Monday, October 31, 2022

தமிழினத் தொடக்கம்.

உலகின் முதன்மொழி தமிழ் என்று தமிழ்நாட்டில் இருக்கும் சிலர் சொல்கிறார். இவர் தம் கருத்தை எந்த அனைத்து நாட்டு அரங்கிலும் வைத்ததில்லை. நம்மிடம் மட்டுமே நமக்கு உணர்வூட்டப் பேசுகிறார். அது அரசியல் பேச்சு. அறிவியல் பேச்சு அல்ல. மற்ற நாட்டு ஆய்வாளர் யாரும் (ஓரிருவர் தவிர) தமிழின் முன்மையை இன்னும் ஏற்கவில்லை நான் சொல்வது உங்களை உறுத்தலாம். ஆனால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ஆய்வல்ல. தமிழ்க் குடும்பம் என்ப்து Nostratic என்ற பெருங்குடும்பத்தில் ஒரு பகுதி என்பது மட்டுமே இன்றைக்கு நிறுவக் கூடிய ஒன்று. அதைப் போகும் இடங்களிலெல்லாம் நான் பேசுகிறேன். பேரா. கு.அரசேந்திரனும் செய்கிறார். அதற்கு மேல் உலக முதன்மொழி என்று சொல்வதற்குத்  தரவுகள் இல்லை. 

குமரிக் கண்டம் என்ற தேற்றிலிருந்து, கற்பனையில் இருந்து வெளியே வாருங்கள் என்று அதனால் தான் சொல்லுகிறேன்.  இற்றை ஆய்வுலகம் out of Africa என்ற தேற்றைத் தான் பெரிதும் ஏற்கிறது. அது பற்றிப் பேசி விட்டேன். தமிழ் எங்கு ஏற்பட்டது? எனக்குத் தெரியாது ஐயா. அதற்கு முன் நாம் வேறு மொழி பேசினோமா? அதுவும் தெரியாது. ஆனால் தமிழ் மூத்த மொழிகளுள் ஒன்று என்று மட்டும் ஆணித்தரமாய்த் தரவுகளுடன் பேசுவேன். கி.மு. 10000, 20000 வரைக்குக் கூட நான் பேச முடியும். அதற்குமுன் என்ன நி்லை? எனக்குத் தெரியாது. நம்பிக்கையின் பேரில் நான் பேசுவதில்லை. அறிவியல் அடிப்படைகளின் பேரில் பேசுகிறேன். பழம் மாந்தன் இந்தியாவினுள் வரும்போதே தமிழ் பேசினானா? எனக்குத் தெரியாது. ஆனால் 20000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் தோன்றியிருக்கலாம். நான் குத்து மதிப்பு ஊகஞ்  செய்பவனும் இல்லை, சோதியனும் இல்லை.

தமிழருக்கும் எத்தியோப்பியருக்கும் பல பண்பாட்டு, ஈனியல் உறவுகள் தெரிகின்றன. தமிழருக்கும்  ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் கூடப் பண்பாட்டு, ஈனியல்  உறவுகள் தெரிகின்றன.     

உங்கள் அதிர்ச்சியிலிருந்து வெளியே வாருங்கள். பத்தில் ஒன்று தமிழ். எல்லாம் தமிழல்ல. கொஞ்சம் அசைபோட்டு அதை உள்வாங்குங்கள்.

என் கருதுகோளை இங்கு சேகரத்திற்காகப் பதிவு இட்டிருக்கிறேன். இது ஆங்கிலத்தில் உள்ளது  (அது ஆங்கிலத்தில் இயங்கும் குழு.) 

Around 65000 years ago, humans from Africa entered India through the coastal route. They traveled all the way to the south on the coast. A part of them remained and the rest moved through the eastern coast and peopled SE Asia and Australia. Some remained in SE Asia and later moved north to people China and others.. There was also a secondary emigration from the persons who remained in the deep South India. I believe in extended Kumari land but not in Kumari continent. A part of Kumari land Tamils ascended the Indian subcontinent and moved out through northwest route They mixed with the people remaining in middle east and Central Asia. Some of whom returned once again to Indus valley around 8000 BC and established their civilization. Further a group of them returned from Central Asia in 1800 BC. These are the Aryans. Melanin content in the human skin changed as per the climate in the respective regions. I don't know where Tamil language has germinated. But definitely it achieved its zenith in Tamilnadu.

The above is my hypothesis. But there are a lot of things which are yet to be proved. This is just a working hypothesis covering the known facts. I will change the hypothesis, as and when more facts are known through Archaeology, Anthropology and Population Genetics. To me, a hypothesis is not sacrosanct, but facts are. Once upon a time I believed In Kumari Continent. But I no longer believe so. That appears to be a fantasy.  I have described my hypothesis in a nutshell.


Wednesday, October 19, 2022

Entrepreneur

 entrepreneur என்பதற்கு "தொழில் முனைவோர்" என்றே பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சில ஊடகங்களில் "தொழில்முனைவர்" என்ற வழக்கைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது சரியா? முதுமுனைவர் போல தொழில் முனைவர் என்பது doctorate பட்டத்துடன் குழப்பத்தைத் தருமா? - என்று ”சொல்” எனும் முகநூல் பக்கத்தில் திரு. நீச்சல்காரன் கேட்டிருந்தார் entrepreneur என்பதற்கு "தொழில் முனைவோர்" என்றே பலரும் பயன்படுத்தி வருகிறார் என்பது உண்மை தான்.  

ஆனாலும், அது அரைகுறைச் சொல்லாக்கம் என்றே நான் சொல்வேன். தொழிலில் (மட்டுமன்றி) மற்ற புது வேறு முயற்சிகளிலும்  ஆங்கிலத்தில் entrepreneur பயனாகும். அதேபோல் தொய்ந்து போன வேலைகளிலும் முனைப்புக் காட்டி முன் வரலாம். முனைப்பென்பது புதுத் தொழில்களுக்கும் மட்டும் பயனாவதல்ல. ஆங்கிலத்தில் entrepreneur க்கு வரையறை சொல்லும் போது, entrepreneur (n.) 1828, "manager or promoter of a theatrical production," reborrowing of French entrepreneur "one who undertakes or manages," agent noun from Old French entreprendre "undertake" (see enterprise). The word first crossed the Channel late 15c. (Middle English entreprenour) but did not stay. Meaning "business manager" is from 1852 என்பார்.

தமிழில் இதற்கான ஈட்டை நாம் கண்டு பிடிக்கலாம். பண்ணு-தல் என்பது செய்-தலுக்கான மாற்றுச் சொல். பண்டம் செய்தல், பணி செய்தல், போன்ற பல்வேறு ஆக்கங்களுக்கும் பொருந்தி வரும் வினைச்சொல். entre என்பதற்கு ”எழுந்து வரும்” என்றே பொருள் கொள்ளலாம். எழுதை என்பது எழுந்து வருவதைக் குறிக்கும் பெயர்ச் சொல்.  ”எழுதைப் பண்ணகர் (அல்லது பண்ணார்)” என்பது entrepreneur க்கான என் பரிந்துரை. உகப்பதும் விடுப்பதும் உங்கள் தேர்வு.  


Saturday, October 08, 2022

தினம்

 "தினம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?" என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் ஒரு நண்பர் கேட்டார். ”அது கடன் சொல்” என்றே எல்லோரும் சொன்னார்.  சங்கதத்திற்கு அடிபணியும் போக்கு நம்மில் ஊறிக் கிடக்கிறது போலும். உண்மை அதுவல்ல. குறிப்பிட்டசில கற்களையோ, மரங்களையோ ஒன்றோடு ஒன்றைத் தேய்த்துப் பெற்ற பொறியால் தீ என்பது மாந்தருக்குக் கிடைத்தது. தேய்>தீய்>தீ என்பது தமிழ் மூலம் கொண்ட சொல். எவ்வளவு குட்டிக்கரணம் அடித்தாலும் இது சங்கத ஊற்றுக் காட்டாது. இந்தச் சொல் தமிழில் ஒளிக்கும் பயனுற்றது. 

தீ-தல் என்ற வினைச்சொல் தீ என்னும் பெயரிலிருந்து எழுந்தது. தீ-தல் என்பது , தீய்ந்து போதல் என்ற சொல்நீட்சியை அடுத்து உருவாக்கும். தீய்ந்து போதல் என்பது பேச்சு வழக்கில் தீய்ஞ்சுபோதல், தீந்தல், தீஞ்சல் போன்ற பல வடிவங்களை உருவாக்கும். இவை எல்லாம் தமிழே. இது வடபால் மொழிகளில் கடன் போகையில் தீன்>தின் என்று திரிவுறும். சொல்லின் தோற்றத்தை மறந்துபோன நாம் மீளக் கடன்வாங்கி தினம் என்ற சொல்லை உருவாக்குவோம். ஒளி நிறைந்த பொழுது என்று அதற்குப் பொருள். 

தின் என்னும் திரிவு  தமிழ்மூலங் கொண்ட சொல். வடபால் மொழிகளில் இது பெரிதும் பயனானது. மறவாதீர். இது சங்கதமூலம் கொண்டதல்ல. பல தமிழ்ச் சொற்களை, வடபால் மொழிகளுக்குக் கொடையாய்க் கொடுத்துவிட்டு :நாள் மட்டுமே தமிழ்ச்சொல்” என்று இன்று நாம் சொல்லிக் கொள்வது நம் அடிமைத் தனம். day எனும் ஆங்கிலச்சொல் கூடத் தேய்>தீய்>தீ யோடு தொடர்பு கொண்டது. ஒளியுள்ள பொழுது என்று அதற்குப் பொருள்.  

தெய்வம், தேவன் , தீவு>தீபம்  போன்ற சொற்கள் கூட நம் தீ-யில் உருவானவை தாம்.