Friday, September 30, 2011

மாணிக்கவாசகர் காலம் - 5

பதிகங்கள் பிறந்த கதை:

சரி கதைக்கு வருவோம். கானப்பேரை விட்டகன்ற மாணிக்க வாசகர் மொய்யார் பொய்கைத் திருப்பெருந்துறையைச் சேருகிறார். ஆடிக்காற்று அடிக்கிறது. குதிரைக் கலங்கள் துறையில் அணையாதுள்ளன. அவை வந்து சேர நாட்களாகுமென்று காத்து நிற்கிறார். தெய்வப் பணியில் கவனம் செல்கிறது. இற்றை ஆவுடையார் கோயிலுக்கு முன் வேறு சிறிய கோயில் இருந்திருக்க வேண்டும். (மாணிக்கவாசகருக்கு உபதேசங் கொடுத்த ஆதி கைலாய நாதர் கோயிலும் அங்கு தான் உள்ளது. 

திருவாசகப் பகுதிகளை மாணிக்கவாசகர் வரலாற்றோடும், நம்பியார் திருவிளையாடல், கடவுண்மா முனிவரின் திருவாதவூர்ப் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் போன்ற நூற்செய்திகளை ஏரணத்தோடும் கூடவே பொருத்தினால், குதிரைவாங்கத் திருப்பெருந்துறை வந்த இடத்தில் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபின், மணிவாசகர் முதலிற் பாடியது சென்னிப் பத்து என்றே தோன்றுகிறது. ”நமச்சிவாய” என்ற அறிவோதலுக்குப் (உபதேசத்தின்) பின் இறைவன் பெயர்களை விதவிதமாய் எடுத்தோதி, அவன் சேவடியின் கீழ் தன் சென்னி மன்னியதையே ஆழ்ந்து இப்பதிகத்திற் பேசுகிறார். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலில் எழுந்த பதிகங்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

அதற்கடுத்து அச்சோப் பத்து எழுந்ததாய் நம்பியார் சொல்கிறார். [இது தில்லையில் வெளிப்பட்டதாக யாரோ உரையார் சொல்வது பொருத்தமாய்ப் படவில்லை. இறைவன் தனக்குச் ”சிவாய நம” என ஓதியருளியதை ”அச்சோ” என வியந்து அச்சூட்டோடு திருப்பெருந்துறையில் சொல்லாது தில்லை வரைக்கும் காத்திருந்தா மணிவாசகர் தன் உணர்வை வெளிப்படுத்துவார்? இதுபோற் குருவிடம் எட்டெழுத்து மந்திரங் கேட்ட இராமானுசர் கோட்டியூர் கோபுரத்திலேறி ஊருக்கெலாம் உடன் சொல்லாது, ஆறவமர திருவரங்கம் வந்தா மற்றோர்க்கு ஓதினார்?]

இறைவனும் அவன் சீடருமாய் ஆயிரம் பேர் கூடியிருக்க, அச் சிறிய ஊரிற் தன்னை ஆட்கொண்ட அதிசயம் மாணிக்கவாசகரைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறது. மூன்றாம் பத்தாய் அதிசயப் பத்து எழுகிறது. எங்கெலாம் கோகழி என்கிறாரோ அங்கெலாம் குருமணியைச் சேர்த்தோ, இன்னொரு வகையிலோ மாணிக்கவாசகர் இடத்தை அடையாளங் காட்டுகிறார். அதிசயப் பத்து 7 ஆம் பாடலிற்கூட “இடர்க் கடற்கழித் தலைப்படுவேனை” என்று சொல்லித் துன்பக்கடலைச் சொல்கிறார்; தான் கடற்கழி இடத்தில் வந்திருப்பதையுஞ் சொல்கிறார். அப்பாடலை ஆழ்ந்து படிப்போருக்கு இது புரியும். திருவண்டப் பகுதி 66 ஆம் வரிகளில் இருந்து 69 ஆம் வரிவரை,

பரமா நந்தப் பழங்கடல் அதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய

என்று படித்தும், அதுவின்றி முன்முடிவாக ”வடுகப் பிள்ளை” என்று கொண்ட காரணத்தால், திருப்பெருந்துறைக்குள் மலையைத் தேடி கருநாடகத்தில் அலைகிறவருக்கு நாமென்ன சொல்லலாம்? ”ஐயா, ”வரை” க்கு மலை மட்டும் பொருளல்ல. நீர்க்கரைப் பொருளும் உண்டு” என்று சொல்லலாம். ”நாட்பட்ட பழங்கடலின் நீர் கருமுகிலில் தோன்றி, திருப்பெருந்துறை நீர்க்கரையில் ஏறி எல்லாத் திசைகளிலும் மின்னொளி காட்டி விரிய” என்று பொருள்பார்த்தால் ”மழை வரப்போகிறது” என்பது சட்டெனப் புரியுமே? கண்ணெதிரிலுள்ள ஆவுடையார் கோயிலை விட்டு வேறெங்கோ தேடின் எப்படி?

நாலாம் பத்தாய் கோயில் திருப்பதிகம் அந்தாதி அமைப்பில் எழும். இதையும் யாரோ ஓர் உரையாசிரியர் தில்லையில் எழுந்ததாய்த் தவறாகக் குறித்தார். இப் பதிகத்தின் ஆறாம் பாடலில்

“நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே”

என்ற வரிகள் “பெருமானே, இன்று உன்னை இங்கு கண்டேன்” என்று தெளிவாக உரைக்கும் போது, எப்படி உரையாசிரியர் வழுவினாரென்று தெரியவில்லை. மாணிக்கவாசகர் என்றைக்குத் தன் குருமணியைக் கண்டாரோ, அன்றே தான் கோயில் திருப்பதிகமும் எழுந்திருக்கிறது. அதில் என்ன ஐயப்பாடு? அருளிச் செயல் யாருக்காக நடந்தது? இப் பதிகம் முழுக்கத் பெருந்துறையிற் பாடப்பட்டதே.

அதைத் தொடர்ந்து புணர்ச்சிப் பத்தும் செத்திலாப் பத்தும் எழுகின்றன. பித்துப் பிடித்தவாறு மணிவாசகர் இறைவனைப்பற்றிப் பாடிக்கொண்டே இருக்கிறார். திருப்பெருந்துறையிலே சின்னாட்கள் தொடர்ந்து தங்குகிறார். தங்கும் இடத்தில் கொண்டுவந்த செல்வம் குறைகிறது. [எப்படிக் குறைகிறது என்ற விவரம் தெளிவாக இல்லை.] ஆடிக்காற்று அடங்கும் போது கலங்கள் துறை பிடிக்கின்றன. குதிரைகள் இறங்குகின்றன. ஆனால் வேறு வழிகளிற் செலவாகிய பணம் குறைந்த காரணத்தால் குதிரைகள் வாங்கப் படவில்லை.

பிரார்த்தனைப் பத்து, (இந்த அந்தாதிப் பதிகத்தின் முதற் பாட்டடியே “கலந்து நின்னடியாரொடு அன்று வாளா களித்திருந்தேன்” என வெளிப்படுகிறது. இறைவன் வாசகரை ஆட்கொண்ட நாளுக்குச் சின்னாட்கள் கழித்துப் பிரார்த்தனைப் பத்து எழுந்திருக்கலாம்.) ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து ஆகியவை தொடர்ந்து வருகின்றன. இதற்குப் பின் திருப்புலம்பலும், வாழாப் பத்தும், எண்ணப்பத்தும் எழுந்ததாக நம்பி திருவிளையாடல் சொல்கிறது.

[இப்போது கிடைக்கும் திருப்புலம்பல் வெறும் 3 - ஏ பாட்டுக்களுடன், அதுவும்  முதற்பாட்டு திருவாரூரனையும், 2 ஆம் பாட்டு பெருந்துறையானையும், 3 ஆம் பாட்டு குற்றாலத்தானையும் குறிப்பதாக முன் கூறினோம். ஒருவேளை நம்பியார் காலம் 12 ஆம் நூற்றாண்டில் இது பெருந்துறைப் பாட்டுக்களைக்  குறித்து, ஆரூருக்கு வேறு பதிகமும், குற்றாலத்திற்கு இன்னொரு பதிகமும் இருந்தன போலும்? இதேபோல் எண்ணப்பத்தும் குறைப்பட்ட பதிகமே. இதில் வெவ்வேறு வகை ஆசிரிய விருந்தங்கள் கலந்து நிற்கின்றன.]

ஆக ஆட்கொள்ளப் பட்டபின் எழுந்த பதிகங்களாய் மொத்தம் பன்னிரண்டு பதிகங்களை அடையாளம் காணலாம்.

[அப்புறம் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத் தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம், திரு வெம்பாவை, திருச்சதகம் ஆகியவை திருப்பெருந்துறையில் எழுந்ததாய் நம்பி திருவிளையாடல் சொல்லும். அது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. அவை பற்றிய விளக்கத்தை ஒரு சில பத்திகளுக்கு அப்புறம் காணுவம். இனி வரலாற்றின் வழி தொடருவம்.]

இப் 12 பதிகங்களைக் கேட்டவர் அதிசயித்து, ”இவர் பெருத்த சிவனடியார்” என்றெண்ணி வாசகரைச் சூழ்ந்து போற்றுகிறார். பித்தம் தலைக்கேறிய வாசகர் தாம் கொணர்ந்த பொருளை வந்தோர்க்கு பல்வேறு காரணங்களுக்கு எனப் பரிந்து கொடுக்கிறார். சின்னாட்கள் கழிகின்றன. திறையாய்ப் பெற்று நிலவறையில் பாண்டியன் வைத்திருந்த பொருள் கரைந்து போனது. இப்படி நடந்த செய்தி பாண்டியனைச் சேருகிறது. [சிவகங்கைப் பக்கம் பொதினம் - business - நடத்துவோர் 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் பொதுக்கணக்கு, தனது கணக்கு என்று 2 கணக்கு வைத்திருப்பார். பொதுக் கணக்கு - business entity account தனது கணக்கு - own account. இங்கே குதிரை வாங்கப் பணம் எடுத்தது சொந்த நிலவறையில் இருந்தாகும். அதாவது தனது கணக்கு. அதிற் செல்வம் குறைந்தால் கன்னாப் பின்னாவெனப் பாண்டியனுக்குச் சினம் வரத்தான் செய்யும். :-)))))) சினமுற்ற அரசன் ஓலை விடுக்கிறான்.

”தென்னவர் பரவும் தென்னவன் ஓலை: தென்னவன் பிரம ராயனே காண்க!
பொன்னிறை அறையில் பன்முதல் கொண்டு புரவிகொண்டு அணைவான் பரிவொடும் போனான்
என்னினைந்து இன்னம் வந்திலன் அமைச்சற்கு இப்படிச் செய்யத் தக்கதோ கடிது
மன்னிய ஆடல் புரவி கொண்டு அடைவின் வருவது கருமம்; மற்றது பழுதால்”

அங்குமிங்கும் அலையாது தான் சொல்ல வந்ததைப் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லும் ஒரு மடல். final warning from the king. இப்படித்தான் நம்பியார் திருவிளையாடல் நமக்குத் தெரிவிக்கிறது. [பாட்டின் தோரணை அரசனின் அகவை மாணிக்கவாசகருக்கும் கூடியதோ என்று எண்ண வைக்கிறது.] மீண்டும் இறைவனிடம் முறைப்பாடு நடக்கிறது. ”பெருந்துறை அந்தணர் முந்நூற்றுவரின் (தில்லை மூவாயிரவர் போல திருப்பெருந்துறை என்பது 300 பேர் கொண்ட சதுர்வேத மங்கலம்.) நிலத்தை முன்னாள் காப்பாற்றிக் கொடுத்த இறைவன் தம்மையும் இக்கட்டிற் காப்பாற்றிக் கொடுக்குமாறு” மாணிக்க வாசகரிடமிருந்து வேண்டுகோள் எழுகிறது. கூடவே “போற்றியென் வாழ்முதலாகிய பொருளே! புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டு” என்று திருப்பள்ளியெழுச்சிப் பதிகம் எழுகிறது.

[இங்கே கவனிக்க வேண்டும். பள்ளியெழுச்சிப் பதிகம் எழுந்தது பெருந் துறையில்; அதனோடு தொடர்புசொல்லி இன்று நாம் ஓதும் திருவெம்பாவை எழுந்தது திருவண்ணாமலையில். ஒரு சில ஆர்வலர் திருப்பாவையையும், திருவெம்பாவையும் ஒப்பீடுசொல்லி மாணிக்கவாசகர் ஆண்டாளுக்குப் பிந்தியவர் என்று சொல்ல முற்படுவார். அச்சிந்தனை எனக்குப் புரிபட வில்லை. அவர் அதைத் தெளிவாக வரையறை செய்து வெளியிடுவாரானால் பின்வினையாற்றலாம்.]

”கனத்த புரவி வந்துசேரும்; கருணையுற வேண்டும்” என்றவோலை இறைவன் அறிவுறுத்தலின் பின் மாணிக்கவாசகரிடமிருந்து பாண்டியனுக்கு ஓலை எழுகிறது. அதனைத் தொடர்ந்து வாசகரும் மதுரை செல்கிறார்.

மதுரை வந்த மாணிக்கவாசகரை மண்டபத்தில் இருத்தி முதலில் மன்னன் என்ன கேள்வி கேட்கிறான் தெரியுமோ? “குதிரை வாங்க எடுத்துப்போன மறங்கடிப் பொருளுக்கு எவ்வளவு வாசி (discount) வாங்கினாய்? [மறங்கடிப் பொருள்= வெற்றி, திறை, தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருளை மறநிலைப் பொருளென பிங்கலம் சொல்லும்.] குதிரைகள் எத்துறையில் இருந்து வந்தன? என்னென்ன நாடுகள்? எவ்வளவு குதிரைகள் உயர்தரம்? எவ்வளவு போதுந்தரம்? என்னென்ன நிறங்கள்? எனக்காக வாங்கும்போது நீதி துலங்கிய கணங்களுண்டா? கூசாமற் சொல்?” ஆக ஐயப்படும் பாண்டியனுக்கு “வாசி” தான் பெரிதாகத் தெரிந்திருக்கிறது.

மறங் கடி பொருள் தனக்கு வாசி எவ்வளவு கொண்டீர்?
இறங்கிய துறை, நாடு ஏதேது? எவ்வளவு உயர்பு? போது?
நிறங்கள் தாம் என்ன? எமக்கேற்றானது என்போது நீதி
பிறங்கிலக் கணங்கள் என்னை? பேசிடீர் கூசலன்றி

பார்த்தீர்களா? உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை முற்றிலும் உலகியல் நோக்குற்ற இவனா சிவலோகம் தேடிய வரகுணன்? இல்லவே இல்லை. அந்த வரகுணன் வேறு. இவன் வேறு. இவன் ஒருகால் வரகுணன் மகனாகலாம். முழுக்க முழுக்கத் தன்னாட்டை  வலியின்மையிலிருந்து விடுவித்து, அதை வலிதாக்கி, மாற்று நாடு பிடிக்கத் துடிக்கும் பேராசைக்காரன் இவன். சிவ லோகம் தேடிய வரகுணன் மாணிக்கவாசகருக்குப் பிரம்படிகள் கொடுக்கச் சொல்வானோ?

சுற்றி வளைத்து ஊகிக்கிறோம். மணிவாசகர் அமைச்சர் பொறுப்பிலிருந்தது பெரும்பாலும் வரகுணன் மகனிடம் தான் போலும். இவன்காலத்தும் ஒரு சோழர் படையெடுப்பு நடக்கிறது. அதை விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலிற் பார்ப்போம்.

குதிரைகள் ”மாராட்டகம் - maharashtram, காம்போசம், ஆரியம், சாம்பிராணி (இரான்)” ஆகிய இடங்களில் இருந்து இறங்கியதாக மாணிக்க வாசகர் சொன்னதாக நம்பியார் திருவிளையாடல் சொல்கிறது. இவ்விடங்கள் 12 ஆம் நூற்றாண்டு விவரிப்பு. மாணிக்கவாசகர் கால விவரிப்பல்ல. இங்கு ஓர் குறிப்புமுண்டு. சாம்பிராணி தவிர, மற்ற எல்லாமே இந்தியத் துணைக்கண்ட இடங்கள் தாம். அதாவது, குதிரைகள் முதலில் வந்திறங்கி மீண்டும் மறு ஏற்றுமதியாகும் நாடுகள். இதன் பொருளென்ன? குதிரை வணிகக் கடைக் கோடியில் தமிழர் இருந்திருக்கிறார். எனவே பெரும்பாலும் இவருக்குக் குதிரைகளின் கடைத்தரம் வந்திறங்கவே வாய்ப்புண்டு. பெரும்பாலும் மேற்குக் கரையினரை விட இவர் குதிரை வணிகத்தில் கட்டளையிடும் உயரத்தில் இருந்திருக்க மாட்டார். Most probably they were at the receiving end (in all senses). அதன் காரணத்தால் குதிரை வாங்குவதில் இவர் கணக்கற்ற பொன் செலவழித்திருக்க வேண்டும்.

குதிரைகள் பற்றிப் பல்வேறாய் விவரித்த மாணிக்க வாசகர் சொக்கன் ஆலயத்திற்குள் புகுந்து மீண்டும் இறைவனை வேண்டுகிறார். “அஞ்சேல்” என்ற இறைவனின் வாக்கு இவருக்கு நம்பிக்கை தருகிறது. வீட்டுக்கு வருகிறார். உறவினர் தாம் கேள்விப் பட்டதைச் சொல்லி மாணிக்கவாசகரை மீண்டும் கலவரப் படுத்துகிறார். ”இறைவனின் உதவியால் நிலைமை சரியாகும்” என அவருக்கு மணிவாசகர் சொல்கிறார். அரசன் மதுரை நகரில் உள்ள குதிரைப்பந்தி, வையாளி (குதிரையும், தேரும் போகும் வியதி>வீதி), சங்க மண்டபம், பண்டசாலை, கொந்த விழலம் (குந்தங்கள் = ஈட்டிகளை வீசியெறியும் இடங்கள்), கல்மாடம், மாமடம், கோபுரங்கள், சொக்கனின் பெரிய கோயில், தோரண வாயில், வீதி ஆகியவற்றை அலங்கரித்து ”மதுரை இந்திரன் எழுப்பிய ஊர்” என்று சொல்லும் வகையிற் சோடிக்கிறார்.

இதோடு ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல் முடிகிறது. இதனோடு தொடர்புடைய பதிகங்கள் மொத்தம் 13. அடுத்து நரி குதிரையான திரு விளையாடல் தொடங்குகிறது.

இறைவன் தன்னை ஆண்டுகொண்டு அருளியதைத் திருவாசகம் எங்கும் மணிவாசகர் அகச்சான்று தருகிறார். அவற்றிற் சில இடங்களை இங்கு தங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். இந்த அருளிச்செயலை மறுப்பவர் மாணிக்கவாசகர் சொல்வதேயே மறுப்பவர் ஆவார். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலையே மறுப்பவர் ஆவார். அவரிடம் மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டென வாதாடிக் கொண்டிருப்பதில் பயனேயில்லை.
---------------------------------

அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்

(ஞாலம்>ஜாலம்)
- கீர்த்தித் திருவகவல் 42-43

திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியில் கரந்த கள்ளமும்

- கீர்த்தித் திருவகவல் 54-55

என்நேர் அனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்

- திருவண்டப் பகுதி 147-149

அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையை

- போற்றித் திருவகவல் 75-76

மெய்திரு வேதியன் ஆகி வினைகெட
கைதர வல்ல கடவுள் போற்றி

- போற்றித் திருவகவல் 88-89

என்னையும் ஒருவன் ஆக்கி யிருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி

- போற்றித் திருவகவல் 129-130

மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறீ லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்மை அன்பருன் மெய்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாகம் நோக்கியும்
கீறி காதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

- திருச்சதகம் 91

செங்கண் நெடுமாலும் சென்றிடத்தும் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெம்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 1

இதேபோல திருவம்மானை 2-14 ஆம் பாடல்கள்.

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 11

நான்தனக்கு அன்பின்மை நானுந்தா னுமறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாரும் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 13

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 14

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கொத்தும்பீ

- திருக்கோத்தும்பி 17

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அரியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ

- திருத்தெள்ளேணம் 1

ஆவா அரியயனிந் திரன்வானோர்க் கரியசிவன்
வாவாவென் றென்னையும்பூ தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவா ரடிச்சுவ டெந்தலைமேற் பொறித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ

- திருத்தெள்ளேணம் 7

பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென்தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ

- திருப்பூவல்லி 10

ஆணோ, அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யவாட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவி
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ

- திருப்பொன்னூசல் 5

கொந்தண வும்பொஇற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண நாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தன ராமிவ நென்றிங் கென்னையும் ஆட்கொண் டருளூம்
செந்தழல் போற்றிரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய்

- குயிற்பத்து 10

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறைக் கோயிலுங் காட்டி
அந்தண நாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே

- திருப்பள்ளியெழுச்சி 8

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தனைவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே

-புணர்ச்சிப் பத்து 10

அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகிறேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதமெனக்குப் புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே

- குழைத்தபத்து 10

நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல்லார் எம்பிரானாவாரே

- திருவார்த்தை 7

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 29, 2011

மாணிக்கவாசகர் காலம் - 4

கதைத் தொடக்கம்:

மாணிக்க வாசகரும் மற்றோரும் தானைவேல் வாகைமாறனைச் சூழ்ந்து திருவோலக்க மண்டபத்தில் இருக்கும் போது குதிரைத் துறைக்காரன் தங்கள் அரசக்குதிரைகள் “சீதவெம்மை, வாதநோய், ஆதிவெப்பு, கண்டமாலை, கவுசி, மகோதரம், மண்டசாலம், வெஞ்சூலை, அலகுநோய், தண்டைநோய், பிரமேகம், தலைக்கனம்” எனப் பல்வேறு வாதைகளிற் பாதிக்கப்பட்டதைச் சொல்லி, ”மற்ற குதிரைகளும் இதுபோல் நோய்வாய்ப்படும் நிலையில் உள்ளதால், புதுக் குதிரைகள் வாங்கியே குதிரைப்படையைக் காப்பாற்ற முடியும்” என்றுஞ் சொல்கிறான்.

ஆக, 4,5 குதிரைகள் அல்ல, கணக்கற்ற குதிரைகள் நோய்வாய்ப் பட்டுள்ளன. ஒரு குதிரைப்படையே இல்லாகும் நிலை பாண்டிய நாட்டிற்கு ஏற்படுகிறது. அடுத்த நாட்டின் மேல் (இது பெரும்பாலும் சோழநாடு. வரகுணனுக்குச் சிவ லோகம் காட்டிய திருவிளையாடலில் சோழனே பாண்டியன்மேற் படை எடுத்து வருகிறான்.) படையெடுக்க விழையும் பாண்டியன், நிலையின் கனத்தை உணர்கிறான். தன் சொந்த நிலவறையிலிருந்து வேண்டிய செல்வம் எடுத்துப் போய் “தாவு மா இறங்கும் பட்டினத்தில்” குதிரைகளை வாங்கிவரச் சொல்கிறான்.

அரசகட்டளை கேட்ட மாணிக்கவாசகர் சோழப் பெருந்துறையில் குதிரை வாங்கப் புறப்படுகிறார். அவர் ஏன் சோழநாட்டிற்குப் போகிறார்? - ஆழப் புரிந்துகொள்ள வேண்டிய கேள்வி. சோழநாட்டுப் பெருந்துறை பாண்டித் தொண்டியில் இருந்து வடக்கே 20/25 கி.மீ.தொலைவு கொண்டது. மிழலைக் கூற்றத்தில் (இற்றைப் புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி வட்டம்) உள்ளது.

மிழலைக் கூற்றம் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே மாறி மாறி வந்த பகுதி. அடிப்படையில் சோழநாடே. (தெள்ளுநீர் வெள்ளாறுபாய் திருமிழலை நாட்டுப் பெருந்துறை” என்று சிவலோக நாயகி பொன்னூசலில் ஒரு தொடர் வரும்.) கோயிற் கல்வெட்டுக்களில் இத்தலம், ”மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம், பிரமதேசம், தனியூர், திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” என்று குறிப்பிடப்படும். புவுத்திரம் என்பதன் மூலம் ”கடலுக்கு அருகிலுள்ளது” என்று விளங்கும்.

பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்தில் இன்றிருப்பது மண(ல்)மேற்குடி.  அதற்கும் மேற்கில் ஆற்றொட்டி உள்ளதை மணலூர் என்பார். [இம் மணலூரையும் ஆய வேண்டும். கீழடி மணலூரும் இதுவும் தொடர்புற்றனவோ என்ற ஐயமுண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைத்தொலைவு ஏறத்தாழ 22/23 கி.மீ.

திருப்பெருந்துறை இயற்கைத் துறையல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்கவேண்டுமெனில், ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதிலாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைக் கழியாய் அது இருக்கவேண்டும். ஆற்று வெள்ளக் காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலன்றி ஆற்றுக் கழிமுகத்திலுள்ள சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை குதிரைகளை இறங்கமுடியா அளவுக்கு கீழைத் தொண்டியின் கடல் அலைகள் சரவல் தந்தனவோ?ஞாவகப்படுத்திக் கொள்க. தொண்டியிற் கழிகள் கிடையா.]

கழியும் துறையும் பொருளில் ஒன்றே. இதுபோற் கோவும் பெருவும் ஒன்றே. ”பெருந்துறையே கோகழி, கோகழியே பெருந்துறை.” கோகழிப் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடுவோர் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து,  ஊர் நிலவமைப்பைச் சுற்றிப் பார்த்ததிலை போலும். occam's razor சிந்தனையையும் கேள்வியுற்றது இல்லை போலும். திருவாசகப் பாக்களை அலசுகையில் கோகழி பற்றிப் பேசுவோம்.

மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டென அவக்கரமாய்ச் சொல்வோர், மன்னர்களின் வலிமை, இன்மைகளைப் பார்க்கத் தவறுகிறார். மாணிக்க வாசகர் காலத்துப் பாண்டியன், குலைந்துபோன குதிரைப் படையை மீளக் கட்டமுற்படும் ஒரு வலிகுறைந்த அரசன். அவன்காலச் சோழனும் கூட வலிந்தவன் இல்லை. அப்படியிருப்பின், பாண்டிய முதலமைச்சன் ”ஏதோ தன் சொந்தத் தோட்டத்திற் புகுவது போல்” சோழநாட்டுப் பெருந்துறையுள்  குதிரை வாங்க நுழைந்திருக்க முடியாது. தேங்காயைப் பிடித்து அமுக்கியது போல சோழன் மாணிக்கவாசகரைச் சிறைக்குள் தள்ளியிருப்பான். (நினைவு கொள்க;  பாண்டியனின் குதிரைப்படையை மீளுருவாக்கப் புறப்பட்டவர் மாணிக்க வாசகர். வெறும் 4,5 குதிரை வாங்க வந்தவரல்ல அவர். இப்படையை மீண்டும் கட்ட விடாது தடுக்கவே உருப்படியான சோழன் முனைந்திருப்பான்.)

இன்னொரு விதமாய் எண்ணினால், எல்லைப் பகுதிகளில் அதிகாரமில்லாத சோழ அரசர் ஆண்ட காலம் அது. குதிரை வாங்கப் புறப்பட்ட அடுத்த நாட்டுப் பேரமைச்சன் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கி சோழநாட்டின் எல்லை மீற முடிந்துள்ளது. நமக்கு வியப்பாகவில்லையா? அப்படியெனில், பாண்டியன், சோழன் இருவருமே வலிகுறைந்த காலம் அதுவோ? எந்த நூற்றாண்டு? 9 ஆம் நூற்றாண்டு விசயாலயன் காலமா? இருக்காதே? தஞ்சை/ பழையாறையில் இருந்து பெருந்துறைக்குச் சோழன் தாவி வரமுடியுமே? தஞ்சையில் இருந்து 90 கி.மீ. கூட இருக்காதே? பெருந்துறையில் பாண்டிய அமைச்சன் குதிரை வாங்க வந்த செய்தி சோழனுக்குத் தெரியாது போனதோ?

மாணிக்க வாசகர் பெருந்துறையில் இருந்த காலம் எத்தனை நாட்களோ தெரியாது; அது 11 மாதங் கூட இருந்திருக்கலாம். பெருந்துறையிலிருந்து மதுரை வரை இப்பகுதிகள் எல்லாம் அக்காலத்தில் பெருங்காடுகளே. கானப்பேர் என அக்காடுகளுக்குப் பெயரிருந்தது அப் பேற்றை, அடர்த்தியை,  நமக்கு உணர்த்தும். சிவகங்கைக் காடுகள் அழிக்கப்பட்டது 19 ஆம்  நூற்றாண்டுக் கிழக்கிந்தியக் கும்பனியின் கர்னல் அக்னியூவால்  தான். அதுவரை உள்ளூர் ஆட்கள் கூட நுழையவொண்ணாப் பெருங்காடாய் அது இருந்தது. சங்க காலத்திலிருந்து அப்படியே. கானப்பேர் கடந்து கோட்டை பிடித்தனாலேயே ஒரு சங்ககாலப் பாண்டியன், ”கானப்பேர் எயிற் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்று பெயருற்றான். அக்காட்டின் நடுவே எங்கெல்லாம் ஊர்கள் எழுந்தனவோ, அங்கெல்லாங் கோயில்களும் எழுந்தன. திருப்பூவணம், திருக்கானப்பேர், திருப்புத்தூர், திருவாடானை, திருப்புனல்வாயில். எல்லாம் ஒரு பாதைக்கு அருகில் உள்ளவையே. திரு உத்தரகோசமங்கை மட்டும் சற்று தள்ளியிருந்தது.

மாணிக்க வாசகர் மதுரையிலிருந்து திருக் கானப்பேர் வழியாக வந்து  இடைத் தங்கிப் பின் பெருந்துறை செல்கிறார். நம்பியார் திருவிளையாடல் அப்படித் தான் சொல்கிறது. கானப்பேரும் 12 ஆம் நூற்றாண்டில்  கானையம்பதி என்றும் பெயர் பெற்றிருந்தது. காளையார் கோயில் அப்போது கோயிலுக்கு மட்டுமான பெயர். இன்று ஊருக்கும் அதே பெயர். 12 ஆம் நூற்றாண்டிலேயே சுந்தரேசர், சோமேசர், காளையீசர் என்று 3 திருநிலைகள் அங்கு இருந்தன. அவை மூன்றும் எப்பொழுதெழுந்தன? தெரியாது. கானப்பேருக்கு கந்தவனம் என்ற பெயரும் இருந்தது. நம்பியார் புராணம் பதிப்பித்த  உ.வே.சா. ஒரு பொன்னே போலுங் குறிப்புங் கொடுக்கிறார். அதை அப்படியே தருகிறேன்.

----------------------
விக்கிரம சோழன் மகள் சுகந்த கேசியை மணம் புரிந்த வரகுண பாண்டியர், அவளுடைய அழகின் மிகுதியைக் கண்டு அத்தலத்திற் சிவபெருமானுக்கு அர்ப்பணஞ் செய்தனர் என்பதும் அவளுடைய கூந்தலின் நறுமணம் எங்கும் பரவியது பற்றி அத்தலம் சுகந்தவனம் அல்லது கந்தவனம் என்று பெயர் பெற்றது என்பதும் அத் தலபுராண வரலாறுகள்.
----------------------

இத் தலபுராணம் தேடிக் கொண்டுள்ளேன். ஆயினும் உ.வே.சா. மூலம் கிடைத்தது அருஞ்செய்தி. திருக்கோவையாரிற் சொல்லப்படும் வரகுண பாண்டியனின் மாமன் பெயர் விக்கிரம சோழனாகும். ஆக வரகுணன் மேற் படையெடுத்து வந்தது அவனுடைய மைத்துனனே. Typical Tamil behavior. அண்ணன் தம்பி, மாமன் மச்சான் பூசல்கள் நம்மை எவ்வளவு அலைக் கழித்துள்ளன?

நாமறிந்து ஒரு விக்கிரம சோழன் குலோத்துங்கனுக்குப் பின் பொ.உ. 1118-1135 இல் ஆட்சி செய்தான். இவர் சொல்லும் வரகுணனோ 9 ஆம் நூற்றாண்டு (பொ.உ.862/863). கால உறவுகள் கொஞ்சமும் பொருந்தவில்லையே? வேறொரு விக்கிரம சோழன் 9 ஆம் நூற்றாண்டில் இருந்ததாய் வரலாற்றில் தெரிய வில்லையே? நாம் எல்லோரும் சேர்ந்து மாணிக்கவாசகர் காலத்தை 12 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுவோமா? அன்றி அடம்பிடித்து 9 ஆம் நூற்றாண்டென்று சொன்னால் அக்காலத்தில் இருந்த சோழன் விசயாலயன் ஆயிற்றே? (பொ.உ. 848-881) என் செய்வோம்? விசயலாயனின் கடைசிப் பத்தாண்டுகளில் அவன் மகன் ஆதித்த சோழன் தானே நடைமுறையிற் சோழ அரசனாய் இருந்தான்?

யாரோவொரு பாண்டியன் வரகுணனாகி அவன் காலத்துச் சோழ மாமன் விக்கிரமனாகிய காலம் பின் எது? அதைக் காணாது குத்துமதிப்பில் மாணிக்க வாசகர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றால் எப்படி? வரலாற்றுப் பட்டகைகள் ஒப்புக்குத் தானா? அவற்றின் அடிப்படையில் எம்முடிவுங் கிடையாதா? உண்மையில் உ.வே.சா. கொடுத்த காளையார் கோயிற் புராணச்செய்தி போதுமே, 9 ஆம் நூற். வரகுணன் பொருத்தத்தை சுக்குநூறாய் உடைத்தெரிய?
உடனே சிலர் நாணிக் கொள்வரோ? கோயிற் புராணங்கள் கற்பனை என்று சொல்லி ஒதுக்குவாரோ? தம் கருதுகோளை உண்மை என்று சாதிக்க என்ன வேண்டுமாயினும் சொல்வது சிலருக்கு வரலாற்றியல் அறம் போலும் .:-)))))))

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 28, 2011

மாணிக்கவாசகர் காலம் - 3

ஞானோபதேசம் செய்த திருவிளையாடல்:

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் என்பது 27 ஆம் திருவிளையாடலாகும். இந்தப் புராணம் திருவிளையாடல்களைக் காலவரிசைப்படி விவரிக்கவில்லை என்றாலும், பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியைக் குறிக்கும் திருவிளையாடல்கள் ஒருங்கே தான் வைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகரைப் பேசும் 4 திருவிளையாடல்களும் (27,28,29,30) இதுபோன்று ஒருங்கே ஒரு தொகுதியாய் வைக்கப் பட்டுள்ளன.

அதேபோல் வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடலும், அவன் மகன் காலத்திய விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலும், அவன் பேரன்(?) காலத்திய உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடலும், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடலும் தொடர்ச்சியாக ஒருங்கே வைக்கப் பட்டுள்ளன.

(”என்ன இது? ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் வரகுணனுக்கு மகனா? இது என்ன புதுக் கதை?” என்று படிப்போரில் யாரோ கேட்பது எனக்குப் புரிகிறது. நமக்கு இதுவரை சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாற்றின் படி இரண்டாம் வரகுணனுக்குப் பிள்ளைப் பேறே கிடையாது. அவனுக்குப் பின் அவன் தம்பி வீர நாராயணனும், தம்பி மகன் இராசசிம்மனும் தான் அடுத்தடுத்துப் பட்டமேறுகிறார் என்று சொல்லிவந்தார். அப்படித்தான் தமிழக வரலாறு பதிவு செய்கிறது. இங்கோ நம்பியார் திருவிளையாடற் புராணம் வரகுணன் மைந்தன் பற்றித் தெளிவாக வெளிப்படையாகப்  பேசுகிறது.

அப்படியெனில் நம்பியார் திருவிளையாடலில் வரும் வரகுணனும் ஒன்பதாம் நூற்றாண்டில் வரும் இரண்டாம் வரகுணனும் வெவ்வேறு ஆட்கள் என்று தெளிவுற முடியாதா? முன்முடிவின்றி ஆய்வு செய்யும் சிந்தனையாளருக்கு இது விளங்கவேண்டுமே?. அதன் விளைவால் 9-ஆம் நூற்றாண்டை ஒதுக்கித் தள்ளி மாணிக்கவாசகர் கதையில் வரும் வரகுணனை அடையாளங்காண வேறு நூற்றாண்டு தேடவேண்டாமா? ஆனால், இதுபோலும் பட்டகைகளை (facts) எல்லாம் தம்கவனத்திலிருந்து ஒதுக்கி “ஒன்பதாம் நூற்றாண்டை” எப்படியாவது நிறுவ விளையும் ஆய்வாளர் மகப்பேற்றுச் சிக்கலை எப்படிக் கண்டுகொள்வார்? இதைக் கீழே இன்னொரு முறை பார்ப்போம்.)

பின்வந்த 4 திருவிளையாடலையும் ஒருங்கு சொல்வதில் மேலும் ஒரு பொருளுண்டு. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடற் கதையில் சோழர் படையெடுப்பு நடக்கும். வலிகுறைந்த வரகுண பாண்டியனுக்கு இறைவனே உதவிசெய்வார்.

வரகுணன் என்ற பெயர் 8-9 ஆம் நூற்றாண்டுகளிற்றான் எழும் என்பவர்க்கு ஓர் இடைவிலகல். வரம் என்பது பரம் என்பதன் எழுத்துப் போலி. அதன்படி வரகுணன் என்றாலும் பரகுணன் என்றாலும் ஒரே பொருள் தான். ”மேலான குணங் கொண்டவன்” வரகுணன் ஆவான். இப்பெயரைத் தலை கீழாக்கிக் குணபரன் - குணங்களில் மேலானவன் - என்பது மகேந்திர பல்லவனுக்குள்ள ஒரு பெயர். அதாவது இப்பெயர் 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னும் தமிழில் இயற்கையாய் எழுந்திருக்கும் ஒரு பெயர்தான். அப்படி முன்னால் மகேந்திரவர்மனுக்கு இருக்குமானால், அவனுக்கு முந்தைய வேறொரு பாண்டியனுக்கு அப்பெயர் இருந்திருக்கக் கூடாதா?  8,9 ஆம் நூற்றாண்டில் மட்டும் தான் எழ வேண்டுமா?

வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடற் கதைக்கு அடுத்த கதையில் சோழருக்குக் கருநாடக அரசனொருவன் உதவிசெய்வது நடக்கும். இக்கதையில் இறைவனின் உதவி வரகுண பாண்டியனின் மைந்தனுக்குப் போகிறது. (பெயர் குறிக்கப்படாத இம் மைந்தனிடத்தில்அவன் நடு அகவையில் மாணிக்கவாசகர் ஒருவேளை முதலமைச்சராய் இருந்தாரோ என நாம் சுற்றிவளைத்து ஊகிக்கலாம். பின்னால் பார்ப்போம். கருநாடக அரசனோடு சேர்ந்துவந்த சோழன் படையெடுப்பு - விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல் - அதற்கு அப்புறம் ஏற்பட்டிருக்கலாம்.)

மூன்றாம் கதையில் வரகுணனின் பேரன்(?) காலத்திற் பாண்டிநாட்டிற் பசியும் பட்டினியும் பெருகியுள்ளது. ஒருவேளை தகப்பன் காலத்துப் போருக்குப் பின் எழுந்த பஞ்சமோ, வானிலை மாறியதால் ஏற்பட்ட பஞ்சமோ, என்னவோ? பாண்டிநாட்டிற் பஞ்சம் வரலாற்றிற் பலமுறை நடந்துள்ளது. சிலம்புக் காலத்திலேயே பாண்டிநாட்டிற் பஞ்சம் தான். ”பாண்டிநாட்டிற் எப்பொழுதெலாம் பஞ்சம் ஏற்பட்டது” என்பதே எதிர்காலத்தில் யாரேனும் செய்யவேண்டிய ஆய்வுதான். அதேபோல சிலம்பின் மதுரைக் காண்ட நடவடிக்கையைப் பஞ்சகால நீட்சியாய் யாரேனும் பார்த்தாரோ? [சிலம்பின் காலம் என்ற என் கட்டுரையில் அதைத் தொட்டுப் பார்த்துள்ளேன்.]

மூன்றாம் கதையில் எல்லோருக்கும் சோறுபோட்டு உதவிசெய்யும் வேளாளன் ஒருவனின் செல்வமெல்லாம் கொடையாலேயே கரைந்து போகிறது. அள்ள அள்ளக் குறையாத கோட்டை ஒன்று வேளாளனுக்கு இறைவனாற் தரப்படுகிறது. (இதைத் தான் ”உலவாத” ஒரே சொல்லில் அந்தக் காலத்திற் சொல்லியிருக்கிறார்கள். நாம் என்னவென்றால் “non-diminishing" என்ற கணிதச் சொல்லுக்குத் தமிழில் இணை தேடிக் கொண்டிருக்கிறோம். உலவாக் கோட்டை = non-deminishing koottai)

நாலாம் கதையில் இடைவிடாப் பஞ்சத்தைத் தொடர்ந்து பாண்டிய நாடு கருநாடக அரசனுக்குக் கீழ் முற்றிலும் வந்துவிடுகிறது. சமண மதம் அரச மதம் ஆகிறது. இக் கருநாடக அரசன் பெரும்பாலும் களப்பாள அரசனாய் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். (இவர் சளுக்கிய அரசரில்லை; அவருக்கும் முற்பட்டவர் என்றே நாம் ஊகிக்கிறோம்.) எத்தனை காலம் கருநாடக அரசர் பாண்டிநாட்டை ஆண்டார் என்பது நமக்குத் தெரியாது.

[களப்பாளர் கதையை இங்கு நாம் பேசுவது நம்மை வேறுபக்கம் கொண்டு போகும். அதை வேறுவாய்ப்பிற் செய்ய முற்படுவேன்.] கருநாட அரசனுக்குப் பின் அரசாளத் தகுதியுடையோர் இல்லாது மூர்த்தியார் பட்டத்து யானையால் இடைக்கால அரசராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். மூர்த்தியார் பட்டத்துக்கு வந்தது கலியரசனுக்குப் பின் எத்தனையாம் ஆண்டு என்பதும் நமக்குத் தெரியாது.

மொத்தத்தில் மேற்சொன்ன 4 கதைகளையும் சேர்த்து ஒரு தொகுதியாய் பார்க்கும் போது வரலாற்றுப் போக்கு தென்படுகிறது. பார்த்தீர்களா? பேச்சு வாக்கில் நிறையச் செய்திகளைத் தொகுக்க வேண்டும் என்ற கதியில் வேறெங்கோ போய்விட்டோம். மாணிக்க வாசகரின் பெயர், குடும்பப் பெயர் போன்றவற்றில் இனித் தொடங்குவோம்.

11 ஆம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருப்பண்ணியர் விருத்தம் 58 ஆம் பாடலால் சிவபாத்தியன் என்ற இயற்பெயர் வாதவூரருக்கு இருந்திருக்குமோ என்று ஒரு சிலர் ஐயுறுவர். அப்பாடல் கீழ்வருமாறு:

வருவாச கத்தினில் முற்றுணர்ந் தோனைவளர் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

சிவபாத்தியன் என்ற பெயரை, இறைவனால் அறிவோதப் பெற்றதால் (“உபதேசிக்கப் பட்டதால்”) அவன் திருவடிகளுக்கு ஆழ்ந்த, பாத்தியப்பட்ட காரணப் பெயராகவும் நாம் கொள்ள முடியும். நானறிந்தவரை மாணிக்க வாசகரின் இயற்பெயர் பற்றிய முடிவிற்கு வருவதற்குக் கிடைத்திருக்கும் பட்டகைகள் பற்றாது.

நம்பியார் திருவிளையாடலில் வாதவூரரென்ற பெயரே மாணிக்க வாசகருக்குப் பெரிதுஞ் சொல்லப் படுகிறது. அவரது இயற்பெயர் சொல்லப் பட வில்லை. மானமங்கலம்/மானபுரம் என்பவை நம்பி திருவிளையாடலின் படி குடும்பத்தாருக்கான பட்டப்பெயராகவே பயன்பட்டுள்ளன. அதாவது அவர் முன்னோர் ஊர் மானபுரம் எனும் மானமங்கலமாகும். அவ்வூரிலிருந்து மதுரைக்கருகில் 12 கி.மீ. தொலைவு திருவாதவூருக்கு ஏதோவொரு காலத்திற் அவர்கள் குடிபெயர்ந்திருக்கிறார். மான(வீரன்) மதுரையை அறிந்தவர் மானமங்கலம்/மானபுரம் தொடர்போ என்று ஐயுறுவர்.

மாணிக்க வாசகரை ”வடுகப்பிள்ளை”யாய்க் காட்டுதற்கு அரும்பாடுபட்டுக் கல்வெட்டுகளுள் தேடுவோர் இம் மானமங்கலத்தையும் தேடினால் நன்றாக இருக்கும். [இராமநாதபுரம் மாவட்டக்காரரும் இதைத் தேடலாம்.] திருவாசகம் எங்கணும் தென்பாண்டி நாட்டையே விடாது (ஆழ்ந்து) குறிக்கும் ஆளுடை அடிகள் ஒரு வடுகப் பிள்ளையாக இருப்பாரா என்பதில் நமக்குப் பெரும் ஐயமுண்டு. பொதுவாகத் தென்பாண்டிக்காரர் அளவிற்கு மீறித் தம் ஊரோடு ஒட்டியவர். அதிலும் ஊர்ப்பெருமை பேசுகிறவர். சரியான பாண்டி நாட்டுக் காரரான மாணிக்கவாசகரும் அப்படியே தெரிகிறார். வடுகர் பாண்டிகளாய் மாறி வடுக அடையாளந் தொலைத்தது மிக மிக அரிதாய்க் கேட்ட கதை.

மாணிக்கவாசகர் மொத்தம் 16 ஆண்டுகள் கல்வி கற்றதாக நம்பியார் திருவிளையாடல் சொல்லுகிறது. ஐந்தாறு அகவையில் கற்கத் தொடங்கி யிருந்தால் அவர் கோத்தொழிலுக்கு (bureacracy) வரும்பொழுது அகவை 21/22 ஆகியிருக்கும். 32 ஆம் அகவையில் இறைவனோடு சோதியில் ஒன்றிக் கலந்தார் என ஒரு தனிப்பாட்டு சொல்லும்.

அப்பருக்குஎண் பத்தொன்று அருள்வாத வூரருக்கு
செப்பிய நாலெட்டிற் தெய்வீகம் - இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்கு
அந்தம் பதினாறு அறி.

வாதவூரருக்கு நடந்த அருளிச்செயல் 31 ஆம் அகவையில் நடந்ததெனில் கிட்டத்தட்ட 9/10 ஆண்டுகள் அவர் அரசகருமத்தில் ஆழ்ந்திருந்தார் என்பது பொருள். மாணிக்கவாசகர் முதலமைச்சர் பொறுப்பிற்கு வர இத்தனை ஆண்டுகள் ஆயின போலும். நம்பியார் திருவிளையாடலை ஆழ்ந்துபடிக்கும் போது அவர் வேலைபார்த்த பாண்டிய அரசன் அவரினும் மூத்தவன் (மிக மூத்தவனாகவும் தெரியவில்லை) என்ற புரிதலே நமக்குக் கிடைக்கிறது.

பரஞ்சோதிமுனிவரின் திருவிளையாடற் புராணத்தின் படி மாணிக்கவாசகர் அரசகருமம் செய்தது அரிமர்த்தன பாண்டியனிடத்திலாகும். அப்பெயரை நம்பியார் திருவிளையாடல் சொல்வதேயில்லை. அரிமர்த்தனன் என்ற பெயரைக் கேட்டாலே அது அரிகேசரி மாறவர்மன், அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆகியோர் பெயரை நினைவு படுத்தும். கேசரி என்பது சடையன் என்ற பொருளில் பாண்டியர் குடிப்பெயரின் வடமொழி ஆக்கம். அரிகேசரி என்பது பல்லவரை வெற்றி கொண்ட பாண்டியரெனப் பொருள்கொள்ளும். (பல்லவர்க்கு அரி = சிங்கம் என்பது கொடி அடையாளம்) அரிகேசரி பராங்குச மாறவர்மனுக்கு முன் பல்லவரைத் தொலைத்தவர் யாருமில்லை.

பல்லவர் என்ற குறிப்பு திருவாசகம் முழுதும் கிடையாது. [இத்தனைக்கும் குயிற்பத்தில்,

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய்

என்று 7ஆம் பாடலில் சீர்ப்புயங்கன் மூவேந்தராகத் தோற்றமுற்று வரக் கூவுவதைப் பற்றிப் பேசுவார், ஆனால் எந்தப் பல்லவனையும் பற்றிப் பேச மாட்டார். இது நமக்கு விந்தையாகத் தெரியவில்லையா? பல்லவர் காலத்திற்கு அப்புறம் மாணிக்கவாசகர் தோன்றியிருந்தால், ”ஒரு பல்லவனையும் பேசாத் தோரணை ஏன்?” என நம் மனத்துள் கேள்வி எழாதோ? பல்லவர் 300, 400 ஆண்டுகள் நம்மை ஆண்டிருக்கின்றனரே?

பல்லவனை அப்பர் பேசியுள்ளார், திருமங்கையாழ்வார் பேசியுள்ளார். மாணிக்க வாசகர் பேசவில்லையே? (உடனே குதருக்கமாக சம்பந்தர் பேசினாரா? சுந்தரர் பேசினாரா? - என்று கேள்வியெழுப்புவரும் உள்ளார்.) அப்படிப் பல்லவர் பற்றிப் பேசாத காரணத்தால், மாணிக்கவாசகர் பல்லவர் காலத்திற்கு முந்தியவராகலாம் என்றபொறி தட்டாதோ? இத்தனைக்கும் கச்சி ஏகம்பத்து இறைவன்பற்றித் திருவாசகத்திற் பேசுகிறாரே? ஆனால் கச்சிப்பேட்டைத் தலைநகராய்க் கொண்டிருந்த பல்லவர்குடியைப் பேச மாட்டாராமா?. இச்சிந்தனை ஏன் 9 ஆம் நூற்றாண்டு என அறுதி யிடுவோருக்குத் தோன்றாதுள்ளது?

என்னைப் பொறுத்தவரை, குயிற்பத்து 7 ஆம் பாடல் ஒன்றே ”மாணிக்க வாசகர் பல்லவருக்கு முந்தியவர்” என்று ஆணித்தரமாய்ச் சொல்லுவதில் ”இன்மைவழி” அகச்சான்றாய் அமையும். அரிகேசரியை நினைவுபடுத்தும் வகையில் அரிமர்த்தனன். = பல்லவரைத் தொலைத்தவன் என்ற பொருளில் பெயரிடுவது பாட்டனைப் பேரன் திறங்களைக் கொண்டு பெயரிடுவதற்குச் சமம். அரிமர்த்தனன் என்றபெயரை நாம் முற்றிலும் ஒதுக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் வரும் ஞானோபதேசம் செய்த திருவிளையாடலின் இரண்டாம் பாடலிலேயே மாணிக்கவாசகர் யாரிடம் அமைச்சராய் இருந்தாரோ அந்தப்பாண்டியன் பெயரை நல்ல தமிழில் ”தானைவேல் வாகை மாறன்” என்பார்.

சந்திர குலத்தில் நீடோர் தானைவேல் வாகை மாறன்
அந்தமில் முன்னோர் போல அவனியை அடைவிற் காத்துச்
சுந்தரற்கு அன்பு பூண்டு துலங்குமா மதுரை தன்னுள்
மந்திரத் தலைவர் சூழ வளம்பட வாழு நாளில்

என்று அப்பாடல் போகும். முன்சொன்ன, மாணிக்கவாசகர் பற்றிய  4 திருவிளையாடலிலும் மாறனென்ற பட்டப் பெயரே பெரிதும் ஆளப்படும். செழியன் என்றபெயர் ஓரோவழி உரைக்கப் படும். அக்காலப் பாண்டியர் பெயர் வேலோடு சேர்ந்துவருவது நம்மைச் சற்று ஓர்ந்துபார்க்க வைக்கிறது. [கடுங்கோன் மகனான மாறவர்மன் அவனிசூளாமணியைக் கதிர்வேல் - தென்னன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் சுட்டிக் காட்டுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.]

வேல் என்ற பெயரைக் கொண்ட இன்னொரு பாண்டியனை இங்கு சிலம்பின் வழி நினைவுகொள்ளலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அப்புறம் வந்த வெற்றிவேற் செழியன். இது போன்ற பெயர்கள் சமயக் காலத்திற்கு, தேவார காலத்திற்கு முற்பட்டு இருந்துள்ளன. வேல் சேர்ந்த இயற்பெயர் இருந்தது உண்மையானால் மாணிக்க வாசகரை ஒன்பதாம் நூற்றாண்டிற் பொருந்த நினைப்பவர் பெரிதும் தள்ளிப் போனாரென்றே எண்ணவேண்டியுள்ளது. (கொற்கையில் இளவரசுப் பட்டம் கட்டிக்கொள்ளும் பாண்டியர் திருச்செந்தூர் செந்தில்வேலிடம் பற்றுக்கொண்டு வேல் என்ற பெயரை தம் இயற்பெயரோடு சேர்த்துக் கொண்டனரோ என்ற ஊகம் இயற்கையாய் எழுகிறது. ”வேல்” பெயரிடுவது தென்பாண்டித் தமிழரிடை இன்றுமுள்ள பழக்கம். பாண்டியர் இயற்பெயரை அலசிப்பார்க்க வேண்டும்.)

திருவாதவூர் என்பது சங்ககாலக் கபிலர் பிறந்தவூர். அங்கிருக்கும் இறைவன் பெயர் வேதநாயகன். (வேத புரீசர் என்றும் இப்பொழுது சொல்லப்படுகிறார்.) மாணிக்கவாசகர் தன் பாடல்களில் பலவிடங்களில் வேதநாயகனை நினைவு கொள்கிறார்.

கதைக்குள் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, September 27, 2011

மாணிக்க வாசகர் காலம் - 2

அருளிச் செயல்களும், மாணிக்க வாசகரும்:

மாணிக்க வாசகர் கால ஆய்விற்குள் போகுமுன், நமக்குத் தெரிந்த மாணிக்க வாசகர் வரலாற்றை ஓரோவழி நினைவுகொள்வது நல்லது. தெரியாதவர் ”மாணிக்கவாசகர் வரலாறும், காலமும்” என்ற மறைமலை அடிகளார் பொத்தகத்தின் முற்பகுதியை ஒருமுறை படித்துக் கொள்க. மறைமலை அடிகள் சொன்னதை அப்படியே இங்கு விவரிக்காது, திருவாசகத்தில் இருந்தே சில அகக் குறிப்புகளையும், 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணக் கூற்றுக்களையும், ஓரளவு தொட்டுக்காட்ட முற்படுகிறேன்.

தேவார மூவர் எப்படி இறைவனாற் தடுத்தாட் கொள்ளப் பட்டாரோ அதே போல் மாணிக்க வாசகரும் இறைவனாற் தடுத்தாட் கொள்ளப் பட்டவரே. மாணிக்கவாசகர் பொருட்டு 4 திருவிளையாடல்கள் நடந்ததாய் திருவால வாயுடையார் புராணம் சொல்லும். இதற்குமுந்திய கல்லாடத்திலும் இவை உணர்த்தப்பெறும். மாணிக்கவாசகர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுகிறவர் கல்லாடக்காலத்தையும் ஐயுற வைத்து நம்மை மேற்கொண்டு பேசவிடாது அடைக்கப் பார்ப்பர். நம் கருத்துப் படி கல்லாடமும் 9 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியதானாலும் இவருடைய அடைப்பின் காரணமாய் அச்சான்றுகளை இங்கு பயன்படுத்த இயலாதுள்ளது. நம்பியார் புராணப்படி, மாணிக்கவாசகருக்கென நடந்த திருவிளையாடல்கள் நான்காகும். அவை:

1. ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல்
2. நரி குதிரையான திருவிளையாடல்
3. குதிரை நரியான திருவிளையாடல்
4. மண் சுமந்த திருவிளையாடல்

ஆகும். இவை போக மாணிக்கவாசகர் காலத்தையொட்டி, வேறு இறையன்பருக்கு நடந்ததாய் இன்னுமிரு திருவிளையாடல்களை நம்பியார் புராணம் வழியாக அறிகிறோம். அவை:

5. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல்
6. விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல்

ஆகியவையாகும். அதே புராணத்தை மேலும் ஆயும்போது, ”இன்னுஞ்சில திருவிளையாடல்கள் (குறிப்பாக விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலை அடுத்துவரும்

7. உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல்,
8. மூர்த்தியாருக்கு அரசளித்த திருவிளையாடல்)

ஆகியவை மணிவாசகர் காலத்தைத் தொடர்ந்து அதற்கு அண்மையில் இருந்திருக்குமோ?” என்று நம்மை எண்ண வைக்கின்றன.

பொதுவாக, திருவிளையாடற் காலங்களுக்கு அண்ணிவரும் 12 ஆம் நூற்றாண்டுத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணமே நாம் பெரிதும் கவனிக்க வேண்டியதாய் இருப்பதும், இதற்கு 6 நூற்றாண்டுகள் கழித்தெழுந்த பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் பல இடங்களில் ஏரணத்தால் முரண்படுவதும், அதில் விரியும் கதை நிகழ்வுகள் இட்டுக் கட்டப் பட்டது போற் தோற்றமளிப்பதும் ஆய்வுப் புலம் மிகுந்த அறிஞர்களாற் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த ஆய்வு நெடுகிலும் நம்பியார் திருவிளையாடற் புராணத்தையே நாம் எடுகோளாய்க் கொள்ளுகிறோம். ஓரோ வழி மற்றவையும் துணை கொள்ளப் படுகின்றன.

மேலே கூறிய 8 திருவிளையாடல்களும், அவற்றோடு சேர்ந்தவைகளும் ”துயில் நேரத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லும் கட்டுக் கதைகள்” என்று தூக்கியெறிந்து மாற்றாடுவோரோடு நாம் இங்கு உரையாடவில்லை. இன்னுஞ் சொன்னால், இதுபோற் கதைகள் நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்குள் நாம் போக விரும்பவில்லை. ”இவை யாருக்கு நடந்தன?” என்று மட்டுமே அலச விழைகிறோம்.

பொதுவாகத் தடுத்தாட்கொள்ளப் பட்ட செயல்களை அருளிச் செயல்கள் என்று பெரியோர் அகலப்படுத்திச் சொல்வார். அருளிச் செயல்கள் என்பவை மாந்த முயற்சிக்கு மீறியதாய்த் தோற்றங் காட்டுபவை. ஒருவனோ, ஒருத்தியோ, தன்னியல்பால் முடியாதவொன்றை தானே நடத்தியோ, அல்லது தனக்கு நடந்திருந்தாலோ, அவை அருளிச் செயல்கள் எனப்படும்.

மீமாந்தச் செயல்கள் எல்லாமே அருளிச் செயல்களெனச் சொல்லமுடியாது. காட்டாக, 1965 இந்தியெதிர்ப்பின் போது அரசுக் காவலர் தொடர்ந்தடித்த பிரம்படியின் வலியை ஏற்றோடிய இக்கட்டுரை ஆசிரியன் நேரிய காலங்களிற் தன்னால் ஒரு சிறிதும் தாண்ட முடியாத ஆறடிச் சுவரைத் தான் பெற்ற அடியின் வலியால் நரம்புகள் தூண்டப்பெற்று தாண்டியதையும், தன் சிறுபிள்ளை வாழ்வில் தன்மீறிய நிலையில் ஐயனார்கோயில் தீமிதிக்குள் ஓடி வெளிவந்த செயல்களையும் நினைவு கொள்கிறான். அவற்றை அருளிச் செயல்களென யாராவது சொல்ல முடியுமோ? சொல்ல முடியாது. அவை மீமிசையுணர்வில் நரம்பு தூண்டப்பெற்று நடந்துமுடிந்த செயல்கள். அது போல் மீமிசைச் செயல்கள் உலகிற் பலருக்கும் நடந்திருக்கின்றன.

அருளிச் செயல்கள் என்பவை மந்திர, தந்திரங்களால், மாகை (magic) முயற்சிகளால் அல்லாது, அதேபொழுது தன்னைமீறிய மாந்த முயற்சியால் நடப்பவை; நேரிய மாந்த விளக்கத்தில் நிறுவ முடியாதவை. தொல்காப்பியம் இவற்றை மருட்கை மெய்ப்பாட்டின் அடியிற் சேர்க்கும். இக்காலத்தில் நம்பும் மதம், நம்பா மதமென இருவேறு நெறிகளில் மாந்தர் மெய்யியற் புரிதலைக் கொண்டுள்ளார். இவ்விரண்டில் எது சரி, எது சரியில்லை என்ற வாதம் நமக்கு முகன்மையில்லை. அருளிச் செயல்களுக்கான விளக்கங்களை நம்பும் மதம் நம்மைப் படைத்தவரிற் தேடுகிறது. நம்பாமதம் அறிவுபூருவமான மீமாந்தத் தூண்டுதலிற் தேடுகிறது இங்குநாம் இக்கேள்விக்குள் போக முற்படவே யில்லை. ”இத்தகை அருளிச் செயல்கள் தமக்கு நடந்ததாய்க் குறிப்பிட்ட இறையன்பர்கள் கூறுகிறாரா?” என்பதே நம் முன்னுள்ள கேள்வியாகும்.

தேவார மூவருக்கு நடந்த அருளிச் செயல்களைக் கேள்வி கேட்காது ஏற்றுக் கொள்ளும் ஆய்வாளர், ”அதே இறையுறுத்தலை மாணிக்க வாசகரும் தன் வாழ்விற் பெற்றிருக்கலாம்” என்றேற்காது வேண்டுமென்றே சொற்சிலம்பம் ஆடுவதும், மாணிக்கவாசகரின் தகையை மறுத்துக் கொண்டிருப்பதும் நமக்கு என்னவகை என்று புரியமாட்டாதிருக்கிறது. அவர் சிலம்பம் ஆடுவதைத் தடுத்து நிறுத்திப் புரியவைக்க ஒரு சில அகச்சான்றுகள் திருவாசகத்திலிருந்தும், நம்பியார் திருவிளையாடலிலிருந்தும் கீழே தரப்படுகின்றன.

திருவாசகப் பதிக ஒழுங்கு:

திருவாசகத்தின் 51 பகுதிகளும் அவை எழுந்த வரலாற்றின் வழி இதுவரை ஒழுங்கு செய்யப் பட்டதாய் நமக்குத் தெரியவில்லை. ”இன்றைக்கு நாம் காணும் ஒழுங்கு எதன் அடிப்படையிற் செய்யப்பட்டது? யார் செய்தார்?” என்ற விவரங்களும் நம்மிடம் இல்லை. ”தேவாரத்திற்கு ஒரு நம்பியாண்டார் நம்பி இருந்ததுபோல் இதையும் யாரோவொருவர் ஒழுங்கு செய்தாரா?” என்று தெரியவில்லை.

மாணிக்க வாசகர் புத்தத் துறவி ஒருவருடன் வாதிட்டு வென்ற சமய நிகழ்வுக்குச் சின்னாட்கள் அப்புறம் யாரோவொரு முதியவராய் இறைவனே வந்து மாணிக்க வாசகரை வேண்டி திருவாசகப் பாடல்களை மீண்டுந் திருப்பிச்சொல்ல வைத்து ஓலையில் எழுதிக் கொண்டு போனாரென்றும். அதுபொழுது தான், “பாவைபாடிய நும் வாயால் ஒரு கோவை பாடுக” என்று கேட்டு, மாணிக்க வாசகரும் அவ்வண்ணமே பாட, திருக்கோவையாரையும் ஒரு சுவடியில் எழுதிக் கொண்டதாகவும், மறுநாள் காலையில் நடவரசன் திரு முன்னர் சிற்றம்பலக் கதவின் படிநிலையில் 2 ஓலைச்சுவடிகள் இருந்தன என்றும், காலையிற் சிற்றம்பலம் திறந்த தீக்கிதர் சுவடிகளைக் கண்டு வியந்து ஊராருக்குச் சொல்லிப் படிக்க முற்பட்ட போது “நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க” என்று சிவபுராணம் தொடங்கி திருவாசகம் முழுக்க ஓர் ஓலைச்சுவடியிலும், ”திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக் ..........கொடிபோன்று ஒளிர்கின்றதே” என்று தொடங்கி திருக்கோவையார் இன்னோர் ஓலைச்சுவடியிலும் இருந்ததாகவும் இறுதியில், “இது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து” என முடித்திருந்ததாகவும் ஒரு தொன்மம் உண்டு. ”மாந்தன் சொல்ல இறைவன் கைப்பட எழுதிய நூல்கள் திருவாசகமும், திருக்கோவையாரும்” என்று சிவநெறியிற் பெருமையுடன் சொல்வார்.

இத்தொன்மத்தை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துப் பார்த்தால், இன்றைக்கு நமக்குக் கிடைத்த திருவாசக ஒழுங்கு, காலவரிசைப் படி இல்லை என்பது விளங்கும். தவிர, இப்போது நமக்குக் கிடைத்துள்ள ஒரு சில பதிகங்கள் (குறிப்பாய்த் திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், திருக்கழுக்குன்றப் பதிகம், திருப்புலம்பல், எண்ணப் பதிகம், திருப்படையெழுச்சி, பண்டாய நான்மறை, திருப்படையாட்சி, ஆனந்த மாலை, அச்சோப் பதிகம் ஆகியவை) குறைப் பதிகங்களாய் இருப்பதையும் காணமுடிகிறது. திருப்புலம்பல் என்ற பதிகத்தின் முதற்பாட்டு திருவாரூரனையும், இரண்டாம் பாட்டு பெருந் துறையானையும், மூன்றாம் பாட்டு குற்றாலத்தானையும் குறிக்கிறது. எல்லாத் தொகுதிகளும் பத்தின் மடங்குகளாய் இருக்கையில், திருவெண்பா மட்டும் பத்தின் மடங்காயின்றிப் 11 பாடலாய் இருப்பதும் சற்று நெருடலாய் அது இருவேறு பதிகங்களின் கலவையோ என்று எண்ண வைக்கிறது. திரு வாசகத்தின் கடைசியில்வரும் ஒவ்வொரு பதிகத்திலும் ஏதோவோர் ஒழுங்குக் குறைபாடு இருப்பது, ”இத்தனையாண்டுச் சுவடிக்காப்பில் திருவாசகச் சுவடிகளும் செல்லரிக்கப் பட்டனவோ?” என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது.

முடிவில் ”இதுபோற் குலைந்து போன ஏடுகளை யாரோவொருவர் தனக்குத் தோன்றியபடி சேர்த்ததால், இது இறைவன் எழுதிச் சேர்த்த ஒழுங்கல்ல” என்றே நாம் முடிவுசெய்கிறோம். இருந்தாலும் இப்பதிகங்களை ஒரு கால ஒழுங்கிற்குள் கொண்டுவர முடியாதா என்ற ஏக்கம் நமக்குள் வரத் தான் செய்கிறது. அப்படி ஓர் ஒழுங்கில் கொண்டு வர முயலும் போது மாணிக்க வாசகரின் மனவளர்ச்சி பற்றிய புரிதலும் நமக்குக் கூடுகிறது

அடுத்து ஒவ்வொரு திருவிளையாடலையும், அதனுள் வரும் கதைப் போக்கையும், வரலாற்றுச் செய்திகளையும், திருவாசகப் பதிக ஒழுங்கையும், நம் உரையாடல்களையும் தொடருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, September 26, 2011

மாணிக்க வாசகர் காலம் -1

வரலாற்று நிகழ்வுகளின் அக, புற ஒழுங்குகள்:

பொதுவாகக் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும், உறவுக் (relative) கால நிலைகளே சொல்லப்பெறும்; அதாவது ”இந்த அரசன் பட்டம் ஏறியதிலிருந்து இத்தனையாவது ஆண்டு” என்றே காலங் குறிக்கப்படும். அவற்றிலும் பலவற்றில், அரசனின் பட்டப் பெயர், அல்லது குலப்பெயர் மட்டுமே இருக்கும், இயற்பெயர் வாராது. கலி (பொ.உ..மு.3101), விக்ரம (பொ.உ..மு.57), சக (பொ.உ 78) போன்ற முற்றாண்டுகள் (absolute years) அரிதாய் வரும். குறிப்பிட்ட ஓராண்டை அடிப்படையாக்கி, அதிலிருந்து நிகழ்வுகளைக் கணிக்கும் கணக்கு முறை தமிழர் மரபாய் இருந்ததில்லை.

[அது என்ன பொ.உ., பொ.உ.மு. என்று தடுமாறுகிறீரோ? வேறொன்றுமில்லை. காலச் சுருக்கங்களைக் கி.மு., கி.பி. என எத்தனை ஆண்டுகள் சொல்வது? இப்போதெல்லாம் ஏதொன்றையும் மதஞ்சாராது குறிக்கப் பலரும் விழைகிறாரே? தமிழிலும் பொது உகம் = common era = CE = பொ.உ; பொது உகத்திற்கு முன் = before common era = BCE = பொ.உ.மு. என்றுநாம் சொல்லிப் பார்க்கலாமே? என்ன சொல்கிறீர்? கி.மு., கி.பி. என்றே எழுதியவருக்குச் சில நாட்கள் கடினமாயிருக்கும். பழக்கம் கூடும்போது, இது ஒழுங்காகி விடும்.]

பொதுவாக உறவுக் காலநிலை கொண்ட கல்வெட்டில், உள்ளடக்கம், எழுத்தமைதி, பிற தொடர்புகளைக் கணக்கிட்டு, இன்னொரு கல்வெட்டோடு தொடர்புறுத்தி, இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக்கிக் காலவரிசைப் படுத்துவர். இதேபோல இலக்கியத்தில் இருந்து கல்வெட்டு, அல்லது கல்வெட்டிலிருந்து இலக்கியம், என்றும் தொடர்புறுத்திக் காலவரிசைப் படுத்துவதும் உண்டு. இக் காலக்கணிப்பில், உள்ளே பொருந்திநிற்கும் ஏரணம் (logic), ஒன்றிற்கொன்று ஒத்திசைவு (consistency) ஆகியவை முகன்மையாகும்.

தமிழாவணங்களை வரிசையாக்கி, உள்ளடக்கம், எழுத்தமைதி போன்ற வற்றை வேறெங்கிலும் கிடைத்த, வெளியாவணங்களோடு ஒப்பிட்டு, அவற்றிற்கு அறுதி முற்றாண்டு (பொ.உ./பொ.உ..மு.) கணித்திருந்தால், அதே ஆண்டுகளை நம் ஆவணத்துக்கும் பொருத்துவர். இப்படியாக, நம் காலக் கணிப்பு பலராலும் அறுதியாக்கப் பட்ட முற்றைப் புள்ளிகளால் (absolute markers) ஒழுங்கு செய்யப்படும்.

இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. முற்றைப்புள்ளிகளும், கால ஒழுங்கும் ஒன்றிற்கொன்று முரணானவை. இவற்றில், ஒன்றை நெகிழ்த்தி, மற்றொன்றை அசைப்போம். இம்முரணியக்கச் செயற்பாட்டில் (dialectical movement), எடுகோள் (reference) முற்றாண்டுகளும் கூடச் சிலபோது அசைக்கப் படலாம். இதனால் நாம் ஒழுங்குசெய்த வரலாற்று நிகழ்வரிசை, புதிதாய்க் கிடைத்த ‘பழஞ் செய்திகளால்’, மாறலாம். இம்மீளாய்வில், குமுக வரலாற்று அகம், புறம் ஆகிய இரண்டுமே முகன்மையாய்க் கருதப்படும்.

இந்திய, தமிழக வரலாறுகளின் முற்றைப் புள்ளிகள்:

முன்சொன்ன முற்றைப் புள்ளிகளை இனிப் பட்டியலிடுவோம்.

1. வடநாட்டு முற்கால வரலாற்றின் முற்றைப் புள்ளிகள் :

அலெக்சாந்தர் படையெடுப்பு - பொ.உ..மு. 327
அசோகரின் பாறைக் கல்வெட்டு II, XIII இல் வரும் குறிப்பு - பொ.உ.மு.258 [Antiochus II Theos of West Asia (261-246 BCE), Ptolemy II Philadelphus of Egypt (285-247 BCE), Antigonus Gonatas of Macedonia (277-239 BCE), Magas of Cyrene in North Africa (282-258 BCE), Alexander of Epirus (272-255 BCE) or of Corinth (252-244 BCE). இதில் சோழன், பாண்டியன், சேரமான், அதியமான், தாம்பபன்னி அரசன் ஆகியோர் குறிக்கப் படுகிறார்]

2. தமிழக முற்கால வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்:

கலிங்க அரசன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு - பொ.உ.மு.172
சிங்கள அரசன் முதலாம் கயவாகு காமினியின் காலம் - பொ.உ. 171-193

3. பிற்காலப் பல்லவர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்

கங்க அரசன் மாதவ வர்மனின் பெனுகொண்டாச் செப்பேடு - பொ.உ.475
செழியன் சேந்தனின் இறப்புக் குறிக்கும் யுவாங் சுவாங் குறிப்பு - பொ.உ.640
சடைய வர்மன் முதலாம் பராந்தகனின் ஆனைமலைக் கல்வெட்டு = பொ.உ.770
இரண்டாம் வரகுணனின் ஐவர்மலைக் கல்வெட்டு = பொ.உ.870

4. பேரரசுச் சோழர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்

இவை பலவாறாகும். பொதுவாக இக்காலகட்டத்திற் குழப்பங்கள் குறைவு.

சமயக் காலமும் திருவாசகமும்:

மேலே கூறிய முற்றைப் புள்ளிகளுக்கு ஒத்து, வரலாற்றை ஆயும்போது, பல்லவருக்கு முந்திய தமிழக வரலாறு தொடர்பின்றிக் கூறுபட்டுக் கிடப்பதை உணரமுடியும். பெரும்பாலான ஆசிரியர் சங்க காலத்தை பொ.உ..மு.250 - பொ.உ.250 என்று அறவட்டாக வரையறுப்பர். (இன்னுஞ்சிலர் பொ.உ.மு.300 - பொ.உ 300 என்று அகலப்படுத்துவர்.) அண்மையில் சிலம்பின் காலம் பற்றிய கட்டுரையில், மகதத்தோடு போரிட்ட முதலாம் கரிகாலன் படையெடுப்பைப் பேசவேண்டி வந்தது. அச்செய்தியை நிறுவிச் சங்க காலத்தைப் பொ.உ..மு.500 இல் தொடங்கும் காலக் கணிப்பே சரியாக இருக்குமெனத் தெரிவித்திருந்தேன். சங்ககால இறுதியும் பொ.உ.175 க்கு அருகிலிருக்கக் கூடும்.

பொ.உ.175 இலிருந்து பொ.உ.300 வரை இடைவெளியைச் சங்கம் மருவிய காலம் என்று சொல்லலாம். இவ்விவரங்கள் நம்மிடம் குறைவாகவே உள்ளன. இதற்கப்புறமே களப்பிரர் (=களப்பாளர் = களந்தையரசர் = கலியரசர்) காலம் தொடங்குகிறது. ”களப்பிரர் யார்? பல்லவன் சிம்ம வர்மனும், பாண்டியன் கடுங்கோனும் பொ.உ.560-570 இல் களப்பிர அரசைத் தூக்கியெறிந்தது வரை எத்தகை அரசு இங்கிருந்தது? களப்பிரர், மைய அரசு கொண்டிருந்தாரா? அன்றி அவரின் பங்காளிகள் தனித்தனியே ஆண்டாரா? அரச விரிவு எப்படி நடந்தது? உட்கட்டுமானம், பண்பாடு, கலை, சமயங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றிற் களப்பிரரின் தாக்கமென்ன? - போன்ற வினாக்களுக்குத் துண்டுவிடைகளே நம்மிடம் உள்ளன. களப்பிரர் கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் அருகியிருப்பதால் அவர்காலம் இன்றும் ஆயப்படாத இடைவெளியாய்த் தோற்றுகிறது.

களப்பிரருக்குப் பின் சமயக்காலத்தில் பல்லவரும், பாண்டியரும் தமிழகத்திற் தலையெடுக்கிறார். சிவநெறியும், விண்ணவநெறியும் பெரு வேந்தரின் ஆதரவுபெற்றதால், முதலிற் புத்தமும், பின்னர் சமணமும், இங்கிருந்து தூக்கியெறியப் படுகின்றன. (சங்ககாலத்திற் சீரிய தோற்றங் காட்டும் அற்றுவிகம் (ஆசீவகம்) களப்பிரர் காலத்திற் கிட்டத்தட்ட அழிந்தது. அதன் எச்சம் பேரரசுச் சோழர் வரைக்கும் தொடர்ந்தது ஓரிரு துண்டுச் செய்திகளால் நமக்குத் தெரிகிறது.) சமயக்காலத்தின் பின், பேரரசுச் சோழர் (பொ.உ.848-1279) மிக்குயர்ந்த நிலையை அடைந்தனர்.

சமயக்காலத்திற் தேவார மூவரும், பன்னிரு ஆழ்வாரும் தமிழ்ச்சிந்தனையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தினர். தேவாரமும் நாலாயிரப் பனுவலும் பெருந் தெய்வங்களைப் பாடுவது மட்டுமின்றி, மெய்யியலையும் குறிக்கின்றன. இவற்றோடு சேர்த்தெண்ணப்படும் நூலாய்த் திருவாசகமும், முற்றிலும் மெய்யியலைக் குறிப்பதாய் திருமந்திரமும் உண்டு.

மாணிக்க வாசகர் காலம் - இருவேறு கணிப்புகள்:

”திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற சொலவத்தால் இன்று பெரிதும் உணரப்படும் மாணிக்க வாசகரைத் தேவார மூவரோடு சேர்த்து ஆளுடைப் பிள்ளை, ஆளுடை நாயனார், ஆளுடை நம்பி, ஆளுடை அடிகள் என்று தொகுத்து சமயக்குரவர் நால்வர் என்று சிவநெறியிற் சொல்லுவர். இப்படி உரைப்பது 12 ஆம் நூற்றாண்டிலேயே பழக்கம் எனினும், எப்பொழுது இது தொடங்கியது என்று தெரியவில்லை.

இராசராசச் சோழன் காலத்தில் தேவார மூவருக்கு ஏற்பட்ட மறுமலர்ச்சி மாணிக்க வாசகருக்கு ஏற்படவில்லை போலும். இற்றை வரலாற்றாய்வில் அப்பர் காலம் பொ.உ. 580-661 என்றும், சம்பந்தர் காலம் பொ.உ. 640-656 என்றும், சுந்தரர் காலம் பொ.உ. 694-712 என்றும் உறுதியாய்ச் சொல்ல முடிகிற போது, மாணிக்கவாசகர் காலத்தைப் பலருந் தெளிவின்றியே சொல்கிறார்.

மாணிக்கவாசகர் காலம் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முடிவு காணாச் சச்சரவாய் இருக்கிறது. அது இரண்டாம் வரகுணன் காலமா (குறிப்பாக விசயாலய, ஆதித்த சோழன் காலமா), அன்றிச் சங்கம் மருவிய காலமா என்று இரு வேறு அணியினர் இடைவிடாது வாதாடுகிறார். ஒரு சாரார் (இவருள் கல்வெட்டாளர், ஆதீனவழிச் சமய அறிஞர், படிம ஆய்வாளர் எனப் பலர் உண்டு.) 8-9 ஆம் நூற்றாண்டு என்றும், இன்னுஞ் சிலர் (மிகக் குறைந்தவர்) சங்க காலத்திற்குப் பிற்பட்டு, தேவார, களப்பிரர் காலங்களுக்கும் முற்பட்டு, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கம் மருவிய காலத்தில் மாணிக்க வாசகர் இருந்திருக்கலாம் என்பார். (இப்படிச் சொன்னவரில் மறைமலை அடிகள் குறிப்பிடத் தக்கவர்.)

மூவர் தேவாரம், நாலாயிரப் பனுவல் ஆகியவற்றினும் பார்க்க, திருவாசகம் அடிப்படையில் பெரிய நூலல்ல. மொத்தம் 51 பகுதிகள், 667 பாட்டுக்கள் (அவற்றிற் சில நெடும்பாட்டுகள், சில 10/11/20/100 கொண்ட தொகுதிகள்), 3348 அடிகள், 17043 சீர்கள் கொண்டது. இது தவிர 400 பாடல்கள் - 1600 அடிகள்- 8000 சீர்கள் அடங்கிய திருக்கோவையாரையும் மாணிக்கவாசகர் பாடியுள்ளார். திருவாசகம் போலன்றித் திருக்கோவையார் படித்துப் புரியக் கடுமையானது. (திருவாசகத்திற்குப் பிந்திய, 100 அகவற்பாக்கள் கொண்ட கல்லாடமும் இது போற் கடினமே.) இவையிரண்டும் அகப்பாடல் அடைப்பலகையில் (template) சமயப் பொருளை உள்வைத்துப் பாடப்பட்டவை.

சங்க இலக்கியமும் அன்றி, சமய இலக்கிய வகையும் அன்றி திருக் கோவையாரும், கல்லாடமும் தனித்தெழுந்தவை. பல திருக்கோவையார்த் துறைகள் சங்க இலக்கியத்திற் சொல்லப் படாதவை, பின்வந்த நூல்களிலும் இத்துறைகள் காணப்படவில்லை. விதப்பான சொல்லாட்சியும், துறை யாட்சியும், கட்டுக்கோப்பும் கொண்ட திருக்கோவையார் என்றவோர் இலக்கியக் கன்று (கன்று = வகை, genre) எழுந்தது ஒருவேளை இடைப் பெயர்வுக் காலமோ (transitional period) என்றும் ஆழ்ந்து படித்தோரை எண்ண வைக்கிறது. திருக்கோவையாரை 9 ஆம் நூற்றாண்டாய்க் கொள்ளுஞ் சிலர், இதற்கு மாறாகச் ”சம்பந்தர் காலத்து நெடுமாறனைத் தலைவனாய்க் கொண்ட, பாண்டிக்கோவையே திருக்கோவையாரின் போல்மம்” என்று ஆதாரமின்றி சொல்வர். இது இரு வேறு நூல்களையும் ஆழ்ந்து பயிலாது, போகிற போக்கிற் புகலுகின்ற கூற்றாகும்.

நின்றசீர் நெடுமாறன் பெற்ற வெற்றிகளைப் பிணைத்தெழுந்த பாண்டிக் கோவை ஓர் அகப்பாடற் கோவையாகும். பாண்டிக்கோவையிற் சமயத்தை நிலைநாட்டுங் கருத்துக்கள் கிடையா. [பாண்டிக்கோவை போல அமைப்புக் கொண்டவை அம்பிகாபதிக் கோவை, தஞ்சைவாணன் கோவை ஆகியவை யாகும்.] திருக்கோவையாரோ, தில்லைச் சிற்றம்பலவனையே பாட்டுடைத் தலைவனாய்க் கொண்டு, அவன் புகழ்விரிக்கும் அகப்பொருள் நூலாய் அமையும். பாண்டிக்கோவையையும், திருக்கோவையாரையும் ஒருசேரப் படித்தவர் அவற்றின் வேறுபாடுகளைத் தெள்ளிதின் உணருவர்.

திருக்கோவையாரில் வரும் துறைகள் பாண்டிக் கோவையிற் கிடையாது. இவ்விரு கோவையுள் எது முந்தியது, எது பிந்தியது என்ற கருத்தாடலை நூல்களுக்கு வெளியிருந்து சொல்ல முடியுமே, தவிர நூல்களுக்கு உள்ளிருந்து சொல்ல முடியாது. அப்படி உரைப்பது ஒருவகைத் தன்மயக் கூற்றாகவே (subjective statement) இருக்கும்.

இனி அடுத்தடுத்த பகுதிகளில் மாணிக்கவாசகர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டாய் நிறுவும் கணிப்புக்களில் முகன்மையானவற்றை அலசுவோம்.

முதலில்

மன்னவன் தெம்முனை மேற்செல்லும் ஆயினும் மால் அரி (ஏறு)
அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணனாம்
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றைத் தேவர்க்கு எல்லாம்
முன்னவன் மூவல் அன்னாளும் மற்றோர் தெய்வம் முன்னலளே

என்று வரும் திருக்கோவையார் 306 ஆம் பாடலையும்,

புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும்
மயல் ஓங்கு இருங் களி யானை வரகுணன் வெற்பின் வைத்த
கயல் ஓங்கு இருஞ்சிலை கொண்டு மன் கோபமும் காட்டிவரும்
செயல் ஓங்கு எயில் எரி செய்தபின் இன்றோர் திருமுகமே

என்று வரும் திருக்கோவையார் 327 ஆம் பாடலையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் வரும் வரகுணன் பெயரைப் பிடித்துத் தொங்கி, 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தகக் கோச்சடையனான வரகுணனோடோ, அன்றி அவன் பேரனான 9 ஆம் நூற்றாண்டு (பொ.உ.862) வரகுணனோடோ [இவனும் ஒரு சடைய வர்மனே, மாற வர்மன் அல்லன். இவன் தந்தை சீமாற சீவல்லபனே ஒரு மாற வர்மன்.] ஒரு சிலர் பொருத்திச் சொல்வார்.

இப்படிச் சொல்லுதற்கு எந்த வரலாற்றாதாரமும் கிடையாது. ஆனாலும் பலர் சொல்வார். வரகுணன் என்ற பெயர் மாணிக்க வாசகர் கால ஆய்வில் முகன்மையானது தான். ஆனால் எக்காலத்து வரகுணன் என்பதில் தான் வேறுபாடு. ஒன்பதாம் நூற்றாண்டென்று கூறுவோர் கருத்தாடல்களை முழுதும் படித்தாலும் அவை வெறும் கருதுகோள்களாகவே தெரிகின்றன. இதற்கு மாறாய்ச் சூளுரைப்பவரும் தம் கருத்தை அறுதியிட்டு எடுத்து வைத்ததாய்த் தெரியவில்லை. மொத்தத்தில் இப்பொருந்தாக் கூற்று, மூலநூல்கள் அன்றி, வழிநூல்களைப் படித்து தமிழாய்வுகளுக்குள் தாம்தூம் என்று குதிக்க விழையும் ஒரு சிலரால், அறிஞருலகில் சுற்றி வந்துகொண்டே யுள்ளது. பின்வரும் பத்திகளில் இக்கூற்றை விரிவாய் அலசுவோம்.

அதே போல ”தில்லையம்பல வாயிலிலே மாயவன் வரங்கிடக்கிறான்” என்ற பொருள் படும்படியான

புரங்கடந்தான் அடிகாண்பான் புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கிடெந்தாய் என்றிரப்பத் தன் ஈரடிக்கென் இரண்டு
கரங்கள்தந்தான் ஒன்றுகாட்டிட மற்றாங்கதும் காட்டிடென்று
வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம் மாயவனே

என்னும் திருக்கோவையார் 86 ஆம் பாடலையும் பிடித்துக்கொண்டு, 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருமங்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்த நந்தி வர்மப் பல்லவன் திருப்பணியோடு தவறாகப் பொருத்தி, தில்லைத் திருச் சித்திரகூடம் உருவானதே 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிற்றான் என்று கொண்டு அதை மாணிக்கவாசகர் காலமாய் பொருந்தக் கூறும் கூற்றுக்களையும் (அவற்றை மிகப் பெரியவர்கள் சொல்லியிருந்தாலும்) விரிவாகக் கீழே பார்ப்போம்.

இன்னுஞ் சிலர் ”தில்லைக் கூத்தனை மாணிக்கக் கூத்தன் என்று மாணிக்கவாசகர் சொல்கிறார். தில்லை நடவரசன் என்ற கருத்தீடு பேரரசுச் சோழர் காலத்தது; பல்லவர் காலத்திலும், அதற்கு முந்தியும் இது கிடையாது; நடவரசன் வேறு, நடேசன் வேறு” என்று எங்குமிலாப் புத்தாராய்ச்சி செய்து படிமவியலில் தென்படும் வரையறை வேறுபாடுகளைப் பென்னம் பெரிதாய்ப் பொதுவரலாற்றிற் பொருத்திக் காட்டி மாணிக்க வாசகரை ஒன்பதாம் நூற்றாண்டிற்குக் கொண்டு போவார். [மாணிக்கம், மணி என்ற பெயரடைகளைப் பயன்படுத்துவதில் மாணிக்க வாசகருக்குப் பெருத்த விருப்பம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான்.]

இவர் காட்டுகிற நுண்ணிய வேறுபாடுகளை எந்த இறையன்பர் தேடிக் கண்டுபிடித்தாரென நமக்குப் புரியவில்லை. ”இது ஏதோ வட்டம், நீள்வட்டம்” என இனங்காட்டிப் பிரித்து, ”ஒன்று இன்னொன்றைப் போலில்லை” என்று சொல்லிக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போல் தென்படுகிறது. நடவரசன் என்ற கருத்தீட்டிற்கு என்னென்ன வரையறைகள்  சொல்லப் படுகின்றனவோ, அவையெல்லாம் தேவார மூவரிடம் வெளிப்படும். மாணிக்க வாசகரிடமும் வெளிப்படும். பிறகு என்ன நடேசன், நடவரசன் வேறுபாடு? பல்லவர் காலத்திலும், அதற்கு முன்னேயும் நடவரசன் என்ற கருத்தீடு தெளிவுற்றதா? அன்றிப் பேரரசுச் சோழர் காலத்திற்றான் தெளிவுற்றதா? இதையும் வரும் பத்திகளில் விரிவாய்ப் பார்ப்போம்.

இன்னொரு வகை வாதம் திருவாசகப் பாடல்களின் யாப்பை ஓட்டியது. மாணிக்கவாசகர் பயன்படுத்திய யாப்புக்களில் ஒரேயொரு பா மட்டும் (திருப்படையாட்சி) பன்னிருசீர் ஆசிரிய விருத்தமாய்ப் புறனடையாக வந்திருக்கும். [அது திருவாசகத்தைச் சேர்ந்ததா, அல்லது இடைச்செருகலா என இதுவரை யாரும் ஆய்ந்து பார்த்ததில்லை. ஒரு சில பதிகங்கள் குறையாகவும், ஒரு சில, வேறு பதிகங்களின் கலப்போ என்று தோன்றும் படி இருக்கும்போது இந்த இடைச்செருகற் கேள்வியும் ஆய்வாளருக்கு இயல்பாய் எழுவது தான்.]

பன்னிருசீர் ஆசிரிய விருத்தமான ஒரு புறனடையைப் பிடித்துக் கொண்டு யாப்பிலக்கணக் கைச்சாத்து (signature) வாதம் செய்து, மாணிக்க வாசகர் பாடல்கள் ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் தான் எழமுடியும் என்பது அறிவியல் பூருவ வாதமாகத் தெரியவில்லை. ஆழ்ந்த ஆய்வில், முன்சொன்ன பன்னிருசீர் விருத்தத்தை புள்ளியியல் வெளியிருப்பு (statistical outlier) என்று தள்ளி, மீந்த பாடல்களில் மாணிக்கவாசகரின் கைச்சாத்தைக் கண்டுபிடித்தால் அது தேவார மூவருக்குக் காலத்தால் முற்பட்டுத் தான் அமைகிறது. Does the exception prove the rule?

இன்னும் வேறு வகை வாதம், ”மாணிக்க வாசகருக்காக நடந்த நரி-பரி திருவிளையாடலில் இறைவன் காட்டும் குதிரையாள் அரபு வணிகன் போல் தோற்றுகிறான். எனவே இசுலாம் எழுந்தபின் தான் மாணிக்க வாசகர் இருந்துள்ளார்” என்பதாகும். இதுவும் மூல நூல்களைப் பயிலாது மேம் போக்காய்ச் சொல்லும் வாதமாகும். ”கிடைத்த திருவிளையாடற் புராணங்களில், மிகப் பழையதான பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இது போன்ற அரபு விவரிப்புக் கிடையவே கிடையாது” எனும் போது,

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

என்னும் அன்னைப்பத்து 7ஆம் பாடல் அரபுத் தோற்றம் காட்டாத போது, இதுபோல் நொள்ளை வாதங்கள் எப்படி எழுகின்றனவோ, அறியோம்.

இன்னொரு வாதம் திருவாசகம் போற்றித் திருவகவல் 54-58 ஆம் அடிகளை ஒட்டி எழும்.

மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்தடித்து ஆஅர்த்து
உலகா யதனெனும் ஒண்திறல் பாம்பின்
கலாபே தத்த கடுவிடம் எய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்

”மாயாவாதச் சண்டமாருதம் ஆர்த்து நிற்க, பல்வேறு வேறுபாடுகலோடு நிலைக்கும் உலகாய்தம் எனும் நஞ்சை எய்தி பெரும் மாயை சூழவும்” என்று இவ்வரிகள் பொருள் கொள்கின்றன. ”இதில் வரும் மாயாவாதம் ஆதி சங்கரரின் அல்லிருமையைக் (அத்துவிதத்தைக்) குறிக்கிறது; எனவே மாணிக்க வாசகர் ஆதிசங்கரருக்கு அப்புறம் வந்தவர்” என்ற வாதம் உள்ளீடு அற்றது. ஏனெனில் அல்லிருமை என்பது உலகாய்தமெனும் நம்பா மதத்தோடு சேர்ந்ததல்ல. மாயாவாதம் என்ற கருத்தீடு ஆதிசங்கரரின் மாயாவாதத்திற்கு முன்னரே, புத்த நெறியாளரிடையே ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாகத் தோன்றியதாகும். உலகாய்தத்தின் ஒரு சில கூறுகளை (எல்லாக் கூறுகளையும் அல்ல) தன்நெறிக்குள் இணைவைத்துக் கூறும் நம்பா மதங்களுள் புத்த நெறியும் ஒன்று. மாயாவாதம் புத்த நெறி குறித்ததா, அத்துவிதம் குறித்ததா? - இதையும் விரிவாகக் கீழே பேசுவோம்.

கடைசியாக ஒரு வாதம். ”திருத்தொண்டத் தொகையில் மாணிக்க வாசகர் பெயரில்லையாம். எனவே மாணிக்க வாசகர் பிற்காலத்தவராம்”. இது எப்படி இருக்கிறதென்றால், திருவிளையாடற் புராணத்தில் நாவுக்கரசர், சுந்தரர் பெயர் காணப்படவில்லையே? அதனால் அவர் பிற்காலத்தவர் என்பது போல் உள்ளது. இந்த இன்மைவாதத்தின் உள்ளீடற்ற தன்மையையும் கீழே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.