளக்கம் தேவையில்லை

நான்காவது சொல் brief; இதற்கு இணையாய்த் தமிழில் பொருவிய என்பதைச் சொல்லலாம். "சொல்லுவதைப் பொருவினாற்போல் சொல்" என்றால் "whatever you say, say it briefly" என்று பொருள். இங்கே சுருக்கம் என்று சொன்னால் அது short or summary என்ற பொருள் கொள்ளும். வெள்ளரிக்காய் வாங்கும் போது சந்தையில் பிஞ்சாய்ப் பார்த்து வாங்கிவரச் சொல்லி வீட்டில் சொல்கிறார்கள் இல்லையா? இது போன்ற பிஞ்சுகளை பொருக்கை என்று தென்பாண்டி நாட்டில் சொல்வார்கள். பிஞ்சும் பொருக்கும் என்பது அங்கு மரபுத் தொடர். பொருவுதல் என்பது இப்படிப் பிஞ்சாய் ஆகுதல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் brief என்ற சொல் இப்படிச் சின்னதைக் குறிக்க எழுந்தது. brief = பொருவிய

ஐந்தாவது சொல் broad; இதற்கு இணையாய் பரத்திய, பரவிய, அகண்ட என்பதைச் சொல்லலாம். குறுகிய என்பதற்கு எதிரானது பரவுதல், பரத்துதல். பரந்த காவிரி, அகண்ட காவிரி என்னும் போது அதன் பரந்தமை (broadness) பற்றியே சொல்லுகிறோம். அதாவது வெறும் நீளப் பரிமானத்தைக் காட்டிலும் இரண்டாவது பரிமானமான அகற்சி இங்கே பேசப்படுகிறது.

ஆறாவது சொல் bulky; இதற்கு இணையாய் பருக்கான என்பதைச் சொல்லலாம். உப்பென்று பருத்துக் கிடப்பது bulky. பருக்கிக் கிடப்பதற்கு வலிமை பெற்றது என்ற பொருள் கிடையாது. அண்டவெளியில் முப்பரிமானம் பரவிப் பருத்துக் கிடக்கிறது. மேலே சொன்ன பரவிய என்பதற்கும் பருக்கிய என்பதற்கும் உள்ள பரிமான வேறுபாடு நாம் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே புலப்படும். பரவிய என்பது இரு பரிமானச் சொல். பருக்கிய என்பது முப் பரிமானச் சொல்.

ஏழாவது சொல் capacity; இதற்கு இணையாய் கொண்மை என்பதைச் சொல்லலாம். "இந்த ஏனம் அல்லது கலம் எவ்வளவு கொள்ளும்?" என்று கேட்கிறோம் இல்லையா? கொள்ளுமை என்பது, கொண்மை என்று மெல்லின ஓசை இடைவரத் திரியும். கலத்திற்கு உள்ள இந்தத் தன்மையை இன்று எல்லாக் கட்டகங்களிலும் (systems) சேர்த்துச் சொல்லுகிறார்கள். ஏனத்தின் கொண்மை (capacity of a vessel), இறைப்பியின் கொண்மை (capacity of a pump), மின் நகர்த்தியின் கொண்மை (capacity of an electric motor), மாந்தனின் வலிதாங்கும் கொண்மை (a man's capacity to withstand pain) இப்படி இது விதவிதமாய் விரியும்.

எட்டாவது சொல் central; இதற்கு இணையாய் நடுவண் என்பதைச் சொல்லலாம்; பெயர்ச்சொல்லாய் வரும் போது நடுவம் என்றும் பெயரடை அல்லது முன்னொட்டாக வரும் போது, நடுவண் என்றும் வரும். central government = நடுவண் அரசு. மத்திய என்று பலரும் புழங்கும் சொல், உண்மையில் நட்ட என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழிப் பலுக்கில் கூறும் ஒரு திரிவு தான். மூலம் தெரியாமல், பலரும் இதன் தோற்றம் வடமொழி என்று தடுமாறுவது உண்டு. தமிழில் நகரமும் மகரமும் போலிகள்; முப்பது என்பதை நுப்பது என்றும் முடங்கும் என்பதை நுடங்கும் என்றும் பலுக்குவதை உணர்ந்தால் இது புலப்படும். அடுத்து, டகர ஒலி, தகர ஒலியாகப் பலுக்கப் படுவது வடக்கே போகப் போக நடக்கும். முடிவில் சொல்லின் உள்ளே யகரம் நுழைவதும் வடமொழிக்கு உள்ள பழக்கம் தான். ஆக நட்ட>நத்த>மத்த>மத்ய>மத்திய என்ற வழிமுறையில் சொற்திரிவு அமையும். மத்திய என்பதன் மேலோட்ட வடமொழித் தோற்றத்தில் அதன் தமிழ் மூலம் உணர முடியாமல் தடுமாறுகிறோம்.

ஒன்பதாவது சொல் dimension; இதற்கு இணையாய்ப் பரிமானம் என்பதைச் சொல்லலாம்; எந்த ஒரு பொருளும், தான் இருக்கும் வெளியில் விரிந்து நிற்கிறது. விரிந்து நிற்பது வியல்ந்து நிற்பது என்றும் சொல்லப் பெறும். பரிப்பு என்பதும் வியல்ந்து நிற்பதே. பரிதல் என்பது வளைந்து நிற்பதையும் குறிக்கும். "செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்" என்ற புறநானூற்று வரிகளை இங்கு எண்ணிப் பார்க்கலாம். இதில் பரிப்பு என்பது வளைந்த வட்டத்தைக் குறிக்கிறது. மானம் என்பது மதித்தல், அளவிடுதல் என்பதன் பெயர்ச்சொல். மா என்பது அதன் வேர்ச்சொல். மாத்தல் என்பதில் இருந்து பிறந்தது மானம். இயற்கையில் நாம் கண்ணால் காணும் வெளி, பரிமானம் தழுவியது. அதாவது அதைப் பரித்து (வளைத்து) நாம் அளக்கிறோம். இயற்கையில் கிடக்கும் பொருள்களை இடுவிப்பாக (idealistic) உருவகஞ் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற பரிமானங்களாய் கணக்கின் ஒருபகுதியான வடிவியல் (geometry) குறிக்கும். கோடு என்பது ஒற்றைப் பரிமானம்; பரப்பு என்பது இரட்டைப் பரிமானம்; நாம் காணும் முப்பரிமானப் பொருள்களைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் கூடிய பரிமானங்களை, இந்தக் கால வகைப்பு இடவியலும் (differential topology), வகைப்பு வடிவியலும் (differential geometry) கையாளுகின்றன. ஐன்சுடீனின் உறவாட்டுக் கொள்கையில் (theory of relativity) இடம், காலம் என்று இணைந்த வகையில் நாற் பரிமானம் பேசப்படும்; இன்னும் மேலே போய் நனி பரிமானப் பல்மடி (many dimensional manifold) பற்றியும் இன்றையக் கணிதவியலில் பேசுவார்கள்.

பத்தாவது சொல் enormous; இதற்கு இணையாய் எண்ணிறந்த என்பதைச் சொல்லலாம். எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிச் சலித்த நிலைக்கு, எண்ணிறந்த என்று சொல்லுவார்கள். இதற்கும் மேல் அளக்கவே முடியாத ஒரு நிலை infinitity ஆகும். இது தமிழில் வரம்பிலி என்று சொல்லப்படும். இந்த வரம்பிலியை எண்ணிலி, ஈறிலி, கந்திலி என்றெல்லாம் சொல்லுவது உண்டு. கந்து என்பது பற்றுக் கோடு; அதுவும் ஓர் ஈற்றைத் தான் குறிக்கும். அந்தக் கந்தே இல்லாத நிலை கந்திலி.

பதினோறாவது சொல் expanse; இதற்கு இணையாக விரிந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய என்பதற்கும் விரிந்த என்பதற்கும் பரிமானம் தவிர மிகுந்த வேறுபாடு கிடையாது; விரிவு என்பது எல்லாப் பரிமானங்களிலும் நடக்கக் கூடியது. ஆனால் பரவிய என்பதைப் பெரிதும் இரு பரிமானத்திற்கு மட்டுமே பயனாக்குவது நல்லது.

பன்னிரண்டாவது சொல் extent; இதற்கு இணையாகப் பரந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய, விரிந்த என்ற சொற்களில் இருந்து சற்றே நுணுகிய வேறுபாடு கொண்டது. பொதுவாகப் பரந்த என்ற சொல் இருபரிமானத்திற்கு இயல்பாகவும், ஓரோவழி ஒற்றைப் பரிமானத்திற்கும் சொல்லலாம். முப்பரிமானம் சார்ந்த நிகழ்வுகளுக்கும், பொருள்களுக்கும், மிகக் குறைந்த அளவிலேயே இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். அது என்னவோ தெரியவில்லை, பரவிய, விரிந்த, பரந்த என்ற மூன்று சொற்களும் தமிழில் ஒன்றுக்கு மாறாக இன்னொன்று என்று மயங்கியே பலராலும் புழங்கப் படுகின்றன. இனி வருங்காலப் புழக்கத்தில் எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. என்னைக் கேட்டால் இதற்கு இது என்று ஒரு சமன்பாட்டை இனிமேலாவது கொண்டுவரலாம்.

பதிமூன்றாவது சொல் flow; இதற்கு இணையாகப் பெருக்குதல், பெருவுதல் என்ற சொற்களைச் சொல்லலாம். விளவுதல் என்ற சொல்லும் ஓரோவழி சொல்லப்படுவது உண்டு. (பாய்தல், ஓடுதல் என்பவை நேரடிப் பொருள் தரும் சொற்கள் அல்ல. அவை துல்லியம் அல்லாத, கிட்டத்தட்டச் சரிபண்ணும் சொற்கள். நானும் இப்படிச் சரிபண்ணிக் கொண்டு இருந்திருக்கிறேன்.) பெருவுதல்/பெருகுதல் என்பது தன்விணை; பெருக்குதல் என்பது பிறவினை. ஆடிப் பெருக்கு என்றால் ஆடி மாதம் ஏற்படும் flow. ஆறுகளையே கூடப் பெருநை>பெருணை>பெண்ணை என்று தான் தமிழிய மொழிகள் கூறிவந்தன. வடக்கே பெருகியுது வடபெருநை>வடபெருணை>வடபெண்ணை. அதற்கடுத்து சற்று தெற்கே கருநிறத்தில் பெருகியது கருந பெருநை>கருந பெருணை>கன்ன பெண்ணை; கருந பெண்ணையை வடமொழிப் படுத்தி கிருஷ்ண பெண்ணை என்று ஆக்கிப் பின் பெண்ணையைத் தவிர்த்து கிருஷ்ணா என்பார்கள். இன்னும் தெற்கே தென்பெருநை>தென்பெருணை>தென்பெண்ணை என்ற ஆறு உண்டு. ஆகத் தெற்கே தாம்பர பெருநை>தாமிர பெருணி>தாம்பிரவருணி என்ற ஆற்றைத் தெரியாதார் கிடையாது; இந்திய ஆறுகளின் பெயர்கள் பலவற்றையும் ஆழ்ந்து பார்த்து, அவற்றின் உள்ளார்ந்த தமிழ்மூலத்தை அறியும் போது நமக்குப் பெரிதும் வியப்பு ஏற்படுகிறது. இந்தியப் பழமையில் தமிழரின் பங்களிப்பு பெரிதும் இருக்கிறது. அதை ஒருமுறை மடற்குழுக்களில் செய்தேன். இன்னும் ஒருமுறை வேறொரு வாய்ப்பில் திரும்ப அலச வேண்டும். நீரோட்டம் என்பது பெருக்கைக் குறிக்கக் கொஞ்சம் சுற்றி வளைத்த சொல்.

பதிநான்காவது சொல் huge; இதற்கு இணையாக ஊகை என்பதைச் சொல்லலாம். உகர ஒலியின் குறில், நெடிற் பலுக்கில் ஏகப்பட்ட உயர்ச்சிச் சொற்கள் எழுந்துள்ளன. உகரம் ஒகரமாகியும், ஓங்கி உள்ள பொருட்களை நமக்கு உணர்த்தும். ஊகி நிற்பது என்னும் போது கண்முன்னே உயர்ந்து பெருகி நிற்கும் உருவம் புலப்படும். ஊங்கு என்றாலும் மிகுதி என்ற பொருள் தமிழில் உண்டு; அதே போல ஓகம் என்ற சொல்லும் பெருகி நிற்பதைக் குறிக்கும்.

பதினைந்தாவது சொல் immense; இதற்கு இணையாக மொந்தை என்பதைச் சொல்லலாம். மொத்தம் என்னும் போது கூட்டப் பொருள்தானே வருகிறது? மொந்துதல் என்பது தன்வினை. மொத்துதல் என்பது பிறவினை.

பதினாறாவது சொல் large; இதற்கு இணையாய் அகலை என்பதைச் சொல்லலாம். அகலம் என்ற சொல்லில் ஈற்றை மாற்றி வருவது அகலை. அகல்ந்தது என்பது வினைச்சொல்.

பதினேழாவது little; இதற்கு இணையான சின்ன என்ற சொல்லைப் பற்றி நான் மிகுதியாகச் சொல்லவேண்டியது இல்லை.

இதுவரை சொன்ன 17 அளவுச் சொற்களைத் தொகுத்துச் சொன்னால்,

ample = அமலை
average = நிரவை, நிரவல்
big = பெரிய
brief = பொருவிய
broad = பரத்திய, பரவிய, அகண்ட
bulky = பருக்கான
capacity = கொண்மை
central = நடுவண்
dimension = பரிமானம்
enormous = எண்ணிறந்த
expanse = விரிந்த
extent = பரந்த
flow = பெருக்குதல், பெருவுதல், விளவுதல்
huge = ஊகை
immense = மொந்தை, மொத்தை
large = அகலை
little = சின்ன

அதோடு கட்டுரையில் வந்த மற்ற சொற்களையும் பட்டியலிட்டால், கீழுள்ளது கிடைக்கும்.

quality = தகுதி
quantity = எண்ணுதி
to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல்.
addition = கூட்டல், அடுவம், அதியம்
additive = கூடுதலான, அதிவான
broadness = பரந்தமை
system = கட்டகம்
pump = இறைப்பி
electric motor = மின் நகர்த்தி, மின்னோடி
idealistic = இடுவிப்பு
geometry = வடிவியல்
differential topology = வகைப்பு இடவியல்
differential geometry = வகைப்பு வடிவியல்
theory of relativity = உறவாட்டுக் கொள்கை
manifold = பல்மடி
infinitity = வரம்பிலி, எண்ணிலி, ஈறிலி, கந்திலி

இனி மகரத்தில் தொடங்கும் அளவுச் சொற்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, July 10, 2006

மனசில் தேரோடுமா?

(உரைவீச்சு)

(சென்ற ஆண்டு தேரோட்டத்தின் போது எழுதியது; திண்ணை வலையிதழிலும் வெளிவந்தது. இந்த ஆண்டாவது நிலைமை மாறும் என்று நினைத்தேன்; ஊகும்.... வரலாறு, பிடித்து வைத்த செக்கைப் போல், மாறாது போல், இருக்கிறது. - இராம.கி., 10 சூலை 2006.)

(சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான். ஆனாலும் சில தலைமுறைகளுக்கு முன்னால் வரை எல்லா மக்களும் தான் அங்கே தேர்வடம் பிடித்தார்கள். இன்றைக்குத் தேர்வடம் பிடிப்பதில் ஒரு சாரார் வரட்டுக் குரவம் (கௌரவம்) காட்டுகிறார்கள். நம் குமுகப் பிறழ்ச்சி பலநேரம் நம்மைக் கொதிப்படைய வைக்கிறது. எத்தனையோ பெருமை கொண்ட சிவகங்கைச் சீமையின் மிஞ்சிப் போன அவலங்களுள் இதுவும் ஒன்று.)


"என்னங்கடா,
'இன்னார் மகன்'னு
படங் காட்டுறீயளா?"

"அஞ்சு மணிக்கு நாலுவீதி
சுத்திவரும்னு சொல்லிப்புட்டு,
ரெண்டு மணிக்கே அவுக்கவுக்காய்
ஏறிவந்து வடம் புடிப்பா?

கூடி வந்த எங்க சனம்,
கோயில் தள்ளி நிறுத்திவச்சி,
விறுவிறுன்னு 4 வீதி
சுத்திவர இழுத்துவிட்டு,

தேருநிலை கொள்ளுமுனே,
உப்புக்கொரு சப்பாணியா,
ஓட்டிவந்த இருபத்தாறை
ஒண்ணுகூடித் தொடச்சொல்லி...."

"ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ?

நாலுவடத்தில் ஒண்ணுதந்து
நாகரிகம் பார்த்துவச்சா,
கோணப்பயக, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ?"

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீயளோ?"

"இதுக்கு
ரெண்டாயிரம் காவல்,
ஒரு ஆணையன்,
ரெண்டு மூணு வட்டாட்சி,
ஒரு மாவட்டாட்சி,
ஏகப்பட்ட ஊடகம்!"

"போங்கடா, போக்கத்த பயகளா?
போயிஅந்த உயர்மன்றில்
ஓங்கி அறிக்கை வைய்யுங்க!
அரசினோட அதிகாரம்
அமைதிகாத்த கதைவிடுங்க!"

"அப்புறம்

தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாக

அவுகள்லாம் இனிமேலே
சிவகங்கைச் சீமைக்குள்ளே
அடுத்தவாட்டி வரவேண்டாம்;
கட்டளையாச் சொல்லிடுங்க.

வாக்குக்கேட்டு இனிஒருத்தன்
வக்கணையா உள்ளவந்தா,
சேர்த்துவச்சு நாங்களெலாம்.....,
செருப்புப் பிஞ்சுரும், ஆமா!"

"டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!
தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்ம ஆட்கள்
கையெல்லாம் வேணுமின்னு,
கூப்பிடாய்ங்க! தேரிழுத்தோம்!

இப்பத்தான், எல்லாமும்
பொருளாதாரம்; தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!

அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே,
அப்புறம் என்ன?

அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது?
முக்கா மணியென்னடா?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க?"

"அய்யா, சாமிகளா, போறவழியிலே
சொர்ணமூத்தீசரையும் பெரியநாயகியையும்
நாங்க சாரிச்சதாச் சொல்லுங்க!
நாங்களெலாம் வடந்தொட்டா,

அருள்மிகுந்த அவுகளுக்கு
ஆகிடவே ஆகாதாம்,
கொள்ளாம கூடாம,
கோச்சுக்கவும் செய்வாகளாம்,
மழையினிமே வாராமப்
மந்திரமும் பண்ணுவாகளாம்."

"இப்படியே போனா,
அவுகளும் எங்களுக்கு வேணாம்,
அவுகளை நாங்களும் விலக்கி வச்சுர்றோம்"

"டேய், சாமிகுத்தம்டா,
விலக்கு, கிலக்குன்னு பேசாதே!"

"அடச்சே போங்கடா!
தேரோடுதா(ந்), தேர்?

முதல்லே
அவனவன் மனசுலே
தேரோடுமான்னு பாருங்கடா?"