Monday, March 30, 2020

பரதநாட்டியம்

பரதநாட்டியம் பரதமுனிவர் உருவாக்கியது என்று திருமிகு. பத்மா சுப்பிரமணியம் வெகுகாலம் சொல்லிகொண்டிருந்தார். பரத முனிவருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்றும் அவர்  முழங்கினார்.  பரதம்> பரத முனி>பரதசாத்திரம் என்பன கட்டுக்கதை நிறைந்தவை. இந்தக்காலத்தில் பரத சாத்திரம் எனப்படும் நூல் சிலம்பிற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து ஏற்பட்டது. மணிமண்டபம் ஒன்று எழுப்ப வேண்டுமெனில், இளங்கோவிற்கும் சிலம்பிற்குமே ஏற்படவேண்டும். பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டியம் சிறப்புத் தான். ஆனால் அவர் கூற்று, பிழை. நானறியச் சிலப்பதிகாரத்தில் ”பரதம்” கிடையாது.

சொல்லாய்வு அறிஞர் ப,அருளி பரத்தில் (பரம்= மேல், மேடை) ஆடும் ஆட்டம் பரத்து நாட்டியம் என்பார். பேச்சுவழக்கில் இது பரத்த நாட்டியம்> பரத நாட்டியம் ஆகும். பரத்தின் நீட்சியான பரதத்திற்கும் ”மேலான இடம், மேடை” என்றே தமிழில் பொருளுண்டு. இதனோடு தொடர்புடைய சொற்களைப் பாருங்கள். பரமன் = மேலானவன். விதப்பாய்ச் சிவன். பரம ஈசன் என்ற தமிழ்ச்சொல் வடக்கே கடனிற் போய் வடமொழிப் புணர்ச்சியில் பரமேசன் ஆகும். அதை மேலுந் திருத்தி பரமேஸ்வரன் என்பார். இதுவும் சிவனையே குறிக்கும். பரவல்/பரவுதல் = போற்றுதல், வழிபடுதல். நிலவு>நிலா என்பது போல், பரவு>பரா என்றாகும். பரவுதல்> பராதல்> பராவுதல்= புகழ்தல் ”தற்பராய் நின்று” என்று பு.வெ.10,15 இன் உரையில் வரும். பராதலுக்கு உரியவன் பராதி. இங்கு சங்கத வழக்கும் ஊடு வருகிறது. இது metathesis முறையில் பாரதியாகும். சிவபெருமானை சிவ ப்ரான் >சிவபிரான் என்று சங்கதத்தில் சொல்வார். மொத்தத்தில் பரதத்தில் உள்ளவன் பாரதி ஆவது வியப்பில்லை. இனிச் சிலப்பதிகாரம் கடலாடு காதையில் 38-43 ஆம் வரிகளில்

சீரியல் பொலிய நீரல நீங்கப்
பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்

என்று வரும். இங்குவரும் பாரதியைப் பைரவி என்று வேங்கடசாமி நாட்டார் பொருள்சொல்வார். இதை உறுதி செய்யுமாப்போல் வேறெங்கும் வழக்குக் கிடைக்கவில்லை. நாட்டார் எப்படியிதைக் காளிக்குச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் கூற்றை வைத்து, அகரமுதலிகளில் ஏற்றி விட்டார். நான் அறிந்தவரை, ”திரிபுரத்தை எரிக்கும்படித் தேவர் வேண்ட, எரிமுகங் கொண்ட பேரம்பின் ஏவலைக் கேட்க, உமையவள் ஒரு பக்கம் நிற்க, சிவனாடும் சிவனரங்கத்தில், ஓங்கிய இமையவன், தாளவியல்பு பொலிய, அவையல்லாதன நீங்க, ஆடிய கொடுகொட்டி ஆடலும்” என்பதே மேலுள்ள அடிகளின் பொருள். கொடுகொட்டி ஆடல் கயிலாயத்தில் நடந்தது ஆகவே தொன்மமுண்டு. உடுக்கையின் தாளத்திற்கேற்ப நடந்த கூத்து. கொடுகொட்டி பற்றி நிறையக் கூறலாம். ஆனால் இங்கு தவிர்க்கிறேன். அடுத்து அதே காதை 44-45 ஆம் வரிகளில்

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்

என்று சொல்லப்படும். மேலுள்ள 39-43 ஆம் வரிகளில் பாரதியை பைரவி என்ற வேங்கடசாமி நாட்டார், இதில் பாரதியைச் சிவன் என்றே சொல்வார். இது முன்னுக்குப்பின் முரணாகவே தெரிகிறது. இங்கே பாண்டரங்கம் என்பது சுடுகாட்டில் நடப்பது. பாண்டல் = சாம்பல். பாண்டரங்கம் = சாம்பல் மேவிய அரங்கம். இது தேரின்முன் நின்ற நான்முகன் காணப் பரமன் ஆடிய விரிந்த பாண்டரங்கக் கூத்து சொல்லப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் பரத்து நாட்டியம் தமிழர் நாட்டியம். அதைப் “பரத நாட்டியம்” என்பது திரிபு வேலை.

1 comment: