முதலில் உரையாடலைப் படிப்போம். [உரையாடல் அதே சொற்களில் கீழே இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அமையுமாறும், அதே பொழுது படிக்கச் சுவை கருதியும், கொஞ்சம் எடுவித்துக் (edit) காட்டியிருக்கிறேன்.]
----------------------------------------------
இங்கே பாருங்க தம்பி, பாலைலே வானம் பார்க்குறது ..... மழைக்காகவும் இருக்கலாம், நாள்காட்டு, கோளுன்னு ராத்திரி வெளிச்சத்துக்காகவும் இருக்கலாம். நல்ல வேளையா, மழைக்கு வானம் பார்க்குற சோகம் இந்த வருசம் இல்லை; கொட்டோ கொட்டுன்னு கொட்டி, குளம், கம்மாய்ன்னு வெள்ளமாக் கிடக்கு. இருந்தாலும் வெல வாசிதான் கன்னாப் பின்னான்னு ஏறிக் கிடக்கு.
ஆமாண்ணே! பொன்னி வெல கிலோ இருவத்தஞ்சு சொல்றான். ஒரு நாளைக்கு நூறு ரூவா இருந்தாலும் ஒரு குடும்பம் ஒழுங்காச் சாப்பிட முடியாது போலெ. பக்கத்துலே ஏதாச்சும் வாங்கிவருவோம்னு பார்த்தா, பேருந்துக் காசு 4 ரூவா, 5 ரூவா இருக்கு. ஓர் இளநீ 8 ரூவா, 10 ரூவா விக்குது. நன்னாரி "சர்பத்" கூட, அஞ்சு ரூபாய்க்குக் குறையமாட்டேங்குறான். எங்கேயும் குடிக்கிறதுக்கு நல்ல தண்ணியை காணோம். தவிச்ச வாய்க்குத் தண்ணீர், மோர் குடுக்க, இப்ப யார் பந்தல் வைக்குறா, சொல்லுங்க? கடைசிலே எல்லாப் பயலுகளும் ஆளுக்கு ஒரு புட்டில் (bottle) தண்ணியைக் கையிலே தூக்கிட்டே அலையுறாய்ங்க..... "கலி காலத்துலே, காசுக்கு தண்ணி விப்பாக"ன்னு கேள்விப் பட்டிருக்கேன்; இப்ப அது உண்மையாப் போச்சு.
என்ன தம்பி, நாமளாவது அன்னாட வாழ்க்கையிலே அல்லாடறதைப் பத்திப் பேசிட்டிருக்கோம். தெற்கிலும் தெற்கே (புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.) உசிருக்குல்லே அல்லாடுறாக. அதப் பேச மாட்டேங்குறீயேப்பா?
பேசப் படாதுன்னு இல்லைண்ணே! நம்மளை யாரு பேச விடறாக? வேரோடே அவுகளை அழிச்சுப்புடத்தான் ஒரு கூட்டமே கருவங் கட்டிக்குனு அலையுதே! நம்மூர்க்காரவுகளும் இதுக்கு தொணையாயில்லெ போறாக! கத்தி, கபடா, தளவாடம்னு எல்லாம் இங்கேர்ந்து தான் போகுதுன்னு பரவலாச் சொல்லிக்கிடறாக.
என்னப்பா நாயம்? நம்ம பங்காளிகளைக் கொல்ல நாமளே துணை போகலாமா? கேக்க ஒரு நாதியில்லையா?
ஆமாண்ணே! தெக்கத்திகாரவுகளைப் பத்தி வெளிப்படையா யாருண்ணே நம்மூர்லே பேச முடியுது, சொல்லுங்க? ஒரு நாளிதழ், ஒரு தாளிகை, ஒரு தொலைக்காட்சி இப்படி ஏதாவது ஒண்ணு வெளிப்படையா நம்மூர்லே ஆதரிச்சுப் பேச முடியுதா? உடனே "தேசத் துரோகம்"னு சொல்லி அமத்தியர்றாய்ங்க. (எந்த அரபு நாட்டுலேயாவது பாலத்தீனியனைப் பத்திப் பேசமுடியாமல் இருக்க முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க. வடக்கு அயர்லாந்து பத்தி தெற்கு ஐரிசுக்கார பேசாம இருந்திருக்காகளா? போசுனியா பத்தி யுகோசுலாவுக்கார? ஏன் நம்ம மட்டும் இப்படிப் பேசமுடியாம இருக்கு?) தெற்கத்தியாட்கள் பேரைச் சொன்னாலே, அவுக நாட்டுப் பேரை எடுத்தாலே, ஒரு மாதிரியா இங்கே பார்க்குறாய்ங்களே? அது ஏன்? ஒரு விலங்கு பேரைச் சொன்னாலே "உள்ளே போடுறா"ன்னு பயமுறுத்துற அளவுக்கு, நம்முரைக் கெடுத்து வச்சிருக்காய்ங்களே, அது ஏன்?. இதுலே பேராயம், பாரதிய சனதா, அய்யா கழகம், அம்மா கழகம், மத்த கழகங்கள்னு பேருகள் தான் வேறேயெ தவிர, எல்லாரும் ஒரே குட்டையிலே ஊறுன மட்டைகளாட்டம் தான் நடந்துக்குறாய்ங்க. தமிழ், தமிழன்னு சொல்றதெல்லாம் ஒரு பாவலாத் தான். மனசுலே இருக்குறதை வெளியிலே சொல்ல முடியாம, மருகிக்கினே பயந்து சாகுறாய்ங்க. அவனவன் சம்பாதிச்சதைக் காப்பாத்திக்கோணுமில்லெ. இவுனுக போடுற கட்டியத்துலே (condition), அண்ணன், தம்பி, தவறிப் போனா, ஒப்பாரி வச்சு பாடப்புடாதாமே? "என்னடா இது, வாழ்றது நம்முர்லே தானா?"ன்னு சந்தேகம் நமக்கு அப்பப்ப வந்துருது; மொத்தத்துலே, நாடு போற போக்குச் சரியில்லெண்ணே.
ஆமா தம்பி, உடுத்துன துணியோடு எல்லாத்தையும் இழந்து ஓடியாரவுகளையும் "ஊடுருவல்"ன்னு சொல்லிடுறாய்ங்க. என்னய்யா இது, பொழைப்புக்கா ஓடியார்றாக, உசிரு நாளைக்கு நிலையில்லெ, "வானத்துலேர்ந்து குண்டு போட்டுக்குணே இருக்கான்"னு பதறியடிச்சு ஓடியார்றாக - அப்படின்னாலும் அவுகளை ஆதரிக்குறவுகளுக்கு இங்கே தடா, பொடா தான். சரி, ஓடியாறத்தான் வழி விடலை. கொல்லுறதுக்கு வழிபண்ணாம இருக்கலாமில்லியா? அதுவுமில்லியே? "இந்தாடா, மாப்புளே, இதையும் வச்சுக்க, எங்க பங்காளிகளை நீயே வெட்டிச் சாய்ச்சுரு, அப்பத்தான் ஒழுங்கா இருப்பாய்ங்க"ன்னு அரிவாள், கத்தியை எதிரிக்கு அணுக்கம் பண்ணிக் குடுத்தா எப்படி?
அண்ணே சரியாச் சொல்றீக! நம்மூர்லேர்ந்து சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்குறது கொஞ்சம் கூடச் சரியில்லேண்ணே. உடம்பிறந்தானுக்கு நாமளே உலை வெக்கலாமா?
நல்லாக் கேட்டுக்க தம்பி, சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்கறதை மட்டும் பார்த்தா நமக்கு நிலைமை புரியாது; இன்னும் ஆழப் போனாத்தான், சிக்கல்லே இருக்குற சூழ்க்குமம் புரியும். சிங்களத்துக்கும் இங்கேயும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கு போலிருக்கு. அங்கே தமிழரசு ஒண்ணு ஏற்படப்படாதுண்ணு தடுக்குறதுலே, நம்ம நடுவணரசு உறுதியாவே இருக்கு. நம்மளைப் போன்ற தமிழ்க்காரவுக மனசு நடுவணரசுக்கு மாறியிருக்குன்னு கூட அது உணர்ந்ததாத் தெரியலை.
அதெப்படிண்ணே! தமிழராகிய நாமளும் சேர்ந்தது தானே நம்ம நடுவணரசு? நம்ம உணர்வை உதறித் தள்ளிருமா?
பாக்குறதுக்கு நடுவணரசில் நாம சேர்ந்து இருக்குறோம்குறது ஒரு தோற்றம் தம்பி, உண்மையிலே நம்ம ஆட்கள் அங்கே எதுவும் மாறிச் சொல்லலை; நடுவணரசு கேட்கவும் இல்லை. இவய்ங்க ஒரு பக்கம் சில அமைச்சுகள்லெ பரிபாலனம் பண்ண, இன்னொரு பக்கம் நடுவணரசு எடுக்குற முடிவுகள் நம்ம எண்ணத்துக்கு மாறித்தான் இருக்கு. அதோட மட்டுமில்லை; இன்னொரு பக்கமும் பாரு, படகு எடுத்துக்கினு நம்மூர்க்கரவுக கடலுக்கு மீன்பிடிக்கப் போனா, "அங்கே புடி, இங்கே புடி"ன்னுனு சிங்களத்தான் தென் கடல்லேயும், கீழக் கடல்லேயும் குண்டு போடுறான். இந்தக் குண்டுமாரிலே மாட்டிக்கிணு கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஆளுகளும் செத்துப் போறாக. போனவாரம் கூட இப்படித்தான் ஓராளு போயிட்டாரு; என்னாச்சு, ஏதாச்சுன்னு கேக்கக் கூட தமிழக அரசலே யாரையும் காணோம். செய்தித்தாள்லேயும் எங்கேயோ ஒருமூலையிலே பத்தி போடுறான். கடைசிலே, "இந்தாங்கப்பா, ஒரு லெச்ச ரூவா வச்சுக்குங்க, இனிமே அந்தப்பக்கம் படகுலெ மீன்புடிக்கப் போகாதீக"ன்னு போதனை மட்டும் கொடுத்தர்றாக. "என்னய்யா இது, தெரிஞ்ச தொழில் மீன்புடிக்குறது மட்டும் தானே! அங்கே போகாதேன்னா, எப்படி? நம்மூருக்கும் அந்தக் கடல் உரிமைதானே? மீன்புடிக்காம, நாங்க உயிர்வாழ்றது எப்படி? ஆக, ஒண்ணும் நமக்குப் புரிய மாட்டேங்குது. எந்த நாட்டுலே நாம இருக்கோம்? நாம தமிழ் தான் பேசுறமா, இல்ல, சிங்களம் பேசுறமா?"
சரியாச் சொன்னீக அண்ணே! வணிகம் அது இதுன்னு சொல்லி நம்மூர்க் கப்பல் நம்முர்த் துறைகள்லே அணையலாம்னு, கடலுக்குள்ளே நம்ம அரசே வாய்க்கால் வெட்டப் போனா, "அய்யோ, எங்க சாமி போட்ட பாலத்தை வெட்டுறாய்ங்களேன்னு" முட்டாப் பயக சிலர் நம்மூர்லேயே ஒப்பாரி வைக்குறாய்ங்களே? அதையும் கவனிங்க.
அதே ஏன் கேக்குறே, தம்பி, வெவரங் கெட்ட பயலுகளுக்குச் சேதுன்னா என்ன பொருள்னு கூட வெளங்கலெ! வடக்கத்திக்காரன் இராமர் அது இதுன்னு சொன்னான்னா, இவய்ங்களும் ஆமாஞ்சாமியா? நம்மூர் இயற்கை நமக்குல்லே புரிபடோணும். "சேதுன்னா தமிழ்லே பாலமில்லைப்பா; கரை; சேற்றாலே சேர்த்தது சேது. கம்மாய்க்கரை மாதிரி கிழக்குக் கடலுக்குச் சேது ஒரு கரை; சேதுக்கரைக்குத் தெக்கெ இருக்குறது தென்கடல்"னு சொல்லியும் விளங்கலே. அந்தக் கரை வழியா பத்தாயிரம் வருசத்துக்கும் முன்னாடி, விலங்கு, மனுசனெல்லாம் ஊர்ந்து, நடந்து போய் தெற்கே இருக்குற தீவை ரொப்பியிருக்காய்ங்கப்பா, ஒரு காலத்துலே அது பழந்தமிழ் நாடுய்யா. அதுலே ஒரு பகுதி ஏழ்பனை நாடு, இன்னைய யாழ்ப்பாணம். எப்படிப் பார்த்தாலும் அந்தத் தீவு நம்ம ஊருக்கு நெருக்கமய்யா. இன்னைக்கி எப்படியோ அது மாறிப் போயிருச்சு. சிங்களனும் தமிழனும் சேர்ந்திருக்குறாப்புலே ஆயிப் போச்சு. பின்னாடிச் சண்டையும் ஆயிப்போச்சு. இதெயெல்லாம் விளங்கிக்காம, இராமர்தான் பாலங் கட்டுனார்னா, தீவுக்குள்ளே அவருக்கு முன்னாடி விலங்குகளும், மக்களும் எப்படிப் போனாங்க, பாலம் கட்டியா? - ன்னு ஒரு பய கேக்க மாட்டேங்குறான். இல்லெ, யானை, பூனையெல்லாம் பத்தாயிரம், இருபதாயிரம் வருசத்துக்கு முன்னாடி, உப்புத் தண்ணியிலே நீச்சலடிச்சுப் போய்ச் சேர்ந்துதா?
சேதுங்குறது ஒரு இயற்கை மேடுய்யா; நீரோட போக்குக்குத் தக்க மாதிரி அதன் மட்டம் கூடும், குறையும். கால மாற்றத்துலே ஏற்கனவே இருந்த கரையையும் (=சேதுவையும்) மீறி கொஞ்சங் கொஞ்சமா கடல் மட்டம் இப்ப உயர்ந்து போச்சு; இயற்கையான மேடும் (=சேதுவும்) கூட இப்பக் கடலுக்குள்ளே முழுகிப் போச்சு. "சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" னு அந்தக் கடல்மேட்டுக்கு மேலே இன்னும் கரையை உயர்த்தி வீதி போடுங்கப்பான்னு பாரதி பாடினானே? இந்தப் பயலுகளுக்கு அதாவது புரியுதா? "ஆகா, பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி"ன்னு மேடையிலே பேசுனா மட்டும் போதுமா? அடப் புரியாத பயலுகளா, இராமயணக் கதைக்கும் இந்தச் சேதுவுக்கும் தொடர்பில்லைன்னு தலைலே அடிச்சிக்கினு சொன்னாலும் கேக்குறாப்புலே தெரியலையே. வேணுமின்னாச் சாமியை நல்லாக் கும்பிடுங்கப்பா! அதுக்காக, இல்லாத கதையெல்லாம் சாமி மேலே இட்டுக் கட்டாதீக.
ஆமாண்ணே! இந்த அடிப்படையைப் புரிஞ்சுக்காம, உச்ச நய மன்றம் (supreme court) வரைக்கும் வழக்குப் போடுறாய்ங்க! முட்டாப் பயலுகன்னு இவய்ங்களைச் சொல்லாம, வேறே யாரைச் சொல்லுறது போங்க? தேர்தலுக்காகப் பயந்துக்குணு பேராயக் கட்சிக்காரங்களும் உண்மையை இழுத்து மூடிருவாய்ங்க போலேருக்கே; மருத்துவரய்யா வேறெ, கூட இப்பச் சேர்ந்துக் கிட்டாரு.
ஆமா தம்பி, யாரோ சொன்னாய்ங்க! அவரவருக்கு அவரவர் அரசியல்னு. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இதுதான் சாக்குன்னு சிங்களக்காரன் தன்னூர்லேர்ந்து 30 இடங்களைப் பட்டியல் போட்டு "இதெல்லாம் இராமாயணத்தோட தொடர்புள்ள இடங்கள்"னு குழம்புன குட்டையில மீன்புடிக்கிறான். இங்கெ சில கேணப்பயல்களும் அதெ எடுத்துக்கிட்டு கேக்காய்ங்க: "பார்த்தீகளா, நாங்க சொன்னது சரியாப் போச்சு, இராமர், சீதையோட பாதங்கள் இங்கெல்லாம் பட்டிருக்கு; அப்பேர்க்கொத்த பாலத்தை வெட்டலாமா?" கூறு கெட்ட நம்ம பயல்களும் இதெக் கேட்டுக்கிட்டு இருக்காய்ங்க. அட மடப்பயலுகளா! சிங்களனுக்குத் தேவை - வாய்க்கால் அமையக் கூடாது; அப்படி அமைஞ்சா, கொழும்புத் துறைமுகம் சுத்தமாப் படுத்துரும்; அவன் பொருளாதாரம் பெரிசா அடிபட்டுரும்; தூத்துக்குடித் துறைமுகம் இதுக்கு மாறா ஓங்கி எழுந்திரும்; அதனாலெ, அதெ நிறுத்தணும்னு சொல்லி "போடுறா அனுமாரு"ன்னு குட்டிக் கரணமே அடிக்குறான். அவன் சூழ்ச்சி இவய்ங்களுக்குப் புரியலை. பொருளாதாரம் பேசுறாய்ங்க பொருளாதாரம், ரொம்ப வக்கணையா.....
ஆமாண்ணே, போற போக்கைப் பார்த்தால், மொத்தத்துலே சேதுக் கால்வாய்த் திட்டம் இனிமேப் பிசிபிசுத்துரும் போலேருக்கு. ஒருபய கண்டுக்க மாட்டான்னு நினைக்கேன்.
ஆமா தம்பி, தமிழன் தான் ஏமாளியாச்சே. "ஊரு ரெண்டானாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"னு சொல்லுவாக. இந்தக் கழகங்கள் தான் இங்கே ரெண்டாகிக் கிடக்கே, அய்யா சொன்னா, அம்மாவுக்கு ஆகலை; அம்மா சொன்னா அய்யாவுக்கு ஆகலை. அப்புறம் என்ன? எல்லாக் கூத்தாடிகளும் தனக்கு என்ன தேறும்னு கும்பல் போட்டு கூடி வர்றானுக. இவுக சண்டை என்னைக்கி நிக்குதோ, அன்னைக்குத் தான் நமக்கு விடியல்னு ஆகிப் போச்சு. அதுக்குப் பொறவுதான் ஊருலகமும் நம்ம மதிக்கும்.
பொதுவா, தமிழ், தமிழன்னாலே இந்தியாவுலே, உலகத்துலே, ஏகப்பட்ட பேருக்கு இளக்காரமாய்த்தான் இருக்கு. அதுக்கு முதற் காரணம் நமக்குப் பெருமிதமில்லே; நம்ம வரலாறு நமக்கே தெரியலை; எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுறோம். கட்சி அரசியல்லே வெட்டுக் குத்துன்னு ரொம்பவே சண்டையடிச்சுக்குறோம்.
இத்தனை நாள் பெரியாருக்கு அப்புறமும் எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியதுன்னு தெரிஞ்சுக்கிறதில்லெ. பாழாப் போன திரையுலகுலே தெரியுற நிழழை எல்லாம் நிலைன்னு நினச்சு, ஆகா, ஓகோன்னு குதிக்குறோம்.
நம்மில் பலருக்கும் ஊறிப்போன சாதியுணர்வும் தடுக்குது. தமிழன்குற உணர்வாக்கம் இன்னும் சரியா அமையலெ. இந்தியன்குற அடையாளத்துக்கும், தமிழ்ன்குற அடையாளத்துக்கும் உள்ள உறவைப் புரிஞ்சுக்கலே; ஒண்ணைப் பேசுனா, இன்னொண்ணு அதுக்கு எதிருன்னு ஊரெல்லாம் பரப்புரை நடக்குது. மொத்தத்துலே தமிழன்குற முகவரியை மறந்துருங்கிறாக.
-------------------------
இந்த உரையாடலின் கடைசியில் வரும் முன்னிகைகள் என்னுள்ளும் ஆழ்ந்து இருப்பவையே. தமிழரின் தற்போதைய நிலைக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளே காரணம் என்று நான் எண்ணுகிறேன். அதோடு, வெளிமுரணைக் காட்டிலும் உள்முரண் ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டியது என்று இயங்கியலில் (dialectics) சொல்லுவார்கள். தமிழரின் இன்றைய அவலம் பற்றிய சிந்தனைகள் எழும்போதெல்லாம், தமிழ் - தமிழர் என்ற பெருமிதத்தைக் கூட்டும் வகையில் எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது என் பதிவில் எழுதிக் கொண்டுதான் வருகிறேன். எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியது என்றும் எனக்குத் தெரிந்த வகையில் தெளிவுறுத்தி வருகிறேன். கூடவே நம் வரலாறு பற்றியும் சொல்லி வருகிறேன். இருந்தாலும் இப்படிச் சொல்லுவதைத் தடுத்த நிறுத்தும் முயற்சி, ஒரு சிலரால் தொடர்ந்து வலைப்பதிவுலகில் செய்யப் பட்டே வருகிறது.
நடுவில் கொஞ்ச காலம் ஒரு மாதிரி சலிப்பு வந்ததிலும், ஊர்சுற்றியதிலும், என் பதிவு தொய்ந்து போனது. அப்படித் தொய்ந்தது சரியில்லை என்ற எழுச்சியாலும், "செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்ற எண்ணத்தாலும், கிளர்ந்து, மீண்டும் ஒருமித்து எழுத வேண்டும் என்று முனைந்த போது, தமிழ்மண நிர்வாகத்திடமிருந்து நாள் காட்டச் சொல்லி ஓர் அழைப்பு வந்தது. அதையே ஒரு தூண்டுகோலாய் எடுத்துக் கொண்டு மீண்டும் இப்பொழுது எழுதத் தொடங்குகிறேன்.
சென்ற காரிக்கிழமை (= சனிக்கிழமை) மாலை நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கொஞ்ச நேரம் கேட்டேன். பிடித்திருந்தது. அவரைப் போன்ற பாடகர்கள் பெருகவேண்டும். அந்தப் பாடல்வரிகளாவது நமக்கு உறைக்கட்டும்.
உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்?
................
- தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?)
அன்புடன்,
இராம.கி.
-------------------------
இந்த உரையாடலின் கடைசியில் வரும் முன்னிகைகள் என்னுள்ளும் ஆழ்ந்து இருப்பவையே. தமிழரின் தற்போதைய நிலைக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளே காரணம் என்று நான் எண்ணுகிறேன். அதோடு, வெளிமுரணைக் காட்டிலும் உள்முரண் ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டியது என்று இயங்கியலில் (dialectics) சொல்லுவார்கள். தமிழரின் இன்றைய அவலம் பற்றிய சிந்தனைகள் எழும்போதெல்லாம், தமிழ் - தமிழர் என்ற பெருமிதத்தைக் கூட்டும் வகையில் எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது என் பதிவில் எழுதிக் கொண்டுதான் வருகிறேன். எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியது என்றும் எனக்குத் தெரிந்த வகையில் தெளிவுறுத்தி வருகிறேன். கூடவே நம் வரலாறு பற்றியும் சொல்லி வருகிறேன். இருந்தாலும் இப்படிச் சொல்லுவதைத் தடுத்த நிறுத்தும் முயற்சி, ஒரு சிலரால் தொடர்ந்து வலைப்பதிவுலகில் செய்யப் பட்டே வருகிறது.
நடுவில் கொஞ்ச காலம் ஒரு மாதிரி சலிப்பு வந்ததிலும், ஊர்சுற்றியதிலும், என் பதிவு தொய்ந்து போனது. அப்படித் தொய்ந்தது சரியில்லை என்ற எழுச்சியாலும், "செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்ற எண்ணத்தாலும், கிளர்ந்து, மீண்டும் ஒருமித்து எழுத வேண்டும் என்று முனைந்த போது, தமிழ்மண நிர்வாகத்திடமிருந்து நாள் காட்டச் சொல்லி ஓர் அழைப்பு வந்தது. அதையே ஒரு தூண்டுகோலாய் எடுத்துக் கொண்டு மீண்டும் இப்பொழுது எழுதத் தொடங்குகிறேன்.
சென்ற காரிக்கிழமை (= சனிக்கிழமை) மாலை நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கொஞ்ச நேரம் கேட்டேன். பிடித்திருந்தது. அவரைப் போன்ற பாடகர்கள் பெருகவேண்டும். அந்தப் பாடல்வரிகளாவது நமக்கு உறைக்கட்டும்.
உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்?
................
- தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?)
அன்புடன்,
இராம.கி.