Wednesday, December 14, 2005

தமிழிசை பற்றிய ஏக்கமும், பொங்கு தமிழிசை இயக்கமும்

பத்ரியின் தமிழிசை பற்றிய பதிவைப் பார்த்தவுடன், அரையர் குழும்பில் இரண்டாண்டுகளுக்கு முன்னால் நடந்த பழைய உரையாடல் நினைவுக்கு வந்தது. அதை இங்கு மீண்டும் பதிப்பிக்கிறேன்.
---------------------------------------------
"சங்கீத வித்வத்சபை" யில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி பற்றிச் சொல்லி விட்டு, இரா.மு. கீழ்க் கண்டவாறு எழுதினார்:

"இது பற்றிக் கேட்கலாமென்று நாக்கு நுனி வரை வந்ததை அடக்கி க் கொண்டேன். நல்ல கச்சேரி. அந்த மன நிறைவோடு போகட்டும். முழுக்க முழுக்கப் பாரதி, பாரதிதாசன் பாடல்கள். யாராவது வாய்ப்பாட்டுக் கச்சேரி செய்வார்களா? ராஜ்குமார் பாரதி போன்றவர்கள் முயன்றால் முடியும்."
--------------------------------------------
நான் அதற்கு பின்னூட்டாக கீழே உள்ளதை எழுதியிருந்தேன்.
--------------------------------------------
"நல்லவேளை, அடக்கிக் கொண்டீர்கள், முருகன் :-) இல்லாவிட்டால், உங்களை ஒருமாதிரிப் பார்த்திருப்பார்கள். அழையாத வீட்டில் நுழையாத விருந்தாளி ஆகியிருப்பீர்கள்; இங்கெல்லாம் போய் இப்படிப் பேசலாமா?:-) பகலில் பக்கம் பார்த்துப் பேசுன்னு பெரியவுக சொல்லியிருக்காக; தியாகராசா, முத்துசாமி தீட்சிதர், சியாமா சாத்திரி பற்றிப் பேசினீர்கள்னா, உங்களை அங்கு மதிப்பாங்க! தமிழ்நாட்டில் போய் தமிழைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கலாமோ? :-) இதெல்லாம் வேண்டாத வேலை :-) அதுவும் பத்ரி சொன்னாப்பிலே இளங்கோவடிகள் பாட்டு? கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை! :-)

முழுக்க பாரதிதாசனைக் கேட்கணும்னா, ஓவ்வொரு ஆண்டும் மாணவர் நகலகம் அருணாசலம் நடத்து இயலிசை நாடக மன்ற இசை விழாவுக்குப் போங்க! அதை இந்த ஆண்டு முதல் பா.ம.க. நடத்துறதாக் கேள்வி.

(ஓராண்டு அந்த மன்றத்தில் நடந்த இசை நிகழ்வில் தமிழிசைப் பாணர் புசுபவனம் குப்புசாமி பண் ஆளத்தியோட விளாசிட்டார் போங்க! அவரை இன்னும் நாட்டுப்புறமுன்னே நம்மில் பலரும் நினைச்சிட்டு இருக்கோம். எல்லாப் பண்ணும் செவ்வியல் இசையும் தமிழில் பொருத்தி மிக அருமையாப் பாடக் கூடியவருங்கோ! அவருடைய அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பேழை கேட்டிருக்கீங்களோ? நித்யசிறீ மகாதேவன் கூட பாரதிதாசனில் ஒரு முழு ஒலிப்பேழை கொடுத்திருக்காங்க!)

எல்லாருக்கும் தமிழ்லே பாடணும்னுதான் உள்ளூற ஆசை இருக்கு! ஆனா, யாரு பூனைக்கு மணி கட்டுறதுன்னுட்டு அங்கும் இங்கும் திருதிருன்னு பார்த்துட்டு இருக்காங்க! அப்புறம் பிரிஞ்சு போன வெள்ளாடுன்னு யாரும் சொல்லிறப் படாது பாருங்க! அப்புறம் பொழைப்பு என்ன ஆகிறது? பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா? என்ன சொல்றீங்க? "
--------------------------------------------
என்று எழுதினேன். இதற்குப் பின்னூட்டாக இன்னொரு நண்பர் எழுதியது:
-------------------------------------------
இராம. கிருஷ்ணன்
"முழுக்க பாரதிதாசனைக் கேட்கணும்னா, ஓவ்வொரு ஆண்டும் மாணவர் நகலகம் அருணாசலம் நடத்து இயலிசை
நாடக மன்ற இசை விழாவுக்குப் போங்க! அதை இந்த ஆண்டு முதல் பா.ம.க. நடத்துறதாக் கேள்வி.)"
என்று எழுதியிருந்தார். மழைக்கு ஒதுங்குவது போல் நானும் இந்த பா.ம.க.வின் பொங்குதமிழ்ப்பண்
விழாவிற்குச் சென்றிருந்தேன். ஐந்தாவது முறையாக மேடையில் உணவுப் பஞ்சமில்லா அரங்கத்தில்
அமைதி காக்க வேண்டிப் பேச்சாளர் தோன்றிய போது எழுந்து வந்தேன். பா.ம.க. கட்சிப்
பிரசுரங்கள்,
கட்சித்தலைவர், தலைவரது முதல்வர் படம் பொறிக்கப்பட்ட சாவிக்கொத்துகள் வியாபாரம் சுறுசுறுப்பாக
நடந்து கொண்டிருந்தது.
-------------------------------------------
இந்தப் பின்னூட்டிற்கு மறுமொழியாய், நான் மீண்டும் எழுதினேன்.
--------------------------------------------
"நண்பரே! உங்களது பார்வை ஒருவிதமானது. சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் பார்வை உங்களுக்கு! நண்பர் இரா.மு. வேறு நறுக்கென்றும் சுருக்கென்றும் சொல்லுகிறார்.

நானொன்றும் பா.ம.க ஆளில்லை. அதே பொழுது, இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் பார்ப்பதுபோல் பார்க்க மாட்டேன். மேலே இருந்து கீழே பார்ப்பது ஒருவகை. கீழே இருந்து, பக்கவாட்டில் பார்த்து கூட இருக்கும் உடன்நெஞ்சன் (எப்படிச் சொல்லுவீர்கள்? சக ஹ்ருதயன்....இல்லையா?) பார்வை உயர தன்னால் இயன்ற படி வழி சொல்லிக் கொடுப்பது இன்னொரு வகை. கானாப் பாடுகிறவன் ஆர்வ மிகுதியில் கரகரப்பிரியா பாடும் போது தப்பும் தவறுமாகத் தான் தொடங்குவான். ஏனென்றால் அவன் நடக்க வேண்டிய தொலைவு கூட.

இசை பற்றி ஒரு காலத்தில் சற்றும் தெரியாத நான் கூட "அலை பாயுதே" வைத் தட்டுத் தடுமாறித்தான் தொடங்கினேன். கூடவே புரிந்து நகர, "வேயுறு தோளி பங்கனும்" " மன்னுபுகழ் கோசலைதன் .... என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ" வும், "மானா மதுரைக்குப் போகும் மச்சான் - எங்க சின்ன மச்சான், எங்க பெரிய மச்சானும் " கைகொடுத்தன. ஓசை சற்றே கை வந்தது.

இது போன்ற முயற்சிகள் தொடங்கும் போது முதலில் முட்டாள் தனமாகத் தான் இருக்கும். பெர்னாட்சாவின் பிக்மேலியன் நினைவிற்கு வருகிறது. கால காலமாக இந்த இசையின் அருமை தெரியாது ஒதுக்கி/ஒதுங்கி இருந்த கூட்டம், நீங்கள் அந்த அரங்கில் பார்த்த கூட்டம், தட்டுத் தடுமாறி எழுகிற கூட்டம், திடிரென்று நடந்துவிடாது. பட்டு விழுந்துதான் நடை போடும்.

அதனால் என்ன? விழுந்து எழாமல் மிதிவண்டி கற்றவர் யார்? இத்தனை கால அழிம்புகளுக்கும் பிறகு, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை மருத்துவர் அய்யாவிற்காகக் கேட்க முற்படுகிறார்கள் அல்லவா? இது ஒரு தொடக்கம், நண்பரே! இதற்குப் பலன் கிடைக்கும். கேள்வி ஞானம் ஒரு நாள் அடிப்படை ஞானமாக மாறும்; நாளடைவில் அவர்களில் இருந்து, நூற்றில் ஒருத்தன் சிந்து பாடுவதில் பெரிய ஆளாக வருவான். வரட்டுமே? சிந்து பாடுவதில் JKB மட்டும் தான் இருக்க வேண்டுமா, என்ன?

கீழை நாட்டுக் கிழவன் ஒருத்தன் (அவன் தலைவனும் கவிஞனும் கூட) சொன்னானாம்; புரட்சி என்பது ஓவியம் அல்ல; இரவுச் சாப்பாட்டு விருந்தும் அல்ல; அது நளினமாகவும் ஒயிலாகவும் என்றைக்கும் இருக்க முடியாது; அது மாந்தர்களால் நடத்தப் படுவது."
--------------------------------------------
மீண்டும் ஒரு மார்கழி மாதம் வருகிறது. பழையபடி தமிழிசைக்குச் சிலர் குரல் கொடுப்பதும், அதைச் சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடரும். எத்தனை தலைமுறைகள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருக்கப் போகிறோமோ?

கிட்டத்தட்ட 3 தலைமுறை ஆகிவிட்டது.

இன்னும் ஓர் ஆண்டு மலரும்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 10, 2005

அளவுச் சொற்கள் - 2

முன்னால் இட்ட பதிவில் பதினேழு சொற்கள் வரை பார்த்திருந்தோம். இனி macro என்னும் பதினெட்டாவது சொல்லிற்குப் போவோம். இந்தச் சொல், முன்னர் பின்னூட்டின் வழியாக நண்பர் ஒருவர் கேட்ட சொல். இது பல இடங்களில் முன்னொட்டாகவும் புழங்குகிறது. macroscopic என்ற சொல்லாட்சி நினைவிற்கு வருகிறதா? macro என்பதற்கு இணையாக மாக, மாகிய ஆகியவற்றைச் சொல்லலாம். முன்னரே சொன்னது போல் மாத்தல் என்ற வினை, தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.

மதித்தல் என்ற வினைகூட இந்த மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் என்ற பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மா ஆகுதல் > *மாகுதல் > மாதல். சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணியதாய் இருந்து விட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும் புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக எங்கள் சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். மக ஈசன் மகேசன் என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதைக் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சொல்லுவார்கள். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார்கள். மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் பெரியவர்கள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர்கள் மாக்கள்.

மாகுதல் என்ற வினை அடிப்படையில் மாதல் போன்ற பொருள் கொண்ட வினைதான். மொழி நீட்சியில் அதைப் புழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய என்னும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் என்ற வினை வாகாய் அமையும்.

macro meter = மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். அந்த முன்னொட்டுக்களை எல்லாம் அடுத்தடுத்த சொற்களில் இந்தப் பதிவில் பார்ப்போம். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைவது இந்தையிரோப்பியப் பழக்கம்.

இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. ஏனென்றால் பலரும் உணர்ச்சி வயப்பட்டு தடம் மாறிப் போகிறார்கள். ரகரம் நுழைவது, யகர, வகரங்கள் நுழைவது இன்னும் இது போன்ற சொற்திரிவு விதிகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை இனங் காணலாம் என்று மட்டுமே நான் சொல்லுகிறேன். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர்கள் போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்தில் உள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இந்த ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம்.

பத்தொன்பதாவது, magnitude என்பது. தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) தன்னைப் பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் அளவுகோல் வந்து விடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத் தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20ல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளும் உண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்லுவோம்.

இருபதாவது சொல் magnify என்பதாகும். இங்கே வெறும் அளவு மட்டும் இல்லாமல், பெரியாதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப் படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.

இருபத்தொன்றாவது சொல் major; இது பெரும்பாலும் பெயரடையாக வருகின்ற சொல். மேவுதல் என்ற வினை உயர்ந்து கிடத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பெயரடையில் மேவு, மேவிய என்றும், தனிப்பெயராக வரும்போது மேவர் என்றும் சொல்லலாம். இதைப் போலியாய்த் திரித்து மேயர் என்றும் சொல்லலாம். ஆனால் அதை major என்பதின் ஆங்கிலத் திரிவான mayor என்பதற்கு வைத்துக் கொள்ளலாம். Army major யை "அரண மேவர்" என்று சொல்லலாம். அரணம் தான் வடமொழி வழக்கில் இராணுவம் என்று திரிந்திருக்கிறது. நாட்டு அரணைக் காப்பாற்றும் பெரும்படை அரணம் என்று சொல்லப்படும். அரத்தம், இரத்தம் ஆனது போல் அரங்கனை, ரெங்கனென்று சொல்லுவதைப் போல், பல ஒலிப்பு மாற்றங்களை எண்ணிப் பார்க்கலாம்.

இருபத்திரண்டாவது சொல் majority; மேவுதலில் இருந்து இதை மேவுதி என்று சொல்லலாம். மேதகை, மேன்மை என்னும் போது உயர்ச்சி என்ற பொருளே வந்து இங்கே எண்ணளவில் கூடி இருக்கும் தன்மை புலப்படாமல் போகலாம்.

இருபத்தி மூன்றாவது many; இதைப் பல என்றே வழக்குத் தமிழில் பயில்கிறோம். கூடவே நனி என்ற பழைய சொல்லைப் புழக்கத்தில் கொண்டுவந்து, சொல்லின் இணை தன்மையை ஆழ்ந்து உணரலாம். நனி என்பதைப் பயிலாமல் போனால் பின்னால் பலருக்கும் அது புரியாமல் போகலாம்.

இருபத்தி நாலாவது mass; இது மிகவும் சரவற் படுத்துகிற சொல். தமிழில் இன்னும் நிறை என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். நிறை என்பது நிறுத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்ட பெயர்ச் சொல்லானால் அது எடையைத்தான் குறிக்கும். (எடுத்தது எடை; நிறுத்தது நிறை. இரண்டுமே weight என்பதைக் குறிக்கும் சொற்கள்.) இன்னொரு விதத்தில் நிறைந்தது என்ற வினையில் வருகின்ற நிறை என்னும் பெயர்ச்சொல் filling என்ற பொருட்பாட்டைத் தான் குறிக்கும். இதில் பெறப்படும் கருத்து volume என்னும் முப்பரிமானம்.

volume என்பதைக் கீழே பார்ப்போம். அறிவியலில் volume என்பதற்கும், mass என்பதற்கும், weight என்பதற்கும் வேறுபாடு காட்டிய பின் தான் சிந்தனை பெரிதும் வளர்ந்தது. தமிழில் இன்னும் இதைச் சரியாக உணர்த்திக் காட்டாது இருக்கிறோம். இந்தப் பொருள் கனமாக இருந்தது என்னும் போது அது weight ஆக இருந்தது என்று பொருள். அதே பொழுது ஒரு பொருளின் கன அளவு என்றால் அதன் volume யைக் குறிப்பிடுகிறோம். இந்தக் குழப்பம் நெடுநாள் நம்மிடம் இருக்கிறது. தவிர, mass என்பதை எப்படிக் குறிப்பது என்றும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறோம்.

உலகம் என்பது பொருட்களால் ஆனது; இந்தப் பொருட்கள் வெளி(space)யில் இருக்கின்றன. விரிந்து கிடக்கும் வெளியில் ஒரு பொருள் அடைந்து கிடக்கும் இடம் அதன் volume. இது கிட்டத்தட்ட ஒரு கலன் போன்றது. mass என்பது அதனுள் நிறைந்திருக்கும் பொருள். ஒரு கலனுக்குள் வெவ்வேறு பொருட்களை அடைக்கலாம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு mass யைக் காட்டலாம். mass என்பதன் தன்மையைப் (massyness) பொருண்மை என்று தமிழில் குறிப்பார்கள். பொருள் இருக்கும் தன்மை பொருண்மை. இது உண்மையில் density என்பதோடு தொடர்பு உள்ளது. ஆனால் பொருண்மையும் அடர்த்தி என்பதும் வெவ்வேறு என்றும் சிலர் தெளிவில்லாமல் சொல்லுவார்கள்.

உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்று தான் நான் சொல்லுவேன். அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய்ப் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது density யைக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?

"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன்.

இருபத்தைந்தாவது சொல் maximum; மிகுந்து கிடப்பதின் நெடில்வழக்கு மீது கிடத்தல். மீ என்னும் ஓரெழுத்தொரு மொழியைப் பயன்படுத்தி மீகுமம் என்ற சொல்லைப் பயிலலாம். இதற்கு எதிரான minimum என்ற சொல்லைக் கீழே பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 03, 2005

ஒண்ணா, ஒன்னா?

தமிழில் எண்ணுப் பெயர்கள் பற்றி புதிய நோக்கில் கண்டறிந்த சில விளக்கங்களை எழுத வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் எனக்கே அந்த விளக்கங்கள் முற்றிலும் நிறைவு கொள்ளாத காரணத்தால் அப்படி எழுதவொட்டாமல் தள்ளிக் கொண்டே போனது. ஆனால் அலை எங்கே ஓய்வது? கடலுக்குள் எப்போது போவது?

முன்பு ஒருமுறை மடற்குழுவில் நண்பர் சடையன் சாபு இலக்கமும் கோடியும் பற்றி எழுதக் கேட்டபோது, இனியும் தள்ளிக் கொண்டே போவது சரியல்ல என்று உணர்ந்தேன். ஆனாலும் எழுத இயலாமல் தள்ளிக் கொண்டே போனது. பின்னால் அந்தக் கட்டுரை பாதியில் நின்று போனது. இப்பொழுது அலெக்ஸ் பாண்டியன் ஒன்னு அல்லது ஒண்ணு என்பதில் எது சரி என்று கேட்டிருந்தார். பாதி நின்று போன என் கட்டுரையில் இருந்து "ஒன்று" பற்றிய பத்திகளைத் தனியே எடுத்து இங்கு ஒரு பதிவாகத் தருகிறேன். திரு. அலெக்ஸ் பாண்டியனுக்கு நேரடியாக மறுமொழி சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.

தமிழ் எண்களைக் குறிக்கும் சொற்கள் எழுந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சொல்ல முற்படுகிறேன். இதைப் பற்றிச் சிலகாலம் ஓர்ந்து பார்த்த பொழுது, தமிழிய மொழிகள், மேலை மொழிகள், வட இந்திய மொழிகள் என எல்லாவற்றிலும், எண்கள் பற்றிய சொற்களில் ஓர் அடிப்படை ஓரிமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

முதலில் ஒன்று என்ற சொல்லை பார்ப்போம். இதைத் தமிழகப் பேச்சு வழக்கிலும், மலையாளத்திலும் ஒண்ணு என்றும் ஈழத்துப் பேச்சு வழக்கில் ஒண்டு என்றும், கன்னடத்தில் ஒந்து என்றும் சொல்லப் படுகிறது. தமிழில் றகரமும், னகரமும் முந்து ஒலிகள் அல்ல. எழுத்து வரிசை ஏற்பட்டு வெகுநாட்கள் கழித்தே எழுத்து வரிசையின் இறுதியில் றகர, னகரங்கள் சேர்க்கப் பட்டன. விலங்காண்டி காலத்தில் தோன்றிய இயல் மொழி தமிழ் என்றால், றகரமும், னகரமும் சேர்ந்து வரும் அடிப்படைச்சொற்கள் முதலில் வேறு இணை எழுத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எழுத்துத் தமிழில் ன்று என்று முடியும் ஈறு பெரும்பாலும், பேச்சுத் தமிழின் மீ திருத்தமாகவே காட்சியளிக்கிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால், ஒன்று என்ற சொல்லின் முந்து வடிவம் ஒண்டு/ஒந்து என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒண்ணு என்பதும் ஒண்டு என்பதின் மெல்லினத் திரிபே. தமிழில் இருக்கும் வலிவுச் சொற்கள், மலையாளத்தில் திரிந்து மெலிவுச் சொற்களாக மாறுவது போன்றே இதைக் கொள்ள வேண்டும். (வந்து>வந்நு).

ஒண்டு என்பது ஒந்து என்று ஆனதும் இயற்கையே. டகர ஒலிகள் வடக்கே போகப் போக தகர ஒலிகளாய் மாறும். ஒண்டு என்ற தமிழ்ச் சொல் தெலுங்கில் ஒகட்டி, கன்னடத்தில் ஒந்து, மலையாளத்தில் ஒண்ணு எனத் தமிழிய மொழிகளில் திரிந்து வரும்.

இனி ஒண்டின் முந்தைய வடிவம் பார்ப்போம். உகரம் ஒகரமாகத் திரிவது பேச்சுத் தமிழில் மிக இயற்கை; பல சொற்களை இதற்குக் காட்டாகச் சொல்லலாம். (உன் ஊர்>ஒன் ஊர்; உடன் வருவது>ஒடன் வருவது) அந்த முறையிலேயே உண்டு>ஒண்டு>ஒன்று என்று இந்தச் சொல் திரிந்தாகக் கருதத் தோன்றுகிறது. இனி உண்டு என்பதின் பொருளை இனங் காண முயலுவோம்.

ஆ என்ற வாயொலி அங்காத்தலையும், அவ்>அவ்வு எனும் ஓசையின் திரிவான ஊ என்னும் வாயொலி அங்காத்த வாய் மூடுவதையும் குறிக்கின்றன. இந்த வாயொலியின் வளர்ச்சியாய் வாயின் உள்ளே உணவு போகும் வினையைக் குறிக்க ஊ>*ஊள்>உள் என்ற ஓரசைச் சொல் எழுந்தது. இந்தச் சொல் இன்னும் வளர்ந்து *ஊள்>ஊண் என்பது வாயின் உள்ளே போகும் உணவைக் குறிக்கிறது. இந்தச் சொல்லே இன்னும் வளர்ச்சி பெற்று ஊண்>உண்>உணவு என்றும் திரியும். உண்ணுவது என்ற வினைச்சொல் உண்டுவது என்றும் ஆகும். (நான் உண்டேன்.) உண்டு என்ற சொல் சற்றே திரிந்து உண்டி என்ற பெயர்ச் சொல்லையும் கிளைவிக்கும். இந்த உண்டு என்ற சொல் முதலில் விலங்குகளின் வழி கிடைக்கும் ஊனையே குறித்திருக்க வேண்டும். விலங்காண்டி காலத்து மாந்த உணவெல்லாம் பெரும்பாலும் ஊனே ஒழிய மரக்கறி அல்லவே? நெடுநாட்கள் கழித்து, "இதை விலக்கு, அதை விலக்கு" என்று ஊனைத் தவிர்க்கும் மனத் தடைகளுக்குப் பிறகே, மாந்தன் ஊனைக் குறைத்து மரக்கறியைச் சாப்பிடத் தொடங்கினான். வெவ்வேறு கால மாந்தர்களின் கவாலக் (கபாலம்) கொண்மையை அளந்து, அதன் வளர்ச்சியையும் உன்னித்துப் பார்த்த மாந்தவியல் அறிஞர்கள் ஊனைச் சாப்பிட்டதாலேயே மாந்தனின் மூளை அளவு பெருகியது என்று கூறுகிறார்கள்.

ஆக ஒண்ணு/ஒண்டு என்பதின் உட்பொருள் உணவு/ஊன் என்றே பொதுவாகவும், விலங்கு இறைச்சி என்பதை விதப்பாகவும் குறித்திருக்க வேண்டும். ஊனின் திரிபாக ஒன்/ஓன் என்ற சொல் இலத்தீன் வழி மொழிகளில் புழங்குகிறது.

இனி, *ஊள்+து>ஊட்டு என்று ஆகும்; ஊணை உள்ளே தள்ளுவதை, இன்னொருவருக்கு உட்செலுத்துவதை ஊட்டுவது என்று நாம் சொல்லுகிறோம். ஊட்டு என்ற சொல் பெயராகவும் வினையாகவும் இருக்கிறது. அதே போல உண்டு என்பதையும் பெயராகக் கொள்ள முடியும். ஏனெனில் உண்டு+இ>உண்டி என்ற சொல்லாட்சி ஏற்பட்டிருக்கிறது. இது போல ஊட்டு+இ>ஊட்டி என்பதும் உண்ணப் படுகிற உணவையே குறிக்கும். ஊட்டி>உகட்டி என்று திரிந்து, பின் ஒகட்டியாகி தெலுங்கில் ஒன்றைக் குறிக்கும். மெய்யும் நெடில் உயிரும் சேர்ந்த ஒரு நேரசை (CV) அதே மெய்யோடு குறில் உயிர் சேர்ந்த அருகே ஒரு ககரமும் சேர்ந்து (Cvக) ஆகத் திரிவது தமிழில் மிகமிக இயற்கை. இந்த முறையில் திரிந்து வந்த ஒகட்டி மேலும் திரிந்து ஒகத்தியாகி பின் எகத்தி>ஏக்தி என்று பாகதத்தில் பிறழ்ந்து ஏக் என்று அவப் பிரம்சம்களில் சிதையும். வட இந்திய மொழிகளில் ஏக் என்று பிறழ்ந்த விதம் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? சங்கதத்தில் ஏக் என்பது ஏகம் என்று நீளும். சங்கதம் என்பது வட இந்திய வட்டார வடமொழிகளின் கலவையில் இருந்தி திருத்திப் புலவோரால் ஒழுங்கு செய்யப் பட்ட மொழி. இந்திய மொழியில் இதைத் தலை கீழாகப் புரிந்து சங்கதத்தில் இருந்து அவப் பிரம்சங்கள் பிறந்தன என்று சொல்லுவது போகாத ஊருக்கு வழி தேடும் கதை. வட்டார வழக்குகளில் இருந்து செந்தமிழ் பிறந்தது என்று கொள்ளாமல் செந்தமிழில் இருந்து வட்டார மொழிகள் பிறந்தன என்று சொல்லுவது எத்துணை தவறோ அத்துணை தவறு இப்படித் தலை கீழாகப் புரிந்து கொள்ளுவது ஆகும். இதைச் சொன்னால் பலருக்கும் கோவம் வருகிறது. அதற்கு என்ன பண்ண முடியும்?

ஊனில்லாமல், உள்ளிடாமல், ஒன்று இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒண்ணு சரியா, ஒன்னு சரியா என்றால் ஒண்ணு என்பது முதலில் வந்திருக்க வேண்டும். ஒன்னு என்பது பின்னால் வந்திருக்க வேண்டும். இந்த இரண்டு விதமான பலுக்கல்களும் இனியும் தொடரும் என்றே எண்ணுகிறேன். ஒருவேளை ஒண்ணு என்பதற்கு அழுத்தம் கொடுக்கலாமோ என்று தோன்றுகிறது. அதே பொழுது தமிழில் எது நிலைக்கும் என்பது 7 கோடிப் பேரின் மொத்தப் புழக்கத்தில் அல்லவா இருக்கிறது?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 01, 2005

அளவுச் சொற்கள் - 1

அண்மையில் என்னுடைய வலைப்பதிவில் ஒரு நண்பர் கொடுத்த பின்னூட்டில் "micro, macro, mega போன்றவற்றை தமிழில் எப்படி விதப்பாகச் (specific) சொல்லுவது?" என்று கேட்டிருந்தார்.
----------------------------------------
அவர் கேட்டிருந்த சொற்கள் எல்லாம் அளவுக் கருத்து பற்றிய முன்னொட்டுச் சொற்கள். அளவுச் சொற்களைக் கையாளும் போது நம்முடைய பேச்சில் தகுதி (quality), எண்ணுதி (quantity) என்ற இரண்டிலுமாய்த் துல்லியம் காண வேண்டும். ஆங்கிலத்தில் அளவு பற்றிய பல்வேறு முன்னொட்டுச் சொற்களை அடுக்கி, இடத்திற்குத் தகுந்தவாறு, பயன்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளும் நாம், தமிழ் என்று வரும் போது மட்டும், பொதுமையான சில அளவுச் சொற்களைத் தெரிந்து கொண்டு, விதப்பானவற்றை அறிய மாட்டேம் என்கிறோம். அளவு பற்றிய எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே வைத்து ஏதோ ஒரு வகையில் ஒப்பேற்றி விடுகிறோம். பொதுவாக நம்முடைய மொழியைக் கையாளுவதில் நமக்கு ஓர் அலட்சியம் இருக்கிறது, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொல் தொகுதியை கூட்டிக் கொள்ளாதே இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். (இதை மிகுத்துச் சொன்னால் பலருக்கு என்மேல் கோவம் வரக்கூடும்.) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு தருகிறேன். இந்த வாரம் திண்ணை வலையிதழில் ஒரு நேர்காணல் உரையாடலில் பங்காளர் ஒருவரின் வாசகம் படித்தேன்.

"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."

இதைப் படித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்நாளைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஏன் இந்த அளவு தமிங்கிலம் பயில்கிறார்கள்? இதில் என்ன தமிழில் சொல்ல முடியாத பெரிய கலைச்சொல் பொதிந்து கிடக்கிறது?

"நான் என்ன நினைக்கிறேன்னா, எது செந்தமிழ், எது சாதாரணத் தமிழ்னு தெளிவா அடையாளம் காணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் செந்தமிழ்க்காரர்கள்ன்னு தான் சொல்ல முடியும்"

என்று கூட ஒரு தமிழறிந்த கூட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தமிங்கிலம் இவர்களுக்குப் பழகிப் போகும் என்றால், அப்புறம் இன்றையத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசி இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பேசாமல் குமரியில் மூன்று தடவை சுற்றிவந்து இந்தத் தமிழ் என்னும் மொழியைத் தூக்கி எறிந்துவிடலாமே? அதைவிடுத்து ஏன் இப்படிச் சல்லியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

பொதுவாக இந்தப் பழக்கம் ஒரு நோய் போலவே நம்மில் மிகுதியானவரைப் பீடித்திருக்கிறது. தமிங்கிலம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து என்றைக்கு அதற்கு முடிவு கட்டுவோம்?
-----------------------------------------
நண்பர் கேட்ட சொற்களோடு இன்னும் சில தொடர்புள்ளவற்றைச் சேர்த்து இங்கே கொடுத்திருக்கிறேன். பதிவை இரண்டு பகுதிகளாக்கி அனுப்புகிறேன்.

அளவு என்ற பெயர்ச்சொல் அள்ளுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்தது. அள்ளுதல் என்பது முதலில் நெருங்குதலைக் குறித்துப் பின் சேர்த்தல் அல்லது கூட்டுதல் என்ற பொருளைக் குறிக்கும். அள்ளுதலில் இருந்து அள்+து>அட்டு>அட்டுதலும், அட்டு>அடு>அடுதலும் பிறக்கும். அட்டுதல் என்பது சேர்த்தல் என்ற பிறவினையைக் குறிக்கும். அடுதல் என்பது சேர்தல் என்ற தன்வினையைக் குறிக்கும். அடுதல் என்ற தன்வினையில் இருந்து அடுவித்தல் என்ற இன்னொரு பிறவினை பிறக்கும். அட்டுதலும் அடுவித்தலும் ஒரே பொருள் கொண்டவை தான். கூட்டுதல், சேர்த்தல் என்றே இவை பொருள்படும். அடுவித்தல் என்ற சொல், பலுக்கச் சோம்பலில் அதுவித்தல்>அதியித்தல்>அதித்தல் என்றும் திரியும். to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல். please add 2 and 3; 2 யையும் 3 யையும் கூட்டு. addition = கூட்டல், அடுவம், அதியம் additive = கூடுதலான, அதிவான

கூட்டுதல் என்ற பொருளில் உள்ள தொகுதியில் நான் முதலில் எடுத்துக் கொள்ளும் சொல் ample; இதற்கு இணையாய் அமலை என்று தமிழில் சொல்லலாம். "அவனும், நானும், எல்லோரும்" என்று ஓர் உம்மைச் சேர்த்துச் சொல்லுகிறோம் இல்லையா? அந்த உம் என்னும் இடைச்சொல் கூட்டப் பொருளைச் சுட்டிக் காட்டும். உம்முதல் என்பது சேருதலே. உம்முதல்>அம்முதல் என்று திரியும். அம்முதல்>அம்புதல்>அப்புதல் என்பதும் ஒன்றின் மேல் ஒன்றை சேர்த்துக் கொண்டு வருவதைக் காட்டும். அம்முதலில் இருந்து பிறந்த சொல் அமலை. செறிவுப் பொருளைக் காட்டும். இது தவிர மிகுதி என்ற பொருளையும் திவாகரம் காட்டும். மெல்லின இணை மெல்-வல் இணையாகத் திரிந்து, பிறகு வல்லின இணையாக மாறுவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம் தான். அம்மா என்று இயலொலி அம்பா என்று ஆகி பின் அதன் பொருள் நீண்டு இன்னொரு பெற்றோரைக் குறிக்கும் வகையில் அப்பா என்று திரியும். அதே போல "வந்நு" என்னும் வினைச்சொல் "வந்து" என்று திரியும். பண்ணுதல் என்னும் வினையில் இருந்து பண்டம் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இவையெல்லாம் இந்த மெல்லிணை>மெல்வல்>வல்லிணைத் திரிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். அமலைக்கும் ample க்கும் உள்ள இணை புரிகிறதா?

அடுத்த சொல் average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் என்பதைச் சொல்லலாம். ஒரு படியில் அரிசியை முகந்து அளக்கிறோம். படியின் முகவாயில் அரிசி குவியலாய்க் கிடக்கிறது. அதை கையால் சரி செய்து தட்டையாக்கிப் போடுவதை நிரவுதல் என்று சொல்லுகிறோம். கொள்கலனில் ஏற்ற இறக்கமாய் கிடக்கும் கூலப் பொருளை ஒரே மட்டமாய் ஆக்குவதும் நிரவல் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் average என்கிறார்கள். average = நிரவை, நிரவல்

மூன்றாவது சொல் big = பெரிய; இதற்கு விளக்கம் தேவையில்லை

நான்காவது சொல் brief; இதற்கு இணையாய்த் தமிழில் பொருவிய என்பதைச் சொல்லலாம். "சொல்லுவதைப் பொருவினாற்போல் சொல்" என்றால் "whatever you say, say it briefly" என்று பொருள். இங்கே சுருக்கம் என்றால் short or summary என்ற பொருள் கொள்ளும். வெள்ளரிக்காய் வாங்கும் போது சந்தையில் பிஞ்சாய்ப் பார்த்து வாங்கிவரச் சொல்லி வீட்டில் சொல்கிறார்கள் இல்லையா? இது போன்ற பிஞ்சுகளை பொருக்கை என்று தென்பாண்டி நாட்டில் சொல்வார்கள். பிஞ்சும் பொருக்கும் என்பது அங்கு மரபுத் தொடர். பொருவுதல் என்பது இப்படிப் பிஞ்சாய் ஆகுதல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் brief என்ற சொல் இப்படிச் சின்னதைக் குறிக்க எழுந்தது. brief = பொருவிய

ஐந்தாவது சொல் broad; இதற்கு இணையாய் பரவிய, அகண்ட என்பதைச் சொல்லலாம். குறுகிய என்பதற்கு எதிரானது பரவுதல், பரத்துதல். பரந்த காவிரி, அகண்ட காவிரி என்னும் போது அதன் பரந்தமை பற்றியே சொல்லுகிறோம். அதாவது வெறும் நீளப் பரிமானத்தைக் காட்டிலும் இரண்டாவது பரிமானமான அகற்சி இங்கே பேசப்படுகிறது.

ஆறாவது சொல் bulky; இதற்கு இணையாய் பருக்கான என்பதைச் சொல்லலாம். உப்பென்று பருத்துக் கிடப்பது bulky. பருக்கிக் கிடப்பதற்கு வலிமை பெற்றது என்ற பொருளல்ல,. அண்டவெளியில் முப்பரிமானம் பரவிப் பருத்துக் கிடக்கிறது. மேலே சொன்ன பரவிய என்பதற்கும் பருக்கிய என்பதற்கும் உள்ள பரிமான வேறுபாடு நாம் ஊன்றிக் கவனித்தால் புலப்படும். பரவிய என்பது இரு பரிமானச் சொல். பருக்கிய என்பது முப் பரிமானச் சொல்.

ஏழாவது சொல் capacity; இதற்கு இணையாய் கொண்மை என்பதைச் சொல்லலாம். "இந்த ஏனம் அல்லது கலம் எவ்வளவு கொள்ளும்?" என்று கேட்கிறோம் இல்லையா? கொள்ளுமை என்பது கொண்மை என்று மெல்லின ஓசை இடைவரத் திரியும். கலத்திற்கு உள்ள இந்தத் தன்மையை இன்று எல்லாக் கட்டகத்திலும் (system) சேர்த்துச் சொல்லுகிறார்கள். ஏனத்தின் கொண்மை (capacity of a vessel), இறைப்பியின் கொண்மை (capacity of a pump), மின் நகர்த்தியின் கொண்மை (capacity of an electric motor), மாந்தனின் வலிதாங்கும் கொண்மை (a man's capacity to withstand pain) இப்படி இது விதவிதமாய் விரியும்.

எட்டாவது சொல் central; இதற்கு இணையாய் நடுவண் என்பதைச் சொல்லலாம்; பெயர்ச்சொல்லாய் வரும் போது நடுவம் என்றும் பெயரடை அல்லது முன்னொட்டாக வரும் போது, நடுவண் என்றும் வரும். central government = நடுவண் அரசு. மத்திய என்று பலரும் புழங்கும் சொல் நட்ட என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழிப் பலுக்கில் கூறும் ஒரு திரிவு தான். மூலம் தெரியாமல், பலரும் இதன் தோற்றம் பற்றித் தடுமாறுவது உண்டு. தமிழில் நகரமும் மகரமும் போலிகள்; முப்பது என்பதை நுப்பது என்றும் முடங்கும் என்பதை நுடங்கும் என்றும் பலுக்குவதை உணர்ந்தால் இது புலப்படும். அடுத்து, டகர ஒலி தகர ஒலியாகப் பலுக்கப் படுவது வடக்கே போகப் போக நடக்கும். முடிவில் சொல்லின் உள்ளே யகரம் நுழைவதும் வடமொழிக்கு உள்ள பழக்கம் தான். ஆக நட்ட>நத்த>மத்த>மத்த்ய>மத்திய என்ற வகையில் சொற்பிறப்பு அமையும். மத்திய என்பதன் மேலோட்ட வடமொழித் தோற்றத்தில் அதன் தமிழ் மூலம் உணர முடியாமல் தடுமாறுகிறோம்.

ஒன்பதாவது சொல் dimension; இதற்கு இணையாய்ப் பரிமானம் என்பதைச் சொல்லலாம்; எந்த ஒரு பொருளும், தான் இருக்கும் வெளியில் விரிந்து நிற்கிறது. விரிந்து நிற்பது வியல்ந்து நிற்பது என்றும் சொல்லப் பெறும். பரிப்பு என்பதும் வியல்ந்து நிற்பதே. பரிதல் என்பது வளைந்து நிற்பதையும் குறிக்கும். மானம் என்பது மதித்தல், அளவிடுதல் என்பதன் பெயர்ச்சொல். மா என்பது அதன் வேர்ச்சொல். மாத்தல் என்பதில் இருந்து பிறந்தது மானம். இயற்கையில் நாம் கண்ணால் காணும் வெளி பரி மானம் சேர்ந்தது. அதாவது அதைப் பரித்து (வளைத்து) அளக்கிறோம். இயற்கையில் கிடக்கும் பொருள்களை இடுவிப்பாக (idealistic) உருவகஞ் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற பரிமானங்களாய் கணக்கில் வரும் வடிவியல் குறிக்கும். கோடு என்பது ஒற்றைப் பரிமானம்; பரப்பு என்பது இரட்டைப் பரிமானம்; நாம் காணும் முப்பரிமானப் பொருள்களைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் கூடிய பரிமானங்களை இந்தக் கால வகைப்பு இடவியலும் (differential topology), வகைப்பு வடிவியலும் (differential geometry) கையாளுகின்றன. ஐன்சுடீனின் உறவாட்டுக் கொள்கையில் (theory of relativity) இடம், காலம் என்று இணைந்த வகையில் நாற் பரிமானம் பேசப்படும்; இன்னும் மேலே போய் பல் பரிமானப் பல்மடி (many dimensional manifold) பற்றியும்`இன்றையக் கணிதவியலில் பேசுவார்கள்.

பத்தாவது சொல் enormous; இதற்கு இணையாய் எண்ணிறந்த என்பதைச் சொல்லலாம். எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிச் சலித்த நிலையில் உள்ள நிலைக்கு, எண்ணிறந்த என்று சொல்லுவார்கள். அளக்கவே முடியாத நிலை infinitity. இது தமிழில் வரம்பிலி என்று சொல்லப்படும். இதை எண்ணிலி, ஈறிலி, கந்திலி என்றெல்லாம் சொல்லுவது உண்டு. கந்து என்பது பற்றுக் கோடு; அதுவும் ஓர் ஈற்றைத் தான் குறிக்கும்.

பதினோறாவது சொல் expanse; இதற்கு இணையாக விரிந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய என்பதற்கும் விரிந்த என்பதற்கும் பரிமானம் தவிர மிகுந்த வேறுபாடு கிடையாது; விரிவு என்பது எல்லாப் பரிமானங்களிலும் நடக்கக் கூடியது. ஆனால் பரவிய என்பதைப் பெரிதும் இரு பரிமானத்திற்கு மட்டுமே பயனாக்குவோம்.

பன்னிரண்டாவது சொல் extent; இதற்கு இணையாகப் பரந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய, விரிந்த என்ற சொற்களில் இருந்து சற்றே நுணுகிய வேறுபாடு கொண்டது. பொதுவாகப் பரந்த என்ற சொல் இருபரிமானத்திற்கு இயல்பாகவும், ஓரோவழி ஒற்றைப் பரிமானத்திற்கும் சொல்லலாம். முப்பரிமானம் சார்ந்த நிகழ்வுகள், பொருள்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இதைப் பயன்படுத்தலாம். பொதுவாக இந்த பரவிய, விரிந்த, பரந்த என்ற மூன்று சொற்களும் தமிழில் ஒன்றுக்கு மாறாக இன்னொன்று என்று மயங்கியே புழங்கியிருக்கின்றன. இனி வருங்காலப் புழக்கத்தில் எப்படி மாறும் என்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் இதற்கு இது என்று ஒரு சமன்பாட்டைக் கொண்டுவரலாம்.

பதிமூன்றாவது சொல் flow; இதற்கு இணையாகப் பெருக்குதல், பெருவுதல் என்ற சொற்களைச் சொல்லலாம். பெருவுதல்/பெருகுதல் என்பது தன்விணை; பெருக்குதல் என்பது பிறவினை. ஆடிப் பெருக்கு என்றால் ஆடி மாதம் ஏற்படும் flow. ஆறுகளையே கூடப் பெருநை>பெருணை>பெண்ணை என்று தான் தமிழிய மொழிகள் கூறிவந்தன. வடக்கே பெருகியுது வடபெருநை>வடபெருணை>வடபெண்ணை. கருந பெருநை>கருந பெருணை>கன்ன பெண்ணை; இதை வடமொழிப் படுத்தி கிருஷ்ண பெண்ணை என்று சொல்லிப் பின் பெண்ணையைத் தவிர்த்து கிருஷ்ணா என்பார்கள். தென்பெருநை>தென்பெருணை>தென்பெண்ணை; தாம்பர பெருநை>தாமிர பெருணி>தாம்பிரவருணி; இந்திய ஆறுகளின் பெயர்கள் பலவற்றை ஆழ்ந்து பார்த்து அவற்றின் தமிழ்மூலம் அறியும் போது நமக்குப் பெரிதும் வியப்பூட்டும். அதை ஒருமுறை மடற்குழுக்களில் செய்தேன். இன்னும் ஒருமுறை வேறொரு வாய்ப்பில் அதைத் திரும்ப அலச வேண்டும். நீரோட்டம் என்பது பெருக்கைக் குறிக்கக் கொஞ்சம் சுற்றி வளைத்த சொல்.

பதிநான்காவது சொல் huge; இதற்கு இணையாக ஊகை என்பதைச் சொல்லலாம். உகர ஒலியின் நெடில், குறில் பலுக்கில் ஏகப்பட்ட உயர்ச்சிச் சொற்கள் எழுந்துள்ளன. உகரம் ஒகரமாகியும் ஓங்கி உள்ள பொருட்களை நமக்கு உணர்த்தும. ஊகி நிற்பது என்னும் போது கண்முன்னே உயர்ந்து பெருகி நிற்கும் உருவம் புலப்படும். ஊங்கு என்றால் மிகுதி என்ற பொருள் தமிழில் உண்டு; அதே போல ஓகம் என்ற சொல்லும் பெருகி நிற்பதைக் குறிக்கும்.

பதினைந்தாவது சொல் immense; இதற்கு இணையாக மொந்தை என்பதைச் சொல்லலாம். மொத்தம் என்னும் போது கூட்டப் பொருள்தானே வருகிறது. மொந்துதல் என்பது தன்வினை. மொத்துதல் என்பது பிறவினை.

பதினாறாவது சொல் large; இதற்கு இணையாய் அகலை என்பதைச் சொல்லலாம். அகலம் என்ற சொல்லில் ஈற்றை மாற்றி வருவது அகலை. அகல்ந்தது என்பது வினைச்சொல்.
பதினேழாவது little; இதற்கு இணையான சின்ன என்ற சொல்லைப் பற்றி நான் மிகுதியாகச் சொல்லவேண்டியது இல்லை.

இனி மகரத்தில் தொடங்கும் சொற்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, October 31, 2005

தீபாவளி மேகக் கூட்டம்

இந்த மடலை 2002 தீபாவளியின் போது அகத்தியருக்கும், தமிழ் உலகிற்கும் அனுப்பியிருந்தேன். அந்த ஆண்டில் சவுதியில் தங்கியிருந்தேன். திடீரென்று தீபாவளிக் காலை சென்னை வரும்படி அமைந்தது.
--------------------------------
4-11-2002

திடீரென்று அலுவப் வேலையாற் பணிக்கப் பெற்று, மறுபடி சென்னை. இன்று காலை வந்தேன். நாலே நாட்களில் சவுதி செல்ல வேண்டும்.

வான்பறனை கீழிறங்கும் போது, அதன் செலுத்தியார் சென்னை அருகாமை வந்தவுடன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, இருக்கைகளை நேராக்கிக் கொள்ள நம்மைப் பணிக்கிறார். பறனை கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. கண்ணாடிச் சாளரத்திற்கு வெளியே பனி கலந்த மேக மூட்டம். எத்தனை பேர் இதற்குப் பொறுப்பு? நகரம் எங்கிலும்? வழமையான சென்னை. அதன் வேடிக்கைக் கூத்துகள்.

அருகே இருந்த ஃபிரஞ்சுப் பெண்மணி, இந்த மேக மூட்டத்திற்குக் காரணம் கேட்கிறார். நான் "நாலைந்து நாட்களாக நல்ல மழை; சில இடங்களில் நகரத்துள் வெள்ளம்; வடியச் சில நாட்கள் ஆகலாம்; தவிரத் தீபாவளிநாள்; முன்னாளின் இரவிலும், இன்று அதிகாலையிலும் வெடிகள், மத்தாப்புக்கள் என்று பலதும் கொளுத்தப் பட்டிருக்கும்; அதனால் எழுகிற புகை இந்தப் பனியோடு கலந்து கலையாத மேக மூட்டத்தைக் கிளப்பிவிட்டிருக்கும்", என்று விளக்கம் சொன்னேன்.

"என்னது வெடியா? நேற்று வந்திருக்கலாமே? வாண வேடிக்கை அழகைப் பார்த்திருக்கலாமே?" என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு தன் தோழியரோடு பிரஞ்சில் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்.

"தீபாவளி எதற்குக் கொண்டாடுகிறார்கள்?" என்ற அவரது கேள்விக்கு, ஓரளவு சுருக்கமாக கூடவே விரைவாக மறுமொழி சொல்லி முடிக்கிறேன்.

பறனை ஓடுகளத்தைத் தொட்டுவிட்டது. உள்ளே ஈரப்பதம் மாறிக் கொண்டிருப்பதை உணருகிறேன்.

வான் பாலத்தை அணைந்தாயிற்று.

நான், வான்பறனைப் பணிப்பெண்ணுக்கு முகமன் சொல்லி தீபாவளி வாழ்த்தும் சொல்லி வெளியேறுகிறேன். அந்த பகுரைனி அரபுப் பணிப்பெண் வியந்து கொள்ளுகிறாள். முகம் நிறையப் புன்சிரிப்பு.

வெளியே வந்து வண்டியில் ஏறி வீட்டிற்குப் புறப்படும் போதும் மேக மூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே மேகமூட்டம் தான். மழை இருந்தாலும் இல்லாவிட்டாலும். நகரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையெங்கும் ஈரம்; அதன் மணம்; மணத்துள் ஒரு பாந்தமான உணர்வு. இதுதான் சென்னை. உள்ளிழுத்துக் கொள்ளுகிறேன். நெஞ்சுகள் நிறையட்டும்.

இந்த மண் தாகத்தால் ஏங்கியதே? தாகம் அடங்கியதோ? வழி நெடுகிலும் அஞ்சடிகளில் நாலைந்து நாட்களில் முளைத்த புல்வெளிப் பச்சை. ஆங்காங்கே சாலைகளில் ஈயென்று வாய்பிழந்த பள்ளங்கள்; மதகு இல்லாச் சிறுசிறு நீர்த்தேக்கம். எங்கள் நகரம் மாறவே மாறாதோ?

நான் வாழும் பகுதிக்கு அண்மையில் வந்தாயிற்று. "நிறுத்துக்கள். அங்கு ஏதோ ஒரு சிறுவன் வெடி வைக்கிறான்" என்று உந்து ஓட்டுநருக்குச் சொல்லுகிறேன். ஆயிரம் இழைச் சீனச் சரவெடி (இப்பொழுதெல்லாம் சீனவெடி என்ற சொல்லே இளையருக்குத் தெரிவதில்லை. எல்லாம் தௌசண்ட் வாலா தான். எங்கோ மரபுத் தொடர்புகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. வணிக வேகம் சிந்தனையை மறைக்கிறது.) வெடி காதை அடைக்கிறது. புகை கண்ணை மறைக்கிறது.

நின்று காத்து வண்டி தொடருகிறது.

வீட்டுக்கு வந்தாயிற்று; எண்ணெய்க் குளியல் செய்தே ஆகவேண்டும் என்று துணையாள் அடம் பிடிக்கிறாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ ? குளியல் ஆயிற்று. புத்தாடைகள் வீட்டில் குத்து விளக்கிற்கு எதிரே. இதையெல்லாம் சொல்லவேண்டுமோ? மஞ்சள் தடவி, பக்கத்தில் மாதிரிக்குக் கற்கண்டு வடையை ஏனம் நிறைய வைத்துப் படைத்து, பல்லாண்டு சொல்லித் தண்டனிட்டு வணங்கி புத்தாடைகளை எடுத்துக் கொள்ளுகிறோம்.

கற்கண்டு வடையை எத்தனை நாளுக்கு அப்புறம் பார்க்கிறேன்? நாக்கில் நீர் ஊறுகிறது. "அதெல்லாம் முடியாது, கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான்" என்கிறாள் மனைவி. அவளை ஆற்றுப் படுத்தி என் வழிக்கு மாற்றுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரிலும், தொலைக் காட்சியிலும்
நடைபெறுகின்றன.

ஆயிற்று; கோயிலுக்குப் போக வேண்டியதுதான். எங்கள் வீட்டின் முன்னும் ஒரு சீனச் சர வெடி (போன ஆண்டு ஆயிரங் கண்ணிச் சர வெடி வாங்கிய என் மனையாள் இந்த ஆண்டு நூறு கண்ணிச் சரவெடி தான் வாங்கியிருக்கிறாள்.)

இதோ, கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே உறவினர், நண்பர்கள் பார்த்துத் திரும்பவேண்டும்.

எப்படியோ எதிர்பாராமல் சென்னைக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தீபாவளி. எப்பொழுதும் உள்ள சடங்கு அதே கதியில் தொடர்கிறது. நரகாசுரன் எதற்காகத் தீபாவளியைக் கொண்டாடச் சொன்னான்? புரியவில்லை.

"அடச்சே! எதற்காக என்று தெரிந்து என்னாகப் போகிறது? :-) எல்லாமே ஒரு பூடகமான நம்பிக்கை தானே? கலகலப்பு இருந்தால் தானே வாழ்க்கை?" நான் என்னையே ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறேன்.

"இந்தா, வந்துட்டேன். தீப்பெட்டியைக் கொண்டு வரேன்" என்கிறாள் என் மனைவி.

உடைந்த செங்கற் சில்லின் மேல் சீனச் சரவெடி.....

மறுபடியும் சத்தம்...... மறுபடியும் புகை..... மேக மூட்டம் விளைவதில் எங்கள் பங்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, October 27, 2005

மழையும் நகரும்

ஆறே கிடந்தன்ன அகல்நெடுந் தெருக்கள்
"அன்ன"வை தொலைத்து முழுகவே செய்வோம்;
"அகலை"யும் குறுக்கி ஒடுங்கியே நிற்போம்;
ஆங்கங்கு வண்டிகள் நிறுத்தியே வைப்போம்;
தாறு மாறெனெத் துரவுகள் செய்வோம்;
தத்துப் பித்தென்று முட்டியே வைப்போம்;
தண்ணீர் கழுநீர் கலந்துற விடுவோம்;
தடுமன் சளியொடு மருத்துவர் பார்ப்போம்;
வேறு பாடின்றி இயற்கையைச் சலிப்போம்;
வெய்யிலில் வெந்ததைச் சடுதியில் மறப்போம்;
வீழுமா மழையெனப் பரந்ததை ஒதுக்கி,
விளையுமோ நீர்வளம் என்றெனக் கணிப்போம்;
தேறுதல் ஆறுதல் சேவைகள் நாடித்
தெருவெலாம் நீளுமெம் ஏழையர் வரிப்போம்;
தெரிந்தவர் புரிந்தவர் கொடைகளைத் தேடி
அரசினை, அரசிலாத் தொண்டரைச் சேருவோம்;

வழமை போலவே குழம்பிடும் நகரம்;
வாய்திறச் சாக்கடைக் குழிகளைத் தவிர்த்து
வளைந்து வளைந்து செல்லிடம் புகல்வோம்;
வட்டுகள் பரிசல் சிற்றிடம் பகர்வோம்;
தழும்பத் தழும்பச் சாலையிற் குளங்கள்
தண்டென நடுவில் மேடுறும் வரிகள்;
தாரையாய் வண்டிகள் புகையொடு நகர்வோம்;
தடமோ ஒற்றைதான்; தள்ளிடத் தொண்டர்;
இளையவர் முதியவர் ஆடவர் பெண்டிர்
எழினியைத் தூக்கிக் கால்நனை கொள்ளுவோம்;
எங்கணும் பெயல்நீர் செம்புலம் உணர்வோம்;
எடுக்கும் அடியினிப் பள்ளமா? மேடா?
இழைவது இடையே கொசுவும், உயிரியும்
இயன்றால் இனிப்பல ஊர்வன மிடையும்;
என்னரும் நகரில் மழையென வந்தால்
எத்தனை கரிசனம், உயிர்களுக் கிடையில்?

பத்துநாள் மழைக்கே இத்தனை பாடு;
பையவே புயல்வரும் எனவறி விக்கை;
பகலெலாம் அமைதி; பாசாங்குத் தோற்றம்;
பழக்கமாய் ஆந்திரம் போகுமோ? தெரியோம்;
மொத்தமும் வழித்து முகத்தையும் மறைத்து
மூடிய மேகம் அதன்பொருள் அறிமோ?
மூண்டது தூறல்; முயங்குறு காற்று
மூளுமோ? சூழுமோ? முடங்கியே போமோ?
அத்தனை அறிந்தவர் யாருளர் நாட்டில்?
அலமறும் வான்நிலை ஆய்வரா சொல்லுவார்?
ஆண்டு தோறும் கதையிது ஆகியும்
அசைக்க முடியா பெருநம் பிக்கை!
இத்தனை சரவல் எமக்கிழைத் திருந்தும்
எண்ணுவ தெல்லாம் ஏரிகள் உயரம்!
"என்னாச் சுங்க! புழலேரி இன்று?"
"ஏறிய தைந்தடி! இந்தாண்டு ஓடிரும்"

- முன்னொரு நாள் எழுதிய பா

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 25, 2005

மின்தாளிகைகள் - மடற்குழுக்கள் - வலைவாசல்கள்

இணையம் பற்றிய புரிதல் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஏற்பட்ட புதிதில், மின் தாளிகைகள் (e-zines) என்பவை இங்கே தொடங்கப் பெற்றன. அச்சு இதழ்களைப் போன்றே சில போல்மங்களை (models) உருவாக்கி, அவற்றுள் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, கருத்து, பின்னூட்டு ஆகியவற்றைக் கொண்டு வந்து, மின்னுருவில் எங்கோ ஒரு நினைவகத்தில் (memory) குடியிருத்தி வைப்பதே மின்னிதழ்களின் நடைமுறையாய் இருந்தது. அச்சிதழ்கள் இவற்றிற்கு முன்மாதிரியாய் இருந்த காரணத்தால், அந்தக் கட்டமைப்பிற்குள் தம்மை அறியாமல் ஈடுபட்டு, பல நேரம், மின்னுலகின் இயலுமைகள் (possibilities) மற்றும் அதன் விளிம்புகள் (limits) முதலியவை மின்னிதழ்களில் தொடப் படவே இல்லை. படிப்போரும், பழக்கத்தின் காரணமாய், எந்தப் புதிய எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த நினைவகங்களோடு இணையவழி கணுக்கம் (connection)ஏற்படுத்திக் கொண்டு மின்னிதழ்களைப் படித்தோம். நாம் பின்னூட்டுக் கொடுக்கும் போதும் கூட அவை ஒரே நினைவகத்திற்குப் போயின. மின்னிதழ்கள் என்பவை இந்த வகையில் முதற்படி.

மின்னிதழ்களின் உள்ளடக்க நிர்வாகம் (content monagement) என்பது கிட்டத் தட்ட அச்சிதழ்களைப் போலவே இருந்தது. (நான் இங்கே பண வருமானம் பற்றிச் சொல்லவில்லை. வாசகர்கள்/எழுதுபவர்கள் ஆகிய இருவருக்கிடையே இருந்த நடப்பு முறையைச் சொல்லுகிறேன்.) இந்த மின்னிதழ்களை நிர்வகிப்போர் என ஒருவரோ சிலரோ இருந்து பல்வேறு ஒருங்கிணைப்பு வேலைகளைப் பார்த்தார்கள். ஆங்கிலத்தில் சொல்லுவது போல் மின்னிதழுக்கும் ஓர் எடுவையர் (editor) தேவைப்பட்டார். (தமிழில் நெடுங்காலம் இந்த editor என்ற சொல்லை "தாளிகை ஆசிரியர்" என்று சொன்னார்கள். ஆசிரியர் என்ற சொல்லாட்சியின் மூலம் அவர் ஏதோ நமக்கு ஆசான் போலத் தோற்றம் அளிப்பதைத் தவிர்த்திருக்கலாம். அவர் ஆசான் அல்ல. உண்மையில் editor என்பவர் நாம் அனுப்பும் ஆக்கங்களை தாளிகையின் கொள்கை முறைக்கு இணங்கத் திருத்தங்கள் செய்து அதைக் கொஞ்சம் எடுப்பாக முன் வந்து இருப்பது போல் ஆக்கி, அங்குமிங்கும் அலங்காரம் செய்து வெளியிடுவார்; இப்படி எடுப்பாக்கும் செயலைத் தமிழில் எடுவித்தல் என்று சொல்லலாம். எடுத்தல் என்பது தன்வினை; எடுவித்தல் என்பது பிறவினை. ஒன்றை உயர வரும்படி, தெரியும் படி செய்வது எடுவித்தல் என்று ஆகும். தென்பாண்டி நாட்டில் சிவகங்கை வட்டாரத்தில் எடுப்பு என்ற பெயர்ச்சொல் இந்தப் பொருளில் பெரிதும் வழக்கில் உள்ளது. "என்ன மானி, எப்படி? எடுப்பாய் இருக்கிறேனா?" எடுவிக்கும் செயலைச் செய்பவர் எடுவையர். editor என்பதின் நேர் இணையாய் எடுவையர் என்பதைப் பயனாக்கலாம். editor பற்றிய சொற்பிறப்பியலை முன்னாளில் மடற்குழுக்களில் எழுதினேன்.)

ஒவ்வொரு எடுவையரும் தனக்கென ஓர் எடுவைக் குழு (editorial team) வைத்திருக்கக் கூடும். எடுவை நிலைக்கென ஒரு கொள்கையும், நிலைப்பாடும், கடைப்பிடியும் (editorial policy, standpoint and practice)உண்டு. இந்திந்த ஆக்கங்கள் இந்த இதழில் வரலாம்; இன்னின்னவை இதில் வரக்கூடாது என்று வைத்திருப்பார்கள். பூதியல் (physics) தாளிகையில் அரசியல் வராது; குமுகாயத் தாளிகையில் (social science magazine) அணு வேதியல் (atomic chemistry) பற்றி வராது. அதே போல பேசும்படம் என்ற திரைப்படத் தாளிகையில் வருவது கல்கியில் வராது. ஏன், தினத்தந்தியில் வருவது தினமணியில் வராது. இப்படி ஒவ்வொரு தாளிகைக்கும் இருக்கும் எடுவைக் கொள்கையை விவரித்துக் கூறலாம். ஆனால் படிக்கின்ற உங்களுக்கு அதன் விதப்புத் தன்மை (specific character) பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்படி ஓர் எடுவைக் கொள்கையை வைத்திருப்பது ஒவ்வொரு தாளிகைக்கும் உள்ள இயல்பு. அது ஒன்றும் வல்லாண்மை (dictatorship) அல்ல. வல்லாண்மை என்பது ஒருவிதமான நிகழ்ப்பை (agenda) மனத்தில் வைத்துக் கொண்டு செய்யும் முற்றாளுமை (totalitarianism). பழைய சோவியத் ஒன்றியத்தில் (Soviet Union) பிராவ்தா என்ற தாளிகை காட்டியது வல்லாண்மைப் போக்கு. இங்கே நீக்குப் போக்கு என்பதற்கு இடம் கிடையாது. பொதுவாக, எடுவைக் கொள்கை என்பது வேறு; மிடைய வல்லாண்மை (media dictatorship) என்பது வேறு; நாம் இவை இரண்டையும் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு குழம்பிக் கொள்ளக் கூடாது. எடுவைக் கொள்கைக்கு மீறிய ஆக்கங்கள் வெளியீட்டிற்கு வராமல் விலக்கப் படுகின்றன என்பதாலேயே ஒரு தாளிகை வல்லாண்மைப் போக்கு உள்ளது என்ற பொருள் கொள்ள முடியாது.

பின்னாளில் மடற்குழுக்கள் (e-mail lists) வந்தன. கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, கருத்து போன்றவை இங்கே மடல் வடிவத்தின் மூலமாக வந்தன. இந்த மின் மடல்களை வாசகர்கள் இரண்டு முறையில் படிக்க முடிந்தது. ஒரு முறையில் எங்கோ இருக்கும் நினைவகத்தைக் கணுக்கிப் (by connecting) படித்தோம்; இன்னொரு முறையில் எல்லா மடல்களையும் நம் கணி/நினைவகத்திற்குள் கீழிறக்கிப் (download) படித்தோம். இங்கும் ஒரு நிர்வாகி அல்லது ஒரு குழு இருந்தார்கள். இவர்களுக்கு மட்டுறுத்தர்கள் (moderators) என்று பெயர். (நானும் பலமுறை சொல்லிவிட்டேன். மட்டுறுத்தர் என்றாலே போதும்; அதை மட்டுறுத்துநர் என்று நீட்டிச் சொல்ல வேண்டியதில்லை.) மடல்களின் பரிமாற்றத்தில் நடைபெறும் உரையாட்டில் அவ்வப்போது இது தான் விளிம்பு (அல்லது மட்டு); இது மட்டும் பேசலாம்; இதற்கு மேல் ஒருவரை ஒருவர் குத்துவதாய் உரையாடிக் கொள்ளக் கூடாது என்று இந்த நிருவாகிகள் உரையாட்டின் எல்லையை, மட்டை உறுத்தினார்கள். இங்கும் ஒரு மடற்குழுக் கொள்கை இருந்தது. இந்தந்தது பற்றி இந்த மடற்குழுவில் பேசலாம்; இவை இங்கு பேசக் கூடாதவை என்று வைத்திருந்தார்கள்; மட்டு மீறியதாய் தனிமாந்த வசை பாடும் நேரத்தில் ஒரு சில உறுப்பினர்களை விலக்கியும் கூட வைத்தார்கள்.

எல்லை மீறிய, மட்டுறுத்தமே இல்லாத ஒரு குழு, தாய்க்குழு, இருந்தது. நானும் கூட அதில் உறுப்பினனாய் இருந்திருக்கிறேன். அந்தக் குழு குலைந்த வகை இன்றைக்கும் மனத்திற்கு வருத்தம் தருகிறது. அதற்கப்புறம் எழுந்த பல தமிழ் மடற்குழுக்களும் மட்டுறுத்தலின் இன்றியமையாமையைக் கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினார்கள். பொதுவாக எல்லையற்ற சனநாயகம் என்பதும், பொறுப்புக்கள் உணராத விட்ட விடுதலையும், முடிவில் வெறிச்சோடும் சலிப்பையே கொண்டு வருகின்றன. வெறுமே இரண்டு மூன்று முன்னிலையாளர்கள் மட்டும் உரையாடிக் கொண்டும், மற்றவர்கள் அமைதியாய்ப் படித்துக் கொண்டும் இருப்பதாய் அது முடிந்துவிடும். விதிகளே இல்லாத கால்பந்தாட்டம் இருக்க முடியுமோ? கூடியமட்டும் குறைந்த விதிகள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு ஆட்டத்திற்கும் சில விதிகள் வேண்டும் அல்லவா?

பின்னால் வலைப்பதிவுகள் வந்தன. இங்கே கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு போன்றவையோடு கூடவே பல்மிடையப் பங்களிப்புக்களும் (multi-media contributions) எழுந்தன. ஆனால் இவையெல்லாம் ஒரே நினைவகத்தில், அல்லது ஒரு நாலைந்து நினைவகங்களில், அதே பொழுது தனித்தனி முகவரிகளில்/தளங்களில் இருந்தன. இந்தத் தனித் தனித் தளங்களில் இருப்பவற்றைப் பார்த்து எங்கு எவை இருக்கின்றன என்று திரட்டித் தரும்வகையில் திரட்டிகளும் (aggregators), அந்த திரட்டிகள் தரும் சுருக்கத்தைப் படிக்கும் வகையில் வலைவாசல்களும் (webportals) எழுந்தன. இந்த வலைவாசல்களில் நாம் போகும் போது அங்கு திரட்டி வைத்திருப்பதை ஒரு அச்சிதழின் முன்பக்கப் பட்டியலுக்கு இணையாகச் சொல்லலாம். அச்சிதழில் ஒரு ஆக்கம் இத்தனாம் பக்கத்தில் இருக்கும் என்று அந்தப் பட்டியல் சொல்லும். இங்கு அந்த ஆக்கம் எந்த வலைதளத்தில் இருக்கும் என்று சொல்லுவதோடு, அந்தத் தளத்திற்கே நம்மை இட்டியும் செல்லுகிறது.

சரி, வலைவாசல்களுக்கு என்று தனி எடுவைக் கொள்கை அல்லது நிருவாகக் கொள்கை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதை வல்லாண்மை என்று பார்ப்பது கொஞ்சம் எகிறிய பார்வை (extreme view). எப்படி அச்சிதழ்களுக்கு என ஓர் எடுவைக் கொள்கை இருக்கிறதோ, அதே போல வலைவசலுக்கும் எடுவைக் கொள்கை இருக்கும் என்ற அடிப்படையை நாம் மறக்கக் கூடாது. Chemical abstracts என்று வேதி அப்பூதிகள் உண்டு. இதில் பூதியல் அப்பூதிகளைச் (physical abstracts) சேர்க்க மாட்டார்கள்; அதே போல ஒரு துறைக் குறிப்புகளில் இன்னொரு துறை இருக்காது. வலைவாசல்கள் என்பவை எல்லார்க்கும் எல்லாமாய்க் காட்சியளிக்கும் அகரமுதலி (dictionary), கலைக்களஞ்சியம் (lexicons) போன்றவை அல்ல. இவற்றில் தான் ஏதொன்றையும் ஒதுக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால் இங்கும் கூட பல்வேறு காரணங்களுக்காய் ஒதுக்கல்கள் ஏற்படுவது உண்டு.

மதம் பற்றிய வாக்குவாதங்கள் திரட்டப் படவேண்டியதல்ல என்பது ஒரு திரட்டி நிருவாகிகளின் நிலைப்பாடாக இருக்கலாம். இந்த நிலைப்பாட்டை அந்த வலைவாசலின் எந்தக் கால நிலையிலும் அவர்கள் எடுக்கலாம். இதைத் திடீரென்றும் செயற்படுத்தலாம். அதே போல இன்னபிற முடிவுகளை அவர்கள் நிருவாகம் கருதி எடுக்கலாம். அதை ஏற்பதும் எற்காததும் நம் உகப்பு. அந்த முடிவுகளை ஏற்றால் அந்தத் திரட்டியைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்; இல்லையென்றால் இன்னொரு திரட்டியை நாடிப் போகிறோம். நான் பூதி வேதியல் (physical chemistry) பற்றிய செய்தி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் வேதி அப்பூதி (Chemical abstracts)யையும், வேதிப் பூதியல் (Chemical physics) பற்றிய செய்தி அறிய வேண்டுமென்றால் பூதி அப்பூதி(Physical abstracts)யையும் தேடிப் போகிறேன். இதே முறை தமிழில் இருக்கும் திரட்டிகளுக்கும் பொருந்துவது தான்.

தமிழில் பல்வேறு திரட்டிகள் எழவேண்டும். அதற்கு நுட்பியலாளர்கள் முயல வேண்டும். தமிழ்மணம் என்பது இந்த முயற்சிகளின் தொடக்கம். அவ்வளவுதான். வலைப்பதிவுகளின் சிக்கல் தமிழ்மணத்தின் சிக்கல் அல்ல. தமிழில் வலைப்பதிவு என்பது எழுநூற்றுச் சொச்சம். இவற்றின் ஆளுமை தமிழ்மணத்தால் கட்டுப் படவே இல்லை. அதே பொழுது, தமிழ்மணத்தின் ஆளுமை என்பது வேறு. அதுவும் இந்த எழுநூற்றுச் சொச்சம் பதிவுகளின் ஆளுமையால் கட்டுப் படாது. தமிழ் வலைப்பதிவுகளும் தமிழ்மணம் என்ற வலைவாசலும் ஒன்றிற்கொன்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படிப்போருக்கு மொத்த உருவம் காட்டுகின்றன. இன்னின்ன விதிகளுக்குள் இருந்தால் உங்களிடம் இருந்து சுருக்கம் எடுத்து உங்கள் தளங்களுக்குத் தொடுப்புக் கொடுப்போம் என்று தமிழ்மணம் சொல்லுகிறது. அதற்கு இணைந்தே வலைப் பதிவர்களாகிய நாம் ஒப்புதல் தெரிவித்து இந்தத் திரட்டும் செயலுக்கு உட்படுகிறோம். இதில் நம்முடையது திரட்டப் படவில்லையென்றால் நாம் நிருவாகிகளைக் கேட்டுக் கொள்ளலாம்; அல்லது நம் பதிவை மாற்றிக் கொண்டு அவர்களுடைய விதிமுறைக்கு உட்பட்டு வரலாம்; இல்லையெனில் வேறு திரட்டிக்குப் போகலாம். இதில் வல்லாண்மை எங்கே வந்தது?

கால் பந்தாட்டம் ஆட வந்த இடத்தில், கைப்பந்தாட்டம் ஆடுவேன் என்று அடம் பிடித்து ஆடுகளம் அமைத்துக் கொடுத்தவரை வல்லாளர் என்று சொல்லுவது எப்படிச் சரி என்று புரியவில்லை.

நமக்கும் பொறுப்பு இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 28, 2005

சில துளிப்பாக்கள்


அன்புடையீர்,

அண்மையில் "மூன்று நிகழ்ச்சிகளும் ஒரு ஹைக்கூவும் (அ) இதுவா ஹைக்கூ?" என்ற தலைப்பில் திரு நந்தன் http://mkannadi.blogspot.com/2005/09/blog-post.html சில குறிப்புக்கள் குறித்திருந்தார்.

முதலில் அவர் பதிவை அப்படியே இங்கு வெட்டி ஒட்டி இருக்கிறேன். பின் என் பங்களிப்பு.
---------------------------------
எல்லாரும் குஷ்பு தங்கர் பச்சான் மற்றும் தமிழ் கற்பு பண்பாடு பற்றி தீவிரமான கருத்தாலோசனை செய்து கொண்டிருக்கும் போது, நான் S/W engineerக்கே உரித்தான ஒரு புனித (?!) ஸ்தலத்துக்கு யாத்திரை சென்றிருந்தேன். பயனத்தில் மூன்று காட்சிகள் (நிகழ்ச்சிகள்) மனதில் நின்றன. ஹைக்கூ என்பது முரண் அல்லது ஆச்சரியம் கொண்ட ஒரு நிகழ்வை படம்பிடிப்பது - Snapshot என்று எங்கேயோ படித்த ஞாபகம். அதனால் முதல் காட்சியை அப்படி கொடுத்துள்ளேன் (நன்றாய் கிழிபடுவேன் என அறிந்தே!)

1.
ரயிலடி நொண்டி பிச்சைக்காரனின்
கட்டைக்காலில் உடைந்திருந்தது
சுண்டுவிரல்.

இன்னும் சரியாக வரவில்லை என நினைக்கிறேன். இரண்டாவது வரியிலேயே வரும் முரண்/ஆச்சரியம் கடைசி வரியில் தான் வரவேண்டுமோ? (பேசாமல் "உடைந்திருந்தது" எடுத்து அடுத்த வரியில் போட்டுடலாமா?:-) )

மற்ற இரண்டும் சரியாய் பிடிபடவில்லை, அதனால் அப்படியே...

2.
ரயில் பிடிக்கும் அவசரத்தில் ஒரு குடும்பம். அவர்களுடைய அவசரங்களுக்கு ஆட்படாமல் அந்த நிமிடத்தில் மட்டும் வாழ்வது போல் ஒரு சின்ன பெண் -பாதி காலியான ஒரு கோன் ஐஸ்கிரிமை சுவைத்துக்கொண்டு அப்பா பின்னால் சென்றுக்கொண்டிருந்தாள். ஐஸ்கிரிம் ஆர்வத்தில் அடிக்கடி பின் தங்கிவிடுகிறாள். அப்பா 2-3 முறை திட்டிவிட்டார். மறுபடியும் அந்த சின்ன பெண் பிந்தங்கிவிட, சற்று முன்னால் சென்றுவிட்ட அப்பா திரும்பி வருகிறார். வந்தவர் சட்டென்று அவளிடம் இருந்த ஐஸ்கிரிமை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார் (அவளை அடிக்கவோ அல்லது தூக்கிக்கொண்டு போவார் என்றே எதிர்பார்த்தேன்) பின் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். ஒரு நிமிடம் ஒன்றும் புரியாத குழந்தை, சுதாரித்து அவர் பின்னால் அழுதவாறே ஓடலானாள்.

3.
புனித ஸ்தலம் என்றேனே அது Chennai US counselate- தான்.
வேலை முடிந்து வெளியே வந்து சாலையை கடக்க முயன்றேன்.
"ஹலோ" திரும்பி பார்த்தால் ஸ்டென் -கன் சகிதம் ஒரு போலிஸ்காரர். சற்று பயந்தபடி அருகில் போனேன்.
"தமிழா?" - அவர்
"ஆமாங்க"
"வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா"?
"முடிஞ்சுதுங்க"
"படிக்க போறியா? வேலை பாக்கவா?"
"வேலைக்காக"
நல்லது. ஆல் த பெஸ்ட்
தாங்ஸ்
"நம்பள கொஞ்சம் கவனிச்சுட்டு போறது.."
அதுவரை இருந்த பயம் கலந்த மரியாதை சட்டேன மறைந்தது. பதில் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.
"தம்பி...ஹலோ" என என் பின்னாலிருந்து வந்த குரலை வாகனங்களின் சத்தம் அமர்த்திவிட்டது.

முதல் ஹைக்குவை(?) திருத்துங்கள், முடிந்தால் மற்ற இரண்டுக்கும் எழுதுங்கள்! மூன்றாவது முடியாது என்றே தோன்றுகிறது. இங்கே கவிஞர்களுக்கா பஞ்சம்?

பி.கு: எழுத்து பிழைகள், குறிப்பாக ண/ன மாற்றி உபயோகிப்பது இருந்தால் (இருக்கும்) எனக்கு அஞ்சலில் அனுப்பவும். மிக்க நன்றி!

ந.ந்.த.ன் - 1:46 AM

--------------------------------------------
இனி இராம.கி.யின் பங்களிப்பு:

துளிப்பா (haiku) என்பது தமிழுக்குப் புது வடிவம். ஓரளவு அதன் உள்ளடக்கம் பலருக்குப் புலப்பட்டாலும், உருவில் இன்னும் சோதனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

துளிப்பா என்பது ஒரு கணநேரப் படப்பிடிப்பு. காட்சிகளின் தொடர்ச்சியாய் ஒன்றை விவரிக்கும் போது ஒன்றிற்கும் மேற்பட்ட துளிப்பாக்களில் தான் விவரிக்க இயலும். அதிலும் ஒரு சிக்கனத்தைக் காட்ட இயலும் தான். குறைந்த காட்சிகளில் கதையைக் கொண்டு வரலாம். துளிப்பாத் தொடரில் தேர்ந்த தொகுப்பு இருக்க வேண்டும்.

என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன். கீழே வருவதில் இருவுள் என்பது rail என்பதைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் rail என்பது இரும்பால் ஆன தண்டவாளத்தைக் குறிக்கிறது. இருவுள் என்ற சொல்லும் அப்படிப் பிறந்த சொல் தான். கவணை = gun; இங்கே நந்தன் கூறியது போல் sten gun. "hello" என்பது தென் மாவட்டங்களில் கடற்கரைகளில் கூறப்படும் "எல்லா" என்பதற்கு இணையானது. எல்லன் என்பவன் தோழன்.

என் துளிப்பாக்கள்.

1.
இருவுள் நிலையப் பிச்சைக் காரன்
நொண்டி யடிக்கும் கட்டைக் காலில்,
உடைந்து கிடப்பது சுண்டு விரலோ?

2.
இருவுள் பிடிக்கும் குடும்ப அவசரம்;
கவலை இன்றி, கையில் கூம்புடன்,
பனிக்குழை சுவைக்கும் பாலகி பின்னால்!

சின்னவள் பின்னுறச் சினமுறத் திரும்பி,
சட்டெனக் கூம்பைச் சடுதியிற் பிடுங்கி,
தன்வாய்க் குள்ளே தள்ளிடும் அப்பா!

விரைநடை அப்பா விழுங்கலைப் பார்த்து
ஒருகணக் குழப்பம்; ஓவெனக் கூவியே,
ஓடித் தொடரும் புரியாக் குழந்தை!

3.
நுழைமதி கிடைத்து வெளிவரும் மகிழ்ச்சியில்,
"தம்பி" என்னுமோர் கவணையர் அழைப்பு;
சட்டெனக் குமிழ்ந்தது திகைப்பும் பயமும்.

பதறிப் பக்கலில் போனதும் கேட்டது:
"வேலையா, படிப்பா, நுழைமதி கிடைத்ததா?"
காவல் கவணையர் ஆற்றுப் படுத்தலோ?

ஆர்ந்த கனிவில் பயத்தை விடுத்துத்
திரும்பினேன்; இம்முறை குழைவுப் பேச்சு;
"நம்மையும் கொஞ்சம் கவனிச்சுப் போறது"

பயமும் மதிப்பும் சட்டெனக் கரையச்
சாலை விரைந்தேன்; வண்டி இரைச்சல்;
"எல்லா" என்பதாய் அவரொலி கேட்டதோ?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 02, 2005

நீங்கில் தெறும்

இதுவரை அறிந்திராத அந்தத் துய்ப்பு சற்றுமுன் தான் நடந்தது. பெற்றோருக்கும், ஊராருக்கும் இவர்களின் உறவு தெரியாத களவு நிலையில், அந்த உறவும் கொஞ்சம் அளவு மீறி நிறைந்த பொழுதில், கனவோடையில் இருந்து நனவோடை புகுந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், கலவி உணர்வை மீண்டும் மீண்டும் மனத்திற்குள் அசை போட்டுக் கொண்டு மகிழ்ந்து போய், தனக்குள் குறுகுறுத்து எழுந்த வியப்பை இரண்டே வரியில் வெளிப் படுத்துகிறான் தலைவன்.

"என்ன நுகர்ச்சியடா இது? பொதுவா நெருப்புக்கு பக்கத்துலே போனா சுடும்; விலகுனா தண்ணுன்னு இருக்கும். ஆனா இங்கே மாறில்ல கிடக்கு; இவளை விட்டு அகன்று விலகி வந்தாச் சுடுது; நெருங்குனா, நிறைவா இருக்கு; சமயத்துலே கொஞ்சம் குளிரக் கூடச் செய்யுது. இப்படி ஒரு விதப்பான தீயை இவள் எங்கேயிருந்து பெற்றாள்? புரியலையே?"

என்ற வெளிப்பாட்டை திருக்குறளின் காமத்துப்பாலில் களவியல் பிரிவில் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் காட்டுகிறார். அவருடைய சொற்களில் இப்படிப் போகிறது அந்தக் குறள்.

நீங்கில் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்

- திருக்குறள் 1104.

மேலே உள்ள குறளில் "நீங்கில் தெறும்" (தெறூஉம் என்பது அளபெடை) என்பது "நீங்கினால் சுடும்" என்ற பொருள் கொள்ளூம். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்திய திருக்குறளில் தெறுதல் என்ற வினை சுடுதல் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. எனவே இது ஆங்கிலமோ என்று நாம் மயங்க வேண்டியது இல்லை. நம்முடைய சோம்பலால் தெறுதல் என்ற வினையின் ஆளுமையைக் குறைத்துவிட்டோ ம். அவ்வளவு தான். சுடுதல் என்ற பொருள் மட்டுமல்லாது, தெறுதல் என்பது காய்ச்சுதல் என்று கூடப் பொருள் கொள்ளும். தெறு/தெறுல் என்ற சொற்களும் சூடு, வெம்மை என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். துள்>தெள்>தெறு>தெறுதல் என்ற வளர்ச்சியில் இந்தச் சொற்கள் எழும்.

அண்மையில் தெறுமத்துனைமவியல் (thermodynamics) என்று நான் குறித்ததைப் பார்த்து, "இதிலே 'தெறும' என்பது வெப்பவியல்/thermal/thermo-இற்கு இணையான தமிழ்ச்சொல்லா அல்லது thermo அப்படியே தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளதா?" என ஷ்ரேயா என்ற ஒரு வலைப்பதிவர் கேட்டிருந்தார். இதுபோன்ற கேள்விகள் அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னால் முடிந்ததற்கு மறுமொழிக்கிறேன்.

ஆங்கிலத்தில் heat, hotness, chill, cold, warm, mild hot, very hot, boil, temperature, caloric, thermal எனப் பலவிதமாய்ச் சொல்லுகிறோம். இதே சொற்களைத் தமிழில் சொல்லும் போது வெப்பம், குளிர் என்று ஒன்றிரண்டு சொற்களை மட்டுமே வைத்துப் புழங்கிக் கொண்டு மற்றவற்றை உருவாக்க அடைச் (adjective) சொற்களைச் சேர்த்து பொதுவாக ஏதோ ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தக் காலத் தமிழ் இளையரின் சிக்கலே அவர்களுடைய தமிழ்ச் சொற்கள் தொகுதி குறைந்து போனது தான். காலமாற்றத்தால், தமிழ்மொழி அறிவு நம்மில் பலருக்கும் குறைந்து போனது. நமக்கிருக்கும் போக்கில் எல்லா இடத்தும் ஆங்கிலமே பேசி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யாத நிலையில், நமக்கு 2000, 3000 தமிழ்ச் சொற்கள் மட்டுமே தெரிந்து இருந்தால், நம்மை அறியாமலே தமிழோடு ஆங்கிலம் கலப்போம். அப்புறம் குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு "தமிழில் அதைச் சொல்ல முடியாது, இதைச் சொல்ல முடியாது" என்று கதைப்போம். நான் இன்றைய இளைஞரை வேண்டிக் கேட்டுக் கொள்ளுவது ஒன்றே ஒன்றுதான். "நிறையத் தமிழ் படியுங்கள்; உங்களுடைய தமிழ்ச் சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளுங்கள்."

மேலே கூறிய ஆங்கிலச் சொற்களின் இணையான தமிழ்ச் சொற்களை புலனத்தை விளக்கும் போதே கூற முயலுகிறேன். இது பூதியலின் அடிப்படைப் பாடமாகத் தெரிவதாய் உணர்ந்தால் என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

heat என்பதை இந்தக் காலப் பூதியல் (physics) ஒரு பெருணைப் (=புராணா, primitive) பொருளாகவே எடுத்துக் கொள்ளுகிறது. சூடு என்ற சொல்லும் கூட அதே பெருணைப் பொருளைத் தான் தமிழில் காட்டுகிறது. சூடேற்றல் = to heat. சூடாக இருந்தது என்னும் போது சூடு என்ற சொல் hotness என்ற இன்னொரு பெருணையைக் குறிப்பதை உணரலாம். hotness என்பதும் temperature என்பதும் ஒன்றிற்கொன்று சற்று வேறானவை. நம்மில் பலர் hotness என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே temperature என்பதற்குத் தாவிவிடுகிறோம். எண்ணால் சொல்லாமல் temperature என்பதைக் குறிக்கமுடியாது. ஆனால் சூடுகளைக் குறிக்க வெறும் சொற்கள் போதும். சூடு என்பது உணரப்படுவது. அது வெவ்வேறு தகை (=தகுதி=quality)களைக் குறிப்பிடுகிறது. temperature என்பது எண்ணுதி (=quantity) யாகக் குறிப்பது.

மாந்த வாழ்வில் நாம் வெவ்வேறு சூடுகளைப் பட்டு அறிகிறோம். உறைந்து (உறைதல் = to freeze) கிடக்கும் பனிப்புள்ளிக்கும் கீழ் சில்லிட்டுக் (chill) கிடப்பது ஒருவகைச் சூடு; அப்புறம் அதற்குமேல் குளிர்ந்து (cold) கிடப்பது இன்னொரு சூடு; இன்னும் கொஞ்சம் மேலே வந்தால் வெதுப்பான (warm) ஒரு சூடு; இன்னும் மேலே போனால் இளஞ்சூடு (mild hot); அதற்கும் மேலே கடுஞ்சூடு (very hot); இன்னும் பேரதிகமாய் கொதிக்கும் (boiling) சூடு. இப்படி ஒவ்வொரு சூட்டையும் வெவ்வேறு சொற்களில் சொல்லி நம்மோடு இருப்பவருக்கு உணர்த்தப் பார்க்கிறோம். ஆனால் இந்தச் சொற்கள் ஒன்றிற்கொன்று உறழ்வானவை (relative). பொதுவாக, ஒவ்வொரு மாந்தனும் இந்தச் சூட்டுக்களை தன் மேனியில் வெவ்வேறு முறையில் தான் உணர முடியும். ஒருவர் உணர்ந்தது போல் இன்னொருவர் அப்படியே உணர முடியாது. எனக்கு குளிராக இருப்பது உங்களுக்கு வெதுப்பாக இருக்கலாம். உங்களுக்கு வெதுப்பாய் இருப்பது இன்னொருவருக்கு இளஞ்சூடாக இருக்கலாம். எனவே இதுதான் இந்தச் சூடு என்று உறுதிப்பாடோ டு யாராலும் சொல்ல முடிவதில்லை. இன்னொருவருக்குத் தெளிவாகப் புரியவைக்க முடிவதில்லை. மொத்தத்தில் வெறுஞ் சொற்களால் சூட்டின் அளவை உணர்த்துவது என்பது நமக்கு இயலாதது ஆகிறது. மாறாக எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு சூட்டை அடிப்படையாக வைத்து அதை ஒரு எண்ணோடு பொருத்திவைத்து பின்னால் மற்ற ஒவ்வொரு சூட்டையும் ஒவ்வொரு உரியல் எண்ணோடு (real number) உறழ்த்திக் காட்டினால் இந்தச் சூடுகளை எண்களாலேயே உணர வைக்க முடியும் என்று நம்முடைய பட்டறிவால் அறிந்து கொள்ளுகிறோம். அப்படி அமைகின்ற எண்களைத்தான் நாம் வெம்மை (temperature) என்று சொல்லுகிறோம்.

சூடுகள் என்ற கொத்தில் (set) இருக்கும் ஒவ்வொரு சூட்டிற்கும் ஒரு உரியல் எண்ணை பொருத்திக் காட்டும் ஒரு முகப்புத் (map) தான் வெம்மை (temperature) எனப்படுகிறது. அடிப்படை வெம்மை என்பது பனிப்புள்ளியாகவோ (ice point) கொதிப் புள்ளியாகவோ (boiling point) இருக்கலாம். இந்த வெம்மை முகப்பு (temperature map) என்பது ஒரே ஒரு முகப்பு என்றில்லை. நூற்றுக் கணக்கான முகப்புக்களை நாம் உருவாக்க முடியும். ஒவ்வொரு முகப்பும் ஒரு அளவுகோலை உருவாக்குகிறது. செண்டிகிரேடு அளவு கோல் என்பது ஒரு வித முகப்பு. இதில் பனிப்புள்ளி என்பது சுழி (zero) என்ற எண்ணால் குறிக்கப் படும். வாரன்ஃகீட் என்ற அளவுகோல் இன்னொரு முகப்பு. இதில் பனிப்புள்ளி 32 எனக் குறிக்கப் படும். கெல்வின் முகப்பு என்பது இன்னும் ஒரு அளவுகோல். இதில் பனிப்புள்ளி 273.16 என்று குறிக்கப்படும்.

ஒரு பொருளைச் சூடேற்றும் போது நாம் கொடுப்பது வெப்பம் (caloric). வெப்பம் என்பது ஆற்றல் (energy) வகைகளில் ஒரு வகை. வெப்பம் என்பது கனலி (calory) என்ற அலகால் அளக்கப் படுகிறது. ஒரு வளிமம் (gas) அல்லது நீர்மத்தைச் (liquid) சூடுபடுத்தும் போது அது விரிகிறது (expand); கூடவே அதன் வெம்மை(temperature)யும் கூடுகிறது. வளிமம் அல்லது நீர்மத்தைப் பொதுவாகப் பாய்மம் அல்லது விளவம் (fluid) என்று சொல்லுவோம். விரிய விரிய ஒரு விளவம் வெளி(space)யை நிறைக்கிறது. வெளியை நிறைத்தலைத்தான் வெள்ளுகிறது என்று சொல்லுகிறோம். வெள்ளுகின்ற அகற்சிக்கு வெள்ளம் (volume) என்று பெயர். வெள்ளப் பெருக்கு (volumetric increase) காலத் தொடர்ச்சியாக ஏற்பட்டால் அதைப் பாய்ச்சல் அல்லது விளவு (flow) என்று சொல்லுகிறோம்.

இதுவரை சொன்ன அத்தனை வினைகளையும் வெறுமே வெப்பவினை, சூட்டுவினை என்று சொல்லாமல் தெறுமவினை என்று சொல்லுவது பொதுமைப் பொருளையும், விதப்புச் சொற்களையும் தனித்தனியே வைத்துப் புழங்குவதால் தான். தெறுமம் தமிழே.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¿£í¸¢ø ¦¾Úõ

þÐŨà «È¢ó¾¢Ã¡¾ «ó¾ò ÐöôÒ ºüÚÓý ¾¡ý ¿¼ó¾Ð. ¦Àü§È¡ÕìÌõ, °Ã¡ÕìÌõ þÅ÷¸Ç¢ý ¯È× ¦¾Ã¢Â¡¾ ¸Ç× ¿¢¨Ä¢ø, «ó¾ ¯È×õ ¦¸¡ïºõ «Ç× Á£È¢ ¿¢¨Èó¾ ¦À¡Ø¾¢ø, ¸É§Å¡¨¼Â¢ø þÕóÐ ¿É§Å¡¨¼ ÒÌóÐ þÂøÒ ¿¢¨ÄìÌ Åó¾ ¿¢¨Ä¢ø, ¸ÄÅ¢ ¯½÷¨Å Á£ñÎõ Á£ñÎõ ÁÉò¾¢üÌû «¨º §À¡ðÎì ¦¸¡ñÎ Á¸¢úóÐ §À¡ö, ¾ÉìÌû ÌÚÌÚòÐ ±Øó¾ Å¢Âô¨À þÃñ§¼ Åâ¢ø ¦ÅÇ¢ô ÀÎòи¢È¡ý ¾¨ÄÅý.

"±ýÉ Ñ¸÷¼¡ þÐ? ¦À¡ÐÅ¡ ¦¿ÕôÒìÌ Àì¸òÐ§Ä §À¡É¡ ÍÎõ; Å¢ÄÌÉ¡ ¾ñÏýÛ þÕìÌõ. ¬É¡ þí§¸ Á¡È¢øÄ ¸¢¼ìÌ; þÅ¨Ç Å¢ðÎ «¸ýÚ Å¢Ä¸¢ Åó¾¡î ÍÎÐ; ¦¿ÕíÌÉ¡, ¿¢¨ÈÅ¡ þÕìÌ; ºÁÂòÐ§Ä ¦¸¡ïºõ ÌÇ¢Ãì Ü¼î ¦ºöÔÐ. þôÀÊ ´Õ Å¢¾ôÀ¡É ¾£¨Â þÅû ±í§¸Â¢ÕóÐ ¦ÀüÈ¡û? Òâ¨ħÂ?"

±ýÈ ¦ÅÇ¢ôÀ¡ð¨¼ ¾¢ÕìÌÈÇ¢ý ¸¡ÁòÐôÀ¡Ä¢ø ¸ÇÅ¢Âø À¢Ã¢Å¢ø Ò½÷ Á¸¢ú¾ø ±ýÈ «¾¢¸¡Ãò¾¢ø ÅûÙÅ÷ ¸¡ðθ¢È¡÷. «ÅÕ¨¼Â ¦º¡ü¸Ç¢ø þôÀÊô §À¡¸¢ÈÐ «ó¾ì ÌÈû.

¿£í¸¢ø ¦¾ê¯õ ÌÚÌí¸¡ø ¾ñ¦½ýÛõ
¾£ ¡ñÎ ¦ÀüÈ¡û þÅû

- ¾¢ÕìÌÈû 1104.

§Á§Ä ¯ûÇ ÌÈÇ¢ø "¿£í¸¢ø ¦¾Úõ" (¦¾ê¯õ ±ýÀÐ «Ç¦À¨¼) ±ýÀÐ "¿£í¸¢É¡ø ÍÎõ" ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûéõ. ¸¢ð¼ò¾ð¼ 2000 ¬ñθÙìÌ Óó¾¢Â ¾¢ÕìÌÈÇ¢ø ¦¾Ú¾ø ±ýÈ Å¢¨É Íξø ±ýÈ ¦À¡ÕÇ¢ø ¬ÇôÀðÊÕ츢ÈÐ. ±É§Å þÐ ¬í¸¢Ä§Á¡ ±ýÚ ¿¡õ ÁÂí¸ §ÅñÊÂÐ þø¨Ä. ¿õÓ¨¼Â §º¡õÀÄ¡ø ¦¾Ú¾ø ±ýÈ Å¢¨É¢ý ¬Ù¨Á¨Âì ̨ÈòÐŢ𧼡õ. «ùÅÇ× ¾¡ý. Íξø ±ýÈ ¦À¡Õû ÁðÎÁøÄ¡Ð, ¦¾Ú¾ø ±ýÀÐ ¸¡öî;ø ±ýÚ Ü¼ô ¦À¡Õû ¦¸¡ûÙõ. ¦¾Ú/¦¾Úø ±ýÈ ¦º¡ü¸Ùõ ÝÎ, ¦Åõ¨Á ±ýÈ ¦À¡ÕðÀ¡Î¸¨Ç ¯½÷òÐõ. Ðû>¦¾û>¦¾Ú>¦¾Ú¾ø ±ýÈ ÅÇ÷¢ø þó¾î ¦º¡ü¸û ±Øõ.

«ñ¨Á¢ø ¦¾ÚÁò¾¢ÉÅ¢Âø (thermodynamics) ±ýÚ ¿¡ý ÌÈ¢ò¾¨¾ô À¡÷òÐ, "þ¾¢§Ä '¦¾ÚÁ' ±ýÀÐ ¦ÅôÀÅ¢Âø/thermal/thermo-þüÌ þ¨½Â¡É ¾Á¢ú¡øÄ¡ «øÄÐ thermo «ôÀʧ ¾Á¢úôÀÎò¾ôÀðÎûǾ¡?" ±É ‰§Ã¡ ±ýÈ ´Õ ŨÄôÀ¾¢Å÷ §¸ðÊÕó¾¡÷. þЧÀ¡ýÈ §¸ûÅ¢¸û «ùÅô¦À¡ØÐ ÅóÐ ¦¸¡ñξ¡ý þÕ츢ýÈÉ. ±ýÉ¡ø ÓÊó¾¾üÌ ÁÚ¦Á¡Æ¢ì¸¢§Èý.

¬í¸¢Äò¾¢ø heat, hotness, chill, cold, warm, mild hot, very hot, boil, temperature, caloric, thermal ±Éô ÀÄÅ¢¾Á¡öî ¦º¡øÖ¸¢§È¡õ. þ§¾ ¦º¡ü¸¨Çò ¾Á¢Æ¢ø ¦º¡øÖõ §À¡Ð ¦ÅôÀõ, ÌÇ¢÷ ±ýÚ ´ýÈ¢ÃñÎ ¦º¡ü¸¨Ç ÁðΧÁ ¨ÅòÐô ÒÆí¸¢ì ¦¸¡ñÎ ÁüÈÅü¨È ¯ÕÅ¡ì¸ «¨¼î (adjective) ¦º¡ü¸¨Çî §º÷òÐ ¦À¡ÐÅ¡¸ ²§¾¡ ´ô§ÀüÈ¢ì ¦¸¡ñÊÕ츢§È¡õ. þó¾ì ¸¡Äò ¾Á¢ú þ¨ÇÂâý º¢ì¸§Ä «Å÷¸Ù¨¼Â ¾Á¢úî ¦º¡ü¸û ¦¾¡Ì¾¢ ̨ÈóÐ §À¡ÉÐ ¾¡ý. ¸¡ÄÁ¡üÈò¾¡ø, ¾Á¢ú¦Á¡Æ¢ «È¢× ¿õÁ¢ø ÀÄÕìÌõ ̨ÈóÐ §À¡ÉÐ. ¿Á츢ÕìÌõ §À¡ì¸¢ø ±øÄ¡ þ¼òÐõ ¬í¸¢Ä§Á §Àº¢ Å¡ú쨸¨Â ¿¼ò¾¢ì ¦¸¡ñÊÕ츢§È¡õ. ¾Á¢ú «È¢¨Å ÅÇ÷òÐì ¦¸¡ûÇ ÓÂüº¢ ¦ºö¡¾ ¿¢¨Ä¢ø, ¿ÁìÌ 2000, 3000 ¾Á¢úî ¦º¡ü¸û ÁðΧÁ ¦¾Ã¢óÐ þÕó¾¡ø, ¿õ¨Á «È¢Â¡Á§Ä ¾Á¢§Æ¡Î ¬í¸¢Äõ ¸Äô§À¡õ. «ôÒÈõ ̨Ȩ ¿õÁ¢¼õ ¨ÅòÐì ¦¸¡ñÎ "¾Á¢Æ¢ø «¨¾î ¦º¡øÄ ÓÊ¡Ð, þ¨¾î ¦º¡øÄ ÓÊ¡Ð" ±ýÚ ¸¨¾ô§À¡õ. ¿¡ý þý¨È þ¨Ç»¨Ã §ÅñÊì §¸ðÎì ¦¸¡ûÙÅÐ ´ý§È ´ýÚ¾¡ý. "¿¢¨ÈÂò ¾Á¢ú ÀÊÔí¸û; ¯í¸Ù¨¼Â ¾Á¢úî ¦º¡ø ¦¾¡Ì¾¢¨Âì ÜðÊì ¦¸¡ûÙí¸û."

§Á§Ä ÜȢ ¬í¸¢Äî ¦º¡ü¸Ç¢ý þ¨½Â¡É ¾Á¢úî ¦º¡ü¸¨Ç ÒÄÉò¨¾ Å¢ÇìÌõ §À¡§¾ ÜÈ ÓÂÖ¸¢§Èý. þÐ â¾¢ÂÄ¢ý «ÊôÀ¨¼ô À¡¼Á¡¸ò ¦¾Ã¢Å¾¡ö ¯½÷ó¾¡ø ±ý¨Éô ¦À¡ÚòÐì ¦¸¡ûÙí¸û.

heat ±ýÀ¨¾ þó¾ì ¸¡Äô â¾¢Âø (physics) ´Õ ¦ÀÕ¨½ô (=Òὡ, primitive) ¦À¡ÕÇ¡¸§Å ±ÎòÐì ¦¸¡ûÙ¸¢ÈÐ. ÝÎ ±ýÈ ¦º¡øÖõ ܼ «§¾ ¦ÀÕ¨½ô ¦À¡Õ¨Çò ¾¡ý ¾Á¢Æ¢ø ¸¡ðθ¢ÈÐ. ݧ¼üÈø = to heat. ݼ¡¸ þÕó¾Ð ±ýÛõ §À¡Ð ÝÎ ±ýÈ ¦º¡ø hotness ±ýÈ þý¦É¡Õ ¦ÀÕ¨½¨Âì ÌÈ¢ôÀ¨¾ ¯½ÃÄ¡õ. hotness ±ýÀÐõ temperature ±ýÀÐõ ´ýÈ¢ü¦¸¡ýÚ ºüÚ §ÅȡɨÅ. ¿õÁ¢ø ÀÄ÷ hotness ±ýÀ¨¾ò ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ¡Á§Ä§Â temperature ±ýÀ¾üÌò ¾¡Å¢Å¢Î¸¢§È¡õ. ±ñ½¡ø ¦º¡øÄ¡Áø temperature ±ýÀ¨¾ì ÌÈ¢ì¸ÓÊ¡Ð. ¬É¡ø Ýθ¨Çì ÌÈ¢ì¸ ¦ÅÚõ ¦º¡ü¸û §À¡Ðõ. ÝÎ ±ýÀÐ ¯½ÃôÀÎÅÐ. «Ð ¦Åù§ÅÚ ¾¨¸ (=¾Ì¾¢=quality)¸¨Çì ÌÈ¢ôÀ¢Î¸¢ÈÐ. temperature ±ýÀÐ ±ñϾ¢ (=quantity) ¡¸ì ÌÈ¢ôÀÐ.

Á¡ó¾ Å¡úÅ¢ø ¿¡õ ¦Åù§ÅÚ Ýθ¨Çô ÀðÎ «È¢¸¢§È¡õ. ¯¨ÈóÐ (¯¨È¾ø = to freeze) ¸¢¼ìÌõ ÀÉ¢ôÒûÇ¢ìÌõ ¸£ú º¢øÄ¢ðÎì (chill) ¸¢¼ôÀÐ ´ÕŨ¸î ÝÎ; «ôÒÈõ «¾ü̧Áø ÌÇ¢÷óÐ (cold) ¸¢¼ôÀÐ þý¦É¡Õ ÝÎ; þýÛõ ¦¸¡ïºõ §Á§Ä Åó¾¡ø ¦ÅÐôÀ¡É (warm) ´Õ ÝÎ; þýÛõ §Á§Ä §À¡É¡ø þÇïÝÎ (mild hot); «¾üÌõ §Á§Ä ¸ÎïÝÎ (very hot); þýÛõ §Àþ¢¸Á¡ö ¦¸¡¾¢ìÌõ (boiling) ÝÎ. þôÀÊ ´ù¦Å¡Õ Ýð¨¼Ôõ ¦Åù§ÅÚ ¦º¡ü¸Ç¢ø ¦º¡øÄ¢ ¿õ§Á¡Î þÕôÀÅÕìÌ ¯½÷ò¾ô À¡÷츢§È¡õ. ¬É¡ø þó¾î ¦º¡ü¸û ´ýÈ¢ü¦¸¡ýÚ ¯ÈúšɨŠ(relative). ¦À¡ÐÅ¡¸, ´ù¦Å¡Õ Á¡ó¾Ûõ þó¾î ÝðÎì¸¨Ç ¾ý §Áɢ¢ø ¦Åù§ÅÚ Ó¨È¢ø ¾¡ý ¯½Ã ÓÊÔõ. ´ÕÅ÷ ¯½÷ó¾Ð §À¡ø þý¦É¡ÕÅ÷ «ôÀʧ ¯½Ã ÓÊ¡Ð. ±ÉìÌ ÌǢḠþÕôÀÐ ¯í¸ÙìÌ ¦ÅÐôÀ¡¸ þÕì¸Ä¡õ. ¯í¸ÙìÌ ¦ÅÐôÀ¡ö þÕôÀÐ þý¦É¡ÕÅÕìÌ þÇïݼ¡¸ þÕì¸Ä¡õ. ±É§Å þо¡ý þó¾î ÝÎ ±ýÚ ¯Ú¾¢ôÀ¡§¼¡Î ¡áÖõ ¦º¡øÄ ÓÊž¢ø¨Ä. þý¦É¡ÕÅÕìÌò ¦¾Ç¢Å¡¸ô Òâ¨Åì¸ ÓÊž¢ø¨Ä. ¦Á¡ò¾ò¾¢ø ¦ÅÚï ¦º¡ü¸Ç¡ø ÝðÊý «Ç¨Å ¯½÷òÐÅÐ ±ýÀÐ ¿ÁìÌ þÂÄ¡¾Ð ¬¸¢ÈÐ. Á¡È¡¸ ±ø§Ä¡Õõ ´ôÒì ¦¸¡ûÇì ÜÊ ´§Ã ´Õ Ý𨼠«ÊôÀ¨¼Â¡¸ ¨ÅòÐ «¨¾ ´Õ ±ñ§½¡Î ¦À¡Õò¾¢¨ÅòÐ À¢ýÉ¡ø ÁüÈ ´ù¦Å¡Õ Ýð¨¼Ôõ ´ù¦Å¡Õ ¯Ã¢Âø ±ñ§½¡Î (real number) ¯Èúò¾¢ì ¸¡ðÊÉ¡ø þó¾î Ýθ¨Ç ±ñ¸Ç¡§Ä§Â ¯½Ã ¨Åì¸ ÓÊÔõ ±ýÚ ¿õÓ¨¼Â Àð¼È¢Å¡ø «È¢óÐ ¦¸¡ûÙ¸¢§È¡õ. «ôÀÊ «¨Á¸¢ýÈ ±ñ¸¨Çò¾¡ý ¿¡õ ¦Åõ¨Á (temperature) ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

Ýθû ±ýÈ ¦¸¡ò¾¢ø (set) þÕìÌõ ´ù¦Å¡Õ ÝðÊüÌõ ´Õ ¯Ã¢Âø ±ñ¨½ ¦À¡Õò¾¢ì ¸¡ðÎõ ´Õ Ó¸ôÒò (map) ¾¡ý ¦Åõ¨Á (temperature) ±ÉôÀθ¢ÈÐ. «ÊôÀ¨¼ ¦Åõ¨Á ±ýÀÐ ÀÉ¢ôÒûǢ¡¸§Å¡ (ice point) ¦¸¡¾¢ô ÒûǢ¡¸§Å¡ (boiling point) þÕì¸Ä¡õ. þó¾ ¦Åõ¨Á Ó¸ôÒ (temperature map) ±ýÀÐ ´§Ã ´Õ Ó¸ôÒ ±ýÈ¢ø¨Ä. áüÚì ¸½ì¸¡É Ó¸ôÒì¸¨Ç ¿¡õ ¯ÕÅ¡ì¸ ÓÊÔõ. ´ù¦Å¡Õ Ó¸ôÒõ ´Õ «Çק¸¡¨Ä ¯ÕÅ¡ì̸¢ÈÐ. ¦ºñʸ¢§ÃÎ «Ç× §¸¡ø ±ýÀÐ ´Õ Å¢¾ Ó¸ôÒ. þ¾¢ø ÀÉ¢ôÒûÇ¢ ±ýÀÐ ÍÆ¢ (zero) ±ýÈ ±ñ½¡ø ÌÈ¢ì¸ô ÀÎõ. Å¡Ãý·¸£ð ±ýÈ «Çק¸¡ø þý¦É¡Õ Ó¸ôÒ. þ¾¢ø ÀÉ¢ôÒûÇ¢ 32 ±Éì ÌÈ¢ì¸ô ÀÎõ. ¦¸øÅ¢ý Ó¸ôÒ ±ýÀÐ þýÛõ ´Õ «Çק¸¡ø. þ¾¢ø ÀÉ¢ôÒûÇ¢ 273.16 ±ýÚ ÌÈ¢ì¸ôÀÎõ.

´Õ ¦À¡Õ¨Çî ݧ¼üÚõ §À¡Ð ¿¡õ ¦¸¡ÎôÀÐ ¦ÅôÀõ (caloric). ¦ÅôÀõ ±ýÀÐ ¬üÈø (energy) Ũ¸¸Ç¢ø ´Õ Ũ¸. ¦ÅôÀõ ±ýÀÐ ¸ÉÄ¢ (calory) ±ýÈ «Ä¸¡ø «Çì¸ô Àθ¢ÈÐ. ´Õ ÅÇ¢Áõ (gas) «øÄÐ ¿£÷Áò¨¾î (liquid) ÝÎÀÎòÐõ §À¡Ð «Ð Ţ⸢ÈÐ (expand); ܼ§Å «¾ý ¦Åõ¨Á(temperature)Ôõ Üθ¢ÈÐ. ÅÇ¢Áõ «øÄÐ ¿£÷Áò¨¾ô ¦À¡ÐÅ¡¸ô À¡öÁõ «øÄРŢÇÅõ (fluid) ±ýÚ ¦º¡ø֧šõ. Ţâ Ţâ ´Õ Å¢ÇÅõ ¦ÅÇ¢(space)¨Â ¿¢¨È츢ÈÐ. ¦ÅÇ¢¨Â ¿¢¨Èò¾¨Äò¾¡ý ¦ÅûÙ¸¢ÈÐ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. ¦ÅûÙ¸¢ýÈ «¸üº¢ìÌ ¦ÅûÇõ (volume) ±ýÚ ¦ÀÂ÷. ¦ÅûÇô ¦ÀÕìÌ (volumetric increase) ¸¡Äò ¦¾¡¼÷¡¸ ²üÀð¼¡ø «¨¾ô À¡öîºø «øÄРŢÇ× (flow) ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

þÐŨà ¦º¡ýÉ «ò¾¨É Å¢¨É¸¨ÇÔõ ¦ÅÚ§Á ¦ÅôÀÅ¢¨É, ÝðÎÅ¢¨É ±ýÚ ¦º¡øÄ¡Áø ¦¾ÚÁÅ¢¨É ±ýÚ ¦º¡øÖÅÐ ¦À¡Ð¨Áô ¦À¡Õ¨ÇÔõ, Å¢¾ôÒî ¦º¡ü¸¨ÇÔõ ¾É¢ò¾É¢§Â ¨ÅòÐô ÒÆíÌž¡ø ¾¡ý. ¦¾ÚÁõ ¾Á¢§Æ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Sunday, July 24, 2005

தேற்றங்கள் (stellingen)

நெதர்லாந்துப் பல்கலைக் கழகங்களில் குறிப்பாக டெல்வ்ட் பல்கலைக் கழகத்தில் (Delft University of Technology) ஒரு விதப்பான பழக்கம் உண்டு. முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வாளர் ஆய்வேட்டில் தன் துறை பற்றிச் செய்த நீண்ட ஆய்வைப் பதிவு செய்வது போக, மற்ற புலனங்களிலும் (அது தன் சொந்தத் துறை போக, வேறு துறையாகக் கூட இருக்கலாம்) தனக்கென்ற வகையில் ஆழ்ந்த, அதோடு உறுதிபட்ட, கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார். தவிர, அக் கருத்துக்களை தனக்குள்ளேயே வைத்திராமல் எல்லோரும் அறியும்படி தன் ஆய்வேட்டின் கடைசிப் பகுதியில் குறித்து, பின்னால் திறந்த ஆன்றோர் அவையில் யாரேனும் தேர்வாளரோ, மற்றவரோ, கேள்வி கேட்டால் அவற்றிற்குப் பொருத்தமான விடையைச் சொல்லித் தான் கொண்ட கருத்தை நிறுவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இப்படி அடிப்படை ஆய்விற்கு மேல், ஆய்வாளர் பதியும் மற்ற கருத்துக்களைத் தேற்றங்கள் என்ற பகுதியாக (டச்சு மொழியில் stellingen, ஆங்கிலத்தில் stand points என்று சொல்லலாம்) ஆய்வேட்டோ டு இணைத்தும் தருவார்.

பொ.உ.2005 இக்கு முன்னால், யூரியா நுட்பியல் (Urea technology) பற்றித் தெறுமத்துனவியல் (thermodynamics) வழி ஆய்ந்துரைத்த என் வேதிப்பொறியியல் ஆய்வேட்டிலும் இது போன்று 14 தேற்றங்களைப் பதிவு செய்திருந்தேன். தற்செயலாக இன்று பழையதைப் பார்த்த போது அகப்பட்டது இது. இத் தேற்றங்களில் இருந்து யூரியா நுட்பியல் பற்றிய 4 தேற்றங்கள் தவிர்த்து மற்றவைகளை இங்கு கொடுத்துள்ளேன். உங்கள் வாசிப்பிற்கு

அன்புடன்,
இராம.கி.

Stellingen:

5. A widespread category mistake in chemistry is the confusion of thermodymamics with statistical mechanics, of chemical kinetics with collison theory, and taking the concept of chemical substance as being on equal footing with molecules.
- H.Primas, "Chemistry and Complementarity" Chemia, 1982, Vol 36, No 7/8. p.298

6. Just as the university has changed from a center of learning to a social experience for the massese, so research, which began as vocation and became a profession, has sunk to a trade if not a racket.
- C.Truedell in his sixth lecture titled "Method and Taste in Natural Philosophy" Six lectures, Springer Verlag.

7. Having identified the Sumerian civilization, the Egyptian civilization and the Indus civilization, the archaeology of the Africa- Middle East Asia - Indian Subcontinent region has come to a plateau by being unable to delve beyond 3500 BC. To progress further, one has to accept the hypothesis of the lost Lemurian Sub-continent and turn to deep water archaeology. All the factual evidences point to a now submerged region extending from South India to Madagascar.

8. Considering the north Indian languages (together with Sanskrit) and the European languages as two branches of a single Indo-European tree is only a first step. Most probably, the Dravidian languages form an earlier branch of the same tree.

9. Any westerner who likes to understand India's problems is better advised to think of Europe as if it were a single country, having been colonized for 400 years and became free only 40 years ago. If major economic developments had taken place only in these 40 years, that too in a regionally uneven manner, is it not natural that the mutinational question in a "single republic" reality gets accentuated? This aspect is the core of present day India's problems including Punjab. (Incidentally the problem in Srilanka and Pakistan are also due to the mutinational syndrome.)

10. Unless plant physiologists and geneticists work intensively on cassava, sorghum and millet, the green revolution in Africa will remain an empty phrase.

11. As long as the structural imbalances in the north-south interactions are not minimised, there will always be butter mountains and milk lakes of Europe together with the starvation of the Sahel republics.

12. Almost all countries practice some form of human discrimination in the name of colour, race, language, religion and caste. The more developed the country, the more subtle and hypocritical this discrimination becomes.

13. The scenario of the nuclear winter (or, is it nuclear autumn?) will propel the East-West negotiators into realizing the absudity of nuclear deterrence; the mistake of Hiroshima and Nagasaki will not be repeated.

14. The climate of a country and the hotness of its cuisines bear direct relationship with one another, with very few (happy) exceptions.

மேலே கூறியவற்றுள் 7வது தேற்றத்தில் இப்பொழுது சற்று வேறுபடுவேன். அதை விவரித்தால் பெருகும். எனவே தவிர்க்கிறேன். மற்ற தேற்றங்களில் இன்னும் உறுதியாக இருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

§¾üÈí¸û (stellingen)

¦¿¾÷Ä¡óÐô Àø¸¨Äì ¸Æ¸í¸Ç¢ø ÌÈ¢ôÀ¡¸ ¦¼øùð Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ø (Delft University of Technology) ´Õ Å¢¾ôÀ¡É ÀÆì¸õ ´ýÚ ¯ñÎ. Ó¨ÉÅ÷ Àð¼ò¾¢ü¸¡É µ÷ ¬öÅ¡Ç÷ ¾ýÛ¨¼Â ¬ö§ÅðÊø ¾ý Ð¨È ÀüÈ¢î ¦ºö¾ ¿£ñ¼ ¬ö¨Åô À¾¢× ¦ºöÅÐ §À¡¸, ÁüÈ ÒÄÉí¸Ç¢Öõ («Ð ¾ýÛ¨¼Â ¦º¡ó¾ò Ð¨È §À¡¸, §ÅÚ Ð¨È¡¸ì ܼ þÕì¸Ä¡õ) ¾É즸ýÈ Å¨¸Â¢ø ¬úó¾, «§¾¡Î ¯Ú¾¢Àð¼ ¸ÕòÐ츨Çì ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷ôÀ¡÷ôÀ¡÷¸û. ¾Å¢Ã, «ó¾ì ¸ÕòÐì¸¨Ç ¾ÉìÌû§Ç§Â ¨Åò¾¢Ã¡Áø ±ø§Ä¡Õõ «È¢Ôõ ÀÊ ¾ýÛ¨¼Â ¬ö§ÅðÊý ¸¨¼º¢ô À̾¢Â¢ø ÌÈ¢òÐ, À¢ýÉ¡ø ¾¢Èó¾ ¬ý§È¡÷ «¨Å¢ø ¡§ÃÛõ §¾÷šǧá, ÁüÈŧá, §¸ûÅ¢¸û §¸ð¼¡ø «ÅüÈ¢üÌô ¦À¡Õò¾Á¡É Å¢¨¼¨Âî ¦º¡øÄ¢ò ¾¡ý ¦¸¡ñ¼ ¸Õò¨¾ ¿¢ÚÅ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þôÀÊ «ÊôÀ¨¼ ¬öÅ¢üÌ §Áø, ¬öÅ¡Ç÷ À¾¢Ôõ ÁüÈ ¸ÕòÐ츨Çò §¾üÈí¸û ±ýÈ À̾¢Â¡¸ (¼îÍ ¦Á¡Æ¢Â¢ø stellingen, ¬í¸¢Äò¾¢ø stand points ±ýÚ ¦º¡øÄÄ¡õ) ¬ö§Å𧼡Πþ¨½òÐõ ¾ÕÅ¡÷¸û.

17 ¬ñθÙìÌ ÓýÉ¡ø, äâ¡ ÑðÀ¢Âø (Urea technology) ÀüÈ¢ò ¦¾ÚÁò¾¢ÉÅ¢Âø (thermodynamics) ÅÆ¢ ¬öóÐ ¯¨Ãò¾ ±ýÛ¨¼Â §Å¾¢ô¦À¡È¢Â¢Âø ¬ö§ÅðÊÖõ þÐ §À¡ýÚ 14 §¾üÈí¸¨Çô À¾¢× ¦ºö¾¢Õó§¾ý. ¾ü¦ºÂÄ¡¸ þýÚ À¨Æ¨¾ô À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾ §À¡Ð «¸ôÀð¼Ð þÐ. þó¾ò §¾üÈí¸Ç¢ø þÕóÐ äâ¡ ÑðÀ¢Âø ÀüȢ 4 §¾üÈí¸û ¾Å¢÷òÐ ÁüȨŸ¨Ç þíÌ ¦¸¡ÎòÐû§Çý. ¯í¸û Å¡º¢ôÀ¢üÌ

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Stellingen:

5. A widespread category mistake in chemistry is the confusion of thermodymamics with statistical mechanics, of chemical kinetics with collison theory, and taking the concept of chemical substance as being on equal footing with molecules.
- H.Primas, "Chemistry and Complementarity" Chemia, 1982, Vol 36, No 7/8. p.298

6. Just as the university has changed from a center of learning to a social experience for the massese, so research, which began as vocation and became a profession, has sunk to a trade if not a racket.
- C.Truedell in his sixth lecture titled "Method and Taste in Natural Philosophy" Six lectures, Springer Verlag.

7. Having identified the Sumerian civilization, the Egyptian civilization and the Indus civilization, the archaeology of the Africa- Middle East Asia - Indian Subcontinent region has come to a plateau by being unable to delve beyond 3500 BC. To progress further, one has to accept the hypothesis of the lost Lemurian Sub-continent and turn to deep water archaeology. All the factual evidences point to a now submerged region extending from South India to Madagascar.

8. Considering the north Indian languages (together with Sanskrit) and the European languages as two branches of a single Indo-European tree is only a first step. Most probably, the Dravidian languages form an earlier branch of the same tree.

9. Any westerner who likes to understand India's problems is better advised to think of Europe as if it were a single country, having been colonized for 400 years and became free only 40 years ago. If major economic developments had taken place only in these 40 years, that too in a regionally uneven manner, is it not natural that the mutinational question in a "single republic" reality gets accentuated? This aspect is the core of present day India's problems including Punjab. (Incidentally the problem in Srilanka and Pakistan are also due to the mutinational syndrome.)

10. Unless plant physiologists and geneticists work intensively on cassava, sorghum and millet, the green revolution in Africa will remain an empty phrase.

11. As long as the structural imbalances in the north-south interactions are not minimised, there will always be butter mountains and milk lakes of Europe together with the starvation of the Sahel republics.

12. Almost all countries practice some form of human discrimination in the name of colour, race, language, religion and caste. The more developed the country, the more subtle and hypocritical this discrimination becomes.

13. The scenario of the nuclear winter (or, is it nuclear autumn?) will propel the East-West negotiators into realizing the absudity of nuclear deterrence; the mistake of Hiroshima and Nagasaki will not be repeated.

14. The climate of a country and the hotness of its cuisines bear direct relationship with one another, with very few (happy) exceptions.

§Á§Ä ÜÈ¢ÂÅüÚû 7ÅÐ §¾üÈò¾¢ø þô¦À¡ØÐ ºüÚ §ÅÚÀΧÅý. «¨¾ Å¢Åâò¾¡ø ¦ÀÕÌõ. ±É§Å ¾Å¢÷츢§Èý. ÁüÈ §¾üÈí¸Ç¢ø þýÛõ ¯Ú¾¢Â¡¸ þÕ츢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Thursday, July 14, 2005

துயில்

அமீரகத்தில் இருக்கும் நண்பர் சாபு முன்பொரு சமயம் நித்திரை, உறக்கம், தூக்கம் போன்றவை பற்றிக் கேட்டிருந்தார். மடற்குழுவில் எழுதினேன். பின்னால் அதை வாசன் கூட மன்றமையத்தில் புறவரித்திருந்தார் (forward). இன்று மடிக் கணியைத் துழாவிக் கொண்டிருந்த போது பழையது கிடைத்தது. சிலருக்குப் பயன்படும் என்று மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன். இனி உங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

அன்புள்ள நண்பர் சாபுவிற்கு

நீங்கள் எழுதியது போக இன்னும் சில சொற்கள் இருக்கின்றன. துயில், பள்ளி, ,துஞ்சல், அனந்தல், கிடை, படை, சயனம், கனவு, கண்படை, கண்வளரல், கண்ணடைத்தல், கண்ணயர்தல், கண்படுதல், கண்முகிழ்த்தல் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். உறங்குவது என்பதும், இருட்டு, கிடத்தல், படுத்தல், அயர்வு, சோர்வு, வாட்டம், தங்குதல், அடைதல், அணைதல், தாமதம், சோம்பல், சாவு போன்ற கருத்துக்களும் ஒன்றோடு ஒன்று இழைந்தே தமிழில் பயிலுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) பெரிதாகச் செய்தால் பள்ளம். சிறிதாகச் செய்தால் பள்ளி(ல்). நாளாவட்டத்தில் இந்த வேறுபாடு குறைந்து போய், ஏன் மாறிக் கூடப் போய், குகைக்கு மற்றொரு சொல்லாகவே 'பள்ளி' என்பது ஆயிற்று. நாகரிகம், மதங்கள் வளர்ந்தபிறகும் பள்ளிகள் மனிதனின் வாழ்வில் இருந்தே வந்தன. குராப்பள்ளி, சிராப் பள்ளி இவைகள் எல்லாமே குகைகள் இருந்ததையும், அதில் ஒரு சாரார் வசித்து வந்ததையும் தெரிவிக்கின்றன. இதே பள்ளி, பின் சமயக் காலத்தில் சமணப் பள்ளி, புத்தப்பள்ளி, பள்ளிவாசல் எனப் புதிய மதத்தார் கோயில்களுக்கும் பயன்பட்டது. இந்தச் சமயப் பள்ளிகளில் கல்வியும் கற்றுக் கொடுக்கப் பட்ட போது, கல்விச் சாலையும் பள்ளியாயிற்று.

2. காலையெல்லாம் வேட்டையாடி தன் உண்பசி தீர்த்து அயர்ந்து, சோர்வுற்று மாலையில் திரும்பும் ஆதிகால மனிதனுக்குப் பொழுது சாய்ந்தால் போக்கிடம் என்பது இருட்டும், குவையும், கொடியும் தானே! என்னதான் தீயின் அண்மையில் இருந்து விழிப்பைக் கூட்டிக் கொண்டாலும், சோர்வும், அயர்ச்சியும் கண்ணைச் சொக்கிக் கொண்டுவரும் தானே! பள்ளப் பட்ட குகையில் கண்ணை மூடிக் கொண்டு கிடக்கும் போது (கொடிய, ஆனால் சிறிய, பாம்புகள் போன்ற ஊருயிரிகள் தன்னைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக கல்லை வெட்டிச் செய்து கொண்ட படுக்கைகளில் படுக்கும் பழக்கம் வந்தது. இந்தப் படுக்கைகளும் பள்ளியென்றே அழைக்கப் பட்டன. பள்ளில் இருந்து தோன்றியதே படுக்கை. அதலம் என்றாலும் பள்ளம் தான் (பா அதலம் = பாதாலம் (=பாதாளம்)). பள்ளி எனும் சொல் அதன் நீட்சியில் தூக்கத்தையும் குறித்தது.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அடைந்தான்;
கன இருள் அகன்றது; காலையம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்;
வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடும் முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்;
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!

பள்>படு>படுகு>படுக்கு>படுக்கை. (பள்ளப்பட்ட இடத்தில் தான் படுத்தனர் போலும்.)

3. நிதலம் என்பது கீழ் உலகங்களில் ஒன்று. (இன்றைய நெதர்லாந்து இதே பொருளில் தான். நெதர் என்றால் அந்த மொழியிலும் பள்ளம், தாழ்ந்தது என்றே பொருள்.) நித்திக் கிடப்பது நித்தை. நித்தை வடமொழியில் நித்திரை ஆகும்.

4. இதே போல கீழே கிடந்தது கிடை. (என்ன ஆச்சு, ஒரே கிடையா இருக்கா? மருத்துவர் கிட்டே போகலாமா?)

5. சாய்ந்து இருந்தது சயனம். (பெருமாள் திருவரங்கத்திலே கிடந்த திருக்கோலம். தெற்கே பார்த்து சயனம்)

6. படுப்பது படை என்று அறிவது மிக எளிது..

7. அதே போல ஒடுங்கிக் கிடப்பது, உறங்கிக் கிடப்பது ஆகும்.

8. கொடிகள் மற்றும் மரக்கிளைகளில் தொங்கித் தூங்கியது தூக்கம் (பிள்ளை தாலில் தொங்கும் போது தூங்கத் தானே செய்கிறது.)

9. இனி அனந்தல் கொஞ்சம் சரவலானது. கண்ணை மூடினால் இருட்டு எனும் போது இருட்டே உறக்கத்தின் ஒரு கூராய்ப் போனது.

அல் = இரவு, இருள்.
அந்,அன் = இன்மை
அந்தம் = உள், மறைவு, அந்தப்புரம் - உள்ளே இருக்கும் புரம் அல்லது கட்டு, மறைவான கட்டு. நம்பூதிரிகள் வீட்டிற்குள்ளே மறைவாக அந்தப்புரங்களில் இருக்கும் கணம் அந்த கணம்>அந்தர்ஜனம் என்று ஆகும்.
அத்தமித்தல் - மறைதல், படுதல், உட்புகுதல், அற்றுப்போதல், இல்லாமற் போதல்
அன்+அந்தல் = அனந்தல், இதுவும் உறக்கம் தான். திருவனந்த புரத்தில் அறிதுயில் கொண்டு படுத்துக் கிடக்கும் அனந்தனைத் தெரியாதார் யார்? இந்த அறிதுயில் ஒரு நுண்மையான சொல். அவன் முற்று முழுதாக அறிந்து கொண்டே துயில்வதாக ஒரு பாவனை.

10. கனவு என்பது இருட்டு என்னும் பொருளில் கல் ஏனும் வேர்ச்சொல்லில் மலர்ந்தது. நாளாவட்டத்தில் dream என்ற இன்றையப் பொருளிற்கு நீண்டிருக்கிறது.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற்கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்!

11. கண் வளரல் என்பது சுவையான சொல்லாட்சி. ஒரு அருமையான சப்பானிய ஐக்கூ பல ஆண்டுகள் முன்படித்ததேன். அடிகள் நினைவில் இல்லை. பொருள் ஞாபகத்தில் இருக்கிறது. அதில் தலைவன் கல் வளருவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு முரண் வரும். அப்படிப்பட்ட ஓர் உணர்வில் வருவது தான், கண் வளரல். (கண் எப்படித் தூக்கத்தின் போது வளரும்? பிள்ளையை மடியில் வைத்து ஆராரோப் போட்டால் வளராமல் என்ன செய்யும்?) இது பெரும் பாலும் குழந்தைகளைத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைப்பதற்குப் பயன்படும். ஒரு நாட்டுப்புறப் பாடல்:

கரும்புருகத் தேனுருகக்
கண்டார் மனமுருக,
எலும்புருகப் பெற்றகண்ணே!
இலக்கியமே! கண்வளராய்!

12. கண்ணடைத்தல் என்பது சேர்ந்துபோய் எழுகவொண்ணாதபடி கண் செருகிக் கொண்டு வருவது.

13. கண்ணயர்தல் கிட்டத் தட்ட அதே பொருளில் தான்.

14. கண்படுதல் என்பது திட்டிப் பொருளாக மட்டுமல்லாது தூங்குவதற்கும் ஓரோவழி பயன்படுகிறது. உடம்பு படுவது போலக் கண்ணும் படுகிறது, பதிகிறது.

15. கண்படை, கண்படுதலின் தொடர்ச்சியே.

16. கண்முகிழ்த்தல் என்பது 'தோன்றுவது' என்ற பொருளில் அல்ல. 'மூடுவது' என்பது அமங்கலம் என்று கருதி எதிர்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். எங்கள் பக்கம் வீட்டிற்குள் சாமி அறையில் உள்ள விளக்கை 'அணை'யென்று சொல்ல மாட்டர்கள். அதை இடக்கர் அடக்கலாக, 'விளக்கை நல்லா வை' என்று சொல்லுவார்கள். (இன்னொரு வகையில் பார்த்தால் நல்லுதல் என்ற வினை கருத்தல் என்ற பொருளும் கொள்ளும். நல்லா வை என்னும் போது கருக்க வை என்ற பொருள் கொள்ளும்.) அது போலத்தான் இந்த கண் முகிழ்த்தலும்.

17. எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இந்தத் துயில், துஞ்சல் மட்டும் தான் கொஞ்சம் சரவல். இரண்டிற்குமே வேர் துய் என்பது தான். துயக்கு, துயங்குதல், துயரம் எனப் பல சொற்கள் சோர்ந்து போவது என்ற பொருளிலேயே வழக்கில் உள்ளன. அதே பொழுது துயல்தல் என்ற சொல் அசைதல் என்ற பொருளில் வருவதைப் பார்க்கும் போது நமக்குக் கொஞ்சம் வியப்பு வருகிறது.

துயல்= அசைதல்
துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை.

இது எப்படி என்றால், மண்= செறிந்த நிலை, மணல் என்பது மண் அல்லாதது= செறியாதது என்பதைப் போல. இங்கே ஒரு உயிர் எழுத்து மாற்றத்தில் மாறுபட்ட பொருள்கள் கிடைக்கின்றன.

18. துஞ்சல் என்பது துயிலின் நீட்டமே.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

Тø

«Á£Ã¸ò¾¢ø þÕìÌõ ¿ñÀ÷ º¡Ò Óý¦À¡Õ ºÁÂõ ¿¢ò¾¢¨Ã, ¯Èì¸õ, àì¸õ §À¡ýȨŠÀüÈ¢ì §¸ðÊÕó¾¡÷. Á¼üÌØÅ¢ø ±Ø¾¢§Éý. À¢ýÉ¡ø «¨¾ Å¡ºý ܼ ÁýȨÁÂò¾¢ø ÒÈÅâò¾¢Õó¾¡÷ (forward). þýÚ ÁÊì ¸½¢¨Âò ÐÆ¡Å¢ì ¦¸¡ñÊÕó¾ §À¡Ð À¨ÆÂÐ ¸¢¨¼ò¾Ð. º¢ÄÕìÌô ÀÂýÀÎõ ±ýÚ Á£ñÎõ þí§¸ À¾¢× ¦ºö¸¢§Èý. þÉ¢ ¯í¸û Å¡º¢ôÀ¢üÌ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

«ýÒûÇ ¿ñÀ÷ º¡ÒÅ¢üÌ

¿£í¸û ±Ø¾¢ÂÐ §À¡¸ þýÛõ º¢Ä ¦º¡ü¸û þÕ츢ýÈÉ. Тø, ÀûÇ¢, ,Ðïºø, «Éó¾ø, ¸¢¨¼, À¨¼, ºÂÉõ, ¸É×, ¸ñÀ¨¼, ¸ñÅÇÃø, ¸ñ½¨¼ò¾ø, ¸ñ½Â÷¾ø, ¸ñÀξø, ¸ñÓ¸¢úò¾ø ±É þôÀÊî ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ. ¯ÈíÌÅÐ ±ýÀÐõ, þÕðÎ, ¸¢¼ò¾ø, ÀÎò¾ø, «Â÷×, §º¡÷×, Å¡ð¼õ, ¾í̾ø, «¨¼¾ø, «¨½¾ø, ¾¡Á¾õ, §º¡õÀø, º¡× §À¡ýÈ ¸ÕòÐì¸Ùõ ´ý§È¡Î ´ýÚ þ¨Æó§¾ ¾Á¢Æ¢ø À¢ָ¢ýÈÉ. ´ù¦Å¡ýÈ¡¸ô À¡÷ô§À¡õ.

1. ´Õ þ¼ò¨¾ô ÀûÙõ §À¡Ð (§¾¡ñÎõ §À¡Ð) ¦À⾡¸î ¦ºö¾¡ø ÀûÇõ. º¢È¢¾¡¸î ¦ºö¾¡ø ÀûÇ¢(ø). ¿¡Ç¡Åð¼ò¾¢ø þó¾ §ÅÚÀ¡Î ̨ÈóÐ §À¡ö, ²ý Á¡È¢ì ܼô §À¡ö, ̨¸ìÌ Áü¦È¡Õ ¦º¡øÄ¡¸§Å 'ÀûÇ¢' ±ýÀÐ ¬Â¢üÚ. ¿¡¸Ã¢¸õ, Á¾í¸û ÅÇ÷ó¾À¢ÈÌõ ÀûÇ¢¸û ÁÉ¢¾É¢ý Å¡úÅ¢ø þÕó§¾ Åó¾É. ÌáôÀûÇ¢, º¢Ã¡ô ÀûÇ¢ þ¨Å¸û ±øÄ¡§Á ̨¸¸û þÕ󾨾Ôõ, «¾¢ø ´Õ º¡Ã¡÷ ź¢òÐ Å󾨾Ôõ ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ. þ§¾ ÀûÇ¢, À¢ý ºÁÂì ¸¡Äò¾¢ø ºÁ½ô ÀûÇ¢, Òò¾ôÀûÇ¢, ÀûǢšºø ±Éô Ò¾¢Â Á¾ò¾¡÷ §¸¡Â¢ø¸ÙìÌõ ÀÂýÀð¼Ð. þó¾î ºÁÂô ÀûÇ¢¸Ç¢ø ¸øÅ¢Ôõ ¸üÚì ¦¸¡Îì¸ô Àð¼ §À¡Ð, ¸øÅ¢î º¡¨ÄÔõ ÀûǢ¡¢üÚ.

2. ¸¡¨Ä¦ÂøÄ¡õ §Åð¨¼Â¡Ê ¾ý ¯ñÀº¢ ¾£÷òÐ «Â÷óÐ, §º¡÷×üÚ Á¡¨Ä¢ø ¾¢ÕõÒõ ¬¾¢¸¡Ä ÁÉ¢¾ÛìÌô ¦À¡ØÐ º¡öó¾¡ø §À¡ì¸¢¼õ ±ýÀÐ þÕðÎõ, ̨ÅÔõ, ¦¸¡ÊÔõ ¾¡§É! ±ýɾ¡ý ¾£Â¢ý «ñ¨Á¢ø þÕóРŢƢô¨Àì ÜðÊì ¦¸¡ñ¼¡Öõ, §º¡÷×õ, «Â÷Ôõ ¸ñ¨½î ¦º¡ì¸¢ì ¦¸¡ñÎÅÕõ ¾¡§É! ÀûÇô Àð¼ ̨¸Â¢ø ¸ñ¨½ ãÊì ¦¸¡ñÎ ¸¢¼ìÌõ §À¡Ð (¦¸¡ÊÂ, ¬É¡ø º¢È¢Â, À¡õÒ¸û §À¡ýÈ °Õ¢â¸û ¾ý¨Éò ¾¡ì¸¢Å¢¼ì ܼ¡Ð ±ýÀ¾ü¸¡¸ ¸ø¨Ä ¦ÅðÊî ¦ºöÐ ¦¸¡ñ¼ ÀÎ쨸¸Ç¢ø ÀÎìÌõ ÀÆì¸õ Åó¾Ð. þó¾ô ÀÎ쨸¸Ùõ ÀûÇ¢¦Âý§È «¨Æì¸ô Àð¼É. ÀûÇ¢ø þÕóÐ §¾¡ýȢ§¾ ÀÎ쨸. «¾Äõ ±ýÈ¡Öõ ÀûÇõ ¾¡ý (À¡ «¾Äõ = À¡¾¡Äõ (=À¡¾¡Çõ)). ÀûÇ¢ ±Ûõ ¦º¡ø «¾ý ¿£ðº¢Â¢ø àì¸ò¨¾Ôõ ÌÈ¢ò¾Ð.

¸¾¢ÃÅý ̽¾¢¨ºî º¢¸Ãõ ÅóÐ «¨¼ó¾¡ý;
¸É þÕû «¸ýÈÐ; ¸¡¨ÄÂõ ¦À¡Ø¾¡ö
ÁРŢâóÐ ´Ø¸¢É Á¡ÁÄ÷ ±øÄ¡õ;
Å¡ÉÅ÷ «Ãº÷¸û ÅóÐÅóÐ ®ñÊ
±¾¢÷¾¢¨º ¿¢¨Èó¾É÷; þŦáÎõ ÒÌó¾
þÕõ ¸Ç¢üÚ ®ð¼Óõ À¢Ê¦Â¡Îõ ÓÃÍõ
«¾¢÷¾Ä¢ø «¨Ä¸¼ø §À¡ýÚÇÐ ±íÌõ;
«Ãí¸ò¾õÁ¡! ÀûÇ¢ ±Øó¾ÕÇ¡§Â!

Àû>ÀÎ>ÀÎÌ>ÀÎìÌ>ÀÎ쨸. (ÀûÇôÀð¼ þ¼ò¾¢ø ¾¡ý ÀÎò¾É÷ §À¡Öõ.)

3. ¿¢¾Äõ ±ýÀÐ ¸£ú ¯Ä¸í¸Ç¢ø ´ýÚ. (þý¨È ¦¿¾÷Ä¡óÐ þ§¾ ¦À¡ÕÇ¢ø ¾¡ý. ¦¿¾÷ ±ýÈ¡ø «ó¾ ¦Á¡Æ¢Â¢Öõ ÀûÇõ, ¾¡úó¾Ð ±ý§È ¦À¡Õû.) ¿¢ò¾¢ì ¸¢¼ôÀÐ ¿¢ò¨¾. ¿¢ò¨¾ ż¦Á¡Æ¢Â¢ø ¿¢ò¾¢¨Ã ¬Ìõ.

4. þ§¾ §À¡Ä ¸£§Æ ¸¢¼ó¾Ð ¸¢¨¼. (±ýÉ ¬îÍ, ´§Ã ¸¢¨¼Â¡ þÕ측? ÁÕòÐÅ÷ ¸¢ð§¼ §À¡¸Ä¡Á¡?)

5. º¡öóÐ þÕó¾Ð ºÂÉõ. (¦ÀÕÁ¡û ¾¢ÕÅÃí¸ò¾¢§Ä ¸¢¼ó¾ ¾¢Õ째¡Äõ. ¦¾ü§¸ À¡÷òÐ ºÂÉõ)

6. ÀÎôÀÐ À¨¼ ±ýÚ «È¢ÅÐ Á¢¸ ±Ç¢Ð..

7. «§¾ §À¡Ä ´Îí¸¢ì ¸¢¼ôÀÐ, ¯Èí¸¢ì ¸¢¼ôÀÐ ¬Ìõ.

8. ¦¸¡Ê¸û ÁüÚõ ÁÃ츢¨Ç¸Ç¢ø ¦¾¡í¸¢ò àí¸¢ÂÐ àì¸õ (À¢û¨Ç ¾¡Ä¢ø ¦¾¡íÌõ §À¡Ð àí¸ò ¾¡§É ¦ºö¸¢ÈÐ.)

9. þÉ¢ «Éó¾ø ¦¸¡ïºõ ºÃÅÄ¡ÉÐ. ¸ñ¨½ ãÊÉ¡ø þÕðÎ ±Ûõ §À¡Ð þÕ𧼠¯Èì¸ò¾¢ý ´Õ Üáöô §À¡ÉÐ.

«ø = þÃ×, þÕû.
«ó,«ý = þý¨Á
«ó¾õ = ¯û, Á¨È×, «ó¾ôÒÃõ - ¯û§Ç þÕìÌõ ÒÃõ «øÄÐ ¸ðÎ, Á¨ÈÅ¡É ¸ðÎ. ¿õ⾢â¸û Å£ðÊüÌû§Ç Á¨ÈÅ¡¸ «ó¾ôÒÃí¸Ç¢ø þÕìÌõ ¸½õ «ó¾ ¸½õ>«ó¾÷ƒÉõ ±ýÚ ¬Ìõ.
«ò¾Á¢ò¾ø - Á¨È¾ø, Àξø, ¯ðÒ̾ø, «üÚô§À¡¾ø, þøÄ¡Áü §À¡¾ø
«ý+«ó¾ø = «Éó¾ø, þÐ×õ ¯Èì¸õ ¾¡ý. ¾¢ÕÅÉó¾ ÒÃò¾¢ø «È¢Ð¢ø ¦¸¡ñÎ ÀÎòÐì ¸¢¼ìÌõ «Éó¾¨Éò ¦¾Ã¢Â¡¾¡÷ ¡÷? þó¾ «È¢Ð¢ø ´Õ Ññ¨ÁÂ¡É ¦º¡ø. «Åý ÓüÚ Óؾ¡¸ «È¢óÐ ¦¸¡ñ§¼ Тøž¡¸ ´Õ À¡Å¨É.

10. ¸É× ±ýÀÐ þÕðÎ ±ýÛõ ¦À¡ÕÇ¢ø ¸ø ²Ûõ §Å÷¡øÄ¢ø ÁÄ÷ó¾Ð. ¿¡Ç¡Åð¼ò¾¢ø dream ±ýÈ þý¨ÈÂô ¦À¡ÕÇ¢üÌ ¿£ñÊÕ츢ÈÐ.

Áò¾Çõ ¦¸¡ð¼, Åâºí¸õ ¿¢ýê¾,
ÓòШ¼ò ¾¡Á ¿¢¨Ã ¾¡úó¾ Àó¾ü¸£ú,
¨ÁòÐÉý ¿õÀ¢ ÁÐݾÉý ÅóÐ ±ý¨Éì
¨¸ò¾Äõ ÀüÈì ¸É¡ì ¸ñ§¼ý §¾¡Æ£ ¿¡ý!

11. ¸ñ ÅÇÃø ±ýÀРͨÅÂ¡É ¦º¡øÄ¡ðº¢. ´Õ «Õ¨ÁÂ¡É ºôÀ¡É¢Â ³ìÜ ÀÄ ¬ñθû ÓýÀÊò¾§¾ý. «Ê¸û ¿¢¨ÉÅ¢ø þø¨Ä. ¦À¡Õû »¡À¸ò¾¢ø þÕ츢ÈÐ. «¾¢ø ¾¨ÄÅý ¸ø ÅÇÕŨ¾ô À¡÷òÐì ¦¸¡ñÊÕôÀ¾¡¸ ´Õ ÓÃñ ÅÕõ. «ôÀÊôÀð¼ µ÷ ¯½÷Å¢ø ÅÕÅÐ ¾¡ý, ¸ñ ÅÇÃø. (¸ñ ±ôÀÊò àì¸ò¾¢ý §À¡Ð ÅÇÕõ? À¢û¨Ç¨Â ÁÊ¢ø ¨ÅòÐ ¬Ã¡§Ã¡ô §À¡ð¼¡ø ÅÇáÁø ±ýÉ ¦ºöÔõ?) þÐ ¦ÀÕõ À¡Öõ ÌÆ󨾸¨Çò ¦¾¡ðÊÄ¢ø §À¡ðÎò àí¸ ¨ÅôÀ¾üÌô ÀÂýÀÎõ. ´Õ ¿¡ðÎôÒÈô À¡¼ø:

¸ÕõÒÕ¸ò §¾ÛÕ¸ì
¸ñ¼¡÷ ÁÉÓÕ¸,
±ÖõÒÕ¸ô ¦Àüȸñ§½!
þÄ츢§Á! ¸ñÅÇáö!

12. ¸ñ½¨¼ò¾ø ±ýÀÐ §º÷óЧÀ¡ö ±Ø¸¦Å¡ñ½¡¾ÀÊ ¸ñ ¦ºÕ¸¢ì ¦¸¡ñÎ ÅÕÅÐ.

13. ¸ñ½Â÷¾ø ¸¢ð¼ò ¾ð¼ «§¾ ¦À¡ÕÇ¢ø ¾¡ý.

14. ¸ñÀξø ±ýÀÐ ¾¢ðÊô ¦À¡ÕÇ¡¸ ÁðÎÁøÄ¡Ð àíÌžüÌõ µ§Ã¡ÅÆ¢ ÀÂýÀθ¢ÈÐ. ¯¼õÒ ÀÎÅÐ §À¡Äì ¸ñÏõ Àθ¢ÈÐ, À¾¢¸¢ÈÐ.

15. ¸ñÀ¨¼, ¸ñÀξĢý ¦¾¡¼÷§Â.

16. ¸ñÓ¸¢úò¾ø ±ýÀÐ '§¾¡ýÚÅÐ' ±ýÈ ¦À¡ÕÇ¢ø «øÄ. 'ãÎÅÐ' ±ýÀÐ «Áí¸Äõ ±ýÚ ¸Õ¾¢ ±¾¢÷î ¦º¡ø¨Äô ÀÂýÀÎòи¢§È¡õ. ±í¸û Àì¸õ Å£ðÊüÌû º¡Á¢ «¨È¢ø ¯ûÇ Å¢Ç쨸 '«¨½'¦ÂýÚ ¦º¡øÄ Á¡ð¼÷¸û. «¨¾ þ¼ì¸÷ «¼ì¸Ä¡¸, 'Å¢Ç쨸 ¿øÄ¡ ¨Å' ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û. (þý¦É¡Õ Ũ¸Â¢ø À¡÷ò¾¡ø ¿øÖ¾ø ±ýÈ Å¢¨É ¸Õò¾ø ±ýÈ ¦À¡ÕÙõ ¦¸¡ûÙõ. ¿øÄ¡ ¨Å ±ýÛõ §À¡Ð ¸Õì¸ ¨Å ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ.) «Ð §À¡Äò¾¡ý þó¾ ¸ñ Ó¸¢úò¾Öõ.

17. ±øÄ¡Åü¨ÈÔõ ¦º¡øĢŢð§¼ý. þó¾ò Тø, Ðïºø ÁðÎõ ¾¡ý ¦¸¡ïºõ ºÃÅø. þÃñÊü̧Á §Å÷ Ðö ±ýÀÐ ¾¡ý. ÐÂìÌ, ÐÂí̾ø, ÐÂÃõ ±Éô ÀÄ ¦º¡ü¸û §º¡÷óÐ §À¡ÅÐ ±ýÈ ¦À¡ÕÇ¢§Ä§Â ÅÆ츢ø ¯ûÇÉ. «§¾ ¦À¡ØÐ ÐÂø¾ø ±ýÈ ¦º¡ø «¨º¾ø ±ýÈ ¦À¡ÕÇ¢ø ÅÕŨ¾ô À¡÷ìÌõ §À¡Ð ¿ÁìÌì ¦¸¡ïºõ Å¢ÂôÒ ÅÕ¸¢ÈÐ.

ÐÂø= «¨º¾ø
Тø = ¬úó¾ «¨ºÅ¢øÄ¡¾ ¿¢¨Ä.

þÐ ±ôÀÊ ±ýÈ¡ø, Áñ= ¦ºÈ¢ó¾ ¿¢¨Ä, Á½ø ±ýÀÐ Áñ «øÄ¡¾Ð= ¦ºÈ¢Â¡¾Ð ±ýÀ¨¾ô §À¡Ä. þí§¸ ´Õ ¯Â¢÷ ±ØòÐ Á¡üÈò¾¢ø Á¡ÚÀð¼ ¦À¡Õû¸û ¸¢¨¼ì¸¢ýÈÉ.

18. Ðïºø ±ýÀРТĢý ¿£ð¼§Á.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Tuesday, July 12, 2005

ஓவரும் ஓவக்குலைப்பாளரும். (Icons and Iconoclasts)

அண்மையில் திரு ரோசாவசந்த் Icon என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தன்னுடைய வலைப்பதிவில் கேட்டிருந்தார். உடனே அப்பொழுது மறுமொழிக்க முடியவில்லை. தவிர என் கருத்தையும் கொஞ்சம் ஒருங்கு படுத்த வேண்டியிருந்தது.

Icon என்பதை எத்தனையோ விதமாய்ச் சொல்ல தமிழில் வழியிருக்கிறது. ஓர்ந்து பார்த்தால், Icon இல்லாத குமுகாயம் எது? தமிழர் மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? Icon என்பது ஒன்றைப்போல் இன்னொன்றைச் சொல்லுவது (செய்வது, ஆக்குவது, பண்ணுவது எல்லாமே இதில் தொடரும்); ஒன்றைக் குறிக்க இன்னொன்றை இடுவது (குறி + இடு = குறியீடு); ஒன்றிற்காக இன்னொன்றை நிறுத்துவது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச் செயல்கள் எல்லாம் ஒவ்வுதல் என்ற வினைக்குள் அடங்கும். ஒவ்வுதல் என்ற சொல் உவ்வுதல் என்பதில் இருந்து கிளர்ந்தது. உவ்வுதலில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் தான் உவமம். தொல்காப்பியம் தன்னுடைய பொருளதிகாரம் உவம இயலில்

அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப,
என்ன, மான - என்றவை எனாஅ

ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, வாங்க,
வென்ற, வியப்ப - என்றவை எனாஅ

எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப,
கள்ள, கடுப்ப - வாங்கவை எனாஅ

காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள,
மாற்ற, மறுப்ப - வாங்கவை எனாஅ

புல்ல, பொருவ, பொற்ப, போல,
வெல்ல, வீழ - வாங்கவை எனாஅ

நாட, நளிய, நடுங்க, நந்த,
ஓட, புரைய - வாங்கவை எனாஅ

ஆறாறு உவமையும் அன்னவை பிறவும்
கூறுங் காலைப் பல்குறிப் பினவே

என்று முப்பத்தாறு உவம உருபுகளைச் சொல்லி அதைப் போன்ற பிறவும் உள்ளதாகச் சுட்டிக் காட்டுவார். அந்த அன்னபிறவிற்குள் "நோக்க, நேர, அனை, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர்" என்று இன்னும் சிலவற்றை உரையாசிரியர் இளம்பூரணர் கூறுவார். இந்த 48 சொற்களில் ஒவ்வொன்றும் ஓர் ஒப்புமையைக் குறிப்பவை தான். ஒப்புமைகள் என்றாலே அவை ஏதோ ஒன்றின் அடையாளங்கள் என்று பொருள். (அதே நேரத்தில் ஒப்புமை என்பது 100% சமமானது என்று பொருளில்லை.)

சிவநெறியாளருக்குச் சூலம் ஓர் அடையாளம் அதாவது ஓர் Icon. (இன்றைக்கு அது இந்துத்துவக்காரர்களுக்கும் அடையாளமாய் ஆகியிருக்கிறது.) முருகனைக் கும்பிட்டுக் காவடி எடுப்பவர்களுக்கு வேல் ஓர் அடையாளம். கிறித்தவர்களுக்கு சிலுவை ஓர் அடையாளம். மினாரட் அல்லது மூன்றாம் பிறை இசுலாமியர்களுக்கு அடையாளம்.

இப்படி அடையாளங்கள் பலவுண்டு என்றாலும் ஒரு சில கூர்ந்து கவனிக்காத, விதப்பான அடையாளங்களைச் சொல்லி icon என்பதற்கான என் பரிந்துரையை இங்கு சொல்ல முற்படுகிறேன்.

ஐம்புலன்களாலும் உணரமுடியாத, ஆனால் ஆறாவது புலனால் உணரப்படுகிற, பரம்பொருளை அல்லது இறைவனை, நம்மைச் சுற்றி உள்ள மாந்தரைப் போலவே உருவகம் செய்து, நாம் உருவ அடையாளம் காட்ட முனைகிறோம். அந்த உருவ அடையாளமும் ஓர் Icon தான். அப்படிப் பார்த்தால் நடவரசன் என்பது கூட ஓர் அடையாளம் தான். (இறை மறுப்பாளர்களும், உருவ மறுப்பாளர்களும் இன்னொரு முறையில் இறைவனை அடையாளம் காட்ட முனைவார்கள்; அந்த வாதத்திற்குள் இப்பொழுது போக வேண்டாம்.) இப்படி ஒன்றைப் பார்த்து இன்னொன்றை படிவிக்கும் படிமமும் ஓர் அடையாளம் (Icon) தான் (படிமம் - icon - என்ற தமிழ்ச்சொல்லுள் வழக்கம் போல் ரகரத்தை நுழைத்து, டகரத்தைத் தகரமாகப் பலுக்கி வடமொழி இதைப் ப்ரதிமம் என்று ஆக்கும். நாம் இது என்னவோ, ஏதோ என்று குழம்பிப் போய் நிற்போம்.)

படிமத்திற்கே இன்னொரு படிமம் அடையாளமாய் நிற்கலாம். காட்டாக, சிவ, விண்ணவக் கோயில்களில் மூலவர் இருக்கிறார். அவர் கோயிலை விட்டு வெளியே வரமுடியாது. எனவே, அவருக்கு இன்னோர் அடையாளமாய், சமமாய், ஊருலவர் (உற்சவர்) வெளியே வருவார். அவரும் ஒருவகையில் Icon தான்.

எல்லாப் படிமங்களும் கோயிலில் இறைவனின் வெவ்வேறு தோற்றங்களையோ, அடியார்களின் உருவங்களையோ காட்டுவதால் அவற்றைத் திருமேனி என்றும் சொல்லுவது உண்டு. உலாத் திருமேனி என்பது ஊருலவர் படிமம். அப்படிப் பார்த்தால் திருமேனி என்ற சொல் கூட Icon என்பதற்கு இணையானது தான். இன்னும் சிலர் திருமேனியைத் திருவுரு என்றும் திருமெய் என்றும் சொல்லுவார்கள். எல்லாம் இடம் பொருள் ஏவல் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமேனி என்றவுடன் அந்தச் சொல் பெற்ற இன்னொரு சாயலைச் சொல்லத் தோன்றுகிறது. மலையாளத்தில் நம்பூதிரிகளைத் தம்பிரான் (தம் பெருமான்) என்று மட்டும் அல்லாது திருமேனி என்றும் விளிப்பது உண்டு.

தெற்குக் கேரளத்து ஊர்களில் திருமேனிகள் பெரியதனக்காரராய் இருப்பார்கள். அந்த வகையில் அரத்தம், தசை, என்பு கொண்ட இந்தத் திருமேனிகளும் Icon - கள் தான். முற்போக்குச் சிந்தனை கூடிய, 20ம் நூற்றாண்டுப் பிந்தைய காலத்திலும், பொதுவுடமைக் கட்சிக்குள் தோழர் ஈ.வி.கே. நம்பூதிரிப்பாட்டைத் திருமேனி என்று அழைத்த முட்டாள் தனங்களும் இருந்தன.

ஆண்டை - அடிமை வாடை அடிக்காமல், இறைவன் - மதம் என்று தொடர்பு கொள்ளாமல், Icon என்பதைத் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் திருமேனியோ, திருவுருவோ, படிமமோ (படிமம் என்ற சொல்லை இலக்கியக் கொள்கைகளில் வேறு விதப்பான பொருளில் பயன்படுத்துகிறார்கள்.) நமக்குப் பயன்படாமல் போகின்றன.

இனி, icon என்ற சொல் வெறுமே உயர்திணையை மட்டும் குறிப்பதாய் இல்லாமல், கணித்திரையில் இருக்கும் குட்டிக் குட்டி உருவங்களையும் கூட குறிக்கிறது என்று நாம் அறிவோம். திணை பார்க்காத மேலை மொழிகள் போல் இல்லாமல், தமிழில் Icon என்று சொல்லுவதற்கு, உயர்திணை, அஃறிணை என இரண்டு திணை ஒட்டிய சொற்களைக் காண வேண்டி இருக்கிறது.

ஒவ்வுதல் என்ற வினை ஒப்புதல் என்ற பொருளையே கொடுக்கும். ஒவ்வுதல் ஓவுதல் என்றும் நீளும். ஓவுதல் என்பது ஒப்பிட்டுக் காட்டல் என்ற பொருள் கொள்ளும். ஓவிக் காட்டுவது ஓவம். [இது ஓவியம், சிற்பம் என்று பல வடிவங்களைக் குறிக்கலாம்.] ஓவம் ஓவியம் என்றும் நீளும். ஓவியம் வரைபவர் ஓவியர். ஒரு காட்சியை அப்படியே ஒப்பிட்டு ஒரு விரிந்த பரப்பில் காட்டும் கலைக்கு ஓவியக் கலை என்று பெயர். ஓவம் என்பதைச் சிறியதற்கும், ஓவியம் என்பது பெரியதற்குமாய்ச் சொல்லலாம். ஒவ்வொரு Icon-ம் ஒரு ஓவம் தான். கணித்திரையில் கிடக்கும் ஓவங்களின் (Icons) மீது குறிசி (cursor) யை கொண்டுவரும் வகையில் மூசி(mouse)யைத் தொட்டு நகர்த்தினால் அது ஏதோ ஒரு கோப்பு அல்லது இழையை (file)க் கணித்திரையில் திறக்கிறது.

இனி உயர்திணை Icon களுக்கு வருவோம். இந்த icon கள் ஒரு உயர்நிலை அடையாளத்திற்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறார்கள். ஓ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு உயர்ந்த என்ற பொருளும் தமிழில் உண்டு. ஓவம் என்ற சொல்லை ஓவர் என்று சொன்னால் உயர்திணையைக் குறித்துவிடும். [தமிழில் ஓவர் என்னும் சொல் செய்பவரையும், செயப்பாட்டாளரையும் பொதுவாய்க் குறிக்கிறது.]

இனி ஓவக்குலைப்பாளர்கள் iconoclast என்று ஆவார்கள். குலைப்பாளர் என்று சொல்லத் தயங்கினால் மறுப்பாளர் என்று சொல்லலாம்.

என் பரிந்துரை:

ஓவம்/ஓவர் = icon
ஓவக் குலைப்பாளர் = iconoclast

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

µÅÕõ µÅį̀ÄôÀ¡ÇÕõ. (Icons and Iconoclasts)

«ñ¨Á¢ø ¾¢Õ §Ã¡º¡Åºóò Icon ±ýÀ¨¾ò ¾Á¢Æ¢ø ±ôÀÊî ¦º¡øÖÅÐ ±ýÚ ¾ýÛ¨¼Â ŨÄôÀ¾¢Å¢ø §¸ðÊÕó¾¡÷. ¯¼§É «ô¦À¡ØÐ ÁÚ¦Á¡Æ¢ì¸ ÓÊÂÅ¢ø¨Ä. ¾Å¢Ã ±ý ¸Õò¨¾Ôõ ¦¸¡ïºõ ´ÕíÌ ÀÎò¾ §ÅñÊ¢Õó¾Ð.

Icon ±ýÀ¨¾ ±ò¾¨É§Â¡ Å¢¾Á¡öî ¦º¡øÄ ¾Á¢Æ¢ø ÅƢ¢Õ츢ÈÐ. µ÷óÐ À¡÷ò¾¡ø, Icon þøÄ¡¾ ÌÓ¸¡Âõ ±Ð? ¾Á¢Æ÷ ÁðÎõ þ¾¢ø Å¢¾¢Å¢Ä측 ±ýÉ? Icon ±ýÀÐ ´ý¨Èô§À¡ø þý¦É¡ý¨Èî ¦º¡øÖÅÐ (¦ºöÅÐ, ¬ìÌÅÐ, ÀñÏÅÐ ±øÄ¡§Á þ¾¢ø ¦¾¡¼Õõ); ´ý¨Èì ÌÈ¢ì¸ þý¦É¡ý¨È þÎÅÐ (ÌÈ¢ + þÎ = ÌȢ£Î); ´ýÈ¢ü¸¡¸ þý¦É¡ý¨È ¿¢ÚòÐÅÐ. þôÀÊî ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ. þó¾î ¦ºÂø¸û ±øÄ¡õ ´ù×¾ø ±ýÈ Å¢¨ÉìÌû «¼íÌõ. ´ù×¾ø ±ýÈ ¦º¡ø ¯ù×¾ø ±ýÀ¾¢ø þÕóÐ ¸¢Ç÷ó¾Ð. ¯ù׾Ģø þÕóÐ À¢Èó¾ ¦ÀÂ÷¡ø ¾¡ý ¯ÅÁõ. ¦¾¡ø¸¡ôÀ¢Âõ ¾ýÛ¨¼Â ¦À¡ÕǾ¢¸¡Ãõ ¯ÅÁ þÂÄ¢ø

«ýÉ, ²öôÀ, ¯ÈÆ, ´ôÀ,
±ýÉ, Á¡É - ±ýȨŠ±É¡«

´ýÈ, ´Îí¸, ´ð¼, Å¡í¸,
¦ÅýÈ, Å¢ÂôÀ - ±ýȨŠ±É¡«

±ûÇ, Å¢¨ÆÂ, þÈôÀ, ¿¢¸÷ôÀ,
¸ûÇ, ¸ÎôÀ - Å¡í¸¨Å ±É¡«

¸¡öôÀ, Á¾¢ôÀ, ¾¨¸Â, ÁÕÇ,
Á¡üÈ, ÁÚôÀ - Å¡í¸¨Å ±É¡«

ÒøÄ, ¦À¡ÕÅ, ¦À¡üÀ, §À¡Ä,
¦ÅøÄ, Å£Æ - Å¡í¸¨Å ±É¡«

¿¡¼, ¿Ç¢Â, ¿Îí¸, ¿ó¾,
µ¼, Ҩà- Å¡í¸¨Å ±É¡«

¬È¡Ú ¯Å¨ÁÔõ «ýɨŠÀ¢È×õ
ÜÚí ¸¡¨Äô ÀøÌÈ¢ô À¢É§Å

±ýÚ ÓôÀò¾¡Ú ¯ÅÁ ¯ÕÒ¸¨Çî ¦º¡øÄ¢ «¨¾ô §À¡ýÈ À¢È×õ ¯ûǾ¡¸î ÍðÊì ¸¡ðÎÅ¡÷. «ó¾ «ýÉÀ¢ÈÅ¢üÌû "§¿¡ì¸, §¿Ã, «¨É, «üÚ, þý, ²óÐ, ²÷, º£÷, ¦¸Ø, ¦ºòÐ, ²÷ôÀ, ¬÷" ±ýÚ þýÛõ º¢ÄÅü¨È ¯¨Ã¡º¢Ã¢Â÷ þÇõâý÷ ÜÚÅ¡÷. þó¾ 48 ¦º¡ü¸Ç¢ø ´ù¦Å¡ýÚõ µ÷ ´ôÒ¨Á¨Âì ÌÈ¢ôÀ¨Å ¾¡ý. ´ôÒ¨Á¸û ±ýÈ¡§Ä «¨Å ²§¾¡ ´ýÈ¢ý «¨¼Â¡Çí¸û ±ýÚ ¦À¡Õû. («§¾ §¿Ãò¾¢ø ´ôÒ¨Á ±ýÀÐ 100% ºÁÁ¡ÉÐ ±ýÚ ¦À¡ÕÇ¢ø¨Ä.)

º¢Å¦¿È¢Â¡ÇÕìÌî ÝÄõ µ÷ «¨¼Â¡Çõ «¾¡ÅÐ µ÷ Icon. (þý¨ÈìÌ «Ð þóÐòÐÅ측Ã÷¸ÙìÌõ «¨¼Â¡ÇÁ¡ö ¬¸¢Â¢Õ츢ÈÐ.) ÓÕ¸¨Éì ÌõÀ¢ðÎì ¸¡ÅÊ ±ÎôÀÅ÷¸ÙìÌ §Åø µ÷ «¨¼Â¡Çõ. ¸¢È¢ò¾Å÷¸ÙìÌ º¢Ö¨Å µ÷ «¨¼Â¡Çõ. Á¢É¡Ãð «øÄÐ ãýÈ¡õ À¢¨È þÍÄ¡Á¢Â÷¸ÙìÌ «¨¼Â¡Çõ.

þôÀÊ «¨¼Â¡Çí¸û ÀÄ×ñÎ ±ýÈ¡Öõ ´Õ º¢Ä Ü÷óÐ ¸Åɢ측¾, Å¢¾ôÀ¡É «¨¼Â¡Çí¸¨Çî ¦º¡øÄ¢ icon ±ýÀ¾ü¸¡É ±ý ÀâóШè þíÌ ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

³õÒÄý¸Ç¡Öõ ¯½ÃÓÊ¡¾, ¬É¡ø ¬È¡ÅÐ ÒÄÉ¡ø ¯½ÃôÀθ¢È, ÀÃõ¦À¡Õ¨Ç «øÄÐ þ¨ÈŨÉ, ¿õ¨Áî ÍüÈ¢ ¯ûÇ Á¡ó¾¨Ãô §À¡Ä§Å ¯ÕŸõ ¦ºöÐ, ¿¡õ ¯ÕÅ «¨¼Â¡Çõ ¸¡ð¼ Өɸ¢§È¡õ. «ó¾ ¯ÕÅ «¨¼Â¡ÇÓõ µ÷ Icon ¾¡ý. «ôÀÊô À¡÷ò¾¡ø ¿¼Åúý ±ýÀРܼ µ÷ «¨¼Â¡Çõ ¾¡ý. (þ¨È ÁÚôÀ¡Ç÷¸Ùõ, ¯ÕÅ ÁÚôÀ¡Ç÷¸Ùõ þý¦É¡Õ ӨȢø þ¨ÈÅ¨É «¨¼Â¡Çõ ¸¡ð¼ Ó¨ÉÅ¡÷¸û; «ó¾ Å¡¾ò¾¢üÌû þô¦À¡ØÐ §À¡¸ §Åñ¼¡õ.) þôÀÊ ´ý¨Èô À¡÷òÐ þý¦É¡ý¨È ÀÊÅ¢ìÌõ ÀÊÁÓõ µ÷ «¨¼Â¡Çõ (Icon) ¾¡ý (ÀÊÁõ - icon - ±ýÈ ¾Á¢ú¡øÖû ÅÆì¸õ §À¡ø øÃò¨¾ ѨÆòÐ, ¼¸Ãò¨¾ò ¾¸ÃÁ¡¸ô ÀÖ츢 ż¦Á¡Æ¢ þ¨¾ô ôþ¢Áõ ±ýÚ ¬ìÌõ. ¿¡õ þÐ ±ýɧš, ²§¾¡ ±ýÚ ÌÆõÀ¢ô §À¡ö ¿¢ü§À¡õ.)

ÀÊÁò¾¢ü§¸ þý¦É¡Õ ÀÊÁõ «¨¼Â¡ÇÁ¡ö ¿¢ü¸Ä¡õ. ¸¡ð¼¡¸, º¢Å, Å¢ñ½Åì §¸¡Â¢ø¸Ç¢ø ãÄÅ÷ þÕ츢ȡ÷. «Å÷ §¸¡Â¢¨Ä Å¢ðÎ ¦ÅÇ¢§Â ÅÃÓÊ¡Ð. ±É§Å, «ÅÕìÌ þý¦É¡Õ «¨¼Â¡ÇÁ¡ö, ºÁÁ¡ö, °ÕÄÅ÷ (¯üºÅ÷) ¦ÅÇ¢§Â ÅÕÅ¡÷. «ÅÕõ ´ÕŨ¸Â¢ø Icon ¾¡ý.

±øÄ¡ô ÀÊÁí¸Ùõ §¸¡Â¢Ä¢ø þ¨ÈÅÉ¢ý ¦Åù§ÅÚ §¾¡üÈí¸¨Ç§Â¡, «Ê¡÷¸Ç¢ý ¯ÕÅí¸¨Ç§Â¡ ¸¡ðΞ¡ø «Åü¨Èò ¾¢Õ§ÁÉ¢ ±ýÚõ ¦º¡øÖÅÐ ¯ñÎ. ¯Ä¡ò ¾¢Õ§ÁÉ¢ ±ýÀÐ °ÕÄÅ÷ ÀÊÁõ. «ôÀÊô À¡÷ò¾¡ø ¾¢Õ§ÁÉ¢ ±ýÈ ¦º¡ø ܼ Icon ±ýÀ¾üÌ þ¨½Â¡ÉÐ ¾¡ý. þýÛõ º¢Ä÷ ¾¢Õ§ÁÉ¢¨Âò ¾¢Õ×Õ ±ýÚõ ¾¢Õ¦Áö ±ýÚõ ¦º¡øÖÅ¡÷¸û. ±øÄ¡õ þ¼õ ¦À¡Õû ²Åø À¡÷òÐô ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÎõ.

¾¢Õ§ÁÉ¢ ±ýÈ×¼ý «ó¾î ¦º¡ø ¦ÀüÈ þý¦É¡Õ º¡Â¨Äî ¦º¡øÄò §¾¡ýÚ¸¢ÈÐ. Á¨Ä¡Çò¾¢ø ¿õ⾢⸨Çò ¾õÀ¢Ã¡ý (¾õ ¦ÀÕÁ¡ý) ±ýÚ ÁðÎõ «øÄ¡Ð ¾¢Õ§ÁÉ¢ ±ýÚõ ŢǢôÀÐ ¯ñÎ.

¦¾üÌì §¸ÃÇòÐ °÷¸Ç¢ø ¾¢Õ§ÁÉ¢¸û ¦Àâ¾É측Ãáö þÕôÀ¡÷¸û. «ó¾ Ũ¸Â¢ø «Ãò¾õ, ¾¨º, ±ýÒ ¦¸¡ñ¼ þó¾ò ¾¢Õ§ÁÉ¢¸Ùõ Icon - ¸û ¾¡ý. Óü§À¡ìÌî º¢ó¾¨É ÜÊÂ, 20õ áüÈ¡ñÎô À¢ó¨¾Â ¸¡Äò¾¢Öõ, ¦À¡Ð×¼¨Áì ¸ðº¢ìÌû §¾¡Æ÷ ®.Å¢.§¸. ¿õ⾢âôÀ¡ð¨¼ò ¾¢Õ§ÁÉ¢ ±ýÚ «¨Æò¾ Óð¼¡û ¾Éí¸Ùõ þÕó¾É.

¬ñ¨¼ - «Ê¨Á Å¡¨¼ «Ê측Áø, þ¨ÈÅý - Á¾õ ±ýÚ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇ¡Áø, Icon ±ýÀ¨¾ò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ §ÅñÎõ ±ýÈ¡ø ¾¢Õ§ÁÉ¢§Â¡, ¾¢Õ×էš, ÀÊÁ§Á¡ (ÀÊÁõ ±ýÈ ¦º¡ø¨Ä þÄ츢Âì ¦¸¡û¨¸¸Ç¢ø §ÅÚ Å¢¾ôÀ¡É ¦À¡ÕÇ¢ø ÀÂýÀÎòи¢È¡÷¸û.) ¿ÁìÌô ÀÂýÀ¼¡Áø §À¡¸¢ýÈÉ.

þÉ¢, icon ±ýÈ ¦º¡ø ¦ÅÚ§Á ¯Â÷¾¢¨½¨Â ÁðÎõ ÌÈ¢ôÀ¾¡ö þøÄ¡Áø, ¸½¢ò¾¢¨Ã¢ø þÕìÌõ ÌðÊ ÌðÊ ¯ÕÅí¸¨ÇÔõ ܼ ÌȢ츢ÈÐ ±ýÚ ¿¡õ «È¢§Å¡õ. ¾¢¨½ À¡÷측¾ §Á¨Ä ¦Á¡Æ¢¸û §À¡ø þøÄ¡Áø, ¾Á¢Æ¢ø Icon ±ýÚ ¦º¡øÖžüÌ, ¯Â÷¾¢¨½, «·È¢¨½ ±É þÃñÎ ¾¢¨½ ´ðÊ ¦º¡ü¸¨Çì ¸¡½ §ÅñÊ þÕ츢ÈÐ.

´ù×¾ø ±ýÈ Å¢¨É ´ôÒ¾ø ±ýÈ ¦À¡Õ¨Ç§Â ¦¸¡ÎìÌõ. ´ù×¾ø µ×¾ø ±ýÚõ ¿£Ùõ. µ×¾ø ±ýÀÐ ´ôÀ¢ðÎì ¸¡ð¼ø ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ. µÅ¢ì ¸¡ðÎÅÐ µÅõ. µÅõ µÅ¢Âõ ±ýÚõ ¿£Ùõ. µÅ¢Âõ ŨÃÀÅ÷ µÅ¢Â÷. ´Õ ¸¡ðº¢¨Â «ôÀʧ ´ôÀ¢ðÎ ´Õ Ţâó¾ ÀÃôÀ¢ø ¸¡ðÎõ ¸¨ÄìÌ µÅ¢Âì ¸¨Ä ±ýÚ ¦ÀÂ÷. µÅõ ±ýÀ¨¾î º¢È¢Â¾üÌõ, µÅ¢Âõ ±ýÀÐ ¦Àâ¾üÌõÁ¡öî ¦º¡øÄÄ¡õ. ´ù¦Å¡Õ Icon-õ ´Õ µÅõ ¾¡ý. ¸½¢ò¾¢¨Ã¢ø ¸¢¼ìÌõ µÅí¸Ç¢ý (Icons) Á£Ð ÌÈ¢º¢ (cursor) ¨Â ¦¸¡ñÎÅÕõ Ũ¸Â¢ø 㺢(mouse)¨Âò ¦¾¡ðÎ ¿¸÷ò¾¢É¡ø «Ð ²§¾¡ ´Õ §¸¡ôÒ «øÄÐ þ¨Æ¨Â (file)ì ¸½¢ò¾¢¨Ã¢ø ¾¢È츢ÈÐ.

þÉ¢ ¯Â÷¾¢¨½ Icon ¸ÙìÌ Åէšõ. þó¾ icon ¸û ´Õ ¯Â÷¿¢¨Ä «¨¼Â¡Çò¾¢üÌ ±ÎòÐì ¸¡ð¼¡ö þÕ츢ȡ÷¸û. µ ±ýÈ µ¦ÃØòÐ ´Õ¦Á¡Æ¢ìÌ ¯Â÷ó¾ ±ýÈ ¦À¡ÕÙõ ¾Á¢Æ¢ø ¯ñÎ. µÅõ ±ýÈ ¦º¡ø¨Ä µÅ÷ ±ýÚ ¦º¡ýÉ¡ø ¯Â÷¾¢¨½¨Âì ÌÈ¢òÐÅ¢Îõ.

þÉ¢ µÅį̀ÄôÀ¡Ç÷¸û iconoclast ±ýÚ ¬Å¡÷¸û. ̨ÄôÀ¡Ç÷ ±ýÚ ¦º¡øÄò ¾Âí¸¢É¡ø ÁÚôÀ¡Ç÷ ±ýÚ ¦º¡øÄÄ¡õ.

±ý ÀâóШÃ:

µÅõ/µÅ÷ = icon
µÅì ̨ÄôÀ¡Ç÷ = iconoclast

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Sunday, June 26, 2005

ஆன்மா

அண்மையில் கிட்டத்தட்ட ஒரு மாதம், என் மகன் திருமண வேலையில் ஆட்பட்டு இருந்ததால், எந்த இடுகையும் இணையத்தில் இடாது இருந்தேன். இப்பொழுது எல்லாம் நல்லபடியாக முடிந்து திரும்பி வந்தபின், விட்டுப் போன மடல்களைப் பார்த்தால், ஆன்மா பற்றிய விளக்கத்தை நான் பங்குகொள்ளாத இடைக்காலத்தில் தன் நண்பர் புலவர் சி.வெற்றிவேந்தன் கேட்டதாக, திரு. இராஜ.தியாகராஜன் சந்தவசந்தம், தமிழ் உலகம், அரையர் குழும்பு ஆகியவற்றில் இடுகையிட்டு விளக்கம் கேட்டதைப் படிக்க நேர்ந்தேன். கூடவே அவர் தன்னுடைய இன்னொரு நண்பர் புலவர் இறைவிழியனார் விடுத்த செய்தியில், சொல்லாய்வு அறிஞர் ப.அருளியைச் சுட்டிக் காட்டி ஆன்மா என்பது வடமொழிச் சொல் என்றும் அதன் பொருளாய் ஆதம், உயிர், ஆவி ஆகியவற்றைக் காட்டியதையும் உரைத்து, பின்னால் ஆன்மிகம்/ஆன்மீகம் என்பதில் எது சரி என்றும் வினவியிருந்தார்.

அரையர் குழும்பு, சந்தவசந்தம் ஆகியவற்றில் வந்த பின்னூட்டுக்களில் பேரா.பசுபதி "ஆன்மிகம் என்பது சரி, ஆன்மீகம் சரியல்ல" என்று சொல்லி யிருந்தார். அதில் எனக்கும் ஒப்புதலே. ஆனால் "ஆன்மா என்பது வடமொழிச் சொல்" என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. திருமந்திரத்தையும் மற்ற நூல்களையும் எடுத்துக்காட்டி நண்பர் திரு. யாவகக் குமார் "ஆன்மா தமிழே" என்று அரையர் குழும்பில் எடுத்துரைத்தார். "கர்மா கன்மம் ஆவதுபோல, ஆன்மா என்பது ஆத்மாவின் தமிழாக்கம்" என்று சந்தவசந்தத்தில் பேரா. அனந்த் எடுத்துரைத்தார். "ஆத்மா தான் ஆன்மா ஆனது" என்று பேரா. பசுபதியும் கூடத் தன் மடலில் குறித்திருந்தார்.

நான் புரிந்த வரையில் ஆன்மாவும், ஆத்மாவும் சற்று வெவ்வேறான முறையில் எழுந்த, ஆனால் தமிழோடு தொடர்புடைய அடிப்படையான சொற்களே. இதுபற்றி ஒருமுறை மடற்குழுக்களில் முன்பேசிய நினைவு. இருந்தாலும் மீண்டும் ஒருமுறை விளக்கம் எழுதுகிறேன்.

முதலில் ஆத்மாவைப் பார்ப்போம். "ஆ" என மூச்சு விட்டான், "ஆ" என ஓலம் இட்டான் என்ற ஒலிக்குறிப்பு உயிருள்ள நிலையில் சொல்வது. உயிருள்ள ஒருவன் வாய்வழிக் காற்றை வெளியிடுகையில் ஆவென வாயைத் திறக்கிறான். அந்நிலை ஆவித்த, ஆவுகின்ற, ஆவும் நிலை. ஆவுகின்ற நிலையில் எழும் காற்று ஆவி. உயிர்க்காற்றை ஆவி என்பது அப்படியே எழுந்தது. ஆவி என்ற தமிழ்ச்சொல்லைப் பலரும் வடமொழி என எண்ணிக் கொள்கிறார். இதேபோல வாய்வழி விடுகின்ற காற்று வாயி/வாயு என ஆனது. (வாயு, வடமொழியோ என நானும் மருண்ட காலம் ஒன்றுண்டு). நாளடைவில் உடலின் வாய்களிலிருந்து வெளியிடும் எல்லாக் காற்றுகளுமே வாயு என்றாயின. வளி என்பதும் இப்படிக் கிளைத்ததே. வழி, தமிழ் என்றால் வாயுவும் தமிழாய்த்தான் இருக்கமுடியும். ஏனெனில் இரண்டிற்கும் வள் என்ற துளைப்பொருளே உள்நிற்கிறது.

ஆவித்தல், ஆயித்தல் என்ரும், ஆத்தல் என்றும் சுருங்கும். ஆவித்தலில் உள்ள ஆவி ஆதன் என்றும் சொல்லப் படும். ஆதன் = உயிர்க்காற்று. கருத்துமுதல் வாதம் எழுந்த பின், ஆதனுக்கு தனித்தியங்கும் நிலை கற்பித்து, ”ஆதனே மாந்தனை இயக்குகிறது” என்பார். (பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதம் என்று முரண்பாட்டினுள் இப்போது போக வேண்டாம். காட்டுவிலங்கு ஆண்டி நிலையில் கருத்துமுதல் வாதம் எழாது என அமைவோம்.) உயிருள்ள நிலை ”ஆதல், ஆகுதல்” என்றும் சொல்லப் பட்டது. ஆகுதல்>ஆயுதல் என்பது ஆயும் நிலை (உயிருள்ள நிலை) என்றும் கொள்ளப்பட்டது.ஆயுள் எனப் படுவதும் "ஆ" எனும் உயிர்க்காற்றில் பெறப்பட்ட நீட்சிப் பொருளே.

ஆ-தல் = to come into existence.
ஆகுதல் = to become
ஆதலித்தல் = ஆகச் செய்தல்; to make it happen;
ஆதுதல் = to come into existence;
ஆயிடல் = to become, to happen
ஆயுள் = ஆய் + உள்
ஆவது = things to be done

(வடமொழிப் பலுக்கில் ஆத்மா எனப்பட்டு, அச்சொற்பிறப்பு புரியாது, அதுவே இது என அறியப்படும்) ஆன்மா என்ற சொல்லிற்கு தமிழில் தரப்படும் 2 பொருட்பாடுகளுள் விலங்கெனும் பொருள் பருப்பொருள் குறிப்பது. மற்ற ஒரு பொருளான "ஆதன்" கருத்துமுதலானது. பொதுவாக, நாட்படவுள்ள சொற்களுக்கு, கருத்துமுதல் பொருள் முதற்பொருளாய் ஆகமுடியாது. அது வழிப்பொருளாகவே இருக்க முடியும். இச்சொல்லைப் பொருத்தமட்டில், பருப் பொருள், கருத்துமுதற் பொருள் ஆகிய இரண்டுமே மேலை மொழிகளுக்கும் நமக்கும் அப்படியே பொருந்திவரும். (ஆன்மாவிற்கு இணையாக animal/animate என்று ஆங்கிலத்தில் குறிப்பதை ஓர்ந்து பார்க்கலாம்.) ஆங்கிலத்திற்கும், தமிழிற்கும் ஒரு பொருள் பொருந்துமெனில் அதை தன்னேர்ச்சி (accident) எனலாம். ஆனால் 2 பொருட்களுக்கும் ஒரே அடிச்சொல் (தமக்குள் உறவிலை என்று பலராலும் எண்ணப் படும்) 2 மொழிகளில் அமைவது வியப்பாக உள்ளது. (இந்தையிரோப்பிய மொழிகளும் தமிழிய மொழிகளும் எங்கோ தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற என்கருத்து இங்கும் வலுப்பெறுகிறது.) இக்காலத்தமிழில் ஆதனெனும் உயர்பொருள் மட்டுமே பலரும் முன்வைத்துச் சொல்வார். ஆனால் தொடக்கப்பொருள் அப்படி உயர்நிலையில் எழுமா என்பது அய்யப்பாடே! ஆன்மா முதலில் விலங்கைக் குறித்திருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். பின்னரே உயர்பொருளான கருத்துமுதல் பாவனைக்கு, ”ஆவி, உயிர்” என்ற பொருளில் வந்திருக்கலாம். இப்படி நான் சொல்லக் காரணமுண்டு.

"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி என்பவர் (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் அருமையான, ஆழமான கருத்தைச் சொல்லியிருந்தார். "ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப் பொருள் சொற்களே முதலில் இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணர வல்ல சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள்- போன்றவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இதுபோல் இயற்கையான பருப்பொருள், இடப்பொருள் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அதாவது (நல்லது, உயர்ந்தது, ஞானம் போன்ற) கருத்து முதலான சொற்களை ஆதிகாலத்தில் மனிதன் உருவாக்கி இருக்கமுடியாது என்று அவர் சொல்வார். இன்றைக்கு வழங்கும் கருத்தியற் சொற்களின் (idealogical words) மூலங்கள் பெரும்பாலும் ஐம்புலன் சொற்களாகவே இருந்திருக்கும் என்றும் அவர் சொல்வார். இதற்கு அவர்காட்டுவது: 'மதம்' எனும் சொல். இன்று இச்சொல்லுக்கு religion என்று பொருள் கொள்கிறோம். ஆனால் ஆதிகாலத்தில் 'மதி - சந்திரன்' எனும் பருப்பொருளில் இருந்தே அது வந்திருக்கும் என்று சொல்வரலாற்று வரிசை காட்டி அவர் புலப்படுத்துவார். அவருடைய இந்த ஆய்வுமுறை பெரிதும் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. (இதை இன்னொரு இடத்தில் விவரமாகப் பார்ப்போம். இதேபோல நல்லது என்ற கருத்துமுதற் சொல்லும் நெல் எனும் பருப்பொருளில் இருந்தே தோன்றி யிருக்கும் என்று பின்னால் அறிந்தேன். என் ஒரு கட்டுரையிலும் அதைக் குறித்திருந்தேன். பருப்பொருள் காணும் அறிவைக் குறிக்கும் கருத்தில் இருந்து, மெய்ப்பொருள் காணும் அறிவைக் குறிக்க எழுந்த ஞானம் என்பதும் இதே வகைத் திரிவைக் காட்டுகிறது.)

இப்படி ஐம்புலன் சொற்களிலிருந்து தோன்றிப் பின் கருத்துமுதற் சொற்கள் எழுந்த வளர்ச்சியோடு, இன்னொரு கருத்தையும் இங்கே சொல்லவேண்டும். எந்த மொழியிலும் கருத்துவளர்ச்சி, பொதுமை (generic) -யிலிருந்து பின்னர் விதுமைக்கு (specific) வாராது. விதுமையிலிருந்தே  பொதுமைக்குச் சொற்கள் வரும். ஓர் இயல் மொழியில் அப்படியே சொற்சிந்தனை வளரமுடியும். இச் சிந்தனையையும் மடற்குழுக்கள் பலவற்றில் வெவ்வேறு மடல்களின் வழி சொல்லி வந்தேன்.

எ.கா: தமிழர் நாகரிகத்தில் முதலில் நெய் எனும் பொருளைக் கண்டது விலங்குகளின் பால் மற்றும் கொழுப்பில் இருந்தே என்று சொல்லாய்வால் உணரமுடியும். பின் அறிவு வளர்ந்து, நுட்பம் துலங்கிய போதே எள் எனும் நிலத்திணையில் இருந்து நெய் எடுக்கத் தெரிந்த மனிதன், அதையும் எள் நெய் (எண்ணெய்) என்றே சொல்லத் தலைப் பட்டான். பின்னாளில் கடலை இலிருந்தும், தேங்காயிலிருந்தும், ஏன் மண்ணில் இருந்தும் கிட்டியவுடன் அவைகளையும் எண்ணெய் எனும் பொதுமைப் பொருள் கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமைச் சொற்களால் அழைக்கத் தொடங்கியுள்ளான். நுணுகி அறியாவிடின் எண்ணெய் என்ற பொதுமைப் பொருளின் வேரடி தெரியாமலே போய்விடும்.

ஒரு மொழியில் கருத்து/சொல் வளர்ச்சி என்பது நீள்சுருள் (helical spring) போல் மறுகி மறுகித் தோன்றி விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்து (எவ்வுதல், எகிறி வருதல் போன்றவை எழுச்சியைக் குறிக்கும் சொற்கள். evolve என்பது எவ்வி அளிப்பது. எல்லாவற்றையும் வளர்ச்சி என்று பொதுப்படையாய், தட்டையாகச் சொல்லி நம் தமிழ் நடையை மழுங்கடிக்க வேண்டாமே? எவ்வளித்தல் அருமையான சொல்.) பல சொற்கூட்டங்களை உருவாக்கியதை இந்த எடுத்துக்காட்டால் உணரலாம். 'நெய்' எனும் சொல் ஆவின் நெய்யாய், விதுமைப் பெயராய் முதலில் தோன்றியிருக்கலாம். (இன்னும் நெய் எனும் சொல்வரலாறு அறிந்தேனில்லை. ஒருவேளை கொழுப்பில் தோன்றியதோ? ) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, அடுத்து 'எள்நெய்' விதுமைக் குறியீடாக மாறி, முடிவில் 'எண்ணெய்' பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்துள்ளது.

அதுபோல விலங்குகளுக்கான தமிழ்ச் சொற்களை ஒருசேரப் பார்த்தால், "ஊணுக்கு, பின் உழைப்புக்கு" என்ற வளர்ச்சியில் ஆதிமாந்தன் முதலில் அடக்கிய விலங்கு, மாடாய் இருந்திருக்க முடியும். (உலகின் பெரும்பாலான எழுத்துகளின் முதலெழுத்து ஆ என்பதே.) மாடெனும் பெண் விலங்கிற்குப் பெயரிட, அது எழுப்பும் "மா"  ஒலியே காரணம் ஆகியிருக்கலாம். (மாடு எனும் பெண் விதுமைவிலங்கிற்கு இட்ட பெயர் பொதுமைப் பெயராகிப் பின் காளைமாடு என முரண்பட்டு ஒலிப்பதைப் பார்த்தால் எவ்வளிப்பைப் புரிந்து கொள்ளலாம்.) பின் அடுத்ததாய் மனிதன் வேட்டையாடி ஊன் உணவாகக் கொண்ட விலங்கு மான். (இன்றும் தமிழர் நாகரிகத்தில் உயர்சுவை ஊனாக மானே கருதப்படும்.) இதுவும் 'மா' என்றே கத்தும். (மாட்டொலியும் மான் ஒலியும் சற்று வேறானவை.) இதற்குப் பெயரிட 'மா' எனும் ஓரெழுத்தொரு மொழியோடு 'ன்' மெய்யீறு சேர்ந்து 'மான்' ஆகியுள்ளது. அடுத்தடுத்து எல்லா விலங்குகளுக்கும் மாவெனச் சொன்னால் குழப்பம் ஏற்பட்டிருக்கும். முடிவில் மாட்டையும், மானையும் பிரித்துணரும்படி, "ம்" ஒலியை விலக்கி "ஆ" எனவும் "ஆன்" எனவும் மாட்டிற்குப் பெயரிட்டு, "deer" என்ற விலங்குக்கு "மான்" எனக் கொண்டு, மற்ற விலங்குகளுக்கு "மா" பொதுமையாக ஆகியுள்ளது.

(தொல்காப்பியர் பொருளிலக்கணம் மரபியலில் சொல்வது: "பெற்றமும் எருமையும் மரையும் ஆவே") 'கலிமா, வயமா, கடுமா, துதிமா' எனப் பல விலங்குகளுக்கு சங்க இலக்கியம் பேர் சொல்கிறது. அந்த வகையில் "ஆன்மா" ஒரு விரிந்த சொல்லாக, விதுமைக் குறிப்பாக, மாட்டை மறுபடியும் தமிழில் குறித்ததுபோலும். தமிழிலுள்ள விதுமைப் பெயரான "ஆன்மா"வோடு ஒப்புமைகொண்ட இன்னொரு சொல்லே "animal" எனும் பொதுமைப் பெயராக ஆங்கிலத்தில் வருகிறதோ என்றுதோன்றும். ஏனெனில் முறையான வேர்ச் சொல் வரலாற்றை ஆங்கில, மேலை மொழிகளில் யாருங் காட்டவில்லை.

ஆன்மா (மாடு) தன் உயிர் இழந்தபோது அதுவே ஊனாகும். அவ்வுயிரையும் ஆன்மா எனத் தமிழில் சொல்வோம். அதேபோல உயிருள்ள விலங்கு animated ஆக, உயிர் உள்ளதாக 'soul,spirit' எனும் பொருளில் ஆங்கிலத்தில் சொல்வார்.  ஆன்மா/ஆதன் எனும் இரு வேறு சொற்களை ஒன்றாக்கி வடமொழியில் 'ஆத்மா' எனப் படுகிறது. அதாவது ஆத்துகின்ற மா ஆத்துமா. உயிருள்ள விலங்கு; பின்னால் பொருள்நீட்சி பெற்று உயிரையே குறிக்க தொடங்கிற்று. இக்கருத்துவளர்ச்சியில் இன்னும் மேலேபோய் ஆன்மாவைப் பசு என மொழி பெயர்த்துச் சிவனைப் பசுபதி என்பர் சிவநெறி வழிப்பட்ட வடநூலார்.

John Ayto எழுதிய Word origins பொத்தகத்தில் animal, deer என்ற சொற்களுக்குக் கொடுத்துள்ள விளக்கம் கீழே:

animal :
an animal is a being which breathes (compare DEER). Its immediate source was Latin adjective animalis ' having a soul,' a derivative of the noun anima 'breath,soul' (which although gave English the verb and adjective animate). Anima is a member of a set of related words in which the notions of 'breadth,wind' and 'sprit,life' are intimately connected: for instance, Greek anemos 'wind' (possible source of English anemone), Latin animus 'sprit, mind, courage,anger' (aource of English animosity and animus), sanskrit aniti 'breathe,' Old English othian 'breathe' Swedish anda 'breath, sprit,' and Gothic usanan ' breathe out.' The 'breath' sense is presumably primary, the 'sprit, life' sense a metephorical extension of it.

deer:
In Old English, deor meant 'animal' in general, as opposed to 'human being' (as its modern Germanic relatives, German tier, Dutch dier, and Swedish djur, still do). Apparently connected forms in some other Indo-European languages, such as Lithuanian dusti 'gasp' and Church Slavonic dychati 'breathe,' suggest that it comes via a prehistoric Germanic *deuzom from Indo-European*dheusom, which meant 'creatures that breathes' (English animal, and Sanskrit pranin- 'living creature' have similar semantic origins). Traces of specialization in meaning to 'deer' occur as early as the 9th century (although the main Old English word for 'deer' was heorot, source of modern English hart, and during the middle English period it became firnly established, driving out 'animal' by the 15th century.

மேலுள்ள விளக்கம் படித்தால் சில ஒற்றுமைகளும், குறைபாடுகளும் விளங்கும். குறிப்பாக, If the etymology of animal is 'one which breathes out', why was it called animal? why not by some other name, breath, soul, spirit or something? In the Indo-European etymology, a conceptual meaning is emphasized rather than an identifiable material meaning for such a basic word such as "animal". In our way of explanation, the meaning of 'sprit, soul' etc are not primary meanings but secondary and derived ones.

The Tamil thought process might have been like this.

Man could have slaughtered cow/bull for food and could have subsequently domesticated it for other purposes. When he had to refer to it in communication/conversation, the most striking aspect for him to use for reference would be the sound raised by the cow/bull. Hence he has named the cow/bull as 'maa'. When he started to slaughter another preferred animal, viz., the deer, he named that through an easiest extension 'maan'. Subsequently, when he came across other animals and he had to name them (unless one has to refer repeatedly, one doesn't have to name new things), he started using the same two terms 'maa and maan'. When confusion came, he droped the initial 'm' and referred the cow/bull through 'aa' or 'aan' and referred the deer as 'maan' and the generic animal as 'maa'. Gradually 'aa/aan' might also have got another specific name 'aanmaa'. As conceptual thinking developed, he used the same term 'aanmaa' (meaning animal) for the spirit also, since 'spirit' is a derived concept. (deer எனுஞ் சொல்லுக்கு ஒலியிணையான தமிழ்ச் சொல் அறிந்தேனில்லை.)

இதே மா/மான் எனுஞ் சொல்லே திரிந்து மான் > மாந்து > மாந்தை>மந்தை ஆகியுள்ளது.

மாந்தன் என்பது மான் > மன் > மனிதன் என்று நாளாவட்டத்தில் மாந்தர்களையும் குறிக்கத் தொடங்கி இருக்கிறது. இருதிணை உயிர்களுக்கும் முதலில் 'மாக்கள்' என்றே குறித்து முடிவில் உயர்திணைக்கு மட்டும் 'மக்கள்' என்று குறித்திருக்கிறார்கள். இன்னும் ஆழ்ந்து ஓர்ந்தோமானால், பால் விகுதிகளான ஆன், அன், மன், மான் ஆகிய எல்லாவற்றிற்கும் மா என்ற சொல்லே முதலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆங்கிலத்திலும் man எனுஞ் சொல் இப்படித்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் மேலே நான் காட்டிய ஆங்கில வேர்ச்சொல் அகர முதலியில் வேரடிச் சொல்லாக "thinking" என்று கருத்துமுதல் பொருளே 'man' எனுஞ் சொல்லுக்கு முதலில் வைக்கப் படுகிறது. ஓர்ந்து பார்த்தால் முன்னுவது/உன்னுவது (சிந்திப்பது) என்பது ஒரு derived concept. அது எப்படி முதலில் வந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை இல்லை.

இதே போல மாடு - என்னும் பதம் cow/bull என்பதோடு meat என்பதற்கும் குறியீடாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் meat எனுஞ் சொல் தனித்து வரும்போது மாட்டிறைச்சியையே குறிக்கும். இந்தச் சொல் பொதுமைப் பொருளாக எல்லா இறைச்சியையும் குறிக்கும். அதே போல ஊண் சாப்பிடுதல், மாட்டுத் தொழுவம் என்னும் பொருளில் வரும் இன்னொரு ஆங்கிலச் சொல் manger என்பதையும் பார்க்க வேண்டும். தமிழில் 'மாங்கு, மாங்கென்று சாப்பிடுகிறான், படிக்கிறான்' என்று மாட்டோ டு தொடர்பு படுத்திதான் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். மாடு என்னுஞ் சொல்லின் பொருள் நீட்டமாகச் "செல்வம்" என்னும் பொருள் முல்லை நில வாழ்க்கைக்குப் பழக்கப் படுத்தப் பட்ட பின்னே தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்தப் பொருள்கள் இந்தோ இரோப்பிய மொழிகளில் இல்லை. இதற்குப் பதிலாக many எனுஞ் சொல் 'பலது' என்னும்பொருளில் வந்துள்ளது. இங்கும் மன்/மான் என்னும் ஒலி பின் புலத்தில் வருவது ஏதோ ஒரு தொடர்பைக் காட்டுகிறது. தமிழில் 'மா' என்னும் சொல் "பெரியது, பலது' என்னும் பொருளிலும் வருவதை நோக்கலாம்.

இனி அடுத்த வழிச்சொல் மகன் என்பது. இதன் தொடர்பு கொஞ்சம் ஆழமானது. இதைப் புரிந்து கொள்ள, தமிழில் இருவழிப் போக்கில் பெரிதும் ஆளப் பட்டுவரும் ஒரு சொற்பிறப்பு முறை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.. இதை எடுத்துக் காட்டினால் தான் புரியும்.

எ.கா. பகுதி - பாதி, மிகுதி - மீதி, சுவடி - சோடி, பெயர் - பேர், வகுள் - வாள், அகம் - ஆம், புழுதி - பூதி, அமிழ் - ஆழ், பொழுது - போது, முகர் - மோர், உகுதல் - ஊத்தல், துவறுதல் - தூறுதல், புகுதல் - போதல், புகற்றுதல் - போற்றுதல், முகடு - மோடு, சுவடுதல் - சூடுதல், மிகல் - மேல், அகல் - ஆல், தகழி - தாழி, வெயர்வை - வேர்வை

இவையும், இவை போன்ற நூற்றுக் கணக்கான சொற்களிலும் நடக்கும் மாற்றம் எளிதானது. 'பகுதி' எனுஞ் சொல்லில் உள்ள முதல் இரு எழுத்துக்களும் குற்றெழுத்தாக இருந்து, அவற்றில் இரண்டாம் எழுத்தை விட்டுவிட்டு, முதல் எழுத்தை நெட்டெழுத்தாக ஆக்கிப் 'பாதி' என ஆக்கித் சொல்லாளும் பழக்கம் பலரிடமும் உள்ளது. இந்த மாற்ற முறை தலை கீழாகவும் நடக்கலாம். முதலெழுத்து நெட்டெழுத்தாக இருந்து, அதை மாற்றி இரண்டு குற்றெழுத்துக்களைக் கொண்டும் வரலாம்.

அப்படி வருஞ் சொல் தான் மான் - மகன்.

மகன் எனுஞ் சொல்லுக்கு இணையாக scottish, irish மொழிகளிலும், மற்ற செருமானிய மொழிகளிலும் MacMohan, MacGuinness போன்ற பெயர்களின் பகுதியாக (mac ஆக) மகன் எனும் பொருளில் வருகிறது. ஏன், male எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான masculus என்பதிலும் முன்பகுதியில் இதே 'மக' என்னும் சொல் தான் வருகிறது. (மக - மச போலி இந்தோ இரோப்பிய ஆதி மொழிக்கும் இலத்தினுக்கும் ஏற்படுவது உண்டு.)

மனிதன் ஊனுக்காகக் கொன்ற/பழக்கிய இன்னொரு விலங்கு ஆடு: இதுவும் 'மா' என்றே கத்தும். இதற்கான பெயர் 'ஆன்' எனும் சொல்லில் இருந்து சிறிதே திரிந்த சொல்லாக அமைகிறது. இது முல்லை நில வாழ்க்கையில் ஏற்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது. இந்தச் சொல்லுக்கு இணையாக gaat (anglo-saxon), geit (dutch), geiss (german), headus (latin), goat (english) என இந்தோ இரோப்பிய மொழிகளில் வரும். தமிழிலேயும் ஆடு திரிந்து கடா ஆகும்.

இதே போல 'ஆன்' என்னுஞ் சொல்லோடு தொடர்பு கொண்டது 'ஊன்' எனுஞ் சொல். அதற்கும் பெரிய வளர்ச்சி உண்டு. அதை இன்னொரு முறை பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.