Friday, March 06, 2020

Psychiatry - 1

”Psychiatry என்பதற்கான மிகச் சரியான தமிழாக்கம் அறிய விரும்புகிறேன்” என்று @Karthikeyan Tamil என்பார் தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார். அதன்விடை அவ்வளவு எளிதில்லை. கொஞ்சம் ஆழப் போய் வரவேண்டும்.  பலரும் ”உளவியல் மருத்துவம்” என்பார். நான் வேறு படுவேன்.  ”மருத்துவத்திலும்” சிக்கலுண்டு; "உளவியலிலும்" சிக்கலுண்டு. ஏனென்று கீழே படியுங்கள்.

”மருத்துவம்” என்பதில் பொருளில்லை. ஏனெனில் எல்லா உளச்சிக்கலையும் மருந்தே சரிசெய்வதிலை. மருந்திலா முறைகளுமுண்டு. பொதுவாக, உடல் நோவுறுகையில், கொழுமையைச் சரிசெய்ய மருத்துவமும் (medical practice), பண்டுவமும் (surgery)பெரும்பங்கு வகிக்கும்தான். ஆனால் அவைமட்டுமே எல்லாமும் என்பது குறைப்புரிதல். உடல்நோவு குறைக்கப் பூதியர் (physician) பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவார். [health- கொழுமை. சுகம் (வட சொல்) என்பது சொகமெனும் தமிழ்ச்சொல்லின் திரிவு. சுகத்தின் திரிவான சௌக்கியமும் வடசொல்லே. மாறாகக் கொழுமையைப் பயிலலாம் ஏனெனில் ”அவனுக்கென்னப்பா? கொழு கொழுவென்று நன்றாய் இருக்கிறான்” எனும்போது health கருத்தீடு உள்நிற்கிறது. ]

”உளவியல்” என்பதிலும் வேறுபடுவேன். ஏனெனில் உள்ளம் என்பதெது? ஏனமா? அதிலுள்ளதா? psychology ஏனத்தைச் சார்ந்ததா? ஏனத்தின் உள்ளீடு சார்ந்ததா? psychology (n.) என்பதன் வரையறை: 1650s, "study of the soul," from Modern Latin psychologia, probably coined mid-16c. in Germany by Melanchthon from Latinized form of Greek psykhē "breath, spirit, soul" (see psyche) + logia "study of" (see -logy). Meaning "study of the mind" first recorded 1748, from Christian Wolff's "Psychologia empirica" (1732); main modern behavioral sense is from early 1890s. கூடவே, psyche இன் வரையறையையும் பாருங்கள்.

psyche (n.) 1640s, "animating spirit," from Latin psyche, from Greek psykhē "the soul, mind, spirit; life, one's life, the invisible animating principle or entity which occupies and directs the physical body; understanding, the mind (as the seat of thought), faculty of reason" (personified as Psykhē, the beloved of Eros), also "ghost, spirit of a dead person;" probably akin to psykhein "to blow, cool," from PIE root *bhes- "to blow, to breathe" (source also of Sanskrit bhas-), "Probably imitative" [Watkins].

இவ்வரையறைகளில், வெகுநாள் கழித்தே உள/மனக் கருத்து மாந்தச் சிந்தனைக்குள் சுற்றிவளைத்து வந்தது. தொடக்கத்தில் breath, spirit, soul, life, animating principle என்பவை இருந்தன.  இத்தனைக்கும் உடலும், உள்ளிருக்கும் மற்றொன்றும் வேறெனும்  கருத்தீடு 10000 ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டது.  ”உள்ளிருப்பது” என்ன? உள்ள/மன உறுப்பு உடம்புள் எங்குள்ளது? உள்ளம்/மனம் போன்றவை மூளையின் பகரச்சொற்கள் (substitutes) தானே? இப்படிக் கேள்விகள் எழும்.  சரி, உயிர், மூச்சுக்காற்றா? -எனில் அது நுரையீரல் தொடர்பானது. உயிர் இருப்பைத் தெரிவிக்கும் அடையாளமே மூச்சுக்காற்று. A sensing device/process. இதுபோல் பல அடையாளங்கள் உயிர்ச்செயலைக் குறிக்கும். நகவளர்ச்சியும் உயிரடையாளமே. ”உடலில் இருந்து உயிர் வேறுபட்டது” என்று சமயங்கள் சொல்லும். எப்படி என்பதில் கருத்தீட்டுக் குழப்பமுண்டு. உடலின் மொத்த இயக்கமே உயிரென இற்றை அறிவியல் சொல்லும். ஆயினும் பலர் நம்ப மறுக்கிறார்.

நாம் உள்ளம்/மனம்/மூளை எனும் சொற்களால் நம்முடைய நினைவகக் கடுவறையை (memory hardware), செயற்பாட்டுக் கடுவறையை (operating hardware) மட்டுமே காண்கிறோம். சொவ்வறை (software), நினைவுத் தரவுகள் (memories) போன்ற உள்ளிட்டை (content) என் சொல்லி அழைப்பது? உள்ளம், சரியென எனக்குத் தோன்றவில்லை. இப்படித் தான் சொவ்வைக் (soft) கருத்தை விட்டு, அதன் பகரியான மென்மையைக் (nice, thin) கையாண்டு குழம்பினோம். ”மென்பொருள், மென்கலம்” போன்ற சொற்களை ஏற்காது,  ”சொவ்வறை” என நான் சொன்னவுடன் ”குய்யோ, முறையோ” எனக் குதித்தவரே மிகுதி.  ”இராம.கி. க்கு வேறு வேலையில்லை” என்றார். இணை காட்டினாலும், ”ஆங்கில ஒலிப்பில் சொல் படைக்கிறார்” என்றார்,

விளக்கத்திற்கு வருவோம். ஈய மாழை thin இல்லை. ஆனால் அது soft. வழவழப்பான தரையைத் தடவிப்பார்த்தால் அது nice ஆகத்தான் இருக்கும். அது soft ஆ? உண்மையிலேயே  soft இற்கு ஒரு சொல் நம் வழக்கில் பயிலாதே இருந்தோம். பழஞ்சொற்கள் வழி தேடிக்காணும் தேவையிருந்தது. அதுபோல் உள்ளம்/மனம்/மூளைக்குள் இருக்கும் சொவ்வறைகள், நினைவுகள், வாழ்நாள் தரவுகள் ஆகியவற்றின் மொத்தத்தைக் குறிக்கச் சொல்லின்றி, எத்தனைநாள் உள்ளத்தைப் பகரியாக்குவோம்? நான் சொல்வது விளங்குகிறதா? இன்னும் கொஞ்சம் ஆழம் போவோம்.
     
பழம்மாந்தன், உயிரறற்ற உடல்கண்டு அச்சப்பட்டான். அதேபொழுது ”உடலற்று, உயிர் தனித்தியங்கும்” என நம்பினான். வேறுசில கற்பிதங்களும் அவனுக்கு இருந்தன.  நாமெல்லோரும் மூச்சுக் காற்றின் மூலம் எளிதாய் உயிரறிகிறோம். உயிரென்ற கலைச்சொல் மூச்சுக்காற்று வழி எழுந்ததே. வாயால் காற்றூதி எழும் ”ஊய்” ஒலிக்குறிப்பே ”உய்தல்” வினையை நமக்கு உணர்த்தியது. ஊய்>உய்>உய்தல் = மூச்சுக்காற்று உள்ளும் வெளியும் போய்வந்து உடலியக்கம் உணர்த்தல்.  மூச்சு நின்றால், உயிர் உடல்விட்டு நீங்கியதாய், இயக்கமின்றி உள்ளதாய், பழம் மாந்தன் உணர்ந்தான்.   உயிர், மெய் என்பன நம் கருத்தில் ஆழப் படிந்தவை. தமிழ் எழுத்துக்களையே கூட உயிர், மெய், உயிர்மெய் எனப் பகுத்திருக்கிறோம். இப்படியான கலைச் சொற்கள் வேறு மொழிகளில் கிடையாது.. அந்த அளவிற்குத் தமிழர் உயிர் வேறு, உடல் வேறென நம்புகிறார்.  உயிரை ஆவி, ஆதன், ஆன்மா, சீவன், பேய் என்றெலாம் தமிழில் சொல்வர். ஒன்றொன்றாய்ப் பார்ப்போம்.,

முதலில் ”ஆவி”."ஆ"வென மூச்சுவிட்டான், "ஆ"வென ஓலமிட்டான் என்ற ஒலிக்குறிப்பு உயிர்நிலையில் சொல்வது. உயிருள்ளவன் வாய்வழி, காற்றை வெளியிடும்போது ஆவென வாய்திறப்பான். அது ஆவித்த, ஆவுகின்ற, ஆவும் நிலை. அந்நிலையில் உயிர்க்காற்று ஆவியானது.  ”ஆவி”யைப் பலரும் வட மொழியென எண்ணிக் கொள்கிறார். இதேபோல் வாய்வழி, விடும் காற்று வாயி/வாயு ஆனது. (வாயு வடமொழியோ என நானும் மருண்டதுண்டு). நாளடைவில் உடல் வாய்களின் வழி வெளியிடும் எல்லாக் காற்றுகளுமே வாயுக்களாயின. ”வளி”யும் இப்படிக் கிளைத்ததே. ”வழி” தமிழ் எனில் ”வாயு”வும் தமிழே. இரண்டிலும் வள்ளெனும் துளைப்பொருளே உள்நிற்கிறது. மறவாதீர். மூச்சின் வழிப் பிறந்த சொல் ஆவி. ஆனால் அது மூச்சுக் காற்றிலும் மேலான ஒன்றைக் குறிக்கிறது. 

2 ஆம் சொல் ஆதன். முன்பார்த்த ஆவித்தல் என்பது, ஆயித்தல், ஆத்தல் என்றுஞ் சுருங்கும். ஆவித்தலிலுள்ள ஆவி, ஆதன் எனப்படும். ஆதன் = உயிர்க் காற்று. கருத்துமுதல் வாதம் எழுந்தபின், ஆதனுக்குத் தனித்தியங்கும் நிலை கற்பித்து, ஆதனே மாந்தனை இயக்குகிறதென்பார். (பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதம் முரண்பாட்டுள் இப்போது போகவேண்டாம். காட்டு விலங்காண்டி நிலையில் கருத்துமுதல்வாதம் எழாது என்றுமட்டும் புரிந்து கொள்வோம்.) உயிருள்ள நிலை ஆதல், ஆகுதல் என்றுஞ் சொல்லப்படும். ஆகுதல்> ஆயுதல் நிலை (உயிர்நிலை) ஆயுள் எனப்பெறுகிறது. இவை யெல்லாமே "ஆ" எனும் உயிர்க்காற்றில் பெற்ற நீட்சிப்பொருள்கள்.  ஆ-தல்= to come into existence; ஆகுதல்= to become; ஆதலித்தல்= ஆகச்செய்தல்; to make it happen; ஆதுதல் = to come into existence; ஆயிடல்= to become, to happen; ஆயுள்= ஆய்+ உள்; ஆவது= things to be done. இங்கும் மூச்சுக்காற்றுக்கு மேற்பட்ட ஒன்றிற்கு வந்து விட்டோம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட கலைச்சொல் மூச்சுக்காற்றில் தான் உருவானது.

மூன்றாம் சொல் ஆன்மா. (வடமொழிப் பலுக்கில் ஆத்மா எனப்பட்டு, அச் சொற்பிறப்பு புரியாது, அதுவே இது என அறியப்படும்) ஆன்மாவிற்குத் தமிழில் தரப்படும் 2 பொருட்பாடுகளுள் ”விலங்கு” என்பது பருப்பொருளைக் குறிப்பது. மற்றது "ஆதன்" எனும் கருத்துமுதலானது. பொதுவாக, நாட்பட்ட சொற்களுக்கு, கருத்துமுதற் பொருள், முதற்பொருள் ஆகாது. வழிப் பொருளாகவே அமையும். இச்சொல்லுக்கான பருப்பொருள், கருத்துமுதற் பொருள் ஆகிய இரண்டுமே மேலைமொழிகளுக்கும் நமக்கும் அப்படியே கன கச்சிதமாய்ப் பொருந்தும்.  (”ஆன்மா”விற்கு இணையாக animal/ animate-ஐ ஓர்ந்து பார்க்கலாம்.)

ஆங்கிலத்திற்கும், தமிழிற்கும் ஒரு பொருள் மட்டும் பொருந்தினால்,  அது தன்னேர்ச்சி (accident) எனலாம். 2 பொருட்களுக்கும் ஒரே அடிச்சொல் (தம்முள் உறவில்லையெனப் பலரும் எண்ணும்) 2 மொழிகளில் அமைவதை என்ன சொல்வது? வியப்பல்லவா?  இந்தையிரோப்பிய மொழிகளும் தமிழிய மொழிகளும் எங்கோ தொடர்புள்ளதென்ற என்கருத்து இங்கும் வலுப் பெறுகிறது. இக்காலத் தமிழில் ஆதனென்ற உயர்பொருளை மட்டுமே பலரும் சொல்வார். ஆனால் இதன் தொடக்கப்பொருள் உயர்நிலையில் எழுந்ததா என்பது ஐயமே! ஆன்மா முதலில் விலங்கைக் குறித்துப் பின்னரே ஆவி/உயிர்ப் பொருள் வந்திருக்கலாம். இப்படி நான் சொல்வதன் காரணத்தை http://valavu.blogspot.com/2005/06/blog-post_26.html என்ற இடுகையில் விளக்கினேன்.  படித்துப் பாருக.

'கலிமா, வயமா, கடுமா, துதிமா' எனப் பல விலங்குகளுக்கு சங்க இலக்கியம் பெயர்சொல்லும். அவ்வகையில் "ஆன்மா"  விரிசொல்லாக, விதுமைக் குறிப்பாக, மாட்டைத் தமிழில் குறித்தது. தமிழின் விதுப்பெயரான "ஆன்மா" வோடு ஒப்பும் இன்னொரு சொல்லே "animal"ஆக ஆங்கிலத்தில் வருகிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான வேர்ச்சொல் வரலாற்றை ஆங்கிலத்திலும் மற்ற மேலை மொழிகளிலும் ஏனோ யாருங் காட்டவில்லை. ஆன்மா (மாடு) தன் உயிரிழந்த போது அதுவே ஊனாகிறது. உயிரையும் ஆன்மா என்றே தமிழில் சொல்கிறோம். உயிருள்ள விலங்கு animated ஆக, உயிரிருப்பதாக 'soul,spirit' பொருளில் ஆங்கிலத்தில் சொல்கிறார்.  இதுவும் மூச்சுக்காற்றிற்கு மேற்பட்ட புரிதல். It is still nebulous.

ஆன்மா/ ஆதன் எனும் இருவேறு சொற்களை ஒன்றாய்த் திரித்து வடமொழியில் 'ஆத்மா' என்கிறார். அதாவது ஆத்துகின்ற மா ஆத்துமா. உயிருள்ள விலங்கென்று பொருள்; பின் பொருள் நீட்சி பெற்று, உயிரையே குறிக்கத் தொடங்கிற்று போலும். இக்கருத்து வளர்ச்சியில் இன்னும் மேலேபோய் ஆன்மாவைப் பசுவெனவே ”சைவ சித்தாந்தத்தில்” மொழிபெயர்த்துச் சிவனைப் பசுபதி என்பார். பதி - பசு-பாசம் என்பது பரமான்மா, சீவான்மா, கட்டப்பட்ட வாழ்க்கை (பாசம்-கயிறு) என்ற மூன்றையும் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

ந.குணபாலன் said...

ஐயா!

health - கொழுமை என்பது பொருத்தமான சொல்.
எனது பிள்ளைப்பருவக்காலத்துப் பேச்சுவழக்கில்
போந்து பொலிந்த பிள்ளை என்றால் கொஞ்சம் கொழு கொழுப்பான பிள்ளையை குறிப்பதாகும்.
நல்ல செந்தளிப்பான(<செந்தலிப்பான) பொடியன் என்றால் தோற்றப் பொலிவுடைய பொடியன் என்றாகும்.
செந்தளிப்புக்கு எதிர்ச்சொல்லாக வயக்கேடு புழங்கியது.
என் வயதொத்தோர் இன்றும் புழங்குகின்றோம்.