Wednesday, June 30, 2021

முதல்வராய் நானிருந்தால் - 2

இய்யதாகு முதலமைச்சன்


அரசொன்றில் முதலமைச்சாய் ஆவதெனில் எளிதாமோ?

அரசியலில் மற்றவரை அழிக்காமல் ஆளாமோ?

ஆளுவதும் பொருதுவதும் அடுத்தடுத்த நடைமுறைகள்;

நீளனைத்தும் செய்தபின்தான் நெடுங்கட்சித் தலையானேன்;

பார்ப்பதற்கோ நான்எளிமை; பலக்குறுத்தல்(1) அடிப்புறத்தில்;

வேர்த்துவிட மற்றவரை விரட்டுவதில் மேலாளன்;

தடந்தகை(2)யும், வழிதகை(3)யும், தரவுகளின் செயல்தகை(4)யும்

உடன்தெரிந்து உழுவதிலோ உள்ளார்ந்த கோடலன்(5)நான்;

எனைமிகுத்து எவனுமிங்கே அதிகாரி, அமைச்சனிலை;

எனைத்தவிர்த்து எவனுமிங்கே எழுந்திருக்க முடியாது;

எனைவிடுத்து ஒருபயலும் இடைநுழைந்து செயலாற்றான்;

எனைவிடுத்த எல்லோரும் தொண்டரெனப் படுவார்கள்;

இந்தநிலை கொண்டபின்தான் இந்நிலத்தில் முதலமைச்சாய்

எந்தவொரு தலைவனுமே இருந்திடுவான் இயல்பாக!

நானென்ன விதிவிலக்கா? நான்சிங்கச் சொப்பனம்தான்;

நான்விழிக்க மறந்தாலோ, நட்டாற்றில் கவிழுதற்கு,

இரண்டே நுணுத்தம்(6)தான்; இப்புலத்தில் இதுநியதி;

அரண்டுவதும் அரட்டுவதும் அன்றாடம் செய்பணிகள்;

அரசியலில் இதுவெல்லாம் அமைவதுதான் விளையாட்டு;

அரசியலில் அதனால்தான் அத்தனைபேர் நுழைகின்றார்;

முதலமைச்சாய் ஆனமுதல், மும்முனைப்பாய் வரும்தேர்தல்

விதப்புகளில் வென்றிடவே வினைகின்ற பரபரப்பை,

நானுலகில் இருக்குமட்டும் நாளும்தான் மறப்பேனோ?

நானிலத்தில் நல்லரசை நாடுவதும் அப்புறம்தான்;

இத்தனையும் சொன்னதனால் இவன்”தன்னைப் பேணி”யென

வித்தகமாய் நினைப்பீர்கள்; இருந்தாலும் வெள்ளந்தி

நிலையாளன் நானல்லன்; நீளுலகில் தற்பேணல்

குலையாது கொள்ளுவதும் குமுகத்தில் தவறாமோ?

சொந்தநலம் பார்ப்பவனும், சூழ்தேர்வில் வெல்லுதற்காய்,

அந்தந்தப் போதுகளில் அளவாகச் செய்வதுதான்;

குமுகத்தில் ”அதுநலமா? கொள்கேடா?” எனக்கேட்டால்,

"அமைவதெலாம் ஊழ்வினையால் ஆழ்த்துவந்து உருட்டாதோ?"

"அரசியலில் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகாதோ?"

அரசியலின் அடிப்படையே இதுவறிந்த பின்னேதான்

"கல்லென்ற நெஞ்சமிது கனியாது" எனநீவீர்

சொல்லிடவே எழுந்தாலும் சொல்லுவது என்கடமை;

நான்கடுசு; இருந்தாலும் நான்மனிதன்; எனக்குள்ளும்

தேன்சுரக்கும்; சிலபோது திருவினைகள் செய்வேன்தான்;

நீர்வளமா? வேளாண்மை? மரம்வளர்ப்பா? கட்டுமானச்

சீரமைப்பா? செழுங்கல்வி? மருத்துவமா? சிறுசிறிதாய்

அரசினுடை நிர்வாக அமைப்புச்சீர் நடவடிக்கை?

உரசிவிட என்தடங்கள் ஊன்றிடுவேன்; வியந்தீரோ?

இப்படியாய் இருகலவை இயன்றவன்தான் முதலமைச்சன்;

தப்படியைப் போடாமல், தடுமாற்றம் அடையாமல்

செப்புவது ஐந்தாண்டில் செய்யநினைக் கும்செயல்கள்;

இப்புலத்தில் இவைசெய்தால் எம்பருவம் பத்தாண்டு.


அன்புடன்,

இராம.கி.


1. பலக்குறுத்தல் = complication

2. தடந்தகை = strategy

3. வழிதகை = tactics

4. செயல்தகை = operationality

5. கோடலன்>கௌடில்யன் = சாணக்கியன்

6. நுணுத்தம் = minute


முதல்வராய் நானிருந்தால் - 1

சந்தவசந்தத்தின் 14 ஆவது கவியரங்கில் செபுதம்பர் 2004 இல் இக்கவிதையை அரங்கேற்றினேன். ”முதல்வராய் நானிருந்தால்” என்ற தலைப்பில், “இய்யதாகு முதலமைச்சன்” என்பதாய் என் கவிதையைப் படித்தேன். இணையத்தை இன்று துழாவிய போது மறந்துபோன கவிதை எனக்குக் கிடைத்தது. என் வலைத்தளத்தில் சேமிப்பதற்காக இங்கு பதிகிறேன். 

---------------------------    

அன்பிற்குரிய சந்தவசந்தத்தாருக்கும், தலைவருக்கும், என் வணக்கம். வழக்கமான முறையில் நான் இங்கு வரவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

............................................................................................

"ஆயா, வீதியெல்லாம் ஒரே கூட்டமாப் போகுது; கையிலே கொஞ்சப்பேரு வேறே தலகாணி, பாயெல்லாம் சுருட்டி வச்சுக்கிட்டுப் போறாக! எங்கே போறாக, ஆயா?"

"அட மக்குப்பயலே, இது தெரியலியா உனக்கு? மகார்நோன்புப் பொட்டல்லே கண்ணகி - கோவலன் கூத்து இன்னைக்கித் தொடங்கப் போகுதுடோய்" நீட்டி முழக்கிப் பழக்கப் பட்டவள் என் ஆத்தாளுக்கு ஆத்தாள்.

"சோழராசாவோட பெரிய ஊரு காவிரிப் பூம்பட்டினம். அங்கே நாடுவிட்டு நாடுபோய் கொண்டுவிக்கிறவகள்லே. சாத்தப்பன்கிறவர் ரொம்பப் பெரிய ஆளு. அவரோட பையன் கோவாலனுக்கு, இதே மாதிரிப் பெரிய வளவு மாணிக்கம் பொண்ணு கண்ணாத்தாவைக் கல்யாணம் பண்ணி வச்சாக! வாக்கப் பட்ட பொம்பிளையை மாமனாரும், மாமியாரும் வேறெ வச்சாக; அதென்னவோ கொஞ்ச நாளைக்கப்புறம் கண்ணாத்தா சொகமே காணலை! அவளுக்கு வாய்ச்ச ஆம்படையான் கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்லெ கூத்தியாள் வீடே கதின்னு கிடந்தான்; மாணிக்கம் பொண்ணுக்கு ஒரு பொட்டு, புழுப் புறக்கலே; சீரு செனத்தி போட்டுக்கலே; நாளெல்லாம் புருசங்காரன் திரும்பி வந்துருவான்னு காத்துக் கிடந்தது தான் மிச்சம்; மாமனார், மாமியாருக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலை; சொத்து, பத்தெல்லாம் தாசிமடிலே கொட்டிக் கரைஞ்சு சீரழிஞ்சுது குடும்பம். பின்னாடி புத்தி வந்து புருசங்காரன் கண்ணாத்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

இனிப் பட்டினத்துலே இருக்கவேணாம், பங்காளிகளும், தாயபுள்ளைகளும், பக்கத்து வீட்டுக்காரவுகளும் பலவிதமாப் பேசுவாக, அதனாலே மருதைக்குப் போயிருவோம், பொண்டாட்டி கொலுசை வித்துப் பொழச்சிக்கலாம்னு இளசுகள் ரெண்டும் புறப்பட்டாக; ஆனா, மருதையிலே விதி விளையாடிருச்சு; அங்கே தங்க ஆசாரி பண்ணின சூழ்ச்சிலே கோவலனைச் சிக்க வச்சி அவன் உசிரைக் காலன் கொண்டுக்கிணு போனான்.

கட்டளை போட்ட பாண்டியராசா தப்புச் செய்ஞ்சாருன்னு சொல்லி, அவருக்கு முன்னாடிக் கொலுசை உடைச்சா கண்ணாத்தா; எல்லாரும் உக்கார்ந்து இருக்கிற சவையிலே முத்துத் தெறிக்கிறதுக்கு மாறா மாணிக்கப் பரல் தெறிச்சுது; தப்பைப் புரிஞ்சுக்கின இராசாவும் இராணியும் அங்கேயே உசுரை விட்டாக! அதுக்கப்புறமும் கண்ணாத்தாவுக்கு கோவம் அடங்கலே! ஆம்படையானைப் பறிகொடுத்ததாலே மருதை ஊரையே எரிச்சு மானத்துக்குப் போய்ச் சேர்ந்தா! அவளுக்கு வந்த ரோதனை யாருக்குமே வரப்படாதப்பா!

அப்பறம் இதைக் கேட்ட சேர மகாராசா திகைச்சுப் போனாரு! பத்தினிக்கிக் கோவம் வந்தா, பாராளும் அரசு கூடப் பத்தி எரிஞ்சிரும்னு அவருக்கு புரிஞ்சுது. எப்பேர்க்கொத்த பத்தினிப் பொண்ணு எங்க நாட்டுலே வந்து சேர்ந்தான்னு சொல்லி அவளுக்குப் பொங்கலிட்டுப் படையல் வச்சு, வடக்கே இமயமலைலேர்ந்து கல்லெடுத்துக் கொண்ணாந்து, மஞ்சணமிட்டு, முழுக்காட்டிக் கோயில் கட்டிக் கொண்டாடினாரு.

நாட்டரசங்கோட்டை கண்ணாத்தா கோயில் கூட அந்த நினைப்புலே தாண்டா கட்டிருக்கு. இந்தக் கதை தான் பத்துநாளைக்கி இராத்திரி முழுக்க விடிய விடியக் கூத்தா நடக்கும். பார்க்கணும்னா சினேகிதக் காரங்களோட நீயும் போய்ப் பாரேன்." என்றாள் என் ஆயாள். முதன்முதல் சிறிய அகவையில் இதைக் கேட்ட எனக்கு, எங்கள் ஆயாளின் மூக்கோசைப் பேச்சில், கதை சற்றும் விளங்கவில்லை தான். இருந்தாலும் நண்பர்களோடு போனேன். அரசியற் கூத்தின் ஆரம்பக் காட்சி, திமிகிட.....திமிகிட என்ற சத்தத்தோடு, இறைப்பாட்டு முழங்க, சந்திர சூரியர்களையும், மழையையும் வணங்கித் தொடங்கியது.

புகார்நகர வீதியில் இந்திர விழாவுக்கு முன்னால், மன்னன் கிள்ளிவளவன் இரவு நேரத்தில் நகரச் சோதனை செய்கிறான். கூடவே அவனுடைய அமைச்சன் அருகில் போகிறான். 

"மந்திரி! நாடெல்லாம் எப்படி இருக்கு? மாதம் மும்மாரி மழை பொழியுதா?"

"சோழ மகராசா ஆட்சியிலே மழைக்கு என்ன குறை ராசா, மழை நல்லாவே பொழியுது?"

"காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம், தென்பெண்ணை, பாலாறு, கால்வாய்கள் எல்லாத்திலும் தண்ணீர் ஓடுதா?"

"மகாராசா, உங்க ஆட்சிலே கட்டிவச்ச குளம், ஏரி, கால்வாய், இதுக்கெல்லாம் குறையேது, மகராசா? தண்ணி நல்லாவே ஓடுது இன்னம் பத்து வருசத்துக்கு பஞ்சம்கிறதே  நம்ம நாட்டுலே இருக்காது"

"சாலைகள்லே வழிப்போக்கர்கள் பயமில்லாமப் போக முடியுதா?"

"ராசா, உங்கள் படைதான் ஊரெங்கும் காவல் காக்குதே, பின்னெ மக்கள் பயப்படத் தேவையில்லீங்களே? சாவடிகள் எல்லாத்துலேயும் அன்னதானம் ஒழுங்கா நடக்குது. வணிகச் சாத்துகள் ஒழுங்காப் போய் வந்துக்கிட்டு இருக்கு."

"ஊரில் பிள்ளைகுட்டிகள் படிக்கிறதுக்கு கல்விச்சாலைகள், மருத்துவத்துக்கு ஆதூல சாலைகள் எல்லாம் ஒழுங்கா நடக்குதா, இல்லை பணமில்லாமல் சிரமப் படுதா?"

"இல்லை, மகராசா, ஒரு குறையும் இல்லை, நல்ல காரியம் செய்யுறதுக்கு எவ்வளவோ செல்வந்தர்கள் முன்வர்றாங்க. உங்களோட ஒரு ஆணை போதுமே, இதெல்லாம் செய்யுறதுக்கு."

"அப்ப, இந்திர விழா எப்போ ஆரம்பிக்குது?"

நாடகத் தனமான இந்தத் தொடக்கக் காட்சிக்கு அப்புறம் கூத்துப் போய்க்கொண்டே இருந்தது. இந்தக் காட்சி எந்தக் கூத்தானாலும் முதலில் இருந்திருக்கும் தான்; என்ன, அரசனின் பேர் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கும். 

(இதுவரை நான் பார்த்திருக்கும் நாலைந்து கூத்துக்களில் கோவலன் - கண்ணகி கூத்தை முதலில் பார்த்ததால், எனக்கு இப்படி ஓர் நினைவு ஆழப் பதிந்திருக்கிறது. அவ்வளவுதான்.) 

அரசு - நாடு - ஆட்சி என்று எண்ணும் போது, கூத்தில் வந்த அந்த முதல்காட்சி இன்றைக்கும் முகமையாக எனக்குத் தோற்றம் அளிக்கிறது. நாட்டை ஆளுதல் என்பதை இப்படித்தான் எளிய முறையில் அன்றும் பார்த்தார்கள்; இன்றும் பார்க்கிறோம். ஆனால் என்ன, உள்ளே இருக்கும் சூக்குமம் புரியாமல் பார்க்கிறோம் 

.........

அன்றைய அரசனுக்கு மாறாய் இன்றைய முதலைமைச்சு என்று எண்ணிக் கொண்டு இனிப் படியுங்கள். இங்கே கண்ணகி கூத்தைப் பேசவில்லை. இது அது ஆகுற்ற கனவு இங்கே வெண்கலிப்பாவில் விரிந்து வருகிறது. (இய்> இய்து> இது) (இய்யதாகுற்ற >இய்யதாகுத்த>யதார்த்த; இய்யதாகல் = இயல்வாகல் = யதார்த்தமாதல்)

..................................................................................................

அன்புடன்,

இராம.கி.


Monday, June 28, 2021

secret

நம்முடைய செயற்பாடுகளில் ஒரு சிலவற்றை எல்லாரோடும் பொதுவாய்க் கலந்து செய்கிறோம்; அதேபொழுது, சிலவற்றைப் பிரித்துத் தனியே வைத்து, எல்லோரும் அறியாத வகையால், மறைவாகச் செயலாற்றிக் கொள்ளுகிறோம். பொதுக் கருமங்கள் பொதுவை (common) ஆகவும், தனியே வைப்பதைச் செகுத்து வைத்தல் என்றபொருளில் செகுதை எனவும் சொல்லலாம். இதைத் தான் ஆங்கிலத்தில் secret என்கிறார்கள். 

secret: செகுதை, செகுத்து வைத்தல்

1378 (n.), 1399 (adj.), from L. secretus "set apart, withdrawn, hidden," originally pp. of secernere "to set apart," from se- "without, apart," prop. ஓon one's ownஔ (from PIE *sed-, from base *s(w)e-; see idiom) + cernere "separate" (see crisis). The verb meaning "to keep secret" (described in OED as "obsolete") is attested from 1595. Secretive is attested from 1853. Secret agent first recorded 1715; secret service is from 1737; secret weapon is from 1936. 

secret என்பதைச் சொல்லத் தமிழில் இன்னும் மூன்று சொற்கள் இருக்கின்றன. ஒன்று கமுக்கம், மற்றொன்று கரவம், மூன்றாவது மந்தணம். 

சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தில் மனோரமா "கம்முன்னு கிட" என்று சொல்லுவார் பாருங்கள், அந்தக் கம்மென்று இருத்தல் என்பது பலர் அறியப் பேசாதிருத்தல். கமுக்கம் என்ற சொல் கம்முதலில் பிறந்த பெயர்ச்சொல்.

அடுத்த சொல்லான கரவம் என்பது மறைத்தல் பொருளில் வரும் கரத்தல் வினையில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். கரவம்> கரகம்> கரஹ்யம்> ஹரஹ்யம்> ரஹ்யம் என்று வடமொழி நோக்கித் திரியும். தமிழகத்தில் இருந்து வடக்கே போகப் போக ககரம் ஹகரமாகிப் பின் அதுவும் மறைவது பல சொற்களில் நடந்திருக்கிறது. முடிவில் ரஹ்யம் ரஹஸ்யம் ஆனது பலுக்க எளிமை கருதியே.

மூன்றாவது சொல்லான மந்தணம் என்பதும் மறைவுப் பொருள் கருதியே. 

செகுதையில் இருந்து இன்னொரு சொல்லும் விரியும். நம்முடைய செயற்பாடுகளில் செகுதையானவற்றை நம்பிக்கையானவருக்கு மட்டும் சொல்லி வினையாற்றுவது உலகில் பலருக்கும் உள்ள பழக்கம். இப்படிச் செகுதைகளைக் கையாளுபவர் செகுதையர். ஆங்கிலத்தில் secretary என்று சொல்லுவார்கள். Secretary is one who keeps secrets. செகுதையைக் காப்பாற்ற வேண்டியவர் அதைப் பொதுவையாக்கி விட்டால், அப்புறம் நம் கதி அதோ கதி தான்.

ஒரு ஊரின் நிலங்களைச் செகுத்து "இன்னார் இந்தப் பக்கம் வசிக்கலாம், இதுபோன்ற செயல்களைச் செய்யலாம்" என்று அமைத்து வருவது sector என்னும் செகுத்தியாகும். (பகுத்து வந்த பாத்தியைப் போலச் செகுத்து வந்தது செகுத்தி.) 

இனி, "இது இதோடு கலக்கக் கூடாது" என்று தனித்து வைக்கும் செயலை segregate: செகுத்தாக்கல் என்று சொல்வார்.

1542, from L. segregatus, pp. of segregare "separate from the flock, isolate, divide," from *se gregare, from se "apart from" (see secret) + grege, ablative of grex "herd, flock." Originally often with ref. to the religious notion of separating the flock of the godly from sinners. Segregation (1555) is from L.L. segregatio, from L. segregatus; in the specific U.S. racial sense it is attested from 1903; segregationist is from the 1920s. 

அப்படிச் செகுத்து வைக்குப் பட்ட பகுதியை segment = செகுமம் என்றும் சொல்லலாம்.

முடிந்தால் http://valavu.blogspot.in/2007/04/2.html என்ற வலைப்பதிவைப் படித்துப்பாருங்கள்.

அன்புடன்,

இராம.கி.

Tuesday, June 22, 2021

கருமி - கஞ்சன்- கம்மி

கருமி - கஞ்சன்- கம்மி என்பது பற்றி  27 சனவரி 2018 இல் எழுதியிருக்கிறேன். ஆனால் என் வலைப்பதிவில் அதைப் பதியாது விட்டிருக்கிறேன். இப்பொழுது அதே கேள்வி இன்னுரு வடிவில் தமிழ்ச்சொல்லாய்வு முகநூல் குழுவில் கேட்கப் படுகிறது. எனவே மீண்டும் பதிகிறேன். 

-----------------------------------

சிலநாட்கள் ஊரிலில்லாததால், உடன் பங்குபெறவியலாது, நாட்கழித்து மறுமொழிக்கிறேன். பொறுத்துக்கொள்க. ”கம்மி தமிழ்ச் சொல்லா?” என்றிங்கு கேட்கப்பட்டது. தமிழ்ச் சொற்களுக்கெனத் தனி வரலாறுகளுண்டு. பொதுவாக ஒற்றைச்சொல்லையும், சொல்லின் எழுத்துத் திரிவுகளையும் உறவுமொழிகளில் மேலோடப்பார்த்து யாரும் முடிவிற்கு வருவதில்லை. பொருள்வளர்ச்சி, புதுப்பயன்பாடுகள், சிறு மாற்றங்கள், குடும்பமொழிகள், வேற்றுமொழிகளெனப் பலவற்றையும் நூணிக் கவனித்து, ”உன்னிக்கும் சொற்பிறப்பிற்கு இயலுமையுண்டா?” என்று பண்டுவனின் கூர்ப்போடு அலசிப் பார்த்தே ஒரு முடிவிற்கு வருகிறோம். மாற்றுப்பார்வைகளை எடுத்து வைக்கையில் திறந்தமனத்துடன், பரிந்துரைத்த சொற்பிறப்பு வரிசையை மீளாய்வு செய்கிறோம். “தாட்பூட் தஞ்சாவூரெ”ன்னுங் கண்கட்டு மாகைப் போக்கும் (magic trend) ”புராணிகப் பாங்கும்” தமிழ்ச்சொற்பிறப்பியலிற் கிடையாது. ஒருசொல்லுக்கு முடிவுசொல்ல ஏராளஞ் சொற்களைச் சலிப்பது இயல்பே.  

ஓர் உயிர்/பொருள்/நிகழ்வு தோன்றுகையில் ”கருவுற்ற”தென்கிறாரே? அதன் பொருள் என்ன? குருத்தல் வினை குல்லெனும் வேர்ச்சொல்லிற் தோன்றற் பொருளில் கிளைத்தது. பனை, தென்னை. வாழை, தாழைக் குருத்துகளைக் கொழுந்தென்பார். குருத்தெலும்பு= இளவெலும்பு. குருத்தோலை= இளவோலை; குரும்பை= பனை தெங்கு, ஈச்சு போன்றவற்றின் பிஞ்சு. குருமன்/மான்= ஒரு சார் விலங்கு, பறவைகளின் இளமைப்பெயர். குருகு= விலங்கின் குட்டி. [குழந்தை/ குழவி என்றவை கருவின் வெளிப்பாடு. ரகரமும், ல/ழ/ள க்களும் தொடர்புடையவை.] ”குருவி”க்குச்  சிறு பறவை என்றே பொருள். கைபேசிக் கோபுரங்களில் உலவும் நூகையலைகளால் (microwaves) இக்காலத்திற் குருவியினம் குழம்பி அவற்றின் எண்ணிக்கை குறைவதாய்ச் சொல்வர். இது உண்மையா? தெரியாது. ஆனாற் சென்னைப் பெருநகரில் குருவி குறைந்து போய் விட்டது. குருவிக்கண்= சிறுகண்/துளை; குருவித்தலை= சிறுதலை; குரீஇ= குருவியின் அளபெடை. குரீஇப்பூளை= சிறுபூளை. (குருவி மட்டுமின்றி சிறுமையுங் குரீஇ.) 

குருளை= இளமை, நரி, நாய், பன்றி, மான், புலி, முசு, முயல், யா:ளி ஆகியவற்றின் குட்டி. குருவின் இடையுகரம் போய் அகரஞ் சேர்ந்தாலும் குள்ளச் சொற்களுண்டு. குரங்கல்= குறைதல்; குரம்பை= சிறுகுடில். தோன்றல், இளமை, சிறுமை, குறுமை என்று படிப்படியாகப் பொருள்திரியும். குரு>குறு வளர்ச்சியில் குறில், குறுக்கம், குறுக்கு, குறுகு போன்றவை குள்பொருள் காட்டும். குறு>குறை>குறைவு என்றும் திரியும். குறு>குன்று>குன்றல் என்றுமாம். குன்று/குன்றம்= சிறுமலை. குருவிற்கு ஒருபக்கம் பெருமைப் பொருளெனில் இன்னொருபக்கம் குறுமைப்பொருள் இருந்தேவந்தது.

குருவின் முதலுகரந் திரிந்து கரு ஆகினும் குள்ளப்பொருள் தொடரும். முட்டை/பிள்ளைக் கரு சிறியதே. கருவாலி = ஒருவகைக் குருவி; கருவல்= குட்டையாள். கருவன்= செறுக்கன் (மலையாளத்தில் சிறு என்பதச் செறுவென்று பலுக்குவர்.). கரைசலைக் காய்ச்சும்போது நீர் ஆவியாகி, கரைசல் செறியும் (concentrate), வெள்ளம் (volume) குறையும். காய்ச்சலைக் கருக்கல் (=குறைத்தல்) என்றுஞ் சொல்வர். உடம்பை 4 பாகம் ஆக்கையில் கருந்தலை என்பது கால் பாகங் குறிக்கும். கருநெல்லி = சிறுநெல்லிக்கு இன்னொரு பெயர். அரிநெல்லி/அருநெல்லி என்றுஞ் சொல்வர். சிறுசெங்குரலி எனும் மலைக்கொடி கருந்தாமக் கொடி எனப்படும். கருவின் இன்னொரு திரிவாய் கர என்றாகும். கரப்புக்குடிசை = சிறுகுடிசை.

பருக்குநிலை பருமு நிலை ஆவது போல், கருக்குநிலை கருமு நிலையாகும். கருமன்/கருமி = குறைத்து ஈகிறவன். கருமி தமிழில்லையென்பார் கஞ்சனைத் தமிழென்பார். நானறிந்த வரை இரண்டும் ஒரே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்களே. மு.சண்முகம் பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலி “செயல்களைச் செய்பவன், தீவினையான்/பாவி, ஈயான்” என 3 பொருள் சொல்லும். முதற்பொருள் கரமெனும் கைச்சொல்லிற் பொருந்தும். 2 ஆவது கரிமத் திரிவு. 3 ஆம் பொருளில், கருமி= மெலிவு, குறைவு, இழிவு, கொஞ்சம். எத்தனை விழுக்காடாயினும் குறைவு குறைவு தான். ஈயாதான் என்பது முற்றிலும் கொடை மறுத்தது. பேச்சுத் தமிழில் இன்னொரு பழக்கமுமுண்டு. இரண்டாமெழுத்தாய் இடையின ரு,லு,ழு,ளு பயில்கையில் அதற்குமாறாய் இனமெய்யிட்டு மூன்றாமெழுத்தை அழுத்துவார். தமிழ் போல் பாகதத்திலும் மெய் மயக்கமுண்டு. (பாவாணர் பாகதத்தை வடதமிழென்றே சொல்வார். அக்கூற்றில் உண்மையுள்ளது. விரிக்கின் பெருகும். வில்லியம் ஜோன்ஸ், மாக்சுமுல்லர், எல்லிசு, கால்டுவெல் ஆகியோரை விலகேம் என்று முன்முடிவு கொண்டோருக்கு இப்புதையல் கிடைக்காது.) மெய்ம்மயக்கம் கொண்ட சொற்கள் சிலவற்றைக் காண்போம்.

 கருமி>கம்மி=குறைவு; கம்முதல்=குறைதல்; கம்மை=சிறுகீரை; குழுமி>கும்மி=கைகொட்டிப் பாடியாடும் கூத்து; கும்முதல்=கூடுதல். ஆட்களுங் கூடுவர், கைகளுங் கூடும்; கொம்மியென்றுஞ் சொல்லப்படும். சருமம்>செருமம்>செருமன்>செம்மான்= சக்கிலியன், சருமம்=தோல், வெய்யிலில் நின்றாற் சுருங்குகிற, உலர்கிற, உடலை மூடும் போர்வை. சருமகன்/சருமகாரன்= சக்கிலியன்; செம்மாத்தி= சக்கிலியப் பெண்; செம்மாளி= செம்படவர் தரிக்கும் செருப்புவகை. செருப்பு= மிதியடி, செருத்தல்= மாட்டுமடி; [சருமம் தமிழே. பலருஞ் சங்கதமெனத் தவறாய் எண்ணுவர். செருப்பு தமிழெனில் சருமம் வடமொழி ஆகுமா? 1000 முறை மாட்டைத் தெய்வமென இந்துத்துவர் சொன்னாலும். மாட்டுக்கறியும், தோலும் மாந்தர் வாழ்வில் ஆழ்ந்த பங்கை வகிக்கத் தான் செய்தன மாட்டுத்தோலின்றி மிதியடிகள் இல்லை. மதங்கம்>ம்ருதங்கமும் இல்லை.]

 அடுத்தது செம்மறி. இன்று சிலர்க்குச் சிரைத்தல் வினை இழிவாய்த் தோன்றலாம். ஆனால் மாந்தர்க்கு அதுவொரு இயல்தொழில். சிரையைக் (shear) ”கத்திரித்துக் கொள்”எனச் சுற்றி வளைத்துச் சொல்வது அறியாமை. குறிப்பிட்ட ஆடுகளின் மேனி மயிரைச் சிரைத்து நூலாக்கி கம்பலி/கம்பளி ஆடைசெய்வார். சிரைக்கும் மயிர்கொண்ட மறி சிரைமறி. பேச்சு வழக்கில் சிருமறியாகி, சிம்மறி*>செம்மறி ஆகும். செம்மறி என்பது சிவப்பு மறியல்ல. இனிச் சிகைகொண்ட விலங்கை சிகையம், கேசரியென்பார். இது மூக்கொலி உற்றுச் சிங்கமானது. வடக்கே சிம்ஃகம்>சிம்ஹம் எனப் பலுக்கிப் பாகத மெய்ம்மயக்கில் சிம்மமானது. சிங்கம்>சிம்ஃகம்>சிம்மம். செருமாப்பு> செம்மாப்பு = இறுமாப்பு; (செரு/செருக்கு = அகந்தை, ஆணவம், பெருமிதம்). 

இன்னும் சொற்களுண்டு. செருகுதல்>செருமுதல்>செம்முதல் = மூடல்/அடைத்தல். செரிமித்தல்>செருமித்தல்>செம்மித்தல்/செமித்தல். (செரினத்தை சீரனம்>ஜீரணம் என்று வடவொலிப்பில் ஆக்கி சிலர் அதைத் தமிழில்லை என்பார்.) செருமல்>செம்மல்= தலைவன் (செரு= சிறுபோர். படைத்தலைவனே செம்மலாகும் தகுதியுற்றவன்.) செம்மொழி என்றசொல்லும் கூட மெய்ம் மயக்கில் எழுந்ததே. எல்லா வளமும் பெற்ற செழுமையான மொழியை classical language என்று சொன்னார். செழும் மொழி>செம்மொழியானது. செழுமை யென்று தேடினால் சான்றுகள் கிடைக்கும். செம்மொழியென்று தேடினால் சங்க இலக்கியத்தில் சான்றுகள் கிடைக்காது. அதே போல் தெம்மாங்கும் மெய்ம்மயக்கச் சொல்லே. தெழித்தல் = முழக்குதல், ஆரவாரித்தல், ஒலித்தல். தெள்ளேனம் கொட்டோமோ? - என்ற மாணிவாசகர் கூற்றை எண்ணுங்கள். தெழிமாங்கு>தெழுமாங்கு>தெம்மாங்கு.  ஒலித்தல், ஆரவாரித்தல், முழங்குதல். அடுத்தது தும்மல் பற்றியது. தும்மும்போது, காற்றுஞ் சளியும் சேர்ந்து மூக்குள் மேலெழும். துளுமல் என்பதும் அதே பொருள் காட்டும். துளுமல்> தும்மல் = மேலெழுந்துவரல்

இனி அறங்குறிக்கும் தருமம்>தம்மம் (தள்>தரு>தா என்பது முற்றிலும் தமிழே. தருமத்தைச் சங்கதமென்றும், தம்மத்தைப் பாகதமென்றும் சொல்வது வீண் முயற்சி. இந்தையிரோப்பிய மொழிகளில் இது போன்ற சொல்லேயில்லை.) பருமை>பம்மை= பதுமை, பெருத்த நிலை. சிவனைக் குறிக்கும் பெருமான், மெய்ம்மயக்கத்தில் பெம்மானாகும். பொருமலி>பொம்மலி= பருத்தவன், தடித்தவன்; (பொம்மல் = பொலிதல்). பொருமல்>மொம்மல் = பொலிவு, பூரிப்பு, மிகுதி, பருமன் சற்று வேறுபட்டதை இனிப் பார்க்கப்போகிறோம். தேங்காய், பருப்பு, மிளகாய், மிளகு போன்ற கறிப் பொருள்களை அழுத்தும்போது அவை அரைபடும். அழுபடுவதை அழுமுதலென்றுஞ் சொல்வர். அழுமுதல்>அம்முதல் = அரைபடல்; அழுமி>அம்மி = அரைகல். அம்முதல் என்பது இன்னும் வளர்ந்து அமுங்குதலென்ற சொல்லை உருவாக்கும். அழுக்கமும், அமுக்கமும் உறவு கொண்டவை. இதுபோல் இழிந்தது கீழ்மைப்பொருள் உணர்த்தும். கீழ்வாய் இலக்கப் பின்னமான இழிமி>இம்மி = சிறு எண், சிறு நிறை என்று பொருள் கொள்ளும். அடுத்தசொல் பெருத்த இலக்கிய ஆட்சி கொண்டது. வாருங்கள் எனப் பொருள்படும் “வருமின்’ மெய்ம்மயக்கத்தில் வம்மின் ஆகும். வருமை = மணமகட்கு பெற்றோர் வழி வரும் சீர். இது திரிந்து வம்மையாகும். நெஞ்சு விரிந்து மூச்சிழுத்து அழுவது, விரிமல் என்றும் விம்மலென்றுஞ் சொல்லப் படும்.

அடுத்தது சற்று சிக்கலானது. அதற்கு முன் மலம் (=மதம்) என்ற சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். மதத்திற்கு நெறியென இன்று பொருள் சொல்வார். அதன் முதற்பொருள் மயக்கமே. மதி/நிலவை ஒட்டியே மயக்கப்பொருள் வந்தது. மதியென்பது மனக்கவலையை விதப்பாய்க் குறிக்கும். நில்மதி>நிம்மதி ஆகி மனக்கவலையின்மை குறிக்கும். சங்கதம்/பாகதத்தில் நில்>நிர் ஆகும். பலரும் நில்லை மறந்து, நிர்ரைப் பிடித்துத்தொங்கி, நிர்ரெனத் தொடங்கின் சங்கதச்சொல்லென்பார். நாமும் மயங்கி நிற்போம். நில், நிற்பு, நிப்பாட்டு ஆகிய சொற்களுக்கு stop பொருள் உண்டு தானே? நின்றுபோனது இன்மையைச் சுட்டுமே? நிர்மலம் = மனக்கவலையின்மை; இவ்வளவு சொற்களை ஏன் இங்கு சொன்னேனெனில், மெய்ம்மயக்கம் என்பது தமிழில் பரந்ததென்று காட்டுவதற்குத்தான்., 

முடிவாக் கம்ம என்ற சொல் சங்க இலக்கியத்தில் மிகமிக நாட்பட்ட (குறைந்தது 2300 ஆண்டுகள் முற்பட்ட) நற்றிணையிலும், குறுந்தொகையிலும் வரும். இதன்பொருள் மெலிந்த, குறைந்த என்பதே. ஐதே கம்ம யானே ”விரைவாய் நான் மெலிவேனாக!” - நற்.143-1; ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே ” இவ்வுலகு படைத்தவனே! விரைவாய் நான் மெலியட்டும்” - நற்.240-1; ஐதே கம்ம யானே, கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே - குறுந் 217 6-7 ”மிகப் பெரியவரும், சிறியவரும் பழிப்பாரோ என்றபடி நான் விரைந்து மெலியட்டும்” - குறுந் 217.6-7. ஐதே கம்ம, மெய்தோய் நட்பே “மெய்தோய் நட்பு விரைந்து மெலியட்டும்” - குறுந்.401,6   

இதற்கப்புறமும் கம்மி தமிழில்லை என்று சொல்லுவோமா?

அன்புடன்,

இராம.கி.


Sunday, June 13, 2021

குறியாப்பு

 ”குறியாப்பு - சரியான சொல்லா ? இதன் பொருத்தமான பொருள் யாது? “ என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப்பட்டது. இந்தக் ”குறியாப்பு” என்பது, 2000 ஆண்டுகளுக்கு முன் ”குறியெதிர்ப்பு” என்றே சொல்லப்பட்டது.  (எதிர்த்த என்பது, எயிர்த்த> எயித்த என்று பேச்சுவழக்கில் மாறும். எதிர்ப்பு> எயிர்ப்பு> எயிப்பு> யாப்பு என்பதும் பேச்சு வழக்கில் ஆவது தான்.) இத் திரிவுகள் ஏற்படும் முன் எதிர்ப்பு என்றே பழம் இலக்கியங்களில் இச்சொல் பதியப் பட்டது. காட்டாக, நற்றிணை 93/12 இல் ”உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே” என்றும், புறம் 163/4 இல் ”நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்” என்றும் குறள் 221/2 இல் ”குறியெதிர்ப்பை நீரது உடைத்து” என்றும் வரும்.  அதற்கு அப்புறம் கைமாறு என்றே புழங்கியுள்ளார். சரி குறியெதிர்ப்பு என்றால் என்ன பொருள்? 

நம் வீட்டில் சருக்கரை தீர்ந்து போயிற்று என்று வையுங்கள்/. பங்கீட்டுக் கடையில் (Ration shop) இனி அடுத்த மாதம் தான் போடுவார். இன்னும் 10, 15 நாட்கள் கூட ஆகலாம். அந்த இடைப்பட்ட நாட்களுக்குச் சருக்கரை நமக்கு வேண்டும். எனவே பக்கத்து வீட்டில் கால் கிலோ கைமாற்றாய்ச் சருக்கரை வாங்குகிறோம். நமக்குச் சருக்கரைப் பங்கீடு வந்தவுடன் அடுத்தவீட்டாருக்கு இக் கால் கிலோ சருக்கரையைத் திருப்பிக் கொடுத்து விடுவதாய் இரு வீட்டாருக்கும் ஒரு புரிதல். கைமாற்று என்பது பணத்திலும் ஏற்படலாம், சடங்குகளிலும் நடை பெறலாம்.  பங்காளி வீட்டு விருந்தோம்பலில் நாம் மொய் எழுதுவதும் அதே அளவு மொய்யைப் பங்காளி நம் வீட்டு விதப்பில் எழுதுவதும் கூட குறியெதிர்ப்புத்தான். திருமணம் என்றால் மொய்ப் பொத்தகம் என்பது இந்த நடைமுறையைத் திருத்தமாய்க் காட்டும்.   

குறியெதிர்ப்பின் பேச்சு வழக்குத் திரிவான ”குறியாப்பு” என்பது கொங்கு பகுதியில் மிகவுண்டு. ஒரு பொருளை வாங்கிச் சென்றால் அதே பொருளை பின்னொரு கால் திரும்பக் கொடுக்க வேண்டும். எ.கா: பால் ஒரு படி கடனாக வாங்கினால் திரும்பப் பால் ஒரு படி கொடுக்கவேண்டும். நம் கழனி உழவில்  தமது எருதுகள், பாரவண்டிகள் மற்றும் மாடுகளோடு வந்து ஏர் ஓட்டவும், குப்பைகளை வயல்களிலிருந்து எடுத்துச் செல்லவும் நமது சுற்றத்தார்/ உறவினர் துணை புரிந்தால், அவர் எத்தனை நாட்கள் நமது வயலில் எத்தனை சோடிகளுடன் வேலை செய்தாரோ அதே அளவு நாட்கள் அத்தனை சோடிகளுடன் நாமும் வேலை செய்து உதவுவதும் குறியெதிர்ப்பைச் சேர்ந்தது தான். 

‘குறியெதிர்ப்பு’ என்பது ‘to give something back in the same quantity it was borrowed’ என்று பொருள்படும். நாம் வாங்கிக்கொண்ட உதவியை ஏதோவொரு இடத்தில் குறித்து வைப்போம். அது சுவரில் தீட்டும். கோட்டு அடையாளம் ஆகலாம். நம் சிந்தனையில் குறித்துக் கொண்டதாகலாம். நம் வீட்டுக் கணக்கில் குறித்ததாகலாம். ஏன், நாட்காட்டியில், நாட்குறிப்பில் குறித்ததாகலாம். இதை அவருக்குத் தேவைப்படும் போது எதிர்ப்பணி (expectation), தொண்டு, வேலை செய்து கொடுப்பது எதிர்ப்பு என்று அழைக்கப்பட்டது. இதில் நேர்மை, பரிவு ஞாயம் போன்றவை பெரிதாய்க் கருதப்படும்.


Tuesday, June 01, 2021

medium

பலரும் இதை ஊடகம் என்றே மொழிபெயர்க்கிறார். சிலகாலம் முன்புவரை நானும் அப்படிப் புழங்கி இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அதை மாற்ற வேண்டுமென்றே நினைக்கிறேன்.

பெரும்பாலான இடங்களில் மிடையம் என்ற சொல்லையே நான் இப்பொழுது புழங்குகிறேன். ஏனென்றால் ஊடுதல் (to go in between or to osmose) என்ற வினை, ஒன்றின் ஊடே செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இது வேதிப் பொறியியல் (chemical engineering), மற்றும் பூதி வேதியலில் (physical chemistry) osmosis என்ற செலுத்தத்திற்குச் (process) சரியாகப் பொருந்தி வரும். நுணுகிய துளைகள் இருக்கும் ஒரு படலத்தின் (film) வழியே சில மூலக்கூறுகள் (molecules) ஊடுவது உண்டு. அந்தச் செயல் ஊடுகை (osmosis) என்று இந்த இயல்களில் சொல்லப் படும். அந்த ஊடுகைக்குத் துணை போவது ஊடகம் (osmotic membrane) என்னும் மெம்புனை(membrane)யாகும். அந்த ஊடுகைக்கு எதிராக, அதாவது கரைபொருளுக்கு (solute) மாறாகக் கரைமத்தையே (solvent) ஊட வைக்கும் செலுத்தத்தை எதிர் ஊடுகை (reverse osmosis) என்று சொல்வார்.

medium என்பதற்கு ஈடாக, மிடையம் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் மிடைத்தல் என்பது மேற்பட்டுத் தெரிதல் என்று பொருள்படுவதால் தான். மிடையும் மேடும் ஒருபொருட்சொற்கள். மேட்டில் இருந்து எழுந்தது மேடை எனும் சொல். ஒரு குமுகாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை மேற்படுத்திக் காட்டுவது, மிடைத்துக் காட்டுவது மிடையம். இங்கே இவர்கள் வெறுமே விளக்குப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள். "பொதுவாக மிடையக்காரர்கள் நிகழ்வுகளின் ஊடே சென்று செலுத்தம் செய்வது உகந்தது அல்ல" என்றே பலரும் சொல்லுகிறார்கள்.

தவிர அகநானூற்றின் ஒரு பகுதிக்குப் பெயரான மணிமிடைப் பவளம் என்ற சொல்லையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். மணிகளுக்கு இடையே கிடக்கும் பவளம் என்று அதற்குப் பொருள். மிடையம் என்பது குமுகாயத்தின் இடையே கிடக்கும் ஒரு நிறுவனம் தான்.

இப்படி இதைப் பற்றி நான் எழுதிக் கொண்டே போகலாம். எனக்கென்னவோ மிடையம் என்ற சொல் media-விற்குச் சரியான பொருள் தருவதாகவே படுகிறது. ஆனால், எந்தச் சொல் நிலைக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல நான் யார்? என்னால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

அன்புடன்,
இராம.கி.