Friday, February 08, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 3

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது இறுதியாய் வரும் மூன்றாம் பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

”கீரிப் பிள்ளையும் பார்ப்பனியும்” :

ஐந்தாம் தந்திர மூலக்கதையில் சமணத் துறவிகளை (சமணம் எனும்போது, இது புத்தமா, செயினமா, ஆசீவகமா, என்று உறுதியாய்த் தெரியாது.) அடித்துக்கொன்ற மணிபத்ரன் கதை சொல்லப் படும். அதைக் கண்டு துணுக்குறாது (சமணத்துறவி என்று பலராலும் ஐயப்படும்) இளங்கோ அத் தந்திரத்தின் முதற் துணைக்கதையைத் (கீரிப் பிள்ளையும் பார்ப்பனியும்) தன்னுடைய காப்பியத்தில் ஓர் எடுகோளாய்க் கொண்டார் என்பது பெரும் வியப்பையே தருகிறது. (இளங்கோ உண்மையில் சமணர் தானா? அவருடைய சமயத்தில் அவருக்கு அக்கறையில்லையா?) அம்மூலக் கதையின் முடிவில் கீழுள்ளது போல் வரும்.

------------------------------------

ஆராயாது, துறவிகளை அடித்துக் கொன்ற நாவிதனைக் கழுவிலேற்ற உத்தரவிட்டனர் நீதிபதிகள். “எதையும் நன்றாக ஆராயாமல், நன்றாகத் தெரிந்து கொள்ளாமல், நன்றாக விசாரிக்காமல், நாவிதன் செய்தது போல யாரும் செய்ய முற்படக் கூடாது. அது ஆபத்தை உண்டாக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே தக்க உதாரணமாகும். ஆகையால், நன்கு ஆராயாமல் கீரிப் பிள்ளையைக் கொன்ற பிராமணனின் மனைவியைப் போல் பிறகு வருந்த நேரிடும்” என்று கூறினர் நீதிபதிகள். ”அது எப்படி” என்று கேட்டான் மணிபத்ரன்

--------------------------------------

இதற்கப்புறம் தாண்டவராயர் பதிப்பில் கீரிப்பிள்ளை கதை உச்செயினியில் நடந்ததாய் வரும். வானவிற்பதிப்போ அப்படி ஒன்றும் விதந்து குறிப்பிடாது, “ஒருவூர்” என்று பொதுவாகவே சொல்லும். நன்றாய் நினைவு கொள்ளுங்கள் படித்தானத்திற்குத் தெற்கே எந்தப் பஞ்ச தந்திரக் கதையும் நடக்கவே யில்லை. எல்லாம் மகதப் பார்வையில் மத்திய தேசம், பழந் தக்கணத்தைக் களங் கொண்டவை. பின், புகாரென்று சிலம்பில் ஏன் மாறி வருகிறது? புரியவில்லை. இப்படிச் சிலம்பில் வருவது உண்மையில் இளங்கோ எழுதியது தானா? அன்றி யாரோவொருவர் நுழைத்த இடைச்செருகலா? - என்ற கேள்வி நம் மனத்தில் உடனே எழுகிறது. இனி வானவிற் பதிப்பின்படி, ஐந்தாந் தந்திர முதற் துணைக்கதைக்கு வருவோம்.

-------------------------------------------------

”அவசரத்தில் நேர்ந்த கொடுமை”

கதைக்குள் கதை

ஓர் ஊரில், தேவ சர்மா என்னும் ஏழைப் பிராமணனும், அவன் மனைவியும் வாழ்ந்து வந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின் பிராமணி ஒரு ஆண் குழந்தையையும், ஒரு கீரிப் பிள்ளையையும் பெற்றாள். அதனால் பிராமணனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. கணவனும் மனைவியும் குழந்தையைக் கருத்தோடு வளர்த்தனர். கீரிப் பிள்ளையையும் பாசத்தோடு வளர்த்தார்கள் என்றாலும், கொடிய விலங்கு என்பதால், அதனிடம் பிராமணனின் மனைவிக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை.

தங்களுடைய பிள்ளை முட்டாளாய் இருந்தாலும், போக்கிரியாய் இருந்தாலும், அழகற்று இருந்தாலும், கெட்ட நடத்தை உடையவனாய் இருந்தாலும் அதனால் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி குறைவது இல்லை.

ஒரு நாள் பிராமணனின் மனைவி, “நாதா, நான் ஆற்றுக்குச் சென்று நீராடி, நீர் கொண்டு வருகிறேன். குழந்தையைக் கீரி ஒன்றும் செய்துவிடாத படி பார்த்துக் கொள்ளும்” என்று கூறி, குழந்தையைப் பத்திரமாகத் தொட்டிலில் போட்டுவிட்டுச் சென்றாள். மனைவி சென்ற சிறிது நேரத்தில் பிராமணனும் பிச்சை எடுக்க ஆசைப்பட்டு வெளியே போய்விட்டான்

குழந்தைக்குக் கீரி காவலாக இருந்தது. அப்போது கருநாகம் ஒன்று ஒரு துவாரத்திலிருந்து வெளிவந்து, குழந்தையின் தொட்டிலுக்கு அடியில் ஊர்ந்து சென்றது. தன்னுடைய இயற்கைச் சத்துருவான பாம்பைக் கண்ணுற்ற கீரி, குழந்தைக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடக் கூடாதே என்று கருதி, பாம்பைக் கடித்துத் துண்டு துண்டாக்கியது. தன்னுடைய வீரச்செயலால் மகிழ்ச்சி அடைந்த கீரிப்பிள்ளை இரத்தம் வழியும் வாயோடு தாயின் வரவை எதிர்நோக்கி வாசலில் காத்திருந்தது.

கீரியின் கோலங் கண்ட பிராமணி தன் அருமைக் குழந்தையைக் கீரி கடித்துக் கொன்றுவிட்டதாகக் கருதி, அவசரப்பட்டு, தண்ணீர்க் குடத்தை அப்படியே கீரியின் மீது போட்டுக் கொன்றுவிட்டாள். பிறகு, வீட்டுக்குள் நுழைந்தாள். குழந்தை அமைதியாகத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. தொட்டிலுக்கு அடியில் பாம்பு கொல்லப்பட்டு, துண்டு துண்டாகக் கிடந்தது. அதைக்கண்டதும் பிராமணனின் மனைவி கதறி அழுதாள். “குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கீரியை அநியாயமாக அவசரப்பட்டுக் கொன்றுவிட்டேனே” என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பிராமணன் வீட்டுக்கு வந்தான். மனைவியின் அழுகையையும் புலம்பலையும் கண்டு என்னவென்று விசாரித்தான்.

“பேராசைக்கார பிராமணா, உன்னாற்றான் இப்படி நேர்ந்தது. என் சொற்படி கேட்காமல் நீயேன் வீட்டை விட்டு அகன்றாய்? ஆசை வேண்டியது தான். ஆனாற் பேராசை கூடாது. பேராசைக்காரன் தலையில் சக்கரம் சுற்றுகிறது” என்றாள் மனைவி. “எப்படி?” என்றான் பிராமணன். பிராமணி சொல்லத் தொடங்கினாள்

-----------------------------------------------------

”கீரிப்பிள்ளையும் பார்ப்பனியும்” கதைக்குச் சிலப்பதிகாரம் தரும் திருப்பம்:

தேவ சர்மனை எள்ளிய பார்ப்பனி, சக்ரதாரி கதையைத் தொடங்குவாள். சிலம்பிலோ இது வேறு திருகிற் (twist) தடம்மாறிச் செல்லும். இத்திருப்பத்தில், பார்ப்பனி, கணவனோடு இணைந்து செல்லப் பார்க்கிறாளாம். (அரும்பத உரையார் / அடியார்க்கு நல்லார் தரும் விளக்கமும் அப்படித்தான் உள்ளது)

“கீரியைக் கொன்ற கரிசு உன் மேலேறியது; பெரும்பிச்சைக்கு ஆசைப் பட்டதாய் எள்ளினாய்; உன் கையால் வாங்கியுண்ணும் வாழ்வு இனிக் கடவாது. உன்னை விட்டுப் போகிறேன். வடமொழி வாசகம் எழுதிய இந் நல்லேட்டை கடனறி மாந்தர் கையில் கொடுப்பாயாக” என்று சொல்லி மாமறையாளன் (சிலப்பதிகாரக் கூற்றின் படி) வட திசைக்கு ஏகிறான்.

"அபரீக்ஷய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம் பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா”

என்பது அரும்பதவுரைகாரர் எடுத்துரைத்த சங்கதச் சொலவமாகும். [34]. அது பஞ்சதந்திர சொலவமென்பது திரு.இரா.நாகசாமியின் ஊகம் மட்டுமே. அதன் பட்டகை (fact) இன்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கு எடுகோளாய்ச் சொல்லும் விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம் 12 ஆம் நூற்றாண்டு நூலாகும். அரும்பதவுரைகாரரின் காலம் 10/11ஆம் நூற்றாண்டென்று மற்ற ஆய்வாளர் சொல்வர். எப்படிப் பார்த்தாலும் அரும்பத உரைகாரர் 12 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவர் என்றே கொள்ளமுடியும். குறிப்பிட்ட சொலவம் இருந்த மூல நூலை இன்று வரை யாரும் பார்த்ததில்லை. உண்மை எதுவென்று சிலம்பைப் படித்துத் தெரிவதுமில்லை.

வெறுமே அரும்பத உரைகாரரின் கூற்றை வைத்து, ச.வையாபுரிப் பிள்ளை, ”பஞ்ச தந்திரத்திற்குப் பின்னாற் தோன்றியது சிலப்பதிகாரம்” என்று எப்படிச் சொன்னார்?[35] நமக்குக் கொஞ்சமும் புரியவில்லை. இப்படிப் பொ.உ.மு. 1 நூற்றாண்டின் மூலபாடத்தை யாருமே பார்க்காது, வெறும் 12 ஆம் நூற்றாண்டு சங்கத வழிநூலை மட்டுமே பார்த்து, ”வடமொழிப் பஞ்சதந்திரம் முந்தை, தென்மொழிச் சிலம்பு பிந்தை” என்று ச.வையாபுரிப்பிள்ளை முன்னுரிமை தருவது நமக்கு முற்றிலும் வியப்பாகிறது. மேற்கூறிய பாணினி, ஜைமினி, பிங்கல, சுங்க, கன்னர் – வாதத்தைப் பார்த்தால், சிலம்பிற்கு 35-40 ஆண்டுகள் கழித்தே பஞ்ச தந்திர மூல ஆவணம் எழுந்திருக்க வாய்ப்புண்டு. அதேபொழுது, முன்சொன்னது போல், சில தனிக் கதைகள் இந்தியாவெங்கணும் ஏற்கனவே வாய்மொழியிற் பரவி யிருக்கலாம். அது நூற்றுவர் கன்னர் தேசத்திற்கு அருகிருந்த சேர நாட்டு இளங்கோவுக்கும் (அல்லது அடைக்கலக் காதையின் குறிப்பிட்ட வரிகளுக்குச் சொந்தக்காரருக்கும்) தெரிந்திருக்கலாம்.

அடுத்து, பீடிகைத் தெருவில் (market street), பெருங்குடி வாணிகர் மாட வீதிகளில், மனைதோறும் மறுகி, ஏட்டைத் தூக்கிக் காட்டி ”கருமம் கழியும் பலன்கொள்வார் உண்டோ?“வென அருமறையாட்டி விற்கக் கூவுகிறாள். [அவ்வேட்டைப் படித்துப் பொருளறிந்தால் படிப்பவரின் வினைக்கருமம் ஒழியுமாம்.] கோவலன் ஏட்டை வாங்கித் துயர்துடைத்தான் என்று இளங்கோ எழுதியதும் வியப்பாகிறது.

செயினத்தின்படி வினைப்பயன் என்பது ஒரு ”விற்கும் பண்ட”மல்ல. ஆசீவகத்தின்படி, ஒருவர் நியதியை இன்னொருவருக்கு விற்கமுடியாது. புத்த நெறிப் படியும் ஒருவர் செய்கையின் விளைவு அவரையே சாரும். வேதநெறிப் படி மட்டுமே, வேள்வி நடத்தி, ”பாவ, புண்ணியங்களை” இன்னொருவருக்கு நகர்த்த முடியும். எனவே எழுதிக்கொடுப்பது பார்ப்பனனுக்கும், கூவி விற்பது மனைவிக்கும் சரி. ஆனால், கோவலன் போன்ற ஒரு சமணன் அதை வாங்கியதாய் (இளங்கோ போன்ற) வேறொரு சமணன் (!) எழுத முடியுமோ? எழுதியவன் உண்மையிலேயே சமணன் தானா? படிக்கும் போது வேடிக்கை ஆகிறது. இளங்கோ என்பவன் ஏமாற்றுக்காரச் சமணனாய்த் தெரிகிறதே?

கூவலைக் கேட்ட கோவலன் “நீ உற்ற இடர் யாது? இவ்வோலையென்ன?” என்று கேட்க, ”என் கணவன் என்னைக் கைவிட்டான், பொருட்பாடுள்ள இந்த ஓலையைக் கைப்பொருள் கொடுத்து நீவிர் வாங்கி, என் துயர் களைவீர்” என்கிறாள் பார்ப்பனி. “அஞ்சாதே! உன் துயர் களைவேன்; நெஞ்சு படு துயரத்தில் இருந்து நீங்குவாயாக” எனக் கோவலன் சொல்கிறான். வேத அந்தணர் உரைகளின் வழிகாட்டற் படி, அழனியோம்பும் பார்ப்பனியின் துயர்நீங்கத் தானஞ்செய்து, காடேகிய கணவனைக் கூட்டிவந்து, குறையாச் செல்வமும் உறுபொருளும் கொடுத்து நல்வழிப் படுத்திய செல்லாச் செல்வனே” எனக் கோவலனைப் பாராட்டுகிறான் மாடல மறையோன்.

இந்தப் பொருளில் வரும் சிலம்பு வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ”

சிலம்புத் திருகலின் மேலே நமக்கு எழும் கேள்விகள்:

மேலுள்ளதில், வெறும் ஒன்றரை வரிக் கீரிப்பிள்ளை கதைக்கு அடுத்து, ஏனென்று தெரியாது இருபத்து அரை வரிகள் முற்றிலும் வேறு திருகிற் செல்கின்றனவே? ஏன்? ஒன்றரை வரிக்கு இருபத்து அரை வரிகள் ஒப்புக்குச் சப்பானியா? இனிக் கேள்விகளையும், முன்னிகைகளையும் பார்ப்போம்.

1. முன்சொன்னது போல், பஞ்சதந்திர நூலின்படி, பார்ப்பனி, கணவனை எள்ளியதோடு உச்செயினியில் கதை முடிந்து, அடுத்த கதைக்குப் போகும். அதை அப்படியே ”அலேக்காய்”த் தூக்கி இடம் மாற்றிக் கொண்டு வந்து பூம்புகாரிற் கோவலனோடு இங்கு ஏன் ”இளங்கோ” பொருத்த வேண்டும்? இவ்வரிகள் உண்மையில் இளங்கோ எழுதியவை தானா? அன்றி யாரோ ஒரு வேதநெறி விழைவோர் இடையிற் கொண்டுவந்து செருகியதா?

2. ஓலை வாங்கியோர் தமக்கு இரக்கமிருந்தால் பார்ப்பனிக்குப் பொருளுதவி செய்யத்தான் போகின்றார். பின் “ஏன் கருமக் கழிபலங் கொள்மினோ?” என்று பார்ப்பனி கூவவேண்டும்? வேத நெறி இங்கு அழுத்தியுரைக்கப் படுகிறதா? அதன் தேவையென்ன? இது இடைச்செருகல் அல்லாது வேறென்ன? எப்படி எண்ணிப்பார்த்தாலும் எனக்கு அப்படித்தான் தெரிகிறது.

3. கீரிப் பிள்ளை பற்றிய சிலம்புக் குறிப்பு இளங்கோ எழுதியதெனில், ”வெவ்வேறு வாய்மொழிக் கதைகளின் புலமைத் தொகுப்பான” பஞ்சதந்திரம் எழு முன்னர், நாவலந்தீவில் அது நாட்டுப்புறக் கதையாகப் பரவியிருக்கக் கூடாதா? – என்ற கேள்வியெழுகிறது. அரும்பதவுரைகாரர் கொடுத்த வடமொழி வாசகம் எப்பொழுது யாரால் எழுதப் பட்டது?

4. சிலம்பின் படி, பார்ப்பனி கணவனோடு ஒத்துப் போக முயல்கிறாள்; அதே பொழுது, கோவம் அடங்காத பார்ப்பான், தன்னை எள்ளிய மனைவியை விலக்கி, ”புண்ணிய திசைக்குப்” பயணம் விழைகிறான். கோவக்காரப் பார்ப்பனன் வெறுமே வாயாற் சொல்லிப் போவது தானே? ஏன் ஒரு வடமொழி ஓலையை மனைவிக்கு எழுதிக் கொடுத்தான்? வடமொழி வாசகத்தால் மனைவி பிழைத்துக் கொள்ளட்டும் என்னுங் கரிசனையா? அதைப் படித்துத் தான் யாரும் புகாரிற் பார்ப்பனிக்குத் தானஞ் செய்வரா? படிக்காது துயரங் கேட்ட அளவில் உதவாரா? அவ்வளவு இரக்கங் கெட்ட ஊரா அது?

5. கோவலன் புகாரில் இருந்தபோது ”எந்தக் கால கட்டத்தில் கீரிப்பிள்ளை கதை நடந்ததெ”ன்று சிலம்பு சொல்லவில்லை. மாதவியோடு இருந்த காலம் எனில், ”சிலம்பு விற்க மதுரை போவோம்” என்றோ, ”பாண்டிய மன்னன் ஆராயாது தன்னைக் கொல்வான்” என்றோ, அப்பொழுது கோவலனுக்குத் தெரியாது. பார்ப்பனன் கொடுத்த ஓலைச்செய்தியையும், கோவலன் பார்ப்பனியைப் புரந்ததையும், மதுரைப் புறஞ்சேரியில் மாடல மறையோன் நினைவுறுத்தத் தேவையென்ன? வருமுன் செய்தியை ஆசிரியன் ஓதுகிறானா? யாருக்கு? படிப்பவருக்கா?

6. இன்னொரு உரைகாரராய்த் தன்னை இரா. நாகசாமி எண்ணிக்கொண்டு, ”கோவலன், பாண்டியனென இருவரும் யோசிக்காமற் செய்த செயல்களின் விளைவுகளால்” என்றும் கோவலனைப் பற்றி “he did not act with diligence and acted senselessly”” என்றுந் தன் சொந்த மதிப்பீட்டைத் திணிப்பது வேடிக்கையாகிறது.

7. ”பாண்டியன் தேராது செயப்போகுஞ் செயலை உணர்த்துவது” என்பது வேண்டுமென்றே திரு. நாகசாமி வரிப்பிளந்து சொல்லும் வலிந்த பொருள் ஆகும். தேரா மன்னன் பற்றி மாடலனுக்கு எதுவுமே முன்னாற் தெரியாது.

8. செல்வ ஆணவத்தாலும், அற்றை நிலவுடைமை வழக்கங்களாலும், மாதவி மேல் மையலாலும் புகார்க் காண்டத்திற் தவறிழைக்கும் கோவலன் மதுரையில் எதையுமே ஓராது செய்யான். முன்னால் இழைத்தது முழுதும் நன்றாக ஓர்ந்தே கண்ணகியிடம் பேசி, பீடிகைத் தெருவிற் சிலம்பு விற்கக் கோவலன் வருகிறான். ஊழின் வலிமையால் பொற்கொல்லனால், ஏமாற்றப் பட்டான். அவ்வளவு தான்.

9. ”கணவன் விட்டுப் போனான்; நானுய்யப் பொருளுதவி செய்வீர்” என்று துயரப்பட்ட பார்ப்பனி வெறுமே கேட்க, செல்லாச் செல்வனான கோவலன் உதவலாமே? “கீரிப் பிள்ளை” கதை இங்கு ஏன் வந்தது? அதன் மெய்ப்பொருள் என்ன? ”ஆராயாச் செய்கை” எனில், மாடலன் சொல்லைப் புரிந்து அதனாற் கோவலன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டானா? தான் கண்ட தீக்கனாவை முன்னால் சொல்பவன், அதற்கு மேலும் சிலம்பு விற்கப் பீடிகைத் தெருவிற்குப் போகத் தானே செய்கிறான்?

10.தானம் பெற்று, மனம் மாறி மனைவியோடு வாழப் பார்ப்பனன் எப்படி ஒப்புகிறான்? அப்படி மனம் மாறி வருவான் எனில், அதன் பொருளென்ன? பார்ப்பனன் கொண்டது பொய்க் கோவமா? அன்றிக் கருமக் கழிபலம் என்பது ஓர் ஏமாற்றுத் தனமா?

11.புகாருக்கு அடுத்துள்ள தலைச் செங்கானத்து மாடலன், தனக்குத் தெரிந்த செய்திகளைச் சொல்லிக் கோவலனை முகமன் கொள்கிறான். [இங்கே ஒரு கதை மட்டுமே இக்கட்டுரையிற் பேசுகிறேன். மாடலன் சொல்லும் மொத்த 3 கதைகளும் காப்பியத்தோடு கொஞ்சமும் பொருந்தாமலே அமைகின்றன. ”விருத்த கோபாலன்” எனக் கோவலனை அழைப்பது குறித்தும் என் நூலில் முன்னித்திருக்கிறேன் (commented). அங்கும் வேறொரு திறக்கில் இது இடைச்செருகல் என்று ஐயப்பட்டிருப்பேன்.]

12.ஆழ்ந்து ஓர்ந்தால், “Panca Tantra has played a crucial role in Silappatikāram“ என்று .திரு.இரா.நாகசாமி சொல்வதுபோல், சிலப்பதிகாரத்தில் பஞ்ச தந்திரம் எந்தக் கருவான பங்கையும் வகிக்கவேயில்லை. செயினரின் வினைப் பயனையோ, ஆசீவகரின் ஊழ் பற்றியோ கொஞ்சமும் அடிப்படைப் புரிதல் இன்றி பஞ்ச தந்திரம் படித்த யாரோ ஒருவர் வேதநெறியின் கருமக் கழி பலனைக் கதையோடு பொருத்தித் தன் சொந்தத் திருகலை சிலம்பினுள் இடைச்செருக முயன்றிருக்கிறார். அவ்வளவு தான். ஒரு சமணருக்கு இது கொஞ்சமும் ஏற்க முடியாத திருப்பமாகும்.

அண்மையில் கலிபோர்னியாப் பல்கலைக் கழகப் பேரா.சியார்ச்சு ஆர்ட், “ctamil” மடற்குழுவில் திரு.இரா.நாகசாமியின் கருத்தை மறுத்துத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்

”I think this is based on a misconception. Written texts in pre-modern South Asia are like the top of an iceberg, with the vast bulk invisible and comprised of oral stories and the like. Well, this is not really a good analogy, as the written texts in India are often (as with the Cilappatikaram, the Ramayana and the Mahabharata) based on oral material. It is possible that Ilanko actually knew a written "text" called the Pancatantra, but it seems to me much more probable that some of the stories that comprise that "text" were circulating in many forms in oral form all over South Asia and that Ilanko is referring to a story that was commonly told at the time by illiterate storytellers. I don't see how it is warranted to conclude that the written Pancatantra is older than the composition of the Cilappatikaram. Unfortunately, all the literature we have from pre-modern India is what was written down -- we are missing 99% of the material, which was in unwritten form. The interplay between written and unwritten literature was dynamic and ongoing, each borrowing from the other, but I don't think we can assume direct borrowing from a literary text unless the actual words are quoted. George”

இனி முதற்தந்திரம் 11 ஆம் துணைக்கதைக்கு (”நன்றி மறந்த தட்டான்”) வருவோம். முழுதும் இங்கு உரைக்காது சுருங்கத் தருகிறேன்.

--------------------------------------------------------------

”நன்றி மறந்த தட்டான்”:

பிருகுகச்சத்திற்கு அருகிலிருந்த ஊரில் யக்ஞ தத்தன் என்ற பார்ப்பனன் இருந்தான். (கவனங் கொள்ளுங்கள். இது நூற்றுவர் கன்னர் ஆளுகைக்குள் இருந்த, மகதத்திற்கு மேலைக் கடற்கரையிற் பயன்பட்ட, நருமதை யாற்றின் சங்கு முகத்திலிருந்த துறைமுகம். இக்காலத்தில் இது பரூச் எனப் படுகிறது.) ஒவ்வொரு நாளும் மனைவியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளான யக்ஞ தத்தன் பொருள் உதவி தேடிச் சின்னாட்கள் பயணித்து ஒரு காட்டுக்குள் நுழைந்தான். அவன் தண்ணீரைத் தேடி அலைந்த போது, ஒரு பெரிய கிணற்றைக் கண்டான். கிணற்றுள் புலி, குரங்கு, பாம்பு, ஒரு மனிதன் ஆகியோர் இருந்தனர்.

புலி தன்னைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடச் சொல்லிக் கேட்கிறது. முதலிற் தயங்கிய யக்ஞதத்தன், “உயிரிகளைக் காப்பாற்றுவதில் தன்னேர்ச்சி நேரிடுமானால் அதுவும் நன்மைக்கே” என்றெண்ணிப் புலி தீங்கு செய்ய மாட்டேன் என உறுதி கொடுத்ததால், தூக்கி வெளியே விட்டான். அடுத்தடுத்து குரங்கு, பாம்பு ஆகியவற்றையும் இதுபோல் உறுதி வாங்கிக் கொண்டு வெளியே தூக்கி விட்டான். அதன் பின்னர், புலி, குரங்கு, பாம்பு மூன்றுஞ் சேர்ந்து, “கிணற்றுள்ளிருக்கும் மனிதன் சகல பாவங்களையும் செய்யத் துணிந்தவன்; அவன் பேச்சை நம்பி மோசம் நம்பாதே!” என எச்சரித்தன.

புலி, யக்ஞ தத்தனை மலைக்குப் பக்கத்திற் காட்டிலுள்ள தன் குகைக்கு ஒரு முறை வரச் சொல்லித் தன்னால் இயன்ற உதவி செய்வதாகச் சொல்லியது. இதேபோல புலிக்குகைக்குப் பக்கத்திலிருந்த குரங்கும் வேண்டிச் சென்றது. “அவசியம் ஏற்படும் போது எனை நீ நினைத்தால் ஓடிவருவேன்” என்று சொல்லிப் பாம்பும் புறப்பட்டது. கிணற்றிலிருந்த மனிதனும் காப்பாற்றச் சொல்லிக் கத்துகிறான். இரக்கம் மேலிட்டு யக்ஞ தத்தன் அவனை வெளியே விடுகிறான். “நான் ஒரு தட்டான்; பிருகுகச்சத்தில் வசிக்கிறேன். தங்க ஆபரணம் செய்ய வேண்டின், என்னிடம் வா” என்றுகூறி அவனும் புறப்பட்டான்.

பிறகு, எங்கெங்கோ சுற்றிவிட்டு, உணவு கிடைக்காது பிராமணன் வீட்டுக்குத் திரும்புகையில் குரங்கு கூறியது நினைவிற்கு வர, அது வசிக்குமிடத்திற்குப் போனான். சுவை மிகுந்த பழங்களைக் கொடுத்து சாப்பிடச் செய்த குரங்கு, பசி தீர்ந்தவனிடம், “பழங்கள் வேண்டுமெனில் விரும்பியபோது இங்கே வந்து போ” என்று கூறியது. “நண்பன் செய்யவேண்டியதை எனக்குச் செய்தாய்; நன்றி! இப்போது புலியின் இடத்தைக் காட்டு” என்று கேட்டான் பிராமணன். குரங்கு புலிக் குகையைக் காட்டியது. புலி உபசரித்து, தங்க மாலைகளைப் பரிசாகக் கொடுத்து, ”ஓர் அரசகுமாரன் இவையணிந்து குதிரை மீதேறிக் காவலர் சூழ வந்தான். வழி தவறி வந்தவனைக் கொன்று இவற்றை வைத்திருந்தேன். நீ எடுத்து விரும்பிய திசையிற் செல்” லெனக் கூறியது.

மகிழ்ச்சியோடு பெற்று பிராமணன் திரும்பும் பொழுது பிருகு கச்சத் தட்டான் நினைவு வந்தது. அவனிடம் சென்றால், மாலைகளை நல்ல விலைக்கு விற்றுத் தருவான் என நம்பிப் போனான். தட்டான் வரவேற்று உபசரித்து,. “என்ன காரியம் ஆக வேண்டும்?” என்றான். “விற்றுத் தரவேண்டும்” என்றான் பிராமணன். நகைகளைக் கண்ட தட்டான், “இவற்றை அரசகுமாரனுக்கு நானே செய்து கொடுத்தேன். அரச குமாரனை பிராமணன் கொன்று அபகரித்தான் போலும்? அரசனிடம் பிராமணனைக் காட்டிக் கொடுத்தால், வெகுமதி கிடைக்குமே?” என்று கருதினான். “யாரிடமாவது காட்டி, விலை தெரிந்து வரும் வரை இங்கேயிரு” என்று பிராமணனிடம் சொல்லிச் சென்றான்.

நேராகச் சென்று காட்டிய போது, “உன்னிடம் எப்படி வந்தன?” என்று அரசன் கேட்கத் தட்டான் தன் வீட்டிற்குப் பிராமணன் கொணர்ந்ததைக் கூறினான். அது கேட்டு அரசன், “நிச்சயமாக, அரச குமாரனைக் கொன்று, பிராமணன் மாலையை அபகரித்திருக்கிறான்.. அவனைக் கைது செய்து சிறையில் அடைத்து, காலையிற் கழுவில் ஏற்றுங்கள்” எனக் கட்டளையிட்டான். சிறைக்குட் சிக்கிய பிராமணன் தன்னிலை நொந்து, பாம்பை நினைக்க, அது வந்தது. “என்னை விடுவி” என, “அந்தப் புரத்தில் இராணியைக் கடித்து விடுகிறேன். மந்திரம் ஓதினும், விடமுறி தடவினும், விடம் இறங்காது. நீ போய்த் தொட்டால், இராணி உயிர் பெறுவாள். உனக்கு விடுதலையும் வெகுமதியும் கிடைக்கும்.” என்று பாம்பு கூறிப் போயிற்று.

சற்று நேரத்தில் இராணியைப் பாம்பு கடித்தது. பலரும் என்னவோ செய்தும் விடம் இறங்க வில்லை. “விடத்தை இறக்கிக் குணப்படுத்துவோருக்கு வெகுமதி வழங்குவதாய்” அரசன் அறிவிக்க, அது கேட்ட பிராமணன் குணப் படுத்துவதாகச் சொல்ல, காவலர் கட்டுக்களை அவிழ்த்து அரண்மனைக்குக் கூட்டிச் சென்று, அரசனிடம் விதயத்தைத் தெரிவித்தனர். பிராமணன் இராணியைத் தொட, விடமிறங்கியது. இராணி மலர் முகத்தோடு எழ, அரசன் பரிசுகள் வழங்கினான். “இவ் ஆபரணங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன?” என்று அரசன் கேட்கப் பிராமணன் நடந்ததைச் சொன்னான். உண்மை அறிந்த அரசன் தட்டானைச் சிறையிலடைக்க உத்தரவிட்டான். பிராமணனுக்குப் பலவூர்கள் வழங்கி, அமைச்சனாக ஆக்கிக் கொண்டான். பிராமணன் தன்னூருக்குச் சென்று குடும்பத்தாரையும், உற்றாரையும் அழைத்து வந்து, பல யாகங்களைச் செய்து, அரச அலுவல்களைச் சீராகப் பார்த்துச் சுகமாகக் காலம் கழித்தான்.

---------------------------------------------------------

இதோடு முதல் தந்திரத் தொடர் நீளும். நம் கேள்விகள், முன்னிகைகளுக்கு வருவோம்.

1. நன்றி மறந்த தட்டானில்” நிகழ்வுகள் சுகமாக முடிகின்றன. சிலம்பிலோ ஒரே சோகம். ஆனாலும் தட்டான் பங்கு ஒரே மாதிரியாகவா இருக்கிறது? சிலம்பிற் பொற்கொல்லன் களவுக் குற்றம் மறைக்க கோவலனைக் காட்டிக் கொடுக்கிறான். பஞ்ச தந்திரத்திலோ, தவறு செய்யாத் தட்டான், வெகுமதி விரும்பித் தன் பேராசையால், யக்ஞ தத்தனை மாட்டி விடுகிறான். இரண்டும் நுணுகிய, ஆனால் உறுதியான வேறுபாடுடையவை. பஞ்ச தந்திரத்தில் பேராசை தலையெடுத்ததால் தட்டான் நன்றி மறக்கிறான்; சிலம்பிற் தப்புச் செய்யும் பொற்கொல்லன் அரச தண்டனையிலிருந்து தப்பிக்க, கோவலனை மாட்டிவிடுகிறான்.

2. சிலம்பில் அரச நியதி வழுவுகிறது. பஞ்ச தந்திரத்தில் அது வழுவ வில்லை. பஞ்ச தந்திரத்தில் யக்ஞ தத்தனிடம் அரச குமாரனின் மாலைகளே  உள்ளன. கோவலனிடமிருந்து காவலர் கொணர்ந்த சிலம்பு அரசியுடையது அல்ல; அது கண்ணகியுடையது. பஞ்சதந்திரத்தில் பின்னால் “என்ன நடந்தது?” என்று கேட்டறிந்து, அரசன் தட்டான் செயலைத் தண்டிக்கிறான். சிலம்பில், ஊழால் எல்லாம் தடுமாறிப் போகின்றன. இரு நூல்களின் குறிக்கோள்களும், அழுத்தங்களும் வெவ்வேறானவை. பஞ்சதந்திரத்தில் தட்டான் நன்றி மறக்கிறான். சிலம்பில் அப்படியொரு தேவையே பொற்கொல்லனுக்கு இல்லை. அவன் தன் களவுக் குற்றம் மறைக்க முயல்கிறான். ஆதாரமின்றி, “நன்றி மறந்த தட்டானைப் படித்தே சிலம்புப் பொற்கொல்லன் படைக்கப் பட்டான்” என்பது, ஞாயமின்றித் திரு இரா. நாகசாமி இளங்கோவை ஒரு கதைத் திருடராய்ப் பழிப்பதாகும். இப்படியொரு பழி இளங்கோவிற்குத் தேவையா?

3. சிலப்பதிகாரம் எழுந்தது பொ.உ.மு.75-80 என்று என்னூலில் நிறுவினேன். பஞ்சதந்திர மூலமெழுந்தது பெரும்பாலும் பொ.உ.மு.40-30 ஆகும். இரா.நாகசாமி செருமனிக் கட்டுரைப் படியும் பஞ்ச தந்திரத்தின் மூலக் காலம் பொ.உ.மு. முதல் நூற்றாண்டே. (தினமலர் பொ.உ. முதல் நூற்றாண்டென்று தவறாகக் குறித்தது.) இந்நிலையில் யார் கதைத் திருடர்? கதையை முன்னே சொன்னவர் யார்? அல்லது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததா?

”பாழ்கிணற்றில் வீழ்ந்த பொற்கொல்லன் ஒருவன், தன்னைக் காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வனெனப் பொய் கூறி தண்டனை பெற்றுத் தந்த கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அக்காலத்து வழக்கிலிருந்த நீதிகளையெடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்தார்.” என்று திரு.இரா.நாகசாமி சொல்வதைக் கொஞ்சமும் ஏற்கவியலாது. ”இளங்கோ ஒரு கதைத்திருடர்” என்று இரா.நாகசாமி இங்கே நேரடியாய்ச் சொல்லாமற் பூசி மெழுகிச் சொல்கிறார். நாம் அதிர்ந்து போகிறோம். இக்கால நய மன்றங்களில் ”கதைத் திருட்டு” பற்றிய எத்தனையோ வழக்குகள் நடைபெறுகின்றன. ”நன்றி மறந்த தட்டானு”க்கும், சிலம்பின் பொற்கொல்லன் கதைக்கும் இடையே உறவு என்பது ஏணி போட்டாலும் காணாது. பொறுமையாய், ஆழமாய்ப் படித்த எவரும் அப்படிச் சொல்லார்.

ஈற்றுவாய்:

சிலம்பிற்குப் பஞ்ச தந்திரம் அடிப்படை என்பது முறையிலாக் கூற்றாகிக் காலக் கணிப்பை ஒதுக்கித் தன்மயக் கருத்தை வலிந்து திணிப்பதாகும். பார்ப்பதற்கு ஒன்று போல் சில காட்சிகள் (தட்டான், பொற்கொல்லன் கதையில்) தோற்றமளித்தாலும், 2 நூல்களின் உள்ளார்ந்த குறிக்கோள்கள் வேறானவை. வடபுலப் பஞ்சதந்திரம் பார்த்து தென்புலச் சிலம்பின் அடிக்கோள்களைத் தேடாது, சிலப்பதிகாரத்துளேயே திரு.இரா.நாகசாமி ஏன் தேடக் கூடாது? காப்பிய முழுமைக்கும் அடியொலியாய் 3 குறிக்கோள்களைப் பால்வகை தெரிந்த பதிகம் தெளிவாய் உணர்த்துகிறதே? [பெரும்பாலும் பின்னாற் சேர்க்கப்பட்ட பதிகம் இளங்கோ எழுதியதில்லை என்றாலும், கற்றுணர்ந்தோர் கொள்ளும் பாயிரமாய் இதை ஏற்கலாம் தானே?]

“அரைசியற் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி கார மென்னும் பெயரால்
நாட்டுது மியாமோர் பாட்டுடைச் செய்யுளென”

என்ற வரிகள் நூற்பொருளைப் பிழிந்து தருபவை.

”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு”மென்பது கோவலன் மேற் பொதியும் குமுகப் பார்வையாகும்.

”அரைசியற் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது” நெடுஞ்செழியனின் அழிவின் மேற்கொள்ளும் நயதிப் பார்வையாகும்.

”உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலென்பது” குமுக நயதிக்குப் போராடி, பாண்டியனைப் பழி கொண்டு, மதுரை தீக்கிரையானது சொல்லி, குமுகத்தார் பரசும் பத்தினிப் பார்வை.

 [பத்தினியென்பாள் தொழத் தக்கவள் என்பதே முதற் பொருளாகும், கற்புக்கு அரசி என்ற இக்கால விதப்பெல்லாம் இரண்டாம் நிலைப் பொருளாகும்.]

கூடவே, ”முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகளே நீரே அருளுக” என்ற அழுத்தத்தால், காப்பியத்தின் 3 குறிக்கோள்களுக்கு அடுத்து, இன்னோர் அடிக்கோளாய், மூவேந்தர் நாடுகளை தமிழகக் கூறுகளாக்கி, தமிழர் ஓரிமையை இளங்கோ வலியுறுத்துவது புலப்படும்.

அந்தத் தூண்டலை தமிழுக்குள் பாராது, வடமொழி நூல்களுக்குள் விழுந்து விழுந்து திரு இரா. நாகசாமி போன்றோர் தேடுவது வேண்டா வேலையாகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சிலப்பதிகாரம் என்பது உண்மையிலேயே ஒரு தமிழர் காப்பியம் தான்.

எடுகோள்கள்:

34. “சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்குநல்லாருரையும்”, டாக்டர். உ.வே.சா. நூல்நிலையம், பத்தாம் பதிப்பு, 2001. பக்.402-403.
35. http://viruba.com/final.aspx?id=VB0003195

Thursday, February 07, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 2

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது இரண்டாம் பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

மேலேயுள்ள தினமலர்ச் செய்திக்குப் பின், 2012 செபுதம்பர் 27-29 இல், செருமனி லெய்ப்சிக்கில் “Global Impact of Panchatantra” என்ற கருத்தரங்கில், “Panchtantra stories in Cilappatikaaram” என்ற கட்டுரையை திரு.இரா.நாகசாமி வாசித்தார் [14]. அண்மையில் சந்தவசந்தம் மடற்குழுவில் ஊசுடன் நா.கணேசன் முன்வரித்து இக்கட்டுரையைப் படித்து வியந்தேன்.[15] திரு.இரா.நாகசாமி கூற்றுக்கு மறுப்பாய் என்னுடைய இக்கட்டுரை எழுகிறது.

மூவகைப் பங்காளர்:

நம்மிற் பலரும் புகழ் பெற்ற கல்கியின் ”பொன்னியின் செல்வன்” வரலாற்றுப் புதினத்தைப் படித்திருப்போம். அதில், அருண்மொழி வருமன் (இராசராசன்), அவன் அண்ணன் ஆதித்த கரிகாலன், தமக்கை குந்தவை, தந்தை இரண்டாம் பராந்தகனெனும் சுந்தரசோழன், வல்லவரையன் வந்தியத்தேவன் போன்றோர் வரலாற்றுப் பின்புலங் கொண்டிருக்க, வானதி, நந்தினி, பூங்குழலி, சேந்தன் அமுதன், ஆழ்வார்க்கடியான், கந்தமாறன் போன்றோர் முற்றிலும் புனைவாளர் ஆவர். வரலாற்றில் இருந்திருக்கக் கூடிய ஆனால் இயற்பெயர் விவரம் தெரியாச் செம்பியன் மாதேவி, பூதி விக்கிரம கேசரி, பழுவேட்டரையர், பார்த்திபேந்திர பல்லவன், அநிருத்த பிரம்மராயர் ஆகியோர் மூன்றாம் பக்கலைச் சேர்ந்தவராவர்.

பொதுவாக, ஒரு வரலாற்றுப் புதினம்/காப்பியம், தன் குறிக்கோளை நிலை நாட்ட, விதப்பான நிகழ்வுகளை விவரித்து, “வரலாற்று இயலுமையை (historical plausibility)" அழுத்தியுரைக்கும். இப்படிச்செய்யக் வரலாற்றுறுதிப் பங்காளர், புனைவுப் பங்காளர், வரலாற்றியலுமைப் பங்காளர் என மூவரும் ஒரு காப்பியத்துட் தேவை. அதே போது, கதை மாந்தர் உருவாக்கலிற் ”குண நலச் சிக்கனம் (parsimony of characters)” காட்டுவர். கண்ட படி, புனைவுப் பங்காளரைச் சேர்க்கார். சேர்த்தால், அது தேர்ந்த காப்பியம் ஆகாது; வழவழ எனக் கதை நீண்டு, வரலாற்று நம்பகமின்றிக் காப்பியச் சுவை குன்றும்.

பொன்னியின் செல்வன் போலவே சிலப்பதிகாரத்திலும் மூவகைப் பங்காளர் உண்டு. காலத்தால் மூத்த கரிகாற் சோழன், புகார்ச் சோழன் (மாவண்) கிள்ளி (இவன்பெயரை ”மணிமேகலை”யால் அறிகிறோம்), உறையூர்ச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், நெடுஞ் செழியன், வெற்றிவேற் செழியன், சேரன் செங்குட்டுவன், அவன் உறவாய் முன்சொன்ன 8 சேரர், கனக விசயர், நூற்றுவர் கன்னர் போன்றோர் வரலாற்றுறுதி மாந்தராவர். [இலங்கைக் கயவாகு, மாளுவ வேந்தர் போன்றோரை இங்குக் கணக்கில் எடுக்க வில்லை. ஏனெனில், என் நூலில், ”பதிகம், வரந்தரு காதை போன்றவற்றை இளங்கோ படைத்திருக்க வாய்ப்பில்லை” என்ற ஐயப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பேன்.}

கண்ணகியும் வரலாற்றுப் பெண்ணே. அவளை நினைவுட்டும் அம்மன், பகவதி கோயில்கள் இன்றும் பலவுண்டு. (தமிழகத்திற் பல கோயில்கள், செயற்கரிய செய்து உயிர் துறந்த நாயகிகளுக்கு நினைவாற் கட்டிய பள்ளிப் படைகளே. காட்டு: சென்னைக்கருகில் திருவேற்காட்டு, மாங்காட்டு அம்மன் கோயில்கள்) தமிழக, கேரள நாட்டார் வழக்குகள், கொடுங்களூர் பகவதி மரபுகள், ஈழத்தின் (கிழக்கு மாகாண மட்டக்களப்பிற்குப் பக்கம்) பத்தினிப் பரசல்கள், கன்னடச் “சந்திராவின் பழிவாங்கற்” கதை, எனப் பலவும் அவள் வரலாற்றுறுதியைக் காட்டுகின்றன. பந்துறாமல் உறுத்தி (independent confirmation) எருக்காட்டூர் தாயங் கண்ணனாரின் அகநானூறு 149ஆம் பாடலும், மருதன் இளநாகனாரின் நற்றிணை 216ஆம் பாடலும் சிலம்போடு பொருந்தி ஒருமுலையறுத்த திருமாவுண்ணியை அடையாளங் காட்டுகின்றன.

கண்ணகி நிகழ்வுகளைச் சாத்தனார் மூலம், செங்குன்ற நிகழ்வுகளைக் குன்றக் குரவர் மூலம் கேள்விப்பட்டு இளங்கோ காப்பியமெழுதுகிறார். ”கதைசொன்ன சாத்தனார் கற்பனை பேசினார்” என்பது கேள்வியையே இரப்பதாகும். சாத்தனார் இளங்கோவின் கற்பிதமெனிற் குணநலச் சிக்கனக் கொள்கைப் படி, அவர் காப்பியத்துள் வரத் தேவையில்லையே? இளங்கோவே நேரடிக் கதை சொல்லலாமே?” - என்ற கேள்வியெழும். உள்ளமைத் தேவையால், சாத்தனார் என்பார் வரலாற்றிலிருந்ததை முடிவு செய்யலாம்.

காப்பியத்துள் கோவலன், மாதவியின் வரலாற்றிருப்பு சற்று நிரடுகிறது. இவர் போன்றோர் முதல் வகையல்ல. மூன்றாம் வகையாய் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாசாத்தன், மாநாய்கன், பொற்கொல்லன், அழும்பில் வேள், வில்லவன் கோதை போன்றோரும் மூன்றாம் பக்கலாகலாம். மாதவி மகள் மணிமேகலைக்கு எந்த வரலாற்றுச் சான்றுமில்லை, அவள் இரண்டாம் வகையோ, மூன்றாம் வகையோ எனத் தடுமாறுகிறோம். (நீலகேசிக் காப்பியத்திற் கற்பனை நீலகேசியே, காப்பியத் தலைவி ஆவாள்.)

கதைநாயகரின் தாய்மார், மாதவியின் தாய் சித்திராபதி, வசந்தமாலை, கவுந்தியடிகள், தேவந்தி, மாடலன், கோசிகன், மாங்காட்டு மறையோன், மாதரி, ஐயை போன்றோர் 2 ஆமவராய், முற்றிலும் புனைப்பங்காளராய், காப்பியத்தில் அமைவதாகவே எமக்குப் படுகிறது. இத்தனை புனைப் பங்காளர் வருவதாலேயே, சிலப்பதிகாரம் வரலாற்றுக் காப்பியமல்ல என்று சொல்லிவிட முடியாது.

வரலாற்று இயலுமை:

”சிலம்பு நிகழ்வுகள் சிலவற்றிற்கு வரலாற்று இயலுமையுண்டா?” எனில் ஆம் எனலாம். வடக்கே போன கரிகாலனின் படையெடுப்பை நினைவு கூர்வதிலும், புகார் நகர விவரிப்பிலும் வரலாற்றியலுமை வெளிப்படும். அப் படையெடுப்பு குமுகாயத்தில் ஆழப்பதிந்திருந்தால் மட்டுமே காப்பியத்திற் பதிய முடியும். அற்றுவானத்தில் இருந்து இதைக் குதிப்பித்து, நிகழ்ப்பொய் சொல்லி ஒரு காப்பியத்தை அரங்கேற்ற முடியாது. காப்பியத்துள் மோரியர் என்போர் வம்பர் - புதியவர் என்று சொல்லப்படும்; பொய்யெனில் புதியவரென்ற கருத்து எழுமா? முதற் கரிகாலன் படையெடுப்பு ”அந்நாளாய்” இறந்த காலத்திற் குறிப்பிடப் படும். எனவே,

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபிற் தோரண வாயிலும்

என்ற விவரிப்பு கற்பனையாக இருக்க வழியில்லை. (மேலுள்ள வரிகளிற் கோன், வேந்தன் என்ற இருவகைப் பிரிப்பு. இறை, பகை, உவகை எனும் மூவகைப் பார்வை, பந்தர், மண்டபம், வாயில் என்ற மூவகைக் கட்டுமானம் இவையெல்லாம் வேறுபட்ட விவரிப்பாய் ஏன் வந்துள்ளன?) ”கரிகாலன் பெற்ற வெற்றி பெரிதா, சிறிதா? எச் சூழ்நிலையில் நடந்தது? இளங்கோ பேனைப் பெருமாள் ஆக்கினாரா?” என்ற விவரணையில் வேண்டின், இரு வேறாக வாதிக்கலாம். ஆனாற் பட்டகையே (fact) பழுதாகிவிட முடியாது.

புகார் நகர விவரிப்பு உண்மையென்று புலனாக, புகாரொட்டிய தொல்லாய்வு / கடலாய்வு நடைபெற வேண்டும். குறிப்பாகத் தமிழகத் தொல்லியல் துறை [16], எசு.ஆர்.இராவ் [17], கிரஃகாம் ஆன்காக் [18] ஆகியோர் முயற்சிகளைத் தொடர வேண்டும். தஞ்சைப் பல்கலைக் கழக வழிகாட்டலிற் பெருங் கடலாய்வைத் தமிழக அரசு செய்யப்போவதாக அண்மையிற் கேள்வி யுற்றேன். இது நடப்பின் நல்லது.

மதுரைக் காண்டத்தில் கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தனான நெடுஞ் செழியன் ஆராயாது தவறியதும், அவனோடு கோத்தொழிலர் (bureaucrats) கோமுறை (governance) தவறியதும், கணவன் கொலைக்களப் பட்டபின் அரசன் முன் வழக்குரைத்த கண்ணகி முடிவில் முலை திருகி எறிந்ததும், மதுரை தீக்கிரையானதும் அன்றைய நிலையிற் குறிப்பிடத் தக்கவை தான்.

இந்நிகழ்வுகளின் உண்மைக்கு முன்னே சொன்னதுபோல் இரு சான்றுகள் உண்டு. கண்ணகி முலை திருகியெறிந்ததை மருதன் இளநாகனாரின் நற்றிணை 216 பதிவு செய்யும். அதில் வரும் திருமாவுண்ணி கண்ணகியினும் வேறுபட்டாள் என்பது சரியில்லை. ”பெண்ணொருத்தி முலை திருகியெறிந்து நகரம் தீக்கிரையாகுமா? – என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. இலக்கியப் பாங்கில், நாடகக் காப்பிய உத்தியாய், பொதுமக்கள் நம்பிக்கையாய், அதை எளிதாய் ஏற்க முடியும். ஏற்கனவே வேறு காரணத்தில் அரசன் மேல் கோவங் கொண்ட மக்கள், கண்ணகி விதயத்தில் மன்னனை முற்றுகையிட்டு, அதனால் வன்முறை தெறித்து, அரண்மனை தீக்கிரை ஆனதோ, என்னவோ? ஆசிரியர் அதைத் தெய்வச் செயலாய் உரைத்தார் போலும்.

மதுரை தீக்கிரையான பின் பட்டத்திற்கு வந்த வெற்றிவேற் செழியன் பாண்டியர் குலத்தின் மேல் வீழ்ந்த பழியைத் துடைக்க, வெஞ்சினங் கொண்டு, வஞ்சிமேற் சமரெடுத்து, தண்டனை கொடுக்கும் தும்பைப் போரிட்டு (punitiive expedition), கண்ணகியின் படிமத்தை வவ்வித் திரும்புகிறான். எருக்காட்டூர்த் தாயங் கண்ணனாரின் அகநானூறு 149 இதைத் தெளிவாய்ப் பதிவு செய்கிறது, (இருப்பினும் சிலம்பைக் கற்பனையெனும் பரப்புரையிற் பல வரலாற்று ஆய்வாளர் ஆழ்ந்து போய்த் தடுமாறுகிறார்.) தவிரச் சேரன் நிறுவிய படிமத்தைப் பாண்டியன் வவ்விப் போனதை மெய்ப்பிப்பதாய், இன்றும் கொடுங்களூர் மூலத் திருநிலை (சந்நிதி) 4 பக்கமும் மூடி, மூலப் படிமமின்றி பகரிப் (Substitute) படிமத்திற் பகவதி எழுந்தருளுகிறாள்.

இப்படி நற்றிணை, அகநானூறு என 2 பாட்டுக்கள் கண்ணகி என்பாளின்  இயலுமைக்குச் சான்றாகத் தெரிவதை முன்னாள் ஆய்வர் கண்டு கொள்ளாததும், இன்று கொடுங்களூர் பகவதி கோயிலில் படிமம் இல்லாததும் எனக்கு வியப்பே. கால ஒழுங்குமுறையில் ஏற்பட்ட குழப்பம் இம்முரணுக்குக் காரணம் போலும். முன்னாய்வாளர் சிலம்புக் காலத்தை 200 ஆண்டுகள் பின் தள்ளியதால், ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி அவருக்கு வேறாகவே தெரிவாள். Wrong misplaced theory precedes the fact here and confuses the interpretation. அதன் விளைவாகச் செழியன் படிமம் வவ்வியதும் கூடப் புறக்கணிக்கப்படும். குழப்பம் ஆய்வாளர் புரிதலிற்றான் உள்ளது; பட்டகைகளில் அல்ல.

செங்குட்டுவன் படையெடுப்பும், கல்லெடுப்பின் வரலாற்றியலுமையும், நூற்றுவர் கன்னர் பற்றிய விதப்புக் கூற்றாலும், இற்றைப் பத்தினி வழி பாட்டிலும் பெறப்படுகிறது. எப்போது சான்றுகளைக் (சாட்சிகளைக்) கொணர்வோம்? நடக்கும் நிகழ்ச்சி உண்மையெனில் மட்டுமல்லவா?. சேரன் படையெடுப்பு வெறும் வெற்றுப் புகழ்ச்சியெனில், காப்பியத்தில் நூற்றுவர் கன்னர் ஏன் வருகிறார்? சேரனின் பெருங் கழற்றம் (proclamation) போதுமே? படையெடுப்பும், நூற்றுவர் கன்னராட்சியும் முகன்மையெனில் மட்டுமே, சஞ்சயன் பற்றியும், காசிக்கருகே கங்கை கடக்க வங்கப் பரப்பு உதவியதும், குறிப்பிடப்பட வேண்டும்.

”மத்திம நன்னாட்டு வாரணம்” என்பது சேரர்-கனகர் போர்ப் பறந்தலைக்கு அருகிருந்த வாரணாசியைக் குறிக்கிறது. பொ.உ.முதல் நூற்றாண்டு “Periplus of the Erythryean Sea” இல் சதகர்ணி, படித்தானம், பிருகு கச்சம், சோப்பாரா, கல்யாண் போன்ற இடங்கள் பேசப் படுவதும், கன்னர் நாட்டின் வணிகப் பரிமாற்றங்களும் தக்கணப் பாதையின் [19] முகன்மையை உணர்த்தும். அக் காலத்திற் படித்தானம் (>பயித்தானம்>பைத்தான் (=Paithan) போகாது, நூற்றுவர் கன்னரை நள்ளிக் கொள்ளாது (நட்புக் கொள்ளாது) எந்தத் தெற்குப் படையும் வடக்கே போக முடியுமா?

”வடக்கே கல்வெட்டு, ஆவணச் சான்றில்லை” என்று செங்குட்டுவன் படையெடுப்பை மறுப்போரே இந்திய வரலாற்றாய்வில் மிகுதி. தமிழ் ஆய்வாளரோ இது கண்டு வாளாவிருக்கிறோம். 18 மாத இராமாயணப் போர், 18 நாள் பாரதப் போர் ஆகியவை உள்ளமையென வாதிடும் இந்தியவியலார், 18 நாழிகை செங்குட்டுவ – கனக விசயப் போரைக் கற்பனை என்றால்  என் சொல்வது? ”கடவுள் எழுதவோர் கல்லெடுக்க முனைந்த போர்” 18 நாழிகையில் முடிந்த போது, (This is just a skirmish in terms of historical impact on Kanwa rule in Magadha.), கனகர் வரலாற்றில் சேரர் வெற்றியை எப்படிக் குறிப்பர்? (18 வடமொழிப் புராணங்களில் கனகர் விவரங்கள் அரச பட்டியலாக மட்டுமே இருக்கின்றன; மேல் விவரங்கள் எங்கும் கிடையாது.)

சமயக் குறிப்புக்களை சிலம்பின் மேலேற்றுதல்:

காப்பியத்தின் வரலாற்று இயலுமை பற்றி விரிவாகப் பேசிய நாம், ”சமயக் குறிக்கோள் சிலம்பிற்குண்டு” என்று ஆய்வாளர் சொல்வதையும் பார்க்க வேண்டும். மணிமேகலை, புத்தம் பேசுவது போல், சிந்தாமணி / நீலகேசி செயினம் பேசுவது போல், சிலப்பதிகாரம் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குப் பரிந்து பேசுவதல்ல. ஆயினும் சிலம்பைச் சங்கம் மருவிய காலத்திற் பொருத்தி, அது செயினஞ் சார்ந்தது என்று சொல்வது தன்மயப் புரிதலே ஆகும். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமயக் கருத்துகளை இளங்கோ வெளிப்படுத்தினார் எனும் திரு.இரா.நாகசாமி கூற்றுஞ் சரியல்ல. வெவ்வேறு சமயப் பழக்கங்களை இளங்கோ குறித்ததற்கும் சமயச் சார்பிற்கும் பெருத்த வேறுபாடுண்டு. வரந்தரு காதையன்றி சமயக் கருத்துக்கள் சிலம்பு நூலெங்குஞ் சொல்லப்படவில்லை. தவிர, வரந்தரு காதை என்பது இளங்கோ இயற்றியதாய்த் தோன்றவில்லை

சமணம் என்பது சங்க காலத்திற் (பொ.உ.மு. 600 - பொ.உ. 300) பொதுமை யாகிச் செயினம், புத்தம், ஆசீவகம் என்ற வேதமறுப்பு நெறிகள் மூன்றையும் குறிக்கும். பொ.உ. 300க்குப் பின் தான், சிறிதுசிறிதாய் ஆசீவகம் அழிந்து, புத்தம் தமிழகத்திற் குறைந்து, ஈழத்திற் அது சிறந்த நிலையில், ”சமணம்” என்ற சொல் விதப்பாய்ச் செயினத்தை மட்டுமே தமிழ்நாட்டில் பிற்காலத்தில் குறித்தது. [சங்க காலத்துத் தமிழிக் கல்வெட்டுக்களிலும் இது போல், ஆசீவக, புத்தச் சார்புகளை ஒதுக்கி, அவற்றை வெறும் செயினமாய்ப் பார்ப்பது சரி யல்ல. சங்க காலத்தில் சமணத்தை விதக்காது, பொதுவாய் நோக்கினால், ”சிலம்பு பேசுவது செயினமா, ஆசீவகமா?” என்ற கேள்வியெழும். குறிப்பாக ஊழ்வினை என்பது செயினத்தின் முற்பிறவி வினைப்பயன் குறித்ததா, அன்றி ஆசீவகத்தின் நியதியைக் குறித்ததா? - என்பதில் ஆய்வு வேறுபடும்.

இன்னும் விதப்பாய் ஊசுடனைச் சேர்ந்த திரு.நா.கணேசன், மு.இராகவ ஐயங்காரரைப் பின்பற்றிச் சிலப்பதிகாரம் விண்ணவம் சார்ந்ததென்பார் [20]. (இவரே இன்னொருபொழுதிற் சிலம்பைச் செயினமென்பார். நேரத்திற்குத் தக்கபடி பேசுபவரிடம் என்ன உரையாடுவது?) இவர் கூற்றின் படிக் கோவலன் என்பான் கண்ணனையும், கண்ணகி - இலக்குமியையும், மாதவி – முல்லை ஆய மகளிரைக் குறிக்கிறர்களாம். இப்படித் தற் குறிப்பேற்றங்களை திரு. நா.கணேசன் இளங்கோவின் மேற் சுமத்துவார். இது போல வேத  நெறிக்கு ஆதாரங் காட்ட விழைவாருமுண்டு. ”வேதங்களை ஏற்றிப் போற்றும் தமிழ் இலக்கியங்கள்” என்ற நூலில் (கே.சி.லட்சுமி நாராயணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், சென்னை 600017) சிலம்பு மட்டுமல்ல, எல்லாச் சங்க இலக்கியங்களும் வேதநெறிக்கு அணைவாய்ச் சொல்லப் படும். மைக்கேல் தானினோ என்ற இந்துத்துவ நெறியாளரும் இதே கருத்தை இணையத்திற் சொல்வார் [21]. இது இந்துத்துவக் காலம்.

தந்தஞ் சமயக் குறிப்புகளைச் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மேல் ஏற்றுவது காலங் காலமாய் இங்கு நடக்கிறது. சங்க இலக்கியங்களுள், இறைச் சார்பும், இறை மறுப்பும், வேதநெறி விதப்பும், வேதநெறி மறுப்பும், சாங்கியம், ஆசீவகம், செயினம், புத்தம், விதப்பியம் (வைஷேஸிஷம். இதைச் சிறப்பியம் என்றுஞ் சொல்வதுண்டு), சிவம், விண்ணவம் எனப் பல்வேறு சமயக் கருத்துக்களும் இழைகின்றன. சில பாக்கள் இன்னதென்று விதக்க முடியாதும் உள்ளன. நான் புரிந்துகொண்ட வரை சங்க இலக்கியம் என்பது எல்லாங் கலந்த வண்ணக் கோலந்தான்; எல்லா வழிபாடுகளும், சில போது மெய்யியல்களும் கூடத் தொட்டுக் காட்டப் படுகின்றன. சங்க இலக்கியம் அக்காலத் தமிழர் நாகரிகத்தை அப்படியே மறுபளித்து (reflected), குறிப்பிட்ட எச் சமய நெறியையும் விதப்பாகச் சுட்டவில்லை என்பதே என் புரிதல்.

பஞ்ச தந்திரம் பற்றிய அடிப்படைச் செய்திகள்:

வேதநெறியைச் சிறப்பாக்கி, வடமொழியைப் பின்புலமாக்கி, தமிழ் இலக்கியத்தை இவை இரண்டிற்கும் பின்பற்றி என ஆக்குவது ஆழ்ந்து ஓர்ந்தால் ஒருபாற் கோடலே. பஞ்ச தந்திரத்தை முன்னிறுத்தி சிலம்பிற்குத் தோற்றமோதும் திரு.இரா.நாகசாமி அண்மையிற் கருத்துச் சொன்னதும் அப்படியொரு செயற்பாடே.

பஞ்ச தந்திரம் என்பது சுங்கர் காலத்திலும், அதற்கு முன்னும் வாய்மொழியாய் இருந்து, சுங்கருக்குப் பின் அறிவார்ந்த புலவரால் தொகுக்கப்பெற்ற நியதிக் கதை நூலாகும். மோரியர் காலத்து அருத்த சாற்றம் (>அர்த்த சாஸ்த்ரம்) எப்படி வேத நெறிக்குப் பங்கமில்லாததோ, அதுபோலப் பஞ்ச தந்திரமுஞ் செல்கிறது. (அருத்த சாற்றம் போலவே பஞ்ச தந்திரமும் தமிழிலக்கிய, வரலாற்றாய்வாளர் படிக்க வேண்டியதே.)

பல்வேறு காலங்களிற் பஞ்ச தந்திரத்துள் இடைச்செருகல் இருந்திருக்கலாம். பல்வேறு தனிக் கதைகள் புத்த சாதகக் கதைகளோடும், மற்ற நாட்டுப்புறக் கதைகளோடும் தொடர்புற்றதாகச் சொல்கிறார் [22]. {பஞ்ச தந்திரத்தின் நாலாம் பகுதி மூலக் கதையான ”குரங்கும் முதலையும்” பொ.உ.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாய்க் கருதப்படும் பார்ஹட் புத்தமதச் சிற்பங்களில் பொதிந்துள்ளதாகச் சொல்வார் [23]. திரு.இரா.நாகசாமியும் இதை உறுதி செய்கிறார் [24].} பின்னாற் பல மொழிகளுக்கும் பஞ்ச தந்திரம் பெயர்க்கப் பட்டு மீண்டும் வடமொழிக்குள் விரிவுஞ் சுருக்கமும் ஆகி எத்தனை முறை சங்கதத்தில் நூலானதோ? – தெரியாது. பஞ்ச தந்திரம் என்ற நூல் சங்கதத்தில் தான் முதலில் எழுந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (கம்பனின் இராமாவதாரம் கிடைத்து வான்மீகி நூல் ஒருவேளை கிட்டாது போயின், தமிழில் தான் இராமாயணம் முதலில் எழுந்ததெனச் சொல்ல முடியுமோ?).

மாற்றுக் கருத்துள்ள மூவகைச் சமண நெறியினர் இந்நூலை முதலில் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதே பொழுது, வேதநெறிப் போட்டியாற் தூண்டப் பெற்று சமண நெறியினர் வழிநூல் எழுதியிருக்கலாம். (காட்டு: பூர்ண பத்ர சூரி என்ற செயின நெறியரின் பஞ்சாக்கியான நூல்). இப்போது பலருக்கும் அடிப்படையாக எடுகோளாகக் (reference) கொள்ளும் வடமொழிப் பஞ்ச தந்திர வெளியீடு பல நூற்றாண்டுகள் தள்ளி பொ.உ.1199 இல் தான் இறுதி வடிவம் பெற்றதென ஆய்வாளர் சொல்கிறார் [25]. பாட்டு இடையிட்ட உரைநடையான இவ்வரத்தின் (version) ஆசிரியர் யாரென்று தெரியாது, விஷ்ணு சர்மனின் பஞ்ச தந்திரம் என்றே இன்னுங் குறிப்பிடுகின்றனர்.

12 ஆம் நூற்றாண்டு வடமொழி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1859 இல் முதலில் எழுந்தது. மீண்டும் 1924 இல் சுதான்லி ரைசு (Stanly Rice) மூலமும், 1925 இல் புகழ்பெற்ற ஆர்த்தர். டபிள்யூ ரைடர் (Arthur W. Ryder) மூலமும் மொழி பெயர்ப்புக்கள் எழுந்தன [26]. (ரைடர் மொழிபெயர்ப்பு சிறப்பானது. அதிற், பாட்டைப் பாட்டாகவும் உரைநடையை உரைநடையாகவும் மொழி பெயர்த்திருப்பார்.)

இதே 12 ஆம் நூற்றாண்டு நூல், சங்கத மொழியிலிருந்து, தமிழில் 1907 இல் தாண்டவராய முதலியாரால் அற்றைப் பேச்சு வழக்கு விரவிய பண்டித நடையிற், சுருங்க, மொழிபெயர்க்கப் பட்டது. ”Digital library of India" -வில் இருக்கும் இம் மொழிபெயர்ப்பு நூல் பல்வேறு தட்டச்சுப் பிழைகளோடும், தவறுகளோடும் புணர்ச்சொற்கள் தவறாகப் பிரிக்கப்பட்டும், மதுரைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது [27]. அண்மையில் 12 ஆம் நூற்றாண்டு வடமொழி நூல் “வாழ்வியல் நீதிக் கொத்து எனும் பஞ்ச தந்திர நீதிக் கதைகள்” எனும் தலைப்பில் 2010 இல் வானவில் புத்தகாலயத்தினரால் [29/(7/3) E பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை 600017 - ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அலுவலம் எதிரில். தொலைபேசி: 24342771, 65279654] மொழிபெயர்த்து வெளியிடப் பட்டுள்ளது. (இவ்வெளியீட்டிற் சங்கதச் சொலவங்கள், தடித்த எழுத்தில் உரைநடையாகவே, தமிழுக்குப் பெயர்க்கப் பட்டுள்ளன.) இம்மொழிபெயர்ப்பே இப்போதைக்கு என் கட்டுரையில் எடுகோளாகச் சொல்லப் படுகிறது.

மித்ரபேதம் (= நட்பு வேற்றம்), சுகிர்த லாபம் (= நட்புப் பேறு), சந்தி விக்ரகம் (= அடுத்துக் கெடுப்பு), அர்த்த நாசம் அல்லது லப்த ஹானி (= பேறழிவு), அசம்பிரேக்ஷிய கார்யத்வம் (= ஆராயாச் செய்கை) என்ற 5 தந்திரங்களை விளக்குவதாய் 5 மூலக் கதைகளும் அவற்றுளே சங்கிலித் தொடராய் (33+12+17+11+12 =) 85 துணைக் கதைகளுஞ் சொல்லப் படும். (84 என்ற கணக்கும் உண்டு.) நட்புப் பேற்று மூலக் கதைக்குப் பின், ”இரண்டு தலைப் பறவை”க்கு அப்புறம், இலகுபதன் எனும் காக்கைக்கு மறுமொழியாய், இரணியனெனும் எலி சொல்வதாய், 3 செய்திகள் வரும். இம் முச்செய்திகளும் பஞ்சதந்திர மூல நூலின் (Pancha thanthra original) காலத்தை நிறுவ உதவுகின்றன. அவையாவன:

1. “சம்ஸ்கிருத இலக்கணத்தின் தந்தையான பாணினியை ஒரு சிங்கம் கொன்றுவிட்டது”
2. ”மீமாம்ச தத்துவ தரிசனம் அருளிய ஜைமினி முனிவரை ஒரு மதயானை கொன்றது”
3. “யாப்பு இலக்கணக் கருவூலமான பிங்கள முனிவரை ஒரு முதலை கொன்றது”

பாணினி அஷ்டத்யாயி படைத்தது மோரியர் காலம் பொ.உ.மு. 4/3 ஆம் நூற்றாண்டு என்பர் [28]. {பாணினிக்கு மாபாடிய (Mahabhasyam) உரை எழுதிய பதஞ்சலி, சுங்கர் காலமாம் [29].} பூர்வ மீமாம்ச தத்துவ தரிசனஞ் செய்த ஜைமினி பொ.உ.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டாகும் [30]. பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்த சூத்ரம் என்றுஞ் சொல்வர்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம் [31]. மேலே சொன்ன செய்திகளை வைத்துப் பார்த்தால், பஞ்சதந்திர மூல ஆவணம் பெரும்பாலும் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் கனகர் காலத்தில் எழுந்திருக்கவே வாய்ப்பு அதிகம். {கனகரின் வாசுதேவன் காலம் - பொ.உ.மு. 75-66 என்றும், பூமி மித்ரன் காலம் பொ.உ.மு. 66-52 என்றும், நாராயணன் காலம் பொ.உ.மு. 52-40 என்றும், சுசர்மன் காலம் பொ.உ.மு. 40-30 என்றும் சொல்வர் [32]}.

கதை பிறந்த வரலாறாய் பஞ்ச தந்திரத்தில் ஒரு முன்னுரை வரும். சுதர்சன் என்றொரு மகத மன்னன் இருந்தானாம். (“இவன் கனக சுசர்மனோ? சுசர்மன் – சுதர்மன் – சுதர்சன் என்ற பெருமி (brahmi) எழுத்துக் குழப்பமும் ஏற்பட்டிருக்குமோ?” எனும் ஐயம் இக்கட்டுரையாசிரியனுக்கு உண்டு. சர்மன் எனும் குடிப்பெயர் பார்ப்பனருக்கு உண்டு. சுங்கரும், கனவர்/கனகரும் பார்ப்பனக் குடியினர். அப்படியாயின், பஞ்சதந்திர மூல ஆவணக் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.40-30க்கு இடைப்படும்.) அவனுக்குப் பல்லாண்டு தவத்தின் பின் 3 பிள்ளைகள் பிறந்து, வசு சக்தி, உக்ர சக்தி, அனந்த சக்தி என்று பெயரிட்டு அரசன் அன்புடன் வளர்த்தான். பல்வேறு ஏந்துகள் கொட்டிக் கிடந்தும், அறிவு மேம்பாடின்றி இளவரசர் இருக்க, அரசவை கூட்டி வழிவகை கேட்ட போது, இம் 3 இளவரசரை ஆறே மாதத்திற் கல்வி, கேள்விகளிற் சிறந்தவர் ஆக்கச் சோமசன்மன் என்பான் சூளுரைத்தான். (பஞ்ச தந்திர ஆசிரியன் விஷ்ணுசர்மனும், சோமசன்மனும் ஒருவரா - தெரியாது.)

சூளுரை முடிவில் 3 இளவரசரையும் தன் இல்லம் அழைத்துச் சென்று, சோம சன்மன் பேணி வந்திருக்கிறான். இளவரசரைக் கூட்டிக் காடு, மேடு, மலை எனச் சுற்றிக் களைத்து, இந்தத் தந்திரக் கதைகளைச் சொல்லியிருக்கிறான். கதைகளைக் கேட்டு இளவரசர் அறிவு மேம்பட்டதா என்பது தெரியாது. {பொ.உ.மு.30 இல் கனகர் ஆட்சி முடிந்து நூற்றுவர் கன்னரின் நேரடி ஆட்சி விதிஷாவில் தொடங்கியது [33].}

பஞ்ச தந்திரம் நிகழிடங்களாய் பாடலி புத்திரம், இராசக் கிருகம், மதுரா, அயோத்தி, காசி, உச்செயினி, பிருகு கச்சம் (இற்றைய பருச். நருமதையாறு கடலிற் சேருந் துறை), படித்தானம் (>ப்ரதிட்டானம் = இக்கால ஔரங்காபாதிற்கு அருகிலுள்ளது), யமுனை, கங்கை, பாகீரதி, நருமதை, கோதாவரி, திரிகூட மலை, தண்டகாரண்யம், போன்ற இயலூர்களும், ஆற்றங்கரைகளும், இருப்பிடங்களும், மகிளா ரூப்யம், வர்த்த மானம், புண்டர வர்த்தனம், பிரமதா ரூப்யம், சண்பகாவதி, பட்டண புரி, அமராவதி, நாராயண நகரம், பண்டா புரம், துளசா புரம், மது புரம் போன்ற கற்பித இடங்களும் பஞ்சதந்திரத்தில் சொல்லப்பெறும்.

பஞ்ச தந்திரத்தின் இயலூர்களைப் பார்த்தால், மகதப் பார்வையில், மத்திய தேசமும் பழந்தக்கண தேசமுமே கதைக்களங்கள் என்பது புரியும். (தக்கணம் என்பது நூற்றுவர் கன்னர் ஆண்ட படித்தானம் வரையிலாகும். அதன் பொருள் நீட்டம் குப்தர் காலத்துக்குப் பிறகே தெற்கில் இன்னும் விரிந்தது). நட்பு வேற்றத்தில் வரும் “நன்றி மறந்த தட்டான்” என்னும் கதை, ஆராயாச் செய்கையில் வரும் ”கீரிப்பிள்ளையும் பார்ப்பனியும்” என்னும் கதை ஆகியவை உட்பட, எந்தக் கதையும் பஞ்ச தந்திரத்தின் வ்ழி பார்த்தால், அவை தமிழகத்தில் நடந்ததே இல்லை. இது மிக அழுத்தமாய்க் குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

எடுகோள்கள்:

14. https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/izKBBBuFgWw;
15. https://groups.google.com/forum/?fromgroups#!topic/santhavasantham/izKBBBuFgWw;
16. http://www.indianetzone.com/26/excavation_at_poompuhar_tamil_nadu.htm
17. Rao, S..R et al, 1995-96 “Underwater explorations off Poompuhar” in J.of.Marine Archaeology, Society for Marine Archaeology, Goa, 5-6, pp7-22. Also http://www.themua.org/collections/archive/files/d7a46a40fffd7b7c0efe02709b5a81c1.pdf
18. Graham Hancock, “Underword – Flooded Kingdoms of the Ice Age – Penguin Books, 2002. Pp 3-6, 150, 208-209, 221, 258-261, 602
19. http://archive.org/details/periplusoferythr00schouoft;
20. இராம.கி, .சிலம்பின் காலம், தமிழினி பதிப்பகம், 102, பாரதியார் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14. 2011, பக். 125- 134
21. http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html
22. http://en.wikipedia.org/wiki/Jataka_tales#cite_note-7
23. http://www.orientalthane.com/speeches/speech2008.htm; Also see http://www.indianetzone.com/36/sculpture_tripurantakesvara_temple_indian_sculpture.htm;
24. Same as ref.15
25. http://en.wikipedia.org/wiki/Panchatantra
26. Panchatantra, translated from Sanskrit by Arthur.W.Ryder, Jaico Publishing House, First Jaico impression 1949, 35th Jaico impression 2012.
27. http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0406.pdf
28. Sheldon Pollock, The Language of the Gods in the world of Men, Permanent Black, Himalayana, Mall Road, Ranikhet Cantt, Ranikhet 263645, 2007 p 45,
29. http://en.wikipedia.org/wiki/Mah%C4%81bh%C4%81%E1%B9%A3ya
30. http://en.wikipedia.org/wiki/Purva_Mimamsa_Sutras
31. http://en.wikipedia.org/wiki/Pingala
32. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
33. http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

Wednesday, February 06, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 1

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது முதற்பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

தோற்றுவாய்:

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாலுறுதிப் பொருள்களை நவின்று, தொடர்நிலைச் செய்யுள், உரைப்பாட்டு, உரைநடையென ஏதேனுமொரு வடிவில், சம கால நாகரிகத்தைச் சுவைபடக் கதைப்பது காப்பியமாகும். இவ்வரையறையில் சுமேரியக் கில்கமேசு, ஓமர் இலியது, வான்மீகி இராமாயணம், வியாசபாரதம் ஆகியவற்றைச் சொல்லலாம். அவற்றுள் கடையிரண்டும் இந்திய எழுத்து வழக்கிலும், நாட்டார் வழக்கிலும், தென்கிழக்காசிய மரபிலும் பெருந்தாக்கஞ் செலுத்தியவை. சங்க நூல்களிலும் இவை சிறிது தெறித்திருக்கின்றன. (காட்டு: மருதன் இளநாகனாரின் அகநானூறு 59). வாய்மொழி இலக்கியமாய் பொ.உ.மு.(BCE) 3 ஆம் நூற்றாண்டில்.[1] இறுதி பெற்ற இராமாயணம் எழுத்திலெழுந்தது பொ.உ.(CE) 150க்கு அப்புறமாகும் [2]. வியாச பாரதம் எழுத்துற்றது பொ.உ. 300/400 [3] ஆகும்.

வான்மீகி நூலுக்குச் சற்றொப்ப 2 நூற்றாண்டுகளுக்கும் முன், குன்றக் குரவர், சீத்தலைச் சாத்தனார் வழி வாய்மொழிச் செய்திகளைச் சேகரித்து, ஓரிமையும் (uniqueness), விதப்பும் (specificity) கூடித் தமிழில் எழுந்த சிலப்பதிகாரம் மூவேந்தர் நாட்டில் நிகழ்வதாய் அமையும்; ஆனால் மூவேந்தரும் காப்பியத் தலைவராகார். அதே பொழுது, கதையினூடே அந்தக் கால வாழ்வு நெறி, பன்னாட்டியற்கை, நகர விவரிப்பு, வணிக நடைமுறை, சமய விவரிப்பு, மக்களின் மூட நம்பிக்கை, மனப்பாங்கு, கற்பிதங்கள், இசை, கூத்து, குரவை, வரி, அரங்கேற்றம், இந்திர விழா, கடலாடல், நாட்டார் மரபு, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து எனப் பல்வேறு காப்பியக் கூறுகள் வெளிப்படும்.

சிலம்பின் நூற்கட்டுரை படித்தால், அது ஒரு நாடகக் காப்பியமாயும், கதை சொல்லும் பாணி மேடைக் கூத்து வடிவாயும் இருப்பது புலப்படும். சிலம்பின் பல உத்திகளும் தமிழக நாட்டுப்புறக் கூத்துகளிற் பயின்றுள்ளன; நாடகம், நாட்டியம், கதை களி, யக்ச கானம், தெருக் கூத்து, திரைப் படம் போன்ற நிகழ்த்து கலைகளில் இன்றும் பயன்படுகின்றன. பொதுவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னாற் பெற்ற பாராட்டுரையை ஒட்டிக் கூத்துக்காரர் விலக்கும், சேர்ப்புஞ் செய்து கொண்டே இருப்பர். ஒருசில ஆண்டுகளுள், கூத்தின் உரையாடல், விவரிப்பில், எது மூல ஆசிரியருடையது (original author), எது இடைச்செருகல் என்பது தெரியாது போகலாம். இதுபோல சிலம்புக் கூத்திலும் நடந்திருக்கக் கூடும்.

வேறு காப்பியங்கள் சிலம்பிற்கு முன் தமிழில் இருந்திருக்கலாம்; ஆனாற் கிடைத்தில. நம் போகூழ், தகடூர் யாத்திரை உதிரியாகி, நூல்முழுதும் கிட்ட வில்லை. மணிமேகலை, சிந்தாமணிக் காப்பியங்களோ முழுதும், பகுதியுமாய்க் கிடைத்தன. கம்பனுக்கு முந்தைய, சங்க காலத்து இராமகாதை, பாரதங்கள் துண்டாகவே கிடைத்தன. தி.ஈ.சீனிவாசராகவ ஆச்சாரியார் (1872), தி.க. சுப்புராயச் செட்டியார் (1880), உ.வே.சாமிநாத ஐயர் (1892) ஆகியோருக்கு [4] ஒருவேளை சிலம்பு கிடைக்காது போயிருப்பின், தமிழ்க்காப்பியக் காலத்தைச் சிந்தாமணிக்குப்பின், பொ.உ. 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளியிருப்பர்.

சிலம்பு நூற்றாண்டுக் காலத்தை, திரு.செல்லன் கோவிந்தன் பொ.உ.11ஆம் நூறென்றும், திரு.எல்.டி. சாமிக் கண்ணுப் பிள்ளை 8 ஆம் நூறென்றும், திரு.வையாபுரிப்பிள்ளை 5ஆம் நூறென்றும், இதுநாள் வரை நூறாண்டு முன்சொல்லி, இப்போது முரண்படும் திரு.இரா. நாகசாமி 3 ஆம் நூறென்றும், மு.இராகவ ஐயங்கார், மயிலை.சீனி.வேங்கடசாமி, கா.சு.பிள்ளை, ஞா.தேவநேயப் பாவாணர், தனிநாயக அடிகள், கே.என். சிவராசப்பிள்ளை, பி.டி.சீனிவாசையங்கார், மு.சண்முகம் பிள்ளை, இரா.வை.கனகரத்தினம், வி,சீ.கந்தையா, துளசி.இராமசாமி, க.சண்முகசுந்தரம் போன்றோர் 2 ஆம் நூறென்றும் காட்டுவர் [5].

இராம.கி.யின் ”சிலம்பின் காலம்” – ஆய்வுக் கருத்துக்கள்:

மேலுள்ள கணிப்புகளை ஏற்கத் தயங்கி, பொ.உ.171-193 இல் முதலாம் கயவாகு காலத்தொடு தமிழர் வரலாற்றைப் பொருத்தும் ஒழுங்கை மறுத்து, ”சிலம்பின் காலம்” .பெரும்பாலும் பொ.உ.மு. 75-70 ஆக இருக்கவே வாய்ப்பு உண்டு என்ற வரலாற்றியலுமையைப் (historical plausibility) பல்வேறு ஏரணங்களில் அலசி என் நூலிற் தெரிவித்தேன் [6]. நினைவு கொள்ள வேண்டிய அதன் கருத்துக்கள் பின்வருமாறு:

1. பதிகம், வரந்தரு காதை போன்றவை மூல ஆவணங்களாய் (original documents) இருக்க வாய்ப்பில்லை, அவை இடைச்செருகல்களே.

2. உரைபெறு கட்டுரை மூல ஆவணம் இல்லெனினும், வரலாற்றாவணமாய்க் கொள்ளலாம்.

3. மங்கல வாழ்த்திலிருந்து வாழ்த்துக் காதை வரை இளங்கோ எழுதியிருக்க முடியும். அதே பொழுது, அங்குமிங்கும் இடைச்செருகல் இருக்கக் கூடும்,

4. காதைகளின் முடிவு வெண்பாக்களை இளங்கோ எழுதியதாகக் கொள்ளத் தேவையில்லை,

5. காண்டக் கட்டுரை, நூற் கட்டுரை ஆகியவற்றை இளங்கோவோ, வேறெவரோ கூட, எழுதியிருக்கலாம்.

6. வடக்கே படையெடுத்த முதலாங் கரிகாற் சோழன் என்பான் சிலம்புக் காலத்திற்கு மிக முற்பட்டோன் ஆவான். ”அந்நாள்” என்ற குறிப்பை நோக்கின், முதலாம் கரிகாலன் படையெடுப்பு, மகதன் அசாதசத்துவின் கடைக் காலத்தில், அன்றேல் அவன் மகன் உதயனின் தொடக்க காலத்தில், பொ.உ.மு.462 க்கு அருகே, நடந்திருக்கலாம்.

7. நெடுஞ்செழியன் நியதி தவறிக் கோவலன் கொலையுற்று, அதனால் கண்ணகி, வஞ்சினங் கொண்டு தன்முலையைத் திருகியெறிந்து, மதுரை தீக்கிரையானதைப் பார்க்கின், ஏற்கனவே அரசன் மேல் மக்களுக்குக் கோவம் இருந்து, நாட்டிற் சட்டம்-ஒழுங்கு குலைந்திருந்தது புலப்படும். (நியந்தது நியதி>நீதி. நியத்தல் = ஏற்படுத்தல்; குமுகம் ஏற்படுத்திய ஒழுங்கே நியதியாகும். ஒரு குமுக நியதியை இன்னொரு குமுகம் ஏற்காது போகலாம் நியதி என்பது வேறு பொருளில் விதியைக் குறிக்கும். ஆசீவக நியதிக் கொள்கையை இங்கெண்ணிப் பார்க்கலாம். நயம்>நாயம்=ஞாயம் என்ற கொள்கையும் மெய்யியலிலுண்டு.)

8. மதுரைக் காண்டத்தில் சொல்லப்படும் மீமாந்த செயல்களை இலக்கிய வழக்காய்க் கொள்வது நல்லது.

9. கலிங்கத்துச் சேதியரசன் காரவேலனின் அத்திகும்பா (யானைக்குகைக்) கல்வெட்டையொட்டி, மூவேந்தர் பின்புலத்தை ஆய்ந்தால், செங்குட்டுவன் ஆட்சியை ஒட்டி,

a. அவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
b. சிற்றப்பன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்,
c. ஒன்றுவிட்ட அண்ணன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்,
d. ஒன்றுவிட்ட உடன்பிறந்தான்/தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்,
e. மகன் குட்டுவன் சேரல்,
f. பங்காளி (யானைக்கட் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை,
g. அவன் மகன் இளஞ்சேரல் இரும்பொறை,
h. இன்னொரு பங்காளி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

என மேலும் 8 சேரர், சம காலத்திலும், சற்று முன்னும் பின்னும், இருந்திருக்கலாம். சமகால புலவர் - அரசரின் அண்ணக மடிக்கையை (adjacency matrix) வலைப்பின்னல் அலசல் (network analysis) மூலம் ஆய்ந்தால், அவரின் சமகால இருப்பு சட்டெனப் புலப்படும்.

10.செங்குட்டுவனின் வஞ்சி, கேரளச் சுள்ளியம் பேரியாற்றுக் கரையில் உள்ள கொடுங்களூருக்கு அருகில் இருந்தது. அது தமிழ்நாட்டுக் கரூர் அல்ல. (அதே பொழுது, தமிழ்நாட்டுக் கரூரையும் வஞ்சியென்றது உண்டு.)

11.”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” எனும் மாமூலனார் கூற்றின் படி (அகநானூறு 31), வடக்கே மொழிபெயர்த் தேயம் என்பது, மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்தது போலும்.

12.செங்குட்டுவன் வட செலவு ”கண்ணகியின் பொருட்டா, அன்றி வேறொன்றின் பொருட்டா?” என்பது ஆழ ஆய வேண்டிய கேள்வியாகும்.

13.தக்கண, உத்தரப் பாதைகளால், வடவிந்திய, தென்னிந்திய நாடுகளின் பொருளியல், வணிகப் பரிமாற்றங்கள் விதந்திருந்தன. இப்பாதைகளைப் பொருத்தே அற்றைச் சூழ்நிலை புரியும்.

14.தக்கணப் பாதையின் போக்கால், ”சங்க காலத் தமிழரின் வடநாட்டுப் படையெடுப்புகள் பெரும்பாலும் மகதத்திற்றான் முடிந்தனவோ?” எனும் ஐயமெழுகிறது.

15.மகதம், தமிழகம் ஆகியவற்றின் ஒற்றுமை பார்த்தால், மகத வேந்தருக்கும் தமிழ் மூவேந்தருக்கும் இடையே ஒரு விருப்பு-வெறுப்பு உறவு (love-hate relationship) நிலவி, ”ஒரே விதமாய்ச் சிந்திக்கும் எதிராளிகளாய் (like minded opposites) இருவரும் இருந்திருப்பரோ?” என்று தோன்றுகிறது.

16.மோரியருக்குப் பிந்தைய சுங்கர், கனவர்/கனகர் (வகரம், ககரம் ஒன்றிற்கு ஒன்று போலிகள்) நிலையும், நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) நிலையும், சிலம்பின் பின்புலங்களாகும்.

17.கனக விசயர் இருவரில்லை, ஒருவரே. சுங்கர் முதலமைச்சனாய்த் தொடங்கிப் பின் சுங்கரை வீழ்த்தி மகதத்தை ஆண்ட கனக வாசுதேவனின் தந்தையாய்க் கனக விசயன் ஆகலாம். அன்றி கனுவ வாஸ்யன் எனும் வடமொழிக் குடிப்பெயர் தமிழிற் கனக விசயன் ஆகியிருக்கலாம்

18.பால குமாரன் மக்கள் எனுந்தொடர் அவந்தி நாட்டு அரச குடியினரைக் குறிக்கிறது. (உச்செயினி இதன் தலைநகர்; தமிழில் இது உஞ்சை)

19.கனக விசயரோடு இருந்த ஆரிய மன்னர் அடையாளம் ஓரளவே விளங்குகிறது. வட நாட்டுச் சான்றுகளைத் தீவிரமாய்த் தேட வேண்டும். இதில் நம்முடைய ஆய்வு பற்றாது.

20.தனிப்பட்ட பந்திலா உறுத்தாய் (independent confirmation) எருக்காட்டூர் தாயங்கண்ணனாரின் அகநானூறு 149 ஆம் பாடல்வழி, சிலம்பிற்குப் பிந்தைய நிகழ்வை நாம் உணருகிறோம்.

21.பெரும்பாலும் பொ.உ.மு.87-69இல், இன்னும் கூர்ப்பாய் பொ.உ.மு.80-75 க்கு நடுவில், சுங்கராட்சியின் முடிவில், மகதக் கனகராட்சிக்குச் சற்று முன்னால், நாட்டுப் பெரும்பகுதியிழந்து ஆட்சிவலி குறைந்த இலம்போதரச் சதகர்ணி காலத்தில், செங்குட்டுவன் வடசெலவு நடந்திருக்கலாம்; சிலம்பைச் சங்க காலத்தோடு பொருத்த வேண்டுமேயொழிய சங்கம் மருவிய காலத்திலல்ல.

இவ்வாய்வு, நூலாக வெளிவருமுன், வளவு வலைப்பதிவில் கீழ்வரும் 12 இடுகைகளாய் வெளிவந்தது.

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html
http://valavu.blogspot.com/2010/05/2.html
http://valavu.blogspot.com/2010/05/3.html
http://valavu.blogspot.com/2010/05/4.html
http://valavu.blogspot.com/2010/05/5.html
http://valavu.blogspot.com/2010/05/6_14.html
http://valavu.blogspot.com/2010/05/7_15.html
http://valavu.blogspot.com/2010/05/8.html
http://valavu.blogspot.com/2010/05/blog-post_20.html
http://valavu.blogspot.com/2010/05/10.html
http://valavu.blogspot.com/2010/05/11.html
http://valavu.blogspot.com/2010/05/12.html

கூடவே, சிலம்பிற்குப் பின்வந்த ஒருசில வரலாற்றுச் செய்திகள் (காட்டாக,

1. ”ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி” என்ற கண்ணகி விவரிப்பைச் சொல்லும் மருதன் இளநாகனாரின் நற்றிணை 216 ஆம் பாட்டு,

2. சிலம்பு எழுந்து 25 ஆண்டுகளுக்குப் பின், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன், பெருஞ்சிக்கில் கிழான், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மருதன் இளநாகனார் ஆகியோரின் சமகால இருப்பு,

3. சிலம்பிற்கு 25 ஆண்டுகள் பின், அகநானூறு, குறுந்தொகை, பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி காலத்திற் தொகுக்கப்பட்டிருக்கும் வரலாற்று இயலுமை,

4. செங்குட்டுவன் மகன் குட்டுவஞ்சேரலுக்குப் பின் வந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்ற வரலாற்றியலுமை

5. சிலம்பிற்கு 25 ஆண்டுகளின் பின்னால், பதிவுற்ற பழந்தமிழர் குடவோலைப் பழக்கம்

ஆகியவை) மேற்சொன்ன இடுகைகளிலும், கீழ்வரும் இரு இடுகைகளிலும், அலசப் பட்டன.

http://valavu.blogspot.in/2010/06/1.html
http://valavu.blogspot.in/2010/06/2.html

இலக்கிய, வரலாற்றாய்விற் தன்மயப் போக்கு:

பொதுவாக கல்வெட்டு, இலக்கியச் செய்திகளை ஒத்திசைவு (consistency), ஏரணத்தோடு (reason) ஆய்ந்து, வரலாற்றில் இது கற்பனை, இது நடந்திருக்கலாம், என ஒரு முடிவிற்கு வருகிறோம். அதே பொழுது தமிழ் வரலாற்று முன்மையை மறுக்கும் ஆய்வாளரோ, தன்மயம் கொண்டுத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்குகிறார். (தமிழியெழுத்து முன்மைக்கும் இதே கதி தான். எத்தனை மேனாட்டாருக்குப் ”பழனிப் பொருந்தற் தொல்லாய்வின் [7] முகன்மை (பொ.உ.மு.490) புரிந்திருக்கிறது? சொல்லுங்கள். அது அசோகர் எழுத்திற்கும் முன்னால் சான்றாகும் போது, வரலாற்றை மாற்றியெழுதுமாறு நொதுமல் (neutral) அவைகளில் நாம் என்ன வாதிட்டிருக்கிறோம்?”)

”ஆதி காவியமான வான்மீகி இராமாயணத்தாற்றான் இந்திய இலக்கியச் சிந்தனையே எழுந்தது” என்று முழங்குவாரும் இன்றுளர். இவர் போன்றோருக்கு வால்மீகி இராமாயணம், வியாச பாரதம், சாகுந்தலம், குமார சம்பவம் போன்றவையே காப்பியங்களாகின்றன. அவற்றின் வரலாற்றுத் தாக்கம், வடமொழிக்கு இந்திய மொழிகளின் கடப்பாடு என்றே இந்தியவியற் (Indology) களத்திற் பேசு பொருள்கள் அமைகின்றன. காட்டு: ஷெல்டன் போலாக் [8]. இதுவரை இல்லெனின், இனிமேலாவது இவர் போன்றோர் சங்க இலக்கியம், குறிப்பாய்ச் சிலப்பதிகாரம், படிப்பது நல்லது. வடமொழி மட்டுமே மேடு, மற்றவை தாழ்வென்று கீறல் விழுந்தாற் போல் இன்னுஞ் சொல்லுவது போகாவூருக்கு வழி கேட்பதாகும்.

இன்னொரு காட்டு: நெதர்லாந்தின் ஹெர்மன் தீக்கன் [9]. ”வடமொழிக் காப்பிய மரபுகள், பரதரின் நாட்டிய சாற்றம், போன்றவையாற் தூண்டப் பெற்றே சங்க இலக்கியங்கள் பெருஞ்சோழர் காலத்தில் 9ஆம் நூற்றாண்டிற் படைக்கப்பட்டன” என்ற தேற்றை இவர் முன்வைப்பார். “சேரரே அழிந்து சிறுகிப்போன காலத்தில் சேரரின் சிறப்பைப் பெரிதுவக்கும் காப்பியம் எழுமா?” என இவரிடம் யார் போய்க் கேட்பது? தமிழி, வட்டெழுத்துக் கல்வெட்டுக்களின் வரலாற்றுமையும், சமய இலக்கியங்களுக்கு முற்பட்ட சங்க இலக்கிய வரலாற்று இயலுமையும் கூறி, இவர் வாதின் உள்ளீடின்மையை விளக்க வேண்டும்.

மூன்றாவது காட்டு தொல்லியல் துறை முன்னாள் நெறியாளர் திரு. இரா.நாகசாமியாகும். சிலம்பின் வரலாற்றுப் பரிமானத்தை மறுத்து, ”இது ஒரு புனைகதை, [வான்மீகி இராமாயணம், வியாச பாரதம் மீதும் இக்கூற்று எழலாம்.] தமிழர்க்கென இலக்கியக் கொள்கை, வரலாற்று மரபுகள் கிடையா; சங்கதத் தூண்டலால் இக்காப்பியம் உருவானது” என்ற கொள்கையில் இவர் இப்போது புகல்கிறார். சில மாதங்களுக்கு முன் “தமிழ், வடமொழிக் கண்ணாடி” என்ற நூலையும் இவர் வெளியிட்டார் [10]. அந்நூற் செய்தி அனைத்து நாட்டு மொழியிலக்கிய ஆய்வுக் களங்களில் சட்டென இணையத்திற் பரவியது; ஆனால், தமிழறிஞர்,  திரு. நாகசாமியின் ஆய்வு முடிவை ஏற்காதது மீக் குறைந்தே வெளிப்பட்டது. திரு.நாகசாமி கருத்தை உணர்வு பூர்வமாக மறுக்காது, அறிவார மறுத்து நூல் வெளியிடுவதே ஆய்விற்கு வழி வகுக்கும்.

பொதுவாக, எல்லா வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் இரு பக்கச் சான்றுகள் கிடைப்பதில்லை. அசோகரின் வரலாற்றிற்கு அவர் கல்வெட்டன்றி விதந்த சான்றுகளுண்டோ? அசோகப் பியதசி எனும் இயற்பெயர் கூட  அவருடைய 2 கல்வெட்டுகளில் மட்டும் தாம் இருக்கின்றன [11]. அவை இல்லெனில் அசோகர் அடையாளங் காணப்படார். அசோகர் கல்வெட்டிற் சேர, சோழ, பாண்டியர், அதியமான் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனாற் தமிழ் இலக்கியத்தில் அசோகர் பற்றிய குறிப்புண்டோ? ”திராமிர சங்காத்தம்” பேசும் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டில் அசோகரின் பெயருண்டோ? [12]. தமிழர் முன்னணி 1300 ஆண்டுகளா? 113 ஆண்டுகளா? [13]. சங்க இலக்கியத்தில் காரவேலன் பெயருண்டா? தமிழ் வரலாற்றாய்வாளரில் பலரும் காரவேலன் கல்வெட்டைப் படித்ததில்லை; பிறமொழி ஆவணங்களையும் தேடாது இருக்கிறார். உங்களுக்கு அடிப்படைச் சிக்கல் புரிகிறதா?

சிவநெறிச் செல்வரான மணிவாசகர் பற்றித் திருவாசகம், கோவையார் தவிர்த்து, பொ.உ. 1100 வரை எங்கும் நேரடிக் குறிப்பில்லை; தேவார மூவருக்கு முன்னா, பின்னா என்பதும் குழம்பும். தமிழ் வரலாற்று வரைவிற்குத் இக் கேள்வி தேவையில்லை போலும்!!! பல தமிழறிஞருக்கும் இலக்கிய ஆய்வு, பொ.உ. 3 ஆம் நூற்றாண்டைத் தாண்டின், 19 ஆம் நூற்றாண்டிற்கு வந்து விடுகிறது. மூத்த திருப்பதிகம், திருவாசகம், தேவாரம், நாலாயிரப் பனுவல், இராம காதை, பெரிய புராணமென ஏதுந் தொடாது, தென்னிந்தியக் கல்வெட்டுக்களையும், இலக்கியங்களையும் பொருத்திப் பார்க்காது இருக்கிறார். அதுவொரு ஓட்டம், இதுவொரு ஓட்டமாய். தனிச்சால் தரித்துத் தமிழ் அறிவாண்மை (scholarship) தடை வேலி போடுகிறது.

தமிழறிஞர் மிகப் பலரும் இணையத்துள் இந்தியவியலுக்குள் நுழையாது, ”மறைவாக நமக்குளே பழங்கதை பேசும்” கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், பாட்டரங்குகள், என்றே பங்கு கொள்கிறார். அனைத்து நாட்டுப் பார்வையில், முறையியல் (methodology) வழுவாது, மாற்றோர் ஏற்கும் அனைத்துநாட்டு ஆய்வுத் தாளிகைகளிற் கட்டுரைத்தலும் குறைவு. தமிழறிஞருக்கும் எதிராளருக்கும் இடையே, உரையாட்டு நடப்பதேயில்லை. தமிழ்ப் பழமை மறுப்போரே இதிற் பங்குகொள்கிறார். இவர் சொல்லைக் கேட்டு வடமொழி விதக்கும், வெளிநாட்டு அறிஞரும் கூடத் தமிழிலக்கியக் கால முன்மையை மறுத்தே வருகிறார். (செம்மொழி என்பதெல்லாம் இருவேறு கருத்தின் வீண் வீறாப்பாய், விழையரசியலாய் ஆகிப் போனது.)

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் – திரு.இரா.நாகசாமியின் பார்வை:

சிலப்பதிகாரத்திற்கு மூலங்களில் ஒன்றாய் வடமொழியிலெழுந்த பஞ்ச தந்திரத்தைக் காட்டி திரு.இரா.நாகசாமி ஒரு கருத்துச் சொன்னதாய் அண்மையில் 2012 செபுதம்பர் 25 தினமலர் நாளிதழில் வெளியானது. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=554126). அது கீழே வருமாறு உள்ளது.:

---------------------------------------------------------

"பஞ்ச தந்திரக் கதைகளிலுள்ள நீதிகளையும், செயல்பாடுகளையும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்,'' எனத் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி தெரிவித்தார். பெசன்ட் நகர், தமிழ் ஆர்ட்ஸ் அகடமி சார்பில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திரு. நாகசாமி "சிலப்பதிகாரம் ஒரு புதிய நோக்கு' என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் கூறியதாவது:

ஐந்திணைகள்

சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் என்று, உரையாசிரியர் குறிக்கிறார். கதைப் போக்கில் ஆங்காங்கே இசைப் பாக்களையும், பல்வகைக் கூத்துக்களையும் பொருத்தி, அதன் வாயிலாக முக்கிய நீதிகளை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார். எடுத்துக்காட்டாக, தமிழ் இலக்கண மரபுப்படி, ஐந்திணைகளை இந்நூலில் அமைத்து இயற்றியிருக்கிறார். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமயக் கருத்துகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் கதையமைப்பில் ஏற்கனவே, வழக்கில் இருந்த பல கதைகளையும், நீதிகளையும் அடிப்படையாகக் கொண்டே, தன் இலக்கியத்தை அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, "பஞ்ச தந்திரம்' எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, "வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க' என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு "கிரந்தம்' என்று குறித்து, அதை, "அபரீக்ஷய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம் பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா' என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், "கவி' என்றும் கூறுகிறார். ஆகவே, இவ்வடமொழி வாசகம் பஞ்ச தந்திரத்தில் உள்ள பாடல் என்பதில் ஐயமில்லை. இதன் கருத்து, ”எந்தவொரு செயலையும் பரிசீலிக்காமல், ஆழ்ந்து எண்ணாமல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். துன்பத்தில் ஆழ்வர்” என்பது தான்.

சிற்பங்களாக...

கோவலன், பாண்டிய மன்னன் யோசிக்காமல் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை அடிப்படையாக்கி, சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினார். சிலம்பின் காலம், கி.பி., 3ம் நூற்றாண்டு என்பர். அக்காலத்தில், பஞ்ச தந்திர நீதிக்கதைகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்தக் கதைகள், அரேபியம், பாரசீகம், ஹீப்ரு, செகோஸ்லோவேகியம், போலந்த், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், டேனிஷ் உள்ளிட்ட மொழிகளில், பதினாறாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இந்தியாவில் 6ஆம் நூற்றாண்டு சாளுக்கியர், இராட்டிர கூடர்கள் போன்ற கர்நாடகத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சிற்பங்களாகவும், அச்சிற்பங்களின்கீழ் பஞ்சதந்திரக் கதையின் நீதி வாக்கியங்கள், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.

கொல்லன் கதை

மற்றுமொரு பஞ்சதந்திரக் கதையில், பாழ்கிணற்றில் வீழ்ந்த பொற் கொல்லன் ஒருவன், தன்னைக் காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வனென, பொய்கூறி தண்டனைபெற்றுத் தந்ததையும் குறிப்பிடுகிறது. அக்கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, அக்காலத்தில் வழக்கிலிருந்த நீதிகளையெடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்துள்ளார். இவ்வாறு நாகசாமி கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார்.

----------------------------------------------------

அடுத்த பகுதியில் தொடர்வோம்.

எடுகோள்கள்:

1. http://www.sscnet.ucla.edu/southasia/Religions/texts/Ramaya.html
2. http://www.ramayanaresearch.com/ramayana.html
3. http://en.wikipedia.org/wiki/Mahabharata;
4. டாக்டர் க.பஞ்சாங்கம், ”சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு”, பக் 24-30, முதற் பதிப்பு ஜூன் 2010, வெளியீடு: அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613007.
5. இரா.மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு”, பக் 13-18, சேகர் பதிப்பகம், சென்னை – 78, 2005
6. இராம.கி., சிலம்பின் காலம், தமிழினி பதிப்பகம், 102, பாரதியார் சாலை, இராயப் பேட்டை, சென்னை 14. 2011
7. A great past in bright colours, T.S.Subramanian, Frontline Oct 8, 2010, pp-64-75.
8. Sheldon Pollock, The Language of the Gods in the world of Men, Permanent Black, Himalayana, Mall Road, Ranikhet Cantt, Ranikhet 263645, 2007
9. Tieken, Herman Joseph Hugo. 2001. Kavya in South India: old Tamil cankam poetry. Groningen: Egbert Forsten, Also see: http://www.ulakaththamizh.org/JOTSBookReview.aspx?id=194;
10. http://www.tamilartsacademy.com/journals/volume23/articles/article2.xml
11. The Gujarra and Maski versions of Minor Rock Edict ! are the only two inscriptions of Asoka which refer to him by name. Inscriptions of Asoka, p 4, D.C.Sircar, Publications Division, Ministry of Information and Broadcasting, Govt.of India. Fourth Edition 1998. ISBN 81-230-0665-9
12. The Hathigumpha Inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, Shashi Kant, D.K.Printworld (P) Ltd, ‘Sri Kunj’ F-52, Bali Nagar, New Delhi 110015.
13. K.P.Jayswal, Hathigumpha Inscription of the Emperor Kharavela (173 BC to 160 BC). J.of Bihar and Orissa Research Society, III (1917), pp 425-473; JBORS, IV, pp 364ff; JBORS, XIII, pp 221ff, XIV, pp 150ff.