Monday, December 13, 2010

பொக்கணி = புஷ்கரணி

www.tamilnet.com என்ற தமிழீழ வலைத்தளத்தில் Know the Etymology என்ற தொடர் வந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொடரில் இதுவரை 174 இடங்களின் சொற்பிறப்பு இனங்காட்டப் பெற்றிருக்கிறது. ஒரு முறையும் தவறவிடாது இத் தொடரை நான் படிப்பது வழக்கம். இதை யார் எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெரிதும் பாராட்ட வேண்டிய பணி அதுவாகும். ஈழம், இலங்கை ஆகியவற்றின் பல்வேறு இடப்பெயர்களை (சிலபோது மாலத்தீவுப் பெயர்களையும் கூட) ஆழமாக ஆய்வு செய்து சொற்பிறப்புக் காட்டும் இந்தப் பணி எண்ணியெண்ணி வியக்க வேண்டியவொன்றாகும். தமிழீழமும், அது இருக்கும் தீவும் எந்த அளவிற்குத் தமிழரோடு தொடர்புற்றது என்று நிறுவுவதற்கு இதுபோன்ற ஆய்வுகள் பயன்படுகின்றன. ”தமிழருக்கு அத்தீவில் இடமில்லை” என்று சிங்களவன் அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தொல்லியலோடு சொற்பிறப்பியல் ஆய்வும் சேர்ந்து வரலாற்றை நிறுவும் வேலையைச் செய்யவேண்டியிருக்கிறது. [இடைச்சங்க, முதற்சங்க காலப் பழந்தமிழகத்தில் இலங்கைத்தீவு (அன்று அது தீவல்ல, நாக நாடு என்று பெயர்பெற்ற தீவக்குறை.) நம்மோடு தொடர்புற்றே இருந்திருக்கும் என்ற என் கருதுகோள் மேலும் மேலும் உறுதிப் படுகிறது.]

[இப்படி ஒரு தொடரை இற்றை இந்திய ஊர்ப்பெயர்களுக்கு யாரும் செய்து நான் பார்த்ததில்லை. பாவாணருக்கும், இளங்குமரனாருக்கும், இரா.மதிவாணருக்கும், ப.அருளியாருக்கும் பின்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் (குறிப்பாக பேரா. கு,அரசேந்திரன்) ஒருசிலர் மட்டுமே தமிழ்நாட்டில் உருப்படியான சொற்பிறப்பு ஆய்வு செய்கிறார்கள். சொன்னால் பலருக்கும் சினம் ஏற்படுகிறது. தமிழை வைத்து மேடையிலும், அரசியலிலும் பிழைப்போர் தொகை இன்று கூடிப்போய், தமிழுக்குப் பணி செய்வோர் தொகை குறைந்தே வருகிறது. நாட்பட நிலைத்து நிற்கும் அளவில், தமிழுக்கு பணி செய்வோர் தொகை அருகிப் போய், ஆ, ஊ என்று அலைபாயும் கூட்டம் மிகுத்து வருகிறது. (தமிழ் செம்மொழியாகிவிட்டது என்று கூத்தாடுவதே பெருமையாகி அதன் தொடர்ச்சியையும், எதிர்கால நிலைப்பையும் பற்றி நம்மில் யார் கவலைப்படுகிறோம், சொல்லுங்கள்?) ஏதொன்றையும் ஆழ்ந்து படிப்பதும், அறிவியல் வரிதியாய் ஆய்வு செய்வதும், எல்லை மொழிகளை அறிந்து, அவற்றைத் தமிழோடு பிணைத்து புதுப் பரிமானங்களைத் தமிழுக்குக் கொணர்வதும், தமிழியலோடு இன்னொரு நுட்பியலைப் பிணைத்து புதுப் பார்வை காட்டுவதும், ஆங்காங்கே முடிவு தெரியாத தமிழ்வரலாற்றுக் கேள்விகளுக்குத் தீர்வு சொல்வதும், அரிதாய் இருக்கிறது.]

அண்மையில் ”கூட்டம் பொக்குண, கற்பொக்குணை” என்ற பெயர்களின் சொற்பிறப்பை http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33209 என்ற 174 ஆம் பதிவில் ஆய்வு செய்திருந்தார்கள். அந்த வலைத்தளம் போய் பழைய பதிவுகளையும் படித்துப் பார்த்தால், நான் சொல்லுவதன் அருமை புரியும்.

இனிப் பொக்கணிக்கு வருகிறேன்.

புல்>புள்>பொள் என்ற வேர் தமிழில் துளைப்பொருளைக் குறிக்கும். பொக்கம், பொக்கணம், பொக்கல், பொக்கு, பொக்குள், பொக்குளம், பொக்கை, பொகுட்டு, பொங்கல், பொச்சம், பொச்சு, பொச்சை, பொட்டல், பொட்டி, பொட்டு, பொட்டை, பொத்தல், பொதும்பு, பொந்தர், பொந்து, பொய், பொய்கை, பொல்/பொல்லு, பொலுகு, பொழி, பொள்ளல், பொள்ளை, பொளிதல், பொற்றுதல், பொன்றுதல் என்று பல்வேறு சொற்களை இந்த வேர் உருவாக்கும். கூட்டுச் சொற்களையும், இரண்டாம் நிலைச் சொற்களையும், அவற்றின் கூட்டுக்களையும் சேர்த்தால் குறைந்தது 1000 சொற்களாவது தேறும். இப்படி எழும் எல்லாச் சொற்களின் உள்ளே துளைப்பொருள் அடியில் நின்று மற்ற வழிப்பொருள்களைக் குறிக்கும். [நான் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் கூறி விளக்கிக் கொண்டிருந்தால் கட்டுரை நீளும் என்று தவிர்க்கிறேன்.]

இவற்றில் ஒன்றுதான் பொக்கணி என்ற சொல்லாகும். அது நிலக்குழிவில் நிறைந்திருக்கும் நீர்நிலையைக் குறிக்கும். இதன் இன்னொரு திரிவாய் சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் புழங்கும் போகணி என்ற சொல் நீரை மொள்ளும் குவளையைக் குறிக்கும். (போகணி என்பது தமிழக அகரமுதலிகளுள் பதிவு செய்யப்படாத ஒரு சொல். பதிவு செய்யப்படாத வட்டாரச் சொற்கள் ஓரிலக்கமாவது தமிழிற் தேறும். அவற்றையெல்லாம் பதிவு செய்ய யார் முன்வருகிறார்கள், சொல்லுங்கள்? வேரிற் பழுத்த பலாவாய் இவையெல்லாம் பறிப்பாரற்றுத் தொங்குகின்றன.)

பொத்தகம்> புத்தகம்> புஸ்தகம் என்ற சொல், மீத்திருத்தம் பெற்று சங்கதத்துள் புகுந்து மீண்டும் தமிழுக்குத் திரிவாய் நுழைந்து பொத்தகம் என்ற தமிழ்ச்சொல்லையே போக்கடித்தது போல, பொக்கணி என்ற சொல் பொக்கணி> புக்கணி> புஷ்கணி> புஷ்க்ரணி என்றாகும். நாம் மீண்டும் அதைத் தமிழ்முறையிற் பலுக்கிக் கொண்டு புட்கரணி என்று சொல்லுவோம். பெருமாள் கோவில் திருக்குளங்கள் இன்று புஷ்கரணி என்றே அழைக்கப் படுகின்றன. அதன்வழி பொக்குணி என்ற தமிழ்ச்சொல் போயே போயிற்று. புஷ்கரணி என்று சொன்னாற்றான் பெருமாள் அருள் கிடைக்கும் என்று கூட மூடநம்பிக்கை எழுந்து விட்டது. [அதோடு மட்டுமல்லாது தாமரைக் குளம் என்று புதுப்பொருள் சொல்லி பூஷ் கரணி என்றெல்லாம் பொருந்தப் புகல்வார் இன்னொரு பக்கம் நம்மை ஏமாற்றவுஞ் செய்கிறார்கள். இது சங்கதச் சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சிலும் தவறாகப் பதிவு பெற்றிருக்கிறது.]

பொக்கணி, பொக்குணை போன்ற தமிழ்ச்சொற்களுக்குச் சிங்கள இணை காட்டி Know the Etymology ஆசிரியர் தன் கட்டுரையில் இச்சொற்களின் தமிழ்மையை நிறுவுவார். சிங்களத்துள் பல பாலி மொழிச் சொற்கள் புதைந்துள்ளன. பாலி என்பது பாகதத்தின் இன்னொரு வார்ப்பு. பாகதம் சங்கதத்திற்கு முன்னது; வேத மொழிக்குப் பின்னது. பல சங்கதச் சொற்களுக்கு தமிழிணை காண வேண்டுமானால் பாகதம், பாலி அறிவது பயன்தரும். ஒருவகையில் பார்த்தால், தமிழிற் சொல்லாய்வு செய்யும் போது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் அறிவது எவ்வளவு துணை செய்யுமோ, அதே போலச் சிங்களம் அறிவதும் நமக்குப் பயன்தரும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, December 03, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 3

"தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்" என்ற என் இருபகுதிக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டில் மலேசியக் கணிஞர் நண்பர் முத்து நெடுமாறன்,

: "Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities. Period." என்று கூறி இருக்கிறீர்கள். இதை விளக்கும் ஆவணங்கள் (sample documents) ஏதாவது கிடைக்குமா? JPGஇல் இருந்தாலும் தாழ்வில்லை

என்று கேட்டிருந்தார். அவருக்கு விடை சொல்லும் முகமாக 3 ஆவணப்படங்களைக் கண்ணி(to scan)யெடுத்து கீழே இந்த இடுகையிற் போட்டிருக்கிறேன். இவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பல்லவர் செப்பேடுகள் முப்பது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தக் காலப் புரிதலுக்காகச் செப்பேட்டின் மசிப்படியைப் (estampage) படமாக்காது அச்சுப்படியைப் (print copy) படமாக்கியிருக்கிறேன். மசிப்படியைப் பார்த்தாலும் அது அச்சுப்படி போலவே இருப்பதை நுண்ணித்துப் பார்ப்போர் உணரமுடியும்.

முதலாவது கண்ணை (scan - noun), என் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஏற்கனவே சொல்லப்பட்ட முதலாம் பரமேச்வர வர்மனின் கூரம் செப்பேடாகும். [முதலாம் பரமேச்வர வர்மன் இரண்டாம் மகேந்திர வர்மனின் மகன். முதலாம் நரசிம்ம வர்மனின் பேரன். இவன் ஆட்சிக்கு வந்த காலம் கி.பி.668-669.]



கூரம் செப்பேடு ஐந்தாம் ஏட்டின் முன்புறத்தில் கிரந்தவொழுங்கோடு (grantha orthography) எழுதப்பட்ட வடமொழிப் பகுதியின் 49 ஆம் வரியில் வடமொழிச் சொற்களுக்கு நடுவில் ”ஊற்றுக் காட்டுக் கொட்ட” என்றும் ”நீர்வெளூர்” என்ற தமிழ்ச் சொற்கள் தமிழ் எழுத்தொழுங்கோடு (Tamil orthography) எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். [படத்தை ஊன்றிக் கவனியுங்கள்.] அதாவது இது கலப்பு மொழி. ஆனால் கிரந்தவெழுத்து கிரந்த அடுக்குமுறையிலும், தமிழ் தமிழெழுத்திற்கான நீரொழுக்கு முறையிலும் எழுதப்படுகின்றன. [திரு. நா. கணேசன் சொல்வது போல் 7 தமிழ்க் குறியீடுகளை கிரந்த முன்மொழிவிற்குள் சேர்த்தால் இந்த மொழியொழுங்குகள் அப்படியே குதறிக் குலைந்து போகும். ]

இதைத்தான் நான் “:Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities” என்று சொல்லியிருக்கிறேன். (வீரமாமுனிவருக்கும் மிக முற்பட்ட) அந்தக் காலத்தியத் தமிழெழுத்தில், ஒற்றைக் கொம்பு நெடிலைக் குறித்தது என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொண்டால் சொல்லப்படும் கோட்டம்/ஊர்கள் “ஊற்றுக்காட்டுக் கோட்டம்”, “நீர்வேளூர்” ஆகியன என்பது புரிபடும்.

இனிக் கிட்டத்தட்ட இருநூற்றி இருபது ஆண்டுகள் தள்ளிக் கடைசியில் வரும் பல்லவத் தனித்த அரசனான அபராஜிதன் காலத்திற்கு (கி.பி.885-903) வருவோம். இது தொடர்பாக இரண்டாம் கண்ணைப் படத்தைக் காண வேண்டுகிறேன்.



இது தமிழெழுத்து விரவிவந்த வடமொழிப் பகுதியாகும். தமிழகத் தொல்லியற் துறை திருத்தணிகைக்கு அடுத்துள்ள வேளஞ்சேரி என்னுமிடத்தில் 1979 இல் கண்ட பல்லவர் செப்பேட்டில் வடமொழிப் பகுதியின் இரண்டாம் ஏட்டில் இரண்டாம் பக்கத்தில் முதல் வரியில் ”சிற்றாற்றூர” என்ற ஊர்ப்பெயர் சகரம் கிரந்தமாகவும், ரகரம் கிரந்தமாகும் “ற்றாற்றூ” என்ற றகரம் விரவிவரும் சொற்பகுதி தமிழ் எழுத்தொழுங்கிலும் வருவதைக் காணலாம். இங்கும் ஒரே சொல்லில் கிரந்தம் கிரந்தவொழுங்கிலும், தமிழ் தமிழெழுத்து முறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழின் சிறப்பு றகரம் தமிழ்முறையிலேயே எழுதப்பட்டிருப்பதே முற்காலத் தமிழர் தமிழெழுத்து முறையைச் சரியாகக் காத்தார்கள் என்பதற்குக் காட்டாகும்.

இதே போல அதே செப்பேட்டின் மூன்றாம் ஏட்டில் 1, 2 ஆம் வரிகளில் “குன்றவத்தன கோட்டம் தணியல் நாடு என்ற சொற்கள் சுற்றிலும் கிரந்தவெழுத்துக்களுக்கு நடுவில் தமிழெழுத்திலும், 8 ஆம் வரியில் மேலிருஞ்செறு என்று ஊர்ப்பெயர் “மேலிரி” என்ற பகுதி கிரந்தத்திலும் ”ஞ்செறு” என்ற பகுதி தமிழெழுத்திலும் கிரந்தச்செப்பேட்டுப் பகுதியில் வந்திருக்கும். மறுபடியும் கலவை எழுத்துநடை. இதனாலேயே 7 தமிழ்க்குறியீடுகளைக் கிரந்தத்திற் சேர்க்கக் கூடாது என்று கூறுகிறோம்.

மூன்றாவது கண்ணைப் படமாக அதே செப்பேட்டின் நாலாம் ஏடு முதற் பக்கத்துக்கு வருவோம். இது செப்பேட்டின் தமிழ்ப் பகுதியைக் குறிக்கிறது.



இதில் 4 ஆம் வரியில் “நின்றருளின ‘ஸுப்ரஹ்மண்ய’ர்க்கு என்ற சொல்லில் ’ஸுப்ரஹ்மண்ய” என்ற பகுதி கிரந்த முறையிலும், ‘ர்க்கு” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால், [சந்த்ராத்தித்தர் என்ற சொல்லில் “சந்திராதித்த” என்பது கிரந்த முறையிலும், “ர்” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால்,] ”தமிழ் தமிழாக இருந்தது. கிரந்தம் கிரந்தமாய் இருந்தது” என்பது புரியும். திரு. நா. கணேசன் சொல்வது போல் இரண்டையும் முட்டாள் தனமாய்க் கலந்து யாரும் “எழுத்துக் கந்தரகோளம்” பண்ணவில்லை.

நான் எடுத்துக் காட்டிய மூன்று கல்வெட்டுப் படங்கள் சொல்ல வந்த கருத்திற்குத் துணையாகப் போதும் என்று எண்ணுகிறேன். இக் கல்வெட்டுக்களை எல்லாம் ஒழுங்காகக் குறியேற்றம் செய்யவேண்டுமானால்

”தமிழ்-கிரந்தம் என்ற பெருங்கொத்துக் குறியேற்றம் வரவே கூடாது. அதே பொழுது 7 தமிழ்க் குறியீடுகள் சேர்க்காத கிரந்த வட்டம் மட்டும் தனியே SMP இல் குறியேற்றம் பெறுவதிற் தவறில்லை”

என்றே நான் எண்ணுகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்:

ஆயிரக் கணக்கான தமிழகக் கல்வெட்டுக்கள் இருமொழிக் கல்வெட்டுக்களாகும். அவை ஒழுங்காகக் கணிக்குள் ஏற்றப்பட வேண்டுமானால்

”கிரந்தத்தைத் தனியே வை; தமிழைத் தனியே வை. இரண்டையும் குறியேற்றத்துள் ஒன்றாக்கி உருப்படாமற் செய்யாதே”

என்று தான் அழுத்தமாகக் கூறவேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 30, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 2

கிரந்தம் என்பது ஓர் எழுத்துமுறை, அது தனி மொழியல்ல. முன்பே சொன்னபடி, அது தமிழெழுத்திலிருந்து தான் தொடங்கியது. (இற்றைத் தமிழெழுத்தே கிரந்த எழுத்தில் இருந்து தொடங்கியது என்று சொல்லுவது ஒருசிலரின் தலைகீழ்ப் பாடம். அதன் முறையிலாமையைப் பற்றி நாம் அலசப் போனால் வேறெங்கோ இழுத்துச் செல்லும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.)

பல்லவர் காலத்திற்றான் சங்கதம் எழுத உதவியாய்க் கிரந்தம் பெரிதும் புழங்கியது. நாகரியில், சித்தத்தில் கிடைக்காத பழங்கால ஆவணங்கள் கூடக் கிரந்தத்திலேயே எழுதப் பெற்றிருக்கின்றன. [அதர்வண வேதமே கிரந்தத்திற் தான் முதலிற் கிடைத்தது என்று சொல்லுவார்கள்.] ஒருவகையிற் பார்த்தால் சங்கத மொழி ஆவணங்களுக்கு நாகரி அளவிற்குக் கிரந்தமும் முகன்மையானதே. இது போக இன்னொரு பயன்பாட்டையும் இங்கு சொல்லவேண்டும். தமிழும் வடமொழியும் கலந்த 50000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் ஈரெழுத்துப் பாணியில் மணிப்பவள நடையில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. கிரந்தத்தின் இன்றையப் பயன்பாடாக 3 பயன்களைச் சொல்லுகிறார்கள். அதைச் சில பத்திகள் கழித்துக் கீழே பார்ப்போம்.

கணியில் கிரந்த எழுத்துக்களைக் குறியேற்றம் செய்வதையொட்டி அண்மையில் நடந்திருப்பவை இரு வேறு முன்மொழிவுகள். இவற்றில் முதல் முன்மொழிவு ”நீட்டித்த தமிழ்” எனும் தலைப்பில் திரு. ஸ்ரீரமண சர்மா கொடுத்தது. இரண்டாவது முன்மொழிவு கிரந்த எழுத்துக்களைத் தமிழோடு ஒட்டினாற்போல அல்லாது தனியிடத்திற் குறியேற்றம் செய்வதற்காகத் திரு. நா. கணேசன், திரு. ஸ்ரீரமண சர்மா, இந்திய நடுவணரசு என மூவரால் அடுத்தடுத்துக் கொடுக்கப்பட்டது. இவற்றைப் புரிந்து கொள்வதற்குத் தோதாகக் கொத்துத் தேற்றத்தை (set theory) நாடுவோம்.



ஒரு தாளில் ஒன்றோடொன்று குறுக்காய் வெட்டினாற்போல் இரண்டு பெரிய வட்டங்கள் போட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்விரு வட்டங்களுக்கும் பொதுவாய் ஒரு பொதுவில்லையும், அதன் இருபக்கங்களில் இரு தனிப்பிறைகளும் இருப்பதாக இவ்வமைப்பைப் புரிந்து கொள்ளலாம். ஒரு தனிப்பிறையைத் தமிழ்ப்பிறை என்றும், இன்னொன்றைக் கிரந்தப்பிறை என்றும் சொல்லலாம். இந்திய நடுவண் அரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குக் (Unicode Consortium) கொடுத்த கிரந்த முன்மொழிவின் அடிப்படையில், பொதுவில்லையில் 41 குறியீடுகளும் தமிழ்ப்பிறைக்குள் 7 குறியீடுகளும் கிரந்தப் பிறைக்குள் 41 குறியீடுகளும் உள்ளன. மூன்று பகுதிகளும் சேர்ந்து மொத்தம் 89 குறியீடுகள் ஆகும்.

இந்த 89 குறியீடுகளை இந்திய நடுவணரசு கொடுத்திருக்கும் முன்மொழிவின் பட்டியல் வழி பார்த்துக் கொள்ளலாம். கிரந்த எழுத்துக்கள் எப்படி இருக்கும், குறியீடுகள் என்னென்ன என்று அறிவதற்காகக் கீழே வரும் படம் கொடுக்கப்படுகிறது.


கிரந்தப் பிறைக்குள் இருக்கும் 41 குறியீடுகளில் 14 குறியீடுகள் வேத ஒலிப்புக்களைக் குறிக்கும் மீக்குறிகளாகும் (diacritics). அவற்றை ஒதுக்கினால், கிரந்தப்பிறையில் உள்ள குறியீடுகள் 27 மட்டுமே. ”மாவோடு மா” என்று ஒப்பிட்டால் கிரந்தப்பிறையில் இருக்கும் குறிகள் 27 என்றே கொள்ளவேண்டும்.

பொதுவில்லையில் ஏற்கனவே தமிழிற் புகுந்து பதுங்கிக் கொண்ட [ஜ், ஸ், ஷ், இன்னொரு வகை z - (U+0BB6) இது என் கணியில் போடவராது, மேலும் ஹ் என்ற] 5 கிரந்த எழுத்துக்களும் அடங்கியுள்ளன. [ஸ்ரீ, க்ஷ் என்னும் கூட்டெழுத்துக்கள் இக்கணக்கெடுப்பில் இல்லை. அவற்றை நடுவணரசின் கிரந்த முன்மொழிவின் படி, பொதுவில்லையில் சேர்க்கவில்லை.]

ஆக,

தமிழ்-கிரந்தப் பொதுவில்லையில் இருக்கும் குறியீடுகள் = 41
தனிக் கிரந்தப்பிறையில் இருக்கும் குறியீடுகள் = 27
தனித் தமிழ்ப்பிறையில் இருக்கும் குறியீடுகள் = 7
கிரந்த வட்டத்தில் இருக்கும் குறியீடுகள் = பொதுவில்லைக் குறியீடுகள் + தனிக் கிரந்தப்பிறைக் குறியீடுகள் = 41+27 = 68
தமிழ் வட்டத்தில் இருக்கும் குறியீடுகள் = பொதுவில்லைக் குறியீடுகள் + தனித் தமிழ்ப்பிறைக் குறியீடுகள் = 41+7 = 48 (இதிற்றான் ஏற்கனவே நுழைந்த 5 கிரந்த எழுத்துக்கள் உள்ளன.)
தமிழ்-கிரந்தம் இரண்டும் சேர்ந்த பெருங்கொத்தில் இருக்கும் குறியீடுகள் (வேதக் குறியீடுகள் தவிர்த்து) = 27+41+7 = 75

இங்கே Superset என்பது கிரந்தம்-தமிழ் ஆகிய இரண்டும் சேர்ந்த பெருங்கொத்து. இப் பெருங்கொத்தை இரு வழிகளில் அடையலாம். முதல் வழியில், கிரந்தத்திற் (68) தொடங்கித் தமிழ்க் குறியீடுகளை (7) சேர்த்தால் மொத்தம் 75 கொண்ட பெருங்கொத்து வந்துசேரும். இரண்டாம் வழியிற் தமிழிற் (48) தொடங்கி கிரந்தத்தைச் (27) சேர்த்தாலும் அதே 75 கொண்ட பெருங்கொத்துத் தான் வந்து சேரும். எந்த வழியில் வந்து சேருகிறது என்பது முகன்மையில்லை. இரண்டுவழியிலும் ஒரே பெருங்கொத்துத் தான் வந்து சேரும் என்பது முகன்மையானது.

இதை விளங்கிக் கொள்ளாமல், “கிரந்த எழுத்துகளில் ஏற்கனவே சில தமிழ் எழுத்துகள் இருக்கின்றன; அவற்றை என்கோடு செய்யும்போது மேலும் ஐந்து எழுத்துகளை என்கோடு செய்வதில் என்ன சிக்கல் ? அடுத்தது, தமிழ் எழுத்துகளைச் சேர்த்து கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக உருவாக்க நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே தமிழை ஏன் அப்படியொரு ’சூப்பர் செட் ’ஆக உருவாக்கக்கூடாது ? என்று கேட்டேன். அதற்கு யாரும் திருப்தியான பதிலை அளிக்கவில்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் தமிழ்மன்றம் மடற்குழுவில் கேட்டிருந்தார். இந்தக் குறியீடுகள் பற்றிய முழுவிவரம் புரிந்திருந்தால் இப்படியொரு பூஞ்சையான மேலோட்டக் கேள்வி அவரிடமிருந்து எழுந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

இன்னொன்றும் இங்கு சொல்லவேண்டும். எந்தச் சங்கத ஆவணம் உருவாக்குவதற்கும் கிரந்த வட்டத்தில் இருக்கும் 68 குறியீடுகள் மட்டுமே முற்றிலும் போதுமானவை. இக்குறியீடுகளை வைத்துத்தான் 1500 ஆண்டுகள் காலமும் ஏராளமான சங்கத ஆவணங்களை உருவாக்கியிருக்கிறார்கள். 75 குறியீடுகள் கொண்ட பெருங்கொத்தை அவர்கள் இதுநாள் வரை நாடியதேயில்லை. [அப்படி நாடியதாக பேரா. கி. நாச்சிமுத்து, நா. கணேசன் போன்று சிலர் சொல்லும் கூற்றுக்கள் ஆழ்ந்து ஆராய்ந்தால் ஆதாரமற்றவை என்பது புலப்படும்.]

அதே பொழுது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்த வட்டத்தால் தமிழ் ஆவணங்களை எழுதவே முடியாது. 48 குறியீடுகள் கொண்ட தமிழ் வட்டத்தால் மட்டுமே எழுத முடியும்.

இங்கே வட்டங்களுக்குள் இருக்கும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கைகளையும் மற்ற விவரங்களையும் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொண்டு மேற்கொண்டு கட்டுரைப் படிக்குமாறு வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது புரியாமல் கட்டுரையில் வேறெதுவும் புரியாது. நடுவணரசின் முன்மொழிவில் கொடுக்கப்பட்ட கிரந்தக் குறியீட்டுக் கட்டப் படத்தையும் கூர்ந்து பார்ப்பது தேவையானது.

இனி ஒருங்குறிச் சேர்த்தியத்தின் முன் வந்து சேர்ந்திருக்கும் “நீட்டித்த தமிழ்” என்ற முன்மொழிவையும், மூன்று பேர் கொடுத்த கிரந்த முன்மொழிவையும் மேலே சொன்ன வட்டங்களின் வழிப் புரிந்து கொள்வோம்.

1. (48 குறியீடுகள் கொண்ட) தமிழ்வட்டத்தோடு (27 குறியீடுகள் கொண்ட) கிரந்தப்பிறையைச் சேர்த்து (75 அடங்கிய) ஸ்ரீரமண சர்மாவாற் கொடுக்கப் பட்ட “நீட்டித்த தமிழ்” என்ற பெருங்கொத்து முன்மொழிவு. [இதை ”நீட்டித்த தமிழ்” என்றது தவறான பெயர். உண்மையில் இது தமிழ்-கிரந்தம் என்னும் ஈரெழுத்துக் கலவையை, அதாவது நாம் முன்னாற் சுட்டிக் காட்டிய பெருங்கொத்தை, வேண்டுகின்ற முன்மொழிவாகும்.]

2. (68 குறியீடுகள் கொண்ட) கிரந்த வட்டத்தோடு (7 குறியீடுகள் கொண்ட) தமிழ்ப்பிறையையும் சேர்த்து (75 அடங்கிய) நா. கணேசனால் கொடுக்கப்பட்ட பெருங்கொத்து முன்மொழிவு. [இதுவும் ஈரெழுத்துக் கலவை அடங்கிய பெருங்கொத்தை வேண்டும் முன் மொழிவாகும்.]

3. (68 + 4 குறியீடுகள் கொண்ட) கிரந்தவட்டம் மட்டுமே அடங்கிய ஸ்ரீரமண சர்மாவின் கிரந்த முன்மொழிவு. [அதாவது இவர் 7 குறியீடுகள் கொண்ட தமிழ்ப்பிறையில் இருந்து 4 குறியீடுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறார். இதை பேரா. தெய்வசுந்தரம் என்னிடம் ஆழ்ந்து உணர்த்தியதை இங்கு நான் சொல்ல வேண்டும்.]

4. ஸ்ரீரமண சர்மாவிற்கும் நா. கணேசனுக்கும் இடையே ஏற்பட்ட வேறுபாட்டின் தீர்வாக, இந்திய நடுவணரசால் மீண்டும் (68 குறியீடுகள் கொண்ட) கிரந்த வட்டத்தோடு (7 குறியீடுகள் கொண்ட) தமிழ்ப்பிறையும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட (ஈரெழுத்துக் கலவையாய், 75 குறியீடுகள் அடங்கிய) பெருங்கொத்து முன்மொழிவு.

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது 1, 2, 4 ஆகிய முன்மொழிவுகள் தாம். அதன் மூலம் கிரந்தப் பெருங்கொத்துள் எல்லாத் தமிழ்க்குறியீடுகளையும் பொருத்தித் தமிழெழுத்துக்களை ஓர் உட்கொத்தாக்கும் (subset) சூழ்க்குமமும், பெருங்கேடும் அடங்கியிருக்கின்றன.

இந்த நாலு முன்மொழிவுகளில் முதல் முன்மொழிவு (ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்”
முன்மொழிவு) தமிழக அரசின் கவனத்திற்கு வருவதற்கு முன்னால், தனி மாந்த மறுப்புகளிலேயே (பலரும் மறுப்பளித்தனர்; நானும் உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் வழி மறுப்பளித்திருந்தேன்), கூடவே உத்தமம் அளித்த மறுப்பிலேயே, ஒருங்குறி நுட்பியற் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரமண சர்மாவின் முன்மொழிவு மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப் பட்டது. இம்முன்மொழிவு திருப்பியனுப்பப் பட்டதில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் நுட்பியல் மறுப்பு முகன்மையான காரணம் வகித்தது. அதைச் சற்று விளங்கிக் கொள்ளுவோம்.

ஸ்ரீரமண சர்மா அனுப்பிய ”நீட்டித்த தமிழ்” முன்மொழிவில் நாலு ககரம், நாலு சகரம். நாலு டகரம், நாலு தகரம், நாலு பகரம், சங்கத உயிர் ருகரம், சங்கத உயிர் லுகரம் போன்றவையும் இன்னும் சிலவும் மேற்குறிகள் (superscripts) போட்டுத் தனியிடம் கேட்கப் பட்டன. (ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்” முன்மொழிவிற்கான விளக்க ஆவணத்தில் ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் இருந்தது. அதை மூன்று படங்களாக கீழே வெட்டி ஒட்டியுள்ளேன். அந்தப் படத்துள் வரும் ஆங்கில விளக்கம் திரு.ஸ்ரீரமண சர்மாவே தந்தது.






மேலேயுள்ள மூன்று படங்களிலும் திரு.சர்மா நுழைக்கவிரும்பும் எழுத்துக்கள்/குறியீடுகள் உள்ள கட்டங்கள் சற்று சாம்பல் நிறத்தில் வண்ணம் தீட்டியிருப்பதைக் கவனியுங்கள். இந்த எழுத்துக்கள்/குறியீடுகள் தான் கிரந்தப்பிறைக்கென உள்நுழையும் 27 குறியீடுகள்.

இப்படி ஒருசில எழுத்துக்களுக்கு மேற்குறிகள் போட்டு எழுதுவது ஒன்றும் புதியமுறையல்ல. இதற்கு முன்னரே 40, 50 ஆண்டுகளாய் அச்சில் செய்யப்பட்டது தான். இப்பொழுது BMP இல் இருக்கும் தமிழெழுத்துக் குறியீடுகளையும், எல்லா ஒருங்குறி வார்ப்புக்களிலும் இருக்கும் மேற்குறி வாய்ப்பையும் பயன்படுத்திச் சரம் சரமாய் க1, க2, க3, க4........ரு’, லு’ என்று கணிவழியாகவும் வெளியிட முடியும்.

இம் மேற்குறிகளைக் கணித்திரையில் வெளியிடும் போது, கி2, கீ2, கு2, கூ2, கெ2, கே2, கை2, ஆகிய எழுத்து வரிசைகளில் மேற்குறி ஒழுங்காய் வந்துவிடும். கா2, கொ2, கோ2, கௌ2 ஆகிய நாலு வகை எழுத்து வரிசைகளில் மட்டும் தான் ஒருவகைச் சிக்கல் ஏற்படும். அதாவது, காலுக்கும் ஔகாரக் குறிக்கும் அப்புறம் தான் மேற்குறிகளை மைக்ரொசாவ்ட் கணியில் இடமுடியும். அதேபொழுது ஒருசில நுணுகிய மாற்றங்களுக்கு அப்புறம் ஆப்பிள் கணியில் மேற்குறியை இட்டு அதற்கு அப்புறம் கால் குறியையும், ஔகாரக் குறியையும் இடமுடிகிறது.

இந்தச் செய்து காட்டலின் மூலம் ”இது குறியேற்றம் அளவிற் செய்ய வேண்டிய மாற்றமேயல்ல. இயக்கச் செயலி (operating system) மூலம் நடைபெற வேண்டிய / நடைபெறுத்தக் கூடிய மாற்றம்” என்று மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் தெளிவாக நிறுவித்துக் காட்டினார். ”இப்பொழுது இருக்கும் BMP தமிழ்க் குறியேற்றத்தையும், சாத்தாரமாய் (= சாதாரணமாய்) எந்தக் கணியிலும் இருக்கும் மேற்குறிகளையும் கொண்டு ”நீட்டித்த தமிழில்” ஸ்ரீரமண சர்மா கேட்கும் எல்லாக் குறிகளையும் கணித்திரையிலும், கணியச்சியிலும் (computer printer) கொண்டுவந்து காட்டமுடியும்” என்னும் போது ”நீட்டித்த தமிழ்” என்ற முன்மொழிவே சுத்தரவாகத் தேவையில்லை என்றாகிறது. ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்” என்னும் முதல் முன்மொழிவு அதனாலேயே அடிபட்டுப் போகிறது.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில், இன்னொரு பக்கம் “ஐயய்யோ, ஒருங்குறித் தமிழில் 27 கிரந்த எழுத்துக்களை நுழைக்கிறார்கள்” என்று சில தமிழறிஞர் கூக்குரலிட்டது ஒருவகையில் தவறான புரிதலே. தமிழ் எழுத்துக்கள் இப்பொழுதிருக்கும் ஒருங்குறி அடித்தளப் பட்டியில் (BMP) யாருமே கிரந்தத்தை நுழைக்கவில்லை. தமிழெழுத்து அங்கு அப்படியே தான் இருக்கிறது. இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டு BMP தமிழ் நீட்டிக்கப் பட்டிருந்தாற்றான் அந்தக் கூக்குரலுக்கு ஓரளவு பொருளுண்டு. [In that case, we would have ended up with Tamil being encoded two times with disastrous consequences. Luckily this hasn't happened. We should never allow that to happen.]

தவிர, BMP இல் இருக்கும் தமிழெழுத்தில் எந்த மாற்றமும்.செய்யாது, மேற்குறி கொண்டு சர நுட்பத்தால் (sequence technique) கிரந்த ஆவணம் உருவாக்கிச் சங்கதம் எழுதினால் (அதாவது ’க3ங்க3’ என்பது போலத் தமிழெழுத்தையும், மேற்குறியையும் கொண்டு யாரேனும் எழுதினால்) நாம் கூக்குரலும் எழுப்பவியலாது. அது முற்றிலும் சட்ட பூருவமான ஒழுங்கான படியாற்றம் (application) தான். BMP இல் இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்துக்களை இப்படிப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு நமக்கு எவ்வுரிமையும் கிடையாது. உணர்ச்சி வசப்படாமல், ஆழ்ந்து ஓர்ந்து பார்த்து, தமிழார்வலர்கள் அமைதி அடையவேண்டும் என்று மட்டுமே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, முத்து நெடுமாறனின் ”செய்து காட்டுகை (demonstration)” மூலம் தெளிவு பெற்ற ஒருங்குறி நுட்பியற் குழு ”ஸ்ரீரமண சர்மாவின் நீட்டித்த தமிழ் என்னும் முதல் முன்மொழிவை இனிமேல் ஏற்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்றே தமிழ்க் கணிஞர்கள் இப்பொழுது எண்ணுகிறார்கள். தவிர, மீண்டும் 2011 பிப்ரவரி 26க்கு முன் இதை வலியுறுத்தியும் அவர்கள் எழுதுவார்கள்.

இனி மேலே சொன்ன 2,3,4 ஆகிய கிரந்த முன்மொழிவுகளுக்கு வருவோம். இதில் தான் தமிழில் இருந்து ஏழு குறியீடுகளை (எகர உயிர், ஒகர உயிர், எகர உயிர்மெய்க்குறியீடு, ஒகர உயிர்மெய்க்குறியீடு, ழகரம், றகரம், னகரம்) கிரந்த முன்மொழிவிற்குள் திரு. நா. கணேசன் சேர்த்திருந்தார். ஸ்ரீரமண சர்மா எகர உயிர், ஒகர உயிர், எகர உயிர்மெய்க்குறியீடு, ஒகர உயிர்மெய்க்குறியீடு ஆகிய 4-யை மட்டும் சேர்த்திருந்தார். ழகரம், றகரம், னகரம் ஆகியவற்றை விட்டுவிட்டார்.]

திரு. நா. கணேசன் 7 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்தத்துட் சேர்ப்பதற்குக் கூறிய காரணங்கள் எவ்வாதாரமும் இல்லாது பொய்யாகக் கூறப்பட்டவையாகும்.

எங்கோ சென்னையில் இருக்கும் “சம்ஸ்க்ருத க்ரந்த லிபி ஸபா” என்ற பதிப்பகம்/அச்சகம் திவ்யப் ப்ரபந்தத்தை கிரந்த லிபியில் எப்பொழுதோ வெளியிட்டதாகக் கூறி (அதாவது, கிரந்த எழுத்துமுறைக்குள் இவ்வெழுத்துக்கள் இருந்ததாகக் கூறி) வெறுமே கையால் எழுதிய சான்றுகளைக் காட்டித் தன் முன்மொழிவைத் திரு.நா.கணேசன் அனுப்பியிருந்தார். (இங்கே லிபியென்றவுடன் கிரந்த அடுக்குக் கட்டு முறையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் சொன்ன கையெழுத்து எடுத்துக் காட்டில் அந்தக்காலத் தமிழெழுத்துப் போலும் புள்ளி வைத்த ஒகரக் குறில் இருந்ததாம். இன்னோர் எடுத்துக் காட்டையும் இங்கு புரிவதற்காகச் சொல்ல முடியும். ”வாழ்க்கை” என்ற தமிழ்ச் சொல்லை அடுத்தடுத்து இடம்வலமாய்ப் போட்டிருந்தால் அது தமிழெழுத்து முறை. ”வா”வுக்கு அடுத்தாற் போல் ழ, க, கை போன்றவற்றை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்குக் கட்டு முறையிற் போட்டிருந்தால் அது கிரந்தப் பதிப்பு முறை.)

நண்பர் நா. கணேசன் தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களை கிரந்த முறையில் ”சம்ஸ்க்ருத க்ரந்த லிபி ஸபா” பதிப்பித்ததாக எந்த ஆதாரமுமின்றிப் புகலுகிறார். இதுவரை எங்கு தேடிப் பார்த்தும் அப்படி ஒரு ”ஸபா” முகவரியைச் சென்னையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, திரு. கணேசனும் உருப்படியான ஆதாரங்கள் தரவில்லை. எந்தக் கேள்விக்கும் மடற்குழுக்களில் அவர் இப்போது மறுமொழி சொல்ல மறுக்கிறார். அதே பொழுது, கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல ”தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்ற திராவிட நூல்கள் கிரந்த லிபியில் எழுதப்பட்டன” என்று வெற்றாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

அப்படிக் கிரந்த எழுத்தில் அவை எழுதப்பட்டு இருந்தாலும், எத்தனை ஆவணங்கள் அப்படியெழுந்தன? - என்ற கேள்வி நம்முள் இயற்கையாகவே எழுகிறது. இதுபோன்ற எழுத்திற்கான வரலாற்றில் ஆதாரங்கள் பல இருக்கவேண்டாமா? வெறுமே ஒற்றை ஆதாரத்தை வைத்துக் கொண்டு மேம்போக்கிற் பேசிவிட முடியுமா? எங்கோ சென்னையில் எழுந்த ஒரு பதிப்பு, 10 கோடித் தமிழ் மக்களின் எழுத்து மரபைக் குலைக்கலாமா? ”தமிழ் ஆவணங்கள் கிரந்தத்தில் எழுதப்பட்டதாய்ப் பரவலான புழக்கம் இருந்ததா, இல்லையா” என்று நிறுவ வேண்டாமா? இப்படி ”மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்” என்று சொல்லி தமிழெழுத்து மரபைக் குலைக்கலாமோ? “இது ஓர் அண்டப் புளுகோ? ஏமாற்றோ?” என்ற ஐயம் நமக்கு உறுதியாக எழுகிறது.

பொதுவாக அவருடைய முன்மொழிவு உள்ளிடற்று மொக்கையாகக் காணப்பட்ட காரணத்தால், சங்கதப் பயன்பாட்டுச் சான்றுகளை அவர் சரியான முறையில் விளக்காத நிலையில், ஆழ்ந்து அறிவார்ந்த முறையில் எழுதப்பட்ட ஸ்ரீரமண சர்மாவின் கிரந்த முன்மொழிவு (மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்றாம் முன்மொழிவு), ஒருங்குறி நுட்பியற் குழுவின் கவனத்திற்குப் போயிருக்கிறது.

இன்னொரு வேறுபாடும் கணேசன் (2), சர்மா (3) ஆகியோரின் கிரந்த முன்மொழிவுகளுக்கு உண்டு. கணேசனின் முதல் கிரந்த முன்மொழிவு, தமிழ் இப்பொழுது இருக்கும் அதே அடித்தளத் தட்டில் (BMP) கிரந்தத்திற்கும் இடம் ஒதுக்கும் படி கேட்டிருந்தது. ஸ்ரீரமண சர்மாவோ (3) துணைத் தளத் தட்டில் (SMP) தான் கிரந்தத்திற்கு இடம் கேட்டிருந்தார். (
(பின்னால் கணேசனும் தன் இறுதி முன்மொழிவில் SMP - க்குப் போய்விட்டார்.)
கணேசனின் முதற் கிரந்த முன்மொழிவு சர்மாவின் கிரந்த முன்மொழிவைக் காட்டிலும் தாக்கம் வாய்ந்தது. சர்மாவின் முன்மொழிவு ஒருவகை உள்ளமைத் தனம் (realistic character) கொண்டது. இரண்டு முன்மொழிவுகளையும் படிப்போருக்கு இது இயல்பாகவே விளங்கும். Sriramana's proposal was much more substantive, clear and transparent.

2, 3 ஆகிய இரு முன்மொழிவுகளுக்கும் இடையே இருந்த முரண்பாடுகளைக் கண்டு இவற்றைச் சரிசெய்ய வேண்டி, ஒருங்குறி நுட்பியற் குழு இந்திய நடுவணரசின் உதவியை நாடியது. இவ்வுதவி நாடல் தமிழக அரசின் கவனத்திற்கு வராது போனது. நடுவணரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் இரு கிரந்த முன்மொழிவுகளையும் ஒரு குழுவைக் கொண்டு சரிசெய்து ஒரு பொது கிரந்த முன்மொழிவை (4) உருவாக்கியது. அதுவும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வில்லை.

[கிரந்தம் என்ற எழுத்துமுறை தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்ற அளவில், ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், அதைக் கணிக்குள் குறியேற்றம் செய்வதற்கு முன், ஞாயமாக, நடுவணரசு தமிழக அரசைக் கேட்டிருக்க வேண்டாமா? ஏற்கனவே பரவலான புழக்கத்தில் இருக்கும் தமிழ்க் குறியேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லாது கிரந்தத்தைக் குறியேற்றம் செய்யவேண்டிய கட்டாயத்தில், இந்திய நடுவணரசு தமிழக அரசின் கருத்தை உறுதியாகக் கேட்டிருக்க வேண்டும். என்ன காரணமோ, தெரியவில்லை, அது கேட்கவில்லை; மொத்தத்தில் நடுவணரசு அதிகாரிகள் இதில் கோட்டை விட்டுவிட்டார்கள்.]

தற்செயலாக செபுதம்பரில் தனிமாந்த முயற்சிகளில் இந்தக் கிரந்த முன்மொழிவுகள் (2,3,4) பற்றி விவரமறிந்த தமிழ் நுட்பியலார் ஒரு சிலர் நாளும் பொழுதும் இல்லாக் காரணத்தால், பொது இடங்களிற் கத்தி முழக்கமிட்டு ”மேலும் காலநேரம் வாங்க வேண்டும்” என்று முயலும்போது தான் ஆசிரியர் வீரமணியை நாடுவது பயன்தரும் என்று தெளிவானது. இதில் பேரா. இ.மறைமலையும், நண்பர் இ.திருவள்ளுவனும் பெரிதும் உதவினார்கள். பாராட்டப் படவேண்டிய முயற்சி. ஐயா வீரமணியின் இடையீட்டால் தமிழக முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இதைக் கொண்டுவந்து, அற்றை அமைச்சர் ஆ. இராசாவின் கவனத்திற்கும் கொண்டுவந்து நடுவண் அரசும் ஒருங்குறி நுட்பியற் குழுவும் உடனடியாய் எந்த முடிவும் எடுக்காது 2011 பிப்ரவரி 7 வரை தள்ளிப் போடும்படி செய்ய முடிந்தது.

இனிக் கிரந்தம் என்ற எழுத்திற்கு உரியதாகச் சொல்லப்படும் மூன்று பயன்பாடுகளைப் பார்ப்போம்.

1. முதற் கூற்று - கிரந்தத்தைக் குறியேற்றுவதால் பழைய கல்வெட்டுக்கள், செப்பேடுகளைக் கணிமைப் படுத்தி அலச முடியும் - என்பது.

இந்தப் பயன்பாடு உண்மைதான். தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரை ஞாயமான தேவையும் கூட. காட்டாகப் ”பெருமாள் என்ற சொல் எப்பொழுது எழுந்தது?” என்று ஆயும் போது முன்னோர் ஆதாரங்களை வைத்துக் கொண்டு, கண் வலிக்க ஒவ்வொரு கல்வெட்டாய்ப் படிக்கும் முறையில் இரண்டு வாரங்களில் கி.பி.800 அளவில் முதலாம் ஆதித்த சோழன் கல்வெட்டில் தான் பெருமாள் என்ற சொல் முதலிற் பயன்பட்டிருக்கிறது என்று என்னால் தமிழ்ப்பகுதியை மட்டும் வைத்துக் கண்டுபிடிக்க முடிந்தது. நான் கல்வெட்டுக்களின் கிரந்தப்பகுதியைப் படிக்கவில்லை. இதற்கு மாறாய், இக்கல்வெட்டுக்களைக் கணியேற்றம் செய்திருந்தால் ஒரு கால்மணி நேரத்திற்குள் எந்த ஆண்டில் இச்சொல் எழுந்தது என்று கண்டுபிடித்துச் சொல்லியிருக்க முடியும். இப்படிக் கல்வெட்டுக்களை ஆய்வதற்குத் தமிழெழுத்துக்கள் மட்டுமல்லாது கிரந்தமும் குறியேற்றம் செய்யப்படுவது நன்மை பயக்கும்.

இதே போல ”அப்பர் காலத்தில் இருந்த அரசன் யார்? யார் அவரை சமய மாற்றத்திற்குத் துன்புறுத்தினார்?” என்ற ஆய்ந்தறிய பல்லவ அரசன் மகேந்திர வர்மனின் திருச்சிராப்பள்ளி மலைக் குகைக் கல்வெட்டில் இருந்த ”குணபர” என்ற கிரந்தக் கீற்றே 1950 களில் இருந்த ஆய்வாளர்களுக்குப் பயன்பட்டது. [பார்க்க. மயிலை சீனி வேங்கடசாமியாரின் நூல்கள்.]

இந்தக் காலத்தில் கிரந்த-தமிழ்க் கலவைக் கல்வெட்டுக்களை எல்லாம் கணிக்குள் ஏற்றியிருந்தால் இது போல எத்தனையோ வரலாற்று உண்மைகளை குறைந்த நேரத்தில் நிறுவ முடியும். அதற்கு உதவியாய்க் கிரந்தம் குறியேற்றப் பட்டால் பெரும் வாய்ப்புத் தான்.

ஆனால் இதைச் செய்யக் கிரந்தக் குறியேற்றத்தில் 75 குறியீடுகள் இருக்க வேண்டுமா? 68 குறியீடுகள் இருக்க வேண்டுமா? - என்பது உடனே எழும் கேள்வி. முன்னே சொன்னது போல்
கிரந்தமும், தமிழும் கலந்தே கணக்கற்ற கல்வெட்டுக்கள் எழுந்திருக்கின்றன. முழுக்க முழுக்க சங்கதப் பகுதியிலும் கூட தமிழ்ச்சொல் தமிழெழுத்தால் எழுதப் பட்டிருக்கிறது.

காட்டாகப் பல்லவர்களின் கூரம் செப்பேட்டில் “ஊற்றுக்காட்டுக் கோட்ட”, “நீர்வேளூர்” போன்ற சொற்களும், உதயேந்திரம் செப்பேட்டில் “வெள்ளாட்டூர்”, “கொற்ற” என்ற சொற்களும் வடமொழிப் பகுதியில் தமிழெழுத்திலேயே எழுதப்பட்டுள்ளன. (பார்க்க: தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி -1 ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002. பக்கம் 108) பாண்டியரின் தளவாய்புரம் செப்பேட்டில் கேஷவன் என்ற சொல் வடமொழிப் பகுதியில் ஷகரம் தவிர்த்து கே, வ, ன் என்ற எழுத்துக்கள் தமிழாகவேயிருக்கின்றன. இதே போல வேள்விக்குடிச் செப்பேட்டில் தமிழ் ஒகரமும் மற்ற கிரந்த எழுத்துக்களும் கலந்து வடமொழிப் பகுதி வருகிறது. (செய்தி நண்பர் மணிவண்ணன் மூலம் அறிந்தது.)

அதாவது இது போன்ற கல்வெட்டுக்கள், செப்பேடுகள் எல்லாம் ஒருவிதமான ஈரெழுத்துக் கலவையிலேயே ஆனால் அந்தந்த எழுத்தொழுங்கோடு (orthography) எழுதப் பட்டுள்ளன. அப்படியானால் பழங் கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் வரலாற்றிற் கண்டது, கண்டபடியே வெளியிட்டுப் பாதுகாக்க வேண்டுமானால், கிரந்தம் என்பது 68 குறியீடுகளோடு மட்டுமே குறியேற்றப் பட வேண்டும்; இந்த 7 தமிழ்க்குறியீடுகள் கிரந்தக் குறியேற்றத்துள் போகவே கூடாது என்ற முடிவிற்கே நாம் வர வேண்டியிருக்கிறது.

அதற்கு மாறாக, 68+7 குறியிடுகளோடு கிரந்தக் குறியேற்றம் போனால் ”கல்வெட்டில் எது தமிழ், எது கிரந்தம்?” என்று அடையாளம் காண்பதிற் பெருஞ்சரவல் வந்துவிடும். [கணியில் ஏற்றப்படும் ஆவணங்களை அலசுவது பற்றியும், புள்ளிமுறை - அடுக்குமுறை பற்றிய முன்னாற் காட்டிய அலசலையும் இங்கு நினைவு கொள்ளுங்கள். நடுவணரசின் குழுவினர், நா. கணேசன் போன்றோர் இந்தச் சிக்கலை உணராமலோ, அல்லது அவர்களின் உண்மைக் குறிக்கோளைச் சொல்லாது மறைத்தோ, 7 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்த முன்மொழிவிற்குள் கொண்டுவருகிறார்கள். ஸ்ரீரமணசர்மா போன்றவர்கள் 4 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்த முன்மொழிவிற்குள் கொண்டுவருகிறார்கள். இதன்மூலம் இருவருமே பெருங்கேடு விளைவிக்கிறார்கள்.)

சுருக்கமாய்ச் சொன்னால், பழம் பதிப்பாளர்கள் எல்லோரும் “கிரந்தத்தைக் கிரந்தமாகக் கையாண்டிருக்கிறார்கள்; தமிழைத் தமிழாகக் கையாண்டிருக்கிறார்கள். ஒன்றின் எழுத்தொழுங்கு இலக்கணம் இன்னொன்றிற்குள் போகவேயில்லை. Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities.” Period.

ஒருசில தமிழார்வலர் , “பழங்காலத்துக் கல்வெட்டுக்களை வரலாற்றுக் காரணமாய்க் காப்பாற்ற வேண்டுமானால், அவற்றை ஒரு jpg file ஆக ஆக்கிக் கொள்ளலாமே? எதற்காகக் கிரந்தத்தைக் குறியேற்றம் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார்கள். இது குறியேற்றக் கேள்வியை ஆழமாய் அலசாதோர் கூற்று.

நண்பர்களே! நாம் கிரந்தத்தை விரும்புகிறோமா? இல்லையா? - என்பதல்ல கேள்வி. 1500 கால கிரந்த இருப்பில் நம் வரலாறும் அடங்கியிருக்கிறது. உலகில் எங்கெங்கோ இருக்கும் சான்றுகளில் நம் வரலாற்றைத் தேடி நாம் அலையும் போது, அருகே நம்மோடு இருக்கும் சான்றுகளிற் தேட மாட்டேம் என்று சொல்லுவது பித்துக்குளித்தனம் இல்லையோ? [கல்வெட்டுக்களை நம்புகிறோம், நம்பாமற் போகிறோம் - அது வேறு செய்தி; அலசல் செய்ய வழியிருக்க வேண்டுமில்லையா?]

“ஐயய்யோ! அவை கிரந்தம் கலந்து இருக்கின்றனவே?” என்று நாம் வருத்தப்பட்டுப் பயனில்லை. தமிழர் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து திடீரென்று 20 ஆம் நூற்றாண்டிற்குக் குதித்து வந்துவிடவில்லை. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தக்
கலப்பு ஆவணங்களை நாம் அலச வேண்டியிருக்கிறது.

இந்தக் கலப்பு ஆவணங்களை கண்வலிக்க நொபுரு கராசிமாவும், சுப்பராயலுவும் அவரைப் பின்பற்றியோரும் அலசி அலசி ஆய்ந்துதான் ”பேரரசுச் சோழர் காலம் இப்படியிருந்தது” என்று நமக்கெல்லாம் சொன்னார்கள். அவர்கள் படித்த கல்வெட்டுக்கள் 10 விழுக்காடு கூடத் தேராது. படிக்காத கல்வெட்டுக்கள் இன்னும் 90 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கின்றன.

தவிர, jpg file யை வைத்துக் கொண்டு நாம் அழகு வேண்டுமானாற் பார்க்கலாம்; நெடுங்காலம் காப்பாற்றலாம். ஆனால் சற்று முன்னால் சொன்னது போல் “பெருமாள், குணபர” போன்ற சொற்களை 10000, 20000 கல்வெட்டுக்களிடையே புகுந்து அலச முடியாது. ஆழமாய் எந்த ஆவண அலசலும், கல்வெட்டு அலசலும், வரலாற்று அலசலும் செய்ய முடியாது.

இன்னும் எதிர்காலத்தில் கண்வலிக்கத் தாளில் இருந்து / jpg கோப்பிலிருந்து படித்துக் கொண்டு இருக்கவேண்டுமென்றால் 1000 கராசிமாக்கள் வந்தாலும் முடியாது. அவற்றைக் கணிமைப்படுத்தி அலச முற்பட்டாற் தான் ஒரு 20 கராசிமாக்களை வைத்து இன்னும் 20 ஆண்டுகளுக்குள்ளாவது 100000 கல்வெட்டுக்களை அலசி, (படியெடுக்கப்படாது எண்ணெயிலும், அழுக்கிலும், வண்ணத்திலும் அழிந்து கொண்டிருக்கும் 200000 கல்வெட்டுக்களையும் மற்ற கோயில்களில் இருந்து படியெடுத்து அலசி) 1500 ஆண்டு வரலாற்றை ஓரளவு ஒழுங்கு செய்யமுடியும். எண்ணற்ற தமிழ் வரலாற்றுக் கேள்விகள் இன்னும் விடைதெரியாமற் கிடக்கின்றன.

Keeping the copies of inscriptions as jpg files is a pretty useless proposition. Encoding the copies of the inscriptions has a much better use.

2. அடுத்து, - கோயிற் குருக்களாக ஆகமம் படிப்பவர்கள், வேத பாடசாலையிற் படிப்பவர்கள், வடமொழி ஆவணங்களைப் படிக்க விழைபவர்கள் ஆகியோருக்குச் சங்கத மொழிபடிக்கும் எழுத்தாகக் கிரந்தம் பயன்படும் - என்னும் கூற்று.

இதுவும் உண்மைதான். கிரந்தம் என்பதன் இன்றையத் தேவை, சங்கதத்தில் உள்ள பழையதைப் படிப்பதற்கும் அது பற்றி அலசுவதற்கு மட்டுமே. ஆங்கிலத்தில் இதை didactics - கற்றுக் கொடுப்பியல் - என்று சொல்லுவார்கள். அதற்குக் கிரந்தம் பயன்படத் தான் செய்கிறது. ஆனால் அப்படிப் படிப்பவர் எல்லோரும் ஏற்கனவே தமிழ் எழுத்தையோ, மற்ற திராவிட எழுத்தையோ உறுதியாக அறிந்திருப்பர். அவர்களுக்குப் பாடமொழியாக தமிழ் அல்லது மற்ற திராவிட மொழிகளேயிருக்கும்.

கிரந்தம் என்பது பழைய நூல்களை, ஆவணங்களைப் படிப்பதற்குப் பயன்படும் ஓர் எழுத்து. சங்கத ஆவணங்களைப் படிப்பதற்கு 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் குறியேற்றம் முற்றிலும் போதும். தேவைப்பட்டால் கிரந்தமும் தமிழெழுத்தும் கலந்த கலவையெழுத்து (முன்னாற் செப்பேடுகளில் வந்தது போல், இப்பொழுது ஒருசிலர் தமிழெழுத்தும் ஆங்கிலவெழுத்தும் கலந்து எழுதுவது போல்) வெளியீடாகப் பாடநூல்கள் இருக்கலாம். இந்தக் காலத்தில் ஆங்கில எழுத்தும், தமிழ் எழுத்தும் கலந்த ஒரு சில பாடநூல்கள், பொது அறிவு நூல்கள், வெளிவருவதில்லையா? இதற்காக 7 தமிழ்க் குறியீடுகளை கிரந்தக் குறியேற்றத்துள் நுழைக்க வேண்டிய தேவை கொஞ்சங் கூட இல்லை.

3. மூன்றாவது கூற்று - எதிர்காலத்தில் கிரந்தத்தின் வழி தமிழ்மொழி ஆவணங்களை எழுத்துப்பெயர்ப்பு/குறிபெயர்ப்புச் (transliteration/transcription) செய்யமுடியும் - என்பதாகும்.

இது ஒரு முட்டாள் தனமான, (இன்னொரு வகையிற் சொன்னால் குசும்புத் தனமான) ஏமாற்றுத் தனமான பயன்பாடு. இற்றைக் காலத்தில் யாருக்கும் கிரந்தம் என்பது அறிவுதேடும் முதலெழுத்து வரிசையல்ல. அவர்களுக்குத் தமிழ் அல்லது வேறு ஏதோவொரு மொழியெழுத்து முதலெழுத்து வரிசையாக இருக்கிறது. அதை வைத்துத் தான் நாட்டின் எந்த நடப்புச் செய்தியையும் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

கிரந்தம் படிப்பது முகனச் (modern) செய்திகளை அறிந்து கொள்வதற்கில்லை. கிரந்தத்தில் புதுச் செய்திகள், கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் வருவதில்லை. பழைய ஆவணங்களைப் படிப்பதற்கும் அதையொட்டி அலசி ஆய்வதற்கு மட்டுமே கிரந்தம் பயன்படுகிறது. அதற்கு 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் குறியேற்றம் போதும். எழுத்துப்பெயர்ப்பு / குறிபெயர்ப்பு என்ற சிலரும் (நடுவணரசின் முன்மொழிவும்) சொல்வது வெற்றகப் பயன்பாடு (vaccuous use) வெறுமே சொலவமாடல் (sloganeering). உண்மையான பயன்பாடல்ல. நடுவணரசு இப்படி ஒரு பயன்பாட்டைச் சொல்வது உண்மை நிலை அறியாது கூறும் கூற்று. Let us state clearly that nobody is trying to revive Grantha as a living script useful among masses.

ஆக மூன்றில் இரண்டே உண்மையான பயன்பாடுகள். எழுத்துப்பெயர்ப்பு/குறிபெயர்ப்பு என்பது ஏற்கத் தகுந்த பயன்பாடல்ல. முதலிரண்டு பயன்பாடுகளுக்காக கிரந்தத்தைக் குறியேற்றுவதில் தவறில்லை. என்னைக் கேட்டால் 7 தமிழ்க் குறியீடுகளைச் சேர்க்காது, 68 குறியீடுகளை மட்டுமே கொண்ட கிரந்தவட்டத்தை ஒருங்குறியில் குறியேற்றம் செய்யலாம்.

”கிரந்தமே ஒருங்குறிக்குள் வரவேண்டாம்” என்று வல்லடியாக ஒருசிலர் சொல்ல முனைவது ”போகாத ஊருக்கு வழி தேடுவது” ஆகும். அதைச் சொல்ல நமக்கு உரிமையும் இல்லை. We can only talk about the impact of Grantha on Tamil Unicode. We can never say that Grantha should not be encoded. There are clear demarcation to what we can say. In other words, we need to have some realistic objective; i.e. to stop the possible impact of grantha in SMP to Tamil in BMP.

இன்னும் நுட்பியல் வேலைகள் பலவும் செய்ய வேண்டியிருக்கின்றன. நுட்பியற் காரணங்களைப் பட்டியலிட்டு தமிழக அரசிற்கும், நடுவண் அரசிற்கும், ஒருங்குறி நுட்பியற் குழுவுக்கும் அறிக்கை அனுப்பவேண்டும். குறைந்தது சனவரிக் கடைசிக்குள் அதைச் செய்யவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இந்தக் கட்டுரை எழுதி இங்கு வெளியிட்ட பின் படித்துப் பார்த்த ஒருசிலர் இது தங்களுக்குப் புரியவில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். நான் எங்கு புரியவில்லை என்று சொல்லும்படி கேட்டிருந்தேன். அவர்களிடம் இருந்து பின்னூட்டு வருவதற்குள் ”ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்” என்ற புலநெறிக்குத் தக்க, நான் சொல்ல வந்த கருத்தைப் படமாக்கி அதில் ஆங்கிலத்தில் ஒரு சில குறிப்புச் சொற்களும் சேர்த்து நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தனிமடலில் அனுப்பியிருந்தார். [தமிழில் இந்தச் சொற்களை மொழிபெயர்த்துப் போடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. இருந்தாலும் அவர் அனுப்பியதை அப்படியே வைத்து] அதை இப்பொழுது கட்டுரையின் ஊடே சேர்த்திருக்கிறேன். இது கட்டுரையின் புரிதலை எளிதாக்கும் என்று எண்ணுகிறேன். நண்பர் கண்ணபிரான் இரவிசங்கருக்கு என் நன்றிகள்.

அன்புடன்,
இராம.கி.

Monday, November 29, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 1

மொழிவது என்பது ஒலிகளின் திரட்சியே. ஒரு மொழியைப் பேசும்போது ஒலித்திரட்சிகளை வெவ்வேறு விதமாய்ச் சேர்த்து வெளிப்படுத்திச் சொல்லாக்கி நாம் சொல்ல விரும்பும் பொருளை அடுத்தவருக்கு உணர்த்துகிறோம். அப்படிப் பொருளை ஒலிமூலம் உணர்த்த முடியாத போதோ, அல்லது ஒலியின் வெளிப்பாடு பற்றாத போதோ, மாற்று வெளிப்பாடு தேவையாகிறது. அப்படி ஒலிகளின் மாற்றாய் அமைந்த உருவுகள்/வடிவுகளே எழுத்துகளாகும்.

ஒரு மொழியின் எல்லாவொலிகளுக்கும் எழுத்துக்கள் மாற்றாகா. அதிலும் ஓரொலிக்கு ஓரெழுத்து என்பது எல்லா மொழிகளிலும் இருப்பதில்லை. ஒருசில மொழிகளில், குறிப்பாகத் தமிழில், பல்லொலிகளுக்கு ஒரெழுத்துகளே இயல்பாகின்றன. அந்நிலையில், ஒலிகளை வேறுபடுத்தியுணர சில விதப்பு ஏரணங்களை (special logics) மொழிபேசுவோர் கையாளுவர். பொதுவாக, எழுத்து - ஒலித் தொடர்பு புரிவதற்கான ஏரணம் மொழி இலக்கணத்தில், அதன் அடவில் (design), அமைந்துள்ளது. இந்த மொழியடவு புரியாது எழுத்துக்களைத் திருத்துவதோ, இன்னொரு மொழிக்கு எந்திரத்தனமாய் எழுத்துக்களைப் பெயர்ப்பதோ, ஒருங்குறி எழுந்த இக்காலத்தில் இடரிற் தான் கொண்டு சேர்க்கும். ஆனாலும் ஒருவித நிகழ்ப்புக் (with an agenda) கொண்டோர் தமிழ் எழுத்துக்களைத் திருத்தவும், தமிழுக்குள்ளும் தமிழிலிருந்து எழுத்துக்களைப் பெயர்க்கவும் முற்படுகிறார்கள். அதே பொழுது மொழிபேசும் பெரும்பான்மையரோ இத் திருகுதத்தம் புரியாது அந்நிகழ்ப்பிற்குப் பலியாகின்றனர்.

சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

கல், ஓடு, மரப்பட்டை, தோல், ஓலை, மாழை (metal), தாள், அச்சு ஆகியவற்றால் எழுத்தை வெளியிட்ட காலம் போய், கணித்திரையில் வெளியிட்டு அச்சடிக்கும் காலம் இன்று வந்துவிட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுது பொருட்கள் எழுது நுட்பத்தை தமக்கேற்றவாறு மாற்றியிருக்கின்றன. எழுத்து உருவுகளையும் மாற்றியிருக்கின்றன. ஆனால் இம்மாற்றம் தாளோடு நின்று போயிற்று. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் அச்சுக்காலம் வந்தபோது வடிவுமாறா நிலைப்பேற்றைத் (constancy of the shape) தமிழெழுத்து பெற்றது. இற்றைக் கணிக் காலத்திலோ முற்றுமுழு நிலைப்பேறு (absolute constancy) நிலைக்கு வந்துவிட்டோம். இக்காலத்தில் மொழி மேலுள்ள கவனஞ் சிதைந்து, திருத்தக்காரர்களும், பெயர்ப்புக்காரர்களும் மனம்போன போக்கில் தமிழெழுத்தைச் சிதைக்க விட்டால் அப்புறம் சிதையெழுத்தே நிலைப்பேறு கொள்ளும். [காரணமில்லாது தமிழெழுத்தின் எதிர்காலம் பற்றி நாம் அச்சுறவில்லை. அதிலும் தமிங்கிலம் விரைவாகப் பரவிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், கி.பி. 1400 - 1600 களில் தமிழிலிருந்து மலையாளம் ஏற்பட்டது போல, வேற்றொலிகளை உள்ளிழுத்துக் கொண்டு அவற்றை எழுத்து மூலம் நிலைபெறச் செய்யும் முயற்சிகள் (மலையாளம் விருத்து - version - 2.0) தமிழில் விடாது நடக்கின்றன. இவற்றை எப்படி எதிர்கொள்ளுவது என்பது வேறு புலனம்.]

கல்லில் வெட்டிய காலத்திற் தமிழில் மெய்கள், அகர உயிர்மெய்கள், ஆகார உயிர்மெய்களைப் பிரித்துக் காண்பதிற் குழப்பம் இருந்தது. பின்னால் அடியெழுத்தோடு ஒரு குறுங்கோட்டை மேற் பக்கவாட்டிற் போட்டு, ஆகார உயிர்மெய்யைக் குறிக்கும் பழக்கம் வந்தது. [மேலே போடும் மேற்பக்கக் குறுங்கோடு தான் இப்பொழுது நாம் புழங்கும் கால் குறியீடாக மாறியது.] எந்தக் குறுங்கோடும் ஒட்டிப்போடாத எழுத்து அகர உயிர்மெய்யைக் குறித்தது. புள்ளி போட்ட எழுத்து மெய்யைக் குறித்தது. [புள்ளி போட்ட எழுத்தில் புள்ளியை அழித்து அகரமேறிய உயிர்மெய் உருவானதாய்க் கொள்ளுவதே தமிழ்ப்புரிதலின் அடிப்படையாகும்.]

இதற்கு மாற்றாய் வடபுலத்தில், ஒன்றின்கீழ் இன்னோர் உயிர்மெய்யைப் பொருத்தி மேலதை மெய்யாகவும், கீழதை உயிர்மெய்யாகவும் கொள்ளும் அடுக்குக் கட்டு முறை (stacking method) எழுந்தது. வடபுல அடுக்குக் கட்டு முறை, தமிழ்ப் புள்ளி முறைக்கு (dot method) எதிரானது. இற்றை இந்தியாவில் புள்ளி முறையைக் கையாளும் ஒரே எழுத்து தமிழெழுத்து மட்டுமே. மற்ற மொழியெழுத்துக்கள் எல்லாம் அடுக்குக் கட்டு முறையையே பயன்படுத்துகின்றன. அடுக்குக் கட்டு முறையில் இடம்வலமாய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதோடு அல்லாது, எங்கு மெய்யை ஒலிக்கவேண்டுமோ அங்கு எழுத்துக்களை மேலிருந்து கீழாய் அடுக்கி உணர்த்துவார்கள். அடுக்கின் உயரம் நிரவலாக 3 எழுத்துக்கள் வரையிருக்கும். (சில விதப்பான இடங்களில் ஆறு எழுத்துக்கள் வரையும் இருக்கும்.)

அதாவது வடபுலத்து ஆவணங்கள் (தமிழல்லாத தென்புலத்து ஆவணங்களும் இதிற் சேர்ந்தவையே) இரு பரிமானப் பரப்புக் (two dimensional extent) கொண்டவை. தமிழ் ஆவணம் அப்படிப் பட்டதல்ல. தமிழில் 2 மெய்களுக்குமேற் சொல்லிற் சேர்ந்து வருவதே கிடையாது. அவையும் புள்ளி பழகுவதால் ஒரு பரிமானப் பரப்புக் (single dimensional extent) கொண்டு அடுத்தடுத்து இடம்வலமாய் மட்டுமே எழுதப்படும். எந்தத் தமிழாவணமும் இழுனை எழுத்தொழுங்கு (linear orthography) கொண்டதாகவேயிருக்கிறது.

மெய்யெழுத்து என்று சொல்வதிற் கூட வடபுலத்தாரும் (தமிழரல்லாத தென்புலத்தாரும் இதிற் சேர்த்தி) தமிழரும் வேறுபடுவர். தமிழில் மெய்யெழுத்து என்பது புள்ளியெழுத்து மட்டுமே. அகரமேறிய எழுத்து, அகர உயிர்மெய் என்றே சொல்லப்படும். வடபுலத்து மொழிகளில் அகரமேறிய உயிர்மெய்யையே மெய்யென்று சொல்லிவிடுவர். [அவர்களின் வரையறை நம்மில் இருந்து வேறுபடும்.] ஏனெனில் அகரமேறிய மெய்யொன்றின் கீழ் இன்னொன்றை எழுதி மேலெழுத்தை மெய்யெழுத்தாய் அவர்கள் ஒலிக்கிறார்கள் இல்லையா?

ஒரு சில இடங்களில் இப்படி அடுக்காய் எழுதாது (காட்டாக ஆறெழுத்து அடுக்காக வரும் இடங்களில் முதல் மூன்றை ஓரடுக்காகவும், இரண்டாம் மூன்றை அடுத்த அடுக்காகவும்) தனியாக எழுதி முதலடுக்கின் கீழ், மெய்யைப் பலுக்க வேண்டி விராமம் என்ற குறியைப் பயன்படுத்துவர். ”விராமக் குறி” என்பது ஒருவகை இறுமக் குறியாகும் (end marker). அது சொல்லிறுதியைக் குறிக்கும். தமிழில் உள்ளதோ ஒற்றுக் குறி. இரண்டிற்கும் நுணுகிய வேறுபாடுண்டு. அதாவது நம்மைப்போல் சொல்லின் இடை, கடை போன்றவற்றில் புள்ளி வராது, சொல்லின் கடையிலும், ஓர் எழுத்தடுக்கின் கடையிலும் மட்டுமே விராமம் வரும். [கடையில் வரும் காரணத்தாற்றான் அது இறுமக் குறி எனப்படுகிறது.] சொல்லின் முதல், இடையில் அடுக்குக் கட்டு முறையின் மூலமே மெய்யொலி உணர்த்தப் பெறும். (தமிழிலோ சொல்லின் முதலிடத்திற் புள்ளி வரவே வராது.)

வடபுலத்திற்கும் தமிழ்ப்புலத்திற்கும் இடையில் இன்னும் கூட வேறுபாடு உண்டு. தமிழெழுத்தில் வரும் கால், கொம்பு போன்றவை உயிர்மெய்க் குறியீடுகள் - vowelized consonant markers - என்றே தமிழிற் சொல்லப்படும். வடபுலத்திலோ இவை உயிர்க்குறியீடுகள் - vowel markers - என்றழைக்கப்படும். நம்முடைய கெட்ட காலமோ, என்னவோ, வட எழுத்துக்களைக் கையாளும் தமிழ்க்கணிஞர் ஒருசிலரும் வடவர் வரையறுப்பில் மயங்கி நம் வரையறுப்பை ஒதுக்கி vowel markers என்று இவைகளை அழைக்கத் தொடங்கி விட்டனர். [இப்படித்தான் தமிழ்க்காப்பில் பலமுறை நாம் வழுக்குகிறோம். தொல்காப்பியமும், பாணினியமும் குறிக்கும் மொழியமைப்புகள் வேறானவை என்று ஆழப் புரிந்து கொண்டவர் வரையறைக் குழப்பத்துள் விழமாட்டார்.]

ஆக இருவேறு மொழிகள், இருவேறு கட்டுப்பாடுகள். இவற்றை எழுதும் முறைகளும் இருவேறே. இரண்டையும் வலிந்து ஒன்றாக்க முயல்வது சதுரத்தையும் வட்டத்தையும் ஒன்றாக்குவது போலாகும். அடிப்படையில் இரு வேறு எழுத்துக்களை ஒன்றின் அச்சடிப்பாய் இன்னொன்றை வலிந்தாக்குவது பெரும் முட்டாள் தனமும். ஏமாற்றுவேலையும் ஆகும். வடமொழி எழுத்திலக்கணக்கக் கோட்பாடுகளைக் கொண்டுவந்து தமிழிற் புகுத்தும் தவறான செயல் இன்று நேற்றல்ல, 11 ஆம் நூற்றாண்டு புத்தமித்திரரின் வீரசோழியம் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதன் இன்னொரு வெளிப்பாடு தான் 1700 களில் திருநெல்வேலி ஈசான மடம் சாமிநாத தேசிகர் ”ஐந்தெழுத்தால் ஒரு பாடை” என்று நக்கலடித்ததாகும். இப்போது ஒருங்குறி சேர்த்தியமும் சில இந்திய மொழியறிஞரும் இக்குழப்பத்தைத் தொடருகிறார்கள்.

தமிழெழுத்து வேறு, வடபுல எழுத்துக்கள் வேறு என்ற அடிப்படை வேறுபாடு இந்தப் பெரும்போக்குத் தனத்திற்குப் புரிவதேயில்லை. பெரும்பான்மைத் தமிழரும் என்ன நடக்கிறதென்று அறியாதவராய் உள்ளனர். பல்வேறு தமிழறிஞரும் ”கணித்தமிழுக்குள் நாம் என்ன நுழைய? யார் வீட்டுக்கோ வந்தது கேடு ” என்பதாய்த் தனித்து நிற்கிறார்கள். ஓரளவு தெரிந்தவரும் நிலைபுரியாது ஆழ்குழப்பத்தில் கிடக்கிறார்கள். ஒரு சில தமிழார்வலரோ, எதையுஞ் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், அரைகுறைப் புரிதலில் உணர்ச்சி மேலிட்டுத் தெருமுனைக்கு ஓடிவந்து போராடத் துடிக்கிறார்கள். அறிவார்ந்த செயலை, வல்லுநர் கொண்டு வகையறச் சூழ்ந்தாய்ந்து அதற்கேற்ற ஒரு தடந்தகையை (strategy) உருவாக்கி அறிவால் எதிர்க்காமல், உணர்வு கொண்டு துடித்தால் இழப்பு நமக்கல்லவோ வந்து சேரும்? குறளாசான் 465 ஆம் குறளில் அதையா நமக்குச் சொல்லித் தந்தான்?

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.

ஒருங்குறி என்றால் என்ன? அதில் தமிழெழுத்துக்களும் மற்றவையும் எங்குள்ளன? இப்பொழுது தமிழெழுத்தை நீட்டிக்கச் சொல்லி ஒரு முன்மொழிவு (proposal) வந்திருக்கிறதே? இது எதற்காகச் செய்யப் படுகிறது? எங்கு இது வரக்கூடும்? வந்திருப்பது நல்லதா? கெட்டதா? இதேபோலக் கிரந்தத்திற்கான இன்னொரு முன்மொழிவை யார் செய்கிறார்கள்? அம் முன்மொழிவு என்ன? அது தமிழெழுத்தைத் தாக்குமா? தாக்காதா? அந்தத் தாக்கம் இல்லாது, கிரந்தத்தை மட்டுமே முன்மொழிய முடியாதா? - இப்படிப் பல்வேறு கேள்விகளை விவரந் தெரிந்தவரிடம் கேட்டுத் தெளிந்து அவற்றிற்கு விடை கண்டு, வெற்றிபெறத் தக்க தடந்தகையை உருவாக்காது, போராடப் போனால் விளைவு என்ன? இன்னொரு முள்ளிவாய்க்காலா? அது தேவையா? “ஆகா.., எம் அன்னைக்குக் கேடுற்றதே! இதை வீணே பார்த்திருக்க முடியுமா? மறத்தமிழன் போருக்கு அஞ்சுவானா? ஓடிவாருங்கள் தோழர்களே! அன்னையைக் காப்போம்” என்று கூவியழைத்து மானகக் கவணுக்கு (machine gun - இயந்திரத் துப்பாக்கி) முன்னால் அணிவகுத்து நிற்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?

”ஊரெங்கும் தாளில் எழுதுவதை நிறுத்திப் பொத்தான் அடிக்கவைக்கும் காலத்தில் கணிநுட்பியல் பற்றி ஓரளவு புரியாமற் தமிழன் இனி வாழமுடியாது, தாளில் எழுதும் காலம் போயே போயிற்று” என்று நமக்குத் தெரிய வேண்டுமல்லவா?

சரி, தமிழெழுத்துக்கு மீண்டும் வருவோம். கல், ஓடு, மரப்பட்டை, தோல் என்ற எழுதுபொருட்களை விட்டு ஓலைக்கு வந்த காலத்தில் மீண்டும் தமிழிற் புள்ளி போடுவதில் சரவல் ஏற்பட்டது. புள்ளி போடுவதால் ஓலையில் ஓட்டை விழுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கருதி, இடம் பொருள் ஏவல் கருதிப் புரிந்து கொள்ளும் முறையில் மீண்டும் புள்ளி இல்லாது எழுதும் பழக்கம் ஏற்பட்டது. தமிழ்ச்சொல் எழுத்துக்கோவையின் இரண்டக (reduntancy) ஒழுங்காலும், பழக்கத்தாலும், இது அவ்வளவு சிக்கலாய் ஓலையெழுத்தில் உணரப்படவில்லை. ஆனால் அடுத்த எழுதுபொருளான தாளுக்கு நகர்ந்தபோது இச்சிக்கல் பெரிதாய் உணரப்பட்டு புள்ளி போடுவது மீண்டும் பழக்கமாயிற்று.

கல், ஓடு, மரப்பட்டை, தோல், ஓலை, மாழை (metal), தாள், அச்சு ஆகியவற்றில் ஆவணம் வெளியிட்ட வரை யாரும் இவ்வெழுத்துக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட வில்லை. தமிழ்கூறும் நல்லுலகப் பொதுமக்களின் மரபே, பரவலான புழக்கமே, இவ்வொப்புதலை வழங்கிற்று. இன்றோ கணித்திரையில் எழுதி அச்சடிக்கும் காலத்தில் ”இவ்வெழுத்து இப்படி இருந்தால் இது தமிழ், இது வேறுமாதிரி இருந்தால் நாகரி, சித்தம், சாரதா, கிரந்தம், உரோமன்" என்று பிரித்துக் காட்டி எங்கோவோரிடத்திற் செந்தரமாக்கும் (standardization) தேவையும், ஒப்புதல் வாங்கும் கட்டாயமும் ஏற்பட்டு விட்டன. அவ்விதத்தில் தான் தமிழின் தலைவிதியை எங்கோ இருக்கும் (வணிக நோக்குள்ள) ஒருங்குறிச் சேர்த்தியம் நிருணயிக்க முற்படுகிறது. தமிழை அரசுமொழியாய்ப் புழங்கும் வெவ்வேறு அரசுகளும் இவ் விந்தையையுணராது, ஒருங்குறிச் சேர்த்தியத்தின் ஒப்புதலை வேண்டி “ஆமாஞ் சாமி” போட்டுக் கொண்டிருக்கின்றன.

இனிக் கணித்திரையில் எழுத்து வெளியிட்டு அச்சடிக்கும் ஆவணங்களின் பயன்பாடு பற்றிப் பார்ப்போம்.

கணித்திரையில் வெளியிடுவது தட்டச்சில் அடிப்பது போல் ஆனதல்ல. அதன் பயன் வேறுபட்டது. தட்டச்சு ஆவணம் என்பது வெறுமே படிப்பதற்கும், சில நாள் சேமிப்பதற்கும், மட்டுமே உருவாவது. கணி ஆவணமோ [அதனுள் என்னென்ன சொற்கள் பயனுற்றன என்றறிவது, எழுத்துப் பிழைகள் இருந்தால் அவற்றைத் தானாகவே தேடித் திருத்துவது, இலக்கணப் பிழைகள் ஏற்பட்டால் அவற்றையும் திருத்துவது, உருபனியல் அலசல் (morphological analysis) மூலம் மொழிநடையை ஆய்வது, ஆவணம் பற்றிய பல்வேறு புள்ளி விவரங்களைத் தொகுப்பது, ஆவணம் எழுதுபவரின் மொழிநடைக் கைச்சாத்தைக் (style signature) காணுவது, எனப்] பல்வேறு உயர் பயன்பாடுகளைச் செய்யும் வகையில் அமைந்தது. இப்படியெல்லாஞ் செய்ய வேண்டுமானால் ஒரு மொழியின் ஏரணம் கணிக்குக் கற்பிக்கப் படவேண்டும். [அதைப் படிப்படியாகக் கற்பிக்கவும் முடியும்.]

தொடக்க காலத்தில் கணி என்பது எண்களைக் கையாளுவதற்கே பயன்பட்டு வந்தது. எண்களைக் கொண்டு தனக்கிட்ட புதிரிகளைக் (problems) கணிப்பது, ஏரணத்தின் பாற்பட்டு பல்வேறு தீர்வுகளை முடிவெடுப்பது போன்ற செயல்களையே தொடக்கத்தில் கணி செய்தது. அப்படித் தொடங்கிய காலத்தில் எழுத்துக்கள் என்றால் என்னவென்றே கணிகளுக்குத் தெரியாது. பின்னால் மொழிநடை ஏரணத்தை, எண்களின் ஏரணம் போல் பெயர்த்து, உணரமுடியும் என்று அறிந்து, அவ்வேரணத்தைக் கணிக்கும் கற்பிக்குமாப் போல், எழுத்துக்களுக்கு இணையாக தனித்த எண்களைக் கொடுத்து (இவ்வெண்களை - code points - குறிப்புள்ளிகள் என்று கணியாளர் குறிப்பர்.)

எழுத்துகளை உள்ளீடு (character input) செய்தல் -> அவற்றைக் குறிப்புள்ளி எண்களாய் மாற்றல் -> இவ்வெண்களின் மேல் பல்வேறு கட்டளைகள் கொடுத்துக் கணித்தல் -> மீண்டும் குறிப்புள்ளி எண்களை எழுத்துகளாய் மாற்றல்

என்ற முறையில் பல்வேறு எழுத்து ஆவணங்களை உருவாக்கி அலச முடியும் என்ற புரிதல் வந்தது. முதலில் உரோமன் எழுத்திற்கு மட்டுமே இம்முறை எழுந்தது. இதில் வெறும் 2^7 = 128 இடங்களே (அதாவது குறியீடுகளே, அல்லது எண்களே) அமைந்தன. [ASCII என்று சொல்லுவார்கள்.] பின்னால் இரோப்பிய மொழிகளில் இருக்கும் பல்வேறு குறியீடுகளையும், மீக்குறிகளையும் சேர்த்து, ”நீட்டிக்கப் பட்ட உரோமன் (extended Roman)/நீட்டிக்கப் பட்ட இலத்தீன் (extended Latin) எழுத்துமுறை” வந்தது. இதில் 2^8 = 256 குறியீடுகள், அதற்கான எண்கள் அமைந்தன. [இதை extended ASCII என்றும் சொல்லுவார்கள்.]

இதே முறையில் அடுத்து உலகின் பல்வேறு மொழிகளை எழுதிக் காட்டும் எழுத்துகளுக்கும் எண்களைக் கொடுத்து அவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து ஒரே ஆவணத்திற் பயன்படுத்த முடியும் என்ற தீர்வு இயல்பாய் எழுந்தது. இம்முறைக்குத் தான் ஒருங்குறி என்று பெயர். Universal code என்பதை உணர்த்தும் வகையிற் சுருக்கி Unicode என்று பெயரிட்டார்கள். தமிழில் இதே பெயரை ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்ற பொருளில் வினைத்தொகையாய் ஒருங்குறி என்று குறிக்கத் தொடங்கினோம். ஒருங்குறி என்ற சொல்லின் பிறப்பிலக்கணம் புரியாது ”சீருரு” என்று ஒருசிலர் தமிழிற் சொல்ல முற்படுவது முற்றிலும் பிழை. This is not a uniform code. (அதே போல சிலர் ஒருங்குகுறி என்று சொல்ல முயலுகிறார்கள். அதுவும் தவறான புரிதலே. இரண்டு குகரங்கள் இதில் புழங்க வேண்டிய தேவையில்லை. ஒருங்குறியில் வரும் ஒரு குகரம் போதும். ஒரு வாக்கியத்திற் சொற்சிக்கனம் போல சொல்லில் எழுத்துச் சிக்கனம் தேவை.)

ஒருங்குறியின் தொடக்கத்தில் 2^16 = 65536 இடங்களே (அதாவது எண்களே) இருந்தன. ஆனால் இப்பொழுது 2^11 வரைக்கும் இடங்கள் போய்விட்டன. மெல்ல மெல்ல 16 தட்டுத் தளங்களுக்குக் குறியேற்றம் போய்க் கொண்டிருக்கிறது. ஒருங்குறி 6.0 ஆம் விருத்தில் (version) 93 எழுத்து முறைகளைக் குறித்திருக்கிறார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான எழுத்துமுறைகளைக் குறிக்கும் அளவிற்கு ஒருங்குறிச் சேர்த்தியம் போய்க் கொண்டிருக்கிறது.

சற்று முன்னே சொன்ன படிதான் உலகில் உள்ள பல்வேறு எழுத்து முறைகள் கணித்திரையில் எழுதுவதற்குத் தோதாய் ஒருங்குற்றன. ஒருங்குறியின் பெரும்பயன் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்து முறைகளை (அதன் விளைவாய் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிப் பனுவல்களை - language texts) ஒரே ஆவணத்தில் காட்டமுடியும் என்பதேயாகும். இதை எல்லோரும் பயன்படுத்தினால் ஒரு செந்தரம் (standard) உருவாகும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு இணையத்தின் மூலம் ஆவணங்களை அனுப்பி எந்தச் சரவலும் இல்லாது படிக்கவைக்க முடியும் என்ற பயன்பாடு இரண்டாவதாகும். இந்தியாவில் வாழும் எழுத்துக்களைக் குறிக்குமாப் போல தேவநாகரி, சாரதா, பெருமி, தமிழெழுத்து, ஒரியவெழுத்து, குர்முகி, குசராத்தியெழுத்து, மராத்தியெழுத்து, வங்காள எழுத்து, தெலுங்கெழுத்து, கன்னட எழுத்து, மலையாள எழுத்து எனப் பல்வேறு எழுத்து முறைகள் ஒருங்குறியில் இடம் பெற்றுள்ளன.

ஒருங்குறி பற்றித் தெரியாது இந்தக் கட்டுரையைப் படிப்போருக்காக, ஒருங்குறியில் அடித்தளத் தட்டில் (BMP) இருக்கும் நம்முடைய தமிழ்க் குறியேற்றப் பட்டியலைக் கீழே கொடுத்துள்ளேன். [இதில் மொத்தம் 72 குறியீடுகள் இருக்கின்றன. அவற்றுள் தமிழுக்கு வேண்டாத குறியீடுகளையும் (0B82, 0BD7), சமயச் சார்பான குறியீடுகளையும் (0BD0), தமிழெண்கள், விதப்புக் குறியீடுகளையும் (0BE6 - 0BFA) கூடச் சேர்த்திருக்கிறார்கள். அவற்றை ஒதுக்கினால், மொத்தம் 48 குறியீடுகளே தமிழெழுத்துக்களைச் சேர்ந்ததாய் அமையும். இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியில் இந்த 48 குறியீடுகளுக்கு ஏற்படப் போகும் தாக்கம் பற்றிப் பேசப் போகிறோம். தமிழுக்கு வேண்டாத குறியீடுகளை (0B82, 0BD7) ஆகியவற்றை எடுக்கச் சொல்லி இதுவரை பலரும் கேட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் கேட்கவேண்டும். அவற்றைப் பற்றிப் பேசினால் புலனம் வேறுபக்கம் போகும் என்று தவிர்க்கிறேன்.]



இன்னொரு செய்தியையும் இங்கு சொல்லவேண்டும். குறிப்புள்ளிகள் (code points) என்பவற்றிற்கும் வார்ப்புகள் என்பவற்றிற்கும் உள்ள வேறுபாட்டை ஒழுங்காய்ப் புரிந்து கொள்ள வேண்டும். (வார்ப்புகள் = fonts, இவற்றை ”எழுத்துருக்கள்” என்றே பலரும் குறிக்கிறார்கள். நானோ 400 ஆண்டுகால அச்சு வரலாற்றை விடாது பிடித்துத் தெளிவுறுத்துவதற்காக, வார்ப்படப் பட்டறைகளோடு - foundary workshops - அவற்றைத் தொடர்புறுத்தி ”வார்ப்புகள்” என்றே சொல்லுகிறேன். நம் அச்சு வரலாற்றை ஒதுக்கித் தள்ளி இந்தக் காலக் கணியெழுத்து வரலாற்றை எழுத முற்படலாமோ? நம் அப்பன் இன்றி நாம் ஏது? ”எழுத்துரு” என்பது ”நீர்வீழ்ச்சி” போலொரு கூட்டுச்சொல். ”வார்ப்பு” என்பது ”அருவி” போல் உட்பொருளால் அமையுஞ் சொல். ”எழுத்துரு”வைக் காட்டிலும் ”வார்ப்பின்” பொருள் அகண்டதாய், வரலாற்றை உணர்த்துவதாய், நான் கருதுகிறேன்.)

ககரம் என்பது ஓர் எழுத்து. அதற்கான ஒருங்குறிக் குறிப்புள்ளி U+0B95 ஆகும். அதன் வார்ப்பு வெளிப்பாடாக அலங்காரமான ககரத்திற்கு ஒரு வடிவமும், சாத்தாரக் (=சாதாரணக்) ககரத்திற்கு இன்னொரு வடிவமும் எனப் பல்வேறு ககர வடிவங்களைக் கொடுக்க முடியும். உண்மையில் குறிப்புள்ளிகள் எழுத்துக்களின் வடிவங்களை உணர்த்தவேயில்லை, அவை எழுத்துக்களை மட்டுமே நிகராள்கின்றன.

நாம் தேர்வு செய்யும் வார்ப்பு வரிசைக்குத் தக்க வெவ்வேறு வடிவங்களில் ககரம் என்ற எழுத்தைக் கிட்ட வைக்கலாம். [காட்டாக மைக்ரோசாவ்ட் கணியில் லதா என்ற வார்ப்பில் இருக்கும் ககரமும், ஏரியல் யுனிக்கோடு MS என்னும் வார்ப்பில் இருக்கும் ககரமும் வெவ்வேறு தோற்றம் காட்டும்.]

பின்னால் கிரந்தம், தமிழெழுத்து ஒற்றுமை வேற்றுமை பற்றிப் பேசும் போது இந்த குறிப்புள்ளிகள் - வார்ப்புகள் பற்றிய புரிதல் நமக்குப் பயன்படும். [மறக்காதீர்கள். கணியில் எழுத்துக்களுக்கு அடையாளமாய்க் குறிக்கக் கொடுக்கப்படும் எண்களைக் குறிப்புள்ளிகள் என்கிறோம். வார்ப்புகள் அந்தக் குறிப்புள்ளிகளுக்கு வெவ்வேறு வடிவங்களைக் கொடுக்கின்றன.]

அடுத்த செய்தி, ”மொழி என்பதும் எழுத்து முறை என்பதும் வெவ்வேறானவை” என்பதாகும். (பொதுவான தமிழரிற் பலரும் “எழுத்தும் மொழியும் ஒன்று” என்று எண்ணிக் குழம்பிக் கொள்கிறார்கள்.) உண்மையில் அவை வெவ்வேறானவை. இருவேறு மொழிகளை ஒரே எழுத்துமுறை கொண்டு குறிக்கலாம்.

காட்டாக இசுப்பானியம், ஆங்கிலம் என்ற இருவேறு மொழிகளை உரோமன் என்ற ஒரே எழுத்துமுறை குறிக்கிறது. பொதுவாய், இசுப்பானியம் எழுதப் பயன்படும் உரோமனும், ஆங்கிலம் எழுதப் பயன்படும் உரோமனும் அப்படியே அச்சடித்தாற் போல ஒரே வடிவங்களைக் கொண்டிருக்காது. ஆனால் பெரும் அளவில் ஒன்றுபட்டு இருக்கும். சிறு சிறு மாற்றங்களைத் தெரிவுபடுத்துமாப் போல இரண்டிற்கும் பொதுவான குறிகள் கொண்ட பெருங்கொத்தை (super set) உருவாக்கி அதைவைத்து இசுப்பானியத்தையும், ஆங்கிலத்தையும் ஒரே ஆவணத்தில் எழுத முடியும். உரோமன் என்ற பெருங்கொத்து இன்று இசுப்பானியம், இத்தாலியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, செருமன், தேனிசு, டச்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் பெருங்கொத்தாகி எழுதப் படுகிறது.

எந்தெந்த மொழியெழுத்துக்களை ஒன்று சேர்த்து ஓர் எழுத்துப் பெருங்கொத்து உருவாக்கலாம் என்பதற்கும் வரம்பு இருக்கிறது. காட்டாக உருசிய மொழி எழுத்திற்கும், ஆங்கிலேய மொழி எழுத்திற்கும் கூடச் சில ஒப்புமைகள் இருக்கின்றன. இவ்விரு மொழிகளை எழுதும் போதும் a என்ற எழுத்து ஒன்று போலத் தான் இருக்கிறது. இது போல பல எழுத்துக்களை உருசியனுக்கும் ஆங்கிலத்திற்கும் இணை காட்ட முடியும் தான். இருந்தாலும் உருசியன் எழுதும் போது ஆங்கிலத்தில் இல்லாத பல எழுத்துக்களை எழுதவேண்டிய வேறுபாடுகளும் இருக்கின்றன.

வேறுபாடுகளையும், ஒப்புமைகளையும் மொழியமைப்பு அளவிற் சீர்தூக்கி அவற்றைத் தனித்தனிக் கொத்தாகவோ, ஒரே பெருங்கொத்தாகவோ அமைக்கிறார்கள். உருசியன், பல்கேரியன், உக்ரேனியன் போன்ற சுலாவிக் மொழிகள் சிரில்லிக் என்ற எழுத்து முறையையே தம் பெருங்கொத்தாகக் கொள்ளுகின்றன. உரோமன் என்ற பெருங்கொத்திற்கும் சிரில்லிக் என்ற பெருங்கொத்திற்கும் இடையே ஒற்றுமைகள் சிறிது காணப்பட்டாலும், வேற்றுமைகள் விதந்து காணப்படுவதால் அவற்றை ஒன்று சேர்க்காமல் தனித்தனிப் பெருங்கொத்தாகவே மொழியாளரும், அவர் வழிக் கணியாளரும் கொள்ளுகிறார்கள்.

உரோமன் என்னும் பெருங்கொத்து உருவானது போல ”இந்திக்” என்னும் பெருங்கொத்தை 1980-90 களில் உருவாக்க முயலாது, இந்திய நடுவணரசு அளித்த எண்மடைக் (8 bit) குறியீட்டிற்கான ISCII போல்மத்தை (model) ஒருங்குறிச் சேர்த்தியம் அடிப்படையாகக் கொண்டதால், இந்திய மொழியெழுத்துக்களை ஒருங்குறிக்குள் கொண்டுவருவதில் தொடக்கத்தில் இருந்தே அதற்குப் பெருஞ்சரவல் இருந்தது. [அது காலம் வரை அகரவரிசை (alphabet) அரிச்சுவடிகளை ஒழுங்கு செய்த குழுவினர் இந்திய எழுத்துக்கள் அசையெழுத்து அரிச்சுவடிகள் என்று சரியாக உணரத் தவறினார்கள்.]

இப்படி ஏற்பட்ட முதற்கோணல் முற்றுங் கோணல் ஆயிற்று. [மிக அழகாக அப்பொழுதே இந்திக், தமிழ் என்று இரு (பெருங்கொத்துப்) போல்மங்களை - models - உருவாக்கி இச்சிக்கலைத் தீர்த்திருக்கலாம். ஒரு நல்ல வாய்ப்பு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தவறிப்போயிற்று.] ISCII இல் இருந்த குறைபாட்டை இங்கு நான் பேசவரவில்லை. அது வேறு எங்கோ நம்மை இழுத்துப் போகும். நடந்து போனவற்றைக் கிளறாமல், தமிழெழுத்து, கிரந்தத்துள் தமிழெழுத்து என்பது பற்றி மட்டுமே இப்பொழுது பார்க்கிறோம்.

[உலகில் உள்ள மொழிகளின் ஒலிகளை யெல்லாம் ஒன்று சேர்த்து அவற்றிற்கான international phonetic association குறியீடுகளைக் கொடுத்து பொதுமையைக் கொண்டுவரமுடியும் தான். அது பொதுமக்களை மீறிய அறிவார்ந்த மொழியாளருக்கு மட்டுமே புரியக் கூடியது என்றெண்ணி அதை ஒருங்குறிச் சேர்த்தியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.]

தமிழெழுத்தும் கிரந்தவெழுத்தும் தமிழகத்தில் உருவாக்கப் பட்டவை. இரண்டும் இருவேறு மொழிகளைக் குறிக்க எழுந்தவையாகும். இரண்டுமே இந்தியாவில் தோன்றிய தமிழி, பெருமி (brahmi) ஆகிய எழுத்தமைப்புகள் ஒன்றிற்கொன்று ஊடுருவி உருவான எழுத்துக்களாகும். (தமிழி தமிழுக்கும், கிரந்தம் சங்கதத்திற்கும் எழுந்தவை). பின்னால் இவ்வெழுத்துக்கள் தனியிருப்புக் கொண்டு மாற்று மொழிகளைக் குறிக்க முற்படுகின்றன. காட்டாக உரோமன் எழுத்தோடு சில மீக்குறிகளையும், மரபுகளையும், சேர்த்து தமிழ் மொழியை இக்காலத்தில் எழுதுகிறோம் இல்லையா?

இது போல தமிழெழுத்துக்களோடு சில மீக்குறிகளையும், மரபுகளையும் சேர்த்து ஆங்கில மொழியை எழுத முடியும். இதேபோல சங்கத மொழியை, கன்னடத்தை, தெலுங்கை, மற்ற மொழிகளை தமிழெழுத்துக் கொண்டே எழுத முடியும். [இம்மீக்குறிகள் பற்றிய செந்தரத்திற்கு இன்னும் தமிழ்க் கணிமையர் வந்து சேரவில்லை.] ஆனால் இதுவரை மீக்குறிகள் தனியாகவும் எழுத்துக்கள் தனியாகவும் அடுத்தடுத்துச் சரமாகத் (sequence) தான் எழுதப்பட்டு வந்தன. யாருமே மீக்குறிகள் இணைந்த அணுக்குறிப் புள்ளிகளாய் (atomic code points) ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் கேட்கவில்லை.

இதுவரை நான் சொன்னது பாயிரம் தான்; இனிமேற் தான் கட்டுரையின் உள்ளீட்டிற்கு வருகிறேன். அடுத்த பகுதிக்குப் போகலாம், வாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, November 27, 2010

பெருமாள் - தொடர்ச்சி

முதலாம் ஆதித்த சோழன் வரைக்கும் வந்த நாம் அதற்குச் சற்று முன்னும் சேரர் வழி பார்த்தாற் போகமுடியும். முதலாம் ஆதித்த சோழனின் காலம் கி.பி. 871-907. இவனுக்குச் சமகாலத்துச் சேர அரசர் இருவர். ஒருவர் (ஸ்)தாணு இரவி கி.பி. 844-885. இன்னொருவர் (ஸ்)தாணு இரவியின் மகன் இராமவர்மன் கி.பி. 885-917. இராமவர்மனின் மகள் ஆதித்த சோழனின் மகனான முதற் பராந்தகனுக்கு மணம் செய்துவிக்கப் பட்டாள். (ஸ்)தாணு இரவி காலத்தில் சோழருக்கும் சேரருக்கும் இடையே நல்லுறவே இருந்தது. [இராசராசன், இராசேந்திரன் காலத்திற் தான் உறவு பாழ்பட்டது. சேரர் குலம் அழிந்தது. அதன் விளைவே தமிழரோடு தொடர்பறுத்த கேரளம் உருவாகியது. சோழப் பேரரசு என்ற கருத்தீடே கேரளம் என்ற இன்னொரு மாற்றுக் கருத்தீடு ஏற்படக் காரணம் ஆகியது. இல்லாவிட்டாற் முப்பெருந் தமிழகம் என்ற கருத்தீடு நிலைத்திருக்கும்.]

(ஸ்)தாணு இரவியின் பாட்டன் குலசேகர வர்மன் (கி.பி.800-820). பின்னாளில் குலசேகர ஆழ்வார் என்று போற்றப்பட்ட விண்ணவப் பெருந்தகையாவார். இவருக்குத் தான் சேரமான் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. பல்வேறு சேரர் குடும்பக் கிளைகள் சேரல நாடெங்கணும் குறு அரசுகளை நிருவகித்த காலத்தில் அவர்களையெல்லாம் தம் அதிகாரத்தாலும், உறவாலும், ஒறுத்தலாலும் ஒன்று சேர்த்து ஒரு வலுவான ஒருங்கிணைந்த சேர நாட்டை உருவாக்கிய பெருமை குலசேகரரையே சாரும். இவருடைய தலைநகர் கொடுங்களூர் எனப்படும் மகோதய புரம் (பழைய வஞ்சிக்கு அருகில் இருந்த ஊர்.) எல்லாச் சேரமான்களுக்கும் மேலே பேரசராக [பேரரசர் என்ற பொருளை அப்படியே தரும் சொல் தான் பெரும் ஆள் (big ruler) = பெருமாள்] ஆகி மீண்டும் அவர் நாட்டைக் கட்டியதாகக் கேரளோத்பத்தி என்னும் வரலாற்று நூல் பகரும். இவர் கொல்லியையும், கோழியையும், ஆண்டதாகவும் கொங்கு நாட்டைக் கைப்பற்றியதாகவும், கூடலின் தலைவனாக இருந்ததாகவும் தன் பாசுரங்களில் கூறிக் கொள்கிறார். கோழி என்னும் உறையூரைக் கைப்பற்றியது விசயாலயன் (கி.பி.848-881) தஞ்சாவூரைக் கைப்பற்றியதற்கு முன்னால் இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அழிந்து கொண்டிருந்த பல்லவரிடமிருந்து உறையூரை குலசேகரர் கைப்பற்றியிருக்கலாம். கூடல் என்பது மதுரையைக் குறிக்கும். இவர் காலத்தில் பாண்டியரும் வலுக் குறைந்தே இருந்தனர்.

அப்பேர்ப்பட்ட சேரமான் பெருமாள் தம் அரசு துறந்து விண்ணவ நெறியில் ஆழ்ந்து ஆங்காங்கே விண்ணவக் கோயில்களுக்குச் சென்று இறைவனைப் பற்றித் திருமொழி பாடினார். அதனாற்றான் அவருடைய திருமொழி, விண்ணவ நாலாயிரப் பனுவலில் பெருமாள் திருமொழி (பேரரசர் திருமொழி) என்று சொல்லப்பட்டது போலும். அவருக்கு முன்னால் பெருமாள் என்ற சொல் இருந்ததா என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் பெருமாள் என்ற பட்டம் ஒருங்கிணைந்த சேரல அரசை உருவாக்கிய குலசேகரருக்கு முற்றும் பொருந்தும்.

சேரமான் பெருமாள் குலசேகரர், தன் மகன் இராசசேகர வர்மனைப் பட்டத்திற்குக் கொண்டுவந்து (கி.பி.820-844) ஆழ்வார் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். இருபத்து நாலு ஆண்டுகள் ஆண்ட இராசசேகர சிம்மனோ தானுமே அரசு துறந்து அதே பொழுது தன் தந்தையின் நெறிக்கு மாறாய்ச் சிவநெறியிற் சேர்ந்து பணி செய்திருக்கிறான். [பழஞ்சேரர் சிவநெறியாளரே. செங்குட்டுவன் நிலையைச் சிலம்பில் அறியலாம்.] இராச சேகரனுக்குப் பின் அரசு செய்தவன் தான் மேலே சொன்ன அவன் மகன் (ஸ்)தாணு இரவி (கி.பி.844-885). இராச சேகர வர்மன் தான் பின்னாளில் தேவார மூவரில் கடைசியான சுந்தரமூர்த்தியாருடன் சேர்ந்து கைலாயம் வரை போன சேரமான் பெருமாள் நாயனார். சேரமான் பெருமாள் என்ற பட்டம் தந்தையிடம் இருந்து மகனுக்கு ஒட்டிக் கொண்டது போலும். இருவேறு நெறிகளில் இறைப்பணி செய்து பேர்பெற்ற மன்னர்கள் சேரமான் பெருமாள்கள். பெருமாள் என்ற சொல்லின் மதஞ்சாராப் பொருள் ஆட்சி கருதியே ஏற்பட்டிருக்க வேண்டும்.

(ஸ்)தாணு இரவி சிவநெறியாளனாய் இருந்த போதும் அரசு துறக்கவில்லை. ஆனால் அவர்களின் குலத்திற்குச் சேரமான் பெருமாள் என்ற பட்டம் நிலைத்துப் போனது. குலசேகரருக்குத் தான் முதலில் பெருமாள் என்ற பட்டம் ஏற்பட்டதா? அவருக்குமுன், வேறு யாருக்கும் இருந்ததா? - என்பது ஆய்விற்குரியது. அதே போல கி.பி.800க்கு வந்து சேர்ந்த நாம் ”பெருமாள்” என்ற சொல்லின் வரலாற்றை (குறைந்தது 1210 ஆண்டுகள்) அதற்கு முன்னும் தேடவேண்டும். [ஒருவேளை பல்லவரின், பாண்டியரின், களப்பாளரின் காலத்தில் இருந்ததா என்று தேடவேண்டும்.]

இராம வர்மனின் மகன் கோதை இரவி வர்மன் காலத்தில் (5 தலைமுறைகளில்) முழுக் கேரளமும் சேரமான் பெருமாள் குலத்தினருக்கு அடிபணிசேரர்ந்தது. பழைய சேரரின் விரிவு வந்து
சேர்ந்தது.

அன்புடன்,
இராம.கி.

Monday, November 22, 2010

பெருமாள்

அண்மையில் கண்ணபிரான் இரவிசங்கர் ”பெருமாள் என்ற சொல் எங்கு, எப்பொழுது எழுந்தது?” என்று ஒரு மடற்குழுவில் ஐயம் எழுப்பியிருந்தார். திருமால் (=நெடுமால், மாயவன், நெடியோன்) என்ற சொல் தானே சங்க காலத்தில் இருந்தது? அது எப்படிப் பெருமாளாகப் பொதுவழக்கில் மாறியது? ஒருவேளை ஏதேனும் மரபு சார்ந்த குழு வழக்கில் பெருமாள் என்ற சொல் இருந்ததா? ஒருவேளை பேச்சுவழக்கில் மதில்>மதிள் போலப் “பெருமால்” பெருமாளாயிற்றா?- என்ற கேள்விகளும் அவர் கேட்பில் அடங்கியிருந்தன. ஆழமான கேள்வி. சட்டென்று விடை சொல்லிவிட முடியாது. கொஞ்சம் துழாவியபின் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது. அறுதியான முடிவிற்கு இன்னும் வரமுடியவில்லை. ”நமக்குத் தெரிந்ததைக் கோடி காட்டுவோம். இது சரியா, தவறா என்பதை மற்ற அன்பர்கள் தொடரட்டும்” என்று எழுதுகிறேன். (பெருமால்>பெருமாள் என்ற திரிவு நடந்திருக்க வாய்ப்பில்லை. நெடுமால் என்ற புழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் பெருமால் என்ற சொல்லை நான் சங்க இலக்கியத்தில் எங்கணும் கண்டதில்லை. யாரேனும் கண்டிருந்தாற் சொல்லுங்கள்.)

[”குழு வழக்கு” என்ற சொல்லை திருவிண்ணவர்கள் ”பரிபாஷை” என்றே தமக்குள் சொல்லிக் கொள்வது ஏன் என்றும் புரியவில்லை. ”இதற்குள் மெய்ப்பொருள் அடங்கியிருக்கிறது; பரிபாஷை என்றசொல்லை வேறு மாதிரிச் சொல்லக் கூடாது” என்று ”வியாக்கியானம்” பண்ணுவதும், ”meta language" என்று மொழிபெயர்ப்பதும், எனக்கு விளங்கவில்லை. இது போன்ற வியாக்கியானங்களால் குழுத்தன்மை தான் காப்பாற்றப் படும். நல்லதமிழ்ப் பயன்பாடு அழிந்து போகும்.

தமிழிற் பரிமாற்றம், பரிவட்டம், பரிவாரம் என்ற சொற்களுண்டு. பரிமாற்றம் என்பது ஒருவருக்கொருவர் தம்மிடையே கொடுத்துக்கொள்ளும் மாற்றம். ஒருவருக்கொருவர் என்னும் போது ஒரு குழுவில் அடங்கியவரைக் குறிக்கும். அதோடு பரி(வு)யுள்ளவர் ஒரு குழுவில் தான் இருப்பர். பரிதல் என்பது குழுவிற்குள் இருப்போர் மீது நேயம் (பரிவு) காட்டுதல் என்றே பொருள் கொள்ளும். பரி என்ற சொல் சுற்றி வளைத்து ஒரே கருத்தும் உறவும் கொண்ட குழுவைத்தான் குறிக்கும்.

பரிவட்டம் என்பது தலையைச் சுற்றிக் கட்டும் துணி வட்டம். இங்கு பரிதல் என்பது சுற்றுதல்.

பரிவாரம் என்பது அரசன் அரசியர்க்கு (இந்தக் காலத்தில் தலைவன்/தலைவியர்க்கு) எப்பொழுதும் உடனிருந்து பணி செய்பவர்களின் குழு/தொகுதி

”குழு வழக்கு” என்பது ”பரிபாஷை”க்கு நிகரான நல்ல தமிழ். அதைப் பயன்படுத்த விரும்பாது ”பரிபாஷை” என்ற இரு பிறப்பிக் கூட்டுச்சொல்லைப் பிடித்துத் தொங்குவர்க்கு என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை. அவர்கள் குழு வழக்கு அவர்களுக்கு என்று விட்டுவிடலாம். கொச்சை வழக்கு, நூல் வழக்கு எனவிருந்தால் குழு வழக்கு என்ற சொல் இருக்கக் கூடாதா, என்ன? திருவிண்ணவ மரபின் குழு வழக்கு - ஸ்ரீவைஷ்ணவச் சம்ப்ரதாயப் பரிபாஷை.]

முன்னாற் சொன்ன மடற்குழுவில் பேரா. இராசம் அவர்கள் குலோத்துங்க சோழன் உலாவில் இருந்தும் பல்வேறு பிற்காலச் சோழ, பாண்டிய, குறுநில மன்னர் கல்வெட்டுக்களில் இருந்தும் சில மேற்கோள்களைக் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். முழுமை கருதி அவற்றை அப்படியே இங்கு வெட்டியொட்டியிருக்கிறேன். அவர் சுட்டிய சான்றுகள் கி.பி.1035 வரைக்கும் போகின்றன. அதற்கும் மேல் எவ்வளவு காலம் போகும் என்பதை இதற்குக் கீழே பார்ப்போம்.

----------------------------------
குலோத்துங்க சோழன் உலா

சேயினும் நல்ல பெருமாள் திருத்தடந்தோள்
தோயினும் தோய மனம் துணியும்
ஆயினும் (கண்ணி 167)

..............................................ஓதிமமே
எங்கள் பெருமாளை இங்கே தருவான், நீ
உங்கள் பெருமானுழைச் செல்வாய் (கண்ணிகள் 202-203)

.......................................உலகில்
பெரிய பெருமாள் பெரும் பவனி வீதி
இரிய எதிர் ஏற்று இழந்தாள்
வரி வளை (கண்ணிகள் 207-208)

பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
எழுச்சி முரசு ஓர்ந்திருந்தாள் (கண்ணி 276)

..................................திரு உலாப்
போதும் பெருமாள் புகுதும் அளவும் இங்கு
யாதும் பயிலாது இருத்துமோ (கண்ணிகள் 301-302)

...................................பெருமாளும்
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்று அனைய
வெற்றிக் களி யானைமேல் வந்தான் (கண்ணிகள் 329-330)

......................................... ஞாலத்தோர்
தெய்வப் பெருமாளும் சேவடி முன் குவித்துக்
கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் (கண்ணி 357-358)
++++++++++++++++++++++++++++++++++++++

கல்வெட்டுச் சான்றுகள் ”சாசனமாலை” என்ற கல்வெட்டுக்கள் அடங்கிய நூலில் தேடியபோது கிடைத்ததாக பேரா. இராசம் சொல்லியிருக்கிறார்கள்.

தென் ஆர்க்காடு ஜில்லா, திருக்கோவலூர்த் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் உள்ளது. (ராஜேந்திரன் 1, கி. பி. 1035-1036)

சரவணப்பெருமாள் பட்டர் "ரக்த காணிக்கை நிலம்: தெங்கால் புரவில் அம்மாபாகத்துக்குத் தெற்கு, மதுரை பாதைக்கும் குளத்துக்கரைக்கும் கிளக்கு, வீரப்பபிள்ளை தெப்பக்குளத்துக்கு
மேற்கு, தெப்பக்குளம் வாய்க்காலுக்கு வடக்கு, - இன்னாங்கெல்கைக்கு உள்ப்பட்ட திருத்தல் நிலம் ஒருமாவும், கிர்ஷ்ணாபுரம் குடியிருப்புக்கு மேற்கு, சுந்தரபட்டர் ஆண்டிச்செய்க்கி கிழக்கு, சரவணப்பெருமாள்பட்டர் திருத்தலுக்கும் வாய்க்காலுக்கும் தெற்கு, மதுரைப் பாதைக்கும் வடக்கு, இன்னாங்கெல்கைக்கு உள்ப்பட்ட ஊரடிநிலம் ஒருமாவும், ஆக ரெண்டுசெய்யும்..." (கர்நாடக நவாப்பு, கி. பி. 1793)

ராஜராஜன் - 3, கி. பி. 1231-32 தென் ஆர்க்காடு ஜில்லா, கூடலூர் தாலுகா திருவகீந்திபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது.

இவை இவ்வூர் கணக்கு செருந்திவனப் பெருமாள் எழுத்து.
... ... ...
இவை விஞ்சத்தரையர் சைந்த்ராதன்மைக்கு இவை பெருமாள்ப் பிள்ளை எழுத்து.
... ... ...
இது அண்ண[ல்] வாயில் உதையப் பெருமாள் எழுத்து (ஜடாவர்மன் வீர பாண்டியன் - 2, கி. பி. 1266)

இவ் ஊரில் நாயனாற்குப் பங்கு இரண்டும், உகந்தருளப் பண்ணுகிற பெருமாளுக்கு பங்கு இரண்டும் ... இறையிலியாகவும்... (சம்புவராயன்)

...முத்தமிழ் மாலை முழுவதும் உணர்ந்த சித்திர மேழிப் பெரியநாட்டோம் வைத்துக்குடுத்த பரிசாவது -- ... எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண் பூமிச் சித்திர மேழி விண்ணகரான
திருவிடைகழி நின்றருளின பெருமாள் கோயில் அனாதியாக மேழித் திருத்தோரணமும் ஸ்ரீ பூமிதேவியும் ப்ரதிஷ்டை பண்ணி... (சித்திர மேழிப் பெரிய நாட்டவர், தென் ஆர்க்காடு ஜில்லா,
திருக்கோவலூரில் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் உள்ளது.)

இப்படிக்கு சொக்க ஞானசம்பந்தன் பெருமாள் எழுத்து (ஸுல்தான் ஆட்சிக்காலம். திருச்சிராப்பள்ளி ஜில்லா, திருமெய்யம் தாலுகா, ராங்கியம் பூமீச்வரர் கோயிலில் உள்ளது.)

முன்னாள் பெருமாள். எம்மண்டலமும் கொண்ட பெருமாள். சுந்தர பாண்டிய தேவர் நாளில்... (இராஜநாராயண சம்புவராயர், கி. பி. 1342)

...பணிமாருமிடத்து பெருமாளுக்கு முதலியார்க்கும் பதியிலார் முன்பும் தேவரடியார் இவர்கள் பின்புமாக பணிமாரக் கடவார்களாகவும்... ... ... (இராஜநாராயண சம்புவராயர், கி. பி. 1342)

...உடையார் விக்ரமபாண்டீச்வரமுடைய நாயனார் தேவதானமும் நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடையாட்டமும், ஸ்ரீக்ருஷ்ணன் திருவிடையாட்டமும்...முகந்தானத்து நாராயண
ஸ்ரீபாதங்கள் மடப்புறமும்... இராசகுலரா ... காலுக்கு நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடையாட்டமான ஆகவராம...துக்கும்...(அரிகேஸரி பராக்கிரம பாண்டியன், கி. பி. 1452)

பெருமாள் அரிகேஸரி தேவர் என்று திருநாமம் உடைய பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டிய தேவர்... எங்கள் கர்த்தர் பெருமாள் அரிகேஸரி தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்ட்ய தேவர் ...(அரிகேஸரி பராக்கிரம பாண்டியன், 1462)

பெருமாள் சீபத்மனாப பெருமாளுக்கு நாம் கல்ப்பித்த சங்கர நாராயண மார்த்தாண்டன் பூசை னடக்கும் சீபத்மநாபன் திருமடத்தில் பூசைக்கும் நமக்காரம் உள்பட்ட வகைக்கும்...(முதலியார் ஓலைகள், கி. பி. 1467)

அறந்தாங்கி அரசு அச்சமரியாத பெருமாள். அலவிலஞ்சாத பெருமாள், ... ஆட்டுக்கு ஆனை வழங்கும் பெருமாள், ஏழுநாளையில் ஈழந்திறை கொண்ட பெருமாள்,கோன் பாட ...யாத
பெருமாள், ... ஏகப் பெருமாள் தொண்டைமானார் புத்திரன் ...(கிருஷ்ணதேவ மஹாராயர், கி. பி. 1518)

+++++++++++++++++++++++++++++++++++

இனி நாம் கண்ட சான்றுகளுக்கு வருவோம். மேலே கொடுத்த சான்றுகளுக்கும் முற்காலத்தில் ஒரு சான்றைத் திருப்பதி-திருமலையிற் காணலாம். இதைத் திருமலைக் கோயிலில் முதற்சுற்றாலையின் வடக்குச் சுவரில் பல்லவ அரசன் பார்த்திபேந்திர பல்லவன் காலத்துக் கல்வெட்டிற் பார்க்கலாம். இந்தக் கல்வெட்டின் காலம். கி.பி.966 ஆகும். கல்கியின் ”பொன்னியின் செல்வனில்” வல்லவரையன் வந்தியத்தேவனோடும், கந்தமாறனோடும் சேர்ந்து சோழ இளவரசன் ஆதித்திய கரிகாலனுக்குத் தோழனாய் வரும் பார்த்திபேந்திர பல்லவன் தான் இவன். சுந்தரசோழன் காலத்தில் சோழருக்கு அடங்கிய அரசப் பொறுப்புக் கொண்ட இவனுக்கும் கீழ்ப்பட்ட சத்திவிடங்கக் காடவராயன் என்பவன் மனைவியாகிய சாமவை என்னும் பெருந்தேவி மூலவருக்குச் சில திருவாபரணங்களும், வெள்ளியால் ஊருலவர் திருமேனியும் படைத்து ஊருலவருக்கு மணவாளப் பெருமாள் என்றும் பெயரிட்டு திருப்பணி செய்திருக்கிறாள். (காலப்போக்கில் இப்பொழுது திருமலையில் 4 ஊருலவத் திருமேனிகள் உண்டு.) கிரந்தமும் தமிழும் கலந்த அந்தக் கல்வெட்டில் இருந்து கூடியமட்டும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். [இது திருமலை-திருப்பதித் தேவத்தானம் 1998 இல் வெளியிட்ட “Early Inscriptions" என்ற நூலில் 13-14 ஆம் பக்கங்களில் இருக்கிறது.]
------------------------------------
1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பாத்ரமஹேந்த்ரபன்மருக்கு யாண்டு 14 வது சத்திவிடங்கனாகிய ஸ்ரீகாடபட்டிகள் தேவியார் பல்லவப்பேற்க்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தேவியேன்
ஸ்ரீவேங்கடத்து எழுந்தருளி நின்ற பெருமானடிகளுக்கு கர்ம்மார்ச்சனை கொண்டருளி திருவி(ள்)ளங் கோயிலில் எழுந்தருளுவித்த வெள்ளித் திருமேனியின் திருமுடி-

2. யில[ழுத்தின] வயிரம் 23 ம் பருமுத்து 16 நாயகமான மாணிக்கம் 2 ம் தடவிக் கட்டின மாணிக்கம் 3ம் ஆக மாணிக்கம் 5 னால் திருமுடி ஒன்றும் திருக்காதில் பொன்னின் மகரம் இ[ர]ண்டும் பவழத்தின் கோப்பு ஒன்றும் திருக்கழுத்தின் மாலையிலேறின வயிரம் 14 ம் மாணிக்கம் 3 ம் பருமுத்து 11ம் நேர்முத்து பல[வும்] இட்டுக் கட்டின மாலை [4]ம் பொன்னின்
உதரபெந்த[ன]ம் 1 ம் திருவரைப்பட்டிகை 1 க்கு ஈடுக்கட்டின மாணிக்கம் 4 னால் பட்டிகை 1 ம் பாகுவலையம் 2 க்கு தடவிக் கட்டின மாணிக்-

3. கம் 2 ம் தடவிக் கட்டின மாணிக்கம் 2 கட்டின திருச்சந்தம் 4 ம் திருக்கழுத்தின் வளையில் 4 ம் திருக்காலுக்கழுத்தின காறை 2 ம் இடையிட்ட பொன்னின் மணியும் பவழமும் முத்தும்
ஆக உரு 52 பாதசாயலம் 2 ம் வெள்ளிப்ரபையில் ஏறின நாயகமான மாணீக்கம் [1] இத்தனை ஆபரணங்களும் இட்டு செய்த பொன் 47 கழஞ்சும் இத்தனையும் கொண்டு அபிஷேகமும்
செய்வித்து எழுந்தருளுவித்த மணவாளப்பெருமாளுக்கு ஸ்ரீவேங்கட கோட்டத்து திருக்குடவூர்நாட்டு திருச்சுகனூர் சபையார் பக்கலும் மடமுடை-

4. ய இலக்ஷுமணநம்பி பக்கலும் பொன்குடுத்[து] விலை கொண்டு திருவிளங்கோயில் பெருமாளுக்கும் பொன் கொடுத்து இறை இழித்திக்கொண்ட நிலமும் சபையார் பக்கல் கொண்ட
நிலமும் நந்தி எரிப்பட்டியும் மடுப்பூட்டையும் இலக்ஷுமணநம்பி அடைகொண்ட நிலமும் மதுசூதன் ஆவியரையும் புருஷோத்தமன் பட்டியும் ஆக மூன்று பட்டி நிலமும் கடிகைக் கோலால்
அளந்து பதினறுசாண்கோலால் மூவாயிரம் குழி விலை கொண்டு சபையாற்கும் தேவ[ற்]கும் விலை பொன் குடுத்து இறை இழித்[தி] மணவாளப் பெருமாளுக்கு நிமந்த-

5. த்துக்கு வைத்தபடியாவது நிமந்தம் நானாழி அரிசி திருவமுதும் திருனந்தாவிளக்கு ஒன்றும் இரண்டு அயநசங்க்ராந்தியும் இரண்டு விஷுசங்க்ராந்தியும் திருமஞ்சனம் புகுவிப்பதற்கும் புரட்டாதித் திருநாள் எழுந்தருளிப் பொதுகைக்கு [விழா]வெழுந்தருளுமன்றுமதன் முன்பும் இரண்டுநாள் திருவிழா எழுந்தருளுவிப்பதா[க]வும் சித்திரை முதலாக திருமுளையட்டி
ஒன்பதுநாள் திருவிழாவெழுந்தருளிவிக்கவும் இத்தனையுஞ் செய்விப்பார் திருவேங்கடத்து மாடாபத்தியஞ் செய்வாரேயாகவும் இந்நிலம் இறைகாத்து விட சபையார் இரக்ஷிப்பாராகவும்
இப்பரிசு சந்த்ராதித்தவரை நிற்பதாக

6. செய்தேன் சத்திவிடங்கனாகிய காடவன் பெருந்தேவியார் பல்லவப்பேற்க்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தேவியேன் இத்தன்மம் இரக்ஷிப்பார் ஸ்ரீபாதம் என் தலைமேலது ஸ்ரீவைஷ்ணவர்கள் இரக்ஷை [.] இவை சாத்தந்தை எழுத்து.
------------------------------------

இதே போல சென்னையிலிருந்து மாமல்லபுரம் போகும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் இருக்கும் திருவிடவெந்தை வராகப் பெருமாள் கோயிற் கருவறைடின் வடக்கு அடித்தானத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டும் அங்கிருக்கும் மணவாளப் பெருமாள் பற்றிச் சொல்கிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 979. [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி III பகுதி III இல் 125 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரிபன்மர்க்கு யாண்டு ஆறாவது ஆமூர் கோட்டத்துப்
2. படுவூர் நாட்டு திருவிடவந்தை ஊரோங் கையெழுத்து. சோணாட்டு
3. வடகரை இந்நம்பர்கி[ழா]ந் நக்கன் ஏநாதி கையா[ல் யா]ங்கள் கொ[ண்டுகடவ] பொ
4. ந் முப்பதின் கழஞ்சு இப்பொந் கொண்டுகடவோம் இப்பொன் முப்பதின் கழஞ்சு பொந்நுக்கு இ(வ்)வுர்-
5. ருடைய மணவாளப் பெருமாளுக்கு நந்தாவிளக்கு ஒன்றிநுக்கு நிச்சம் உழக்கெண்ணைப்படி தொண்ணூ-
6. ற்று நாழி எண்ணை அட்டுவோமாகவும் ஒட்டிக்குடுத்து பொந் கொண்ட்டோ-
7. ம் இப்பொந்நால் எண்ணை சந்த்ராதித்தவர்க் கட்டுவோமாகவும் பொன் கு-
8. டுத்து பொலியூட்டு சொல்லப்பெறாதோமாகவும் ஒட்டிக்குடுத்தோ[ம்] ]ஊ]-
9. ரோம். இதற்றிறம்பில் உண்டிகையும் பட்டிகையும் காட்டி தந்மாஸனத்திலே நிச்-
10. சம் நாலேகாற்காணம் படுவோமாகவும் அ[ன்]றாள் கோவுக்கு நித்தம் மஞ்சாடி
11. பொன் மந்றுபாடு இறுப்போமாகவு[ம்] இத்தண்டமு[ம்] மன்றுபாடும் இறுத்-
12. து இவ்வெண்ணை முட்டாமைத் திருவுண்ணாழிகை வாரியர் வசமே எரி-
13. க்க அட்டுவோமாக இட்டுக்குடுத்தோ[ம்] [ஊ]ரோம்.

இதே திருவிடவெந்தைக் கோயிலில் கி.பி.960 ஐச் சேர்ந்த பார்த்திபேந்திர பல்லவனின் கல்வெட்டும் இருக்கிறது. அதிலும் மணவாளப் பெருமாள் பற்றிய குறிப்பு வருகிறது. [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி III பகுதி III இல் 186 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியநைத் தலைகொண்ட கோவிராஜ மாராயர்க்கு யாண்டு எட்டாவது ஆமூர்க் கோட்டத்துப் படுவூர் நாட்[டுத் தேவதாநத் தி]ரு-
2. விடவந்தை ஸபையோமும் ஊரோமும் கைய்யெழுத்து. தலைசயநப் புறமாகிய தைய்யூர் வைய்யொடுகி[ழா]ந் வைகுனடிகளும் இவந் தம்பி தாழி எருமாநும்
3. இவ்விருவரும் திருவிடவந்தை ஸ்ரீவராகஸ்[வாமி]களுக்கு அட்டுவித்த திருமேநி மணவா[ள]ப்பெருமாளுக்கு ஈவிருவருங் குடுத்த பொந்.............[சு இப்] பொந்(ப்) ப[தி][னை]ங்க-
4. ழஞ்சும் (இப்பொன்) கொண்டு கட[வோம்] இப்பொந்னுக்குப் பலிசை அட்ட இதற்க்கு சந்த்ராதித்தவற் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்ட ஆண்டுதொறும் அளக்க-
5. க்க்[ட]வ நெல்லு ஐம்பத்தறுநாடி கு[ட்டை] நெல்லும் பங்குநி சித்திரையுமகப்பட ஈரமும் பதரும் நீக்கி துய்வாக்கி எண்ணாழிக் காலா[ல்] அட்டுவோ[ம்]மா-
6. நோம் [அ]ட்டாத ஆண்டுதொறும் ஐம்பத்தறு நாடி குட்டை நெல்லுங் கைக்கொன்உ அளந்து குடுக்கக் கடவோமாநோம் இதற்றிறம்பில் த[ன்மா]ஸநமுதலாக-
7. த் தாந்வேண்டு கோவு[க்]கு நி[ச]தி [அ]ரைக்கால் பொந் மந்றப்பெறூவதாகவும் இத்தண்டப்பட்டும் இந்னெல்லு வழுவாமே அளந்து குடுப்பதா-
8. கவூம் இதற்க்கஹிதஞ் சொன்னார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார் கொள்ளவும் இத்தநம் ரக்ஷி-
9. ப்பார் ஸ்ரீபாதம் எந் தலைமேலநவாக இப்பரிசு ஒட்டிக்குடுத்தோம் முற்சொல்லப்பட்ட திருவிடவந்தை ஸபையோமும் ஊரோமும் ஆக இரண்டு திறத்தோம்.

மேலே சொன்ன மூன்று கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.960க்கு வந்துவிட்டோம். இனி இதற்கும் முன்னால் போகமுடிகிறது. அது முதற் பராந்தகன் ஆதித்த சோழன் காலத்தது. அது திருக்கோவலூர் வட்டத்தைச் சேர்ந்த கீழூர் வீரட்டனேசுவரர் திருக்கோயிலில் உள்ள சுற்றாலைப் பாறையில் இருக்கும் கல்வெட்டாகும். அது சற்று சிதைந்து காணப்படுகிறது. [எனவே கல்வெட்டை இங்கு நான் பெயர்த்து எழுதவில்லை.] இதில் 7வது வரியில் “பெருமாளுக்கு” என்ற சொல் வருகிறது. அதை இறைவன் திருமேனியைக் குறித்ததா, மாந்தரைக் குறித்ததா என்று சொல்லமுடியவில்லை. முதலாம் ஆதித்த சோழனின் காலம் கி.பி.871-907 ஆகும். இந்தக் கல்வெட்டு அவன் ஆட்சியின் 13ஆம் ஆண்டில் வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது கல்வெட்டின் காலம் கி.பி. 884 ஆகும். [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி IV இல் 927 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

ஆக ஒன்பதாம் நூற்றாண்டு வரை வந்துவிட்டோம். இதற்கு முன்னால் விசயாலயன் காலமும், பல்லவர் காலமும் தான் ஆய்வு செய்யவேண்டும். என்னிடம் இந்தக் கல்வெட்டு விவரங்கள் இல்லை. இவை இருப்பவர் தேடிப் பார்க்கலாம்.

இனிப் பெருமாள் என்ற சொல்லிற்கு வருவோம். பல்லவர் காலத்தில் இருந்தே (களப்பாளர் காலம் ஆயவேண்டும்.) இறைவன்/இறைவி, அரசர், அரச குடும்பத்தார், அரசகுடும்பத்திற் பிறந்து அரசு பெறாது வாழும் பெரியோர் ஆகியோர் பெருமானடிகள் என்று தான் அழைக்கப்பட்டனர். அது நிலவுடைமைக் குமுகாய வழக்கம். எப்படி நம்பூதிரிகளை அவர்கள் இவர்கள் என்று அழைக்கக் கூடாதோ, ”திருமேனி” “அத்தேகம்” என்று மிகப் பணிந்து அழைக்க வேண்டுமோ அதுபோல இந்தத் தலைவர்கள் பெருமான் அடிகள் என்று அழைக்கப் பட்டார்கள். அதாவது ”ஸ்ரீபாதம்” என்று வடமொழியில் அழைக்கும் முறை. அந்தப் பாதங்களை வணங்குதல் முறை என்றே உணரப்பட்டது. சரணாகுதி மரபும் இந்த நிலவுடைமைக் குமுகாயத்தில் தான் விண்ணவநெறியில் எழுந்தது. சரணாகுவதற்கு பாதம்/ அடிகள் முகன்மையானதல்லவா? இந்த அடிகள் என்ற பயன்பாடு சிலம்பிலேயே தொடங்கிவிட்டது. ஆணாதிக்கக் குமுகாயத்தில் வளர்ந்த கோவலனை மதுரையில் மாதரி வீட்டில் ”அடிகள்” என்றுதான் கண்ணகி அழைப்பாள். இளங்கோ அடிகள் என்பதை வைத்து அவர் துறவி என்று சொல்வதைக் காட்டிலும் பெருந்தனக்காரர்/அரச குடும்பத்தார் என்பதே பெரிதாக இருந்திருக்கலாம்.

இந்தப் பெருமானடிகளின் சுருக்கமாய்த்தான் பெருமான் என்றசொல் எழுந்தது. ஆலமர் செல்வனைச் சிவபெருமான் என்றழைப்பது இப்படித்தான். (இன்னொரு வகையில் இறைவனைப் பெருமானர் (=பார்ப்பனர்) கூட்டத்தோடு ஒன்றுபடுத்தி அழைக்கும் போக்கும் உள்ளமைந்து இருந்தது. பல்லவர், பேரசுச் சோழர் காலத்து நிலவுடைமைக் குமுகாயத்தில் பெருமானர் பெரும்பங்கு கொண்டவர். ஊர் ஊராகச் சதுர்வேதி மங்கலங்கள் கொடுக்கப்பட்டன. இறைவன் பெயர் பெருமான் ஆகியது வியப்பில்லை.

அடுத்து பெருமாள் என்னும் சொல்லிற்கு வருவோம். இதுவும் பெருமானடிகள் என்பதன் இன்னொரு வகைச் சுருக்கம் தான். முதலில் ஊருலவத் திருமேனிகளுக்கு ஏற்பட்டுப் பின்னால் மூலவருக்கும், மாந்தருக்கும் பயன்பட்டது போலும். [மணவாளப் பெருமாளுக்கும் திருமலை சீனிவாசப் பெருமாளுக்கும் கல்யாண வேங்கடேசருக்கும், உறையூர் அழகிய மணவாளனுக்கும், திருவரங்க ஊருலவரின் அழகிய மணவாளன் என்ற பெயருக்கும், திருவிடவந்தை நித்ய கல்யாணப் பெருமாளுக்கும் இருக்கக் கூடிய தொடர்பை இன்னொரு கட்டுரையிற் பேசுவோம். இங்கு பேசினால் பொருள் விலகிப் போகும்.] அடிகள் எப்படிப் ஆட்சியைக் குறித்ததோ அதே போல ஆள், ஆளி, ஆளன், ஆள்வான், ஆண்டவன் போன்றவை ஆட்சி செய்யும் தலைவனைக் (ruler) குறித்தன. ஆளன்>ஆடன்>ஆதன் என்று வளர்ச்சி பெற்றதையும் பாவாணர் வழி சொற்பிறப்பியலால் உணரலாம். ஆள், ஆளி, ஆளன், ஆடன், ஆடவர் போன்ற சொற்களை உரையாசிரியர் பல இடங்களில் வெறும் ஆண்மக்கள் என்றே பொருள் கொண்டிருக்கின்றனர். அதைக் காட்டிலும் சில இடங்களில் ஆட்சி செய்பவர் என்று பொருள் கொள்ளுவது இன்னுஞ் சிறப்பான பொருளைத் தரும். காட்டாக புறம் 187 ஔவையார் பாடிய

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

என்ற பாடலில் ஆடவர் என்ற சொல்லிற்கு ruler என்னும் பொருள் கொண்டால் ஆழமான பொருள் கிடைக்கும். அதே போல பெருமாள் என்ற சொல்லில் ஆள் என்பதற்கு மாந்தன், ஆண் என்ற பொருள் கொள்ளாது பெரும் ஆள் = பெருமாள் (big ruler) என்ற பொருள் கொண்டால் நம்மை ஆளும் தலைவனைக்/இறைவனைக் குறித்தது புரியும். இது விதப்பாக விண்ணவத்திலும், பொதுவாக மற்ற இடங்களிலும் இறைவர், மாந்தர் ஆகியோரைக் குறித்திருக்கிறது. பெருமாள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்புக் குறைவு. அது நிலவுடைமைக் குமுகாயம் கொஞ்சங் கொஞ்சமாய்த் தோன்றிக் கொண்டிருந்த காலம். வளர்ந்து ஓங்கி நின்ற காலமல்ல. அது ஓங்கி உயர்ந்தது பேரரசுச் சோழர் காலத்திற்றான் ஆகும். இருந்தாலும் பல்லவர், களப்பாளர் காலத்து ஆவணங்களை ஆழ ஆய்வது சரியான விளக்கத்தை அளிக்கும்.

பெருமானடிகள் என்ற சொல் முற்றிலும் மறைந்த காலம் எப்பொழுது என்றும் நான் ஆய்ந்து பார்க்கவில்லை. யாராவது செய்து பார்ப்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும்.

ஆள்வான் என்ற சொல்லின் நேர் எதிரானது ஆழ்வான் என்ற சொல்லாகும். தலைவன் ஆள்வான், அடிமை ஆழ்வான். இதையும் விளக்கத் தொடங்கினால் விண்ணவத்தின் சரணாகுதிக் கொள்கை முற்றிலும் புரியும். சரணாகுதல் குரங்கு முறையா, பூனை முறையா என்பதில் தான் வேறுபாடு கொள்ளமுடியும். [தென்கலை, வடகலை வேறுபாடு மெய்ப்பொருள் அடிப்படையில் அதில் மட்டுமே தென்படும்.]

காலம் மாறிவிட்டது. குமுகாயங்களும் மாறிவிட்டன. நிலவுடைமை ஒருபக்கம் அழிந்து கொண்டிருக்க முதலியம் வந்து சேர்ந்து விட்டது. இந்த மாற்றங்களையும் மீறி பெருமாள், ஆண்டவன் போன்ற சொற்கள் இப்பொழுது புழங்குகின்றன. புதுப் பொருட்பாடு பெருகின்றது. எந்த மாந்தனையும் பெருமாள் என்று மிகு மரியாதை வைத்து அழைப்பதாகத் தெரியவில்லை. [பெருமாள் என்ற இயற்பெயர் சில மாந்தருக்கு இருக்கலாம்.] இறைவனுக்கு மட்டுமே, கூறிப்பாக விண்ணவனுக்கு மட்டுமே, இந்தக் காலத்திற் பெருமாள் என்ற சொல் பயில்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 26, 2010

காலும் காற்று

அண்மையில் வெள்ளிவீதியார் எழுதிய, பாலைத்திணையைச் சேர்ந்த, குறுந்தொகை 130 ஆம் பாட்டைப் பற்றிய, உரையாட்டொன்று தமிழ்மன்றம் மடற்குழுவில் எழுந்தது. அதில் வரும் ”கால்” என்ற சொல்லுக்கு ”உடலுறுப்பு” என்றே பல்வேறு உரையாசிரியர்கள் பொருள் கொண்டிருக்க, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் செ.வை.சண்முகம் மட்டும் ”அதைக் காற்று என்று கொண்டது சரியா?” என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இந்தப் பாட்டில் கால் என்ற சொல்லிற்குக் காற்று என்று பொருள் கொள்ளுவதே சரியென்று எனக்கும் படுகிறது.

கால்தல் என்பதற்கு இயங்குதல் என்றே சொல்லாய்வர் கு.அரசேந்திரன் பொருள் சொல்லுவார். அப்படிக் கொள்ளுவது பொருத்தமாகவே எனக்குத் தென்படுகிறது. நிலம், நீர், காற்று, தீ, வான் என்னும் ஐம்பூதங்களைச் சொல்லும் போது இயங்குதல் இயல்பே காற்றிற்குக் கற்பிக்கப் படும். இற்றை அறிவியலின் படியும், இயங்காக் காற்று, அசையா வளி என்பது முற்று முழுதான சுழிய வெம்மையிற் (absolute zero temperature) தவிர்த்து வேறெங்கும் காணமுடியாது. ”காலும் காற்று” (கால்தல் = இயங்குதல்; இயங்கும் காற்று) பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்து பாட்டின் பின்புலத்தில் இழையும் அக்கால மெய்யியற் கற்பிதம் பற்றியும் இங்கு பேச விழைகிறேன்.

கல் என்னும் வேருக்குக் கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை ஆகிய ஆறு அடிப்படையான பொருட்பாடுகளை முனைவர் கு.அரசேந்திரன் தன்னுடைய “உலகம் தழுவிய தமிழின் வேர் - கல்” என்ற பொத்தகத் தொகுதியிற் பேசுவார். அவற்றிற் செலவுப் பொருளை (=இயக்கப் பொருளை) மட்டுமே இங்கு கோடி காட்டுகிறேன். (மல்>மால், பொல்>போல் என்பது போல் கல்>கால் என்ற விரிவு அமையும்.) கூட்டக் கருத்து மிகுதிக் கருத்தையும், மிகுதிக் கருத்து செலவுக் கருத்தையும் தோற்றுவிக்கிறது என்பதை அழகாக பல்வேறு சொற்களின் மூலம் அவர் பொத்தகத்தில் விளக்குவார். கால்தல் என்ற சொல்லிற்குத் தோன்றுதல், வெளிவருதல், பாய்தல், ஓடுதல், பரவுதல், வீசுதல் என்ற பொருட்பாடுகள் உண்டு.

இயற்கையிற் பல இடங்களில் பொதுள் ஆற்றலே (potential energy) துனைவாற்றலாக மாறுகிறது. (dynamic energy. ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 798 ஆம் நூற்பா.) பொதுளாற்றல் என்பது கூட்டப் பொருளை ஒட்டியது. ஓர் அணையில் நீர்ச் சேகரிப்புக் கூடக் கூட நீர் மட்டம் உயர்ந்து, மதகைத் திறந்துவிடும் போது நீர் வெளிவரும் கதி கூடும். (கூட்டம் -> உயரம் -> பொதுளாற்றல் கூடுதல்.) குறிப்பிட்ட இடத்துள் மந்தைகளை மேலும் அடைக்க, அவை முட்டி மோதிக்கொண்டு அடைப்பைத் திறந்தவுடன் வேகமாய் வெளிவரும். வெள்ளை மேகத்துள் நீராவி கூடக் கூடக் கருமை நிறம் கூடி, ஒரு குறிப்பிட்ட அளவில் நீர்ச்செறிவு (water concentration) தெவிட்டிப் போய் (gets saturated) நீர்த்துளிகளை வெளியிட்டு மழையாய்க் கொட்டும். மழை இயக்கமும் நீராவிக் கூட்டமும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஏதொன்றும் கூடினால் தான் கூட்டத்துள் அடங்கிய உறுப்புகளின் முரண்பாட்டால் நுண்ணியக்கம் (micromotion) ஒருப்பட்டு, பேரியக்கம் (macro motion) வெளிப்படும் என்பதை இயற்கையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் உணரலாம். இவ்வியற்கை மாற்றத்தை தொடக்க கால மாந்தனும் பல்வேறு பட்டறிவுகளால் உணர்ந்திருந்தான்.

இது தவிர கூட்டம் கூடும்போது கூட்டவுறுப்புக்கள் சும்மா இருக்க முடிவதில்லை. அவை இயங்கிக் கொண்டே இருக்கும் தேவையேற்படுகிறது. மேய்ச்சல் நிலத்தில் இரைதேடும் விலங்குகள், தம் அருகேயிருக்கும் தீவனம் கரைந்த பிறகு, மேய்வதன் தொடர்பாய் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இயக்கம் இல்லாது அவை வாழ்வதில்லை. மேய்ச்சலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நடை காலு நடை>கால்நடை என்றாகும். ஒருபக்கம் மேய்ச்சல் இன்னொரு பக்கம் காலுதல். இரு தொழில்களும் ஒன்றோடொன்று பிணைந்தவை. கால்தல் இல்லா மேய்ச்சல் கற்பனை செய்ய முடியாதவொன்று.

எப்படி மாந்தவுடம்பிற் கொள்ளும்/கொய்யும் உறுப்பு (இன்னொரு விதமாய்ச் சொன்னால் கவ்வும் உறுப்பு) ”கொள்>கொய்>கை”யாயிற்றோ (கிணற்றின் மேல் இருக்கும் உருளையைக் கொண்டிருக்கும் கை = கொண்டி என்றே சொல்லப்படும். கொள்ளுதல் = to have) அது போல காலுதற்கு உதவும் உறுப்பு கால் ஆயிற்று. வண்டிகளில் இயங்கும் சக்கரமும் கூட தொழிலொப்புமை கருதிக் கால் என்றே தமிழிற் சொல்லப் படும். காலும் தடம் காற்றடம் ஆயிற்று. காலுகின்ற (=ஓடுகின்ற) நீரை உடைய இயற்கை வாய் கால்வாய் ஆயிற்று. அதே ஓட்டத்தைச் செயற்கையாய் அமைக்கும் போது அது வாய்க்கால் ஆயிற்று.

காலிக் கொண்டே இருக்கும் காரணத்தால், இயங்கும் வளியும் கால்+து = காற்று எனப்பட்டது. காலுகின்ற காற்றால் பேரோசைகள் ஏற்பட்டன. காற்றுவளியின் கதிக்குத் (velocity) தக்க பேர்விசைகள் உருவாகின. இதே காலை gale, gal, என்று மேலை இரோப்பிய மொழிகள் சொல்லும். வழக்குத் தமிழில் இன்று சூறைக் காற்று, சூறாவளி என்று சொல்லுவோம். சூறை என்பது மிகுபடச் சொல்லும் ஒரு முன்னொட்டு..

நாற்பரிமானக் காலவெளியில் (four dimention space-time) மூன்று பரிமானங்கள் இடத்தைக் குறிக்க, நாலாவது பரிமானம் காலத்தைக் குறிக்கும். இந்தப் பரிமானத்திற்கு மட்டும் தொடக்கம் என்று நிலையை இற்றை அறிவியல் காட்டும். பருவம் என்பதைக் குறிக்கும் இந்தக் காலமும் கூட கால்தல் பொருளில் உருவான சொல் தான். காலப் பெருவெளியைக் குறிக்கத் தொல்காப்பியத்தில் இரண்டு நூற்பாக்கள் உண்டு. ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் அந்த நூற்பாக்களின் வரையறுப்பு நம்மை வியக்கவைக்கும்.

”ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப”

என்று “கருமம் நிகழ்வது ஒரு களத்தில் (you need a place for an occurrence to happen).” என்று தெளிவாக வரையறுக்கும். [தொல்.செய்யுளியல் 1457 ஆம் நூற்பா.] இடமும் களமும் ஒன்றுதானே? அடுத்த நூற்பாவில் (செய்யுளியல் 1458)

“இறப்பே நிகழ்வே எதிரது என்னுந்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளபே
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்”

காலம் என்ற கருத்தீட்டை வரையறுப்பார். (occurrence of an event is proscribed by time.) இங்கு கூறிய இரண்டு நூற்பாவும் இற்றைப் பூதியலில் (physics), குறிப்பாகக் காயவியலில் (cosmology) கால-வெளி (space - time) என்று கூறும் கருத்தீட்டை விளக்குவதற்கு மிகவும் பயன்படக் கூடியவையாகும். இயக்கமின்றேல் காலத்தை யாராலும் உணரமுடியாது. ஓர் இயக்கத்தை இன்னோர் இயக்கத்தின் மூலம்தான் ஒப்பிட்டு ”இது விரைவு, இது சுணக்கம்” என்று சொல்ல முடியும். அடிப்படையில் விரைவான துடிப்பைக் கால அளவாய்க் கொண்டு, அதன் மடங்காகவே மற்ற இயக்கங்களை (இது நடந்து முடிப்பதற்குள் இத்தனை அடிப்படைத் துடிப்புகள் நடந்துவிட்டன) இற்றை அறிவியல் காலத்தை அளக்கிறது. நுண்ணிதாகச் சிந்தித்தால் கால்தல் என்ற இயக்க வினை காலம் என்னும் சொல்லுக்குள் ஆழ்ந்து புதைந்திருப்பதை உணரமுடியும். காலம், காலை, கால் என்ற சொற்கள் எல்லாமே time என்ற கருத்தீட்டைத் தமிழில் உணர்த்தி நிற்கின்றன.

இனிக் காற்று என்ற பொருளை மட்டும் ஆழ்ந்து பார்ப்போம். நீரைக் கடப்பதற்கு வெறும் துடுப்பு உதவியையும் நீரோட்டத்தையும் மட்டுமே மாந்தன் பயன்படுத்துவதில்லை. அவையெல்லாம் குறைந்த தொலைவைக் கடக்கவே பயன்படுகின்றன. நீண்ட தொலைவைக் கடப்பதற்குப் படகிற் பாய்மரங்கள் நட்டு அவற்றில் பாய்களைக் கட்டிக் காற்றுவிசை மூலம் கலஞ்செலுத்தும் நுட்பம் எப்பொழுது கண்டுணரப் பட்டது என்பது ஓர் ஆழ்ந்த ஆய்வாகும். அந்த நுட்பியல் சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் அறிந்திருக்க வேண்டும். இப்பாட்டில் அந்த நுட்பம் இரண்டாம் வரியால் உய்த்துணரப் படுகிறது. முந்நீரில் யாரும் கால் என்று உடலுறுப்புக் கொண்டு நடப்பதில்லை. ஒருவேளை மீமாந்தத் தந்திரம் அறிந்தோர் அதைச் செய்யமுடியலாம். பொதுவான மாந்தர் கால் என்னும் காற்றைக் கொண்டு கலஞ் செலுத்தியே முற்காலத்திற் கடந்திருக்கிறோம். முந்நீரைக் கடத்தல் என்றாலே இந்த நுட்பம் பயன்பட்டதாகத்தான் அன்று பொருள். இற்றை நாளில் கால்நுட்பம் இல்லாது பொறி நுட்பம் கொண்டு, நீருக்குள் ஓட்டத்தைக் கிளப்பிக் கலத்தை முன்செலுத்த வைக்கும் நுட்பம் வந்துவிட்டது. அதனால் நாம் கால்நுட்பத்தின் நெளிவு சுளிவுகளை, அதன் வீச்சை உணராது போகிறோம். கால்நுட்பத்தின் வழியும், கடலில் இருக்கும் இயற்கை நீரோட்டத்தின் வழியும் உலகையே பழம் மாந்தன் வலம் வந்திருக்கிறான். அதை இற்றை நாளில் நடத்திக் காட்டி (demonstrate) பல முன்னோட்டாளர்களும் நம்மை உணரவைக்கிறார்கள்.

சரி, கால் என்ற சொல் இயக்கம் என்ற பொருளில் மட்டும் தான் வந்ததா? - என்றால் இல்லையென்று சொல்லவேண்டும். இதே வெள்ளி வீதியார் குறுந்தொகை 44 இல் உடலுறுப்பு என்ற பொருளில் கால் என்னும் சொல்லைப் பயன்படுத்துவார். அந்தப் பாட்டு செவிலித்தாய் பாடுவதாய் அமையும். தலைவனோடு, தலைவி உடன்போக்காய்ச் சென்று விட்டாள். இருவரும் எங்கு சென்றார்கள் என்று செவிலித் தாய்க்குத் தெரியவில்லை. வருவோர் போவோரிடம் கேட்டுப் கேட்டுப் பார்க்கிறாள். அலைந்து திரிகிறாள். கால்களின் இயக்கம் தொலைந்து மரத்துப் போகின்றன. (பரி = இயக்கம்) கண்கள் ஒளி குன்றி பூத்துப் போகின்றன. பெரிய இருள் வானில் தெரியும் மீன்களைக் காட்டிலும் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று; தன் மகளையும் அவள் கொழுநனையும் மட்டும் எங்கும் காணவில்லை. சோர்ந்து போகிறாள் செவிலித்தாய்:

காலே பரி தப்பினவே கண்ணே
நோக்கி நொக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே

ஆனால் குறுந்தொகை 130 ஆம் பாடலில் வரும் கால் உடலுறுப்பு என்ற பொருளில் வரவில்லை. செலவு/இயக்கம் என்ற பொருளிலேயே வந்திருக்கிறது. இதே போல இன்னும் இருபாடல்கள் அதே குறுந்தொகையில் கால் என்ற சொல்லாட்சியைச் செலவு/இயக்கம் என்ற பொருளிற் காட்டும்.

இன்றே சென்று வருதும் நாளைக்
குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின் மாலை எய்தி,
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பல்மாண் ஆகம் மணந்து உவக்குவமே

-குறுந்.189 மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

பரல் அவற் படுநீர் மாந்தித் துணையொடு
இரலை நல்மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அலவைக், கால் இயல்
கடுமாக் கடவுமதி பாக! நெடுநீர்ப்
பொருகயல் முரணிய உண்கண
தெரிதீம் கிளவி தெருமரல் உயவே

- குறுந்.250 நாமலார் மகன் இளங்கண்ணனார்

இனிப் பாட்டினுள் அடங்கியிருக்கும் மெய்யியற் கற்பிதம் பற்றிப் பார்ப்பொம். முதலிற் பாட்டின் சூழலைச் சற்று ஆழமாய்ப் பார்ப்போம். ”வணிகத்தின் மேற்சென்ற தலைவன் எங்கு போயிருக்கிறான்?” என்று தலைவிக்கும் தோழிக்கும் தெரியாத நிலையில், ”அவன் திரும்பி வாரானோ, என்னவாயிற்றோ?” என்று அலமருந்து, பிரிவாற்றாமை மேம்படத் தலைவி புலம்புகிறாள். அவள்துயரைப் பொறாத தோழி, ஆற்றுவிக்கும் முகமாய்,என்ற இப்பாட்டைச் சொல்லுகிறாள்:

நிலம் தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ நம் காதலோரே

”ஏனடி, கவலைப் படுகிறாய்? நம் காதலர் நம் நாட்டில் இல்லையென்றால், நாவலந் தீவினுள் வேறெதோவொரு நாட்டில், ஊரில், குடியில் தான் இருக்க வேண்டும். நாடு நாடாய், ஊரூராய், குடி குடியாய்த் தேடின் அவர் தென்படாமலா போவார்? காற்றுவழி செல்லும் பாய்மரக் கப்பலில் ஏறி விலகிக் கிடக்கும் இரு பெருங்கடலிலும் ஏதேனும் ஒரு தீவுக்கு அவர் சென்றவரில்லையே? வானுலகும் போயிருக்க மாட்டாரே?. புவிக்கடியில் உள்ள பா(ள்)தல உலகத்திற்கும் சென்றிருக்க மாட்டாரே?” என்று அன்றைக்கிருந்த இயல்பான மெய்யியற் புரிதலோடு (philosophical understanding) தோழி இயம்புகிறாள்.

[பாளப்பட்ட தலம் பா(ள்)தலம். பா(ள்)தலம்>பாதலம்>பாதளம்>பாதாளம் என்பது நல்ல தமிழ்ச்சொல் தான். இங்கே நிலம் தொட்டுப் புகுதல் என்பதால் பாதலம் குறிக்கப் படுகிறது. தொடுதல் = பள்ளுதல், பாளுதல், பறித்தல், தோண்டுதல். இது ஏதோ ஒரு வடமொழிச்சொல் என்று நம்மிற் பலரும் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் வடமொழியில் இதற்குச் சரியான வேரில்லை. இந்தச் சொல் முதன்முதலாய் மிகப் பிற்கால உவநிடதமான அருணேய உவநிடதத்திலும், மாபாரதத்திலும் தான் ஆளப்படுகிறதாம். அதோடு பாத = விழுதல் என்ற சொல்லே மூலமாக மோனியர் வில்லியம்சில் குறிக்கப் படுகிறது.

”நம் தலைவர் மூவேந்தர் அரசுகளைத் தவிர்த்து நாவலந்தீவினுள் தான் சென்றிருப்பார். எத்தனையோ வணிகக் குழுக்கள் இப்பாதைகளில் சென்று வருகின்றனவே? அக்குழுக்களின் மூலம் நம் காதலர் எங்கு போயிருக்கிறார் என்று உறுதியாக நாம் அடையாளம் காணலாம்” என்று அவள் காலத்துப் புரிதலை முன்வைத்துத் தோழி தலைவியை ஆற்றுப் படுத்துகிறாள். அப்படிச் சொல்லும்போது அந்தக் காலத் தமிழரின் உலகப் பார்வையும் (world view) நம்முன் அவிழ்ந்து விழுகிறது. பாட்டெழுந்த காலத்தையும் ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறது. அன்றைய மூவேந்தர் அரசுகளை விட்டு ஒருவன் வெளியே போவதாய் இருந்தால், அடுத்தடுத்த கடினப் பாங்குடன், நாவலந்தீவில் உள்ள மற்ற நாடுகள், கடற் பயணத்தின் வழி செல்லக் கூடிய தீவுகள், வானம், பாதலம் என்ற வரிசையிற் தான் பயணம் செய்ய முடியும். இப்படி அறுதியாக உரைப்பது ஒருவித மெய்யியற் பார்வையைச் சார்ந்தமட்டும்து. இந்தப் படிமானத்தைப் பாட்டின் முதல் நாலு வரிகள் கடினமான உகப்பில் (choice) இருந்து எளிதான உகப்பு வரை சொல்லுவதாய் தோழி அடுக்குகிறாள்.

இத்தகைய உலகப் பார்வை காட்டுவிலங்காண்டி காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் இல்லை. பாதலம் என்ற மெய்யியற் கட்டுமானம் சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் இருந்ததா என்று உறுதியாகச் சொல்ல நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடையா. இருக்கு வேதத்தில் (கி.மு.1500) கூடப் பாதலம் என்று கருத்தியல் இருந்ததா (வான உலகம் என்ற கருத்தியல் அந்தக் காலத்தில் இருந்தது.) என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (திரிபுரங்கள், மூவுலகங்கள் என்ற சிந்தனை இதைக் குறித்ததோ என்ற ஐயம் உண்டு.) வேத நெறியை மறுத்து எழுந்த சாருவாகம் / உலகாய்தம், தொடக்க காலச் சாங்கியம் போன்றவை (கி.மு.800-600) மூவுலகக் கருத்தியலை முற்றும் ஏற்காதவை கண்ணுக்குத் தெரியும் காட்சியுலகை மட்டுமே உண்மை என்று அவை விளம்பின. ஆனால் அதே காலத்திலும் அவற்றிற்குச் சற்று முன்னும் (கி.மு.800களில்) எழுந்த உவநிடதச் சிந்தனைகளிலும் கி.மு.600 களில் எழுந்த வேத மறுப்பு இயக்கங்களான சமண நெறிகளிலும் (ஆசீவகம், செயினம், புத்தம்) ”நாம் வாழும் நிலம், நமக்கு மேலே உள்ளதாகக் கொள்ளப்பட்ட வானுலகம், நமக்குக் கீழுள்ளதாகக் கொள்ளப் பட்ட
பாதல உலகம்” என்ற மெய்யியற் கருத்தீடு தோன்றிவிட்டது. இந்தக் கருத்தீடு தோன்றியது தென்னகமா, வடபுலமா என்பது கேள்விக்குரியது.

பூருவ நுண்ணாய்ஞ்சையைப் (பூர்வ மீமாஞ்சையைப்) புறந்தள்ளி உயர் நுண்ணாய்ஞ்சையைத் (உத்திர மீமாஞ்சை) தன் கொள்கையாக வேதநெறியினர் கொண்டது கி.மு.800-600 காலமாகும், வேத மறுப்பாளர் வேத நெறியாளரோடு மூவுலக இருப்பில் ஒன்றுபட்டாலும் அவற்றின் ஆக்கத்தில் வேறுபட்டிருந்தார்கள். ”இந்த மூவுலகங்களையும் மாந்தனுக்கு மேம்பட்ட யாரோவொரு
இறைவன்தான் படைத்தான்” என்பது உயர் நுண்ணாய்ஞ்சை நெறியின் துணிபு. “இம்மூவுலகங்களும் என்றும் இருந்தன/இருக்கின்றன/இருக்கும். இவற்றை யாரும் படைக்கவில்லை” என்பது சமண நெறிகளின் கூற்று. ஆக முதற் கணிப்பாக இந்தப் பாடல் கி.மு.600 க்கு அப்புறம் எழுந்தது என்று சொல்ல முடியும்.

இனி நாவலந்தீவில் இருந்த வணிகக் குழுக்கள் எளிதாகப் போய்வர உறுதுணையாக இருந்த உத்திர, தக்கணப் பாதைகள் பெரிதும் பயன்பட்டிருந்த காலம் நந்தர், மோரியர் காலமாகும். சங்கத் தமிழிலக்கியங்களிலும் வரலாற்றுக் கால முதல் நிகழ்வாகப் பேசப்பட்டது முதலாம் கரிகாலனின் படையெடுப்பே. அது கி.மு.462 க்கு அருகில் நடந்திருக்க வேண்டும் என்று “சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரைத் தொடரில் நிறுவியிருந்தேன். அதற்கு அப்புறந்தான் நந்தர் காலத்தில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே வணிக உறவு பெரிதும் செழித்தது. நம் இலக்கியங்கள் அதற்கு அப்புறமே வடபுலத்துச் செல்வ நிலை பற்றிப் பேசுகின்றன. சங்க இலக்கியத்திற் பாதிப் பாட்டுக்கள் பாலைத்திணைப் பாட்டுக்கள். அதிலும் பல பாட்டுக்கள் வடக்கே வணிகம் நோக்கிப் பிரிந்து போன பாட்டுடைத் தலைவர்கள் பற்றிப் பேசுகின்றன. இங்கு வெள்ளி வீதியாரின் தோழியும் அது பற்றிப் பேசுகிறாள். சங்க காலம் என்பது கி.மு.462க்கு அண்மையிற் தொடங்கி கி.பி.200 வரைக்கும் தொடர்ந்தது போலும். இந்த 650 ஆண்டு காலத்தில் எப்பொழுது இந்தப் பாடல் எழுந்தது என்று உறுதியாகச் சொல்ல இயலாது.அதற்கான தரவுகள் பாடலில் இல்லை. அதே பொழுது கிடத்திருக்கும் தரவுகள் மிக எளிதாக இந்த 650 ஆண்டு காலக் கட்டத்துள் பொருந்துகின்றன.

ஐம்பூதங்களை தம் உலகப் பார்வையுள் கொண்டுவருவது சங்கத் தமிழ் இலக்கியத்தில் பெரிதும் நடப்பதாகும். ஐம்பூதப் பார்வை ஒரு சாங்கியப் பார்வை. பின்னால் ஆசீவகத்திலும் அது பெரிதும் தழைத்தது இங்கும், நிலம், வானம், முந்நீர் என்பவை பேசப்படுகின்றன. இதே போன்ற பார்வை தேவகுலத்தார் பாடிய குறுந்தொகை 2 ஆம் பாட்டில் வரும்.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

நாடனுடைய நட்பு நிலத்தினும் பெரிது, வானிலும் உயர்ந்தது, மூந்நீரினும் ஆழமானது. சமண நெறிகளின் தாக்கம் தமிழகத்திற் பெரிதும் இருந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.