Monday, February 27, 2006

குறியேற்றமும் இலக்கணமும்

இனி அடுத்த சோதனைக்கு - 3 க்குப் போவோம். இப்பொழுதும் நாம் எடுத்துக் கொள்ளும் சொற்கள் அதே ஐந்து தாம்.

இவன்
இவனை
இவனால்
இவனோடு
இவனிடம்

இந்தத் தொகுதியில் இவன் என்பதை மாணிக்கன் என்று மாற்றினால், நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் கீழே வரும்படி இருக்க வேண்டும்.

மாணிக்கன்
மாணிக்கனை
மாணிக்கனால்
மாணிக்கனோடு
மாணிக்கனிடம்

ஆனால் வெறும் முதற்சொல் மட்டுமே WORD - ல் Find and Replace மூலம் மாறுகிறது; கூடவே முன்னால் சொன்னது போல, மேலே உள்ளதை. உரோமன் எழுத்தில் போட்டால், எல்லாமே மாறுகிறது. So, no big deal.

அடுத்ததாக, மாணிக்கன் என்பதற்குப் பகரியாய் (substitute) மாணிக்கம் என்று கடையெழுத்தை மட்டும் மாற்றிப் போடுகிறோம் என்று வையுங்கள். தமிழ் வழக்கப் படி நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

மாணிக்கம்
மாணிக்கத்தை
மாணிக்கத்தால்
மாணிக்கத்தோடு
மாணிக்கத்திடம்

ஆனால் முடிவுகளோ? தமிழ் எழுத்து, உரோமன் எழுத்து என இரண்டில் எழுதினாலும் வெறுமே முதற்சொல் மட்டுமே மாணிக்கம் என்று மாறுகிறது; மற்றதெல்லாம் கந்தர கோளமாய் நிற்கின்றன. முன்னால் (உயிர்மெய் எழுத்துக்களே இல்லாத, வெறும் அகரவரிசையைக் கையாளும்) உரோமன் எழுத்தில் எழுதியபோது, ஐந்தும் சரியாக மாறின; இப்பொழுது அதுவும் no go.

Maanikkam
Maanikkamai
Maanikkamaal
Maanikkamootu
Maanikkamitam

என்ன ஆச்சு? குழந்தை அழுதுது; இலக்கணம் போச்சு. மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள தனித்தன்மைகளை விளக்கும் முகமாக இங்கே அத்துச் சாரியை உள்ளே நுழைய வேண்டியதை கணி மட்டும் உணர மாட்டேன் என்கிறது. ஏனென்றால் தமிழ் என்ற மொழியைக் கையாளுகிறோம் என்று கணிக்குத் தெரியாது. (நாம் சொல்லாவிட்டால் கணி எங்கே உணரப் போகிறது?) In other words, we have a Unicode compliant software which does not recognize Tamil Script and also Tamil language.

While we need a proper script recognition to solve problems like Experiment - 1, we need special add - on modules to recognize Tamil Grammer for solving problems like Experiment - 3.

i.e.,
Exp - 1 is related to a grammer independent problem (but needing to understand vowelized consonant properly).
Exp - 3 is related to a grammer dependent problem.

We should not lump both the problems together. The first one has to be solved at the encoding level and the second one at the special purpose software level. Present Unicode encoders developers take an escapist position and dump every such problem (both exp - 1 and 3) on to the special purpose software level posing burden on computing.

இதுவரை புரிந்து கொண்டதையும், அதில் இருந்து விரிகின்ற சில முடிபுகளையும், தொகுத்து உரைப்போமா?

1. தமிழ் மொழி என்பது ஓர் ஒட்டுநிலை மொழி (Agglutinative language). அது மேலை மொழிகளைப் போல நெகிழா மொழி (inflexive type = a language that adds one moneme or phoneme to a verb to denote case, number, gender, person, tense, etc. - Latin, Greek, Russian, etc. - as opposed to agglutinative languages. ஆங்கிலம் இலத்தீன், கிரேக்கம், உருசியன் பார்க்கச் சற்று வேறுபட்டது.) அல்ல, நெகிழா மொழிகளில் வேற்றுமை தெரிவது வினைச்சொல்லில்; தமிழில் பின்னொட்டுக்களை வைத்துப் பெயர்ச்சொல்லில் வேற்றுமை பழகுகிறோம். [மேலை மொழிகளில் பெரும்பாலானவற்றில் வேற்றுமை உருபுகள் தனித்தே நிற்கும்; அல்லது வினைச்சொல்லில் பிணைந்து நிற்கும். பெயர்ச்சொல்லோடு கொழுவி (கொழுவுதல் = சார்ந்து நிற்றல், கொழுநன் = சார்ந்து நிற்கிறவன்) நிற்காது.] முதல்வகைச் சொற்களோடு வேற்றுமை சேர்க்கும் போது புணர்ச்சி பார்த்துச் சேர்க்க வேண்டியது முகமையானது. அப்படியானால் "ஒரு ஆவணத்தில் வரும் உயிர்மெய் எழுத்துக்களை எந்த நேரத்திலும் அதில் பொதிந்து கிடக்கும் மெய்யென்ன? உயிரென்ன" என்று இம்மி நேரத்தில் பிரித்து அறியக் கூடிய வாய்ப்பு கணிக்குள் செயற்படும் எந்த நிரலிக்கும் இருக்க வேண்டும். இந்த வாய்ப்பு அமையவேண்டுமானால் அது குறியேற்றத்திற்குள்ளேயே குறிப்புள்ளி (code-point) அளவிலேயே பொருத்தப் பட்டு இருக்க வேண்டும். (இதை எப்படிச் செய்யலாம் என்று பின்னால் வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

2. சில குறிப்பிட்ட பெயர்ச்சொற்கள் சாரியை இல்லாமல் வேற்றுமை உருபுகளை எடுக்காது. அவற்றைக் கையாள வேண்டுமானால் குறியேற்றத்தினின்று விலகி ஒரு புறனடையாக (exception) விதப்பு (specialized) நிரலிகள் வைத்துத் தான் find and replace செய்யமுடியும். இவை என்னென்ன, எந்த நிலையில் வருகின்றன என்பதை தொல்காப்பியம், நன்னூல் பார்த்துச் செய்யமுடியும்.

இனி அடுத்த சோதனைக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, February 26, 2006

குதிரைக்குக் குர்ரம்னா யானைக்கு அர்ரமா?

முன்பு சொன்ன தேடி மாற்றும் சோதனையை சோதனை - 1 என்று கொள்ளுவோம். அதில் குறித்திருந்த சொற்கள் ஐந்து

இவன்
இவனை
இவனால்
இவனோடு
இவனிடம்

இவற்றை அவன், அவனை, அவனால், அவனோடு, அவனிடம் என்பதாய் Microsoft word -ல் உள்ள find and replace மூலம் மாற்ற முயன்றோம். இப்பொழுதுள்ள நிலையில் முடியவில்லை. சிலர் அப்படி நடப்பதை நிரலியின் குறை என்று சொன்னார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. அது வெறும் script - ஆல் ஏற்படும் சிக்கல் என்றே நான் புரிந்து கொள்ளுகிறேன்.

இதே தமிழ்ச் சொற்களை உரோமன் எழுத்தில் எழுதினால் (இதைச் சோதனை -2 என்று கொள்ளுவோம்) இதே தேடி மாற்றும் நிரலி சவ்க் என்று கண்சிமிட்டும் நேரத்தில் செய்கிறதே. அது, ஏன்?

ivan
ivanai
ivanaal
ivanoodu
ivanitam

என்ற வரிசையில் ivan என்பதை avan என்று மாற்றச் சொன்னால் மிக எளிதில் ஐந்து சொற்களையும் மாற்றுகிறது. Problem Nahi!

மொழி ஒன்றுதான், இருவேறு எழுத்துக்கள். ஒரே நிரலி உரோமன் எழுத்தில் இருந்தால் செய்கிறது. தமிழ் எழுத்தில் இருந்தால் செய்வதில்லை. மைக்ரோசாவ்ட் வோர்ட் நிரலில் Unicode compliant என்றுதான் சொல்லுகிறார்கள். குறை நிரலியிலா? நம்முடைய குறியேற்ற முறையிலா? குதிரைக்கு குர்ரம்னா, யானைக்கு அர்ரம்னு சொல்லலாமா என்பார்கள். அதைப் போல ஆங்கில எழுத்தில் செய்யும் அதே ஏரணம் [வேறு ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை; கொடுத்திருக்கும் சொல்லின் குறிப்புள்ளிகளை (code points) வைத்துக் கொண்டு அதே குறிப்புள்ளிகள் ஆவணத்தில் எந்தெந்த இடத்தில் தொகுதிகளாக வருகிறதோ, அந்தத் தொகுதிகளை இரண்டாவதாகக் கொடுத்திருக்கும் குறிப்புள்ளித் தொகுதிகளாக மாற்றுவது தான் find and replace.] தமிழில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

ஏன்? உடனே ஒருங்குறியாளர்கள் சொல்லுவார்கள். ன் என்பதே ஒருங்குறியின் படி ஒரு கூட்டு அல்லவா? அது ன + புள்ளி. சரி! "இவன" என்பதை "அவன" என்று மாற்று என்றால், ஐந்து சொற்களும் மாறுகிறதா? உள்ளதும் போச்சுது, தொள்ளைக் காதா!!!

முன்னாலாவது இவன் என்ற முதற்சொல்லையாவது மாற்ற முடிந்தது. இப்பொழுது அதுவும் முடியவில்லை. இப்பொழுது சொல்லுங்கள் பிழை நிரலியிடமா? அல்லது குறியேற்றத்தில் சரியானபடி நாம் தமிழெழுத்தை வரையறை செய்யாததாலா?

I am switching to English again unfortunately. Because, most Tamils writing in internet appear to be comfortable with English only in discussing technical matters. [You see, Tamil is fit only for discussing kacchara things :-((((]

The present day multipurpose programmes like WORD are so constrained by Roman type of encoding which has separate recognizable entities for vowels and consonants; When Roman script is used, the problem specifically faced above in Tamil words for "search and replace" does get solved within no time. We don't seem to be needing grammer at all; on the other hand if we render Tamil in Tamil Script, we are confounded. But why?

Why is that the developers just can't come out of the cage and think properly of Indic Scripts? Common guys, we need out - of - box solutions and not just fix-it 3M adhesives. Don't say you tweak here, and tweak there. You don't need them with Roman script.

Let us start defining our script better, identify the components and then slots required for good encoding.

அன்புடன்,
இராம.கி.

Friday, February 24, 2006

செருப்பிற்காகக் காலை வெட்டு

மைக்கொரோசவ்ட் word நிரலியைத் திறந்து கொள்ளுங்கள்.

இவன்
இவனை
இவனால்
இவனோடு
இவனிடம்

என்று ஒருங்குறியேற்றத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

edit என்பதற்குப் போங்கள் search and replace -ன் மூலம் இவன் என்பதை அவன் என்று மாற்றச் சொல்லுங்கள்.

அது முதலில் இருக்கும் ஒன்றை மட்டுமே மாற்றும்; மற்ற நாலையும் விட்டு விடும்.

இப்பொழுது இவ என்பதை அவ என்று மாற்றச் சொல்லுங்கள், ஐந்தையும் சரியாக மாற்றும்.

இனி இவ என்னுமிடத்தில் இராம.கி அல்லது உங்கள் பெயர் எதோ அதை எழுதி மாற்றச் சொல்லுங்கள்; இன்னும் வேடிக்கையாக வரும்.

இப்படி ஒரு தமிழ் ஆவணத்தில் தேடி மாற்றமுடியாத நிலையில் தான் ஒருங்குறி இருக்கிறது. கேட்டால், கூகுளில் தேட முடிகிறதாம். நண்பர்கள் பலரும் சொல்லுகிறார்கள். நானோ "நம்மை எப்படி வெள்ளைக்காரர்களால் Unicode consortium வழி ஏமாற்றமுடிகிறது?" என்று எண்ணிக் கொள்கிறேன்.

இப்பொழுது புரிகிறதா? ஒருங்குறி என்று வந்தால்,

செருப்பிற்காகக் காலை வெட்டு.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, February 22, 2006

பாவித்தல்

Tamil Script - A living legacy என்ற என் முந்தைய இடுகையில் வந்த பின்னூட்டில் திரு. வசந்தன் பாவித்தல் என்ற சொல் பற்றிக் கேட்டிருந்தார். அண்மையில் இந்தச் சொல் பற்றி சந்தவசந்தம் குழுவிலும் ஒரு வினா எழுந்தது. பின்னால் எழுதிக் கொள்ளலாம் என்று அங்கு படித்ததோடு அமைந்துவிட்டேன். ஒரு சில நண்பர்கள் அது வடமொழி மூலம் தான் என்று அங்கு சொல்லியிருந்தார்கள். ஆனால் கற்பிதம் என்ற பொருளை அதற்கு அடிநாதமாய்க் காட்டி "பாவம், பாவனை" என்பதைப் போன்று தான் "பாவ்" என்னும் வடமொழி வேரின் அடியில் இது பிறந்தது என்று சொல்லியிருந்தார்கள். வடமொழி வேராகக் கீழ்க்கண்டவை தென்படும். தெரியாதோருக்குச் சொல்லுகிறேன். u_ என்று கீழே இருப்பது போல் வந்தால் அது நெடில் ஊ என்று பொருள்.

bhu_ to be; deri. bhu_ta, bha_vya, bhavya
bhu_ to obtain, to attend; bha_vayate_

புவனம், பவனம், பவன் (சரவண பவன்), பவம் (சம்பவம்), பாவம் (முக பாவம்) என்ற சொற்களை சந்த வசந்தத்தில் எடுத்துக் காட்டாகக் காட்டியிருந்தார்கள். "பாவயாமி ரகு ராமம் = ரகுராமனை பாவிக்கிறேன் = நெஞ்சில் இருத்துகிறேன்; யத் பாவயஸி தத் பவஸி - எதை பாவிக்கிறாயோ அது ஆகிறாய்" என்ற சொற்றொடர்களையும் சொல்லியிருந்தார்கள்.

பாவித்தல் என்ற சொல்லுக்கு எண்ணுதல், தானித்தல் (தியானித்தல்), பாவனை செய்தல், பொய்யாக நடித்தல், நுகர்தல் என்ற பொருள்களை அகர முதலிகள் தரும். ஈழத்தார் ஒன்றைப் பாவித்தல் என்று சொல்லும் போது கற்பிதம் செய்வதில்லை. மேலே சொல்லுவது போல கற்பித்துக் கொண்டேன் என்ற பொருளில் பாவித்தேன் என்று சொல்லுவது தமிழ்நாட்டுப் பேச்சில் வேண்டுமானால் ஒருவேளை அமையக் கூடும். ஈழத்தார் பேச்சில் பாவித்தல் என்பது ஐம்புலன்களால் உணரக் கூடிய ஒரு இயல்பொருளை தனக்குப் பயன்படும் வகையில் ஆளுவதையே குறிக்கும். அங்கே கற்பிதம் என்ற imagination கிடையாது. நுகருதல் என்ற பொருளே இருக்கிறது.

அப்படியானால் பாவித்தலின் மூலம் என்ன? அதை அறிய முதலில் பயன் என்ற சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டும். பயன் = use என்பது முதல் நிலைப் பொருளா? அல்லது வழிநிலைப் பொருளா? இற்றைத் தமிழில் பயன் என்ற சொல் வெறும் பெயராக மட்டுமே இருக்கிறது. அதன் வினைச் சொல்லைப் புழங்காது ஒழித்த காரணத்தால் பயன்படுத்துகிறேன் என்று துணை வினை போட்டுச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். உண்மை என்ன?

ஒரு மரம் இருக்கிறது; அது உரிய காலத்தில் பூக்கிறது; காய்க்கிறது; பின் பழுக்கிறது. பல நேரங்களில் இயற்கை தரும் பொருள்களை பயக்கிறது என்று சொல்லுகிறோம். பயக்கிறது என்ற சொல்லுக்கு "விளைகிறது, உண்டாகிறது, பலிக்கிறது, கிடைக்கிறது, படைக்கிறது, பெறுகிறது, கொடுக்கிறது, பூக்கிறது, இயற்றுகிறது, நிறம் வேறுபடுகிறது, அச்சமுறுகிறது" என்றே பொருட்பாடுகள் சொல்லப் படும். இங்கே "விளைப்பு, கிடைப்பு, உண்டானது, பெறுதி, கொடுப்பு, பூப்பு" போன்ற பொருள்களையே ஆழ்ந்து பார்க்க வேண்டும். பயந்தது பயன். அந்தப் பயனை நாம் பெறுகிறோம். அந்த நிலையில் பயன்படுகிறது. பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை தருவது பயன். நாம் அந்தப் பயனை நுகர்கிறோம்; அப்பொழுது நமக்கு நல்லது தருவதாக உணருகிறோம்; இதைத் தான் பயன் படுவதாகச் செயப்பாட்டு வினையில் சொல்லுகிறோம். பயன் என்ற சொல் தான் மருவிப் பலன் என்றும் சொல்லப் படுகிறது. இயற்கையின் மூலம், அல்லது மற்றோர் மூலம், நாம் அடையும் நல்லதைப் பலன் என்று சொல்லுகிறோம். சரி, பயத்தல் என்ற வினையின் வேர்ச்சொல் என்ன? அந்தக் கேள்விக்கு விடை காணு முன்னர் பூ என்னும் ஓரெழுத்து ஒருமொழி பற்றிப் பார்ப்போம்.

என்னுடைய பூதியல் என்ற பதிவில் இந்த ஓரெழுத்து ஒருமொழி பற்றிப் பேசியிருக்கிறேன். அதில் இருந்து தேவையானவற்றை வெட்டி இங்கே ஓட்டுகிறேன்.
----------------------------------------------
"பே" என்னுஞ் சொல் போலவே, "பூ" என்ற ஓரெழுத்து ஒருமொழியும் அச்சப் பொருளில் வரும். இந்தப் பூ என்னும் ஒரொழுத்து ஒருமொழி, தனித்து ஏற்பட்ட ஓரெழுத்து ஒருமொழியா, இல்லை பே - யில் இருந்து கிளைத்து வந்ததா என்று தீர்மானமாகக் கூற இயலாது. ஆதிமனிதனுக்கு அச்சம் என்பது அடிப்படை உணர்வு. இன்றுங் கூடச் சிறுவர்கள் ஒளிந்து விளையாடும் ஆட்டத்தில் திடீரென்று "பூ" என்றோ" பே" என்றோ ஒலியெழுப்பி மற்றொருவனை பயமுறுத்துவதைப் பார்க்கலாம். இந்த அச்ச உணர்வு, நம்மைக் காட்டிலும் பெரிய அல்லது பருத்த உருவத்தை அல்லது தோற்றத்தைப் பார்த்தால் இயற்கையாக எழுகிறது. பல இடங்களில் அச்சமும் பருமனும் பிரிக்கவொண்ணாத வகையில் கலந்தே இருக்கின்றன. கோழி முன்னதா, முட்டை முன்னதா என்பது போல எந்தப் பொருள் முந்தியது என்று உறுதியாகக் கூற இயலாது. "தே" என்ற மொழி கூட அச்சப் பொருளில் தான் முதலில் வந்தது. பின் தெய்வம் என்ற கருத்துக்கும், தீ என்ற கருத்துக்கும் பின்புலனாக அமைந்தது. தீயே முதலில் தெய்வமாக வணங்கப் பட்டது. அச்சமே தெய்வத்தின் தொடக்கம். நாளடைவில் அச்சப் பொருளை மீறி அன்பு, பரிவு, அருள் என உயர்கிறோம். அணங்கு என்ற சொல் முதலில் அச்சம் தரும் தெய்வத்தையே குறித்தது. பின் நாளடைவில் இரக்கம் உள்ள, அருள் உள்ள, அழகு உள்ள தேவதை என்ற பொருள் பிறக்கிறது. காதலியைக் கூட "அணங்கு கொல், ஆய்மயில் கொல், கணங்குழை மாதர்கொல், மாலும் என் நெஞ்சு" என்று சொல்லத் தோன்றுகிறது. இன்றைக்கு வைரமுத்துக் கூட "அழகான ராட்சசியே" எனத் திரைப்பாடல் எழுதுகிறார். எப்படிக் கருத்து முரண் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, பாருங்கள்.

பூ>பூது = பெரியது. [இரும்பூது> இறும்பூது = மிகப்பெரியது; எனவே, வியப்பானது]
பூது>பூதம் = பெரியது, பெரும் பேய்
பூதாண்டி>பூச்சாண்டி = குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவம்
பூதல்>பூசல் = இன்னொருவரைத் திகைக்க வைக்கும் பேரொலி - ஆரவாரம், பலரறிகை, கூப்பீடு, போர்
பூசல்>பூசலிடுதல் = முறையிடுதல், பேரொலிபடக் கதறுதல்
பூது>பூச்சு>பூச்சி= சிற்றுயிர், குடற்புழு, குழந்தைகளை அச்சுறுத்தற்கேனும், சிரிப்பதற்கேனும் சொல்லும் சொல். (பூச்சியைக் கண்டுப் பயப்படுவது அடிப்படை அச்ச உணர்வைக் குறிக்கிறது. சில இடங்களில் தேள், பூரான், பாம்பு போன்றவற்றைப் பூச்சி என்று சிறுபிள்ளைகளிடத்தில் மறைக்குமாப் போலப் பாட்டிமார் சொல்லுவதை எண்ணிப் பாருங்கள்.)

பூதம்>பூதக் கண்ணாடி = சிறியதைப் பெரியதாகக் காட்டும் கண்ணாடி வகை
பூதம்>பூத கணம் = பூதங்களின் கூட்டம். (சுடலையை இருப்பிடமாகக் கொண்ட சிவனின் கணங்கள் என்று தொன்மங்களில் கூறப்படுவது)
பூதம்>பூதவுடல் = உயிரற்றுக் கிடக்கும் உடல் (அதே நேரத்தில் தொட்டு உணரக் கூடிய பருவுடல்; ஆன்மீக வாதம் பூத உடலை ஆன்மாவில் இருந்து பிரித்துப் பார்க்கும். அதன் விளைவாக பூதம் என்பதை உயிர் என்றும் மாற்றிப் பொருள் கொள்ளும்; [காட்டு: பூதத் தயவு (இது இரு பிறப்பிச் சொல்) = உயிர்களிடம் காட்டும் அன்பு]
பூதம்>பூத நாடி = பேய் பிடித்தவர்களிடம் காணப்படும் நாடித் துடிப்பு வகை
பூதம்>பூத நாதன் = பூதங்களுக்குத் தலைவனான சிவன்
பூதம்>பூத சதுக்கம் = காவிரிப் பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல் காத்த நாற் சந்தி.

[வரலாற்று ஆசிரியர் நா.சுப்பிரமணியன், இந்தச் சதுக்க பூதம் பற்றி ஓர் அருமையான ஊகத்தைக் கூறுவார். See his Sangam Polity, Ennes Publications, Udmalpet 642128, Third ed 1996. It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam Literature; but it seems quite proper to trace him back to Perum Chadukka bhUtham which punished all offenders and had a pAsam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from ' Vigna' those who behaved; so it had 'pAsahasta' and 'Vignaraja'; it was the demon on the cross-road distinguished from the gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a pAsam in His hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was ;'BhUta nAtan', a literal equivalent of 'Bhuta' or 'GaNa' nAtan or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian origin, and the pot-belly suggests an ancestry traceable back to Demons. இந்தச் சுவையான வாதத்தைப் பற்றித் தனித்தே எழுதலாம். இப்பொழுது அதைத் தவிர்க்கிறேன்.]

பூது>பூதர் = பதினெண் கணத்துள் ஒருவரான மாந்தர்
பூது>பூதரம் = மலை; இமயம், மேரு
பூது>பூதரன் = அரசன், திருமால்
பூதரம்>பூதலம் = பூமி (இங்குதான் நான் அடிப்படையாகச் சொல்ல வரும் கருத்து இருக்கிறது. குறிஞ்சி நிலத்து மனிதனுக்கு, மலையும் மேடும், பள்ளமும், வட்டமுமாகத் தான் தன்னைச் சுற்றி உள்ள பூமி தெரியும். பருத்து உயர்ந்து உள்ள மலை பூதரம். அதுவே அவன் வாழும் இடம். அதாவது பூமி. ரகரம் லகரமாக மாறுவது பல சொற்களில் உண்டு.)
பூது>பூதவம் = ஆலமரம், மருதமரம். (இந்த மரங்களின் அகண்ட தன்மை இப்படி ஒரு சொல்லை உருவாக்கியிருக்கிறது. அதே ஆலத்தில் இருந்து ஞாலம் என்ற சொல் உருவாகியதை முன்னே சொல்லியிருக்கிறேன்.)

பூதம்>பூத வாதம் = பூதங்களின் சேர்க்கையால் ஆன்மா உண்டானதென்று கூறும் வாதம். இதுதான் உலகாய்தம் அல்லது பூதவியல் எனப் படும்.
பூதம்>பூத வீடு = ஐவகைப் பூதங்களால் ஆகிய உடம்பு.
பூதம்>பூத வேள்வி = பூதம் (=உடல்) பலியிடப் படும் வேள்வி (அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் என்ற குறளை நினைவு கூருங்கள்.)
பூதம்>பூதன் = ஆன்மா (உலகாய்தத்தின் தாக்கத்தால் ஆன்மீக வாதம் தன்வயப்படுத்திக் கொண்ட மாற்றுக் கருத்து. இப்படி மாற்றுக் கருத்துக்குச் செல்லுவது இயற்கை. விலங்குகளை வேள்வியில் பலியிட்ட வேதியம், பின்னால் புத்தமும், சமணமும் எழுந்தபின், தன்னை மாற்றிக் கொண்டது. கிறித்துவம் கொண்டாடப் படுவதற்கு முன் மத்தியக் கிழக்கு, மற்றும் எகிப்தில் சூரியனுக்குப் பிறந்த நாள் கொண்டாடும் நேரத்திலேயே கிறித்து பிறந்த நாளைக் கொண்டு வந்து காட்டி, முன் உள்ள இறையுணர்வை கிறித்தவம் தன் வயப்படுத்திக் கொண்டது தெரிந்தது தானே!. நாம் கூட பொங்கல் கொண்டாடுவது இந்தக் காலம் ஒட்டியே; ஆனால் கொஞ்சம் பஞ்சாங்கம் மாறிக் கொண்டாடுகிறோம். அவ்வளவு தான். அதை அலச இன்னொரு கட்டுரை வேண்டும். விடுக்கிறேன்.)

பூதம்>பூதன் = பூதத்து ஆழ்வார், கடுக்காய், தூயன்
பூதம்>பூதாகாரம் = மிகப் பருத்தது
பூதம்>பூத அண்டம் = பெருத்த அண்டம்
பூது>பூதாரம் = பூமியைப் பிளப்பதாகிய பன்றி; வராக அவதாரம்
பூது>பூதி = திரு நீறு, சாம்பல், செல்வம், பொன், புழுதி, சேறு, பூமி, ஊண், உடம்பு இன்னும் பல. பூதி என்ற சொல்லின் பிறப்பைப் புழுதி>பூழ்தி>பூதி என்றும் சொல்லுவது உண்டு. பூழுதல் = நொறுக்குதல்; பொடி செய்தல்
பூதி>பூதி கந்தம் = தீ நாற்றம். இங்கு பூதி என்பதே தீ என்னும் இன்னொரு பூதத்திற்குப் பயன்படுவதைக் காணுங்கள்.
பூதி>பூதிகம் = பூமி, உடம்பு (இந்த இரண்டு பொருளும் அருகருகில் பயன்படுவது ஒன்றே பூதம் என்ற சொல்லின் சொற் பிறப்பைக் காட்டிக் கொடுக்கும்.
பூதிகம்>பூதியம் = உடல், பூமி, ஐம்பூதம். (முக்கியமான மூன்று பொருளும் இங்கு வருகின்றன.)

பூ>பூமி = நிலம், இடம், நாடு இன்னும் பல. (இங்கே தோன்றுவது, உருவாவது என்ற பொருளில் வடமொழியைப் போலச் சட்டென்று கொள்ள முடியாது. ஏனெனில், பூமி என்பது மாந்தனுக்கு முற்பட்டது. பூமி என்ற ஒரு பொருள், மாந்தனுக்கு அதன் ஒரு கூறாலே தான் தோற்றமளிக்க முடியும். அவன் அதன் முழுமையை அறிந்து பெயரிடுவதில்லை. அவனுக்கு முன்னே இயற்கையின் காட்சி தோன்றும்; கண்ணுக்குப் புலப்படும் பொருள் தோன்றும்; அப்படிப் பார்த்தால் மலை தோன்றும், மடு தோன்றும், ஆறு தோன்றும், மனிதர்கள், விலங்குகள் என்போர் தோன்றுவார்கள்; மொத்தத்தில் ஒரு விதுமை தோன்றும்; பொதுமை தோன்றாது. விதப்பான பெயரே பூமிக்குப் பெயராக இடப்படும். ஆழ்ந்து யோசியுங்கள். பூ என்ற ஓரெழுத்து ஒருமொழி எப்படி வந்திருக்க முடியும்? பூத்தது என்ற கருத்துக்கும் முன் வேரொன்று இருக்க வேண்டும் அல்லவா? இங்கே மலையைக் குறித்த சொற்களே தொடக்கமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

புடைத்து நிற்பது புடவி = நிலம், மலை; குவித்து உயர்ந்து நிற்பது குவடு = மலை. அது போல புவித்து (= புடைத்து வெளிப்பட்டு, குவிந்து) நிற்பதும் மலை, இடம், பூமி. ஒரு மரத்தில் புடைத்து மொட்டாகி, முகிழ்த்து, பின் மலர்ந்து, வெளிவந்தது தான் பூ. இப்படி வெளிவருவதைத் தான் புவ்வுதல் என்று சொல்லுகிறோம். புவ்வுதல் என்ற வினைச்சொல்லில் இருந்த வந்த பெயர்தான் பூ = மலர்; [காட்டு: புவ்வத் தாமரை = திருமாலின் கொப்பூழில் இருந்து எழுந்த தாமரை. தமிழ் அகர முதலியைப் பாருங்கள்.] (பொதுவாக, நாட்டுப்புறத்தார் பூ என்று சொல்லி நிறுத்த மாட்டார்கள்; அவர்கள் பூவு என்றே சொல்லுவது கூட நமக்கு ஒரு குறிப்பைத் தருகிறது.)

புவு>பூ. இந்த மாற்றம் தமிழில் இயற்கையான மாற்றம். இந்தப் புடைப்பில் இருந்து தான் தோன்றுதல், உருவாதல் என்ற பொருள்கள் வரமுடியும். பருத்துப் புடைத்து, பின் வெளிவருவது இயற்கையில் நடக்கும் ஒரு செயல். அதைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு பூ என்பது உருவாவது (becoming) போலத் தான் தோற்றமளிக்கும்.

இதே போல புவ்வித் (புடைத்துத்) தோற்றமளிக்கும் இடம் புவி. இன்னொரு ஈற்றில் அது புவனம் என்றும், புவனி என்றும் ஆகும்.
புவு>புவி; புவு>புவனம் = பூமி, உலகம், இடம், மாந்த இனம், நீர் (இங்கு இன்னொரு பூதம்); புவு>புவனி = பூமி; மீண்டும் நீண்டு புவம் = வானம் என்னும் இன்னொரு பூதத்தைக் குறிக்கும்.
---------------------------------------
புவ்வி (புடைத்து, பெருத்து, விளைந்து) வந்த பொருள் புவ்வம்>புவம்>பவம். மேலே பயனுக்குச் சொல்லப்பட்ட எல்லாப் பொருள்களும் (விளைப்பு, கிடைப்பு, உண்டானது, பெறுதி, கொடுப்பு, பூப்பு) இங்கே பவத்திற்கும் அமையும். பயன் என்பது யகரம் உள்நுழைந்த சொல்லாக்கம்; பவம் என்பது வகரம் உள்நுழைந்த சொல்லாக்கம். வேறெந்த மாறுபாடும் கிடையாது. பயன், பலன், பவம் எல்லாமே ஒரே பொருள் தான்.

தற்பவம் என்னும் போது அது தற்பெருக்கம், தன்விளைப்பு, தன்பூப்பு என்றே பொருள்கொள்ளும். தமிழியை மட்டும் வைத்துப் பிறமொழிச் சொற்களைத் தன்வயப்படுத்தி எழுதுவது தற்பவம்.

ஆக, விளைக்க வைப்பது, கிடைக்க வைப்பது, பூக்க வைப்பது, உண்டாக்க வைப்பது என்பதைக் கொண்டு வரவேண்டுமானால், செயப்பாட்டு வினையில் சொல்ல வேண்டும். பயத்தலை பயவித்தல் என்று ஆக்குவது எளிது. ஆனால், பவ என்பதை முதலில் நெடிலாக்கிப் பாவுதல் என்ற தன்வினையாக்கிப் பின்னால் பாவித்தல் என்ற செயப்பாட்டு வினை ஆக்க வேண்டும். இன்னொரு காட்டைச் சொன்னால் நான் சொல்லுவது புரியும். கண்ணுதல் என்பது செய்வினை. அதைச் செயப்பாட்டு வினையாக்கும் போது முதலில் காணுதல் என்ற இடைப்பட்ட தன்வினையை உருவாக்கிப் பின்னால் காணுவித்தல் / காண்பித்தல் என்ற செயப்பாட்டு வினையை உருவாக்குகிறோம் அல்லவா? அதைப் போலத் தான் இந்தப் பாவித்தலையும் உணரவேண்டும். இதனால் தான் "பவத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த பாவித்தல் என்ற ஈழத்தார் சொல்லை அறிக" என்ற தொடரை அந்தப் பதிவில் எழுதினேன்.

பயவித்தலும், பாவித்தலும் நுகர்ச்சிப் பொருளைக் காட்டியது; "விளைப்பு, கிடைப்பு, உண்டானது, பெறுதி, கொடுப்பு, பூப்பு" என எல்லாமே மாந்தருக்கு என்று எழுந்த கருத்து.

அன்புடன்,
இராம.கி.

Thursday, February 16, 2006

ஆகமம் - ஒரு சுவையான உரையாடல்

ஒருமுறை புலியூர் நாட்டுப் பூந்தண்மலியில் உள்ள நெடுஞ்செழிய விண்ணகரத்திற்கு நான் என் மனையாளும் சென்றிருந்தோம். பூந்தண்மலி தான் (பூக்களால் குளிர்ந்து நிறைந்து போன இடமாம்; அழகான பெயர் இல்லையா?) இந்தக் காலத்தில் பூந்தமல்லி என்றும் பூவிருந்தவல்லி என்றும் சொல்லப் பெறுகிறது. பூவிருந்தவல்லித் தாயார் பெயராலும் இந்த ஊர் அழைக்கப் படுகிறது. அலர் மேல் மங்கைதான் பூ இருந்த வல்லி என்று இன்னொரு வகையில் சொல்லப் பெறுகிறார்; ஆனாலும் வழக்கம் போல, தமிழ் அவ்வளவு இனிப்பாகக் கோயில் நிருவாகத்தாருக்கு தோன்றுவதில்லை போலும்! :-) குடமுழுக்கிற்குப் பின் தாயார் கருவறை நிலையின் மேல் "புஷ்பவல்லி" என்ற வடமொழிப் பெயரையே எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் பெயர் மாற்றி எழுதும் இந்த மூடப் பழக்கம் தமிழ்நாட்டுச் சிவ, விண்ணவக் கோயில்கள் பலவற்றிலும் புற்றீசலாய் இருக்கிறது.

மூலவர் வரதராசர் போக இங்கு அரங்கநாதருக்கும், சீனிவாசருக்கும் தனிக் கருவறைகள் உண்டு. அரங்க நாதர் கருவறை முன் கும்பிட்டுத் துழாய் நீரையும், துழாயும் வாங்கிக் கொண்டு விலகு முன், அங்கிருந்த பட்டர் "மாசி மகம் என்றெல்லாமா அச்சடித்து விற்கிறார்கள்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். வேறு ஒன்றுமில்லை; "டீ" சட்டைகளில் தமிழ் எழுத்திலோ, அல்லது ஆங்கில எழுத்திலோ கூட, தமிழ் வாசகம் எழுதியிருந்தால் அதைப் போட்டுக் கொள்ள எனக்குப் பிடிக்கும். குறிப்பாக வார இறுதிகளில் இப்படித்தான் "டீ" சட்டை போட்டு அலைவது உண்டு. அன்று போட்டிருந்த "டீ" சட்டையில், தண்டாயுத பாணியின் உருவம் அச்சடித்து ஆங்கிலத்தில் மாசி மகம் 1996 என்று போட்டிருந்தது; என் தந்தையார் மலேசியாவில் இருந்து ஒருமுறை வந்த போது, எனக்கு இதைக் கொண்டு வந்து கொடுத்திருந்தார். நான் மெதுவாக, "இது மலேசியாவில் வாங்கியது" என்றேன். "நம்மூருதோ என்று வியந்தேன்" என்றார் பட்டர். பிறகு அவரோடு சில முகமன்களைப் பரிமாறிய பிறகு அங்கிருந்து நகர்ந்தோம்.

வெளியில் வரும் பொழுது யோசித்துக் கொண்டே வந்தேன். ஏன் நம்மூரில் நம் விழாக்களை காலத்திற்கு ஏற்றாற் போல புதுக்க மாட்டேன் என்கிறோம்? வெள்ளைக்காரன் தினங்களை எல்லாம், அப்பா தினம், அம்மா தினம், மாமியார் தினம், காதலர் தினம் என்று கூறி "டீ" சட்டையில் போட்டுக் கொண்டு வெளியே திரிய முடிகிறது. எண்ணிப் பார்க்காதவற்றிற்கெல்லாம் "டீ" சட்டை போடுகிறார்கள். நம் இளையோரும் விரும்பி வாங்குகிறார்கள். ஆனால் தமிழோடு சார்ந்த சமய விழாக்கள், அல்லது பண்பாட்டு விழாக்கள்.......?

அதே பொழுது, இது எப்படி மலேசியா, சிங்கப்பூரில் முடிகிறது? அங்கு தைப்பூசம், தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் டீ சட்டை வெளியிட்டால், அதை வாங்கப் பெரும்பாலும் யாரும் தயங்குவதில்லை. தைப்பூசம் அங்கு ஓர் அடையாளம், ஆனால் நம்மூரில் அது அடையாளம் ஆகமாட்டேன் என்கிறதே, ஏன்? தமிழ்நாட்டில் யாரேனும் இதற்கு டீ சட்டை வெளியிட்டுப் பார்த்திருக்கிறீர்களோ? பழனிக்குக் காவடி எடுக்கிறார்கள்; ஆறுபடை வீடுகளுக்கும் நடைப் பயணம் செய்கிறார்கள்; ஆனாலும் நம் வணிகர்களுக்கு, குறிப்பாகத் திருப்பூர்காரர்களுக்கு இது தோன்றவே வில்லையா? அப்படி வெளியிட்டால் மக்கள் வாங்க மாட்டார்களா? "Hare Rama Hare Krishna" என்றெல்லாம் ஆங்கிலத்திலும், நகரியிலும் அடித்துத் துண்டு விற்கிறார்கள். நம்மவர்களும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். ஏன், பகவத் கீதையிலோ, அல்லது ஒரு உபநிடதத்தில் இருந்து ஒரு வாசகத்தைப் போட்டால் கூட ஒரு சிலர் வாங்கிக் கொண்டு போகிறார்கள். ஆனால் தமிழோடு ஒட்டிய சிவம், விண்ணவம் பற்றிய வாசகங்களையும், விழாப் பெயர்களையும், அதற்கான துண்டு, டீ சட்டைகளையும் ஏன் பார்க்க மாட்டேன் என்கிறோம்?

நம் சமயம், பண்பாடு என்பது எல்லாம் ஏதோ ஒரு பாத்தி கட்டியது போல், தமிழை விலக்கி வைத்து, ஏன் ஒரு பக்கமாய் நிற்கிறது? அப்படி இருந்தாலும் அதில் வடமொழி/நகரி மட்டுமே ஏன் இருக்கிறது? தமிழ் வழிப் பெருமிதம் என்பது ஏன் நம் மக்களுக்கு வரமாட்டேன் என்கிறது?

இதற்காக நாம் சமயம் பேணவில்லை என்று நான் சொல்லவில்லை. நம் சமயத்தின் தமிழ்ப் பக்கத்தை வெளியே சொல்ல நாம் நாணப் படுகிறோமா, என்ன? (Are we apologetic about the Tamil aspect of our religion?) இத் தமிழ்ப்பக்கம் தானே நம் ஆகமச் சமயத்திற்கு அடிப்படை? (மலாய் மொழியில் சமயம் என்ற பொருளுக்குச் சொல் என்ன தெரியுமா? ”ஆகமா” என்பது தான். கீழே உள்ள வலைத் தளத்திற்குப் போய் பார்த்தால் புரிபடும்.

http://dictionary.bhanot.net/index.html

agama என்ற சொல்லிற்கு religion என்றும், beragama என்றதற்கு having a religion என்றும், keagamaan என்பதற்கு religious என்றும் போட்டிருக்கும். இந்த மொழிக்குள் உள்ள தமிழ் ஊடுருவல் தெரிகிறதா?)

---------------------------
இதை நான் ஓராண்டுக்கு முன் தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதியவுடன், சுவையான உரையாடல் எனக்கும் நண்பர் நா.கணேசனுக்கும் இடையே நடந்தது. அதை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.-------------------------
நண்பர் நா. கணேசன்,

"நிகமம் - வேதம், ஆகமம் - சைவ/வைணவம் போன்ற அகச்சமயங்களுக்கு மாத்திரம் அல்லாது ஜைநம், பௌத்தம் போன்றவற்றின் சமயநூல்களையும் ஆகமம் என்றே குறிக்கின்றனர். தென்கீழ் ஆசியாவில் பௌத்தம் வெகுவாகப் பரவியிருந்ததால் ஆகமம் என்ற வடசொல் அங்கே நிலை பெற்றுள்ளது"
---------------------------
நான் எழுதிய மறுமொழி:

சமயம் நம்மூர்; அதன் பேர் மட்டும் வட மொழியா? இப்பொழுதுதான் கரு. ஆறுமுகத் தமிழனின் "திருமூலர்: காலத்தின் குரல்" என்ற ஆய்வு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.

o0o
"தமிழனுக்கென்று சொந்தமாகச் சமயமோ, மெய்யியலோ கிடையாது; அவன் தன் மொழி முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் கடன் வாங்கித்தான் காலம் தள்ளுகிறான்" என்று கருதுகிறவர்களும், பேசுகிறவர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள். தமிழனுக்கென்று நிலம் சார்ந்த தெய்வங்கள் இருந்தன. வழிபாட்டு நெறிகள் இருந்தன. 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' என்று இறைவனை வரையறுத்துப் பேசுகிற முழுமுதற் கடவுட் கோட்பாடு இருந்தது. நிலையாமை, நிலைபேறு, உயிர், ஊழ்வினை, உலகம் என்று எல்லாவற்றையும் பற்றி ஒரு திட்டமான பார்வை இருந்தது
o0o

என்றுதான் அவர் நூல் தொடங்குகிறது. இந்தப் பேச்சு என்னைச் சிந்திக்க வைக்கிறது. ஆகமம் வடமொழி என்று எப்படிச் சொல்லலாம்?

வேத நெறிக்கு முரண்பட்டது ஆகம நெறி. வேள்விக்கு உரியது வேதம்; அது எவராலும் ஆக்கப் படாதது என்று அந்நெறியார் சொல்லிக் கொள்கிறார். ஆகம நெறி பற்றி அப்படி ஏதுஞ் சொல்லவில்லை. ஆக்கப் பட்டது ஆகமம். சொற்பிறப்பும் அப்படித்தான். அது முற்றிலும் தமிழ்ப் பெயர்.

"என்னப்பா ஆகிருச்சா?
அண்ணே! அப்படி ஆகாதுண்ணே, இப்படித்தாண்ணே ஆகும்.
ஆகலைன்ன ஆக்கிருப்பா!"

என்ற சொற்களில் வரும் ஆகுதல் என்ற தன்வினையும் ஆக்குதல் என்ற பிறவினையும் தான் இங்கே தொடக்கம்.

ஆகுமம்>ஆகம வழக்கம் எல்லாமே நம்மூர் நடைமுறைகளைக் கொண்டது. சேயோன் (தமிழ் உறவுமுறைப்படி முப்பாட்டனுக்கும் முந்தியவன் சேயோன்) காலத்தில் இருந்து நமக்கு ஆகிவந்தது, மரபாக வந்தது ஆகமம். இதைத் தான் வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு சனாதன தருமம் என்கிறார்.

ஆகம நெறியில் நீர் முகமையானது; ஏதொன்றையும் நீரைத் தெளித்துப் புனிதமாக்குகிறோம்; வேதநெறி போல் நெருப்பால் அல்ல. ஆகம நெறி பற்றி எழுதினால் நீண்டு போகும். நம் நெறிகளையும், கோட்பாடுகளையும், அவற்றின் தோற்றங்களையும் கூர்ந்து கவனிக்காமல் ஆகமம் வடமொழி என்றால் நம் கோயில்நெறிகளைத் தூக்கிக் குப்பையில் போடலாம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

புத்தமும், செயினமும் ஆகம நெறிக்குள் சேர்ந்ததா? இது என்ன கூற்று? அவைகள் வேதமறுப்பு நெறிகள் என்றால் சரி. அவற்றோடு ஆசீவகத்தையும் சேர்த்து சமணம் என்ற பொதுப் பெயரில் அழைத்தார். அதற்குச் சான்றுகள் இருக்கின்றன. ஆனால் ஆகம நெறி என்று அவற்றை அழைத்ததாய் நான் படித்ததில்லை.
------------------------------------------------------
நா.கணேசன்:

தமிழகம், ஆந்திரம், கலிங்கம், வங்கம் - எல்லா நாடுகளில் இருந்தும்
ஆகம சமயம் மலாயா போன்ற தேசங்களை அடைந்தது. கிடைப்பதெல்லாம்
வடமொழிக் கல்வெட்டுக்களே. ஏதோ ஒன்றிரண்டில் தமிழ்ப் பகுதிகள்
உள்ளன.
------------------------------------------
என் மறுமொழி:

இதுவும் சரியான கூற்றல்ல. அக் கல்வெட்டுக்களைத் தேடிப் படியுங்கள். படிக்காமல் ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்றுரைப்பது நம்மை முழு ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்லாது. தமிழ்ச்சொல் கலந்த பல்லவ வடமொழி நடை, வடசொல் கலந்த பேரரசுச் சோழர் காலத்துத் தமிழ்நடை ஆகிய இரண்டுமே அக்கல்வெட்டுக்களில் நன்கு புலப்படும். அவற்றின் தமிழர் மூலம் முற்றிலும் உறுதியே.

ஒரு ஆந்திர அரசு, வணிகர் குழு பற்றி அக்கல்வெட்டுகளில் காட்டுங்களேன்? இல்லாததை எல்லாம் இழுத்தால் எப்படி? கலிங்கர் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறோம், அவ்வளவுதான்; (அதுவும் கேள்விக்குரியது) ஆனால் தமிழர் பற்றித் தெரிந்த அளவிற்குக் கூட கலிங்கர் பற்றிய செய்தி மலேசியா, இந்தோனேசியவில் மிகக் குறைவு. கலிங் என்ற சொல் பரவலாய் மலாயிலும் இந்தொனேசியத்திலும் புழங்குவது உண்மை. (அது பெரும்பாலும் தமிழரையே குறிக்கும். சிலபோது நீட்சியால் மற்ற இந்தியர்.) ஆனால் சோழிய என்ற சொல்லும் கூடவே அங்கு புழங்குகிறது. இன்னும் சரியாக படிக்கப்படாத ஒரு வரலாற்றில் சொல்பவை, கருதுகோளாக இருக்க வேண்டுமே ஒழிய, முடிந்த முடிபுகள் ஆக முடியாது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியத் தொடர்புகள் எல்லாவற்றையும் வடமொழியென்று புரியாதுசொல்வதின் தொடக்கம் நீலகண்ட சாத்திரியில் இருக்கிறது. அவர் சொன்னால் வேத வாக்கா? அவருடைய தாக்கம் 50 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றுவரை நீள வேண்டுமா? அவருடைய ஒருபாற் சார்பை ஒதுக்கி அடிப்படைத் தரவுகளை அவர் அளித்த மஞ்சள் கண்ணாடி வழியாகப் பார்க்காமல் நேரடியாகப் பார்ப்போமே?
----------------------
மீண்டும் நா.கணேசன்:

ஏராளமான ஆகமங்கள் பௌத்தத்திலும், சமணத்திலும் உள்ளன. கூகுளில் Jain agamas, Buddhist agamas என்று துழாவிப்பார்த்தால் சில கிடைக்கும். ஆழமாக அறிய, பல்கலைக்கழக நூலகங்கள் துணைபுரிகின்றன.
-------------------------------------------------------
என் மறுமொழி:

நல்ல பிழைப்பு, போங்கள். ஒரு வழக்கில் விதப்பான சொல், இன்னொரு வழக்கில் பொதுமையாகும். இன்றைக்கு கிறித்துவர்கூட விவிலியத்தை வேதப் பொத்தகம் என்றும், இன்னும் மேலே போய் வேதாகமம் என்றும் கூடச் சொல்லுகிறார். அதனால் கிறித்தவத்திலும் ஆகமங்கள் இருக்கின்றன என்று சொல்வோமா? அதேபோல இஸ்லாம் ஆகமம் என்று மலேசியாவிலும், இந்தொனேசியாவிலும் சொல்லுகிறார், உடனே ஆகமம்,  இஸ்லாத்திலும் உண்டென்று சொல்வோமா? காலவரையறை, வரலாற்றுத் தொடர்ச்சி வேண்டாமா?

எள்ளின் நெய் எண்ணெய் என்பது முதலில் விதப்பான சொல். பிறகு கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் என்றெல்லாம் வந்துவிட்டன. எல்லா இடத்திலும் எண்ணெய் இருக்கிறது என்றொரு பொதுமையைச் சொல்லி, விதப்பின் காரணத்தை, எண்ணெயின் ஊற்றுக் கண்ணை, மறப்போமா? ஆகமம் என்ற சொல் முதலில் விதப்பாக தமிழரின் சமயத்திற்கு, குறிப்பாக சிவனிய, விண்ணவச் சமய நெறிகளுக்கு என ஆகிவந்த சொல். முதலில் இந்தப் பெயர் இவற்றிற்குக் கிடையாது தான்.

வேதமறுப்பாக எழுந்த உலகாய்தம், ஆசீவகம், புத்தம், செயினம் போன்றவை கேள்விகள் கேட்கத் தொடங்கி, ஓர் ஒருங்கமைப்பு (organization), சங்கம் என்று செய்ய முற்பட்டபோது தான் மெய்யியல் என்பது இந்நாவலந்தீவில் பிறந்தது. அதனால் தான் வேத மறுப்பு நெறிகளான இந்த நாலைப் பற்றித் தெரிந்து கொள்ளநாம் ஆர்வங்கொள்கிறோம். வேதமறுப்பு நெறிகளின் மெய்யியல்களுக்கு மறுதலிப்பாக, ஒருவித எதிர்வினையாக, அதுவரை மெய்யியலில்லாத வேத நெறி, தேவையின் காரணமாய் உருவாக்கிய மெய்யியலே உபநிடதங்களில் உள்ளது.

இதே காலத்தில் சிவனியமும் விண்ணவமும் நம்மூரில் ஆள்வோரின் நெறியாகவும், இவர்களை மறுத்தவர் நெறியாய் உலகாய்தமும், ஆசீவகமும் இருந்தன. புத்தமும், செயினமும், உபநிடதங்களுக்கு அப்புறம் வளர்ந்த வேதநெறியும், தென்னகத்திற்குள் வரும்வரை, இங்கிருந்த நெறிகளும் கூட ஒருங்கமைக்கப் படாமல், அவற்றின் மெய்யியல்கள் ஒருமுகப் படுத்தாமல் கிடந்தன. வடநாட்டு நெறிகள் மூன்றும் கி.மு. 600ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நம்மூரில் ஊடுறுவ, சிவனியமும், விண்ணவமும் தம்மை ஒருங்கமைக்க வேண்டிய கட்டாயத்துள் நுழைந்தன. (அப்பொழுது உலகாய்தமும், ஆசீவகமும் நம்மூரில் புரட்சிகர விளிம்பு நிலையில் கேள்வி கேட்பவையாக இருந்தன. உலகாய்தம் இயற்கையிலேயே ஒருங்கமைப்பு பெறமுடியாத நெறி. ஆசீவகம் ஒருங்கமைப்பு செய்ய முற்பட்டு அதில் வெல்லாத நெறி.) சிவனிய, விண்ணவ நெறிகளின் ஒருங்கமைப்பு விளைவே ஆகமம் என்ற சமயமாய், மரபாய் இங்கு உருவெடுத்தது. ஆகிவந்த நெறி - நாள்பட்டு வந்த நெறி - என்ற பொருளில் அதை ஆகமம் என்றுசொல்லத் தொடங்கினர். ஆகமத்தின் முதல் நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆனால் வேதநெறியோடு உடன்படிக்கை செய்துகொண்டு ஆகமநெறியைப் பேசும் ஐந்தாம் நூற்றாண்டுத் திருமந்திர நூல் நமக்குக் கிடைத்தது. திருமந்திரத்துள் சொல்லப்படுவது ஆகமம் தான்; ஆனால் வேதமும், புத்தமும் அதில் சிலபோது உடன்பாடாகவும் சிலபோது மறுதலையாகவும் ஊடுறுவிக் கிடக்கின்றன. இவற்றைப் பிரித்தெடுப்பது சரவலானது தான். (உடனே ஆகம வழியும், வேத வழியும் ஒன்றென்று திருமூலன் பாடிவிட்டான் என்பது மேம்போக்கான கூற்று. அவன் உடன்பாடு செய்துகொண்டான் என்பது சரி. அது ஒருவகையான, புத்தத்திற்கு எதிரான, கூட்டு முன்னணி.) இருந்தாலும் திருமூலன் ஒரு முகமையான குறியீட்டாளன். சிவநெறியை ஒழுங்கு படுத்தியவருள் முதல்வன். அவன் தனக்குமுந்திய ஆகம நூல்களைப் பற்றிக் குறிப்பால் உணர்த்துகிறான். அவை எந்தக் காலம் என நமக்குத் தெரியாமல் இருக்கிறது.

ஆகமம் என்ற சொல் பொதுமைப்படுவதற்கான ஏரணம் என்ன?

தென்னாட்டுப் பழக்கங்களையும், மரபுகளையும், சடங்குகளையும், இன்ன பிறவற்றையும் தங்களுடையதோடு சேர்த்துக் கலவையாகக் காட்சி யளித்தால் தான் தென்னாட்டில் வடநாட்டு மதங்கள் நிலைக்க முடியும் என்று வடநாட்டு நெறிகள் உணர்ந்ததால் ஆகமம் என்றசொல் பொதுமை பெறத் தொடங்கியது. புத்த ஆகமம், செயின ஆகமம், வேத ஆகமம் போன்ற முரண்தொடைகள் (oxymoron) அப்படித்தான் கிளர்ந்தன. முடிவில் எல்லாமே எண்ணெய் என்று சொல்லப் பட,  முதல் எண்ணெய், மக்கள் வழக்கில் நல்ல எண்ணெய் ஆகிற்று. இந்த ஆகமம் என்ற சொல்லும் இப்படித்தான். சிவ ஆகமம், விண்ணவ ஆகமம் என்ற சொற்கள் நல்ல எண்ணெய் என்று சொல்லுவதைப் போலத் தோற்றம் கொண்டவை. முடிவில் கிறித்துவம், இசுலாம் வரைக்கும் கூட ஆகமம் என்ற சொல் பொதுமையாகி ஒட்டி நிற்பது கூட அச்சொல்லின் தமிழ்மையை உங்களுக்குப் புரிய வைக்கவில்லையா?

நண்பரே! பல இடங்களில் இருந்து மேற்கோள் காட்டுகிறீர்; பெருமையாக இருக்கிறது; ஆனால் ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? இவ்வளவு ஏன்? கோயிலொழுகு, மந்திரம், தந்திரம், மெய்யுரை(இது தான் உபதேசம்) என வைத்திருக்கிறாரே, கவனிக்கவில்லையா? ”எமக்கும் மந்திரங்கள், தந்திர உத்திகள், ஒழுகல் ஆறுகள் உண்டென அழுத்தி உரைப்பதாய் அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? "இவை அத்தனையும் வேதப் பழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே? இற்றைக் கலவையின் அடித்தளம் எது? வேதமா, வேதத்திற்கு மாற்றா? ஆகுதியா? படையலா? ஆகுதி ஆகுமெனில் கொடிக்கம்பத்தின் பக்கலில் பலிபீடம் இருக்காது, வேள்விக் குண்டம் இருந்திருக்குமே? சுவாகா இல்லாமல் போற்றி எப்படிவந்தது?" இப்படிக் கொஞ்சம் உள்ளார்ந்து யோசியுங்கள் அய்யா! ஆகமம் என்றசொல் மட்டுமில்லை, நெறியே எங்கு எழுந்ததென்று புலப்படும்.

தேவையில்லாத வடமொழிச் சட்டையைப் போட்டுக் கொண்ட ஒரே காரணத்தால் உள்ளே இருக்கும் மெய்யையே "உன்னுது இல்லப்பா, வடவரது" என்றுசொன்னால் எப்படி? ”எல்லாவற்றையும் கடன் வாங்கினோம்” என்று சொல்லி நம் பெருமிதத்தை நாமே ஏன் குலைக்க வேண்டும்? ”சிசுனதேவன்” என்று பரிகசித்த வேதக்காரன் இலிங்கம் நடுநாயகமாய் உள்ள கோயிலை வைக்க மாட்டான்; அப்படி வைத்துப் பின் அவனே பூசகனும் ஆகமாட்டான். மாறாகச் சோராட்டிரன் போலத் தீயை வளர்த்து அதை அணையாது காத்து இருப்பான். இற்றைப் பூசகர் வேதம் பற்றிய புரிதலின்றி வேதநெறியின் பாற்பட்டுத் தாம் கோயிற்பணி செய்வதாய் வெளிக்குச் சொல்லிக் கொள்ளலாம்; ஆனால் உண்மையில் அச்சிவாச்சாரியார் ஆகமமே பின்பற்றுகிறார். என்ன செய்வது? இது oxymoron என்றுகூடத் தெரியாமல் நம்மில் பலர் இருக்கிறோம். "தேவனே, இவர் அறியாமல் பிழை செய்கிறார், பொறுத்துக் கொள்ளும்" என்றுதான் நான் சொல்ல முடியும்.

ஆலமரத்தின் அடியில் தென் திசை பார்க்கும் செல்வனை உருவகித்தவன், நடுகல் நாட்டியவன், பொதியில், கோட்டம், அம்பலம் என்று தொடங்கி முடிவில் கோயிலாய் ஆக்கியவன்; மொத்தத்தில் அவன் ஆகமத்தான், வேதக்காரன் அல்லன்.
--------------------------------------------------------------------------
அடுத்து நா.கணேசன்:

பல நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளையும், கல்வெட்டுத் தொகுதிகளையும் பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பௌத்த/இந்து சமயங்களின் கூறுகள், கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் இருந்து மாத்திரம் போனவை அல்ல. கலிங்கம், தெலுங்கம், வங்கம் இவற்றுக்கும் பெரும்பங்கு உண்டு. மலேசியாவில் (பிரிட்டிஷ் காலத்தில் அழைத்துப்போன) தமிழரைக் கூடக் கலிங்கத்துடன் தொடர்புபடுத்திப் பேர் வைக்கிறார் என்பது கூட இப்பண்டைத் தொடர்பால் தான். புத்த ஜாதகக் கதைகள் ஆந்திரா, கலிங்கம் தென்கீழ் ஆசியாவுக்குக் கடலாடுதலைப் பல இடங்களில் விளக்குகி ன்றன. கிரந்த எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலில் ஆந்திராவில் கி டைக்கின்றன. பின்னர் பலகாலம் பல்லவர் கல்வெட்டுக்கள் காஞ்சியிலும், மாமல்லையி லும் உள்ளன. அனேகமாக அவை சம்ஸ்க்ருதத்தில் இருப்பவைதான்.
------------------------------------------
என் மறுமொழி:

கதையையே மாற்றிவிட்டீர்களே! முதலில் தென்கிழக்கு ஆசியாவில் கிடைத்த கல்வெட்டுக்கள் என்று சொன்னீர்கள். இப்போது ஆந்திராவுக்கும், காஞ்சிபுரத்திற்கும், மாமல்லைக்குமாய் மாறிவிட்டீர்கள். நழுவிக் கொண்டு போனால் எப்படி? ஓரிடத்தில் நின்று நீங்கள் சொல்லவந்ததைச் சொல்லுங்கள். தென்கிழக்கு ஆசியாவில் கிடைத்த கல்வெட்டுக்கள் ஆந்திரம் பற்றிப் பேசுகின்றனவா? அதற்குச் சான்றுகள் உள்ளனவா? கலிங்கம் பற்றிப் பேசுகின்றனவா? அதற்குச் சான்றுகள்? எந்தக் கலிங்க அல்லது ஆந்திர அரசன்? எந்த வணிகர் குழு? செய்திகள் என்ன? பொத்தாம் பொதுவாக சாதகக் கதைகள் பேசுகின்றன என்று சொன்னால் எப்படி? தமிழகத்தையும், மணிபல்லவத்தையும் (யாழ்ப்பாணத்திற்கு அருகில்) தவிர்த்து அந்தக் காலக் கடலோடிகள் சமுத்திரத் தீவிற்கும் (சுமத்ரா), மலையகத்திற்கும் செல்லுவது (இந்துமாக் கடலின் நீரோட்டம், பருவக் காற்று என்பவற்றைப் பாருங்கள்) அரிதான காரியம். வாய்ப்பு இல்லாமல் இராசேந்திர சோழன்

அலைகடல் நடுவில் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்மன்
ஆகிய கடாரத் தரசனை

வாகை கொள்ளவில்லை. இந்த மெய்கீர்த்தியின் உள்ளே அந்தக் காலக் கடலாடுதலின் சூக்குமம் இருக்கிறது. அது நீரோட்டம், மற்றும் பருவக் காற்று சார்ந்தது. கலிங்கத்திலுள்ள பாலூரில் (Paradeep) இருந்து புறப்பட்ட கப்பல் நம் நாகையை, மணிபல்லவத்தை ஒட்டி வராமல், அஃகய முனையை (Banda Aceh) அடைய முடியாது. சோழன் குடுமி சும்மா பார்த்துக் கொண்டு இராது. கலிங்கத்தான் தம் வணிகத்தைப் பிடிப்பதைப் பார்த்துக்கொண்டு சோழன் இரான். கலிங்கத்தான் புத்தனாகவே இருக்கட்டுமே? சமுத்திரத்தீவின் மீதும், மலையகத்தின் மீதும் தமிழனின் பிடி அக்காலத்தில் சற்று அதிகமே.

முதலில் மடலின் தலைப்பைத் தமிழ் முறைப்படி ஆங்கிலத்தில் aahamaa என்று பலுக்குங்கள். aagama என்றவுடனே அது வடமொழியோ என்ற மயக்கம் தருகிறது. இப்படித் தவறான பலுக்கலால் வேரறிய முடியாமற் கிடக்கும் தமிழ்ச் சொற்கள் மிகப் பல. சகரத்தைச் ஸகரமாகவும், அண்மைக் காலமாய் ஷகரமாயும் ஒரு சாரார் பலுக்கி, ககரத்தை ga என்று ஆக்கி, நம்முடைய உயிர்த்தரிப்பையே (உச்சரிப்பையே) மாற்றி நாம் கெட்டுக் கிடக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, February 15, 2006

Tamil Script - A Living Legacy

தமிழில் ஒருங்குறி பற்றி தமிழ் உலகம் மடற்குழுவிலும், என்னுடைய "வளவு" வலைப்பதிவிலும், அண்மையில் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். இரண்டு இடங்களிலும் எழுந்த சில பின்னூட்டுக்களுக்கு மறுமொழிப்பதில் சற்று சுணக்கம் கொண்டுவிட்டேன். கொஞ்சம் பொறுமையோடு இருங்கள்; எப்படியும் மறுமொழி கொடுப்பேன்.

அதற்கிடையில், "இந்திய மொழிகளில் ஒருங்குறி வழியே கணிமை" என ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கும் மைக்ரொசாவ்ட்டின் சேவைத்தளமான bashaindia.com - இல், தமிழ் எழுத்து பற்றி வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரையை, தமிழுலகம் மடற்குழுவில், திரு. அன்பரசனின் மின்னஞ்சல் வழியறிந்து, பின் அந்த வலைத்தளம் போய்ப் படித்தேன். பொதுவாக, இந்தக் கட்டுரையில், முன்னுக்குப் பின் முரணாய், கால நிலைகள் பல இடத்தும் சொல்லப் படுகின்றன. இந்தக் கட்டுரையில் மலிந்து கிடக்கும் பிழைகளைப் பார்த்த பின்னால் தான், ஒருங்குறிக்காரர்களின் தவறான மொழிப் புரிதல் எங்கிருந்து தொடங்குகிறதென்று புரிந்தது. Tamil Script - A Living Legacy என்ற அந்தக் கட்டுரையை அப்படியே வெட்டி, இங்கே ஒட்டி, அதன் ஊடே என் முன்னிகைகளையும் (comments) சேர்த்துக் கீழே பதிகிறேன். இந்த மடலை அங்கு கொடுக்கப் பட்ட மின் முகவரிக்கும் புறவரிப்பு(forward)ச் செய்கிறேன். தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

http://www.bhashaindia.com/Patrons/LanguageTech/TamilScript.aspx

Tamil Script - A Living Legacy

Tamil is a very intriguing language. The intricacies of this language, as well as its script, are often a topic of debate among language experts. The following article is a beginner's guide to the complex Tamil Script.

Introduction

Tamil is one of the most widely spoken languages of India. The language, though having its roots firmly implanted in southern India, has spread tendrils to other countries like Singapore and Sri Lanka. Tamil is one of the few languages, which has managed to create a very distinct identity of its own. In a country like India, where the number of languages and their dialects is comparable to number of provinces in the country, Tamil is among the few note-worthy languages.

History

Tamil is a very prominent member of the Dravidian family of languages. It is an offshoot of the Grantha script, which is grouped under the Southern Indian group of scripts.
------------------------
கிரந்த எழுத்து என்பது வடமொழியை எழுதுவதற்காகத் தமிழ்பேசும் இடத்தில் இருந்து உருவான, தமிழ் எழுத்தின் நீட்சியே ஒழிய, கிரந்த எழுத்தின் குறுக்கம் தமிழ் எழுத்து அல்ல. இந்தத் தவறான புரிதல் தான், நகரி எழுத்து அடைப்பலகை(template)க்குள் தமிழ் எழுத்தைப் பொருத்திப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. மகனைத் தகப்பனின் தகப்பனாகத் தாத்தனாகக் காட்டும் வரலாற்றுப் பிறழ்ச்சி இந்த வாசகத்தில் நடக்கிறது.
------------------------
This group is part of a larger body of scripts, called the Brahmee script. Initially, during the early 1st Century CE a southern variant of the Brahmee script was employed to write the Tamil literature.
------------------------
மேலே தமிழ் எழுத்திற்கெனச் சொல்லப்படும் கால நிலை தவறு. Bhasha India வலைத் தளத்தில் தமிழ் பற்றிச் சொல்லும் இன்னொரு கட்டுரையிலேயே கூட, தமிழ் எழுத்தின் பெருவுதி (priority) அண்மையில் கிடைத்த செய்திகளின் வழியே (ஆதிச்ச நல்லூர் தாழிகள் பற்றியது) 1000 B.C. வரை கூடச் செல்லும் என்று தொட்டுக் காட்டப் பட்டிருக்கிறது. மேலும் முற்காலத் தமிழ் எழுத்துக்களின் கல்வெட்டுக்களை மீண்டும் மீண்டும் பெருமி(brhami)யின் வழியது என்று சொல்லித் தமிழ்ப் பெருமி (தமிழ் பிராமி) என்ற பெயரால் அழைத்துக் கொண்டிருப்பது தவறு என்று கண்டித்துப் பல கல்வெட்டு அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் வறட்டுத் தனமாக இந்தப் போக்கைச் சிலர் விடுவதாக இல்லை போலிருக்கிறது.

தமிழி என்ற எழுத்தின் நீட்சி தான், பெருமியில் முடிந்தது என்பதே ஏரணத்தின் (logic) படி பார்த்தால் தெரிகிறது; அதுவே இன்றைக்குத் தமிழ்க் கல்வெட்டியல் ஆய்வாளர் பெரும்பாலோரின் கருத்து. [தமிழி எழுத்து மூலம் என்பதால் தான் தமிழில் வருக்க எழுத்து இல்லை. சொல்லின் இடையில் ஒரே எழுத்திற்கு அதன் சூழல் பார்த்து ஒலி அமைகிறது. பெருமி தமிழுக்குப் பின்னால் எழுந்ததால் தான், வருக்க எழுத்து அமைந்தது. தமிழிக்கும் பெருமிக்கும் உள்ள உறவு நிலைகள், கால முன்னுமை போன்றவற்றைப் பேச வேண்டுமானால் அதற்கே தனிக் கட்டுரை எழுத வேண்டும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.] இந்தக் கட்டுரையாளர் "தமிழியின் நீட்சி தான் பெருமி" என்ற கருதுகோளை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் கூட, தான் கூறுவதையே முடிந்த முடிவாகச் சொல்லுவது வியப்பாக இருக்கிறது.

மேலே உள்ள பத்தியில் 1st Century CE என்று எழுதி விட்டுப் பின், கீழே வரும் பத்தியில் தொல்காப்பியம் 200 B.C. என்று கட்டுரையாளர் சொல்லுகிறார். தொல்காப்பியம் (காலம்>400 BC) என்ற இலக்கணம் தமிழ் எழுத்துக்களை, அவற்றின் ஒரு சில வரைகளைப் பற்றி எழுத்தியலில் தெளிவாகப் பேசுகிறது என்று கட்டுரையாளருக்குத் தெரியுமோ? 400 B.C என்று தொல்காப்பியர் காலத்தை எடுத்துக் கொள்ளாமல், ஆசிரியர் சொன்னபடி 200 B.C என்று பார்த்தாலும் கூட, தமிழ் எழுத்துக்களின் தோற்றம் 1 Century CE என்று முதற்பத்தியிற் சொல்லுவது எப்படிச் சரியாகும்? தவிர, இதுவரை படித்தறிந்த கல்வெட்டுக்களின் தொடக்க காலம் 3 Century B.C என்று கட்டுரையாளர் அறிவாரோ? பார்க்க:

http://www.keetru.com/literature/essays/mahadevan.html
----------------------------
A little after this period, until the 8th century CE, Grantha script was used for writing the Tamil language. It was around the 8th Century that an exclusive script was developed for the Tamil language, which is being used even in the present day, only with slight variations.
----------------------------
இதுவும் தவறு. தமிழுக்கென்ற இருந்த எழுத்து, தமிழி என்று அறியப்படுவது, மேலே கூறியவாறு, இன்றையக் கல்வெட்டு அறிஞர்களின் முடிவின் படி, கி.மு.300க்கு முன்னரே வந்து விட்டது.
---------------------------
The Grantha script is itself a modified version of the Brahmee script of the Ashokan era.
---------------------------
இந்தப் பிழை பற்றியும் மேலே பேசியாயிற்று. கிரந்தத்தில் உள்ள வருக்க எழுத்துக்கள் பெருமி(brahmi)யில் உள்ள வருக்க எழுத்துக்களின் திரிவாகத் தெரியவில்லை. அவை தமிழி எழுத்துக்களின் திரிவாகவே தெரிகின்றன; கிரந்தம் என்ற எழுத்து நகரிக்கு முந்திய எழுத்து என்று கூட ஒரு சில ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். வடமொழி ஆவணங்களில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டது, நகரி எழுத்தில் எழுதப்பட்ட ஆவணங்களுக்கும் காலத்தால் முந்தியதாக அறியப்படுகிறது.

கிரந்தம் என்பது தமிழ் வட்டெழுத்தின் வளர்ச்சி என்பதே பலரின் கருத்து. தமிழி>வட்டெழுத்து>கிரந்தம் என்ற சரமும், தமிழி>பெருமி>நகரி என்ற சரமும் இந்தியப் பெருநாட்டில் இணையாக வளர்ந்த, எழுத்துத் திரிவுச் சரங்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்னது தென்புலத்தில், தமிழ்நாட்டில், எழுந்தது; பின்னது வடபுலத்தில், உஞ்சை (Ujjain) நகருக்குப் பக்கத்தில், எழுந்தது. கட்டுரை ஆசிரியர் தெரியாது எழுதுகிறாரா அல்லது குழப்பத்தில் உரைக்கிறாரா என்று தெரியவில்லை.
---------------------------------
A script called 'vettezhuthu' was developed somewhere between the 6th and 10th century to make the carvings of literary works on stones easier. Vettezhuthu is a term, which means 'letters which are cut'. The script is also referred to as 'Vattezhuthu', which translates to mean 'curved letters'. This name might have come into existence owing to the fact that a large part of the early Tamil literature was practiced on Palm leaves. The script took on a curved style, to facilitate the use of sharp instruments to inscribe on the leaves. The Palm leaves had a tendency to tear when characters, not curved in nature, were written on them.
Tamil is one of the very few Indian languages, which does not have its origin related to Sanskrit. It's very difficult to declare any manuscript as the first recorded literary work in Tamil.
----------------------------------
மேலே உள்ள "It's very difficult to declare any manuscript as the first recorded literary work in Tamil" என்ற கடைசி வாக்கியம் என்ன சொல்லுகிறது என்று புரியவில்லை. இந்த வாக்கியம் தமிழ் ஓலைச்சுவடிகளைக் குறிப்பதென்றால் அது ஒரு "விதப்பான ஆவண நிகராட்சி (specific document representation)" என்ற வகையில் சரி; மாறாகப் பொதுவான ஆவணம் (generalized document) என்றால் அது பெரும்பிழை. ஓலைச்சுவடிகள் எவையும் 150 - 400 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை தான். இன்றைக்கு நாம் காணும் ஓலைச் சுவடிகள் ஒவ்வொன்றும், முன்னாளையச் சுவடிகளின் மறு எடுவிப்புகள் (re-editions) என்று தான் புரிந்து கொள்ளுகிறோம். இந்த நிலை தமிழ்ச்சுவடிகளுக்கு மட்டும் உள்ள நிலை அல்ல. தென்னாட்டில் ஓலையில் எழுதப்பட்ட எந்த மொழி ஆவணங்களுக்கும் உள்ள நிலை. இந்த ஓலைச்சுவடிகளின் முதல் எடுவிப்பு (first edition) 150-400 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருந்தால், நம்முடைய வெதணத்தில் (climate) அவை இன்றுவரை தங்கி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எத்தனை மறு எடுவிப்புக்கள் ஓவ்வொரு ஆவணத்திற்கும் நடந்தன என்று கூட நமக்குத் தெரியாது. அதற்காக, அந்த ஆவணங்களின் முதல் எடுவிப்புக் காலம் அண்மையில் தான் இருந்தது என்று சொல்ல முடியுமோ? மொத்தத்தில் இந்த வாக்கியத்தில் ஒரு தெளிவற்ற மயக்கம் இருக்கிறது.
----------------------------------
Most of the scriptures were maintained on Palm leaves and have been difficult to lay hands on. Tolkappiyam is probably the earliest available Tamil text, dated around the 200 BC.
---------------------------------
தொல்காப்பியம் பற்றிய கால மதிப்பீடாய், இதுவும் வரலாற்று அளவில் தவறான புரிதலே. இருந்தாலும் நீக்குப் போக்கு கருதி மேற்கொண்டு பேசாமல் அமைகிறேன்.
---------------------------------
Tolkappiyam describes the languages of the classical period, about 200BC and also has a fair amount of detail about the grammar and poetry of that period. Silappadhigaram or Cilappadhikaram is considered as the most significant epic of the Tamil language. Authored by Illango Adigal, this epic was composed in the second century AD and can be viewed as a log of the lives of Tamil people of that period. This is one of the three surviving Great-Epics in Tamil literature.
The pure Tamil script is addressed as 'Centamil'.
--------------------------------
இதுவும் தவறான புரிதல். செந்தமிழ், கொடுந்தமிழ் என்பன பேச்சு வழக்கைப் பற்றியவை. அவற்றிற்கும் எழுத்திற்கும் தொடர்பு கிடையாது. எழுத்திற்கும் மொழிக்குமான குழப்பம் இந்தக் கட்டுரையில் நெடுகக் கிடக்கிறது. தமிழி என்பது தமிழுக்கென உருவாக்கிய தனி எழுத்து. செந்தமிழ் என்பது வட்டார வழக்குத் தவிர்த்த, தமிழ்கூறும் நல்லுலகில் பலரும் புரிந்து கொள்ளப் படும், தரப் படுத்தப் பட்ட standard Tamil. செந்தமிழும் தனித்தமிழும் (pure Tamil) வெவ்வேறானவை. செந்தமிழுக்குள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறமொழிச் சொற்கள் இருக்கலாம். தனித்தமிழுக்குள் பிறமொழிச் சொற்கள் வாரா. இந்தக் கட்டுரையாசிரியர் செந்தமிழ், கொடுந்தமிழ், தனித்தமிழ், தமிழி, கிரந்தம், பெருமி என்ற தனித்தனிக் கட்டுக்கூறுகளைச் (individual categories) சரியாகப் புரிந்து கொண்டால் நல்லது.
--------------------------------
This does not have the influence of any other language or script in it. But the form of Tamil witnessed in the present day usage oversteps the boundaries set by this form of script.
--------------------------------
இங்குமே எழுத்திற்கும் மொழிக்கும் இடையே கட்டுரையாளர் குழம்பிக் கொள்கிறார். தமிழி எழுத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் செந்தமிழுக்கும் தொடர்பில்லை. தமிழி என்பது தமிழ் என்னும் மொழியை எழுத எழுந்த எழுத்து. "தமிழ் எழுத்து" என்ற சொற்றொடரைச் சுருக்கமாக, குழப்பம் இல்லாமல், மொழிக்குப் புறம்பாய்த் தனித்து இருக்கக் கூடியது என்று உணரும் வகையில், சொல்லுதற்கு எழுந்தது "தமிழி" என்ற சொல். தமிழி என்ற சொல்லை வடபுலத்தில் எழுந்த "லலித விஸ்தாரம்" போன்ற பழைய புத்த, செயின நூல்கள் "திராவிடி" என்ற லிபியாக, பதினெட்டில் ஒன்றாகக் குறிக்கும்.
---------------------------------
Koduntamil, the colloquial Tamil has words, which are borrowed from other languages and is not considered as the actual Tamil script by the purists.
--------------------------------
மறுபடியும் ஒரு தவறான புரிதல். கொடுந்தமிழையும் தமிழி எழுத்துக்களில் எழுதலாம். அப்படிக் கொடுந்தமிழை எழுதும் போது, சில சொற்களின் பலுக்கும் முறை எழுத்துப் பெயர்ப்புச் (transliteration) சிக்கலால் மாறி விடக் கூடும். அப்படி மாறுவது வேறு சிக்கல்; அதைப் பற்றி இங்கு ஆசிரியர் பேசுவதாகத் தெரியவில்லை.
-------------------------------
The script too has been altered to suit words imbibed from other languages.
-------------------------------
தமிழ் எழுத்தை இயல்பாகவும் அரசு முறையிலும் பல்வேறு காலங்களில் திருத்தியிருக்கிறார்கள். அந்த மாற்றங்கள் எல்லாம் வெளிச் சொல்லைக் கடன் வாங்குவதற்காக ஏற்பட்ட திருத்தங்கள் அல்ல. அவை எழுது பொருளில், எழுதும் முறையில், இன்னும் இது போன்றவற்றால், ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய, மொழியால் ஏற்பட்டவை அல்ல.

தமிழ் எழுத்து (=தமிழி), தமிழ் எழுத்தின் நீட்சியான கிரந்த எழுத்து ஆகிய இரண்டுமே தமிழ் நாட்டில் எழுந்தவை தான். தமிழ் எழுத்து தமிழ் மொழியை எழுதப் பிறந்தது. கிரந்த எழுத்து வடமொழியை எழுதப் பிறந்தது. [இந்த அடிப்படையைப் புரியாமல் குழப்பிக் கொள்பவர்கள் மிகப் பலர். கட்டுரையாளருக்குப் புரிவதற்காகச் சொல்லுகிறேன். உரோமன் எழுத்து west european மொழிகளைக் குறிக்க எழுந்தது; சிரில்லிக் சுலாவிக் (slavic) மொழிகளைக் குறிக்கப் பிறந்தது. இரண்டுமே வொனிசியன் (phonician) - எட்ரசுக்கன் (etruscan) என்ற கொடிவழியில் தோன்றியவை தான். இருந்தாலும் உரோமன் எழுத்தில் உள்ள ஆவணத்தில் இரண்டு சிரில்லிக் எழுத்தை இடையே கலந்து எழுதிப் போட்டால் என்ன நிலை வருமோ, அந்த நிலை தான் கிரந்தம் கலந்து தமிழியில் எழுதுவதும்.] காலப் போக்கில் வடமொழி ஊடுறுவல் ஏற்பட்ட காரணத்தால் கிரந்த எழுத்துக்களைக் கொண்டு எழுதப் பட்ட வடசொற்களையும் இடையிடையே பெய்யும் ஒரு மணிப்பவள நடை தமிழ்கூறும் நல்லுலகில் எழுந்தது.

இந்த வரலாறுப் புரிதலை மறைத்துப் பேசுவது சோற்றுக்குள் முழுப் பூசனியை மறைப்பது ஆகும்.
-------------------------------------
Sanskrit may not have had any influence in the origin of Tamil; nonetheless it has affected the Koduntamil to a large extent. A list of words has been borrowed from Sanskrit to suit the colloquial Tamil. These are referred to as 'loan words'. The 'borrowing' process itself started during the development stages of the script and hence certain characters from the Brahmee script have been retained in Tamil to facilitate the writing of these words.
--------------------------------------
இதுவும் தவறு. வடசொற்கள் தமிழில் ஊடுறுவியதால், தமிழ் எழுத்தை யாரும் திருத்தவில்லை. கம்பன் காலம் வரையிற் கூடத் தமிழில் நுழைந்த வடசொற்கள், கிரந்த எழுத்தை உள்நுழைக்காமல், தற்பவமாகவே எழுதப் பட்டன. (தற்பவம் என்பது தமிழியை மட்டுமே வைத்து பிறமொழிச் சொற்களை தன் வயப் படுத்தி எழுதுவது. பவத்தல் = வயத்தல், சார்தல். பவத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த பாவித்தல் என்ற ஈழத்தார் சொல்லை அறிக.) தற்சமம் (தமிழியோடு சில கிரந்த எழுத்துக்களைக் கலந்து தமக்குச் சமமாய்ப் புழங்கும் முறை) பெருகியது விசயநகர வடுகர் ஆட்சியில் தான். இங்கே மேலே கட்டுரையாளர் சொல்லும் வாக்கியத்தில் பெரிய காலப் பிழை விரவி இருக்கிறது.
---------------------------------------
But this has been, and remains, a debatable issue as many of the purists of the Tamil language disagree with the concept.
--------------------------------------
எல்லாவற்றையும் மூடி மறைத்தால் வாதம் இல்லாதது கூட வாதமாய்த் தான் தெரியும். இது போன்ற கட்டுரைகள் உள்ளார்ந்த நிகழ்ப்போடு (agenda) தான் சிலரால் எழுப்பப் படுகின்றன.
--------------------------------------
The Features of Tamil Script
The Tamil script bases its foundation on 12 vowels and 18 consonants. It also supports a special character called Aayutha Ezutthu, details of which are given further on in the article.
-------------------------------------
ஆய்த எழுத்துப் பற்றிக் கீழே எங்கும் காணோம். ஒருவேளை பின்னால் சொல்லுவார்களோ என்னவோ, தெரியவில்லை.
------------------------------------
In addition to these, six letters have been borrowed from Sanskrit, which are called the Grantha letters, to facilitate the writing of the 'loan words'. The Grantha letters are used to write words of English origin as well.
------------------------------------
சங்கதத்தில் இருந்து இந்த எழுத்துக்களைத் தமிழ் கடன் வாங்கவில்லை. மீண்டும் மொழிக்கும் எழுத்துக்கும் இடையே ஆசிரியர் கொள்ளும் அடையாளக் குழப்பம் போல் இருக்கிறது. உரோமன் எழுத்திற்கும் ஆங்கில மொழிக்கும் யாராவது குழம்பிக் கொள்வார்களோ? இந்தியா என்று வந்தால் இந்தக் குழப்பம் பலருக்கும் ஏனோ வந்து விடுகிறது. சங்கதம் என்ற மொழி நகரி, கிரந்தம், சாரதா எனப் பல வகைப் பட்ட எழுத்துக்களில் எழுதப் பட்டது. [இன்றைக்கு கிரந்தம், சாரதா போன்ற எழுத்துக்களின் புழக்கம் மிக அருகிவிட்டது. தமிழரைப் பொறுத்தவரை வடமொழிக்கான கிரந்தத்தின் புழக்கத்தை விட்டு விடுவது பெரும் இழப்பு. கிரந்தம் பெரிதும் கற்று வந்த பெருமானர்களே (brahmins) அதை இன்று நாடாது தொலைத்தெறிவது இன்னும் சோகம். நம்முடைய கண்டுபிடிப்பை தமிழராகிய நாமே ஒதுக்கினால் எப்படி? கிரந்தம் வழி, வடமொழியை நாம் படிப்பதற்கு வாய்ப்பாய் இருந்திருக்கும். எல்லாவற்றையும் நகரிக்குள் மாற்றி நம்முடைய பெருமிதமான அடையாளங்களை நாமே ஏன் அழித்துக் கொள்ள வேண்டும்?] அதே பொழுது, தமிழ் என்பது மொழியோ, தமிழி என்ற ஒரே எழுத்தால் மட்டுமே உரையாசிரியர்கள் காலம் (12-14ம் நூற்றாண்டு) வரை எழுதப்பட்டது. இந்த உரையாசிரியர்கள் காலத்திற்குச் சற்று பின்னால் தான் (பெரும்பாலும் 15ம் நூற்றாண்டில் தான்), கடன் வாங்கிய சொற்களைத் தமிழில் எழுதத் தமிழி என்ற எழுத்து வரிசையோடு, ஒரு சில கிரந்த எழுத்துக்களையும் சிலர் சேர்த்துக் கையாளத் தொடங்கினார்கள். தற்சமம் பரவலாய் ஆனது 15ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான்.
---------------------------------
The 12 vowels of the language have been termed as uyir ezhuthu. These are almost similar to the vowels of other south Indian languages. The vowels generally accompany a consonant but they do appear independently when used at the beginning of a syllable.
--------------------------------
உயிர்கள் சொல்லின் தொடக்கத்தில் மட்டுமே வரும் என்பது முற்றிலும் சரியல்ல. ஓரோவழி, குற்றுயிர்கள் சொல்லின் ஊடே அளபெடைகளாய் வரலாம்.
--------------------------------
What really makes Tamil script unique is that the whole language is written using only 18 consonants. The limited number of letters can be attributed to the fact that a single character is used to depict multiple sound values. For example, the letter /ka/ can be used for both the sounds /ka/ and /ga/. Similarly the letters /ca/, /pa/ and some of the other consonants take on different roles, based on the context in which they are used.
-------------------------------
இந்த அடிப்படை இருப்பதால் தான் கணியில் தமிழை முதல் அடுக்கு (Level 1) முறையிலேயே உள்நுழைக்கலாம் என்றும், இரண்டாம் அடுக்கு (Level 2) முறை தேவையில்லை என்றும் சொல்லுகிறோம். இதை முற்றிலும் ஒதுக்கி, குறியேற்றம் செய்யப் பட்டதால், ஒருங்குறி மூலம் Level 2 முறையில் மட்டுமே கணி நடாத்தம் (computer implementation) செய்ய முடியும்.
------------------------------
It is interesting to observe that sometimes words, which are spelt the same, are the exact opposite in their meanings. Like, the word "tosam" means happiness and the word "dosam" means a blemish. Both these words are written the same way using the Tamil script.
------------------------------
தோசம் என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்ற பொருள் எந்த அகரமுதலியில் இருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை. தோசம் என்ற சொல்லுக்கு "குற்றம், பாவம், குறை, நாடிக் கொதிப்பு, சன்னி, விடக் காய்ச்சல், குழந்தை நோய் வகை" என்ற பொருட்பாடுகளைத் தான் மு.சண்முகம் பிள்ளையைத் தொகுப்பாசிரியராகக் கொண்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட தமிழ்-தமிழ் அகரமுதலி தெரிவிக்கிறது. மற்ற அகரமுதலிகளையும் பார்க்கலாம்.

தவிர இது போன்ற, எதிரெதிரான பொருள்கொண்ட, ஒரே சொற்கள் தமிழில் மட்டும் தான் இருக்கிறது என்று ஆசிரியர் சொல்லுவது வியப்பாக இருக்கிறது.

விக்னேசுவரன் என்ற வடமொழிச் சொல் விக்னத்தைக் கொடுக்கும் ஈசன் என்றும் பொருள் தரும்; விக்னத்தைத் தவிர்க்கும் ஈசன் என்றும் பொருள்படும். இப்படி இரண்டுவித எதிர்ப் பொருள்கள் தருவதால் விகனேசுவரன் என்ற சொல்லைக் கொண்ட வடமொழி விதப்பானது என்று சொல்ல முடியுமா?

solve என்ற ஆங்கிலச் சொல் வேதியலில் வரும் போது கரைந்து உள்ளே போவதைக் குறிக்கும். கணக்கில் வரும் போது, தீர்மானித்து வெளியே எடுப்பதைக் குறிக்கும். ஒன்று உள்ளே போவது; இன்னொன்று வெளியே வருவது. ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கு எதிரானது.

இப்படி வெவ்வேறு மொழிகளில் விதப்பான பல்வேறு காட்டுக்களைக் கொடுக்க முடியும். மேலே உள்ள வாக்கியத்தின் மூலம் கட்டுரை ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்?
-----------------------------------
The recognition of the phonetic value of the character becomes easier with practice. These alterations are based on the position of the letter. Consider the letter /pa/. It is pronounced so when it's generally at the beginning of a word, but takes on the sound of /ba/ when it between vowels.
------------------------------------
முற்றிலும் தவறு. ஆசிரியருக்குத் தமிழ் தெரியுமா என்ற அய்யமே எழுகிறது. ப என்ற எழுத்து, தனக்கு முன்னால், மெல்லின மெய் (குறிப்பாக அதன் மெல்லின இணையான "ம்") வரும்பொழுது, ba என்று ஒலிக்கிறது. இந்த ஒலி மாறுபாட்டை எழுப்புவன முன்னும் பின்னும் வரும் உயிரொலிகள் அல்ல. சொல்லில் வரும் மெய்ப்பிணைகளால் (consonant combination) அல்லாமல் ஒலி வேறுபாடு தமிழில் எழாது. அடிப்படையே புரியாமல் கட்டுரை ஆசிரியர் எழுதுகிறார்.
------------------------------------
There are situations where the pronunciation is completely random too.
-------------------------------------
குமுகாயத்தில் ஒரு சில குறிப்பிட்ட மக்கள் தங்கள் பலுக்கலில் தவறு செய்வதால் (காட்டாக உயர்நிலையில் உள்ள ஒரு சிலர் சகரத்தை ஷகரமாக ஒலிப்பர்), அது தரமான பலுக்கல் என்று ஆகாது. ஒரு சிலர் ஷரமாக ஒலிக்க, மறுசிலர் ஜகரமாக ஒலிக்க, மிகப்பலர் சகரமாக ஒலிப்பர். இந்த ஒலிப்பு வேறுபாட்டால், தமிழ்ப் பலுக்கல் முறை முற்றிலும் அறவட்டானது (random) என்று சொல்லுவது சரியல்ல. இந்த மொழிக்கென ஒரு செந்தரப் பலுக்கல் (standard pronunciation) உண்டு. அதனோடு வட்டார வழக்குகளைக் குழம்பிக் கொள்ளக் கூடாது. தவிர எழுத்து வரிசை பற்றிப் பேச வந்தவர், ஒலிப்பு வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
--------------------------------------
Generally the confusion arises in case of the loan words from Sanskrit. Otherwise the letters follow a pretty much a consistent pattern.
All the consonants of the Tamil script have an inherent vowel in them.
-------------------------------------
மெய்யெழுத்துக்களுக்கள் உள்ளார்ந்த உயிர் உண்டு என்று சொல்லுவது மொழியறியாதோர் கூற்று. ஒருங்குறிக் குழப்பத்தின் ஊற்றுக்கண், ஆணிவேர், இங்கே தான் இருக்கிறது. தமிழ் மெய்யெழுத்துக்களுக்கு என உள்ளார்ந்த உயிர் சுத்தரவாகக் கிடையாது. அவை வெறும் மெய்கள்; உயிரில்லாத சவங்கள், மூச்சில்லாத உடல்கள். மெய்யெழுத்துக்களை ஒலிக்க முடியாது என்பதால் தான், முன்னால் உயிர் சேர்த்து, மூடிய அசையாகவோ (மூடசை - closed syllable - காட்டு "இக்"), பின்னால் உயிர் சேர்த்துத் திறந்த அசையாகவோ (திறவசை - open syllable - காட்டு "கி") நாம் பலுக்குகிறோம். இப்படி நாம் பலுக்குவது உயிர்-மெய்க் கூட்டுக்களாகத் தான் அமைகிறது. இந்த அடிப்படை புரியாமல் செயற்கைத் தனமாக ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு, எழுத்துக்களைக் கீற்றுக்களாய்க் (glyphs) குதறி ஏதோ ஒரு முட்டாள் தனமான தேற்றத்தில் (theory) ஒருங்குறிக் குறியேற்றம் படைத்திருக்கிறார்கள். கூடவே நிலைப்புப் பொள்ளிகை (stability policy) என்று சொல்லிக் கொள்கிறார்கள். பரமார்த்த குரு கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

கணிதத்தில் எந்த ஓர் ஒழுங்குள்ள கொத்திற்கும் (ordered set) அடிப்படைகள் (basis) என்று சிலவற்றைச் சொல்லுவார்கள். காட்டாகப் பதின்மக் கணக்கில் 0,1,2,3,4,5,6,7,8,9 எனப் பத்து இலக்கங்கள் அடிப்படை. மற்ற எண்கள் எல்லாம் அவற்றின் கூட்டல், பெருக்கல், எதிர்மறை என ஒரு சில இயக்கங்களினால் (operations)ஏற்படுபவை. பதின்மம் (decimal) தவிர்த்து எண்களை வெளிப்படுத்த இருமம் (binary), எண்மம் (octal). பதினறுமம் (hexadecimal) எனப் பலவகை அடிப்படைகள் இருக்கின்றன.

அதே போலத்தான் ஒரு மொழியிலும் அடிப்படைகள் இருக்கின்றன. தமிழுக்கு அடிப்படை 33 எழுத்துக்கள் என்று தொல் காப்பியர் வகுத்தார். இந்த அடிப்படைகளையும் 12 உயிர், 18 மெய், 3 சார்பெழுத்து என்று பிரித்தார். எந்த ஒரு உருபு அலசலையும் (morphological analysis) இந்த 33 -யை வைத்துத் தான் செய்ய முடியும்.

இந்த 33 -ற்கும் தனித்தனி உருவம் கொடுத்து அவற்றை வித விதமாக முகட்டி(permutation)ச் சொற்களை உண்டாக்கித் தமிழை எழுதலாம் தான். அதாவது உயிர்களையும் மெய்களையும் மட்டுமே வைத்து உயிர்மெய் இல்லாமல் தமிழை எழுதலாம் தான். (அப்படி எழுதுவது 7 1/2 கோடி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாய் இருக்கும்.) இருந்தாலும் புணர்ச்சி, வரலாறு, எழுது பொருள்கள், எழுதுமுறைகள் காரணமாய் உயிர்களும், மெய்களும் போக ஒரு புதிய கட்டுக்கூறு (category) எழுந்தது. அதைச் சரியானபடி புரிந்து கொள்ள வேண்டும்.

12 உயிரும் 18 மெய்யும் மல்கிப் பெருகும் புதுக்கக் கொத்தில் (product set) ஏற்படும் இணைகள் இரண்டுவகைப் படும். அவை தாம் மேலே கூறிய மூடசைகள் (closed syllables), மற்றும் திறவசைகள் (open syllables) ஆகும். எழுதும் போது, குறிப்பாக ஓலையில் எழுதும் போது, வேகம், எளிமை, சிக்கனம் கருதி திறவசைகளுக்குப் புது உருவம் கொடுக்க எழுந்ததே உயிர்மெய் எழுத்துக்கள். க்இ என்று எழுதுவதற்குப் பகரி(substitute)யாய் கி என்று எழுதினார்கள்.

புணர்ச்சி (க்+இ = கி) என்பது இப்படித் திறந்த அசைகள் உருவாவதைக் குறிக்கிறது. புணர்ச்சி புரியவில்லை என்றால் தமிழில் சரியான முறையில் பிழையில்லாமல் தேட (searching)முடியாது; பிழையில்லாமல் வரிசைப் படுத்த (sorting)முடியாது; உருபியல் அலசல் (morphological analysis) செய்ய முடியாது; எந்திர மொழிபெயர்ப்பு (machine translation) செய்யமுடியாது; ஒளியெழுத்து உணரியை (optical character recognition) வேலை செய்ய வைக்க முடியாது. வெறுமே தமிழெழுத்துக்களைக் கணித்திரை(monitor))யில் கொண்டுவந்து படம் காட்டிக் கொண்டு இருக்கலாம். (அதைச் செய்தவுடனேயே, "ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ ம்" என்று தமிழர்கள் குதிப்பது வேறு விதயம். :-))

ஒருங்குறி என்ற குறியேற்றத்தின் பெருத்த குறையே அது புணர்ச்சியை உள்ளார்ந்த (inherently) முறையில் மறுப்பது தான். கி என்னும் உயிர்மெய் பற்றி எந்த இலக்கண அலசலும் செய்தால் அதை க், இ என்ற இரண்டு பொருளுள்ள அடிப்படைகளை வைத்துச் செய்யவேண்டுமே ஒழிய, கி யை க் + ஢ என்று பிரித்து வைத்துக் கொண்டு அலசிப் பார்த்தால் ஒரு மண்ணும் கிடைக்காது. (You have to decompose கி as க்+இ and not as க + ஢). ஏனெனில் கொக்கி " ஢" என்பது இலக்கணத்தால் வரையறை செய்யப் படாத ஓர் உரு. (It is grammatically undefined.)

வெறுமே அகரம் சேர்ந்த மெய்களையும், கூடவே துணைக்கீற்றுக் கொத்தையும் (a set containing this auxilary glyphs - பேசுதற்கு எளிமை கருதி பின் வரும் பத்திகளில் கொக்கி, கால், கொம்பு போன்ற கீற்றுக்களைத் துணைக் கீற்றுக்கள் என்று அழைப்போம்.) பிணைத்து வைத்துக் கொண்டு உருவாகும் கொத்தை, திறந்த அசைக் கொத்திற்குச் (a set of syllables) சமனாகச் சொல்ல முடியாது. கொத்துத் தேற்றத்தில் (set theory) சொல்வதன்படி, புதுக்கக் கொத்துக்களை அவற்றின் அடிப்படைகளைக் கொண்டு பொதியுடைக்க(decompose) வேண்டுமே ஒழிய அறவட்டாகப் (arbitrarily) பொதியுடைக்கக் கூடாது. மீறிச் செய்தால், அடையாளப் புதிரிகளுக்குள் (identity problems) சிக்கிக் கொள்வோம். எந்தக் குறியேற்றம் இந்தப் புரிதலை உள்வாங்கிக் கொள்கிறதோ, அந்தக் குறியேற்றம் தான் தமிழ் மொழிக்கும், இந்திய மொழிகளுக்கும் சரியாக இருக்கும். அந்த வகையில் ஒருங்குறி என்ற குறியேற்றம், மாற்றம் இல்லாவிட்டால், உறுதியாகச் சிக்கலில் விழுந்தே தீரும்.
--------------------------------
It is generally the vowel /a/.
--------------------------------
மெய்களுக்குள் உள்ளார்ந்த அகரம் இருக்கிறது என்று சொல்லுவதற்கு எந்த இலக்கணமும் தமிழில் கிடையாது. இது போன்ற வாசகங்கள் கட்டுரையாளரைப் போன்றவரின் கற்பனையில் மட்டுமே எழுகின்றன. க ங ச ஞ என்று சொல்லும் போது அது ஒலிப்பு எளிமை கருதிச் சொல்லுவதே ஒழிய அவை மெய்யெழுத்து ஒலிப்புகள் அல்ல, உயிர்மெய் எழுத்து ஒலிப்புகளே என்று எல்லாத் தமிழ்ப் பள்ளி மாணவருக்கும் தெரியும். அதைப் புரிய வைக்காத தமிழாசிரியர் கிடையவே கிடையாது.
-------------------------------
Extra strokes are used as diactrics around a letter to vary the sound of the vowel in the letter.
--------------------------------
இது அடுத்த மிகப் பெரிய புரிதற் பிழை. மொழியின் அடிப்படை ஒலிகள்; அந்த ஒலிகளைக் குறிக்கும் வரைகள் அல்லது கீற்றுகள் அல்ல. எழுத்து என்பது ஒலியைக் கண்முன்னே கொண்டு வருவதற்கான படம். அந்தப் படம் ஒன்றிற்கு மேற்பட்ட வரைகளை அல்லது கீற்றுக்களைக் கொண்டிருக்கலாம். கணிக்குள் கொண்டு போகும் போது, எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு போக வேண்டுமே ஒழிய கீற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு அல்ல.
--------------------------------
There are instances when the consonant sound may occur without the need of a vowel. In such cases a dot, called virama, is placed above the letter. This practice is extended to situations where there might be a need for consonant clusters, that is, when two consonants may need to be combined to produce a required sound.
--------------------------------
புள்ளி இல்லாமல் தமிழி எழுத்து இருந்த காலம் ஒன்று உண்டு (>300 B.C). ஏன் புள்ளி எழுந்தது என்பதில் ஒரு பெரும் கதையே உண்டு. அது கல்வெட்டாளர்கள் பலருக்கும் தெரியும். அதைச் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும். அதை இங்கு சொன்னால் கட்டுரை நீளும். மெய்க் கூட்டுக்களை (consonantal conjuncts) உணருவதற்காக புள்ளியிட்டார்கள் என்பதும் நகரி வழி, தமிழியை அடையும் மிகத் தவறான முறை.
--------------------------------
In the Tamil script, each consonant of a cluster is depicted by its corresponding letter accompanied by the virama sign.
--------------------------------
இங்கே இப்படிச் சொல்லிவிட்டு சற்றுமேலே எப்படி மெய்யெழுத்துக்களுக்குள் உள்ளார்ந்த அகரம் இருப்பதாக முரணாய்ச் சொல்ல முடிகிறது? ஒரே கட்டுரையில் முன்னுக்குப் பின் முரணா?
--------------------------------
The other South Indian languages follow a completely different methodology to depict the clusters. Consonants of the cluster are joined together to form a single character, which more often than not has no resemblance to the actual letters.
---------------------------------
மற்ற தென்னிந்திய மொழிகள் கிரந்தம் பயின்றன. எனவே மெய்க்கூட்டுக்கள் ஏற்பட்டன. அவை புள்ளி பழக வில்லை.
---------------------------------
The special character Akh is called the 'Aayutha Ezutthu, which literally translates into "the weapon letter".
--------------------------------
இது அடுத்த தவறு. ஆய்தம் என்பது ஆயுதம் அல்ல. இந்த எழுத்தை ஆயுதம் என்று சொல்லுவது பரவலான புரிதல் பிழை. ஆய்தல் என்பது நுணுகுதல் என்றே பொருள்படும். ஆய்தம் என்ற சார்பு எழுத்து குறிப்பிட்ட வல்லின எழுத்துக்களுக்கு முன்னே வரும். அப்படி வரும் பொழுது அந்த வல்லினம் நுணுகும்; மெலியும். அவ்வளவுதான். ஃ என்பது தனித்து நிற்பதில்லை. அது வல்லினம் சார்ந்தே நிற்கும். எஃகு என்னும் போது கடைசியில் வரும் குகரம் ஃ - இன் இருப்பால் நுணுகி ஒலிக்கும். இதே போல குற்றியலுகரமும், குற்றியலிகரமும் வல்லின மெய்களைச் சார்ந்தே நிற்கும்; கூடவே அந்த வல்லின மெய்களை நுணுகி ஒலிக்க வைக்கும்.
-------------------------------
It is depicted by three dots written in a pattern to resemble the vertices of a small triangle. The name might have been given owing to the resemblance of the letter to the three dots found on the shields of the warriors of the medieval times. Though rarely used on its own, the letter elicits a sound entirely different from akh, when used along with a consonant.
------------------------------
மேலே சொல்லியிருக்கும் வாசகம் ஃ என்பது எல்லா உயிர்மெய் எழுத்துக்கும் முன்னால் வரும் என்பது போல் சொல்லுகிறார். அது தவறு. சில குறிப்பிட்ட வல்லின எழுத்துக்களுக்கு முன்னே மட்டும் தான் ஃவரும்.
------------------------------
The functionality of this letter can be considered to be purely grammatical when it is made use of as a vowel.
------------------------------
இந்த எழுத்தின் வங்குமை (functionality) இலக்கணம் சார்ந்தது அல்ல. ஒலிப்பு சார்ந்ததே. அது யாப்பில் சில இடங்களில் மெய்யைப் போன்றும், சில இடங்களில் உயிரைப் போன்றும் தோற்றம் அளிக்கும். அதனால் தான், அதை மெய்யிலும் சேர்க்காமல், உயிரிலும் சேர்க்காமல், தனித்து வைத்திருக்கிறார்கள். ஆய்தம் பற்றிக் கட்டுரை ஆசிரியர் இன்னும் படிக்க வேண்டும்.
-------------------------------
Tolkappiyam, the book about grammar, kind of suggests that this character is used to produce the effect of a "Glottal Stop" (the sound produced when the vocal cords are pressed together). This might be the reason for the letter being called 'Saarbezhuthu' or a dependent letter in the book. Though this letter was widely used in the early literary works, one can hardly spot them in the modern day literature.
--------------------------------
சார்பெழுத்து பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். ஆசிரியரின் புரிதல் முழுமையில்லாமல் இருக்கிறது. அவர் குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றி அறிய மாட்டார் எனத் தோன்றுகிறது.
------------------------------
Conclusion
The script may seem to be very complex and one might find it difficult to learn.
--------------------------------
சுற்றி வளைத்து ஏதேதோ சொல்லி தமிழ் எழுத்து மிகவும் பலக்கியது (complex) என்று சொல்லிவிட்டார். இல்லை என்று நாம் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ளவா போகிறார்? :-)
--------------------------------
But to experience and enjoy the true essence of the epics such as 'Ponniyin Selvan' and other praiseworthy works, it is a necessity to be comfortable with the language and its script. And once you are familiar with the script, you might actually appreciate the complexities of the language that render it unique.
--------------------------------
இந்த எழுத்து இந்திய மொழிகளுக்குள் எளிமையாக இருப்பதால் தான் இந்த அளவுக்கு தமிழ்க் கணிமை கூடியிருக்கிறது. இதை ஆசிரியர் தன் கட்டுரையில் புரிய வைக்கவில்லை.
--------------------------------

Friday, February 03, 2006

தமிழ் ஒருங்குறி - தேட்டைச் சிக்கல்

"அண்மையில் இங்கு ஒரு நண்பர் தமிழுலகம் மடற்குழு ஏன் ஒருங்குறிக்கு மாறக் கூடாது?"என்று கேட்டிருந்தார். ஒருங்குறி பற்றி தமிழுலகம் மடற்குழுவில் நெடுகவும் பேசியாயிற்று. அந்த நண்பர் பழைய மடல்களைக் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அந்த உரையாடல்கள் கொஞ்சம் சூடு பறக்க நடந்தது உண்மைதான். இருந்தாலும் நண்பர்களுக்குள் புரிதலோடு வாதிட்டதில் தவறில்லை.

அப்பொழுது ஒருங்குறி வைத்துத் தேடுதலில் உள்ள சரவல்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். சிலர் "ஒருங்குறியில் இருந்தால் அங்கு தேடலாம்; இங்கு தேடலாம், கூகுளில் தேடலாம்; வலைப்பதிவு வைத்துக் கொள்ளலாம்; ஒருங்குறி என்பது வாராது போல் வந்த மாமணி" என்று சொன்னார்கள். "நான் பழசைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்; முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கிறேன்" என்று நக்கல் கூடச் செய்திருந்தார்கள். சரி, கொஞ்ச காலம் பொறுத்திருப்போம்; நடைமுறைச் சிக்கல்கள் வரும்போது இவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் அப்பொழுது வாளாவிருந்தேன்.

இப்பொழுது, ஓய்வு நேரத்தில், கூகுளில் தேடிய போது தேட்டையில் உள்ள நடைமுறைச் சிக்கல் இன்னும் புலப்பட்டது.

கூகுள் என்பது பலமொழி ஆவணங்களில் சொற்களைத் தேடுவதற்கென உருவாக்கப் பட்ட நிரல். இதில் ஒருங்குறியைப் பயன் படுத்த முடியும். ஒரு சோதனையாக, இ-கலப்பை மூலம் ஒருங்குறியைத் தேர்ந்தெடுத்து keyman வழியாக "வளவு" என்ற தமிழ்ச் சொல்லைத் தட்டி கூகுளில் உள்ளிட்டேன்; அப்பொழுது வளவு என்ற சொல்லைக் கொண்ட 47 ஆவணங்கள் கிட்டின. இந்தத் தேட்டை, ஒன்று போலத் தெரியும் ஆவணங்களை ஒதுக்கி, எஞ்சியவற்றைத் தேடி எடுக்கப் பட்டது. இந்த 47-ன் சுருக்கத்தைப் படித்துப் பார்த்தால் "அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு" என்று வரக் கூடிய ஆவணங்களுமாய் 6 ஆவணங்கள் உள்ளடங்கி இருந்தது தெரிந்தது. தமிழுக்குப் பொருத்தமான தேடு நிரலாய் இருக்குமானால் இந்த 6 ஆவணங்களையும் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. "வளவு" என்ற பெயர்ச்சொல்லோடு "வளவில், வளவால், வளவோடு, வளவை......" என்று உருபுகள் சேர்ந்து வரும் ஆவணங்களையும் இந்தத் தேடி நிரலி எடுத்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

அப்படிச் செய்யாதது எதைக் காட்டுகிறது?

இன்றைய நிலையில் கூகுள் நிரலி தமிழ் ஒருங்குறி ஆவணங்களுக்கு ஓரளவுதான் பயன்படும் என்றே தெரிகிறது. இதைப் பயன்படுத்த வேண்டுமானால், நாம் பத்துப் பதினைந்து வகையில் தேட்டைகளைச் செய்ய வேண்டும். அதாவது வெறும் பெயர்ச்சொல்லோடு அமையாது, "வளவில், வளவால், வளவோடு, வளவை......" என எல்லாவித உருபுகளோடு சேர்த்து, ஒவ்வொரு முறையும் உள்ளிட்டு, அதனால் கிடைக்கும் அத்தனை ஆவணங்களையும் ஒன்று சேர்த்து, பின் அவற்றில் "அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு" என்பவற்றையும், அந்தச் சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேர்ந்த மற்றவை கொண்ட ஆவணங்களை எல்லாம் ஒதுக்கிப் பின் தொகுக்க வேண்டும்.

ஓர்ந்து பார்த்தால் இப்படிப் பலவழியாகச் செய்யும் முறை அவ்வளவு நேர்த்தியானதாகத் தெரியவில்லை. (வேண்டுமானால், ஒவ்வொரு வாசகரும் ஒருங்குறி முறையில் ஏதேனும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு கூகுளின் மூலம் செய்து பாருங்கள்; முன்னொட்டுக்களும், பின்னொட்டுக்களுமாய் ஒரு பெயர்ச்சொல்லில் எழும் கூத்தைப் பாருங்கள். இதே போல வினைச் சொல்லுக்கு வேறு மாதிரிச் சிக்கல்கள் எழும்.)

அப்படியானால் குறை கூகுளிடமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தனி உயிர், தனி மெய் என அகர வரிசை எழுத்துக்களைக் கொண்ட எல்லா மொழிகளுக்கும் கூகுள் நிரலில் சரியாகவே வேலை செய்யும். மாறாகத் தனி உயிர், தனி மெய் எழுத்துக்களோடு, உயிர்மெய் எழுத்துக்களையும் கொண்ட ஒட்டுநிலை மொழிகளுக்கு, குறிப்பாக இந்திய மொழிகளுக்கு, இந்த நிரலி வேலை செய்யாது.

இந்த மொழிகளுக்கு உதவுமாப் போல, விதப்பான தனித் தனி கூகுள் தேடிகளை உருவாக்க வேண்டும்; அதாவது இந்திக்கு என ஒரு கூகுள் தேடி, தமிழுக்கு என ஒரு கூகுள் தேடி என்னுமாப் போல செய்ய வேண்டும். இது மூக்கைச் சுற்றி வளைத்துத் தொடும் வேலை அல்லவா? இப்படிச் செய்வதால், சொவ்வறையாளர்களின் (software personnel) தேவை வேண்டுமானால் கூடும்; நிறையப் பேருக்கு வேலை கிடைக்கும்; ஆனால் தமிழ், கணியில் புகுந்து விளையாடும் என்பது குதிரைக் கொம்பே. இதைத்தான் நான் முன்பு சொன்னேன்; ஆனால் ஒருங்குறிக்கு அணியமாய் இருந்த பலரும் இதைப் பொருட்படுத்தியதாய்த் தெரியவில்லை. இன்னும் சொந்னால், தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழி (agglutinative language) என்பதையும், நம் எழுத்தைத் தொலைத்தால் ஒழிய இன்றைய ஒருங்குறியை வைத்துக் கொண்டு, கணியில் நாம் தமிழ் எழுத்துப் படம் காட்டுவதோடு மட்டுமே அமையும் என்பதையும் கூட உணர மாட்டேம் என்று அவர்கள் இருந்தார்கள்.

அப்படியானால், நம் எழுத்தைத் தொலைப்பதா என்றால், காலிற்கேற்ற செருப்பா, செருப்பிற்கேற்ற காலா என்று நான் திருப்பிக் கேட்க வேண்டியிருக்கிறது.

இந்தக் குறைகளைப் போக்கும் வகையில் TUNE என்ற ஒரு 16 மடைக் குறியேற்றத்தைத் (16 bit encoding) தமிழ் இணையப் பல்கலைக் கழகம் முன்னிருத்திக் காட்டியிருக்கிறது. அவர்கள் ஒரு RFQ கூட வெளியீட்டு இருக்கிறார்கள். அது "கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா" என்று எதிர் வினையில்லாமல் கிடக்கிறது. இதிலும் கூட அரசியல் தான் விரவிக் கிடக்கிறது. நடுவணரசு, மாநில அரசு ஆகியவற்றின் இன்றைய அரசியல் மாற்று நிலைகளாலும், வெளிநாட்டுத் தமிழர், உள்நாட்டுத் தமிழர் என்ற அகப்பாட்டு முரண்களாலும், அவரவர் வணிக நோக்காலும், உருப்படியான வேலை செய்ய மாட்டேம் என்கிறார்கள்; குறிப்பாக மைக்ரோசாவ்ட் முன்னிருந்து செயல்படும் ஒருங்குறிச் சேர்த்தியத்தின் நெருப்புக் கோழித்தனத்தை, நாட்டாமையை, யாரும் சுட்டிக் காட்டத் தயங்குகிறார்கள். தமிழின் எதிர்காலம் இப்படியாகப் பணயம் வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழுக்கு இப்பொழுது நடப்பது தான் (கணிகளில் இந்திய மொழிகள் நுழைவது என்ற புலனத்தில் தமிழ்க் கணிமை என்பது ஒரு வெள்ளோட்டம்), நாளை இந்திய மொழிகள் அனைத்துக்கும் நடக்கும் என்பதை உணரக்கூட யாரும் அணியமாய் இல்லை.

ஊதுகிற சங்கை ஊதி வைக்கிறேன். யாருக்காவது புரிந்தால் சரி. என்னைக் கேட்டால், TUNE ஒரு எதிர்காலம். ஆனால், பூனைக்கு மணி கட்டுபவர்கள் யார்?

அன்புடன்,
இராம.கி.

Thursday, February 02, 2006

சொலவடையின் பொருளாழம்

அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில்
நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; - சென்றிருந்தேன்;
ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில்
நேரியதைச் சொல்லுகிறேன் நின்று.

ஊரோ புதிதெனக்கு; உள்ளரங்கில் நீரூற்று;
வாரோர் பலரும் பணங்கட்டிச் - சாரையெனச்
செல்லுவதைப் பார்த்ததனால் சென்றே குளிப்பமென
மெல்லவே உட்புகுந்தேன் மேல்.

ஊர்க்குளியற் தொட்டி; ஒருபக்கம் ஆண்மக்கள்;
நேர்தடுப்புக் கப்பாலே நேரிழையர்; - சேர்குளிமுன்
மெய்கழுவ நீர்த்தாரை; மேவி அதன்கீழே
பையவே குத்திட்டேன் பார்த்து.

குத்திட்ட என்னரையில் கோவணமாய் ஒருடுப்பு;
அத்தரையில் ஆங்கமர்ந்த யப்பானன்; - வித்தகன்போல்
"நாங்களெலாம் பைத்தியமோ? நன்னகையோ? நீரூற்றுள்
ஆங்கெல்லாம் பாரெ"னச்சொன் னான்

பக்கென் றுணர்வோடு பைந்தமிழின் சொலவடைக்குச்
சிக்கென்ற உள்ளருத்தம் சேர்ந்துணர்ந்தேன்; - நக்கலிலை;
அம்மணாண்டிக் கூட்டம்! அதில்கோட்டி கோவணன்தான்!
சும்மாவா சொல்லிவைத்தார், சூழ்ந்து?

சொலவடையின் ஆழமோ சூடாகத் தைக்கக்
களைந்தேன் அரையுடுப்புக் கட்டை; - தொலைவதுபோல்
என்னளவில் நாணம் எழுந்தோடிப் போயிற்று;
அன்னார் நகையுற்றார் ஆங்கு.

சொலவடைக்கு என்னபொருள்? சொல்லும் அடுக்கே!
பழமொழிக்கு என்னதுவோ பாரில்? - சொலச்சொலவே
பட்டறிவைக் கூட்டி பழந்தமிழர் ஆக்கிவைத்தார்
கொட்டிக் குமுகமெலாம் கோர்த்து.

அன்புடன்,
இராம.கி.