Friday, March 31, 2006

கவிநடை

பாவகை எழுதத் தாள்ஒன்று எடுத்தேன்.
பாநடை திருத்தி அவள்ஒன்று தொடுத்தாள்;

"அந்த உணவை நான் இன்று உண்டேன்"
இதுஎன் தொடக்கம்; அவளோ சிரித்தாள்;

கவித்துவம் வீசை விலையறி யாதவன்
என்னிடம் சொல்லுவாள்; குறிப்பும் காட்டுவாள்;

"அச்சச் சோ,இது நாட்குறிப் பெழுத்தோ?
எங்கே இதிலே கவித்துவம் இருக்கு?"

கவிநடை என்றால் ஆற்றுவ*ப் போக்கைக்
காட்டா திருப்பதே சிறப்புடைத் தாகுமாம்!

புரியா தவன்போல் விழித்தே நின்றேன்;
"மற்றந்த வாக்கை, பட்டுவ**ப் போக்கில்:
மாற்றியே போட்டபின் பார்த்தியா?" என்றனள்;

"அந்த உணவு இன்று உண்ணப் பட்டது.....,
என்னால்" எனும்போழ் எதிர்பார்ப்பு இல்லையா?

என்றனள் அவளும், குறுநகை தவழ;
அளவை மீறியே இன்றையக் கவிதையில்
ஆழ்ந்தவள் போலும்; கற்கத்தான் வேண்டும் :-)

மீண்டும் எனக்குள் மேல்வரும் ஓர்மை:
எந்த உணவை உண்டேன், நானென
ஏதோ நினைத்து குறுகிக் குறுகியே
உண்ணல் அவள்க்கு விக்கலைத் தந்ததோ?

அன்புடன்,
இராம.கி.

* ஆற்றுவ வாக்கு = active voice
** பட்டுவ வாக்கு = passive voice

Tuesday, March 28, 2006

கதையும் காதையும்

ரவீன் என்று ஒரு நண்பர், முன்பெல்லாம் forumhub -இல் வரலாறு பற்றிப் பொதுவாகவும், ஈழம் பற்றி விதப்பாகவும் எழுதுவார். ஆழமாகவும், ஈடுபாட்டோடும் இருக்கும். இப்பொழுது எங்கு இருக்கிறார், இணையத்தில் எழுதுகிறாரா என்பது தெரியாது. [இது போலப் பல நண்பர்கள், முன்பு நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது எழுதுவதில்லை, அல்லது அவர்கள் எழுதுவதை நான் அறியாமல் இருக்கிறேன்.] அப்படி ரவீன் எழுதும் போது, ஈரானியர் gatha என்று பயன்படுத்தியது தான், கதை பற்றி முதலில் வந்த வழக்கு என்று சொல்லியிருந்தார். இது தமிழ் இணையம் மடற் குழுவிலும் வந்தது என்று எண்ணுகிறேன். அதை மறுத்து நான் எழுதிய இடுகை. உங்கள் வாசிப்பிற்கு சற்று திருத்தங்களுடன்.

கதை என்று சொல்லும்போது, இரண்டு பொருள்கள் இருக்கின்றன. ஒன்று வெறும் பேச்சு. இன்னொன்று story என்ற பொருள். முதலில் பேச்சு என்பதற்கு வருவோம்.

கத்துகடல் சூழ் நாகை காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊரடங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி யெழும்.

இந்தக் காளமேகம் பாடல் படிச்சிருக்கீங்களோ? கத்துகடல் - னா சத்தம் போடுற கடல்; அந்தப்பக்கம் ஈழத்துலேயும் இச் சத்தத்தைக் கேட்டிருப்பீங்க. கத்தல்- ஓசையிலே தான் எல்லாமே ஆரம்பிச்சுது. ஆனாலும் ஓசை ஒழுங்கில்லாமா தத்தக்க, பித்தக்கன்னு வந்தா நாம, "இவன் உளர்றான்"னு சொல்லிருவோம். அதனாலே ஒரு ஒழுங்கோடெ, அடுத்தடுத்து ஒரு விதமாச் சேர்த்து, நம்ம பேசுறது இன்னோருத்தருக்கு புரியுற மாதிரி வந்தாத் தான் அது பேச்சு. அதாவது, பேச்சுங்குறதுலெ ஓர் ஒழுங்கு இருக்கோணும், அந்த ஒழுங்கும் தொடர்ந்து வரோணும், நாம சொல்றது இன்னோருத்தருக்குப் புரியணும்னா, அவருக்கும் நமக்கும் ஒரு குழூஉக் குறி இருக்கோணும். அதாவது ஒரே மொழியிருக்கோணும். இதெல்லாம் இருந்தாத்தான் அவன் கதைக்குறான்னு சொல்றோம். "அவன் கதைக்குறது விளங்கேல்லெ" என்று சொல்கிறோம் இல்லையா?

சரி, கதைங்கிற சொல் எப்படித் தான் வந்தது?

கல் என்பது மலை, பாறை, சிறிய பாறை, துண்டுப் பாறை என எல்லா வற்றையும் குறிக்கும். அதேபோலக் கருமை என்ற பொருளிலும் அந்த வேர் வரும். கல்லுதல் என்பது தோண்டுதல், உடைத்தல். ஓசை என்ற பொருள், கல்லோடு கல் மோதுவதால், ஏற்படுகிறது. "கலீர் ஓசை", "கலகலவென்று சிரித்தான்" என்று சொல்கிறோம் அல்லவா?

குல்>கல்>கல்+து = கற்று>கத்து= ஓசை எழுப்பு., கூவு (கற்றல் என்னும் படிப்பு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கத்திக் கத்திப் படிப்பதால் தான் வந்தது; என் இளமைப் பருவத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன். இன்றைய மதரசாப் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல் அன்றையத் திண்ணைப் பள்ளிக்கூடங்களும் ஒரே சத்தமாய்த் தான் இருந்தன.)

கல்>கள்>கணீர் = ஓசைக்கான இன்னொரு ஒலிக் குறிப்பு.
கலி = ஒலி
கத்து>கத்தல் = ஓசையை எழுப்பல் ( இக்கத்தலில் பொருளிருக்க வேண்டும் என்பதில்லை.)
கத்து+ஐ >கத்தை>கதை = ஓசைகளின் தொகுதி (இது பொருளோடு வரும் பேச்சு), ஒலியிட்டு உரை

வாயால் 'பெ.....பெ' என்று ஊமையர் ஒலியெழுப்பும் போது பொருளற்று இருக்கிறது. அதனால் தான் "சும்மா பேத்தாதே" என்கிறோம். பேத்துவது என்பது பொருளற்று ஓசை எழுப்புவதைக் குறிக்கும். அதே சொல், பேத்து>பேச்சு என்று ஆனவுடனே, பொருளுள்ள தொகுதியாக ஆகி விடுகிறது. பொருட்பாட்டு வளர்ச்சியைப் பாருங்கள். இதே சொல்லை வைத்து, எதிர்மறையைக் காட்டுதற்குப் "பொருளற்ற பேச்சு" என்று சொல்கிறோம். (அதாவது பேத்தல் என்பது பொருளற்ற பேச்சு) பேச்சு என்ற சொல்லே பாஷை எனத் திரிந்து வடமொழியில் வருகிறது. ஆங்கிலத்தில் இதே சொல்லுக்கு இணையாய் speech என்று ஆகிறது. செருமனில் sprake என்று ஆகிறது; தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள பாலங்களில் இதுவும் ஒன்று. வடமொழியில் இருக்கும் பாஷையைத் தமிழ்ப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு நாம் பாடை என்கிறோம். பேசாமல், பேச்சு என்றே இணைச்சொல்லைச் சொல்லி விட்டுப் போகலாம்.

அது போலக் கத்தல் கதையானால் பொருள் உள்ள ஓசைத் தொகுதியான பேச்சாகிறது. கல்>கழல்>கழறு = பேசு என்றும் ஆகும்.

அதே போல, கத்து>கது>கது+அர்>கதர்>கதரு>கதறு = ஒலியிடு, கூவு, அரற்று, முழங்கு என்ற பொருளும் வரும்.

இப்பொழுது கதை = story என்ற பொருளுக்கு வருவோம்.

நான் உங்களிடம் ஒரு செய்தி சொல்கிறேன். நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். என் வாயிலிருந்து புறப்பட்ட செய்தி உங்கள் செவிக்குச் செல்கிறது. அதை உங்கள் மூளை புரிந்து கொள்கிறது. அதை நீங்கள் மூன்றாமவருக்குச் சொல்கிறீர்கள்; அவர் காதால் கேட்கிறார். இப்படி ஒருவர் மாறி இன்னொருவருக்குச் செய்தி போகிறது. இந்தச் சரத்தைக் கீழ்க்கண்டவாறு காட்டலாம்.

வாய்1---->காது2---->வாய்2---->காது3---->வாய்3---->காது4---->வாய்4---->காது5---->வாய்5---->காது6---->வாய்62---->காது7---->வாய்7

இப்படி அடுத்தடுத்து போய்க்கொண்டே இருக்கும் செய்தித் தொடர்பில், ஒவ்வொருவரும் இன்னொருவரின் அடையாளம் தெரியும்வரை, தங்களுக்கு யார் இச்செய்தி சொன்னாரென்று அடுத்தவரிடம் சொல்வார். இந்தச் செய்தியாடல் குறுகிய காலத்திற்குள் நடந்தால் இந்த அடையாளங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். நாளடைவில், தொடர்பு வெளியும், காலமும் கூடக்கூட, முந்திச் சொன்னவரின் அடையாளங்கள் மனதில் அழிந்து கொண்டே வந்து "இச்செய்தியை எங்கோ கேட்டேன்" என்று சொல்லத் தொடங்கி விடுகிறோம். முடிவில், சொன்னவர் யாரென்பது முகமையில்லை, சொன்னது முகமை என்றாகிறது. கதை என்பதிலும், உள்ளடக்கம் தான் முகமை; யாரிடம் கேட்டோமென்பது முகமையில்லை என்று ஆகிவிடுகிறது. (இது படைப்பாளருக்கு வருத்தம் தரும் நிலைதான்; ஆயினும் நடைமுறையில் இதுவே பெரும்பாலும் நடக்கிறது. படைத்தார் பெயரை மறந்துவிடுகிறோம்.)

இங்கே, தொடர்பு என்பது இரு மாந்தர்க்கு இடையே என்று வைத்துப் பார்த்தால், மேலே உள்ள சங்கிலித் தொடரில் மீண்டு வருகிற சரம் என்பது, முன்னவரின் வாய்ப் பேச்சு ----> பின்னவரின் கேள்வி (=கேட்பு) என்று ஏற்பட்டுக் கொண்டே வரும். அதனால் ஒரு சங்கிலி எழும்.

இதே சங்கிலியை, வெறுமே ஒரு மாந்தனை வைத்துப்பார்த்தால் "அவர் கேள்விப் பட்டது, அவர் சொன்னது" என்று ஆகி வரும். இச்சரமும் திருப்பித் திருப்பி ஒரு மாந்தரில் இருந்து இன்னொரு மாந்தருக்கு எழலாம். இதனாலும் ஒரு சங்கிலி எழ முடியும்.

இரண்டு சங்கிலிகளையுமே, மொத்த நீளத்தை வைத்துப் பார்த்தால் நமக்கு ஒரு மாறாட்டமும் தெரியாது.

இரண்டாம்வகையில் எழும் கருத்துத்தான் "செவிவழிச் செய்தி" என்பது. வேறொன்றுமில்லை, கேட்டது கதை. "கர்ண பரம்பரைச் செய்தி" என்கிறாரே, அதுவும் இதுதான். கர்ணம் என்பது செவி என்ற பொருளில் உள்ள கன்னம் என்ற தமிழ்ச் சொல்லின் வடமொழி வடிவம்.

[குல்>கல்>கன்>கன்+அம்>கன்னம் என்று சொல் வரலாறு காட்டுவார் சொல்லறிஞர் ப.அருளி. (தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள், அறிவன் பதிப்பகம், தனித் தமிழ் மனை, காளிகோயில் தெரு, தமிழூர் (திலாஸ்பேட்), பாண்டிச்சேரி - 605009). அவர் கட்டுரையை இங்கே மீள நான் உள்ளிடுவதைக் காட்டிலும் நீங்களே படிப்பது சாலச் சிறந்தது.)
குல் - துளைத்தல் கருத்து மூல வேர்.
கன்னம் = துளை, செவித்துளை, காது, காதை அடுத்துள்ள குழி விழும் கன்னம், கதுப்பு.
கன்னம் = காது
காதுக்கு மேற் பக்கமாக முடிக்கும் குடுமியை 'கன்னக் குடுமி' என்பார் ஈழத்தார்.
கன்னன் = 'வெங்கதிர் மதலை மிகு கொடையாளன் அங்கர் கோமான் கவச குண்டலன்" - பிங்கலம் 741. (காதில் குண்டலம் இருந்ததால் தான் அங்கர் கோமான் கன்னன் ஆனான்.)
கன்னம்>கனம் = செவி (அணங்கு கொல் ஆய்மயில் கொல் கனங் குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.)
கன்னம்>karna (karnah) வடமொழிச் சொல்; ஒப்பு நோக்குக வண்ணம்>வர்ணம் (வடமொழிச் சொல்)]

இத்தகைய செவிவழிச் செய்தி தான், காதால் கேட்டது. அதாவது காதை. ஒவ்வொரு காதையும் இப்படித்தான். அது இட்டுக் கட்டியதல்ல. காதால் கேட்டது; காதுற்றது; எனவே அது காதை; காதை நாளடைவில் கதை ஆயிற்று. சங்க காலத்தில் காதை என்ற சொல்லே வழங்கிற்று. சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் படித்துப்பாருங்கள். "இக்கதையைக் கேட்டுள்ளீரா?" என்ற வாசகம் கதையைச் செவியோடு தொடர்பு ஏற்படுத்தும்.

கதை என்ற இரண்டு விதமான சொல்லாட்சிகளுக்கும் இன்றைக்கு ஒரே வடிவம் இருந்தாலும், 2000 ஆண்டுகளுக்கு முன் வெவ்வேறு வடிவங்கள் இருந்தன.

காதை = கேட்கின்ற நிகழ்வுத் தொகுதி
கதை = பேசுகின்ற ஓசைத் தொகுதி.

ஏற்கனவே பொருளற்ற பேச்சு என்ற தொடரைப் பார்த்தோம் அல்லவா, அது போல இட்டுக்கட்டிய கதை என்பதும் ஓர் எதிர்மறைப் பேச்சு.

ஈரானியர் gatha என்று பயன்படுத்தியது தான் முதலில் வந்த வழக்கு என்று ரவீன் forumhub-இல் சொல்லியிருந்தாலும், அப்பொருள் எப்படி எழுந்தது என்று அவர் சொல்லவில்லை. வடமொழியின் சொற்பிறப்பு அகரமுதலியைப் (மோனியர் வில்லியம்ஸ்) பார்த்தால், அதில் "கத்" என்ற வேரையே போட்டு, அதற்கு மேலே கூறிய "பேசுதல்" பொருளே கூறப்பட்டுள்ளது. பிறகு, எப்படி story என்ற பொருள் வந்தது என்று வடமொழி வழி நமக்குப் புரிவதில்லை. ஏனெனில், பேசுதல் எல்லாமும் கதை அல்லவே?

காதைக்குள்ளே, அங்கங்கே சுருக்கி, வேகம் காட்டச் செய்திகளைத் தொகுத்து உரைப்பதைக் கட்டி உரைப்பதென்று சொல்வார். கட்டி உரைப்பது கட்டுரை ஆகும். பின்னாளில் இச்சொல் essay என்பதற்கு இணையாகப் பயன்படத் தொடங்கிற்று. ஆங்கிலத்தில் story என்பது history -யின் குறுகிய வடிவம் என்பார். வரலாற்று நிகழ்வுகளை கட்டி உரைத்த கட்டுரை history. இதை இன்றையத் தமிழில் வரலாறு என்கிறோம். சிலம்பில் கட்டுரை என்று வருவதெல்லாம், நிகழ்வுகளைத் தொகுத்த history ஆகவே அமைந்திருப்பது ஒரு வியப்பு.

அன்புடன்,
இராம.கி.

Friday, March 24, 2006

இளைய அரபிகள் மரபுத் தொலைப்பு

எல்லாம் இந்தப் பாறைநெய்(1) விளைவு;
என்றோ நிலத்தைத் தோண்டிப் பார்த்துக்
கல்லையும் மீறிப் எண்ணெயைப் பீற்றி,
கணகண வென்று காசையும் கொட்டி
தொல்லை யில்லாத எங்களின் வாழ்வை
தொலைத்து முழுக வைத்தவன் ஒருவன்;
ஒல்லையிற் சிறந்த எங்களின் வாழ்வில்
ஒட்டகம் போச்சு; ஊர்ந்ததும் போச்சு;

சாகாட்டு மந்தைகள் கூட்டமும் போச்சு;
சடையெனக் கோரை முடையலும் போச்சு;
பாகெனக் காய்க்கும் ஈச்சும் குறைந்தது;
பாலையில் திரிந்த வாழ்க்கையும் போச்சு;
ஏகமாய் யாவரும் நகரினுள் நுழைந்தோம்;
எக்கச் சக்கமாய் மக்களெண் ணிக்கை;
வேகமாய்ச் செல்வம் கூடிய தாலே
விளைந்தது எங்களின் மரபுத் தொலைப்பே!

எம்முடை இளையர் கணக்கிலாய்ப் போனார்;
எங்கணும் பெருக்கம்; இடைவெளி உறவுகள்;
தம்முடைப் பிள்ளைகள் அறியிலாத் தந்தை;
தாயோ செல்லிடைப் பேசி(2)யில் ஒடுக்கம்;
கும்மிய கூட்டம் வீட்டினுள் எங்கும்;
கொண்டதே கோலமாய் வாழ்க்கையும் ஆச்சு;
நம்முடைத் தாத்தனும் பாட்டியும் இவரென,
நாங்கள் சொல்வதைக் கேட்பதே இல்லை;

பிள்ளைகள் பிறக்கவே ஃபிலிப்பினோ ஆயா;
பிறந்துதன் அகவை இரண்டாய்க் கூடியும்,
துள்ளிடும் குதிரைப் பாவை(3)யின் மேலே
துடிப்புடன் ஏறிடக் குழந்தைக்குத் தயக்கம்;.
அள்ளியே ஏற்றிக் குதிரையில் வைத்து
அசைக்கவும் ஆட்டவும் ஆயாதான் வேண்டும்;
பள்ளியிற் படிப்பு முடிகிற வரைக்கும்
பாங்கியாய் இருப்பது வெளிநாட்டுப் பெண்களே!

ஏழரை மணிக்கே அவக்கென ஓடி
எம்முடை மக்கள் எக்கிடும் பள்ளி;
பாழெனப் பகலில் தூங்கிய களைப்பு;
பாடங்கள் எல்லாம் படியுமோ மனதில்?
கோழையாய்க் குறுகிச் சிறுவய திருந்தே
கொள்கையில் பெரியவர் சொல்வதே காட்சி;
வாழவே இவர்க்கு மற்றவர் துணைதான்;
வாய்ப்பதில் தன்னிலை எதுவுமே கொள்ளார்;

எத்துணை சிறிய புதிரி(4)யைக் கொடுத்தும்
எள்முனை அளவும் முயற்சிகள் செய்யார்;
கத்தியே பாடம் நெட்டுருப் போட்டு
கசங்கிச் சுணங்கி பள்ளியில் நெளிவார்;
சுற்றிலும் இருக்கும் வெளிநாட்டுப் பிள்ளையோ,
சூடிகைப் பேர்களைத் தட்டியே செல்லும்;
இத்தரை அரபிப் பிள்ளைகள் எல்லாம்
எப்படி முன்நிலை வந்திட முடியும்?

பள்ளியில் இருந்து வெளிவரும் போதே
பையினை எறிவது துரவரை(5) நோக்கி;
தள்ளியே விரைவுணக் கடைகளுக்(கு) (6) ஓட்டம்;
தடையிலா மாலையிற் கால்பந் தாட்டம்;
சுள்ளுறும் கதிரவன் சாய்ந்த பிற்பாடும்
சூழ்தொலைக் காட்சியில் கால்பந் தாட்டம்;
நள்ளிய யாமம் துயிலுறப் போந்தால்
நாளை எழுவதோ காலையும் பிறந்தே!

கொண்ட"கோக் காள"மாய் (7) கடைவாய் அருந்திப்
குழைபனி(8)ப் பால்பழச் சாற்றொடு வறுவலும் (9),
உண்டே களித்து ஊதையாய்த் திரிந்து,
உலவி யழிந்து கைக்காசு கரைத்து,
கொண்டதை குப்பையாய் வீதியில் எறிந்து
கோநகர்(10) பேணாது வீணராய் அலைந்து,
தண்டலைத் தறுதலைப் பிள்ளையாய் மாறிட
தகப்பனோ தாயோ உணரவேண் டாமோ?

பிள்ளைகள் நேரம் பெற்றவர் அறியிலர்;
பெற்றதில் சிலகணம் பக்கலில் இருந்திலர்;
தள்ளையும்(11) தந்தையும் படிப்பினில் உதவார்;
தறுதலை கொழுக்கக் காசுகள் தருவார்;
விள்ளியே அறிவுரை சொல்லவும் மாட்டார்;
வெளியிடம் களியுற(12)த் தந்தையர் அலைய,
உள்ளிலே(13) தொணதொணப் பேச்சுடன் தாயர்கள்
உருப்பட வழிகள் பிள்ளையர்க் குண்டோ ?

எல்லாம் இந்தப் பாறைநெய் விளைவு;
என்றோ நிலத்தைத் தோண்டிப் பார்த்துக்
கல்லையும் மீறிப் எண்ணெயைப் பீற்றி,
கணகண வென்று காசையும் கொட்டி
தொல்லை யில்லாத எங்களின் வாழ்வை
தொலைத்து முழுக வைத்தவன் ஒருவன்;
ஒல்லையிற் சிறந்த எங்களின் வாழ்வில்
ஒட்டகம் போச்சு; ஊர்ந்ததும் போச்சு;

சாகாட்டு மந்தைகள் கூட்டமும் போச்சு;
சடையெனக் கோரை முடையலும் போச்சு;
பாகெனக் காய்க்கும் ஈச்சும் குறைந்தது;
பாலையில் திரிந்த வாழ்க்கையும் போச்சு;
ஏகமாய் யாவரும் நகரினுள் நுழைந்தோம்;
எக்கச் சக்கமாய் மக்களெண் ணிக்கை;
வேகமாய்ச் செல்வம் கூடிய தாலே
விளைந்தது எங்களின் மரபுத் தொலைப்பே!

அன்புடன்,
இராம.கி.

அருஞ்சொல் அடைவு:

1. பாறைநெய் = petroleum
2. செல்லிடை பேசி = cell phone
3. குதிரைப் பாவை = பூங்காக்களில் இருக்கும் குதிரைப் பொம்மைகள்
4. புதிரி = problem
5. துரவர் = driver
6. விரைவுணக் கடைகள் = fastfood restaurants
7. கோக் காளம் = coco cola
8. குழைபனி = ice cream
9. வறுவல் = chips
10. கோநகர் = capital, Riyadh
11.தள்ளை = mother
12.களியுறு வெளியிடம் = recreation place
13.உள்ளிடம் = inside of the house

Thursday, March 23, 2006

கூட்டின் மேல் கணக்கீடு

ஆண்டுக்கு 3 மில்லியன் டன் கொண்மை (capacity) கொண்ட, அண்மையில் கட்டப்பட்ட, பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையின் (Petroleum refinery; விள்ளுதல் = தெளிவாதல், பிரித்தல்; விள்ளெடுப்பு = தெளிய வைத்துப் பிரித்தெடுத்தல்) மதிப்பு ரூ 2500 கோடி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இப்பொழுது, இன்னொரு இடத்தில் இதே போன்ற பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையை, (காட்டாக, 6 மில்லியன் டன் கொண்மை கொண்ட ஆலையை) கட்டுவதற்கு குத்து மதிப்பாக எவ்வளவு செலவாகும் என்று ஒரு நிருவாகத்தார், பொறிஞராகிய நம்மைப் பார்த்துக் கேட்டால், அதுவும் உடனேயே சொல்லுங்கள் என்று கேட்டால், நாம் என்ன விடை சொல்லுவது?

இது போன்ற உடனடிக் கணக்கீடுகளை, "கூட்டின் மேல் கணக்கீடு" (back of the envelope calculation) என்று பொறியியற் துறையில் சொல்லுவார்கள். அதாவது, நாலு கிறுக்கலில், ஒரு குட்டித்தாளில் கணக்குப் போட்டு, உடனே விடை சொல்லி விட வேண்டும். அப்படிப் பட்ட கணக்கில் மிகப் பெரிய துல்லியம் எல்லாம் விடைக்குத் தேவையில்லை. கிட்டத் தட்ட, ஒரு மேல் விளிம்பாய்ச் சொன்னாலே போதும் என்பார்கள்.

சரி, சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல், (ஒரு கிலோ இவ்வளவு விலை, எனவே மூன்று கிலோ மூன்று மடங்காய் இருக்கும் என்பது போல்,) 6 மில்லியன் டன் ஆலைக்கு ரூ 5000 கோடி என்று சொல்ல முடியாமா என்றால், முடியாது; ஏனென்றால், அப்படிச் சொல்லும் விடை நடை முறையில் பெரிதும் தவறாகவே இருக்கிறது.

இது போன்று வேதித் திணைக் களங்களின் (Chemical plants) கொளுதகைகளை (costs) மதிப்பிடும் போது நெல்சன் விதி என்றும், மூன்றில் இரண்டாம் புயவு விதி என்றும் (two third power; power is different from energy; ஆற்றல் = energy; புயவு = power; புயம் = தோள்; தோள்வலியின் ஒப்புமையையில் புயவு என்ற சொல் எழுந்தது.), ஒரு வழிமுறையின் மூலம், முதல் மதிப்பீட்டைக் (first estimate) கண்டுபிடிக்க முயலுவார்கள். புறத்திட்டப் பொறியியலில் (project engineering) ஈடுபடும் வேதிப் பொறிஞர்கள் (Chemical engineers) பலரும் இந்த விதியை அறியாமல் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த விதியின் உள்ளே பொதிந்திருக்கும் ஆயவூன்றுகள் பலருக்கும் தெரிவதில்லை. (ஆயவூன்றுகள் = assumptions; இவற்றை அடிப்படை என்று சொல்ல முடியாது. தமிழ்ச் சொல்லின் தோற்றம் கண்டுபிடிக்க, கோயில்களில் பல்லக்கு மற்றும் கோயில் வாகனங்களில், அல்லது சிவிகைகளில் ஊருலவுத் திருமேனிகளை வைத்துத் தூக்கிச் செல்லுவதை நினைவு கொள்ளவேண்டும்; அப்படித் தூக்கும் போது, அவ்வப்பொழுது சிவிகைகளைத் தோளில் இருந்து எடுத்து நிறுத்திக் கொள்வதற்கு ஆயக்கால்களை வைத்து ஊன்றிக் கொள்வார்கள். அந்த ஆயவூன்றுகளின் மேல் தான் ஊருலவுத் திருமேனிகள் நிற்கின்றன. assumptions மேல் தான் தேற்றுகள் - theories - நிற்கின்றன.)

இந்தப் பதிவில் நெல்சன் விதியைத் தாங்கி நிற்கும் ஆயவூன்றுகள் பற்றிச் சொல்ல முற்படுகிறேன். முதலில் விதியைப் பார்ப்போம்.

புதிய கொளுதகை = பழைய கொளுதகை * (புதிய கொண்மை / பழைய கொண்மை)^(2/3)

காட்டாக, புதிய 6 மில்லியன் டன் பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையின் கொளுதகை = (ரூ 2500)*(6 மில்லியன் டன் / 3 மில்லியன் டன்)^(2/3) = கிட்டத் தட்ட ரூ 3968.5 கோடி ஆகும். (ரூ 5000 கோடி ஆகாது.)

இந்த விதி எப்படி எழுந்தது என்று இப்பொழுது புரிந்து கொள்ளுவோமா? கொஞ்சம் நுட்பச் சொற்கள் ஊடே வரும்; பொறுத்துக் கொள்ளுங்கள். (சொற்களின் சொற்பிறப்பை இங்கே நான் பல இடத்தும் கூறவில்லை; அதைக் கூறத் தொடங்கினால் கட்டுரை நீண்டுவிடும்.) பொதுவாக வேதித் திணைக்களம் (chemical plant) என்பது,

பெரும் பெரும் கோபுரங்கள் (towers),
வினைக் கலன்கள் (reactors),
வெப்ப மாற்றிகள் (heat exchangers),
தாங்கல்கள் (tanks),
தொட்டிகள் (ground level storages and pits)
நீளமான தூம்புகள் (tubes),
புழம்புகள் (pipes)

என்பவற்றோடு [இவற்றை வேதிநுட்பப் பேச்சில் ஏந்தங்கள் (equipments; ஏந்து = வாய்ப்பு; ஏந்தம் = வாய்ப்பு ஏற்கும் கலன்) - என்று பொதுவாக அழைப்பார்கள்],

இறைப்பிகள் (pumps),
அமுக்கிகள் (compressors),
ஊதிகள் (blowers),
நகர்த்திகள் (conveyors),
மின்னோட்டிகள் (motors),

இன்னும் இதுபோன்ற பலவற்றையும் கொண்டது. (இந்த இரண்டாம் வகையை மாகனைகள் - machineries என்று வேதிப் பொறிஞர்கள் அழைப்பார்கள்). மாகனைகள் மூலமாகவும், புவியீர்ப்பின் (gravity) மூலமாகவும் தான் ஒரு திணைக் களத்தில் கையாளப்படும் செலுத்தப் பாய்மங்கள் (process fluids), ஒரு ஏந்தத்தில் இருந்து, இன்னொரு ஏந்தத்திற்கு அனுப்பப் படுகின்றன.

இப்பொழுது முதல் ஆயவூன்றாக (assumption),

வேதி வினைகள் (chemical reactions), பூதி மாற்றங்கள் (physical changes), பாய்ம நகர்ச்சிகள் (fluid movements) என எல்லாமே மாகனைகளின் உதவியில்லாமல், புவியீர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு நடைபெறுவதாக எண்ணுங்கள். [அதாவது இயல்பொருட்கள் (raw materials) என்பவை எங்கோ உயரத்தில் இருக்கும் ஏந்தத்துள் நுழைந்து, அடுத்தடுத்து வெவ்வேறு ஏந்தங்களுக்குள் மாறி வந்து, அப்படி வரும் போதே வேதி வினைகளில் ஈடு பட்டு, பூதி மாற்றங்கள் அடைந்து, பின்னால் புவியீர்ப்பின் துணையாலே, நமக்கு வேண்டிய புதுக்காய்ப் (புதுக்கு = product) பிரிந்து, அடியில் வந்து சேருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.] மாகணைகள் இல்லாத திணைக்களம் என்பது வெறும் ஏந்தங்களால் ஆனது என்று ஆகிவிடுகிறது.

சரி, இந்தப் பாய்மங்கள் வெவ்வேறு ஏந்தங்களிலும் கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டும் அல்லவா? அப்பொழுது தானே வேதி வினைகளும், பூதி மாற்றங்களும் நடைபெற முடியும்? இப்படி ஏந்தங்களுள் இருக்கும் நேரத்தை, வேதி நுட்பவியலார் (chemical technologists) "இருத்தல் நேரம் (residence time)" என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு கலனை (vessel) ஓட்டியும், ஒரு பிரிவை (section) ஒட்டியும், ஒரு திணைக் களத்தை (plant) ஒட்டியும் கூட இருத்தல் நேரங்கள் என்னென்ன என்று பேச முடியும். இந்த இருத்தல் நேரம் என்பது வேதிப் பொறியியலில் பெரிதும் முகன்மையானது. ஒரு திணைக் களத்தின் கொண்மை எவ்வளவு இருந்தாலும், இருத்தல் நேரம் என்பது மாறக் கூடாது. மாறினால் சரியான அளவு வேதிவினையோ, பூதி மாற்றமோ நடவாமல் போய்விடும். நேரம் என்பது முதன்மையானது.

ஒரு கிலோ மதுகை கொண்ட பாறை நெய் (மதுகை = mass; மதர்த்துக் கிடப்பது மதுகை; மதுகை என்பதும் எடை என்பதும் சற்று வேறானவை. தமிழில் அவற்றை வேறு படுத்திச் சொல்லும் போக்கு வரவேண்டும்.) ஒரு திணைக்களத்தில் முதல் துளித்தெடுப்புக் கோபுரத்திற்குப் (distillation tower) போனதில் இருந்து ஒவ்வொரு ஏந்தமாய் நுழைந்து, பல மாற்றங்களைப் பெற்று, முடிவில்

கொஞ்சம் நீர்ம எரிவளி (liquid fuel gas),
கொஞ்சம் கன்னெய் (petrol or gasolene),
கொஞ்சம் மண்ணெய் (kerosene),
கொஞ்சம் டீசல்,
கொஞ்சம் வளிநெய் (gas oil)

என்று வந்து சேரும் வரை ஆகின்ற இருத்தல் நேரம் இருக்கிறது பாருங்கள், அது 12 மணி நேரம் என்றால், 3 மில்லியன் டன் விள்ளெடுப்பு ஆலையிலும், அதைப்போல இரண்டு மடங்கு கொண்மை கொண்ட 6 மில்லியன் டன் விள்ளெடுப்பு ஆலையிலும், அதே 12 மணிநேரம் தான் இருக்க முடியும்.

எனவே நமக்கு முன்னால் இருக்கும் இரண்டாவது ஆயவூன்று: இரண்டு ஆலைகளுக்கும் இருத்தல் நேரம் என்பது சமம்.

சரி, ஒரு திணைக் களத்தில் இருக்கும் கோபுரங்கள், வினைக்கலன்கள், வெப்ப மாற்றிகள், தாங்கல்கள், தொட்டிகள், தூம்புகள், புழம்புகள் எல்லாம் வெவ்வேறு அளவுகளோடு (விட்டம் - diameter, உயரம், திண்ணம் - thickness), வெவ்வேறு வடிவங்களோடும் (கொஞ்சம் கூம்பு - conical - போன்றது; கொஞ்சம் சப்பையானது - flat, கொஞ்சம் கோளமானது - spherical.....), வெவ்வேறு மாழைகளாலும் (ஒரு கலன் கரிம எஃகு - carbon steel, இன்னொன்று துருவிலா எஃகு - stainless steel, இன்னும் மற்றொன்று வார்ப்பிரும்பு - cast iron, செம்பு, ஈயம் - lead இப்படி.....) ஆகி இருக்கலாம்.

எனவே மூன்றாவது ஆயவூன்று: வெவ்வேறு வடிவங்களையெல்லாம் அகற்றி ஒரே ஒரு உருளை வினைக் கலன் (cylinderical reactor) ஆகவே, திணைக்களத்தை உருவகிக்கலாம். அப்படிச் செய்வதற்கு ஒரே ஒரு தேவை, இருத்தல் நேரம் என்பது மாறாதிருப்பதே.

நாலாவது ஆயவூன்று: விதவிதமான மாழைகளுக்கு மாறாய், சூழமைவின் (environment) காரணமாய் ஒரே ஒரு மாழையால் மட்டுமே இந்த உருளை செய்யப்பட்டுள்ளது.

இந்த உருளை வினைக்கலனை தொடர்ந் துருவிய தாங்கல் வினைக்கலன் (continously stirred tank reactor - தொதுதாவி - CSTR) போலவே கருதலாம். இந்த வினைக் கலனில் ஒருபக்கம் வினைப்பொருட்கள் உள்ளே போகும்; உள்ளே துருவணை (turbine) ஒன்று வினைப்பொருட்களைச் சுழற்றிச் சுழற்றித் தூக்கியடித்துக் கலந்து கொண்டே இருக்கும்; குறிப்பிட்ட இருத்தல் நேரம் முடிந்தவுடன், இன்னொரு பக்கம் விளை பொருட்கள் வெளியே வரும். பொதுவாக இது போன்ற வினைக் கலன்களின் நீர்ம மட்ட உயரம் விட்டத்தின் அளவே இருக்கும். (ஐந்தாவது ஆயவூன்று)

அத்தகையை உருளை வினைக்கலத்தின் வழியாக, ஒரு மணி நேரத்திற்கு 3000 லிட்டர் பாறைநெய் போகிறது என்று வையுங்கள். அதன் இருத்தல் நேரம் 1/2 மணி. அப்படியானால் அந்த உருளையின் கொள்ளளவு 1500 லிட்டர்களாக இருக்க வேண்டும். மாறாக, 6000 லிட்டர் பாறைநெய் போகிறது என்றால் அதே இருத்தல் நேரத்தில், உருளையின் கொள்ளளவு 3000 லிட்டராக இருக்கவேண்டும். பொதுவாக கொள்ளளவு V1, திணைக்களக் கொண்மை Q1 என்றால், இருத்தல் நேரம் t என்றால்,

V1 = Q1*t.

இரண்டு வேறுபட்ட திணைக்களக் கொண்மை கொண்ட, ஆனால் ஒரேவிதமான, ஆலைகளை ஒப்பிடும் போது இந்த இருத்தல் நேரம் என்பது ஒன்று போல் இருக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா?

எனவே, V2/V1 = Q2/Q1 என்ற ஒப்புமை நமக்கு விளங்கும்.

இப்பொழுது உருளை என்பதை ஒரு பட்டறையில் (workshop) எப்படி மானவப் படுத்துகிறோம் (manufacturing) என்று பார்ப்போம்.

பட்டறையில் L நீளமும், r ஆரமும் கொண்ட ஒரு புழம்பை உருவாக்க வேண்டுமானால், L நீளமும், 2*(pi)*r அகலமும் கொண்ட ஒரு செவ்வகத்தை எடுத்து, நீள வாட்டை அப்படியே வைத்துக் கொண்டு, அகல வாட்டை ஒரு உருளை மாகனை(roller machine)யில் போட்டு உருட்டி, பின் நெருங்கி வரும் விளிம்பு(edge)களை ஒன்று சேர்த்துக் கூடு போல ஆக்கி, அதன் பின் மேலும் கீழுமாய் வட்ட மூடிகளை ஒட்டி மொத்தமாய்ப் பற்ற வைத்து (பற்ற வைத்தல் = welding) உருளையை உருவாக்குவோம். இனி அடுத்து அறிய வேண்டியது, உருளையின் கொள்ளளவும், பரப்புமாகும்.

இப்பொழுது,

உருளையின் கொள்ளளவு =V= (pi)*(r)^2*(L) = 2*(pi)*(r)^3, (ஏனென்றால், பொதுவாக தொதுதாவியில் - CSTR ல் L=2r) அடுத்து, உறவாட்டமாய்ப் பார்த்து, சிறியதாய் இருக்கும் முடிப் பரப்புகளை ஒதுக்கிச் சுவர்ப்பரப்பை மட்டும் கருதினால், (இது தான் ஆறாவது ஆயவூன்று)

உருளையின் பரப்பளவு = (pi)*(2r)*(L) = (pi)*(2r)*(2r)

உருட்டுவதற்கு முன் இருந்த செவ்வகத்தட்டின் திண்ணம் t என்றும் அதன் அடர்த்தி rho என்றும் கொண்டால், உருளையின் மதுகை = செவ்வகத் தகட்டின் மதுகை = M = (pi)*(2r)*(2r)*t*(rho).

எனவே, V/M = r/(2*t*Rho)

இருவேறு திணைக்களக் கொண்மைகளை ஒப்பிடும் போது கலன்களின் மாழை அடர்த்தியும் ஒரே போலத்தான் இருக்க முடியும். அதே போல இரண்டு திணைக்களங்களிலும் கலச் சூழமைவுகள் (vessel environments) குறிப்பாக அழுத்தம், வெம்மை போன்றவை, ஒன்று போலத்தான் இருக்க வேண்டும். இந்த நிலையில் இரு வேறு நிலைகளிலும் திண்ணம் ஒன்று போலத்தான் இருக்க முடியும். (முன்னால் சொன்ன மூன்றாம் ஆயவூன்றின் ஒரு பகுதி)

இந்த நிலையில் புதிய திணைக்களத்திற்கும், பழைய திணைக்களத்திற்கும் ஒப்பிட்டால்,

2/M2) / (V1/M1) = r2/r1
தவிர, V = 2*(pi)*(r)^3 = ஃ r = [V/(pi*2)]^(1/3)
ஃ r2/r1 = (V2/V1)^(1/3)
மற்றும் (V2/V1)*(r1/r2) = (M2/M1)
மறு சொற்களில் சொன்னால்,
(M2/M1) = (V2/V1)^(2/3)

இப்பொழுது ஒரு உருளையின் விலை அதன் மதுகையைப் பொறுத்தது. மதுகைக் கூடக்கூட விலை கூடும் அல்லவா? எனவே,
ஃ (C2/C1) = (V2/V1)^(2/3) (இதில் C2 என்பது புதிய திணைக்களத்தின் கொளுதகை; C1 என்பது பழைய திணைக்களத்தின் கொளுதகை.)

இந்தச் சமன்பாட்டில் உள்ளார்ந்த ஆயவூன்றுகள்

1. திணைக்களம் ஏந்தங்களால் ஆனது; மாகனைகளே கிடையாது; பாய்மங்கள் புவியீர்ப்பினாலேயே நகருகின்றன.
2. இரண்டு திணைக்களங்களுக்கும் இருத்தல் நேரம் ஒன்றுதான்
3. மொத்தத் திணைக்களமும் ஒரு CST வினைக் கலனாய் உருவகிக்கப் படுகிறது
4. இரு திணைக்களங்களிலும் ஒரே சூழமைவு இருக்கிறது; எனவே ஒரேவிதமான மாழையிலேயே, ஒரே திண்ணத்திலேயே திணைக்களங்கள் அமைகின்றன.
5. உருளையின் விட்டமும், நீர்ம உயரமும் சமம்.
6. உருளை வினைக்கலத்தின் சுவர்ப் பரப்பைப் பார்க்க, மூடிப்பரப்புகளை ஒதுக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, March 22, 2006

தமிழெனும் கேள்வி

பாரத் வெள்ளைச்சாமி, சத்தியா என்ற துடிப்புள்ள நண்பர்கள் துபாயில் இருக்கிறார்கள். அவர்கள் "கணினியில் தமிழ்" என்ற பொருளில் திருவாரூரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15, 2003 ல் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியை ஒட்டி வெளியிட்ட பொத்தகத்தில் நான் ஒரு கட்டுரை எழுதிப் பங்காற்றவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். கடைசி நேரத்தில் என்னால் அலுவற் பளு காரணமாய்க் கலந்து கொள்ள முடியாது போயிற்று. நம் ஞானவெட்டியானும், நாக. இளங்கோவனும் கலந்து கொண்டார்கள் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கட்டுரை (மடல் வடிவில் உள்ளது) இங்கு உங்கள் வாசிப்பிற்கு கொஞ்சம் திருத்தத்துடன்.
--------------------------------------------------------
அன்பிற்குரிய வாசகருக்கு,

இந்த மலர் உங்களுக்கு வந்து சேர்ந்து, இந்தக் கட்டுரை வரைக்கும் விருப்பத்தோடு நீங்கள் படிக்க முற்பட்டு இருப்பீர்களானால், தமிழ் மேல் உங்களுக்கு ஏதோ ஒரு பற்று அல்லது அக்கறை இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் உங்களோடு பேசலாம்; இன்னும் சொன்னால் பேசத்தான் வேண்டும்; உங்களைப் போன்றவர்களுடன் கலந்து உரையாடாமல், வேறு யாருடன் நான் உரையாடப் போகிறேன்?

தமிழ் மொழியைப் பேச, படிக்க, மற்றும் எழுத எங்கு கற்றுக் கொண்டீர்கள்? உங்கள் பெற்றோரிடம் இருந்தா, ஆசிரியரிடம் இருந்தா, அல்லது உங்களைச் சுற்றி உள்ள சுற்றம், மற்றும் நட்பில் இருந்தா? நீங்கள் எந்த இடங்களில் எல்லாம் தமிழில் பேசுகிறீர்கள்? எங்கெல்லாம் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்? உங்கள் நெடு நாளைய நண்பரையோ, அல்லது முன்பின் தெரியாத தமிழரையோ பார்க்கும் பொழுது, அந்தக் கணத்தில் நீங்கள் தமிழில் உரையாடுகிறீர்களா, அல்லது ஆங்கிலத்தில் உரையாடுகிறீர்களா?

நீங்கள் பேசும் ஆங்கிலத்திற்குள் உங்களை அறியாமல் தமிழ் ஊடுறுவுகிறதா? அப்படி ஊடுறுவினால், அதை ஒரு நாகரிகம் இல்லாத பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணிக் கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு, அதைத் தவிர்க்க முயன்றிருக்கிறீர்களா? உங்கள் ஆங்கில வன்மை கூடுவதற்காகப் பல்வேறு பயிற்சிகள் செய்ய முற்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஆங்கிலம் - ஆங்கிலம் அகரமுதலி வைத்திருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களைப் பயிலும் போது, அவற்றின் பொருள் அறிய வேண்டிச் சட்டென்று அகர முதலியைத் தேடுகிறீர்களா?

ஆங்கிலப் பேச்சில் சிறக்க வேண்டும் என்ற ஒய்யார எண்ணத்தால் (fashionable idea) உந்தப் பெற்று, உச்ச கட்டமாக, தங்கள் பெற்றோரோடும் சுற்றத்தாரோடும் இருக்கும் உறவையே கூடச் சில போது முற்றிலும் துண்டித்துக் கொள்ள ஒரு சிலர் முயலுவார்கள்; அந்த விவரங் கெட்ட நிலைக்கு நீங்கள் போனதுண்டோ ? ஆங்கிலம் அறியாப் பெற்றோர், சுற்றத்தாரின் வாடையே, உங்களூக்கும், உங்கள் பிறங்கடைகளுக்கும் (சந்ததியாருக்கும்) வரக்கூடாது என்று நீங்கள் எண்ணியதுண்டோ ?

உங்கள் பேச்சில் தமிழ் மிக மிகக் குறைந்து இருந்தால், அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீர்களா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும், தமிழை விலக்குகிறீர்களா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும், என்று எண்ணுகிறீர்களா?

இதற்கெல்லாம் ஆம் என்று நீங்கள் விடையளித்தால், உங்களோடு மேற்கொண்டு உரையாடுவதில் பொருள் இல்லை; மேற்கு இந்தியத் தீவுகளில் இருந்து கொண்டு, நாலைந்து தலைமுறைக்கு அப்புறமும், தன் பெயரை முட்டம்மா என்று வைத்துக் கொண்டு, தன் தாத்தா தண்டபாணிக்குக் கொஞ்சூண்டு தமிழ் தெரியும் என்று சொல்லித் தமிழில் பேச இயலாத ஒரு பெண்ணுக்கும், உங்களுக்கும் மிகுந்த வேறுபாடு இல்லை. வெகு விரைவில் நீங்கள் எங்களை விட்டுப் பெருந் தொலைவு விலகிப் போய்விடுவீர்கள்; என்றோ ஒரு நாள் தமிழராய் இருந்ததற்காக உங்களோடு நாங்கள் அன்பு பாராட்ட முடியும். அவ்வளவே. எங்கிருந்தாலும் வாழ்க, வளமுடன்!

மாறாக மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் என்று சொல்லாமல் கொஞ்சமாவது தடுமாறினீர்கள் என்றால், உங்களோடு உரையாடுவதில் இன்னும் பலன் உண்டு. அந்த எண்ணத்தினாலேயே, மேலும் இங்கு உரையாடுகிறேன்.

சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீங்கள் தமிழ் பேசத் தவித்திருக்கிறீர்களா? அலுவல் தவிர்த்து, மற்றோரோடு நீங்கள் பேசும் உரையாடல்களில், எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில், உங்களால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும் போது ஆங்கிலம் ஊடுறுவினால், அதைப் பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணாமல், நாகரிகம் என்று எண்ணுகிறீர்களா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியும் என்று அறிவீர்களோ? உங்கள் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி இருக்கிறதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி இருக்கிறதா? உங்களுக்குத் தெரியாத தமிழ்ச் சொற்களைப் பயிலும் போது, உடனே தமிழ்-தமிழ் அகரமுதலியைத் தேடுகிறீர்களா?

உங்கள் பெற்றோர் அறிந்த தமிழோடு, உங்கள் தமிழை ஒப்பிட்டால் இப்பொழுது அந்தப் பேச்சில் தமிழ் என்பது எவ்வளவு தேறும்? 98 விழுக்காடாவது தேறுமா? இரண்டு விழுக்காடு குறைந்தாலேயே, ஏழாவது தலைமுறையில், மடக்குச் செலுத்தத்தில் (exponential process) பார்த்தால், முக்கால் பங்கு தமிழ் "போயே போயிந்தி" என்று உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு மொழியிலும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு வினையல்லாத பெயர், இடை மற்றும் உரிச் சொற்கள் என்றும், 15 விழுக்காடுகளே வினைச்சொற்கள் என்றும் உங்களுக்குத் தெரியுமா? சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச் சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்ளுவதே என்று கேட்டிருக்கிறீர்களா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்று அறிவீர்களா? தமிழ் வட்டாரத்திற்கு வட்டாரம் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இந்தத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெல்லாம் செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை, அந்தக் குழந்தையின் பெற்றோர்களுடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத ஒரு குமுகாயத்தில், தமிழ் அறியாத ஒரு குமுகாயத்தில், வளர்த்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தமிழப் பிள்ளையாக அல்லாமல் வேறு வகைப் பிள்ளையாகத் தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? உப்பில்லாத நல்ல தண்ணீரில் வளர்ந்த ஒரு கெண்டை மீனைக் கொண்டு போய் உப்புங் கழியில் போட்டால் அது உயிர் வாழ முடியுமோ? பின் புலத்தை மீறிய ஒரு வாழ்வு உண்டோ ? ஊடகம், ஊடகம் என்று சொல்லி மொழியின் பங்கைக் குறைத்து விட்டோ மே? மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டு வருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத் தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்ட பின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல, வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ? இப்பொழுது நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து விட்டீர்கள், (அல்லது ஈழத்தில் பிறந்து விட்டீர்கள்), அல்லது வேறு நாட்டில் பிறந்தும் உங்கள் பெற்றோர் தமிழ்ப் பின்புலத்தை விடாது காப்பாற்றி வருகிறார்கள், இந்த நிலையில் நீங்கள் தமிழை விட முடியுமா? ஒன்று கிணற்றைத் தாண்டாமல் இருக்கலாம், அல்லது முற்றிலும் தாண்டலாம்; இடைப் பட்ட நிலையில் பாதிக் கிணற்றைத் தாண்டி உயிர் வாழ முடியுமோ?

தமிழும் அது போலத் தான். தமிழ் என்னும் பின்புலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், இலக்கணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. அவற்றைத் தெரிந்து கொள்ளாமல், தமிழ் அறியாதவனாக இருக்கலாம்; அல்லது தெரிந்து கொண்டு, தமிழ் அறிந்தவனாக இருக்கலாம். இடைப் பட்ட நிலை என்பது ஒருவகையில் திரிசங்கு சொர்க்கமே! தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா, நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்று தானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்? குழந்தையாய் இருந்த போது, கற்றுக் கொண்ட "நிலா! நிலா! ஓடி வா" வையும், "கை வீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? ஆத்திச் சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் இருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இந்தக் கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீர்களா? கொஞ்சம் மு.வ., கொஞ்சம் திரு.வி.க. படித்திருக்கிறீர்களா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, லா.ச.ரா, செயகாந்தன் படித்திருக்கிறீர்களா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீர்களா? (ஈழத்தார்கள் இதற்கு இணையான செய்திகளை நினைவில் கொள்ளுங்கள்; நான் இங்கே தமிழ்நாட்டுச் செய்திகளைச் சொன்னது திருவாரூர் நிகழ்ச்சிக்காக.)

தமிழ் சோறு போடுமா என்று சிலர் கேட்கிறார்கள்; தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; தமிழ்த் தாளிகைக் காரருக்குச் சோறு போடக் கூடும்; இன்னும் ஒரு சிலருக்கும் சோறு போடக் கூடும்; ஆனால் பொதுவான மற்றவருக்குச் சோறு போடா விட்டாலும், சிந்தனையைக் கற்றுக் கொடுக்கிறது என்று அறிவீர்களா? மேலே நான் சொன்ன தமிழ் ஆக்கங்களை எல்லாம் படிக்கும் போது, தமிழ் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? ஏரணம் என்பது சிந்தனை வளர்ச்சியில், காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்ளுவது ஓரளவு முடியும் என்றாலும் தாய் மொழியில் கற்பது எளிது என்று அறிவீர்களா?

சிந்தனை முறை கூட மொழியால் மாறுகிறது என்று அறிவீர்களோ? "நான் அவனைப் பார்த்தேன்" என்று சொல்லும் போது, கொஞ்சம் நின்று, எண்ணிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கிறது அல்லவா? செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிலைப் படுத்திப் பிறகு தானே வினையைச் சொல்லுகிறோம்? இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழிய மொழிகளில், இந்தச் சிந்தனை முறை இயல்பானது. இதை SOV (Subject - Object - Verb) என்று மொழியியலார் சொல்லுவார்கள். மாறாக மேலை மொழிகளில் SVO - "நான் பார்த்தேன் அவனை" என்ற முறையில் வாக்கியத்தை அமைக்க வேண்டும். SOV சிந்தனை முறை இருக்கும் ஒருவன், SVO பழக்கம் இருக்கும் ஒருவனைச் சட்டென்று புரிந்து கொள்ளுவது கடினமே. சப்பானியர்கள் முற்றிலும் SOV பழக்கம் உடையவர்கள். அவர்கள் வெள்ளைக் காரர்களைப் புரிந்து கொள்ளுவதும், வெள்ளைக் காரர்கள் சப்பானியரைப் புரிந்து கொள்ளுவதும் மிகக் கடினம் என்பார்கள். அதே பொழுது நாம் ஓரோ முறை இலக்கியத்தில் SVO முறையைப் பயன் படுத்துகிறோம். சீதையைப் பார்த்து வந்த சேதியைச் சொல்லும் அனுமன் இராமனிடம் சொல்லுவதாகக் கம்பன் சொல்லுவான்: "கண்டேன் சீதையை". இது போன்ற சொல்லாட்சிகள் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு. அதாவது பெரும்பான்மை SOV என்றே சிந்திக்கும் நாம், ஓரோ முறை SVO என்றும் சிந்திக்கிறோம். இந்தியர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் பாலமாக இருப்பது இதனால் தான் போலும். என்ன சொல்ல வருகிறேன் என்றால் நம் மொழி நம் சிந்தனையைக் கட்டுப் படுத்துகிறது. "நீ உன் பெற்றோருக்கு எத்தனாவது பிள்ளை?" என்ற கேள்வி தமிழில் மிக இயல்பாக எழும். ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்துத் தான் சொல்ல இயலும். இது போல ஆங்கிலத்தில் சொல்லுவது சிலபோதுகளில் தமிழில் நேரடியாகச் சொல்ல முடியாது.

இந்தச் சிந்தனை ஒரு வகையில் பார்த்தால், பண்பாட்டு வருதியானது; மொழி வருதி(=ரீதி)யானது. இதில் ஒரு மொழியின் வருதி உயர்ந்தது; இன்னொரு மொழியின் வருதி தாழ்ந்தது என்பது தவறான கூற்று. நம் வருதி நமக்கு உகந்தது என்பதை நாம் உணரவேண்டும்; இன்னும் சொன்னால், தமிழ் என்னும் வருதி, தமிழனுக்கு ஒரு அடையாளம்; ஒரு முகவரி. தமிழ் நமக்கு இதைத்தான் கொடுக்கிறது.

சரி, தமிழுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? அதாவது பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருவோம்? இருக்கின்ற சொத்தோடு கூட. நாம் என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக் காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன் பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கி வைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்ல வில்லை என்றால் தமிழ் குறை பட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று, இன்னும் ஒரு தலை முறையில் அழிந்தே போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி, நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?

இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேட வேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.

தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர்கள். இந்தக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீங்கள் ஒத்துழைத்தால்.

செய்வீர்களா?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 21, 2006

கணி

ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1999 பெப்ரவரியில், தமிழ் இணையம் மடற்குழுவில், "கணினி, கணிணி, கணிப்பொறி என்றெல்லாம் எழுதுகிறார்களே? கம்ப்யூட்டரைத் தமிழில் எழுதுவது எப்படி?" என்று திரு இண்டி ராம் கேட்டிருந்தார். அதற்கு நான் எழுதிய மறுமொழி சற்று திருத்திய விளக்கங்கங்களோடு இங்கு கொடுத்திருக்கிறேன். மட்டுறுத்தலை (to moderate) ஏற்றுக் கொண்ட தமிழ்கூறு நல்லுலகம் இதையும் ஏற்குமா?
-----------------------------------------------
"கணினி, கணிணி, கணிப்பொறி" எனப் பல காலம் குழம்பிக் கொண்டே இருக்க வேண்டாம் என்பது என் கருத்து. சொல்ல எளிதாய்க் "கணி" என்றே சொல்லலாம்.

தமிழிணையம் 99 - கருத்தரங்கில், அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தார், தங்களின் "கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி"யை வெளியிட்டனர். நல்ல முயற்சி; அதில் இருந்து எடுத்துக் காட்டாக ஒரு 10 சொற்களை இங்கே கொடுத்திருக்கிறேன்

computer jargon - கணிப்பொறிக் குழுமொழி
computer network -கணிப்பொறி வலையமைப்பு
computer operations -கணிப்பொறிசார் செயல்பாடுகள்
computer program -கணிப்பொறி நிரல்
computer security -கணிப்பொறிக் காப்பு
computer simulation -கணிப்பொறிப் பாவனை
computer utility -கணிப்பொறிப் பயனமைப்பு
computer aided design -கணிப்பொறிவய வடிவமைப்பு
computerisation -கணிப்பொறிமயமாக்கல்
computer phobia -கணிப்பொறி அச்சம்

இந்தக் கூட்டுச் சொற்களில், "ப்பொறி" என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டுப் படியுங்கள்; உடனே, இந்தக் கூட்டுச் சொற்கள் சொல்வதற்கும் எளிதாக இருக்கும்; பொருளும் மாறு படாது. (நான் மேலே உள்ள சொற் தொகுதிகளில் கணிப்பொறி என்ற சொல்லிற்கு அப்புறம் அடுத்து வரும் சொற்களைப் பற்றி இங்கு முன்னிகை - comment - அளிக்கவில்லை.) [பொதுவாகத் தமிழில் ஈரசைச் சொற்களே மேலோங்கும். ஓரசைச் சொற்கள் கூட்டுச் சொற்களுக்கு முன்னொட்டாய்ப் புழங்கத் தொடங்கும். மூவசைச் சொற்கள் ஓரோ வழி நிற்கும். மூவசைக்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் மிக மிக மிக அரிதாகவே இருக்கும். யாப்பில் கூடத் "தேமாநறுநிழல்" போன்ற நாலசை வாய்ப்பாடுகள் அரிதிலும் அரிது.]

ஒரு காலத்தில், கிட்டத் தட்ட 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, electricity-யைப் பற்றித் தமிழில் எழுதியபோது, "மின்சாரம்" என்றே எழுதியதால், பிறகு, electrical என்ற முன்னொட்டு வருகின்ற நூற்றுக் கணக்கான அறிவியற் சொற்களைத் தமிழில் எழுதப் பலரும் தடுமாறிக் கொண்டிருந்தது உண்டு. பின் யாரோ ஒருவர் "சாரம்" தவிர்த்து "மின்" என்று சுருக்கி எழுத ஆரம்பித்தார். திடீரென்று எல்லாமே எளிதாயிற்று. ஆற்றொழுக்குப் போல் எல்லோரும் மின்கலம் (electrical battery), மின்சுற்று (electrical circuit), மின்னாக்கி (electrical generator), மின்னோடி (electrical motor), மின்மாற்றி (electrical transformer) என்று எழுத ஆரம்பித்தார்கள். தமிழின் நீர்மை (flexibility) அப்பொழுதுதான் எல்லோருக்குமே விளங்கிற்று. இங்கே "மின்" என்ற குறுஞ் சொல்லே உட்கருத்தைக் கொண்டு வந்து விடுகிறது அல்லவா? அதற்குப் பின் "சாரம்" எதற்கு? (மின் என்பது முதலில் ஒளி என்பதைக் குறித்திருத்தாலும், வழி நிலைப் பொருளாய்ப் பின்னாளில் electricity என்பதைக் குறிக்கிறது. இது போன்ற வளர்ச்சிகள் எந்த ஒரு மொழியிலும் நடப்பதே. மொழி பேசுபவர்கள் புதுப் பொருளைப் புரிந்து கொண்டு புழங்கத் தொடங்கி விட்டால் வழி நிலைப் பொருட் பாடுகள் - derived meanings - நிலைத்து விடுகின்றன. இன்றைக்கு மின்னுதல் என்னும் போது ஒளிர்ந்தது என்றும், மின்பாய்ந்தது என்னும் போது electricity சென்றது என்றும் தானே புரிந்து கொள்ளுகிறோம்? அப்புறம் "சாரம்" எதற்கு?)

இது போல computer - க்கு "கணி" என்றே சொல்லலாம் என்பது என் கருத்து. "கணி" என்ற குறுஞ் சொல்லே வினையாகவும், பெயராகவும், முன்னொட்டாகவும் இருக்க முடியும். "னி","ணி", "ப்பொறி" என்பவை வெறும் ஒன்றிரண்டு எழுத்துக்களே ஆனாலும் தேவையற்றவை. பலுக்க எளிமை என்பது முகமையானது. சுருங்கச் சொல்லிப் பெருக விளக்குவது நல்லதல்லவா? பொதுவாக, ணகரமும், னகரமும் அடுத்தடுத்து வரும்போது இரண்டாவதாய் வரும் னகரம் மெய்யாகவோ, அல்லது குற்றியலுகரமாகவோ வரவில்லையென்றால் ஒலிப்பது பலருக்கும் கடினமாகவே இருக்கும்.

இது போன்று சுருக்க வேண்டிய இரு சொற்களும் உண்டு; அவற்றில் முதற் சொல் தொழில் நுட்பம் / தொழில் நுட்பவியல். technology - இதற்கு தொழில் நுட்பவியல் என்று பலரும் எழுதி வருகிறார்கள். என்னைக் கேட்டால் "நுட்பியல்" என்பதே technology - யைக் குறிப்பதற்குப் போதும்; "தொழில்" என்ற முன்னொட்டை விட்டு விடலாம். அதே போல, "நுட்பம்" என்ற சொல் technique - யைக் குறிக்க முடியும்.

நுட்பியல் = technology
நுட்பியலாளன் = technologist
நுட்பம் = technique
நுட்பாளன் = technician
நுட்ப மாற்றம் = technical change

இதே வகையில், இன்னொரு சொல்லையும் குறுக்க வேண்டிய காலம் வந்தாயிற்று. அலுவ(லக)ம் என்ற சொல்லில் உள்ள "லக" என்ற எழுத்துக்கள் நீக்கப் படலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. எங்கெல்லாம் அலுவலகம் என்று சொல்கிறோமோ அங்கெல்லாம் அலுவம் என்றே சொல்லலாம்; அப்படிச் சொல்லுவதால் கூட்டுச் சொற்களைப் பலுக்குவது எளிதாகும். அலுவச் செய்தி (office news), அலுவ வேலை (office work), அலுவக் கணி (office computer), அலுவர் (officer), அலுவ ஒருங்கம் (office organization) இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்புடன்,
இராம.கி

Monday, March 20, 2006

எழிற் கொள்ளை

பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா பாடுவது நம்மவருக்கு வழக்கம். அதன் தொடர்ச்சியாய், இந்தக் காலத் திரைப் பாக்கள் பலவற்றிலும் கூடக் கலிப்பாவின் தாக்கம் உண்டு. பலர் பாடும் இசைப் பாக்களும், இறைவனைப் பற்றிய கீர்த்தனைப் பாக்களும் கூடக் கலிப்பாவில் கிளைத்தவையே! (கலித்தம்>கயித்தம்>கீத்தம்>கீதம்; கீத்தம்>கீர்த்தம்>கீர்த்தனை.) அகத்திணைப் பொருளுக்கு மாறாக, ஒரு கலிப்பாவில், புறத்திணைப் பொருளை, புவியோடு நடக்கும் ஓர் உரையாடலை, அதுவும் கொள்ளை போகும் ஒன்றைப் பற்றிய அலசலை, "ஏன் வியந்தும் ஓர்ந்தும் சொல்லக் கூடாது?" என்ற உந்தலில், எழுந்த முயற்சி இது. சந்தவசந்தம் மடற்குழுக் கவியரங்கில் பாடியது.

"எது எழில்?" என்ற ஆறடித் தரவிற் தொடங்கி, (தரவு என்பது கலிப்பாவின் முதல் உறுப்பு; இது ஒரு preamble போல, கலிப்பாவில் முதலில் வந்து நிற்கும். தந்தது, தரப்பட்டது - எனவே இது தரவு. இந்தக் காலத்தில் புதிய விளக்கம் பெற்று, data என்ற சொல்லுக்கு இணையாய் தரவு என்ற சொல் ஆளப் படுகிறது.) பின்னர் தாழிசை வழி (இது தான் இந்தக் காலச் சரணங்கள்; தாழப்பட்ட இசை தாழிசை; தோய்ந்து, ஆழ்ந்து பாடப்படும் இசை; சரணம் என்ற பொருளும் இது தான்.), பல்வேறு கேள்விகளைத் தொடுத்து, எழிலின் அடியோசையான ஒழுங்கின் பங்கை ஓதி, "மாந்தன் இடை உறாவிடின் (இடையுறுதல் = to intervene) எந்த ஒழுங்குமே தன் கட்டுக் குலைந்து, முடிவில் கொள்ளை போகும்" என்ற கருத்தை விதந்து சொல்லி, மாந்தப் பட்டறிவாகிய தெறுமத் துனவியல் (thermodynamics) இரண்டாம் விதியை அடிநிலையாக்கி, அம்போதரங்கமாய், (அம்போ தரங்கம் = கடற்கரையில் மாறி மாறிக் கரை தேடி வரும் நீர் அலைகள்; அவற்றின் அளவு பெரியதில் இருந்து சிறியதாய்க் குறைந்து கொண்டே வரும்.) ஆடி, அசைந்து, நுரைத்து, பெரிதில் இருந்து சிறிது சிறிதாய், மீண்டு மீண்டும் கரை தொடும் எண்களாய்(1)ச் சுரித்து (சுரிதல் = சுழித்தல்; கடலில் அலை சுழித்து வருகிறது, பாருங்கள் அது போல; சுழிப்பு - சுரிப்பு - என்பதைத் தான் surge என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.) வந்து, சுரிதகத்தில் இற்றி (இற்றுதல் = to end; ஈறு = end), எழிலின் ஐநிலைச் சுழற்சியை உரைத்து, தெளிவது நம் விதப்பு என்று சொல்லி, இந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா முடிகிறது. பலருக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால், பொருள் புரிவதற்காக, கலிப்பாவின் சீர்களை இங்கு புணர்ச்சி பிரித்தே கொடுத்துள்ளேன்; அதே பொழுது புணர்ச்சி சேர்ந்தால் தான், உள்ளே இருக்கும் துள்ளலோசை புலப்படும். பாவின் முடிவில் கீழே, அதன் அடி நிலைக் கருவும், அருஞ் சொல் அடைவும், கொடுக்கப் பட்டுள்ளன. பாவை ஒரு முறைக்குப் பல முறை படியுங்கள்; கொஞ்சம் பலாப் பழம் போல இருக்கக் கூடும்; பொதுவாக, மெனக் கெடாமல் பலாவைச் சாப்பிட முடியாது. ஆனாலும் பலா இனியது. கலிப்பாவும் அப்படித் தான்.

(தரவு)

ஒழுங்கு அற்ற மனை துலக்கி, ஒட்டடையின் மடை(2) ஒழித்து,
அழுங்கு உற்ற கறை தொலைத்து, அடர் துகளைத் துடைத்து எறிந்து,
எளியதுவோ, பலக்கிய(3)தோ, இடைப் படவே உகப்பு(4) எடுத்து,
உளது அனையும் அடங்கல்(5) இட்டும், ஒளி கூட்டிப் பொலிவு உறவே,
விழையோர்கள் மயல் உறவே, வியல்(6) எங்கும் செயல் அறவே,
எழில் என்று இவண் தரவே, ஏல்ந்தனையோ இது வரையே!

(தாழிசை)

குறையாது ஓர் அண்ணம்(7), மிகையாது ஓர் அண்ணம்,
நறுவியதாய்(8)ச் செய்நேர்த்தி(9) நாட்டுவதால், எழிலாமோ?
உறு நேர்த்தி உணருதலும், ஒரு வகையில் எழிலாமோ?
குறுகு இலக்கில் (10) ஒழுங்கு அமைந்தால், கோளகை(11)யில் எழிலாமோ?

இயலுவதும்(12), வழக்கு ஊன்றின், எமை ஈர்க்காது எனும் போது,
இயலுகின்ற அனைத்திற்கும் ஒளி கூட்டின், எழிலாமோ?
புது மழையும், கதிர்த் தோற்றும், புழை நீரும், கதிர்ச் சாய்வும்
முது கொன்றை விழி மலர, முகிழ்ப்பதுவும் எழிலாமோ?

கவன முறை குறையாமல், கட்டு குலை ஆகாமல்(13),
சிவணுகிற(14) பட்டவங்கள்(15), செறிவதுவும் எழிலாமோ?
அழகியதாய் உள எல்லாம் அழிவதுவே நிலை என்றால்,
பழகியதாய்க் கணப் பொழுதில் படும் உணர்வே எழிலாமோ?

(அம்போதரங்கம்)

(பேரெண்)

தெறுமிய துனைவியல்(16) திகை(17) தரும் விதி வழி,
குறைவது எழில் எனில், குலைவது ஒழுங்கமை(18);
இடம் எது? இருப்பு எது? இலகு இடும் திணை எது?
இடை உற மனிதர்கள் இல எனில், எழில் இலை(19);

(சிற்றெண்)

கொளுவதும் இகுவதும்(20) கொள்ளையில் இரு வகை;
கொளுவது மகிழ் எனில் கொடு தரல் துயரமோ?
எழில் தனைக் கொளுவதால் ஏற்படும் வெறிச்சியே!
சுழிவதும் நெகிழ்வதும் சூழமை(21)ச் சிக்கலோ?

(இடையெண்)

புனை(22) தொறும் பிறப்பதோ?
வினை தொறும் செறிவதோ?
மனந் தொறும் நிறைவதோ?
கணந் தொறும் அகல்வதோ?

(அளவெண்)

எல்லையோ(23)? அழகிதோ(23)? இலகிதோ(23)? குழகிதோ(23)?
ஒல்லையோ(23)? உலகிதோ(23)? ஒளியதோ(23)? கொழியதோ(23)?

(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்)

"எழிலெது?" வினவின், ஏற்பவர் விழியில்(24);
"எழிலெது?" பரவின், இயல்பவர் கரத்தில்(25);
"எழிலெது?" தொடுவின், இழுப்பது நொசியில்(26);
"எழிலெது?" நுகரின், எழுவது இதழில்(27);
"எழிலெது?" முரலின், இணைவது செவியில்(28);
எழில் இவண் சுழற்சி இயல்பென(29) ஆகக்
கொழிவதும்(30) தெளிவதும் கொள்பவர் விதப்பே!

பாவின் அடிநிலைக் கரு:

Entropie der welt strebt einem maximum zu.
உலகின் உட்திரிப்பு(31) ஒரு மீ நிலை(32)யை எட்டுகிறது.

- ருடால்வ் கிளாசியசு Rudolph Clausius (1822-1888)

அன்புடன்,
இராம.கி.

அருஞ்சொல் அடைவு:

1. எள்>எண் = எடுப்பு, எழுப்பு. எள்+து = எட்டு = step; அலை எழுகிறது; அலை எட்டுகிறது என்ற சொல்லாட்சிகளை ஓர்ந்து பார்க்கலாம். அம்போதரங்கத்தில் எண்கள் வருவது இப்படி எட்டுவதால் தான். அலைகள் என இங்கு அடிகள் எட்டி எட்டி வருகின்றன. அலைகளின் அளவைக் குறிப்பது போல் எண் கணக்கும் உள்ளிருப்பது இன்னொரு பார்வை.
2. மடை = மடங்கிப் பெருகியிருப்பது (மடை மடையாக் கிடக்கு, பார்த்தியா? - என்பார்கள்)
3. பலக்கியது = complex (மாறாக எளியது என்பது இங்கு elementary/simple என்பதைக் குறிக்கும்.)
4. உகப்பு = option
5. அடங்கல், அடங்கு = arrangement
6. வியல் = வெளி = space
7. ஓரண்ணம் = one measure; அண்ணம் என்ற சொல் இன்றும் மலையாளத்தில் பயில்வது
8. நறுவியது என்பதை நறுவிசு என்று சிவகங்கைப் பக்கம் பேச்சு வழக்கில் சொல்லுவார்கள்; கிட்டத்தட்ட cut and right or perfection என்ற ஆங்கில சொற்றொடருக்குப் பொருந்தக் கூடிய சொல்லாட்சி
9. செய்நேர்த்தி = efficiency; பலபோதுகளில் நேர்த்தி என்ற சொல்லே சாலும். செய் என்னும் முன்னொட்டுத் தேவையில்லை.
10. குறுகு இலக்கு = narrow local region.
11. கோளகை = global; பகுவல் தேற்றின் படி, குறுகிய இலக்களவில் ஒழுங்கு அமைந்தால், அந்த ஒழுங்கு வெவ்வேறு படிமானங்களில் திரும்பத் திரும்ப அமையுமானால், அழகான பட்டவங்கள் கோளகை அளவில் ஏற்படும் என்று சொல்லுவார்கள். (according to fractal theory, if there is order in the local region, and when the order repeats at various levels of magnitude, you get globally beautiful patterns). மலையும், மடுவும், ஆறும், அருவியும், குளமும், ஏரியும், காடும், வயலும், கடலும், கரையும், மொத்தத்தில் ஐந்திணைகளையும், ஏன் இந்தப் பேரண்டத்தையுமே, பகுவலாய்ப் (பகுவல் = fractal) பார்ப்பது அண்மைக்கால அறிவியற் போக்கு.
12. இயலுவது = one which happens; இங்கே இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு காட்டாமல் பொதுவாகப் பேசப்படுகிறது.
13. கட்டுக் குலைதல் = disintegration
14. சிவணுதல் = பொருந்துதல்
15. பட்டவங்கள் = patterns
16. தெறுமத் துனவியல் = thermo dynamics; (தெறுமத் துனைமவியல் என்பதை தெறுமத் துனவியல்  என்று சுருக்கினேன். துனைவு>துனவு = விரைவு; "கதழ்வும் துனைவும் விரைவின் பொருள" (தொல்.சொ:8:7, "துனைவு நொறிலும் விசையும் முடுகலும் வேகமும் விரைவே" பிங்கலம் : 2194)
17. திகை = direction
18. ஒழுங்கமை = orderliness; ஒழுங்காமை = disorderliness;
19. It may look surprising; but without human intervention, there is no beauty.
20. இகுதல்>ஏகுதல் = போதல்; to go என்ற ஆங்கில வினையோடு இணையாக உள்ள சொல்.
21. சூழமை = environment
22. புனைதல் = to imagine
23. எல்லை, இலங்கு > இலகு, குழகு, ஒல்லை, உலோகு > உலகு, கொழிது - என்று இங்கு கூறப்படும் எல்லாமே ஒளியைக் குறிக்கும் மாற்றுச் சொற்கள். மாந்தப் பட்டறிவின்படி, ஒளிகூடிய எல்லாமே எழிலானவையாக ஒரு சாயலில் தென்படுவது உண்டு. எழில் என்ற சொல்லுக்கே ஒளியுள்ளது என்ற பொருள்தான் உண்டு. That which is bright is எழில். எல்>எழு>எழில்
24. beauty is in the eye of the beholder.
25. பரவுதல்>பார்த்தல்; when you see beauty, you understand the dexterity of hands that stand behind it.
26. one can smell a beauty, if there is one; நுதி>நுசி>நொசி = மூக்கு; நொசி நாசியாய் (nose) இந்தையிரோப்பிய மொழிகளில் திரியும்.
27. when you smell a beauty, your saliva swells
28. when you describe a beauty, your ears are attentive. முரலுதல் = சொல்லுதல், பேசுதல், ஓசை எழுப்புதல்
29. beauty is in the nature of going round and round in a circle as above
30. கொழிதல் = panning; வீடுகளில் அரிசி, பருப்பைச் சுளகில் போட்டுப் புடைக்கிறோமே, அதுவும் கொழித்தல் தான். தங்கம் காண்பதும் கொழித்தல் தான். கொன்றை பற்றிய என் முன்னாள் கட்டுரையில் இதைப் பேசியிருக்கிறேன்.
31. உட்திரிப்பு = entropy - 1868, from Ger. Entropie "measure of the disorder of a system," coined 1865 (on analogy of Ger. Energie) by physicist Rudolph Clausius (1822-1888) from Gk. entropia "a turning toward," from en- "in" + trope "a turning."
உட்திரிப்பு என்ற சொல்லை விளக்கும் போது ஒழுங்காமை (= disorderliness) என்றும் சொல்லலாம்; உள்ளாற்றல் = internal energy.
32. மீநிலை = maximum

Sunday, March 19, 2006

சமயம்-6

இனிச் சமயத்தோட தொடர்பு கொண்ட சொற்களைப் பார்ப்போம்.

சமயக்கட்டு = மதக் கட்டுப் பாடு
சமயம் இருத்தல் = ஓலக்கம் இருத்தல் (இங்கே பார்த்தால் நொதுவல்- neutral- ஆன பொருள் விளங்கும். சம்மணம் போட்டு திருவோலக்க மண்டபத்துலே உட்கார்ந்து இருக்குறதே, சமயம் இருத்தல் ஆகும்.)

சமாதி = மனத்தைப் பரம்பொருளோடு ஒன்றுபடுத்தி நிறுத்துகை (சமாதி வடமொழின்னு நினைச்சுக்கிட்டு ருக்கோம்.; அதன் ஈறு 'ஆதி'தான் வடமொழி. இது ஓர் இருபிறப்பிச் சொல்.)
சமாதிக் குழி = நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர்களைப் புதைக்கும் குழி.
சமாதி நிலை = யோக நிலையில் அமர்தல்
சமிதி = சபைக் கூட்டம் (இதுவும் தமிழோடு தொடர்பு கொண்ட ஒரு வடமொழிச் சொல்.)
சமைதல் = ஆயுத்தமாதல், அமைதல், பொருத்தமாதல், தொடங்குதல், நிரம்புதல், புழுங்குதல், அழிதல், முடித்தல், பூப்படைதல்
சமைவு = நிலைவு, அழிவு, மன அமைதி
சவை = கூட்டம்
சமயம் = மதம், நூல், மரபு, சமய தீட்சை
= காலம், தருணம், அவகாசம்
சம்மயம் = சமயம் = உடன்படிக்கை

சும்மா = தொழில் இன்றி, இயல்பாய், அமைதியாய், வறிதாக, காரணம் இன்றி

சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) அல்லது மாந்தன் இறைவன் திருவடிகளை அல்லது வீட்டின்பத்தை அடையச் சமைவாகும் (தகுதியாகும்) நிலைமை. அந் நிலைமைக்குரிய ஒழுக்க நெறி. (இந்தப் பொருள் கருத்தியல் வாத வழியைச் சொல்றது. பொருண்மை வாத வழியைச் சொல்றது அல்ல. அதாவது இயல்புப் பொருள் அல்ல; தருவிக்கப் பட்ட பொருள்.)

"நேரத்தைக் குறிக்குஞ் சொல் வடிவில் மகர ஐகாரமும், மதத்தைக் குறிக்குஞ் சொல்வடிவில் மகரமும், வரல் வேண்டும் என வேறுபாடு அறிக. வடமொழியில் மகரமுள்ள வடிவேயுண்டு. அமையம் என்ற முலச் சொல்லும் அங்கில்லை. வடவர் ஸமய என்னுஞ் சொல்லை ஸம்+அய என்று பகுத்து, உடன்வருதல், கூடுதல், இணங்குதல், உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு, ஒழுங்கு, மரபு, அட்டம், நெறி, மதம் என்று பொருள் வரிசைப் படுத்துவர். ஸம் = கூட; அய = இயக்கம், செலவு, வருகை. இது இய என்னும் தென் சொற் திரிபாகும் " - அப்படின்னு பாவாணர் சொல்லுவார்.

சிவ நெறி நோக்குலே பார்த்தா சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்னும் ஆறும் அகச் சமயங்கள்; உலகாய்தம், மீமாஞ்சை, புத்தம், ஆருகம் (சைனம்), மாயாவாதம், பஞ்ச ராத்திரம் ஆகிய ஆறு கொள்கைகளும் புறச் சமயங்கள்.

ஒரு வியப்பு என்னன்னா, விண்ணெறியை மற்றொரு சமயம்னே சிவ நெறி நினைக்கலே! அது ஏன்? தெரியலை. ஆசீவகத்தையும் மேலே சொல்ற வரிசையிலே விட்டுட்டாக! ஒருவேளை இந்த வாசகம் ஏற்பட்ட போது ஆசீவகம் என்பதே சுத்தமா அழிஞ்சு போச்சோ, என்னவோ?

அண்ணாச்சி, நிரம்பவே சொல்லியாச்சு! அதே சமையம், இன்னுஞ் சொல்லலாம்! அளவுக்கு மிஞ்சினா அமுதும் நஞ்சுன்னு சொல்லியிருக்காக! இப்போதைக்கு நிப்பாட்டிக்கிருவோம். இன்னொரு தடவை பார்க்கலாம் அண்ணாச்சி! ஒரு வாட்டி, கடம்பு பத்திச் சொல்றேன்னு சொன்னேன். ஆனா இன்னும் முடியலை. திணறிக்கிட்டே இருக்கேன்.

வரட்டுமா?

அன்புடன்,
இராம.கி.

Saturday, March 18, 2006

சமயம்-5

இந்த இடத்துலே சமணம் பத்தி ஒன்றிரண்டு சொல்லணும்.

இந்தியத் துணைக்கண்டத்திலே முதல்லே ஒருங்கமைப்பு (organization) வகையா, மெய்யியல் (philosophy) பற்றி வாதம் எழுப்பிப் பரவிய மதம் சமணம் தான். அதுவரை சிவநெறி, விண்நெறி, காளி வழிபாடு, சிறுதெய்வ வழிபாடுகள், வேள்வி முறைகள்னு பல வழிபாட்டு முறைகள் இங்கு இருந்தன. ஆனா, மெய்யறிவியல் நூல்கள் உண்டாகலை. முதல்முதலா, உலகாய்தமும், ஆசீவகமும், சாங்கியமும், பின் சமணம், புத்தம் போன்றவைதான் இப்படிக் கேள்விகளே எழுப்பத் தொடங்கின. இதற்கு விடை சொல்ற படிதான், மீமாஞ்சை, உவநிடதம் போன்றவை எழுந்தன. மெய்யறிவியல் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாச்சு.

ஓகி என்பவன் அறிவு சார்ந்தவனாய், மெய்ம்மை காட்டுபவனாய், வழிபாடு மட்டும் அன்றி ஞானம் போதிப்பவனாய் காட்சி யளிக்கத் தொடங்கியது மகாவீரர் காலத்திலே தான். இதில் பலரும் தெற்கத்தி ஆட்களா இருந்தாங்க. பக்குடுக்கை நன்கணியார் (புறநானூற்றுப் புலவர்; இவரைப் பக்குட கச்சாயனார் என்று பாகத நூல்கள் பேசும்), மற்கலி கோசலர், பூரண காயவர், அசித்த கேசக் கம்பலர், கணியாதன், நந்த ஆசிரியன் எனப் பலரும் இங்கிருந்து போனவுகளாகத் தான் காட்சி அளிக்கிறாக. மகாவீரரும், புத்தரும் கூடத் தமிழ் படிச்சாகன்னு அவுகளுடைய வரலாறு கூறுது.

ஏது / ஏரணம் படிக்கக் காஞ்சிக்குப் பலர் வந்த கதை பாகத நூல்களெப் படிச்சாத் தெரியுது. ஒருபக்கம் பாகதத்திலும், மறுபக்கம் தமிழியிலுமாகச் சாதவாகன மன்னன் ஒருத்தன் நாணயம் வெளியிடிருக்கான்னா, தமிழ் என்கிற மொழி நாவலந்தீவுக்குள்ளே ஒரு காலத்துலே பெரிசாப் பரவிய அனைத்துநாட்டு மொழியாக இருந்திருக்கோணும். இந்த உண்மை விளங்காம இன்னைக்குப் பலர் இருக்காக. இந்தியத் தன்மைன்னு சொல்ற பலதுக்குள்ளே தமிழியம்கிற வேர் இருக்கு. அதைக் கண்டுபிடிச்சுப் புரிஞ்சுக்க ஒரு பக்குவம் வேணும்.

சமணரின் தாக்கம் தமிழ்நாட்டிலும் கருநாடகத்திலும் கூடவே இருந்துச்சு; திருஞான சம்பந்தர், அப்பரின் தாக்கத்திற்குப் பிறகும் சமணம் தமிழ் நாட்டுலே மிஞ்சியிருக்கு. குறிப்பாத் திருவண்ணாமலைக்குப் பக்கம்; புத்தம் தான் மாணிக்க வாசகருக்கு அப்புறம் அடியோட தமிழ்நாட்டுலே கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிருச்சு. ஆசீவகம், சாங்கியம் தமிழ்நாட்டுலே இருந்த இடங்கள் நமக்கு இப்பத் தெரியலை; உலகாய்தம் இருபதாம் நூற்றாண்டிலே தான், பெரியார் வழியிலே, மீண்டும் பசக்குன்னு திரும்பி வந்துச்சு.

ஆக, சம்மணித்து ஓகிய நிலை சமண நிலை; மகாவீரர், புத்தரின் சிற்பங்கள் சம்மணித்த நிலையிலே தான் பெரும்பாலும் இருக்கும். "வள்ளுவத்தின் வீழ்ச்சி" என்ற நூலில், வெங்காலூர் குணா குறிப்பிடுவார்:
------------------------------------
"மற்கலி கோசலர் கைகளைத் தூக்கிப் பிடித்த வண்ணம் வெயிலில் நின்ற வாறே தவம் செய்து வந்தவராம். பகவதி சூத்திரம் என்னும் சைன நூலை காட்டி அதைக் குறிப்பிடுவர். அவ்வாறு தவம் செய்கையில் அவர் ஆறு வேளைகள் உண்ணவே மாட்டாராம். மொச்சைக் கொட்டையும் அரிசிக் கஞ்சியும் மட்டுமே அவரது உணவாம். தவத்தைத் தொடங்குவதற்கு முன் ஒரு வாய் நீரை மட்டுமே குடித்துவிட்டு அவர் ஒரு முறை ஆறு திங்கள் வரை கடுந்தவம் செய்தாராம். இதன் விளைவாக, இறுதியில் உக்கிரமான ஓர் ஆற்றலை அவர் பெற்றாராம். ஆசீவகர், சம்மணம் கொட்டிய (கொள்ளுதல் என்பது கொண்டுதல்/கொட்டுதல் என்றும் பலுக்கப் படும்; இன்றைக்கும் எங்கள் ஊர்ப் பக்கம் சம்மணம் கொட்டு என்றுதான் சொல்லுவார்.) நிலையில் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு கடுந்தவம் புரிந்து வந்தனர். இதை அவர்கள் சம்மணத் தவம் என்றனர்.

பாழி (பாளி), பாகதம் (பிராகிருதம்) முதலான வடமொழிகளில், துறவிகளைப் பொதுவாக 'சமண' என்றழைப்பதே மரபு. ஆனால், 'சிரமண (Sramna) என்னும் சங்கதச் சொல்லில் இருந்தே 'சமணன்' என்னும் தமிழ்ச் சொல் வந்தது என்பது ஒரு தலைகீழ்ப் பாடம். அது போலவே அம்மணமான நிலையில் துறவிகளாக இருந்தவர்கள் அமணர். ஆசீவகத் துறவிகளும் அம்மணமானவர் என்பதாய் "ஆசீவகன் அமணர்களில்" எனச் சிவஞான சித்தியார் கூறும்.(இது உறுதியில்லை. மேற்கொண்டு ஆய்வு வேண்டும்,)

சம்மணத் தவம் போக, முள்படுக்கையின் மீது கிடந்த வண்ணம் ஆசீவகர் செய்து வந்தது முள்தவமாம். ஐந்து நெருப்புகளுக்கிடையில் அமர்ந்த வண்ணம் ஆற்றி வந்த தவம் 'ஐந்தீத் தவ'மாம். பேசாமை, அசையாமை, காலை மடித்துக் குந்தியிருத்தல், கழுத்துவரை மண்ணில் புதையுண்டு நிற்றல் போன்ற கடுந்தவங்களையும் கூட ஆசீவகர் செய்து வந்தனராம். வவ்வால் தவமும் உண்டு. பெருந்தவம் செய்து வந்த ஆசீவகரை மாதவர் என்றனர்."
-----------------------------------------------
முடிவில் சமண நிலைங்குறது பக்குவப் பட்ட, ஒன்றுபட்ட தவ நிலை என்று தான் பொருள் கொள்ளோணும். சமணங்கிறது சைனத்தையும் ஆசீவகத்தையும், (ஓரோவழி புத்தத்தையும்) சேர்த்துச் சொல்ற ஒண்ணு,

ஆசீவகம் என்பது நம்பா மதம். அருகம்(சைனம்) என்பது நம்பும் மதம்.
இதுபோல சாங்கியம் நம்பா மதம்; புத்தம் நம்பும் மதம். உலகாய்தம் நம்பா மதம்; சிவநெறியும் மால்நெறியும் நம்பும் மதங்கள்.

இன்னைக்கு இவையெல்லாத்திலும் ஒண்ணுக்குள் ஒண்ணாய் கருத்துக்கள் புகுந்தும் வெளிப்பட்டும் வந்திருக்கு. மெய்யறிவியல் கலவையாகத் தான் இன்னைய நெறிகள் இருக்கு.

இடையிலே குணாவின் பொத்தகத்திலேர்ந்து தெரிஞ்ச இன்னோரு செய்தி:

பொதுவுடைமைப் பேராளர் காரல் மார்க்சு தன் நூல்களில் ஒரிடத்திலே, கிரேக்க அறிஞர் டெமாக்கிரட்டசு நாடுவிட்டு நாடு திரிஞ்ச போது இந்தியா வந்து இங்குள்ள ஓகிகளைக் கண்டு அவர்களிடம் இருந்து அரிய பலவற்றைக் கத்துக்குனது பற்றிக் கூறுவார்.

இந்த ஓகிகளை gymnosophists-னு கிரேக்க மொழியிலே சொல்லுவாக. அதுக்கு "one of the ancient Hindu (?) philosophic sect going naked and given to contemplation, mystic and ascetic" னு பொருள் கொள்வாக. கிரேக்க மொழியில் gumnos-னா 'அம்மணம்'னு ஆகும்.. திக்கையே அம்பரமாக அடையாகக் கொண்டவகளைத் திகம்பர சமணர்கள்னு நாம சொல்றோமில்லையா? ஆசீவகர்களையும் சமணரின் ஒரு பிரிவாகத் தவறாக எண்ணுவது உண்டு. ஆசீவகம் தமிழ் நாட்டிலேயே எழுந்த ஒரு மெய்யறிவியல் போக்கு. அவுகளும் கோவணாண்டிகள் தான். (அவுகள்லே ஒருத்தர்தான் மகாவீரர் மற்றும் புத்தர் காலத்தைச் சேர்ந்த, மேலே சொன்ன பக்குடுக்கை நண்கணியார்ங்கிற புறநானூற்றுப் புலவர். அதுபோலக் கணியன் பூங்குன்றனாரும் ஓர் ஆசீவகர்தான். பூங்குன்றனாரின் பாட்டான "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"ங்குற புறநானூற்றுப் பாட்டை, ஆர அமரச் சரியாப் படியுங்க, அண்ணாச்சி, ஆசீவகம் என்பது ஓரளவு விளங்கும்.)

குமணம்>சமணம்
குமணம்>gumnos
ஓகிகள் பலரும் உடற்பயிற்சி கூடிய ஓகம் செய்து வந்தாக. அதுனாலே gumnos>gumnosticos

சமணர்கள் பள்ளிகளே தமிழ் நாட்டிலே பாடசாலைகள் ஆச்சுல்லே? அதே போல gumnos>gymnasium ங்குறது இரோப்பாவுலே பள்ளிகளைத் தான் இன்னைக்கும் குறிக்குது. ஒரு விதப்புலே பார்த்தா, gymnasium ங்குற சொல்லு உடற்பயிற்சி சாலையையும் குறிக்கும். ஆசான்ங்குற சொல்லு ஒரு காலத்துலே எல்லாம் சொல்லித் தர்ற ஆசிரியர்; பின்னாடி அதன் பொருளைக் குறுக்கி வெறும் வர்மக் கலை, களரிப் பயிற்று, உடற்கலை - அப்படிச் சொல்லிக் கொடுக்குற ஆசிரியர்னு சுருக்கிறலையா? அதுமாரித் தான் இதுவும்; நம்மூரை நல்லப் புரிஞ்சுக்கோணும்னா, நெல்லை, குமரி, கேரளம், ஈழம்னு பரவலாப் பார்க்கோணும், அண்ணாச்சி. வட தமிழகம் மட்டும் பார்க்கப் பிடாது.

இன்னைக்கும் கிரேக்க முறையைப் பின் பற்றி, மேலையிரோப்பிய நாடுகள்லே, குறிப்பா செருமனி, நெதர்லாந்து போன்ற நாடுகள்லே, முதல்தரமான பாடசாலை, gymnasium-னே அழைக்கப் படுது. அடுத்தது Athenium -னு அழைக்கப் படும். எத்தனை பேருக்குத் தெரியும் அந்தூருப் பள்ளிக் கூடத்தின் பின்னால் நம்மூர்ச் சிந்தனையான சமணம் இருக்குன்னு. நம் ஊரிலும் கூடப் பள்ளிகளின் தொடக்கம் சமணரில் தாங்க. சமணம் தான் மாணாக்கர்களை முதல்லே, ஆசிரியர் போகும் இடத்துக்கு எல்லாம் பின்னாடி மாணவர்கள் போற மாதிரி பள்ளிகளை அமைச்சுது! பள்ளி / gymnasium ங்குற ஒப்புமை எப்படி இருக்கு பாருங்க? வியப்பா இல்லையா?

இன்னொரு வகையிலே பார்த்தா, கோவண ஆண்டிகள், கோமண ஆண்டிகள் ஆவார்கள். கோமணர்கள்> gumnos.

கடைசியா சமயம்ங்குற சொல்லுக்கு வர்றேன் அண்ணாச்சி. சமணத்தின் வளர்ச்சிக்கு அப்புறம், மெய்யறிவியல் என்பது எல்லா நெறிகள்லேயும் வந்ததுச்சு; இல்லறம் துறந்த துறவிகள் தவத்துலே ஈடுபட ஆரம்பிச்சாங்க! ஒருத்தருக்கு ஒருத்தர் "நாவலோ நாவல்" னு வேறே, வாதத்துக்கான அறை கூவல் நடந்துச்சு. (நா.பா.வின் மணிபல்லவம் புதினத்தைப் படிங்க; இந்த நாவலோ நாவலில் தான் புதினமே ஆரம்பிக்கும்.) பட்டி மண்டபம், வழக்காடு மன்றம் எல்லாம் பெருகுனது சமணத்துக்கு (அதாவது ஆசீவகம், செயினம், புத்தம்) அப்புறம் தான். வாதம், வாதம்னு பெருகிப் போனதுலெ இந்தியத் துணைக்கண்டத்துலெ தமிழருக்குப் பெரிய பங்கு உண்டு, அண்ணாச்சி.

கடைசியா, சமக்க அமர்ந்து மனத்தை ஒன்றுபடுத்தும் நிலையாக (இந்த மனத்தை ஒன்று படுத்துறது தான் சமயத்துலே முக்கியமானது.  அதுக்கு மாறா, ஊரம்பூடுக்கு ஆட்களைச் சேர்த்துக்கிட்டு இப்பச் செய்யுற குத்து, வெட்டு வேலையெல்லாம், "நான் தான் சரி; அவன் சரியில்லை"ங்குற பேச்செல்லாம், சமயமே இல்ல, அண்ணாச்சி). மனசை ஒன்றுபடுத்துறதாலே, தவசிகளின் நிலையே சமயம்-னு ஆனது. அந்தத் தவசிகள் சமயி என்றும் ஆனாக. சமயிகளின் கோட்பாடுகள் சமயம் என்றானது; சமயிங்கிறதைத் தான் சாமின்னு ஆக்கிப்புட்டாங்க. சாமியார்களையும் அப்படித்தான் சொல்றோம். கடவுளையும் அப்படித்தான் சொல்றோம்.

மதம்கிற சொல் இன்னும் பழசு; அதப் பத்தி இங்கே விளக்கினா இன்னும் பெருகும். அதனாலே அதைத் தொடலை.

அன்புடன்,
இராம.கி.

Friday, March 17, 2006

சமயம்-4

சகர வரிசைச் சொல்லுக்கும் அகரவரிசை மாதிரி, அதே பொருள் தான். ஆனாப் பயன்பாடுகள் வேறே.

சம்>சம்மதம் = உடன்பாடு, நட்பு, கொள்கை (பல பேர் சம்மதம் வட மொழின்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம்ம வளமே நமக்குத் தெரியலை. மதம் என்பது நெறி.)
சம்>சமம் = ஒன்று படுதல்; ஒரே மாதிரி இருத்தல், ('சமன்பாடு'ங்கிற சொல்லாட்சியைப் பார்த்தீங்கன்னாப் புலப்படும்.)
சம தானம் = ஒரே நிலை; (இதைச் சமாதானம்னு பலுக்கி வடமொழின்னு நினைச்சுப் பிட்டோ ம். சரியாப் பலுக்குனா, அது தமிழாயிடும்.)
சம்மாரம் = அழிவு (இதையும் சம்ஹாரம்னு சொல்லி வடமொழியாப் புரிஞ்சுக்கிறோம். அது பெரிய அவலம் அண்ணாச்சி! சம்மாரங்கிறது கோட்டை, கொத்தளத்தை எல்லாம் அழிச்சுத் தரை மட்டமா ஆக்குறது; திருச் செந்தூரிலே சூர சம்மாரம் நிரம்பச் சிறப்பா நடக்கும்.)
சம்மானம் = உபசாரச் சொல், வெகுமதி, இறையிலியாக விடப்பட்ட நிலம்
சம்மெனல் = கம்பீரக் குறிப்பு
சம்மேளனம் = கலப்பு, கூட்டம்
சமட்டி = தொகுதி (சமஷ்டி -ன்னு வடமொழியிலே போகும்); இந்தக் காலத்திலே கூட்டமைப்புன்னு சொல்லுவாக. (சமளுதல் = ஒன்று போல ஆகுதல். கூட்டுச் சேரும் எல்லோரும் ஒன்று போல ஆன நிலையில் இருக்கும் கூட்டு சமள்+தி = சமட்டி என்று ஆகும்.)

அடுத்தது அம்முதல்>அம்மி போல, அமுக்குதல், துவைத்தல் என்ற பொருள்களைப் பார்க்கலாம்.

சமட்டுதல் = காலாலே துவைத்தல்
சமட்டுவண்டி = மிதி வண்டி (சமட்டு வண்டிங்குற புழக்கம் இப்பவெல்லாம் சுத்தரவாக் கிடையாது. இதுமாதிரிப் பல சொற்கள் எழுந்து பின்னாடி அடங்கிப் போறது எந்த மொழியிலேயும் இயற்கை.)
சமட்டுதல்>சவட்டுதல் = வளைவாக்குதல், மெல்லுதல், விழுங்குதல், அழித்தல், கொல்லுதல், மிதித்தல், வல்லுதல், மொத்துதல்
சம்மட்டி = குதிரையோட்டும் கருவி, சுத்தியல் வகை,
சமட்டு = E. smite, to strike, A.S. smiten, Dut. smijten. சமட்டுவது சமட்டி -சம்மட்டி. -E. hammer, A.S. hamor, Ger. hammer, Ice hamarr, a tool for beating, E.smith, one who smites. (ஒப்பியன் மொழிநூல் - 2, பாவாணர், தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 176)

சவங்குதல் = மனந் தளர்தல், மானம் மழுங்கிப் போதல், உயிர் மெலிதல், வீக்கம் வற்றுதல், மூர்ச்சை போதல்
சவலை = தளர்ந்து போன, துவண்டு போன நிலை
சவளுதல் = வளைதல், துவளுதல்
சவம் = பிணம்

சம்'கிறது போலவே 'சப்'புங்குற ஒலிக்குறிப்பும் பல சொற்களை உருவாக்கிருக்கு.

சப்பட்டை = தட்டை, தட்டையானது, உள்ளீடின்மை, பதர், மடையன், கெட்டவன், சப்பை, சிறகு
சப்படி = தட்டையானது
சப்பரம் = சிறுதேர்; (சப்பரம் கட்டி இறைவன் திருமேனியை அதில் சோடித்து இழுப்பது பல சிவன் கோயில்களில் பழக்கம் தான்.)
சப்பர மஞ்சம் = மேற்கட்டு அமைந்த அலங்காரக் கட்டில்
சப்பரை = மூடன்
சப்பல் தட்டை, சப்புதல்
சப்பளாக் கடை = தாளக் கட்டை
சப்பளிதல் = தட்டையாதல்
சப்பாணி = கைசேர்ந்து கொட்டுதல், அட்டணங்கால் இடுகை, நொண்டி
சப்பாத்தி = சப்பையான கோதுமைப் பண்டம். (வட தமிழிய மொழிகளில் வழங்கும் பெயர்.)
சப்புதல் = மெல்லுதல்
சப்பை = தட்டையானது, தேரின் சக்கரத்துக்கு அடியில் கொடுக்கப் படும் கட்டை

கூடுதல் பொருளில் இன்னொரு பரிமாணம் சகரம் போலவே ககரத்துலே இருக்கு.

கும்முதல் = கூடுதல்
குமிதல்>குவிதல்

இதை விரிச்சா மிகப் பெருகும். அதனாலெ, மீண்டும் சகரத்திற்கே வருவோம்.

சம்>சம்மண்>சம்மணம்= காலை ஒண்ணாச் சேர்த்து தட்டையாக்கி நெஞ்சு நிமிர்ந்து உட்காரும் நிலை.
சம்மணம்>சமணம் = அருகமதம், அம்மணம். (உண்மையிலே பொதுமையாச் சொன்னா, இது செயினம், புத்தம், ஆசீவகம் ஆகிய மூணு நெறியினரையும் குறிக்கும்; இருந்தாலும் விதப்பா, செயினரை மட்டுமே குறிக்கிற புழக்கமும் நம்மூர்லெ இருந்துருக்கு.)

சம்மணத்திலேர்ந்து சமணம் வந்துதுன்னு சொன்னா சிலபேருக்கு வியப்பா இருக்கும். இதுக்கு சான்று எது? அடுத்த மடல்லே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, March 16, 2006

சமயம்-3

இப்ப சகர வரிசைச் சொல்லைப் பார்க்கலாம்.

அம்>சம்.

இந்த மாற்றத்தை, மற்ற மொழிகளில் எல்லாம் இயல்புன்னு ஒத்துக்கிற மொழியாளர்கள் தமிழ் மட்டும் ஏதோ விதிவிலக்குப் போல சொல்லிக்கிட்டிருக்காக. அதுக்குத் தொடர்ச்சியா, சகரத்துலே தொடங்குற தமிழ்ச் சொல்லெல்லாம் சங்கதத்திலேந்து (சமற்கிருதத்திலேந்து) கடன் வாங்குனதுன்னு இவுக சொல்றாக. சகரத்தை அகரமாக்கும் ஒரு பழக்கம் தமிழுக்கு உண்டுன்னு தலைகீழா வேறே இவுக சொல்றாக. இந்த வாதத்தை யார் கொண்டாந்தாகன்னு தெரியலை; கேட்டா, தொல்காப்பியர்னு அடையாளம் காட்டுறாக. அதாவது,

க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - தொல். மொழி. 28
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ, ஐ, ஔ என்னும் மூன்றலங் கடையே - தொல். மொழி. 29

என்று தொல்காப்பியர் சொல்றாராம். அதாவது, "க,த, ந, ப. ம ஆகிய ஒலிகள் எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதல் வரும். சகரமும் அப்படித்தான்; ஆனா ச, சை, சௌ - அப்படின்னு ஒரு சொல்லும் தொடங்காது. (அலங்கடைன்னா விதிவிலக்குன்னு அருத்தம்)" - இப்படி இவுக பொருள் கொள்றாக.

"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்; பாடினவன் பாட்டைக் கெடுத்தான்"ங்கிறது பழமொழி. பாவாணர் இதை ஒத்துக்குனது கிடையாது. அவர் "இது பாட வேறுபாடு; எப்பவோ இதை மாத்தி எழுதிப் புட்டாங்க"ன்னு சொல்வார். இதற்கு துடிசை கிழார் சாமி சிதம்பரத்தின் துணையையும் அவர் கொண்டு வருவார். சாமி சிதம்பரம் சொல்ற தொல்காப்பியப் பாடம் இப்படியிருக்கு:

க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே

"அய்யா, சகரக் கிளவி மற்றது மாதிரித்தான்; ஆனா கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல்லே வராது"

மேலே சொல்றபடி பார்த்தா சகரம் மொழி முதல்லே வரும். பாவாணர் எதுனாலே அப்படிச் சொன்னாருன்னா, நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு பழைய மேற்கோள் வெண்பா வருது. அதுலே ஆணித்தரமா, சகரம் மொழி முதல்லெ வரும்னு சொல்லியிருக்கு.

சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி - சவிசரடு
சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை

இன்னும் போய், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144) - லும், தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார். இங்கே நான் கொஞ்சம் தான் காட்டாகக் கொடுத்துருக்கேன். இது எல்லாமே வடமொழியிலேர்ந்து கடனா? - ன்னு பாவாணர் கேட்பார்.

சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சண்டை, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சகர், சரி, சருகு, சருவம், சல்லஒப்பியன் மொடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை - சட்டை, சவட்டு - சமட்டு - (சமட்டி - சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு-சறுக்கு, சன்னம்

இன்னும் தொல்காப்பியத்துலே, சில மொழியாட்சிகள் விட்டுப் போயிருக்கிறது என்றும் பாவாணர் சொல்லுவார். மேலும் அவர், "தொல்காப்பியம் ஒரு இலக்கண நூலே அன்றி, அகரமுதலி அன்று. அதில் ஒரு சொல் இல்லாவிடில் அது தமிழே இல்லை என்பது மொழியறிவும் உலக அறிவும் இன்மையையே காட்டும்." என்று ஆணித்தரமாக எடுத்துரைப்பார்.

ஒரு தமிழ்-தமிழ் அகர முதலி (சண்முகம் பிள்ளை; தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம்) யை நாம எடுத்துப் பார்த்தால் ககர முதற் சொற்கள் கிட்டத்தட்ட 3200 இருக்குறதைப் பார்க்கலாம். இதே போல சகர முதற்சொற்கள் 1800 க்கும் மேலே இருக்கு. ககரமுதற் சொற்களைப் போல 56 % சகர முதற் சொற்கள் இருக்கும் போது அவற்றைக் கடன் என்று சொல்லுவதை, நம்மாலே நம்ப முடியாமல, அண்ணாச்சி!

நமக்குத் தோணுற கேள்விகள் பல.

சகரம் முதலாகாத மொழி உண்டோ ? உரசொலியும் (ஸ), அதிரொலியும் (ஜ) ஆக பல சகரங்கள் இருக்கும் மற்ற மொழிகளின் ஊடே, சகரம் முதலில் வராது என்று சொல்லப்படும் தமிழ் என்ன ஒரு தனி வகை மொழியா? இத்தனைக்கும் நாகரி எழுத்துக்களை ஆயும் போது அவை தமிழி எழுத்தைப் பின் பற்றியதாக இருக்க வேண்டும் என்று கொள்ளப் பெரும் வாய்ப்பு இருக்கு. அதில் சகர வருக்கம் என்று சொல்லும் போது சகரத்தை முதலில் வைத்தே சொல்லுகிறார்கள்; அப்படி இருக்கும் போது, சகரம் தமிழில் சொல்முதலில் வராதுன்னு சொன்னா, அது பொய்யான தோற்றமாய் நமக்குக் காட்டுது.

மேலும் எகரத்திற்கும் அகரத்திற்கும் உள்ள தொலைவும், ஒகரத்திற்கும் அகரத்திற்கும் உள்ள ஒலியியல் தொலைவு (phonetic distance) நிரம்பக் குறைவுதான். செ, சொ என்ற ஒலிகள் தமிழில் முதலில் வரும் போது, 'ச' என்று மட்டும் முதலில் வராதாம். அது எப்படி? ஆகாரம் முதலில் வருமானால் அகரம் வராது என்பது ஒலியியலுக்கு எப்படிப் பொருந்தும்? பழந்தமிழர்களின் நாக்கு என்ன வளையலையா? "சாவு என்ற சொல்லை ஏற்கலாம், சாவு>சாவம்>சவம் என்ற சொல்லை ஏற்க முடியாது"ன்னா அது என்ன கூத்து? ஈரொலிகள் (diphthongs) மொழிக்கு முன்னே வராதுன்னு சொன்னா, அதிலே பொருள் இருக்கு. (குரவம் - கிற சொல்லைத் தப்பான வகையில் வடமொழிப் பாணியில், ஈரொலி பலுக்கி 'கௌரவம்' னு எழுதுவதை இங்கே பார்க்கோணும். இதே போல, நாய் கவ்விற்று என்றே தமிழில் வரும்; கௌவிற்று என்று வராது.) ஔகாரம், ஐகாரம் போல அகரத்தையும் பார்த்தால் எப்படி? மொத்தத்தில் சகரம் மொழிக்கு முதலில் வராது என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாத கருத்தாக இருக்கு. இப்படி ஒரு விதி தமிழ்லே இருக்கும்னா, மற்ற தமிழிய மொழிகள்லெ ஏன் இல்லை என்ற கேள்வியும் நமக்கு எழுகுது. தமிழ் மட்டும் என்ன ஓர் அலங்கடையா? இல்லாத ஒரு விதியை இருக்குன்னு வச்சுக்கிட்டு, பல தமிழ்ச் சொற்களை ககரத்தில் இருந்து சில அறிஞர்கள் சகரத்துக்குக் கொண்டு வருவாக. இதுக்கு கன்னடத்தெ வேறெ துணைக்கு அழைப்பாக. என்னால் இதை ஒத்துக்க முடியலை.

எனக்குத் தோணுறது:

"ஊசிமுனையின் மேல் கோபுரம் கட்ட முடியுமா? ஒள்ளத்தியோண்டு இடத்துலே அரமணையா கட்ட முடியும்?"

"சகரம் முதல்லே வரலைன்னா, தமிழ்ங்கிற கோபுரம் இடிஞ்சே போகும். கணக்கில்லாத சொற்களின் பிறப்பு நெறி கெட்டுப் போகும். சங்க காலத்திலே இருந்து இன்னை வரைக்கும் இருக்கிற தமிழை வச்சுப் பார்த்தா இது பகுத்தறிவாப் படலை."

இனிப் பெரியவங்களுக்கு விட்டுருவோம். "சம்"மில் இருந்து மொழி முதல் தொடங்கும் என்றே கொண்டு நாம மேலே நடப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, March 15, 2006

சமயம்-2

இந்த 'உம்>அம்'முங்கிற "பொருந்தல் கருத்து" வேர் ரொம்ப வளமான வேருங்க.

ஊம்>ஊமுதல்>உம்முதல்= உறிஞ்சுதல்; (ஊமுதலைத் தொடர்ந்து இடக்கர் அடக்கலா ஒரு சொல் இருக்கு; அதை இங்கே சொன்னாச் சவையிலெ தப்பாயிரும்; தனியாயிருந்தாச் சொல்லலாம்; அதனாலே தவிர்க்கிறேன்.)

உம்மம்>அம்மம் = அம்மாவின் முலைப்பால்; உம்முதல் = வாய் பொருத்தி பாலை உண்ணுதல்; உறிஞ்சுதல்

உம்>அம்>அம்முதல் = பொருந்துதல்
அம்முதல்>அம்புதல்= கூடுதல்
அம்பல் = குவிந்த மொட்டு, சிலர் அறிந்து கூறும் புறங் கூற்று (அம்பலும் அலரும் களவு - தொல். 1085). யாழ்ப்பாணத்துலே அம்பல்ங்கிற சொல்லாலெ இந்தப் புறங் கூற்றைச் சொல்லுவாகன்னு கேள்விப் பட்டிருக்கேன்.

அம்பல்>அம்பலம் = கூடுகிற இடம். அந்தக் காலத்திலே கோயில் தானே, அண்ணாச்சி, கூடுகிற இடம். ஊரிலே நல்லது, கெட்டது எல்லாமே கோயிலை வச்சுத் தான். ஊர்க் கூட்டம் கூட, கோயிலில் தான்; (இது தமிழ்த் திரைப்படத்துலே மட்டும் இல்லை, அண்ணாச்சி; உண்மையும் அதுதான். எங்கூர்லெ ஊர்க் கூட்டத்தைப் புள்ளிக் கூட்டம், கரைக் கூட்டம்னு கூடச் சொல்றது உண்டு.) மலையாளத்திலே கோயிலை அம்பலம்னு தான் சொல்லுவாக. இதே மாதிரி கன்னடம் துளுவிலேயும் கூட இருக்கு.

சிற்றம்பலம்>சிதம்பரம் (வடமொழி எழுத்துப் பெயர்ப்பு); தில்லையிலே இருக்கிற நடவரசன் அம்பலம் ஒரு காலத்துலே சிறு அம்பலம் தான். பின்னாடித் தான் பொற்கூரை வேய்ந்து பொன்னம்பலம் ஆகிப் பேரம்பலம் ஆனது. இன்றைக்குக் கோயில் பரப்பில் பார்த்தால் மதுரை பெரிசா, தில்லை பெரிசான்னு சொல்ல முடியலை. சிலபேர் வீட்டுலே மதுரைதான் பெரிசு; சிலபேர் வீட்டுலே தில்லைதான் பெரிசு. என்ன சொல்றீக?:-)

திருச் சிற்றம்பலம்னு சொல்ல வேண்டிய சிவநெறியாளர்கள் சிதம்பரம்னு புரியாமச் சொல்லி நல்ல சொல்லை மறக்காதீக. தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை. பொன்னம்பலத்துலே தான் சோழர்கள் முடி சூடிக் கொள்றது. வெள்ளம்பலத்துலே (மதுரை வெள்ளியம்பலம்) தான் பாண்டியர்கள் முடி சூடிக் கொள்றது. அம்பலம்னா அரண்மனைன்னும் அருத்தம் உண்டு. அரண்மனையோட தொடர்பு கொண்டவுகளைத் தான் அந்தக் காலத்துலேர்ந்து அம்பலகாரர்னு சிவகங்கைப் பக்கம் சொல்லுவாக.

அம்பாரம் = பெருந் தொகுதி "யானைமேலே அம்பாரம்"னு கேள்விப்பட்டு இருப்பீகளே?

அம்முதல்>அமைதல் = பொருந்துதல். "நல்லா அமைஞ்சிருச்சு" ன்னு சொன்னா சீராகப் பொருந்தியிருக்கிறதுன்னு பொருள். அமைதல்லேர்ந்து வந்ததுதான் அமைதி. ஒன்று பட்டு அமைந்த பிறகு பேச்சுக்கு அப்புறம் எங்கே இடம், அண்ணாச்சி? வெறும் மோனம் தானே? (இதையும் புரியாம, மௌனம் னு பலபேர் சொல்றோம். இந்த ஔகாரமே தமிழுக்குத் தடங்கல் தாங்க. ஔகாரத்திலே வர்ற சொற்களையெல்லாம் கூர்ந்து கவனிச்சா அதுகள்லே நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளெ மறைஞ்சு கிடப்பதைப் பார்க்கலாம். இப்பக் கவுண்டர்னு கோயமுத்தூர் பக்கம் சொல்றாங்க. எருமையூரிலே (மைசூரில்), கருநாடகத்திலே, கவுடர்னு சொல்றாக. ஆனாக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தா கவுண்டர்ங்கிறது கோடரின் திரிபுன்னு விளங்கும். கொங்கு நாடு, மேடான சிறு சிறு குன்றுகள் உள்ள நாடு. கொங்கை என்பதும் இந்த மேட்டுப் பொருளில் வந்தது தான். பழைய கொங்கு நாடு மிக மிகப் பெரிசு. இன்றைய கோவை, ஈரோடு, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களோடு, தென் கன்னடம், ஏன் கொங்காணம் (Goa) வரைக்கும் கூட அது நீளும். அதே போல கோடு என்பதும் மேடு, குன்று, மலை என்று பொருள் கொள்ளூம். மேட்டு நிலத்து ஆட்கள் கோடர்கள்; நல்லியங் கோடன், செங்கோடன் போன்ற சொல்லாட்சியைப் பாருங்க. கோடர் கௌடர்/கௌண்டர் ஆன கதை இதுதான். இதே போல தான் குரவம் கௌரவம் ஆச்சுது. குரவர்கள்னா, பெரியவங்க, மதிக்கப் படவேண்டியவங்கன்னு பொருள். சிவநெறியிலே சமயக் குரவர்கள் நால்வர்னா, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்னு சொல்லுவாக. கௌரவம்னா மதிக்கப் படவேண்டிய தன்மை தானே! கடைசிலே கௌரவம்னா வடமொழிலேர்ந்து வந்ததுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். அதைக் குரவம்னு மாத்திப் பலுக்குங்க அண்ணாச்சி, நல்ல தமிழாயிடும். மறுபடியும் சொல்றேன். ஔ- ன்னாவிலே இருக்கிற சொற்களை எல்லாம் நல்லாப் பாருங்க!)

அமைதல்>அமைத்தல். இந்தக் காலத்துலே அமைப்பாளர்னு சொல்றோமே; அது 20ம் நூற்றாண்டு சொல்லாட்சி. அதது இருக்குற இடத்துலே பொருத்தி வச்சாத் தாங்க அது அமைப்பு; அப்படிப் பொருத்தி வைக்கிறவர் அமைப்பாளர்; அதைவிட்டு கந்தர கோளமா, போட்டது போட்டபடி கிடந்தா, அமைப்புன்னு எப்படிச் சொல்லுவோம்? திகைச்சுப் போயிற மாட்டோ ம்?

இப்படி ஒழுங்கா, அரச காரியங்களைப் பார்த்து அமைக்கிறவர் அமைத்தர்>அமைச்சர்; வட தமிழிய மொழிகளில் அமைத்தர்>அமாத்தியர் ன்னு ஆவார். அதேபோல அமைத்தர்>அமைந்தர்>அமந்தர் ஆகி மந்திரியும் ஆவார். அமைந்தர் என்பது administer என்று இந்தையிரொப்பிய மொழிகளில் முன்னொட்டுச் சேர்ந்து திரியும். நம்ம என்னடான்னா, administration - க்கு வார்த்தை இல்லைன்னு தடவுறோம். அமைப்புத் துறை தாங்க administration. உங்க நிறுவனத்துலே, இனிமே இதைப் பயன்படுத்துங்க.

அமை>அமையம் = பொருந்திவரும் நேரம்.
அமை>அவை>அவையம்= எல்லோரும் சேர்ந்து சம்முன்னு பொருத்தமா உட்கார்ந்திருக்கிற இடம். அதாவது ஒரு assembly. அரசனின் "அறங் கூறு அவையம்" -- இது போல ஏகப்பட்ட அவையம் எடுத்துச் சொல்லலாம்.

அம்>அமர்தல் = பொருந்துதல். ஒரு இடத்தில் உட்காருதல் என்பதும் பொருந்துதல் தான்
அமர்>அமரிக்கை = அடக்கம். "இருப்பதே தெரியாத படிக்கு அமரிக்கையா இருந்தாருங்க!" - ன்னு சொல்றோமில்லே? அதே நேரத்துலே அமளிங்கிறது ஆரவாரத்தோடு இருக்கிறது. சிலபேர் அமரிக்கையும் அமளியும் ஒண்ணுன்னு நினைச்சுக்கிட்டு மாறிப் பயன்படுத்தியிர்றதும் உண்டு.

விளக்கு அமர்ந்து போச்சுன்னா அடங்கி, ஒடுங்கிப் போச்சுன்னு அருத்தம்
"அமர்த்துடா அவனை"ன்னு சொன்னா "பேச விடாதே"ன்னு பொருள்.
அம்முதல்>அமுங்குதல் = ஒடுங்குதல்; "அவன் குரல் அப்படியே அமுங்கிருச்சு"
அம்முகிற காரணத்தால் அம்மி, (துவையல் அரைக்கிறோம் இல்லெ; அப்ப தேங்காயை அமுக்கி நசிச்சுத் தட்டையாக்கி.... அப்படி வந்த சொல் அது.);
அமுங்கு>அமுக்கு>அமுக்கம்>கமுக்கம் = அடங்கி, செய்தியை வெளியே சொல்லாமல் இருத்தல்
இந்த கமுக்கம் தான், இன்றையத் தமிழில் "கம்முன்னு கிட" என்று வருகிறது. "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்தில் வரும் ஆண்டாளு (மனோரமா ஆச்சி) ஞாவகம் வருதோ?
அம்>அமிழ்>அமிழ்தல் = நீரில் அமுங்குதல்

அம்>அமல்தல் = நெருங்குதல் "வேய் அமல்கல்" - கலித்தொகை 45
அமர்=போர். ஒருத்தருக்கு ஒருத்தர் பொருதுறதுதானே போர். அதனாலே இந்தப் பொருளும் இதற்கு உண்டு. அமர்>அமரம் = போர் மறவருக்கு விடப் பட்ட மானியம்.

அம்>அம்பு>அம்பர் = ஒருவகைப் பிசின்; ஒட்டுதல் பொருள்.
அம்முதல்>அம்புதல்>அப்புதல் = தட்டையாகச் செய்தல், ஒட்டுதல் பொருத்துதல்
அப்புதல்>அப்பளம்>பப்படம். = தட்டையாகச் செய்த உளுந்துப் பண்டம்.
அப்பளித்தல் = தட்டையாக்குதல்

இதோடு அகரத்தை முடிச்சிக்குவோம்.

அன்புடன்,
இராம.கி.

சமயம்-1

"என்ன இது! இப்படியா ஒருத்த இருப்பாக! இருப்புக் கொள்ளாம! சூடு கண்ட பூனையாட்டாம் அங்கும் இங்குமா அலமறிஞ்சு இருக்கீக.......உக்காருங்கய்யா! சம்மணம் போட்டு உக்காருங்க! தாமரையாட்டம் குத்தவைச்சு உங்களை இருக்கச் சொல்லலையே! சம்மணந்தானே போடச் சொன்னாக! அதுக்கே இவ்வளவு சங்கடப் பட்டா எப்படி? உடற்பயிற்சி, ஓட்டம், நடை எல்லாம் உண்டோ ? இல்லை வெறும் சுகவாசியா? ஓகம் பண்ணுறவுக தான் தாமரை, அல்லின்னு அழகு பார்க்கோணும்! உங்களுக்கு என்னாச்சு!"

"வேறெ ஒண்ணும் இல்லைங்க; தரையிலே இருக்காம, குறிச்சிலேயே உக்கார்ந்து பழகியாச்சா, திடீர்னு சொன்னோன்னெ சரவலா இருக்கு. கொஞ்சம் பொறுங்க! ஆமாம், இது சம்மணமா, சப்பளமா?"

"எல்லாம் ஒண்ணுதாங்க! சப்பணம்னு கூடச் சிலர் சொல்லுவாக. சப்பையா உக்காந்தா சப்பளம்னு தஞ்சாவூர்ப் பக்கமும், சம்மணம்னு திருநெல்வேலிப் பக்கமும் சொல்றதுதான். சம்முன்னு, சமக்க சேர்ந்து உக்காந்தா சம்மணம். சமக்க உக்கார்றதுக்கு விரிக்கிறது தான் சமக்காளம். (புரியாத் தனமா ஜவளி, ஜாமான் ஜவ்வாதுன்னு சொல்றாகல்லே அது மாதிரி ஜமக்காளம்னு சிலபேர் நீட்டி முழக்குறதும் உண்டு. அவுங்கள்லாம் ஆஷ்டுக் குஷ்டி ஆட்கள்.) காலை மடக்கி ஒண்ணு மேலே இன்னோண்ணு போட்டு அட்டணக்கால் இடுறமில்ல? அது கூட ஒருவகையான சப்பணம் தான்."

"சில பேர் சம்மணம் போட்டு உக்கார்ற போது கூனிக் குறுகி அசடு வழிஞ்சு.....அதேயேன் கேக்குறீக? முதுகு வளையாம நெஞ்சு நிமிர்த்தி உக்காரணுமில்லே? சவையிலே வேறெ மாதிரி உக்காந்தா குத்தமாயிடாது? பட்டிக் காட்டான்னு சொல்லமாட்டாக?"

"சவையிலெ நெஞ்சு நிமிர்த்தி உக்கார்ற போது, கல்லுப் போல சில போது சமைஞ்சு போயிடுறோம். என்ன பண்றது? இந்தக் காலு மரத்துப் போகுது; சமைஞ்சு போறதை அமைஞ்சு போறதுன்னும் சொல்றதுதான். அப்படிச் சமைஞ்சு, அமைஞ்சு இருக்கிற இடம் தான், அரசனுக்கு முன்னாடி இருக்குற திருவோலக்க மண்டபம். "சமை"ங்குறது "சவை"ன்னும் ஆகும்"

"என்ன? ஒரு மாதிரிப் பார்க்கிறீக? இதுக்கெல்லாம் தொடக்கம் வெறும் 'உம்ம்ம்ம்ம்' கிற ஒலிதாங்க! 'அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!' -ங்கிற கம்பன் தொடர் படிச்சிருக்கிகள்லே? அதுலே 'உம்' னு வருது பாருங்க அதுக்குப் பொருள்தாங்க இந்த உடன்பாட்டுப் பொருள். இது ஒருத்தர் கொள்ற காதல் மட்டும் இல்லெ; காகுத்தன், பிராட்டி இரண்டு பேருக்குமே நோக்கிக் கொள்றதுலே ஓர் உடன்பாடுன்னு கம்பன் நமக்குப் புரிய வைக்கிறான்."

இப்ப.... ஒருத்தர் ஏதோ ஒரு கருத்தைச் சொல்றார். நாம் அதைக் கேட்டு, "ஊம்"முன்னு மட்டுமே, சொல்லிக்கிட்டு இருக்கோம். மறு விடையே சொல்லலை. அவருக்கு அய்யம் வந்துருது.

"என்னங்க, நீங்க! ஊம் கொட்டிக்கிட்டே இருந்தா எப்படி? ஒத்துக்கிறீங்களா, இல்லையா?"

விளங்காம அவரு கேட்டாலும், ஊம் கொட்டுதல் - னா ஒப்புக் கொள்ளுதல் - னுதான் அருத்தம். 'ஊம்' கிறது ஈழத்தார் வாயிலெ ஓம்னு ஆகும். தமிழகத்தார் வாயிலெ ஆம்னு ஆகும். வட தமிழிய மொழிகளில் "ஹாங்"னு ஆகும். மொத்தத்தில் உம்முதல்னு சொன்னா உடன்படுதல்னு தான் பொருள்,

உம்முதல்ங்கிறது அம்முதல்னும் திரியும். அம்முதல்னா தெலுங்கிலெ "ஒரு பொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்" னு பொருள் கொள்ளும். இந்த அம்முதல்லெ இருந்து வந்தது தான் தமிழில் இருக்கும் சிறப்புச்சொல்லான அங்காடி. தெலுங்குச் சொல் தெரியாமப் போச்சுன்னு வச்சுக்குங்க, அங்காடி எப்படி வந்ததுன்னே நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.

உடன்பாட்டுப் பொருள் ஒன்று படுதலையும், பொருந்துவதையும், சேர்தலையும், கூடுவதையும், ஏன் ஒட்டுவதையும், ஒடுங்குவதையும் கூடப் படிப் படியாகக் குறிக்கும்.

"என்னடா இது? வகுப்பு எடுக்குறான்னு பார்க்கிறீகளோ? மன்னிச்சுக்குங்க, அண்ணாச்சி! குமார்னு ஒருத்தர் இந்தொனேசியாவிலெ சாகர்த்தாவுக்குப் பக்கத்துலே (காரவாங்னு நினைக்கிறேன்) இருந்தார். துகிலியல் (textile) வினைஞர். சிவநெறியிலே ஆழ்ந்த ஈடுபாடு. ஒரு தடவை இணையத்துலே "சமயம்" கிற சொல் எப்படி வந்துச்சுன்னு கேட்டார். ஓய்வு நேரத்துல, நமக்கு இதே பொழப்பாப் போச்சா? அங்கேயும் இங்கேயும் தேட ஆரம்பிச்சு, ஊரம்பட்டுக்குச் செய்தி சேர்ந்துருச்சு. அதான் இப்படிக் கானல்லே.....சொல்ல ஆரம்பிச்சேன். வேண்டாம்னா சொல்லிருங்க! நிறுத்திப்புடுவோம்."

"நீங்க ஒண்ணு, நிறுத்திடாதீங்க, சொல்ல வந்ததைச் சொல்லிப் புடுங்க; சொல்லு, பொருளு, பிறப்பு, வளர்ச்சின்னு பேசுனாலே, பத்துப்பேர்லெ ஏழு பேருக்கு ஒருமாதிரியாத் தான் இருக்கும்; மீதி மூணு பேராவது படிக்க மாட்டாகளா!"

"அது சரி, எல்லாம் ஒரு நப்பாசைதான்"

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 14, 2006

ஐந்திணைக் காட்சிகள்

(உரைவீச்சு)

(முன்னால் மடற்குழுக்களிலும், திண்ணையிலும் வெளியானது; இப்பொழுது ஒருசில திருத்தங்களுடன்.)
ooooo

கோடு போட்டாப்புலே,
சாலை போறதுக்கு,
இது என்ன பாலையா?
"மருதங் காணும், மருதம்.....
பொன்னு வெளையுற மருதம்";
வயலும் வயல் சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா?
கும்மோணத்திலேர்ந்து மாயவரம் போறதுன்னா,
அப்படியும் இப்படியும் ஆறு மாரி வளைஞ்சு தான் ஓடும்;
ஆற அமர வேடிக்கை பார்த்துக்கிணு போம்;.
அங்கே பார்த்தீரா, ஓய்?
இறவையைப் போட்டுட்டு குத்தாலம் மாதிரி
தண்ணிக்கடியிலே தொட்டிலே குளிக்குறான்,
இதான்,ஓய் மருதம்!

ooooo

அலையடிச்சு மணல்திரைச்சு
உப்புக்காத்தில், நொரையெழும்ப,
இது என்ன நெய்தலா?
"பாலைய்யா, பாலை.....
பொட்டக் காட்டுப் பாலை";
முல்லையும் மருதமும் திரிஞ்சதாக் கேள்விப் பட்டிருக்கீயளா?
மதுரைலேர்ந்து தூத்துக்குடி போறதுன்னா,
இப்படித் தான் காட்சி திரிஞ்சுகிட்டே போகும்;
பனை, வேலிக் கருவை, புளி, கள்ளி, ஆடா தொடை;
அங்கே பார்த்தீகளா,வே?
வேகாத வெய்யில்லே பதநீரு, நீர்மோரோட
வெள்ளரிப்பிஞ்சையும் நுங்கையும் கூடைலெ விக்கிறான்,
இதான்வே பாலை!.

ooooo

வேங்கையும் கடம்பும்,
பூச்சொரிஞ்சு தடம்போட,
இது என்ன முல்லையா?
"நெய்தல் ஓய், நெய்தல்......
நீலப்பூ நெறஞ்ச நெய்தல்";
கடலும் கடல்சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா?
பிச்சாவரத்துலெ, படகு எடுத்துப் போனீருன்னா,
உப்பங்கழியிலே போயிட்டே இருக்கலாம்;
புன்னை விழுது, எறாலு வலை, செங்கால் நாரை;
அங்கே பார்த்தீரா, ஓய்,
டொக்குன்னு நாட்டுத் துமுக்குச் சத்தம் கேக்குது;
கொக்கைச் சுட்டு டப்புன்னு விழுத்தாட்டுறான், பாரும்
இதாரும் நெய்தல்

ooooo

மஞ்சுதழுவ நெஞ்சடைக்க,
பச்சைபோர்த்திப் படங்காட்ட
இது என்ன குறிஞ்சியா?
"முல்லைய்யா, முல்லை.....
மோகமுள்ள முல்லை";
காடும் காடுசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கியளா?
முண்டந்துறைலேர்ந்து பாவநாசம் போற வழியிலே,
அடர்த்தியாப் பேரு தெரியா மரங்கள்;
புலி, மான், முயல், காட்டுப் பன்னி;
அந்தத் தடத்தைப் பார்த்தியளா,
நேத்து இந்தப் பக்கம் புலி நடமாட்டம்
இருந்துருக்கோணும்; வாசனை தெரியேல்லை?
இதான்வே முல்லை.

ooooo

வைக்கலை அசைபோட்டு,
எருமையாட்டம் சோம்பிக்கிடக்க,
இது என்ன மருதமா?
"குறிஞ்சிங்க, சாமி குறிஞ்சி....
கோடைக்குச் சொகமான குறிஞ்சி";
மலையும் மலைசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?
நிலக்கோட்டைலேர்ந்து கோடைக்கானல் அம்புட்டுக்கும்,
மரமும், வெளியும், தடமும், தேன்கூடும்;
பச்சப்பசேல்னு, நடுவிலே அமைதியாப் பாறையும்,
அந்தப் பச்சை மலை பார்த்தீங்களா,
வளைஞ்சு, வளைஞ்சு மானம் வரைக்கும் போகுதே?
இந்த வருசம் டாண்ணு நீலமாப் பூத்துரும்;
இதாங்க குறிஞ்சி

அன்புடன்,
இராம.கி.

Monday, March 13, 2006

பேரீச்சை

நம்மூரில் பேரிச்சை என்பது மளிகைக்கடைகளில், ஏதோ ஒரு கிளர்ப் புட்டிலில் (glass bottle)* கிடக்கும் பழமாகவே எனக்குச் சிறு அகவையில் தோற்றமளித்தது. அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு (ஒரு உருவாய்க்கு 16 அணா) 7,8 என எங்கள் ஊரில் அவ்வப்போது வாங்கிச் சாப்பிட்டதற்கு மேலாக அது என்னை ஈர்த்ததில்லை. இந்தக் காலத்து Lion dates, விதவிதமான விளம்பரங்கள், எல்லாம் அப்பொழுது நான் அறிந்தது கூடக் கிடையாது.

நாலு ஆண்டுகளுக்கு முன், அலுவல் நிமித்தமாய், சவுதி அரேபியத் தலைநகர் ரியாதில் இருபது மாதங்கள் வாழ நேர்ந்தது. அங்கு, பேரீத்தம் பழத்துக் கொட்டையை எடுத்து விட்டு, அதற்குள் வாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, இன்னும் இது போன்ற பருப்புக்களையும், பல்வேறு இனிப்புக்களையும் உள்ளடக்கிப் புடம் போட்டு, விதம் விதமாக பல்வேறு மேலாடைகளைப் போர்த்தி, பேரிச்சம் பழங்களை அழகு செய்து, சுவிஸ் சாக்லெட்டுகளைப் போல, நல்ல பண்டங்களாய் விலையுயர்ந்த பெட்டிகளில் அடைத்து, ஒய்யாரமாக அடுக்கி, மிக உயர்ந்த விலைக்கு விற்கும் கடைகளை பார்த்து, அசந்து போனேன். என்னடா இது? இந்த ஓரணாப் பேரிச்சைப் பழத்திற்கு, இப்படி ஒரு பட்டுக் குஞ்சலமா, இவ்வளவு காசா என்று எனக்குத் தோன்றியது. பெரிய பெரிய ஈச்சம் பண்ணை வைத்திருப்பவர்கள், இதற்கென்று தனி ஆலை வைத்து, பின்னால் ஈச்சம் பழத்தைப் பதப்படுத்தி, ரியாத் நகரில், இப்படிப் பண்டங்களாய் விற்பார்கள். குறிப்பாக பெருங் கோடைக்குச் (வெம்மை கிட்டத் தட்ட 50 C) சற்று முன்னால், நகரமெங்கும், பேரங்காடி, காய்கறிக் கடைகள், பழக் கடைகள் தோறும் பேரீச்சை குவிந்து கிடக்க, அங்கங்கே "எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பரியாக (free) அளித்து, அரபிகள் விருந்தோம்புவது கண்டு, முதல் முறையாய் எனக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது.

பின்னால் பரியில் இருந்து, குறைந்த காசுக்குப் பொது வகை, அப்புறம் கூடக் காசுக்குச் சிறப்பு வகை, என்று படிப் படியாக பேரீச்சை மேல் அளவு கடந்த ஆசை எனக்கு அரும்பியது. இனிப்பு எனக்குக் கூடாது என்றாலும், என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ரியாதில் இருந்து ஊருக்கு வரும்போது, வித விதமான பேரீச்சைப் பண்டங்களை வாங்கி வருவேன். அவற்றைச் சாப்பிட்டு, வியந்து போகாத என் நண்பர்கள், உறவினர்கள், சொந்தக்காரர்கள் இல்லை என்றே சொல்லலாம். என் பித்து இன்னும் கொஞ்சம் கூடிப் போனது. மேலும் அது ஆழமாய்ப் போக, ஒரு பேரிச்சம் பண்ணையை பார்ப்பதற்காக, அந்தூர் அரபிகள், சோமாலிகள், சூடானிகள் மூலம், நாட்டுப் புறங்களுக்குப் போகத் தொடங்கினேன். அதுவரை தெரியாத சவுதியின் இன்னொரு பக்கம், எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கத் தொடங்கிற்று. மேலும் மேலும் வியப்பு. நாம் இதுவரை மற்றவர் மூலம் கேட்டது ஒன்று; அறிவது மற்றொன்று என்று ஆனது. அவர்களின் முரட்டுத் தனத்திற்குள்ளும் ஓர் ஈரம்; ஒரு நாகரிகம் இருப்பதை அறிந்தேன். மாந்தர்கள் எங்கிருந்தாலும் அடிப்படையில் ஒன்று போலத்தான் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கியது.

பாறைநெய் (petroleum), பெடூவாய்ன் அரபிகள், களிமண் கோட்டைகள், மெர்சிடசு சீருந்துகள் (cars) என்று ஒரு பக்கச் சார்பாகவே செல்வத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நாட்டின் இன்னொரு பரிமானம் எனக்குப் புரியத் தொடங்கிற்று. பாலைவனத்திலும் ஒரு வேளாண்மை; உலகத்தின் மிகப் பெரிய அல்-மராய் பால் பண்ணை. மறு ஊடகை (reverse osmosis), பல்மடி ஆவியாக்கல் (multi-effect evaporation) ஆகியவற்றின் மூலம் கிடைத்த நல் நீரையும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலத்தடி மண்ணூற்று நீரையும் (நிலக்கரி, பாறைநெய்யை எடுப்பது போலப் புவிக்கடியில் 200, 400 மீட்டர்களுக்கும் கீழ் ஆழக் கிடக்கும் நீர் மண்ணூறல் நீர் - mineral water) கலந்து செய்யும் சொட்டு நீர்ப் பாசனங்கள், நேர்த்தியான முறையில் நகரங்களுக்குள் நடப்படும் தேர்ந்தெடுத்த பாலை மரங்கள், கால் நடைகளுக்காக அங்கு வளர்க்கப்படும் பெரும்மாண்ட புல்வட்டங்கள்; கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், நீர்த் தேக்கங்கள், 400 கி. மீட்டருக்கு இடப்பட்டிருக்கும் நல்நீர்க் குழாய்கள் - இப்படி அந்த நாட்டின் பாலைவனம் சிறிது சிறிதாய்ச் சோலைவனம் ஆகும் காட்சி என் கண் முன்னே விரிந்தது. பாலையிலும் அழகைக் காணமுடியும் என்று உணர்ந்தேன். எண்ணெயில் கிடைக்கும் பணத்தை ஓரளவு சரியாகத் தான் நாட்டிற்குப் பயன்படும் வேறு வகையில் செலவழிக்க முற்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

இந்தத் தெரிதலில் நான் அறிந்த பேரீச்சைக் குறிப்புகளை இங்கு தருகிறேன். பேரீச்சை பற்றிய பல செய்திகள் மற்றோரிடம் இருந்து அறிந்து கொண்டவை தான்; இருந்தாலும் இவை தமிழுக்குப் புதியவை; மரங்கள், பழங்கள் பற்றிய ஆதாரங்களை ஆங்கில வலைத்தளங்களில் இருந்தும் உறுதி செய்து கொண்டேன்.

பேரீச்சை பற்றிய தமிழ்ப்பெயர் விளக்கத்தோடு தொடங்குவோம்.
-------------------------------------
பேரீந்து>பேரீந்தை>பேரீத்தை என்பதன் மருவிய பலுக்கமே பேரீச்சை என்று ஆயிற்று. ஈந்தின் மூலம் அந்தப் பழத்தின் நிறத்தில் இருக்கிறது.
ஈல் என்பது ஒளிநிறத்தைக் குறிக்கும் என்பதை இல்>எல் என்ற வேர்மூலத்தில் இருந்து கிளைத்த சொற்களைக் கொண்டு ஓர்ந்து பார்க்கலாம். [நம்மூர் ஈச்ச மரம் பேரீச்சை மரத்தோடு நெருங்கிய உறவு உடையது; ஆனாலும், அதன் காயும், பழமும் வேறு சுவை. நம்மூரில் ஈச்சங்காயில் உள்ள துவர்ப்பான பருப்புக்காகவே, தோலை ஒதுக்கிச் சாப்பிடுவது உண்டு. அங்கோ, கொட்டைகள் சாப்பிடுவதாக, நான் கேள்விப் படவில்லை; ஒதுக்கவே படுகின்றன. நம்மூரிலும் கனிந்த ஈச்சம் பழங்களின் சதையைத் துய்த்து, கொட்டைகள் ஒதுக்கப் படுவது ஓரோ வழி உண்டு. காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி போகும் இருவுள் தடத்தை (railway track) ஒட்டி அவற்றின் இரு பக்கச் செம்மண் மேடுகளில் (அந்த மேடுகளில் ஈச்சையும் பனையும் மிகுதி; இப்பொழுது எல்லாம் அங்கு ஒரே முந்திரிக் காடாய் ஆகிவிட்டது.), நண்பர்களுடன் நெடிய தொலைவுக்கு நடை பழகும் பொழுது, ஈச்சங் காய்களைப் பறித்துத் தின்றது எனக்கு இன்னும் நினைவுக்கு வருகிறது.]

இந்தச் சொற்களுக்கு வேர்ச்சொல் "இல்" எனத் தொடங்கும். அது பின் கொஞ்சம் கொஞ்சமாய்த் திரிந்து தொடர்புள்ள சொற்களை நமக்கு இனங் காட்டும்.

இல்>எல் = ஒளிவிடும் கதிரவன்
இல்>இலகுதல் = விளங்குதல், ஒளி செய்தல்
இலகுதல்>இலங்குதல் = ஒளி விடுதல்

இல்>இலங்கு>இலக்கு>இலக்குமி = ஓளி விடுகின்ற தெய்வப் பெண் = திருமகள்; இதன் காரணமாகத் தான் தாயார் கருவறையில் மஞ்சள் பொற் சுண்ணம் கொடுக்க வேண்டும். விவரம் தெரியாத பட்டர்கள் குங்குமம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். குங்குமம் என்ற செஞ்சுண்ணம் பூதேவி (=அல்லது ஆண்டாள்) கருவறையின் முன் கொடுக்கப் பட வேண்டியது.

இலங்கு>இலிங்கு>இலிங்கம் = ஓளித் தோற்றம் காட்டும் சிவனின் அடையாளம். திருவண்ணாமலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஓளி தான் சிவனின் முதல் அடையாளம்; ஒளியும் நெருப்புமே இறையின் முதல் அடையாளங்களாய், மாந்தன் உணர்ந்தான். அதை இன்றைக்கு இருக்கும் இலிங்கப் படிமத்தோடு ஒன்று படுத்துகிற தொன்மங்களை இங்கே சொன்னால் கட்டுரை நீண்டு விடும்.

இலங்கு>இலங்கை = ஒளிவிடுகிற இடம்; அங்குள்ள காடெல்லாம் மஞ்சளாகப் பூத்ததோ, என்னமோ, எனக்குத் தெரியாது. கடல் கொண்ட பழந் தமிழகம் (அதன் மிஞ்சிய பகுதிகளில் இன்றைய இலங்கையும் ஒன்றே. யார் ஏற்காவிட்டால் என்ன, நம்முடைய பழைய நிலம் அங்கும் அதற்குத் தெற்கும் இருக்கிறது.) பற்றிப் பேசுகிற போது 49 நாடுகள் தவிர, ஒளி நாடு என்ற ஒன்றும் சொல்லப்படும்.

இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுகிற இடம் தான்.

[ஒளி என்பது போக, இன்னொரு விதமாவும் இந்தச் சொற் பிறப்பைப் பார்க்கலாம். அது ஈல்தல் = பிரித்தல்; ஈலம்>ஈழம் என்பது பெருநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலம்; ஈலப் பட்ட நிலம் என்றும் சொல்லலாம். ஈல்தலின் நீட்சியாய் ஈள்தலும், அந்த ஈள்தலைச் செய்யும் ஓர் ஆயுதம் ஈட்டி என்பதையும் எண்ணிப் பார்க்கலாம். இதே போல ஓர் ஆற்றின் நடுவே அரக்கப் பட்டது (= பிரிக்கப் பட்டது) அரங்கம். திருவரங்கம் என்ற பெயரின் உட்பொருள் இதுதான். தென்பெண்ணையின் நடுவே, இன்றையப் புதுச்சேரிக்கு அருகில், அந்தக் கால மாவிலங்கை (மா இலங்கை) என்னும் ஊர் இருந்திருக்கிறது. அதில் வரும் இலங்கையும் தென்பெண்ணையின் ஆற்றின் நடுவே வரும் ஒரு தீவு போன்ற அமைப்புத் தான். பிரித்தலைச் செய்வது ஆறாக இருக்கலாம்; கடலாகவும் இருக்கலாம். இன்னும், ஏன்? தீரப் பட்டது தீர்வு>தீவு என்று ஆகும்; தீர்தல் =பிரித்தல். (தீர்த்துவிடு என்பது ஆளை இரண்டாக்கி விடு என்ற பொருளில் தான் முதலில் எழுந்தது.) ஈல்தல் = பிரித்தல், இலங்குதல் = ஒளிவிடுதல் என்ற இரு வினைகளில் எது பொருத்தமாக இருக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப் படாமல் இருக்கிறது. இன்னும் தீவிரமாகத் தரவுகளைத் தேடவேண்டும். இந்த இலங்கை / ஈழம் பற்றிய சொல்லாய்வுகளை நேரம் கிடைக்கும் போது பிறகு பார்க்கலாம்.]

இலகுதல்>இலவுதல்>இலவம்>இலாவம்>இலாபம்; தமிழில் தொடங்கிப் பின் வடமொழிப் பலுக்கைக் கொண்டது; இது ஒரு இருபிறப்பிச் சொல். விளைச்சலிலும், வணிகத்திலும், பொலிவாக, மிகுதியாகக் கிடைக்கிற பொருளை இலாபம் என்று சொல்லுவார்கள். இன்றைக்கும், களத்து மேட்டில் நெல் அளக்கும் போதோ, அல்லது வணிகம் செய்பவர்கள் எண்ணும் போதோ, இலாபம், இரண்டு, மூன்று ... என்றுதான் எண்ணுவார்கள். பின்னாட்களில் பொருளுக்கு மட்டும் அல்லாமல், பொலுவாய்க் கிடைக்கும் பணத்திற்கும் இலாபம் என்ற பெயர் ஏற்பட்டது. பொலுவு, இலவம் என இரண்டுமே profit என்பதைக் குறிப்பன தாம்.

இனி ஈச்சுக்கு வருவோம். இல்>ஈல்>ஈல்ந்து>ஈந்து>ஈத்து>ஈச்சு என்று இது திரியும். ஈல்ந்தம் பழம் = ஒளி நிறத்துப் பழம், பொன்னிறப் பழம்.
அரபு நாட்டுச் செய்திகளுக்கு வருவோம்.

பார்ப்பதற்கு வெள்ளைக் கோதுமை போன்ற ஈச்சாங் குலை, காய்ந்து குலை தள்ளும் போது, பொன்னிற நிறத்தை அடைகிறது. கோடையின் உச்சியில், வெப்பம் சூடேறச் சூடேற, ஒரு மூன்று வார இடைவெளியில், பொன் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக புகர் நிறம் (brown) கொள்ளுகிறது. அரபி மக்கள் "அது புழுங்கி வெக்கையில் கொதிக்கிறது" என்றே சொல்லுவார்கள். [புழுங்குதல் என்பதே boiling என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல். புழுங்குவது புழுங்கல்>புழுக்கல் என்றே சொல்லப் படும். parboiled அரிசி என்பது தமிழில் புழுங்கல் அரிசி என்றே சொல்லப் படுவதைக் காணுக.]

நம்மூரில் வாழைக்குலையை மூடிப் புகையேற்றி பழுக்க வைக்கும் செயலைப் போல், அரபு நாடுகளில் ஈச்சங் குலையையும் பழுக்க வைக்கும் பழக்கம் உண்டு. (ஆனால் அப்படிப் புகைபோட்ட பழங்கள் நல்ல சுவை பெறுவதில்லை.) ஈச்சம் பழத்தை இப்படி வெய்யிலில் போட்டு புழுங்க வைப்பது போதாது என்று சிலவகைகளைத் தேனில் ஊற வைப்பதும் உண்டு.

ஈத்த மரத்தில் ஆண் ஈந்து, பெண் ஈந்து என இருவகை உண்டு. பெரும்பாலும் பண்ணைகளில் ஆண் ஈந்து மரங்களை அளவுக்கு மேல் போகா வண்ணம் அவ்வப்போது வெட்டித் தள்ளிவிடுவார்கள். ஒரு ஆண் ஈந்து இருந்தால் அதைச் சுற்றிலும் பெண் ஈந்து மரங்களை வைப்பது வழக்கம். இந்த மரங்களின் பூப்புக் காலம் பெரும்பாலும் பெப்ருவரி மாத முடிவில் தான் இருக்கும். பூக்களின் குலை மேலே உள்ள இலைத் தோகைகளுக்கு நடுவில் இருந்து கிளைத்து கோதுமை மணிகள் அடங்கிய கதிர் போலக் குலுங்கும். இனிப்பாக இருக்கும் ஆண்மரத்தின் பூவை அப்படியேயும், அல்லது வறுத்தும் அரபிகள் சாப்பிடுவது உண்டு. சில பொழுது அரபிய பருத்துகளில் (bread) இவற்றைச் சுவைக்கெனச் சேர்த்து இடுவதும் உண்டு. பெண்மரத்தின் பூ துவர்ப்பாகவும், சிலபொழுது கசந்தும் கூட இருக்கும். ஆனாலும் பெண் பூக்களில் இருந்து தான் பேரீச்சம் பழம் பிறக்கிறது; இதுவும் ஒருவகை இயற்கையின் விந்தை தான். சில அரபியர்கள் ஆண் பூவில் இருந்து மகரந்தத்தை எடுத்து பெண் மரங்களின் கூந்தல் முடிச்சுகளில் தூவி மகரந்தச் சேர்க்கையைத் தூண்டி விடுவதும் உண்டு. பழங்கள் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பழுக்கின்றன.

ஈத்தை மரங்களில் அவற்றின் கொடி வழி (heredity) கருதி, விலை பேசுவார்கள். வளர்ந்த ஒரு சில உயர் வகை மரங்களை வாங்கி இன்னொரு இடத்தில் நடவேண்டுமானால் சவுதி அரபியப் பணம் 13000, 15000 ரியால்கள் கூட ஆவது உண்டு. ஈத்த மரங்கள் இந்த நாட்டில் பெரும் சொத்தாகவும் கூடக் கருதப் படுகின்றன. ஓரொரு மரங்கள் 50, 100 ஆண்டுகள் கூடப் பலன் தருவது உண்டு.

ஈத்தை மரங்கள் மிகப் பழங்காலத்தில் இருந்து, எகிப்திய நாகரிகம் தொட்டு, வளர்க்கப் படுகின்றன. பழங்களை அப்படியே மரங்களில் இருந்து இனிப்புக் கண்டுகளைப் போலவும், உலரவைத்தும், பழங் காலத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். கொட்டையை எடுத்த பேரீச்சம் பழங்களை ஒன்றாகப் பிசைந்து நம்மூர்களில் செய்யும் கருப்புக் கட்டிகள், புளி உருண்டைகள் போலாக்கிப் பின் நெடுங்காலத்திற்கு வைத்துக் கொள்ளும் பழக்கமும் அரபியருக்கு உண்டு. (நம்மூர்களில் நாட்டுப் புறங்களில், புளி உருண்டைகளை வைத்திருப்பதை நினைவு கொள்ளுங்கள்.) நாட்டுப்புற அரபிகள் (bedouins) கனிந்த ஈச்சங் குலைகளைத் தொங்க வைத்து அவற்றில் இருந்து வடியும் கனிச் சாற்றைச் சருக்கரை (sugar), தேன் போன்ற இனிப்புப் பொருளாகக் கொண்டதும் உண்டு. குளிர் காலத்தில் ஈரம் உள்ளிறங்காமல் இருக்க மரத்தில் கிடக்கும் ஈச்சாங் கூந்தலை ஒன்றாகக் கட்டிவைக்கும் முறையும் இங்கு உண்டு. பின்னால், வெட்டப் பட்ட ஈச்சாங் குலைகளை ஈரத்தோடு, ஈச்சோலைக் கூடைகளில், மூடிவைக்கும் போது, அவை கெட்டு விடாமல் இருக்க, அவற்றின் அளவுக்கு மீறிய சர்க்கரையே கூடப் பாதுகாப்பைத் தரும்.

பேரீச்சங் கனிச் சாற்றை சொட்டுத் தேன் என்று அரபியர் பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. அரபியன் ஒருவன் தன் காதலியை "சொட்டுத் தேனே" என்று அழைப்பதாக ஆயிரத்தொரு அரபிய இரவுகள் கதைகளில் கூறுவார்கள். கருப்ப காலத்திலும், பால்குடிப் பருவத்திலும், தாய்மார்கள் பேரீச்சையைப் பயன்படுத்துகிறார்கள். இரமதான் நோன்பு காலத்தில், ஒவ்வொரு நாளும் நோன்பை முடிப்பது பேரீச்சையும், நீராலும் தான். (அல்லது ஏதேனும் ஒருவகைக் கஞ்சி அல்லது சாறு.) இது போக, நோன்புக் காலத்தில் பேரீச்சையால் ஆன பொரித்த பண்ணியங்களும் (cokkies) உண்டு.

பேரிச்சை என்பது நம்மூர்ப் பனையைப் போல, நூற்றுக்கணக்கான முறைகளில் இந்த நாடுகளில் துய்க்கப் படுகிறது. ஈச்சம் பட்டையை அடித்து, நாராக்கி, பின் அவற்றைக் கொண்டு கயிறாய்த் திரித்து, வடமாய் ஆக்கிப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. ஈர்க் குச்சிகளும் பல்வேறு பயன்களுக்கு ஆளப் படுகின்றன. நம்மூர்களில் தென்னை மரங்களில் கிடக்கும், காய்ந்த தென்னம்பட்டைகளை அவ்வப் பொழுது வெட்டி, மரங்களை ஒழுங்கு செய்கிறார்களே, அதே வகைத் தோரணையும் இங்கு ஈச்ச மரங்களைப் பேணுவதில் உண்டு. இது போன்ற செய்கைகள் எல்லாமே விளைச்சலைப் பெருகவைக்கும் செயல்கள் தான். ஈச்சமரத்தின் அடியில் இருக்கும் சிரட்டை முள்ளுகள், ஈர்க்கஞ் குச்சிகளைச் சேர்ந்த விளக்குமாறு, ஈச்சந் தோகைகளைக் கொண்டு பாய், தட்டு போன்றவற்றை முடையும் கலை, கூரை வேய்வது எனப் பெரும்பாலான செய்திகள் நம்மூர் தென்னை, பனையைப் போன்றவையே.

ஈச்ச மரம் என்பது அரபு நாடுகளில் ஓர் அடிப்படையான மரம். நம்மூர்ப் பனையைப் போல. கற்பகம் கற்பகம் என்று பலரும் சொல்லுகிறோமே, அது நம்மூரில் எந்த மரம் என்று நினைக்கிறீர்கள்? அது கற்பனையான மரம் அல்ல; பனை மரம் தான். பனை தவிர்த்தால், தென் தமிழகம் மற்றும் ஈழம் இல்லை.

அரபுநாடுகளில் ஈச்சமரம் தான் கிட்டத்தட்டக் கற்பக மரம். (வேண்டுமானால் கற்பகம் என்பது கருப்பு நிறத்தைக் குறிப்பதால், மாறாக கிரண மரம் (ஒளி மரம்) என்று சொல்லலாம்.)

அன்புடன்,
இராம.கி.

*ஆங்கிலத்திலும் ஒளிவிடுகிற காரணத்தால் தான் glass என்ற சொல் வந்தது. அதனோடு தொடர்புடைய glare என்ற சொல்லும் ஒளி கிளர்ந்து சொலிப்பதையே காட்டுகிறது. கிளர் என்ற சொல்லடியே, தமிழில் ஆய்ந்து பார்த்தால், இங்கு பொருந்துவதாகத் தெரிகிறது. கிளர் என்றாலே தமிழில் ஒளிதான். ஆனால் அரிதாக இதுவரை பயன்படுத்திய சொல்.

Saturday, March 11, 2006

மரபும் வீச்சும்

யாராவது நாடகக் கலைஞரின் ஆக்கங்களையும், திரைப்படக் கலைஞரின் ஆக்கங்களையும் ஒன்று சேர வைத்து மெய்ப்பாட்டுக் கலையென்று மதிப்பிடுவார்களோ? இன்றையத் தமிழ்த் திரைப்படம், நாடகத்தில் இருந்து பிறந்து வந்திருந்தாலும், நாடகக் கூறுகள் எல்லாம் மறைந்து திரைப்படம் தனி நிலை பெற்றுவிட்டது. அது போலத்தான் புதுக் கவிதை என்று கிளம்பி மக்கள் மனத்தைக் கவர்ந்து புழங்கிவரும் உரைவீச்சும்; என்னதான் இதைச் செய்பவர்கள் இலக்கணம் இல்லையென்றாலும், அதற்கென ஓர் இலக்கணத்தை ஒருசிலர் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதையும் மரபுப் பாவையும் சேர்ந்து மதிப்பிடச் சொன்னால் எப்படி?

பாவிற்கும், உரைவீச்சிற்கும் களம் ஒன்றுதான். பொருள் ஆழம் தேவை.; அதுதான் உள்ளடக்கம்; ஆனால் சொல்லும் முறைகள் வெவ்வேறானவை.

பா என்பது உள்ளடக்கம் பொருந்திய ஒரு கோலம். அது மாக் கோலமாக இருக்கலாம். அல்லது வண்ணம் கலந்த நிறங்கோலியாகக் (ரங்கோலி)கூட இருக்கலாம். அங்கே ஓசை உண்டு; முன்வந்து நிற்கிற மோனை உண்டு; எதிர்கொண்ட எதுகை உண்டு; ஒவ்வொரு சொல்லும், அசையும், தளைப்படுகிற கட்டும் உண்டு. அது ஒரு தேர்ந்த பின்னல் வேலையைப் போன்றது; அழகுணர்ச்சியின் உந்துதலால், மேலும் மேலும், முனைந்து நாம் சோடிக்கின்ற முத்தாய்ப்பு, மரபுப் பா.

பா வடிப்பவர்கள், இசைக்கத் தெரியா விட்டாலும், கேட்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; நாட்டுப்புறத் தெம்மாங்கில் ஈடுபாடு இருக்க வேண்டும்; ஓசையில் கொஞ்சம் ஆழ்ந்து தோய வேண்டும். தந்தனாத் தாளத்தில் இழைந்திருக்கத் தெரிய வேண்டும் (இழைதலைத் தான் வட மொழியில் லயம் என்று பெயர்க்கிறார்கள். இழையம்>லயம்) மொழியின் நெளிவு, சுழிவுகள், மற்றும் சொல்வளம் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் கூடும் போது, தானாகவே மோனை, எதுகை, தொடை, தளை எல்லாம் வந்து விடும். அப்புறம் யாக்கத் தெரிந்தவனுக்கு யாப்பு எதற்கு? எழுதிய பாவை, தனித்திருந்து, குரலை எடுத்து, உயர்த்தி, உரைத்துச் சொல்லிப் பாருங்கள்; ஓசை தட்டுமிடத்தில், தளை தட்டும்; நீங்கள் திருத்தி விடலாம். ஒருமுறைக்கு மும்முறை உங்கள் பாவைப் படியுங்கள்; உங்களுக்கே திருத்தங்கள் தெரியும். அதே பொழுது, ஆனைக்கும் அடி சறுக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்; உங்கள் பா வளம் சிறக்கும்.

பாவின் வளம் சொன்னதால், உரைவீச்சு குறையுள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். யாராவது ஆப்பிளையும் நாரங்கைப் (orange) பழத்தையும் ஒப்பிடுவார்களோ? அது ஒரு விதம்; இது இன்னொரு விதம்; உங்களைச் சட்டென்று களத்துக்குள் கொண்டு வரும் ஓர் உலுக்கல், உரை வீச்சிற்கு உண்டு. இங்கே அழகு என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் துடிப்பு என்பது முகன்மையானது. அதனால் தான் இதை வீச்சு என்கிறோம். இதன் ஈர்ப்பில் நாம் கவரப் படுகிறோம். அதே பொழுது, உரைவீச்சு என்ற என் சொல்லைக் கண்டே வெகுண்டு எழுகிறவர்களும் உண்டு. முன்பு எப்பொழுதோ ஒருமுறை உரைவீச்சு / மரபுப் பா பற்றி நான் தமிழ் இணையத்தில் எழுதப் போக, ஈழக் கவிஞர் இரமணிதரன் வெகுண்டு எழுந்தார். ஒரு பத்து மடல்களில் வீச்சும் மரபுமாக வெவ்வேறு புனைப் பெயர்களில் மழை பொழிந்தார்; மனம் மகிழ்ந்தேன் நான்; எப்பேர்ப் பட்ட கவிஞன் இவன் என்று வியந்து போனேன். சிறந்த கவிஞர்கள் அரிதாக இருக்கிறார்கள்.

உரைவீச்சை உணரவேண்டியவர்கள் மரபு ஓவியத்திற்கும், கலவைப் பகுந்தத்திற்கும் (collage painting) உள்ள வேறுபாட்டை உணராதவர்கள்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

என்ற குறளில் சொல்லப்படும் "விழைகின்ற இருவருக்கு இடையே காற்றால் கூடப் பிரிக்க முடியாத தழுவல்" என்ற கருத்தை, ஒரு பகுந்தத்தால் (painting) உணர்த்த வேண்டும் என்றால், அங்கே மரபு ஓவியம் சற்றும் பயன்படாது; ஆனால் கலவை (collage) என்பது மிகச் சிறப்பாக மிளிர்ந்து நிற்கும். ஏனென்றால் சொல்லப் படுவது அதிகப் பட்ட கற்பனை (காற்றால் கூடப் பிரிக்க முடியாத தழுவல்); அதை அதிகப் பட்ட உருவகம் கொண்ட இற்றைக்காலப் பகுந்தத்தால் (modern painting) தான் வரைய இயலும். இங்கே இயற்கைக்கு மீறிய அளவாய், உடலின் வரைவுகள் இருந்தால் தான், சொல்ல வந்ததைக் காண்போருக்கு உணர்த்த முடியும்.

அதைப் போலத்தான் சில உருவகங்களை, எவ்வளவு முயன்றாலும் நாடகத்தில் கொண்டு வர இயலாது; ஆனால், திரைப்படத்தில் கொண்டுவர இயலும். இதே போல, மரபுப் பாக்களைக் காட்டிலும், உரைவீச்சில் சில உருவகங்கள் மிக எளிதாக வெளி வந்து சேரும்.

அதே பொழுது உரைவீச்சு செய்பவர், அந்த "வீச்சு" என்ற கருத்தின் பொருளை உணர வேண்டும். துணுக்கு, துணுக்காகவாவது அங்கங்கே வீச்சு (ஓசையால் அவ்வப்போது வருவது) வரவேண்டும். (முரண் என்பது ஒரு வீச்சு; முரண் மட்டுமே வீச்சு அல்ல; உரையோடை - rhetoric - என்பது ஒரு வீச்சு; ஆனால் அடுத்தடுத்த உரைவீச்சில் அதே விரவி நின்றால் அப்புறம் வீச்சு தெறிக்காது; நமக்கு வெறுத்துப் போய்விடும்.) படிக்கும் போது, உள்ளே ஊடி நிற்கும் வீச்சுத் தான் மனதில் நிறைந்து, முழு ஆக்கத்தையும், மீண்டும் நம் ஞாவகத்திற்குக் கொண்டு வரச் செய்யும். இல்லையென்றால் வெறும் வரிகளை மடித்துப் போட்ட நிலையில், முடிந்துவிடும். (ஒரு காலத்தில் இப்படி மடித்துப் போட்டவற்றைக் கம்பாசிட்டர் கவிதை என்று கேலி செய்வார்கள்.) உரைவீச்சில் தளை இருக்க வேண்டியதில்லை; ஆனால் ஆங்காங்கே மோனையும், சிறிதளவாவது எதுகையும், தொட்டுக் கொள்கிறாற் போல் தொடையும் இருந்தால், அது இன்னும் சிறப்பு.

உரைவீச்சாளர்கள் மொழியில் ஆழ்ந்த கவனம் கொள்ளவேண்டும். "ஜுவாலை, ஸ்வதந்திரம், ஜகம், பிரகாஸம், சூட்சுமம், இப்படியாக ஆங்காங்கே நாலைந்து வட மொழிச் சொல்லாட்சிகளை உள்ளே கொண்டு வந்து விட்டால், உங்கள் வீச்சின் வளம் கூடும் என்று நினைக்காதீர்கள். அது உங்களை, ஏதோ ஓர் இனம் புரியாத சிந்தனையாளனாக வேண்டுமானால் காட்டும்; வீச்சின் வளம் கொண்டவராய்க் காட்டாது. நல்ல தமிழில், உரை வீச்சை எழுத முடியும்; செய்யுங்கள்! உரை வீச்சு என்ற புதிய வடிவம் தமிழுக்கு வந்தது நல்லது தான்.

மரபுப் பா எழுதுவோர்க்கும், உரைவீச்சாளருக்கும் ஒரு பொதுவான வேண்டுகோள்; உங்கள் ஆக்கத்தை படித்து, அது நினைவில் நின்று, ஆறு மாதம் கழித்து படித்தவனால் அதை மேற்கோள் காட்ட முடியுமானால், நீங்கள் வென்றீர்கள் என்று பொருள்; அதை நினைவு கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு இதற்கு மிகத் தேவை.

அன்புடன்,
இராம.கி.