Thursday, April 24, 2008

பாவேந்தர் நவின்ற ஈழத்துக் கொள்கைகள்

பாவேந்தரை நினைவுகூர்வது தமிழ்நாட்டுத் தமிழரிடையே கூடச் சிறிது சிறிதாய்க் குறைந்து வருங் காலத்தில், ஈழத் தமிழர் (ஒருசிலரைத் தவிரப்) பெரும்பாலோரிடம் பாவேந்தர் தாக்கம் இல்லாது போவது வியப்பொன்றும் இல்லை. அவர்கள் பாரதி பற்றியாவது ஒருசில அறிந்திருக்கிறார்கள்; ஆனால் பாரதிதாசன் பற்றிய சிந்தனை அவரிடம் குறைந்தே இருக்கிறது. பாவேந்தர் ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவர் என்று எண்ணும் போக்கு, புலம்பெயர்ந்தவரிடம் பெரிதும் இருக்கிறது.

தமிழின மறுமலர்ச்சிக்கு பாரதிதாசன் என்றும் அடிப்படையானவர். அவர் கருத்துக்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டியவை. தெளிவான, சிந்தனை மிகுந்த, ஈழம் பற்றிய, அவரின் அரிய பாடல் இலங்கைத் 'தினகரன்' சிறப்பு மலரில் 11/7/1959 இல் வெளிவந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தப் பாடல் பாரதி தாசன் குயிற் சுவடி 10ல், (அக்டோ பர் 1964) பக்கம் 10 இல் தொகுக்கப் பட்டிருக்கிறது. நான் இதே பாடலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையம் வெளியிட்ட "பாவேந்தர் பாரதிதாசனின் பழம் புதுப்பாடல்கள்" என்ற தொகுப்பில் (முனைவர் இரா. இளவரசு 2005 ஆம் ஆண்டுப் பதிப்பு) கண்டேன். இனித் தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

வெல்க தமிழ், வெல்க தமிழர்!

இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால்
அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும்;
வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும்
கான்றே உமிழ்தல் வேண்டும்; கழிவடைச்
சாதி சமயம் என்னும் எவற்றையும்
மதித்தல் கூடாது, மறப்பது நன்று;
தமிழர் நலத்தைத் தாக்கும் கட்சிகள்
எவற்றினும் எவரும் சேர்தல் சரியன்று;
தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர்
கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்;
தாய்மொழி யான தமிழ்மொழி வாழ்ந்தால்
தமிழர் வாழ்வர்; தமிழ்மொழி வீழ்ந்தால்
தமிழர் வீழ்வர்; தமிழ்தமி ழர்க்குயிர்;
தமிழன் னைக்கொரு தாழ்வு நேர
விடுதலின் உயிரை விடுதல் தக்கது;
சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை
செந்தமி ழர்க்கும் உண்டு! திருமிகு
சட்ட மன்றிலும் பைந்தமி ழர்க்கு
நூற்றுக் கைம்பது விழுக்காடு நோக்கிப்
படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்!
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலைக விழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்;
மானங் காப்பதில் தமிழ மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது;
இவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!

Wednesday, April 23, 2008

இருவேறு விடுதலை ஆசைகள்

கீழே வரும் இரு பாட்டுக்களும் தந்தை தன்மகற்குக் கூறியதாய் வரும் சந்தப் பாட்டுக்கள். ஒன்று திருத்தணிகை முருகன் மீது அருணகிரியார் பாடிய 258 ஆம் திருப்புகழ். "மகனே! பெருணவத்தின் பொருளை எனக்குச் சொல்" என்ற சிவன் கூற்றை நினைவுறுத்தி, பிறப்பிலிருந்து விடுபடும் தன் ஆசையைச் சொல்லி "உன்னைத் தொழுகாது இருப்பேனோ" என்று அருணகிரியார் கேள்விகளாய்க் கொட்டுவார். இது இறைப்பத்தியின் வழி எழும் விடுதலை ஆசை!

தனதன தான தனதன தான
தனதன தான தன தானா

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலாயோ?
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் பவமாற!
உனைப்பல நாளும் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங்(கு) உளிமேவி,
உணர்த்திய போதந் தனைப்பிரி யாது(ஒ)ண்
பொலச்சர ணானுந் தொழுவேனோ?
வினைத்திற மோடு(அ)ன் று(எ)திர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் றவன்"நீயே
விளப்பென மேல்"என் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் புகல்வோனே!
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே!
தினைப்புனம் மேவும் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே!

இன்னொரு சந்தப்பாட்டும் விடுதலை ஆசையையைத் தான் உணர்த்துகிறது. ஆனால் தமிழர் தரணியில் உயர்ந்து வாழுதற்கான விடுதலை ஆசை. இப்படி ஒரு பாடலைப் பாவேந்தர் மட்டுமே பாட முடியும். தனித்தமிழ் வண்ணம் என்றும் அவர் கவிதைகளில் ("பாரதிதாசன் பாடல்கள்" என்று முனைவர் தொ.பரமசிவன் தொகுத்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1993 பதிப்பில் 489-490 ஆம் பக்கங்களில் இருக்கும்) இந்தப் பாடல் குறிப்பிடப் படுகிறது.

"எளியவர்க்கு உதவியாய் இருப்பாயோ? பிறர்நலம் நாடுகிறாய் என்று கேட்டு நான் மகிழேனோ? எங்கும் தமிழ் என்றாக்க உழையாயோ? தமிழ்நாடு செறிந்து விளங்குகிறது என்று காட்ட என்னை அழையாயோ? 'தமிழ் நம் உயிர்' என்று எல்லோரும் உணர வழி செய்யாயோ? தமிழ்நாடு விடுதலை பெற ஆசை பெருகாதோ?" என்ற சிறிய வினாக்கள்; எளிய கருத்துக்கள்.

தமிழிசை, தமிழிசை என்று பலவிடத்தும் தாகம் கொள்கிறோம்; "பாட்டெங்கே இருக்கிறது?" என்று மறுமொழி எழுகிறது. தமிழிசைப் பாட்டுக்கள், வண்ணமாய்ச் சந்தமாய், வெள்ளமாய்க் கிடக்கிறது, அது பத்திப் பாட்டாக மட்டுமே இருக்க வேண்டுமா, என்ன? பாவேந்தர் பாட்டாக இருக்கவொண்ணாதோ? என்ன சொல்கிறீர்கள்? யாராவது இந்தப் பாட்டை மெட்டமைத்துப் பாடுவீர்களா?

அன்புடன்,
இராம.கி.

---------------------------

விடுதலை ஆசை
(தனித்தமிழ் வண்ணம்)

தனதன தான தனதன தான
தனதன தான தன தானா

கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யே,என் இளையோய் நீ
பெரியவ னாகி எளியவர் வாழ்வு
பெருகிடு மாறு புரியாயோ?
பிறர்நலம் நாடி ஒழுகிணை யாக
இருசெவி வீழ மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக
வருவது கோரி உழையாயோ?
செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர்
எனஎனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை வாழ்வு
பெறஉன தாசை பெருகாதோ?

Tuesday, April 22, 2008

பாவேந்தர் பார்வையில் கல்வி, மதங்கள், மொழிகள்

கீழே வரும் பாட்டு 1962 இந்திய-சீனப் போரின் போது, 'கல்வி, மதங்கள், மொழிகள்' பற்றிய பார்வையாகப் பாவேந்தர் பாடியது. இந்திய இறையாண்மையை நிலைக்க வைப்பதில், இன்றைக்கும் கூட இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை. "இந்தியா ஒரு பல்தேசிய நாடு" என்ற கொள்கையைத் தெளிவாய் உணர்த்தும் தன் பாடலின் ஊடே, "ஆங்கிலத் தாக்கம் இனியும் இருக்கக் கூடாது" என்பதையும் பாவேந்தர் தெளிவுற உரைக்கிறார். "உள்ளதும் போச்சுரா, தொள்ளைக் காதா" என்றபடி, அறுபதுகளில் நாம் பெற்ற மொழியுணர்வை முழுதாகத் தொலைத்து, தவறான வழியில் கழகங்கள் பயணம் செய்ததால், மாநிலம் எங்கும் மடிக்குழைக் கல்வி பெருகி, ஆங்கிலத் தாக்கம் கூடி, தமிங்கிலம் பரவி, தமிழ் மொழி, பண்பாடு போன்றவை குலையும் இந்த நாளில், குறிப்பாகப் பாவேந்தர் நினைவேந்தல் வாரத்தில், இந்தப் பாவை மீண்டும் படித்து, பாவேந்தர் கருத்துக்களை ஓர்வது நல்லது.

அன்புடன்,
இராம.கி.

நாட்டியல் நாட்டுவோம்

("பாரதிதாசன் பாடல்கள்" என்று முனைவர் தொ.பரமசிவன் தொகுத்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1993 பதிப்பில் 490-494 ஆம் பக்கங்களில் இருக்கும் பாட்டு.)

"தென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த
பெருநி லத்தின் பெயரென்ன, அத்தான்?"

"நாவலந் தீவென நவிலுவார், கண்ணே!
தீவின் நடுவில் நாவல் மரங்கள்
இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்;
செவ்விதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே!
எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும்;
நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்?

கல்வி:

பழையநம் தீவில் மொழி,இனம் பலஉள;
மொழியி னின்று கல்வி முளைத்தது;
கல்விஇந் நாட்டில் கணக்கா யர்களைக்
கலைஞரைக் கவிஞரைத் தலைவரைப் புலவரை
விஞ்ஞா னிகளை விளைத்தது ஆயினும்,

கற்றவர், கல்லா ரிடத்தும் கல்வியைப்
பரப்ப முயல வில்லை; பாழிருள்
விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்;
'கற்ற வர்சிலர் கல்லா தவர்பலர்
என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம்'
என்பது கற்றவர் எண்ணம் போலும்!
எல்லா ரும்இந்த நாட்டில் கற்றவர்
எனும்நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே!"

"என்ன அத்தான், நீங்கள் இப்படிக்
கற்றா ரையெல்லாம் கடிந்துகொள் கின்றீர்?"

"கற்றா ரைத் திட்ட வில்லை, கல்வி
அற்றார்க்கு இரக்கம் காட்டினேன், அன்பே!
கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு;
யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந் நாட்டில்
யாவர்க்குங் கல்வி இருக்க வேண்டும்;

'கண்ணிலார் எண்ணிலார்' என்பது கண்டும்
கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா?
கல்லா வறியர்க்குக் கைப்பொருள் கல்வியே!
இல்லை என்பது கல்வியில் லாமையே!
உடையவர் என்பவர் கல்வி உடையரே!

நாட்டின் மக்கள் நாட்டின் உறுப்பினர்;
உறுப்பினர் நிறுவனம் உடையவர் ஆவார்;
சிலர்ப டித்தவர், பலர்ப டியாதவர்,
என்ற வேற்றுமை ஏன்வர வேண்டும்?
ஆட்சி வேலை அதிகம் இருக்கையில்,
'நாட்டிற் கட்டாயக் கல்வி நாளைக்கு
ஆகட்டும்' என்பவர் 'மக்கள் இன்று
சாகட்டும்' என்று சாற்றுகின் றாரே!
எந்நாளு மேநான் எண்ணுவது இதுதான்;
'இந்த நாட்டில் யாவரும் படித்தவர்
என்னும் நன்னிலை ஏற்படுவ தெந்நாள்?' "

மதங்கள்:

"நாவலந் தீவில் மதங்கள் நனிபல!
கடவுளே வந்து மதம்பல கழறினார்;
கடவுளின் தூதரும் கழறினார் மதங்கள்;
கடவுளிற் கொஞ்சம், மனிதரிற் கொஞ்சம்,
கலந்த ஒருவரும் ஒருமதம் கழறினார்;
கடவுளை நேரிற் கண்டவர் சொன்னார்;
கேள்விப் பட்டவ ரும்கி ளத்தினார்;

ஒருவர் "கடவுள் ஒருவர்" என்பார்;
ஒருவர் "கடவுள் மூவர்" என்பார்;
ஒருவர் "கடவுள் இல்லை"யென் றுரைப்பார்;
நான்பெற்ற பேறு யார்பெற் றார்கள்?
ஒருமதம் தோன்றி அதன்கிளை ஒன்பதாய்த்
திருவருள் புரிந்த பெரியோ ரும்பலர்;
மதங்களைப் பலவாய் வகுக்க, அவற்றில்
விதம்பல சேர்த்த வித்தக ரும்பலர்;

நாவலந் தீவில் மதங்கள் அனைத்தும்
இருக்கலாம் - இன்னும் பெருக்கலாம் - எனினும்,
மதங்கள் வேறு, மக்கள் வேறு,
மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள்;
இந்நில மக்கள் அவ்வெழிற் சட்டையின்
உட்புறத் துள்ள மனிதரைக் காண்க!
அந்த மனிதர் இந்தப் பெருநிலம்
ஈன்ற பிள்ளைகள் என்னும் எண்ணம்
அறிந்து பயன்நிலை உணர்ந்தால் ஒற்றுமை

நிலைபெறும்; கலகம் அறவே நிற்கும்;
பன்மதம் சேர்ந்த பல்கோடி மக்களும்
'நாங்கள் ஒன்றுபட்டோ ம்' என்று நவின்றால்
மதங்களின் தலைவர் விரைந்து வந்து
பிரிந்தி ருங்கள் என்றா பிதற்றுவர்?
அவர்கள் அருளுளம் கொண்டவர் அல்லரோ?

நாட்டியல் என்னும் நல்ல தங்கத்தேர்
நன்னிலை நண்ண வேண்டாமா,சொல்?
எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்றுணர்ந்தால்
செல்அரும் நிலைக்குச் செல்லல் இலேசு"

மொழிகள்:

"பல இனம் பலமொழி பற்றி ஒருசில:-
பழம்பெரு நிலத்தில் பலமொழி பல இனம்
இருப்பதால், இஃதொரு பல்கலைக் கழகம்!
ஆனால், தேனாய்ப் பேசும் திருவே,
ஓரினத் துக்குள்ள மொழியை
பலஇனத் துள்ளும் பரப்ப முயல்வதால்
நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற
கோட்பாடு சரியென்று கொள்வதற் கில்லை.

அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச்
செம்மை செய்து செழுமை யாக்கி
இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும்
ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும்
என்பதென் எண்ணம், கன்னற் சாறே!

இனத்தைச் செய்தது மொழிதான், இனத்தின்
மனத்தைச் செய்தது மொழிதான், மனத்தை
மொழிப்பற் றினின்று பிரிப்பது முயற்கொம்பு

'அன்னை மொழியையும் படி, அதனொடு நான்
சொன்ன மொழியையும் படி' எனும் சொற்கள்
கசக்குமே அலாது மக்கட்கு இனிக்குமோ?
ஆங்கிலன் தனக்குள அடிமையை நோக்கி
'ஆங்கிலம் படித்தால் அலுவல் கொடுப்பேன்'
என்றான், நாட்டின் இலக்குமண சாமிகள்*
தமிழ்மறந் துஆங்கிலம் சார்ந்து தமிழைக்
காட்டிக் கொடுக்கவும் தலைப்பட் டார்கள்;
இந்த நிலத்தில் அடிமை இல்லை,
ஆதலால் துரைகளும் இல்லை அல்லவா?

கைக்குறிக் காரர் கணக்கிலர் வாழும்
இந்த நிலையில் அயல்மொழி ஏற்றல்
எவ்வாறு இயலும்? அமைதியென் னாகும்?
நானிங்கு நவின்ற திருத்தம் வைத்துப்
பாரடி நாவலந் தீவின் பரப்பை நீ!
பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி!
பிரிய நினைத்தவர் பிழையுணர் கின்றனர்
பெருநிலத் தில்ஒரே கொடிப றந்தது!

நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர்
எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்
இமையச் சாரலில் ஒருவன் இருமினான்;
குமரி வாழ்வான் மருந்துகொண் டோ டினான்;
'ஒருவர்க்கு வந்தது, அனைவர்க்கும்' என்ற
மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்!

இமயம் மீட்கப் பட்டதி தோ,பார்
சீனன் செந்நீர் கண்ணீ ராக
எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி!
விளைச்சற் குவியல் விண்ணைமுட் டியது
தொழில்நலம் கண்டோ ம் தேவை
முழுமை எய்திற்று, வாழ்க!
அழகிய தாய்நிலம் அன்பில் துவைந்ததே!"

------------------------------------
* சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் இருந்த ஆ.இலட்சுமணசாமி முதலியார் ஆங்கிலப் பயிற்று மொழியே வேண்டும் என்றவர்.

Friday, April 11, 2008

திசைகள் - 4

இனித் தெற்கு என்னும் சொல்லுக்கு வருவோம்.

அவாசி, தக்கணம், யாமினியம், தெக்கு,
சிவேதை, தென், இவை தெற்கு எனலாகும்

என்பது பிங்கல நூற்பா 14 ஆகும். மாற்று வடிவங்களை ஒன்று சேர்த்து, அகர வரிசையாய்ப் பார்த்தால், அவாசி, சிவேதை, தக்கணம் (தெக்கு, தெற்கு, தென் என்பவையெல்லாம் இதனோடு சேர்ந்தவையே), யாமினியம் என 4 சொற்களே தெற்கைக் குறிக்க உண்டு.

முதலில் அவாசி இது முற்றிலும் வடசொல் தோற்றம் கொண்டது. ஆனாலும் கூர்ந்து பார்த்தால், உள்ளிருக்கும் தமிழ் அடையாளம் தெரியும்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்று புறநானூற்றில் வரும் 187 ஆவது பாடல் (அவ்வையார் அருமையாய் எழுதிய பாடல்) அமையும். இதுவும், இதற்கு முன்னும் பின்னும் பல பாடல்கள் அற்றுவிக (ஆசீவக)க் கருத்தால் அமைந்த பாடல்கள். சங்க இலக்கியத்தில் அற்றுவிகப் பாடல்கள் பலவும் இருக்கின்றன. அற்றுவிகத்திற்கும் பழந்தமிழ் மரபுக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றன. அற்றுவிகம் ஒரு காலத்தில் தமிழரால் பெரிதும் ஓம்பப் பட்ட நெறி. அந்த அற்றுவிகத்தை தமிழகத்தில் இல்லையென்று ஆக்கி எல்லாவற்றையும் செயினத்திற்குள் போட்டு குழப்படி செய்வது இலக்கியம், கல்வெட்டியல் போன்ற ஆய்வுப் புலங்களில் தொலைய வேண்டும். அற்றுவிகப் பாடல்கள்பற்றி தனிப்பதிவு இடுவதாய்ச் சொல்லி யுள்ளேன். எனவே அதுபற்றி நீண்டெழுதாமல், அவல், மிசை என்ற புவிக் கிறுவச் சொற்களைப் பற்றி மட்டுமே சொல்ல முற்படுகிறேன்.

மிசை= மேடு போல, அவல் = பள்ளம். இதே பள்ளப் பொருளில் அவ்வையார் அதியமான் மகன் பொகுட்டெழினியையும் புறம் 102ல் பாடியிருப்பார். அதன் மூன்றாம் வரியில் கூட, "அவல் இழியினும் மிசை ஏறினும்" என்று வரும். மேலும், மலை படு கடாத்தின் 450 ஆம் வரியில் "மெல் அவல் இருந்த ஊர் தொறும்" என்றவாறு அவல் என்பது "விளை நிலம்" எனும் பொருளில் ஆளப் படும். ஒவ்வொரு விளை நிலமும் ஒரு பள்ளம் தானே? பள்ளிகள், பட்டிகள், பதிகளே பள்ளப் பட்ட போது விளைநிலத்தை ஒரே மட்டத்தில் ஆக்கும் போது (பாத்திகளாய் அமைத்து வரப்பு கட்டும் போது) பள்ளம் ஆகாமலா போகும்? இது போக வீரமாமுனிவரின் சதுரகராதி, அவல் எனும் சொல்லைக் குளம் எனும் பொருளிலும் குறிக்கும்.

அவ்வுதல், அல் எனும் வேர்ச்சொல்லின் வழி வந்தது அல்வுதல்> அவ்வுதல் ஆயிற்று, பின் அவலாயிற்று. அவல் = கீழிருத்தல். இதன் நீட்சியாய் அவலம் = கீழிருக்கும் தன்மை, எனவே வலியின்மை என்ற பொருட்பாடு வரும்.

இது போக, அல்லுதல் = இல்லாமற் போதல். "அவன் அல்லன், அவள் அல்லள், அது அல்ல" என்ற கூற்றுக்கள் இல்லாப் பொருளில் வெவ்வேறு திணை, பாலில் வந்தவையாகும். அவம் என்ற சொல்லுக்குக் கீழ்மை, கேடு என்ற பொருளும் உண்டு. காட்டு: அவக்குணம் = கீழ்மைக் குணம் "அவகுண விரகனை" என்று வடசொல்போலவே ஒரு திருப்புகழ்ப் பாட்டிற்பயிலும். அங்கு ”க்” எனும் புணர்ச்சி இடைநிலை ஊடே பயிலாததால் வடசொல்லாய்த் தோற்றம் அளிக்கிறது. அவக்காலம் = கீழ்மைக் காலம், எனவே துன்பக் காலம், அவக்குறி = கேடு காட்டுங் குறி; அவக்கேடு = பெருங்கேடு; அவ நம்பிக்கை = கெட்ட நம்பிக்கை. அவமதித்தல் = கேடாக மதித்தல்; அவமானம் = மதிப்புக் கேடு; இது போலப் பல கூட்டுச் சொற்கள் உண்டு. (அவம் என்ற தமிழ்ச்சொல் பல கூட்டுச்சொற்களில் முன்னொட்டாய்ப் பயிலுகிறது. அவையெலாம் வடசொல்லோ என்று நானும் மறுகிய காலம் உண்டு!)

குட்டை தட்டையாகும் என்பதால், அவலின் நீட்சியாய் அவரைக்காய்ப் பெயர் எழும். இவர் (climber) கொடியிலும், படர் (creeper) கொடியிலும், குத்துச் செடியிலும் (shrub) தட்டையாக ஆன காய், அவரைக்காய் (a type of beans) ஆகும்.

இது போக இன்னொரு அவல் உண்டு. அது அரிசியை இடித்து வரும் அவல். அல்முதல்>அம்முதல் வினை அமுக்கும் செயலைக் குறிக்கும். அம்மும் கருவி அம்மி. அமுக்குதல் எல்லோருக்கும் தெரியும். (அமுக்குதல் நீட்சியாய் அமற்றுதல் = நிறுத்துதல் என்ற வினையும் எழும்.) அம்முதல், ஒரு வகை இடித்தலே. அம்மலின் சுருக்கம் அமல். மகர, வகரப் போலியில் அமலின் திரிவு அவல். சாப்பாட்டு அவலின் சொற்பிறப்பு இப்படித்தான். "பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை" என்பது அகநானூறு 141 ஆம் பாட்டின் 18 ஆம் வரி. அவலிடிக்கும் உலக்கைபற்றிச் சொல்கிறது. உலக்கையால் குற்றுவதை அவைத்தல் என்பார். அவல் சாப்பிடாத தென்பாண்டிக்காரர் உண்டோ ? (இன்றைக்கு அவல் இடிப்பது பற்றியே நம் மக்கள் மறந்துவிட்டனர்.)

மொத்தத்தில் அவல் = கீழாக இருத்தல், தாழ்ந்து இருத்தல். அவற்சி = தாழ்ந்த நிலை. அவற்சியின் திரிவில் அவற்சி>அவசி>அவாசி என்றாவது தமிழில் இருந்து வடபுலம் போகும் இருபிறப்பிச் சொல்லாகும். அவாசி, கிழக்கை வடமொழியில் குறித்திருக்கிறது. நம்மூரில் அவல், பள்ளத்தையே குறித்திருக்கிறது.

அடுத்தசொல் சிவேதை. இதன் முந்தைய வடசொல் வடிவம் ஸ்வேதை ஆகும். இன்னும் ஆழம்போனால், இதற்கும் முன்வடிவை ஸௌதையிற் காணலாம். பொதுவாக உகரத்தில் அல்லது ஒகரத்தில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் வடக்கே இணையும் போது, ஔகார உருவத்திலேயே நிலைக்கின்றன. (தமிழில் ஔகாரச் சொற்கள் மிகமிகக் குறைவு. ஔகாரத் தோற்றம் காட்டும் மிகப்பலவும் வடசொற்களாகவே உள்ளன! அதைப்பற்றியே ஒரு பதிவு போடவேண்டும்.) காட்டாக, நம் குரவம் ( = தலைமைப் பண்பு. குரு>குரவம்; சிவ சமயக் குரவர் நால்வர்), அஙகே கௌரவமாகும். சொகம்>சுகம்> சௌக்யமாகும்; இதுபோல நாம் புத்தம் என்பதை, அவர் பௌத்தம் என்பார். இது புரியாமல், இக்கால இடதுசாரித் தமிழரில் சிலர் அதைப் பவுத்தம் என்றே பயிலுவார். [என்ன செய்வது, நிலப்பிரபு என்றே சொல்லிப் பழகியவரைப் பண்ணையார் என்றுசொல்லச் சொன்னால் எப்படி இவர் அறிவுய்தியாகக் (அய்யய்யோ! அறிவுஜீவியாகக்) காட்சியளிப்பது? :-)]

இந்த வடக்கு/தெற்கு மக்களின் பலுக்கல் வேறுபாட்டை புரிந்து கொண்டால், (ஸௌதை எனும் வடசொல்லுக்கு இணையான) சூதை என்ற தமிழ்ச் சொல்லையும், அதனுள் புதைந்துகிடக்கும் சூல்தல் வினையும் சட்டென்று இனங்காட்டும். சூல்தல் = தோண்டுதல்.

சுல்>சூல் என்ற வேரின் வழி சூல்தல் வினை பிறக்கும்; சூலும் வினையைச் செய்யும் கருவி சூலம். இதைக் கேட்டவுடன், பலருக்கும் இக்காலத்து இரும்புச் சூலமே நினைவிற்கு வரக்கூடும். இன்றைக்குப் பார்ப்பது பழைய கற்காலச் சூலத்தின் பண்பட்ட திருத்தம். அதற்கு மாறாக, பெருங்கற்கால நிலைக்குப் போய், கற்சூலத்தை நினைவு கொள்ளுங்கள்; ஒரு முக்கோணத்தின் இரண்டு சாய்வுப் பக்கங்களிலும் இரண்டு சிறிய முக்கோணங்களைப் பொருத்தி, 3 கூர் முனைகள் கொண்ட கற்கருவியை ஓர்ந்து பாருங்கள். இக்கல்லோடு ஒரு தண்டைப் பொருத்தினால் கிடைப்பது கல்லாலான சூலக்கருவி. இங்கே சொன்ன இருபக்க முக்கோணங்கள் இல்லாது ஒரே ஒரு கூர்முனை மட்டுமே இருந்தால் அது வேல். வேலும் சூலமும் தமிழர் வாழ்க்கையில் புகுந்தது இப்படியே. (தமிழர் வாழ்க்கையில் மட்டுமல்ல; உலகெங்கணும் பழங்குடி மக்கள் சூலம், வேலைப் பழகியுள்ளார். பின் எப்படி விலங்காண்டி நிலையில் பழங்குடி மக்கள் வேட்டையாடுவது? தம்மைக் காப்பாற்றிக் கொள்ளுவது?)

சென்னைக்கு அருகில் பூண்டி நீர்த்தேக்கத்தை ஒட்டி அத்திரப் பாக்கம் எனும் இடத்தில் இன்றைக்கு 20000, 25000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய சூலங்களும், வேல்களும் (தண்டுகள் இல்லாமல் தான்) கிடைத்துள்ளன. தென்னிந்தியாவிற் கிடைத்த பழ எச்சங்களில் மிக முந்தியதாய் இவற்றைக் கருதுகிறார். இன்றைக்கும் பூண்டிபோக வாய்ப்புக்கிடைத்தால், அங்குள்ள தொல்பொருள் காட்சி சாலை பார்த்து வாருங்கள். 70000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈனியல் சான்று பிரான்மலைக் கள்ளரான விருமாண்டி மூலம் உறுதிபெற்றது. அதேபோல, கற்சூலங்களும், கல்வேல்களும் நம் பழங்குடிகள் தெற்கே நெடுநாள் இருந்ததை உறுதி செய்யும்,.

சூல்ந்தது பள்ளமாகும். பள்ளமான இடம் சூத்தையாகும். மாம்பழத்தின் உள்ளே பள்ளமிருந்து தோல்மூடிக் கிடந்தால் சூத்தைப் பழம் என்கிறோம் அல்லவா? புட்டத்தின் (buttocks) ஓரிடத்தில் துளையுள்ளதால் அதைச் சூத்து என்கிறோம் அல்லவா? உள்ளீடில்லாது தட்டையாய்க் கிடப்பதைச் சூத்தை> சொத்தை என்கிறோம் அல்லவா? சொத்தை ஆள் சோதாள் ஆகிறான்; இன்றைய வழக்கில் ள் என்னும் ஈறுபோய், அவனைச் சோதா என்றே சொல்கிறோம். முடி இல்லாது வெறும் தலையாய், பள்ளம் தெரிவது சொட்டைத் தலை ஆகிறதல்லவா? "நொள்ளையும் சொள்ளையும்" என்ற பேச்சுவழக்கில் நொள்ளை என்பது நொகையான (negative ஆன) பேச்சு. சொள்ளை என்பது குறைப்பேச்சு. (சொத்தை, சொதுகையில் சொதுகரம்> சதுகரம்>சதுரமும் பிறக்கும். சதுரம் = குறைந்த கை = நாலு.)

இது போக, வறியவனாக, ஒன்றும் இல்லாதவனாக, உடலுழைப்பை மட்டுமே தந்து உணவுபெறுபவனாக இருப்பவன் சூத்தன்>சூதன் ஆகிறான். [வட மொழி ரகரம் நுழைந்து சூத்ரனாகும். மீண்டுமிதைச் சூத்திரன் ஆக்குவோம்.]

[சூதன்பற்றிப் பேசுமிடத்தில் விலங்காண்டிக் குமுகம் பற்றிய  இடைவிலகல் சொல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு படைக்கருவியைக் கைக்கொண்டிருந்த விலங்காண்டி நிலையினர், நாளாவட்டத்தில் குமுகத்தில் 4 வகையாய்ப் பின் நிலைத்தனர். விலங்காண்டி நிலையில் தலைவன், பெருமான் = பெரியவன் எனப்பட்டான்; கூட்டத்தை வழிநடத்தினான். {பெருமான்> ப்ரஹ்மண்> ப்ரம்மன்>ப்ரம்மண். பெருவுடையார் ப்ரஹ்தீசர் ஆவதில்லையா? அதைப் போல், இத்திரிவைப் புரிந்து கொள்ளவேண்டும்.]

அவனையும், மற்றவரையும். வாள், கத்தி ஆகிய படைக்கருவி கொண்டு காப்பாற்றியவன் கத்தியன்> க்ஷத்தியன்> க்ஷத்ரியன். [கணம்> க்ஷணம் திரிவை எண்ணிப்பார்க்கலாம்.] வில்கொண்டு புது இடங்களுக்குப் போய் விலங்கு, நில வளங்களைத் தெரிந்துவந்து பண்டப் பரிமாற்றைச் செய்த வில்லயன்> விற்றயன்> வித்தயன்> விச்சயன்> விசையன்> வைஸ்யன்; (வில்+தல் = விற்றல் என்று புணர்ச்சி விதியில் மாறும் இல்லையா? விற்றல் வித்தலென்று பேச்சுவழக்கில் திரியும். வித்தயன் விச்சயன் ஆவது அடுத்த நிலை.) கூட்டங் கூட்டமாய்ப் போய், விலங்குகளைக் கொன்று குடியினருக்கு ஊனளிக்கச் சூலங்கொண்டு காலாட்படையாய்த் திரிந்தவன் சூல்த்தன்>  சூத்தன்> ஸூத்ரன்.

பெருமார், கத்தியர், விசையர், சூதரெனத் தொழில்வழி வகைப்பட்ட விலங்காண்டிக் கூட்டம், இன்னொரு விலங்காண்டிக் கூட்டத்தோடு இடம், புலம், வளம் காப்பாற்றுவதற்காகப் போரிட வேண்டி வந்தது. நாளடைவில் முல்லைநில வாழ்க்கையிலும் இப்பிரிவுகள் விரிந்து கொண்டே போயின. சாதிப் பாகுபாடுகள் என்பன இதன் வளர்ச்சியே.  [ இன்றது பிறப்போடு சேர்ந்துகொண்டது தவறு. அது மாறவேண்டும் என்பது குமுக எதிர்பார்ப்பு. வருணம் பற்றி இங்கே சொல்லியதை முற்றுமுழுதான முடிவாகக் கொள்ள வேண்டாம். இது ஒரு பார்வை, அவ்வளவு தான். வருணத் தொடக்கம், விலங்காண்டிக் குமுகாயத்தில் முளையாகி, பின் முல்லை நாகரிகத்தில் மலர்ந்தது என்றே தோன்றுகிறது. அதன் உச்ச கட்டம் மருதமாகும்.]

இனி நில அமைப்புக்களுக்கு மீண்டும் வருவோம். இந்தியத் துணைக் கண்டத்தில் சொத்தையான, தட்டையான பகுதியாய், மலை, நில அமைப்பு மிகக் குறைந்து, சற்றே சாய்ந்த சமவெளியாய், செம்புலமாய் (= சமவெளி; செம்புலப் பெயல்நீரைச் செம்மண்நீரெனச் சொல்லிக் குறுந்தொகையின் பொருளை அறியாமற் கிடப்பது இன்னொரு உரைகாரர் சோகம்!), இருக்கும் பள்ளத் திசை சூதத் திசை. அது வடமொழியில் ஸௌத திசை என்று ஆகியது; மேலை மொழிகளிலும் South என்பது பலவாறாகப் பலுக்கப் படுகிறது.

அடுத்தது தக்கணம். இதற்குப் பெருவிளக்கம் வேண்டாம். தள்கு>தக்கு> தக்கணம் என்ற வளர்ச்சி எளிதில் புரியக் கூடியதே / தல்>தள்ளில் இருந்து பிறந்த உறுப்புச்சொல் ’தாள்’. "உடல் உறுப்புச் சொற்கள்" என்ற தலைப்பில் முனைவர் கு. அரசேந்திரன், 2006ல் ஒரு பொத்தகம் வெளியிட்டிருக்கிறார். (காவிரிப் பதிப்பகம், 6, பெருஞ்சித்திரனார் தெரு, சிட்லப்பாக்கம், சென்னை 64). இதில் கால், அடி, தாள், கழல், பாதம் ஆகியவற்றின் சொற்பொருள் வரலாறுகளைச் சொல்லுவார். தாளின் தொடர்பான நிலை தாள்வு>தாழ்வு.

தள்கு என்னும் சொல், தொக்கிய நிலையில், தக்கு என்று ஆகும். பின் அணம் எனும் சொல்லாக்க ஈறு சேர்ந்து தக்கணம் என்று ஆகும். பிறகு கட்டி என்னும் சொல் கெட்டி யாவது போல, பரு>பெரு ஆனது போல, தக்கு என்பது தெக்கு என்று தமிழர் பலுக்கலில் ஆகி, மேலும் இலக்கண மீத்திருத்தம் பெற்றுத் தெற்கு என்று நிலைபெற்றுப் போனது. தெற்கு என்பதைத் தெல்+கு என்று பின்னால் புரிந்து (தல்>தெல்), பின் தெல்+ந்+திசை என்பது தென்திசை ஆனது. தென் என்பது தெல்லின் இன்னோர் உருவமாய்க் கொள்ளப்பட்டது.

தென்னை என்ற சொல் இதே கருத்தில் தோன்றியதல்ல. அது ஆசியத் தென்கிழக்கில் இருந்து தமிழ் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மரம் என்று புதலியலார் (botanists) கூறுவார். நம்மூரைச் சேந்த பனை போலவே இதிலும் கள் இறக்க முடியும் என்றறிந்த தமிழன், இதன் சுவை இன்னும் அதிகம் என்பதால் கள் மரம் என்ற பெயரையே இதற்கு இட்டிருக்கிறான். (பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid பண்ணும் வேலை.) தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்குமரமானது; தெல்நை, தென்னையானது. தெங்கங்காய் நாளடைவில் தேங்காய் ஆகச் சுருங்கிற்று. தெல் என்பதே இச் சொற்களுக்கு அடிப்படை ஆகும். தெல்லின் நீட்சியாய், அதிலுள்ள வெறியத்தைக் (ethanol) போக்கும் வகையில் அரை நொதிப்பிலுள்ள நீர்மத்தில் சுண்ணாம்பை இட்டு அதன் நீர்ம அயனிச் செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமில அரங்கில் (acidic range) இருந்து, களரி அரங்கிற்கு (alkali range) கொணர்ந்து உருவான பதநீரை, தென்பாண்டிநாட்டிற் தெளிவென்று சொல்லியும் விற்பார். இதைத் தயக்கம் இல்லாமல், நாட்டுப்புற ஆண்கள், பெண்கள் எல்லோருமே குடிப்பார்; இதைத் தவறென யாரும் அங்குசொல்வதில்லை. (பதநீரை பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.) பதநீரில் வெறியச் செறிவு 2-4% இருக்கும். பொதுவாக கள்ளில் 7% க்கு மேல் இருக்கும்.

ஞாவகம் வைத்துக் கொள்ளுங்கள் தென் எனும் திசை குறிக்கும் சொல்லும், தென் எனும் மரங்குறிக்கும் சொல்லும் வெவ்வேறு சொற்பிறப்பில் எழுந்தவை. ”கள் மரம் என்ற பொருள் குறிப்பதாலேயே, தென்னை என்ற பெயராலேயே, அம்மரம் நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதி ஆன மரம்” என்ற கருத்து சட்டென்று புரிந்துபோகும். பனை நம்மூருடையது; தென்னை வெளியிருந்து நம் நாட்டில் இறங்கியது.

அடுத்தது யாமனியம். அதாவது யாமன் திசை அல்லது யமன் திசை.

யா என்ற ஓரெழுத்தொரு மொழி பற்றி ஒரு பொத்தகமே போட்டிருக்கிறார் தஞ்சைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சொல்லாய்வறிஞர் ப.அருளி. அதில் கருமைக் கருத்து மூலவேராகிய யாவில் இருந்து யா>யாம்> யாமன்>யமன் வளர்ச்சியில், "கரிய இருள் நேரத்தில், யாமப் பொழுதில், உயிரைக் கவர்ந்து செல்பவன் என்றபொருளில் ’யாமன்’ ஏற்பட்டது" என்பார். யாமன் = இருளன் என்ற புரிதல் தமிழரிடையே உண்டு. யாமன் திசை என்பது இருள்நிறைந்த திசை. மனையடி சாற்றத்தின் படி, தென் திசையை யமன் திசை என்றும் தமிழர் கருதிக் கொண்டார். இதைப் புரிந்துகொள்ள, புவியின் தன்னுருட்டையும், வலயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னால் ”காலங்கள்” தொடரில் புவியின் தன்னுருட்டையும், புவியின் வலயம் பற்றியும் நான் பேசியிருந்தேன். புவியின் தன்னுருட்டுக் காரணமாய், ஒவ்வொரு நாளும் சூரியன் கிழக்கே எழுவது போலவும், பின் மேற்கே மறைவது போலவும் தோற்றுகிறது. அதேபோல, புவியின் நடுக் கோட்டுத் தளமும் (equator), புவியின் வலயத் தளமும் (plane of revolution) 23.5 பாகையில் வெட்டிக் கொள்வதால், ஒவ்வொரு வலயச் சுற்றிலும் (=ஒவ்வோர் ஆண்டிலும்), சூரியன் தெற்கே சுறவ (=மகர) இலகை(=ரேகை)க்குப் போய், மீண்டும் வடக்கே கடக இலகைக்கு வருவதாய்த் தோற்றமளிக்கும். இதைத் தக்கண அயனம், உத்தர அயனமென்று சோதியர் சொல்வார். இன்னொரு வகையில், சூரியன் பனிமுடங்கல் (winter solstice) வரை தெற்கே போவதாயும், பின் கோடை முடங்கலுக்கு (summer solstice) வடக்கே வருவதாயும் காட்சி அளிக்கும்.

இப்படிச் சூரியன் தெற்கே போவதாகக் காட்சியளிக்கும் போது பகற்பொழுது சுருங்கி, இரவுப் பொழுது அதிகமாகும். தெற்கு என்பதை இருட்திசையாகத் தமிழர் கொண்டது, இக்காரணம் பற்றியே. இதே காரணமாய், மனையடி சாற்றத்தில் (நான் மனையடி சாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன் என்று யாரும் எண்ணாதீர். இச்சாற்றம் தென்னாட்டவர் பங்களிப்பே. அவர் தொன்மங்கள் இதில் அடங்கியுள்ளன. சாற்றத்தையும், அதிலுள்ள கருதுகோள்களையும் விவரித்தால் நான் சொல்வது புரியும்.) ஒரு வீட்டின் வாசல் கிழக்கேயோ, அல்லது வடக்கேயோ பார்த்து இருக்க வேண்டும் என்பார். ஏனென்றால், தன்னுருட்டின்படி கிழக்கு, ஒளிவரும் திசை. மேற்கு இருள் திசை. அதே போல, புவி வலய இயக்கத்தின் படி வடக்கு ஒளிவரும் திசை, தெற்கு இருள் திசை.

பெரும்பாலான முதியவரின் இயல் இறப்பு இருளில் நடப்பதாகத் தமிழரின்  பட்டறிவு சொல்லியதால், தம் முன்னோர் தென்திசையை (யாமன் திசையை) அடைவதாகவே புரிந்து கொண்டார். அதனால் மறைந்த முன்னோரைத் தென்புலத்தார் (=தென்திசையார் = மறைந்தவர்) என்று சொன்னார்.

தென் திசை யாமனத் திசை என்று ஆனது இப்படித்தான். யாமனம் என்பது இருபிறப்பி முறையில் யாமன்யம்>யாமினியம் என்று திரியும். இன்னும் சுருக்கமாய் யாமத் திசை என்பது, யாம்யத் திசை என்றும் திரியும். இதை நல்ல தமிழில் யாமத் திசை, யாமனத் திசை என்றே சொல்லிப் பயிலலாம்.

அடுத்த பகுதியில் மேற்கையும், வடக்கையும் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 09, 2008

Tyre, Brake and acceleration

திரு. புருனோ கேட்டிருந்த சொற்களுக்கு என் பரிந்துரை:

ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகளில் படித்தால், இந்தப் பெயர்கள் எல்லாம் மாட்டுவண்டியில் இருந்தே புலம்பெயர்ந்து இருக்கின்றன. மாட்டு வண்டி நம்மூரிலும் இருக்கிறது. இந்த உறுப்புகளுக்கு ஆன பெயர்கள் கிட்டத் தட்ட இதே பொருட்பாடுகளில் தான் நம்மிடம் இருக்கின்றன. முதலில் இங்கு கேட்டிருப்பது tyre

1485, "iron rim of a carriage wheel," probably from tire "equipment, dress, covering" (c.1300), an aphetic form of attire. The notion is of the tire as the dressing of the wheel. The original spelling was tyre, which had shifted to tire in 17c.-18c., but since early 19c. tyre has been revived in Great Britain and become standard there. Rubber ones, for bicycles (later automobiles) are from 1870s.

நம்மூரிலும் மாட்டுவண்டிச் சக்கரத்திற்கு இரும்புப் பட்டை போடுகிறார். பட்டை என்பது சக்கரத்திற்கு ஒரு covering தானே? இருப்புப் பட்டை என்பது மரம் போன்ற பொருள் தேயாமல் இருப்பதற்காகப் போடப் பட்டது. பின்னால் மிதிவண்டி மேலைநாடுகளில் உருவானபோது, மாட்டு வண்டியில் இருந்தது போன்று மரச்சக்கரமும், இருப்புப் பட்டையும், மர ஆரங்களுமாய்த்  தான் தொடங்கியது. இந்தச் சக்கரங்கள் கனமாயும், அவற்றின் ஆற்றிலாமை (inertia) பெருத்திருந்ததால், என்னதான் முயன்றும் மிதித்து அழுத்துவதற்குச் சரவலாய் அமைந்தது.

இன்னொரு கண்டுபிடிப்பாளர், இரும்பு வளையத்தை வைத்து, அதன் மேல், அப்பொழுது, தென்னமெரிக்காவில் இருந்து பரவிய முழு உரப்பையால் (full rubber) ஆன ஓர் உருளை (cylinder) செய்து அதை வளையத்தின் (wheel) வெளியே பொருத்தி, வலையத்திற்கு உரங்கொடுக்க இரும்பு ஆரங்களைப் (spokes - same as radii) பொருத்தி, மிதிவண்டிச் சக்கரங்களை உருவாக்கினார்.  அது சரி. உரப்பை, அது என்ன?

rub (v.) early 14c., transitive and intransitive, of uncertain origin, perhaps related to East Frisian rubben "to scratch, rub," and Low German rubbeling "rough, uneven," or similar words in Scandinavian (compare Danish rubbe "to rub, scrub," Norwegian rubba), of uncertain origin. Related: Rubbed; rubbing.

rubber (n.)
"thing that rubs" (a brush, cloth, etc.), 1530s, agent noun from rub (v.). The meaning "elastic substance from tropical plants" (short for India rubber) first recorded 1788, introduced to Europe 1744 by Charles Marie de la Condamine, so called because it originally was used as an eraser.

உர, உரப்பு, உரப்புத் தூள், உரசல், உராய்வு, உரைதல், உரிஞ்சல் என்று இத்தனை சொற்களைக் கொண்ட தமிழருக்கு, rub எங்கிருந்து போயிருக்கும் என ஊகிக்கத் தெரியவில்லையா? வியப்புத் தான். ஏதேதோ மாற்றுச் சொற்களைப் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார். அந்த அளவு அடிப்படைத் தமிழ்ச்சொற்களை விட்டு வெளியே வந்துவிட்டோம். இராம.கி. அடையாளங் காட்டினால் இராம.கி.யை குற்றஞ் சொல்வது மட்டும் பலராலும் முடிகிறது.

rubber  பொருளை இயற்கையில் கண்டெடுத்த போது, உராய்ந்து கரிக் கறையை அழிக்கவே அது முதலில் பயன்பட்டது. எனவே rubber material (அழிக்கும், உராய்க்கும் பொருள்) என்று  கூட்டுச் சொல்லாய்த் தான் முதலில் அழைத்தார். பின், அதிகப்புழக்கத்தில் பொருளென்ற பின்சொல் சொல்லப் படாது போனது.  தமிழில் மிக எளிதில் rubber ஐ ”உரப்பை” என்று சொல்லி விடலாம். (ஒருகாலத்தில் இழுவை என்றும் சொன்னேன்.) ஏதும் குறை வராது. இலுப்பை மரம் போல் உரப்பை மரம் (rubber tree) என்ற சொல்லாட்சியை ஏற்றுக் கொள்ளலாம். மனம் தான் வேண்டும். தேய்வை, இழுவை, மீள்வை என்பவை இதற்குச் சரிவராது.

உரப்பையால் ஆன உருளைக்குப் பின்னால், "இவ்வளவு உரப்பையைப் பயன்படுத்த வேண்டுமா?" என்ற துணிப்பில், உரப்பைத் தூம்பை [tube; தூம்பு என்ற சொல்லைக் கண்டு மருளவேண்டாம். அது நல்ல தமிழ்ச்சொல். சிவகங்கைப் பக்கம், முற்றங்களில் சேகரமாகும் மழைநீரை, வீட்டிற்கு வெளியில் கொண்டுசேர்க்க (இது திண்ணை, வெளிப்பத்தி) ஆகியவற்றின் அடியில் போகும்) வைக்கும் குழாய்க்கு தூப்பாய் என்றே பெயர். தூம்பு/தூப்பு என்பவை எங்கள் பக்கத்துப் பாமரரும் அறிந்த நல்ல தமிழ்ச் சொற்கள்; தயங்க வேண்டாம். தூம்பு விளக்கு = tube light சொல்லிப் பழகுங்கள்.] உருவாக்கி அதனுள் காற்றை ஏற்றி, பின் வட்டத்தூம்பின் மேல் இரும்புப் பட்டைக்கு மாறாக ஒரு கடு உரப்பைப் (hard rubber) பட்டையை மூடிவைத்து உருவாக்கியதே இக்கால மிதிவண்டிச் சக்கரம். பின்னால் சகடை (car) உருவான போது, மிதிவண்டிச் சக்கர நுட்பமே இதற்கும் கொள்ளப் பட்டது.

இன்றும் அந்த கடு உரப்பையால் ஆன சக்கரப் பட்டை இருக்கிறது. இது தான் அடிப்படையில் tyre. ஆனால் சொல்லச் சுருக்கமாய் இருக்கவேண்டும் என்று கருதி பாவாணரே 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் உருளி என்ற சொல்லைப் பயிலுவார். இது அவர் பரிந்துரைத்ததா, மற்றவர் பரிந்துரைத்ததா என்று எனக்குத்தெரியாது, ஆனால் அவர்நூல்வழி அறிந்தேன்; பொருளும் குலையாது, சொல்ல எளிதாக இருக்கிறது. (ஞாவகம் வைத்துக் கொள்ளுங்கள் உருளை = cylinder; உருளி = சக்கரப் பட்டை. இரண்டும் சற்று வெவ்வேறானவை.) [குயவன் சக்கரத்திற்குத் திருகு சக்கரம், திரில் என்று கூடப் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. tire சொல்லின் பிறப்பு எங்கோ ஒரு விட்டகுறை, தொட்ட குறை......]

வெளியே உரப்பையுருளி, உள்ளே உரப்பைத் தூம்பு; அப்புறம் ஆரங்கள். இன்னும் சில உறுப்புக்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்தது இந்தக் கால உந்துச் சக்கரம்.

அடுத்தது brake.

c.1440, from O.Du. braeke "flax brake," from breken "to break." The word was applied to many crushing implements, and the ring through the nose of a draught ox. It was infl. in sense by O.Fr. brac, a form of bras "an arm," thus "a lever or handle," which was being used in Eng. from 1380, and applied to "a bridle or curb" from 1430. One or the other or both took up the main modern meaning of "stopping device for a wheel," first attested 1772.

மாட்டுவண்டியில் மாட்டிற்கு மூக்கணாங் கயிறு போடுகிறார் அல்லவா? மாட்டுவண்டி போய்க் கொண்டே இருக்கும் போது, அந்த முக்கணாங்கயிறை ஒரு இழுப்பு இழுத்தால், அது மாட்டின் மூக்கில் உராய்ந்து வலி ஏற்படுத்தி, மாட்டிற்கு உணர்த்தி, அதை மேற்கொண்டு நகராது நிற்கச் செய்து விடும். அந்தக் கால brake நுட்பம் இது தான். (சிரிக்காதீர்கள்!) அதே நுட்பம் தான் இன்றும் பயன்படுகிறது. உருவங்களும், கருவிகளும், ஏந்துகளும் தான் மாறியிருக்கின்றன. என்ன, இந்தக் கால brake -இல் மாடு இருக்காது, மாறாக மாகன உறுப்புக்கள் (machine parts) இருக்கும். இங்கும் ஒரு (இரும்புக்) கயிறு, ஒரு இழுப்பு, அதனால் ஏற்படும் உராய்வு, பின் நிற்பு.

மேலே flax brake கயிற்றையே குறிப்பிடுகிறது. (இதைப் பழுதை என்றும் நம்மூரில் சொல்வார்; பழுதைக்கும், பாம்புக்கும் சேர்த்துச் சொல்லப்படும் சொலவடையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.) இன்றைக்குக் கயிறு என்ற சொல்லையே நாம் பயன்படுத்தினாலும், புரி என்ற சொல் கயிற்றுக்கு அந்நாளில் உண்டு. அது மாட்டுக்குப் போடும் மூக்கணாங் கயிற்றுக்கே கூட உண்டு. புரி(கை)யைக் கட்டியிழுத்தல் என்று பெயர். (இது போக கலங்களைக் கவிழாமல் வைக்க, புரிமனை அல்லது திரிமனை அல்லது கலவடை என்ற பொருளுண்டு. புரியாலான வட்ட உருளையின் மேல் கலத்தை வைக்கலாம். புரிக்கு மாறாகத் திரி என்ற சொல்லும் ஆளப்படும். கல வட்டை கலவடை ஆயிற்று.)

brake போடு என்று சொல்லாமல், புரிகையை இழு, அமுக்கு என்றும் சொல்லலாம். இன்னொரு break/broke/broken என்ற வினை தமிழில் பேர்தல் என்று சொல்லப்படும். மேலும் நகரவிடாமல், எதிர்த்தடை கொடுப்பது பொருவியது என்றும் சொல்லப்படும். பொரு என்னும் சொல் புர்.....என்னும் உராய்வு ஓசையை வைத்து எழுந்த சொல். பொரி என்ற சொல்லும் இந்த புர்...... என்னும் ஓசைக்குறிப்பில் எழுந்தது தான். புரிகை, பேர்தல், பொரு ஆகிய மூன்றும் ஒலியில் ஒன்று போல் தோற்றம் அளித்தாலும், வேறுபாடு ஆனவை; அவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அடுத்தது accelerator. முடுக்கம் (acceleration) என்ற சொல் 50 ஆண்டுகளாகவே பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அவன் முடுகிச் செல்கிறான். He goes accelerated. அந்த முடுக்கத்தை அளிப்பது முடுக்கி = accelerator. [velocity = கதி; speed = விரைவு, வேகம், torque = திருக்கம்..... மாகனவியல் (mechanics) சொற்களை எல்லாம் இங்கு வந்து கொட்டிவிடலாம். ஆத நகர்வுச் (automotive) சொற்களைப் பட்டியலிட்டால் தேவையானவற்றை எடுத்துரைக்கலாம்.

நண்பர்களே! தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அவற்றை ஆள நமக்கு விருப்பம் வேண்டும். மேலைச் சொற்கள் எப்படி எழும்பின என்று பார்க்க வேண்டும். (இராம.கி இதேயே பார்க்கிறார் என்று குறைப்படுவதற்கு என்னிடம் மறுமொழி இல்லை. ஏதொன்றையும் செய்வதற்கு முன், தொடக்கம் எப்படியிருந்தது என்று அறியாமல் போக என் மனம் இடம் கொடுப்பதில்லை.) அதேபோன்ற நிலை நம்மிடமும் ஒரு காலத்தில் இருந்ததா? அவர்களின் நாகரிக வளர்ச்சிக்கும் நம் நாகரிக வளர்ச்சிக்கும் இடையே இருக்கும் இடைவெளி என்ன? இந்த இடைவெளியைச் சரி செய்ய நாம்விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் புது படிவாக்கத்திற்கு (application) சொற்களை உருவாக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். [அவர்கள் மாட்டுவண்டி - மிதிவண்டி - சகடு என்று முன்னேறினார். நாம் காலச் சூழ்நிலையால் மாட்டுவண்டியோடு நின்றுவிட்டோ ம். பிறகு இப்பொழுது மிதிவண்டி, சகடு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றின் உறுப்புக்களுக்குப் பெயர் தேடும் போது நம் மாட்டுவண்டியையும் அதன் உறுப்புக்களையும் கொஞ்சம் அலசி அங்கிருந்து தொடங்க முடியுமானால் நல்லது. (சில நேரம் முடியாமற் போகலாம்).]

அப்படிச் செய்வதன் மூலம் சொற்களை நம் வயப்படுத்தலாம். land lord என்பதை நிலப்பிரபு என்று சொல்லுவதைக் காட்டிலும் பண்ணையார் என்று சொல்லுவது நல்லதில்லையா?

வரட்டுங்களா?

அன்புடன்,
இராம.கி.

Monday, April 07, 2008

திசைகள் - 3

திசைகள் பற்றிய விதப்பான சொற்களுக்குப் போகுமுன், பலமுறை நான் உரைக்கும் அடிக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் இங்கே சொல்ல விழைகிறேன். [இதைநான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" எனும் அருமையான நூல். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.]

”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி அவர் நூலிற் சொல்வார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.)

நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்தெடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிட்டான். பின், மற்ற வித்துக்களில் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய், எண்ணெயெனும் பொதுச்சொல்லாகி, எள் அல்லாதவற்றில் கிட்டிய எண்ணெய்களையும் குறித்தது.

இதே போலக் "கீழிருக்கும் நிலம்" எனும் விதப்பான இந்தியப் புவிக்கிறுவ (geography) உண்மை "கிழக்குத் திசையைப்" பொதுமையாய்க் குறித்தது.  அதாவது, விதப்பான இடப்பொருள் குறித்த கீழ் எனும் சொல், நாளடைவில் கிழக்குத்திசை எனும் பொதுப்பொருளை பழக்கத்தாற் குறிக்கிறது. (எந்த மாந்தக் கூட்டத்தாரும் தாம் வாழும் புவிக்கிறுவின் கூறுகள், சூரியன் எழும்/சேரும் நகர்ச்சிகள் ஆகியவற்றை வைத்தே, திசை பற்றிய விதப்பான குறியீடுகளைத் தம்மிடை புரிந்து கொள்கிறார்.)

நாவலந்தீவின் புவியமைப்பு சற்றே விதப்பானது; இதன் வடக்கே இமயம், மேற்கே தொடர்ச்சி மலை (மராட்டியத்தில் இது சகயத்திரி என்று பெயர் கொள்ளும்; தெற்கே வரவர, வெவ்வேறு பெயர்களைப் பெற்று, ஆகத் தெற்கில், பொதிகை எனப் பெயர்கொள்ளும்.) என்பவை இருக்க, வட இந்திய நிலம், வடக்கிருந்து தெற்கே சரிந்தும், அதே போல தென்னிந்திய நிலம், மேற்கிருந்து கிழக்கில் சரிந்தும் உள்ளது. (பெரும்பாலான பேராறுகளும் கிழக்குக்கடலில் கலக்கின்றன. நருமதையும், தபதியும் புறனடைகளாய் (exceptions) மேற்குக் கடலிற் கலக்கின்றன. சிந்தாறோ வடக்கிருந்து தெற்கே ஓடிப் பாய்ந்து பின் அரபிக் கடலில் கலக்கிறது; ஆனாலும் அதன் ஓட்டம் மேலே உரைத்த நில அமைப்பிற்கு ஏற்றதாகவே அமைந்திருக்கிறது.)

இப் புவியமைப்பு, வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ் மாந்தர் மனத்திலும் ஆழப் பதிந்து போயிருக்க வேண்டும். மீவுயர்ந்த மேடு west - இலும், கீழ்ந்து கிடக்கும் பள்ளம் east - இலும் இருந்ததால், மேட்டின் அடிச்சொல்லான மேல்,  மேற்கு எனும் சொல்லையும், கிள்>கிழ் எனும் அடிச்சொல் கிழக்கு எனும் பெயர்ச் சொல்லையும், தமிழரிடையே உருவாக்கியது. இதேபோல் உயர்ந்து கிடந்தது உத்தரமாயும் (வடக்கு), தக்கித் தாழ்ந்துகிடந்தது தக்கணமாயும் ஆனது.

தமிழின் விதப்பான திசைபற்றிய சொற்களெலாம், வியக்கத் தக்க வகையில், நாவலந்தீவின் புவிக்கிறுவ (geographical) உண்மையைச் சுட்டிக் காட்டும். அந்த உண்மையே, மொழிதோன்றிய போதில், தமிழன் நாவலந்தீவுள் நுழைந்து விட்டான் என்ற தேற்றத்தை அழுத்தந் திருத்தமாகக் காட்டும். ஒருவேளை வேறிடத்தில் அவனிருந்து, மொழி உருவான பிறகே, நாவலந்தீவினுள் நுழைந்திருந்தால், மேற்கு, கிழக்கு சொற்கள், மேல் (up), கீழ் (down) பொருளில் எழ வாய்ப்பேயில்லை. (அப்புறமும் தமிழர் ஈரான் எலாமைட்டுகளிடமிருந்து பிரிந்துவந்தார் என்று சிலர் சொல்வது முரண்நகை.) மேலும், கீழுமென்ற இடச்சொற்கள் திசைகளைக் குறிப்பது நாவலந்தீவில் நம் முன்னோருக்கு அமைந்த இயற்கை நேர்ச்சிகள் ஆகும்.

ஆதி மாந்தன் ஆப்பிரிக்காவில் தோன்றி 70000 ஆண்டுகளுக்குச் சற்று முன் அங்கிருந்து நகர்ந்து, சிச்சிறிதாய் மற்ற கண்டங்களை, அடுத்த 65000 ஆண்டுகளில் நிறைத்தானென்று பெரும்பாலோர் சொல்லும் மேவுதி தேற்றமானாலும் (majority theory) சரி, மாறாக ஆப்பிரிக்கா, ஆசியா என்ற இரு கண்டங்களிலும் 100000 ஆண்டுகளுக்கு முன்தோன்றி, பின் நகர்ந்து, சிச்சிறிதாய் மற்ற கண்டங்களை நிறைத்தான் எனச் சிறுபாலோர் சொல்லும் நுணுதித் தேற்றமானாலும் (minority theory) சரி, "தமிழ்மொழி ஏற்பட்டபோது, நாவலந்தீவினுள் தமிழன் இருந்தான்" என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியும். ஏனெனில், தமிழின் திசைச்சொற்கள் எல்லாம் உலகின் வேறு  புவிக் கிறுவைக் குறிக்காது, இந்தியப் புவிக்கிறுவையே குறிக்கின்றன. இந்த உண்மை, தமிழ்ச் சொற் பிறப்பு ஆய்வால் பெறப்படும் உண்மையாகும்.

இவ்வலசலைச் சற்றே இடைநிறுத்தி, தமிழின் 4 திசைச் சொற்களையும் சரியாகப் புரிந்து, மீளத் தொடர்வோம். முதலில் வருவது கிழக்கு.

குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி
கிழக்கின் பெயரே கீழ்த்திசையு மாகும்

என்பது பிங்கலத்தின் 13 ஆம் நூற்பா. அகரவரிசைப்படி இது ஐந்திரம், கிழக்கு, குணக்கு, ப்ராசி, பூருவம் என்ற வரிசையில் அமையும். முதலில் ஐந்திரமெனும் இருபிறப்பியைப் பார்ப்போம்.

தமிழில் இல்தல் / இல்லுதல் வினைச்சொல் குத்தல், குடைதல், குழித்தல், தோண்டல், உள்ளீடிலாதுசெய்தல், இறங்கல் என்ற பொருள்களைப் பெறும். மலையில் குடையப்பட்ட குகைகளில் தான் விலங்காண்டி மாந்தன் முதலில் வாழ்ந்தான் என மாந்தவியலாளர் கூறுகிறார். மலைகளில் இயற்கையாலோ, மாந்தனாலோ, இல்லப்பட்டது இல்; இல்லிற் பெரியது இல்லம். இன்றைக்கு குகை எனும் தோற்றம் இல்லாவிடினும், அதன் நீட்சியாய் நாம் வாழும் வீட்டை இல் /இல்லம் எனும்சொல் குறிக்கிறதே? இல்லின் சொற்பொருள் அறிந்தால், வரலாற்றிற்கும் முந்தை நிலையில், குகையில் வாழ்ந்தகாலத்தில், தோன்றிய இயல்மொழி தமிழ் என்பது முற்றும் விளங்கும். So Tamil is definitely one of the oldest languages of the world. We don't say this arbitrarily; the etymology of the word "il" indicate so.

அடுத்து உள்ளீடு காணா நிலையை "இல்லா நிலை" என்று "இல்லை" எனக் குறிக்கிறோம் அல்லவா? [இல்லப்பட்ட இடத்தில் பருப்பொருளை வைப்பது, அல்லது நாம் அமைவது இருத்தல் எனப்படும். வெறும் இடத்திலிருந்து, பருப் பொருள் இல்லாத நிலை “இல்லை” என்று சொல்லப்படுகிறது. இது ஒரு வழிப் பொருள்.எனவே இருத்தல் வினை ஓரிடத்தில் பருப்பொருள் குத்தி இருப்பதை உணர்த்தும் சொல்லாகும். "அவள் அங்கு இருக்கிறாள்."

இல்-லில் விளைந்த நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்களை இங்கு விரித்தால் அவை பெருகும். ஆயினும் அவற்றை ஆழ்ந்துணர்வது மிகவும் தேவையாகும்.

இங்கே தொடர்புடைய சில பயன்பாடுகளைச் சொல்கிறேன். காட்டாக, இலந்தது இலந்தி; அது இலஞ்சியாகிக் குளப் பொருளைக் குறிக்கும். இலஞ்சி மன்றம் என்று சிலம்பிலும், மணிமேகலையிலும் வருகிறது அல்லவா? இலந்தது வேறுவகையில் திரிந்து இலவந்தி> இலவந்திகை ஆகி வெந்நீர் நிறைத்துக் குளிக்கச் செய்யப்பட்ட குளத்தைக் குறிக்கும். "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்" என்று ஒரு பாண்டிய மன்னனை புறநானூறு (55, 56,57,61,196,198) பேசும் (வெந்நீர்ச் செய்குளம் இருந்த ஊர்; இலவந்திகைப் பள்ளி என்ற ஊர் எது என இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை; ஆனால் பல்வேறு ஊகங்கள் ஆய்வுக்களத்தில் இருக்கின்றன.)

இனி இலந்தது இல்> இள்> இளி> இழி என்னும் திரிவில் இறங்கல் பொருளை உணர்த்தும். இறங்கல் என்பதும் கீழாதலே. தவிர, இல்> இள்> (இழு)> இகு என்ற திரிவில் தாழ்தல், தாழ்ந்துவிழல் என்ற பொருட்பாட்டைக் காட்டும். இகுத்தல் எனும் பிறவினை தாழ்த்தல் என்றும் பொருள் கொள்ளும். இகழ்தல் என்ற வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.

"மழை கீழிறங்குவது போலப் பகைவரின் வில் சொரியும் அம்புகள்" என்ற பொருளில் மலைபடுகடாத்தின் 226 ஆம் வரி "மாரியின் இகுதரு வில்லுமிழ் கடுங்கணை" என்று வரும். இதில் இகுதரல் என்பது கீழிறங்கும் பொருளையே கொடுக்கும். அதே மலைபடுகடாத்தின் 44 ஆம் வரியில், மயில் தோகையைத் தாழ்த்தும் காட்சியை விவரித்து "கணங்கொள் தோகையிற் கதுப்பு இகுத்து அசைஇ" என்ற வரிவரும். இகுத்தல் (=இறக்குதல்) என்ற பிறவினை இங்கே ஆளப்படுவதைப் பார்க்கலாம். இதே போல "நீர் இகுவன்ன நிமிர்பரி நெடுந் தேர்" என்ற ஐங்குறுநூற்றின் 465 ஆம் பாடல்வரி நீர் வீழுங் காட்சி உணர்த்தும்.

இகுதல் = மேலிருந்து கீழே வரல், இறங்கல் என்ற இவ்வினையின் நீட்சியாய் இகுதல்>ஈதல் வினை தமிழிலெழும். செல்வம் இருப்பவர் இல்லாதார்க்குக் கொடுக்கும் போது கை இறங்குகிறது. அதை இகுதல் என்கிறோம். இகுதல்  வினை ஈதலென்றும் நீளும். இகுதல்>ஈதலின் தொழிற் பெயர்ச்சொல் ஈகை என்றாகும். வாயிலிருந்து இகுந்துவரும் வாய்நீர் நாட்டுப் புறங்களில் ஈத்தா/ஈத்தை எனப்படும். பிள்ளை பெறுவதுகூட இகுதற் செயலே. தாயின் கருப்பை வாயிலிருந்து பிள்ளை இறங்குகிறதல்லவா? ஒவ்வோர் பிள்ளையிறக்கமும் (=பிறப்பும்), ஈத்து எனப்படுகிறது. "அவள் இவனை ஈன்றாள். இது எத்தனை யாவது ஈத்து?". பிறப்பென்பது பிள்ளையின் பார்வையில் சொல்லப்படுவது. ஈத்து, தாயின் பார்வையில் சொல்லப்படுவது. ஈனியல் என்ற சொல்லால் இன்று genetics ஐக் குறிக்கிறோமே? ஆங்கிலம்போன்ற மேலை மொழிகளில் சொல்லப்பெறும் நிலத்திணை yield - களும் கூடத் தமிழில் ஈத்து என்றே சொல்லப்படுவதை அகரமுதலிகள் வாயிலாய் அறிந்து கொள்கிறோம்.

இகுந்தது (=தாழ்ந்தது) என்பது ஈந்ததென்றும் வடிவங் கொள்ளும். இறங்கிய இடம் (=இறக்கமான இடம்), ஈந்து>ஈந்தமென்ற பெயர்ச் சொல்லை தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், அச்சொல் பதிவு இக்கால அகர முதலிகளில் இல்லை. இருந்த இடத்தைக் குறிக்கும் ’இருத்தம்’  தமிழ் அகர முதலிகளில் உள்ளபோது, ’ஈத்தப்’ பதிவு இல்லாதது வியப்பாகவுள்ளது. அதே பொழுது, மனையடி சாற்றத்தில் மனைநில அமைப்பை விளக்குகையில், தென்மேற்கு மூலை இருப்பதிலேயே உயரமாயும், வடமேற்கு மூலையும், தென்கிழக்கு மூலையும் அதற்கடுத்த உயரத்திலும், வடகிழக்கு மூலை இருப்பதிலேயே பள்ளமாயும் இருக்க வேண்டுமென்று சொல்லி, வடகிழக்கு மூலைக்கு ஈசான மூலை என்பார்.  ஈத்து என்றசொல், கிழக்கைக் குறித்தால் தான், ஈத்தானம்>ஈதானம்> ஈசானம், ஆகப் பள்ளமான வடகிழக்கைக் குறிக்க முடியும். [இது பற்றி மேலும் ஆய வேண்டும்; என்னால் உறுதியாக இப்போது சொல்ல இயலவில்லை.] [தமிழ் அகரமுதலிகள் இல்லாத, அதே பொழுது இருப்பவற்றிலிருந்து தருக்கவழி உன்னிக்கக்கூடிய சொற்கள் பலவும் உண்டு. ஈந்தம்/ஈத்தம் அப்படிப்பட்டது.]

ஈந்தம், ஈத்தம் என்ற சொற்கள் தமிழ் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படாது இருக்க, வடபுலப் பலுக்கல்திரிவு முறையில் உருவான ஈந்தம்>ஐந்தம்> ஐந்த்ரம்>ஐந்திரம் என்பது மட்டும் எப்படியோ தமிழ் அகரமுதலிகளில் பதிவாகியுள்ளது. எப்படிச் சிவம், சைவமென வடபுல முறையில் திரிவு பெற்றதோ, அதைப்போல, ஈந்தம் எனும் பள்ளச்சொல், ஐந்தம் எனத் திரிந்து ரகரத்தை வழக்கம்போல் உள்நுழைத்து ஐந்திரத் தோற்றம் காட்டும்.. [மேலை மொழியின் east உம் அப்படியே ஈத்துக்கு இணையாய் ஆவதை என்னால் வியக்காதிருக்க முடியவில்லை. (பொதுவாய் "த்து" எனும் மெய்ம்மொழி மயக்கம் "st" என்றே மேலை மொழிகளில் உருப் பெறுகிறது. இதற்குக் கணக்கற்ற எடுத்துக் காட்டுகள் உள்ளன.)]

அடுத்தது கிழக்கு. கிள்ளப்பட்டது கிழக்கு. கிள்ளுதல் என்பதும் பள்ளுதலே. கிள்தல், கீள்தலென்றும் நீளும். கிள்தல்>கிழிதல் என்றுமாகும். கிளறுதல், கிளைத்தல், கிண்டுதல், கீறுதல், கீழ்தல் ஆகிய வினைகளெலாம் கிள்தலின் நீட்சியே. இவற்றில் கிளைத்த சொற்களும் ஏராளமானவை. கிழக்கு என்ற சொல் பள்ளமான/இறக்கமான இடம் என்ற பொருளில் முதலில் எழுந்து, பின் திசைப்பொருளைச் சுட்டத் தொடங்கியது. ’கிழக்கு’ எல்லோருக்கும் தெரிந்த சொல்லானதால், பெரிதாய் அதை விளக்காமல் நகருகிறேன்.

கிழக்கிற்கு அடுத்தது குணக்கு. குள்ளுவது குள்+து எனும் நீட்சியில் குட்டாகி பின் குட்டமென நீண்டு பள்ளத்தைக் குறிக்கும். சேரலத்தில் பள்ளமான நாடு, குட்டநாடு எனப்படும். அதேபோல் குட்டு, குட்டை என்ற நீட்சியில் நீர்நிறைந்த பள்ளத்தைக் குறிக்கும். இன்னும் வேறுவகையில் குள்>குழி (மேலையரின் hole ஐயும் இங்கு எண்ணுங்கள்) என நீண்டு, பள்ளத்தைக் குறிக்கும். குள், குண்டாகிச் சிறு குட்டையைச் சுட்டும்; "குண்டுங் குழியும்"  சொற்றொடரைக் கேட்டிருக்கிறோமே? குள் வேர்ச்சொல் நீண்டு குள்>குளம் என்ற சொல்லை ஆக்கும். குட்டுவது குடைதலாகித் துளைக்கும் செயல் குறிக்கும். "என்னப்பா, இப்படிக் குடையுறே?" குண்டுதல், குண்ணுதலைக் குறித்து குண்ணம்> குணம் எனும் பெயர்ச்சொல் உணர்த்தித் தாழ்ந்த கீழ்த்திசையைக் குறிக்கும். குணக்கு என்ற பெயர் குண்ணுதல் / குணத்தலின் வழி தோன்றியது.

பதிற்றுப் பத்து 59 ஆம் பாட்டின் ஆறாம் வரி குண முதல் (=eastern horizon) என்ற சொல்லைக் காட்டும். குணவாயில் என்ற சொல் வஞ்சிக்குக் கிழக்கில் சேரநாட்டின் கிழக்குவாயிலைக் குறிப்பதாக அண்மையில் நண்பர் நாக. இளங்கோவன் ஒரு கட்டுரையில் நிலைநாட்டினார். முன்னால், அடியார்க்கு நல்லாரும் கிட்டத்தட்ட இதே பொருளைத்தான் சொல்லுவார். குணகடல் என்பது கிழக்குக் கடலைக் குறிப்பதாக நற்றிணை 153ஆம் பாடல் முதல் வரி, 346 ஆம் பாடல் முதல் வரி, புறநானூறு 17 ஆம் பாடல் 2ஆம் வரி ஆகியவை சொல்லும். அதே போலப் (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய காரிகிழாரின் புற நானூற்று ஆறாம் பாடல் "குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்" என்ற மூன்றாம் வரியாலும் அறியலாம்.

அடுத்தது ப்ராசி எனும் இருபிறப்பிச் சொல். இச்சொல்லே என்னை இக் கட்டுரைத் தொடர் எழுதவைத்தது. பள்ளுதல் என்பது தோண்டற்பொருளைக் குறிக்கும். நாளாவட்டத்தில் உழவைக் குறித்தது; ”பள்ளன்” உழவனைக் குறித்தது. (பின் முட்டாள்தனமாய் சாதிப்பெயராய் மாறிப்போனது.) பள்+நை, பண்ணையாகி பள்ளப்பட்ட நிலங் குறித்தது. பண்ணை உரிமையாளர் பண்ணையார் ஆனார். பள்குதல் பகுத்தலானது. பகுத்தல் = பிரித்தல். பகுத்தது பின் வகுத்தது என்றும் திரியும். பகுக்கப்பட்டது பாகம். பள் எனும் வேர், பதிதல் வினையை உருவாக்கும். பள்ளில் உருவான சொற்கள் பலவும் தமிழிலுண்டு. பள்ளிலிருந்தே பள்ளி என்ற நகரச்சொல் எழுந்தது. பள்+து> பட்டு>பட்டி எனும் நாட்டுப்புற ஊர்ப்பெயரும் அப்படி உருவானதே. பள்ளில் இருந்தே பட்டி வழி பத்தி>பதி எனும் ஊர்ப் பெயரும் உருவானது. இந்தியா எங்கணும் பள்ளி(>ஹள்ளி> வளி), பட்டி, பதி ஆகிய சொற்களின் திரிவுகள் ஏராளம் ஊர்ப்பெயர்களை உணர்த்துகின்றன. தமிழின் அகல் பரப்பை என்று நாம் உணருவோமோ, தெரிய வில்லை?

இனிப் பாசிக்கு வருவோம். கோட்டையைச் சுற்றி அகழப் பட்ட கால்வாய், பகழப் பட்டது எனும் கருத்தில், பகழி எனப்பட்டது. பகழி>பகயி>பகசி என்றும் திரியும். [ழகரம் யகரமாய்த் திரிவது வியப்பில்லை. வாழைப்பழம் வட ஆற்காடு மாவட்டத்தில் வாயப் பயம் என்று பலுக்கப் படுவதில்லையா?] அகல் எனும் மரப்பெயர் அகல்>ஆல் எனத் திரிந்ததைப் போல், பகல் எனும் பொழுது பகல்>பால் எனத் திரிந்ததை போல், பகசி எனும் பள்ளம் பகசி> பாசி எனத் திரிந்து நீர்நிறைந்த அகழியைக் குறிக்கும். இக்காலத் தமிழில் அகழி என்று மட்டுமே சொல்ல நாம் பழகியதால் பகழி, பாசி என்ற சொற்கள் நமக்குச் சட்டென்று பொருள் புரியாமற் போகின்றன.

2 அரசருக்கிடையே போர் ஏற்பட்டு, ஒருவர் கோட்டையை இன்னொருவர் பிடிப்பதையும், அதை மற்றொருவர் காக்க முற்படுவதையும் நொச்சி-உழிஞைப் போர் என்று இலக்கண நூலார் சொல்வார். பழந்தமிழ் மரபுப் படி கோட்டையைக் காப்பாற்றுவார் நொச்சியார் ஆவார். கோட்டையை முற்றுகிறவர் உழிஞையார் ஆவார்.

பெருங்கோட்டைகளைச் சுற்றி 3 அகழிகளாவது இருக்க வேண்டும் என்று குடிலரின் "அர்த்த சாஸ்திரம்" சொல்லும். (Kautilya, The Arthashastra, Penguin Classics, Penguin Books India, 1992 எனும் நூலை வரலாறு, பொருளியல் ஆர்வம் உள்ளவர் படியுங்கள்.) கோட்டைச் சுவரின் அடிப்பாகம் 72 அடியும், அதற்கப்புறம் 24 அடி இடைவெளி விட்டு மூன்றாம் அகழியும் (அகலம் 84 அடி), அதற்கப்புறம் 6 அடி இடைவெளி விட்டு இரண்டாம் அகழியும் (அகலம் 72 அடி), அதற்கும் அப்புறம் இன்னும் ஓர் 6 அடி இடைவெளி விட்டு முதலகழியும் (அகலம் 60 அடி) இருக்க வேண்டுமென அர்த்தசாஸ்திரம் அகழிகளுக்கு வரையறை சொல்லும்.

இதே அளவு இல்லாவிடினும், தமிழர் கோட்டைகளின் அகழிகளும் கிட்டத் தட்ட 200 அடிக்கு அகண்டவையாக இருந்திருக்க முடியுமென உணர்ந்தால் தான், உழிஞைப் போரெனத் தனித்துப் தொல்காப்பியம் குறிப்பிடுவது  புரியும். [அகழிப்பகுதி சிறு அளவினதாக இருந்தால் தனியாகப் போர் நடக்க வாய்ப்பில்லை. மற்ற போர்களுடன் இதை ஒரு பகுதியாய் ஆக்கிவிடலாம். இந்த உழிஞைப்போர் நீருக்குள் நடக்கின்ற செரு (battle) வையே குறிக்கிறது. (நீர்ச்செரு வீழ்ந்த பாசி நிலை என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணையியல், 1014 ஆவது நூற்பாவில் வரும் ஒரு தொடர்.)

"பகைவருடைய வலிகெட அவருடைய அகழியிடத்துப் பொருதலைக் கூறும் புறத்துறை" எனப் புறப்பொருள் வெண்பாமாலை 6.17 வின் கொளுவும் சொல்லும். தவிர, புறப்பொருள் வெண்பா மாலையின் 111 ஆவது வெண்பா,

"நாவாயும் தோணியும் மேல்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி உடலவும் - பூவார்
அகழி பரந்தொழுகும் அங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்"

என்று அப்போரின் அகற்சியைத் தெரிவிக்கும். இப்பாசியைக் (=பள்ளத்தைக்) கடந்தே கோட்டையைத் தாக்கும் போர்ப்படை செல்ல முடியும். அதனால், திடீரென்று கோட்டையைத் தாக்கும் போர்ப்படையைப் பாசிப்படை என்றே யாழ்ப்பாண அகராதி பதிவு செய்யும்.

இதுபோக, ’பாசகம்’ என்பது அகரமுதலிகளில் "கீழிருப்பது" என்ற பொருளில் வகுக்கும் எண்ணைக் குறிக்கும். பின்னால், பாசுதல் என்பதும் பகுத்தல் என்ற பொருள்கொள்ளும். அதன்விளைவாய் பாசிதம், வகுத்த ஈவு என்ற பொருள் கொள்ளும். அதோடு பாசனம் என்ற சொல் (நீர்ப் பாசனம் என்பது வேறு; அது பாய்தல் வினையால் வருவது), பங்கு என்ற பொருளையும் காட்டும்.

”பாசறை” சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ஆளப்படும். ஆனால் சங்க இலக்கியத்தில் வரும் செய்திகள் துணுக்குகளாகவே உள்ளன. சங்க இலக்கியம் காட்டும் பாசறைக்குள் யானைகள், புரவிகள், தேர்கள்,  காலாட் படையினர் எல்லோரும் உள்ளார், பருந்து பறக்கவியலா உயரம் வாய்ந்த அரண்கூடப் பாசறைக்குள் உண்டு. இப்படி இதுபோல் விவரிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆனால் முழு விவரிப்பை அர்த்த சாஸ்திரத்திலேயே பெற முடிகிறது.

அர்த்த சாஸ்திரம் ஆழ்ந்துபடித்தால் அதன்வழி சங்க இலக்கியச் சொல்லான பாசிக்கு இன்னொரு அணைவை நாம் கொண்டுசேர்க்க முடியும். அர்த்த சாஸ்திரம் மகதத்தையே பேசுகிறது என்பதற்காக ஒதுக்க வேண்டியதில்லை. மகதப் பேரரசு தமிழ் மூவேந்தர் காலத்தில் இருந்ததே. நாவலந்தீவில் மக்கள் இடையாட்டம் (interaction) எல்லாக் காலங்களிலும் உண்டெனில், தமிழர் நடைமுறைகளோடு மகத நடை முறைகள் ஓரளவாவது பொருந்தவேண்டும். அர்த்தசாஸ்திரத்தின் படி, பாசறை ஒரு base camp. போர்க்களத்திற்கு அருகில் பாசறையும்  நகரம் போல் அரைநிலைப்பு (semi-permanent) நிறுவனமாக தச்சர், கொல்லர், கம்மியர், இன்னபிற பணியாளர்களால் அமைக்கப் படுகிறது. இதற்கும் அகழி உண்டு (கொஞ்சம் சிறிதாக இருக்கும்.) உள்ளே தேர், புரவி, யானை, காலாட் படைகளோடு அரசன், அமைச்சர், படைத்தலைவர், ஆள், அம்பாரி சேனை, பெண்கள், கலைஞர் முதற்கொண்டு எல்லாரும் தங்கக் கூடாரங்கள் அமைக்கப் பட்டிருக்கும். பள்ளப்பட்ட இடத்தில் செய்யப்பட்ட அறை (பாசு + அறை =) பாசறை. பாசு>பாசி திரிவில் அகழியைக் குறிக்கும். இதைப் பாடிவீடு என்றுஞ்சொல்வர். படைவீடு = cantonment. பாடிவீடு= encampment. பிற்காலத்தில் பாடிவீட்டையும், படைவீட்டையும் ஒன்றிற்கு மற்றொன்று பகரியாய்ப் புழங்கியிருக்கிறார்.

[சென்னையில் மேற்கு அண்ணா நகர் அருகில் உள்ள பாடி என்னும் பகுதியும் ஒரு படைவீடே. இப்படைவீடு பல்லவர் காலத்தது. அங்கு படைவீட்டு அம்மன் கோயில் ஒன்றுண்டு. இன்று படவட்டம்மன் கோயிலெனப் பொதுவில் பலுக்குவார். அந்நகர்ச் சிவன் கோயில் இருக்குமிடம் திருவலிதாயம் எனப்  படும். வலிதாயம் என்றசொல் கூட அரணக் கூட்டம் (corpus of an army division) தங்கியிருந்த இடத்தையே குறிப்பிடுகிறது.]

பாசறை தமிழெனில், பின் பாசியும் தமிழாகத்தானே இருக்க முடியும?. பாசிக்குள் ரகரம் நுழைத்து ப்ராசி என்று ஆகிவிட்டது என்பதால், அது வடசொல் தோற்றம் காட்டுகிறது, அவ்வளவுதான். [இச்சொல் பிறப்பில் நான் பாவாணரோடு முற்றிலும் வேறுபடுவேன். எக்காரணமும் காட்டாமல் அவர் ப்ராசி - வடசொல் என்றுசொல்லி கூடலூர்க் கிழாரை (புறம் 229 ஆம் பாட்டு), தமிழர் வரலாறு எனும் நூலில் கலவுநிலைக் காண்டத்தில், மொழித்துறைப்  பகுதியில் வடசொல் வழக்கென்ற தலைப்பின் கீழ்ச் சாடியிருப்பார். இதை என்னால் ஒப்பமுடியாது. கூடலூ கிழார் பாசி என்ற நல்ல தமிழ்ச்சொல்லை ஆண்டிருக்கிறார் என்பதே என் புரிதல். அதை மேலே விளக்கியிருக்கிறேன்.]

இனி கூடலூர் கிழாரின் புறப்பாட்டு 229 இன் வரிக்கு வருவோம். மேலே எரிமீன் போகின்ற பாதையையும், அதன் போது வானில் இருக்கும் கோள், விண்மீன்களின் நிலையையும் கூறுமிடத்தில் "எரிமீன் கிழக்கிலும் போகாது, வடக்கிலும் நகராது விழுந்தது" என்ற கருத்தில், "பாசிச் செல்லாது ஊசி முன்னாது" என்று சொல்லுவார். பாசியின் விளக்கத்தை இங்கு பார்த்தோம்; ஊசியின் விளக்கத்தை இன்னொரு இடத்தில் பார்ப்போம்.

அடுத்த சொல் பூருவம்.

புகருதல்>பூர்தல் என்ற சொல்லும் குற்றுதல், தோண்டுதல் என்ற பொருளையே தரும். புரைதல் என்ற சொல்லும் அதே பொருளையே தரும். புரை (= pore) சொல் துளை என்ற பொருளையும் கொடுக்கும். பூரியது = தாழ்வானது என்ற பொருள் கொள்ளும். "சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும்" என்பது. குறள் 1206க்கு மணக்குடவர் உரையில் வரும் ஒரு வாசகம். பூரியர் என்பவர் இழிந்தவர் என்று பொருள் கொள்ளப் படுவர். "பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்" என்பது கம்பராமாயணத்தில் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப் படலம் 116 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இங்கே பூரியர் என்பது இழிந்தவர் என்ற பொருளிலேயே வருகிறது. அது போக திருக்குறள், அறத்துப்பால், துறவற இயல், அருள் உடைமை அதிகாரத்தில்,

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

என்னும் முதற்குறளில், பூரியார் என்ற சொல் இழிந்தவர் என்ற பொருளில் வருகிறது. எனவே பூரிய திசை என்பது இழிந்த திசை, அல்லது இறங்கிய திசை. பூருவம் என்பது இறங்கிய பக்கம் அதாவது கிழக்குப் பக்கம்.

இனி அடுத்த பகுதியில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, April 03, 2008

திசைகள் - 2

திசைகளைப் பற்றிய பொதுவான சொற்களாய்

மாதிரம், திகை,திசை, வம்பல், விசும்பே,
ஆசை, புலமே, உலகு,கோ, காட்டை,
அரிதம், அம்பரம், ககுபம், அனைத்தும் திக்கே

என்று 14 சொற்களை, பிங்கலநிகண்டு 11 ஆம் நூற்பாவில் பதிவுசெய்யும். எழுத்து வரிசையில் இவற்றை "அம்பரம், அரிதம், ஆசை, உலகு, ககுபம், காட்டை, கோ, திக்கு, திகை, திசை, புலம், மாதிரம், வம்பல், விசும்பு" என்று முறைப்படுத்தலாம். [இவை தவிர இன்னும் சில சொற்களும் இருக்கின்றன; அவை சாலை, வழி குறித்து அமைபவையாகும். அவற்றையும் திசை என்ற பொருளில் தான், பல பொழுதுகளில் நாம் பேச்சுவழக்கிற் கையாளுகிறோம். காட்டாக நேரி, நெறி என்ற சொற்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவற்றைக் கடைசியில் பார்ப்போம்.]

முதலில் வருவது அம்பரம். உம்புதல் என்பது மேலே போதல். , உம்பு/உம்பர் என்பவை மேலென்று பொருள்கொள்ளும். உம்பரம் அம்பரமாய்த் திரிந்து, மேலுள்ள இடத்தைக் குறிக்கும். up, upper என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அதையொட்டிய மேலைச் சொற்கள் எல்லாம் இந்த உம்பு, உம்பரை இணை கொண்டே அமையும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவில் இதுவும் ஒன்று. (வறட்டுப் போக்கில் இரு மொழிக் குடும்ப உறவை மறுப்பவரும் இருக்கிறார்.) உகர/அகரத் திரிவு மேலை மொழிகளிலும் இச்சொல் குறித்து உள்ளது.

அம்பரர்>அம்மரர்>அமரர் என்ற திரிவில், அமரர் எனுஞ் சொல் மேலுலக மீமாந்தரைக் குறிக்கும். உம்பரத் திசை>அம்பரத் திசை என்பது, மேல் நோக்கிய திசை. இங்கே அம்பரம் என்பது விதப்புப் பொருளைத் தவிர்த்து, பொதுமைப் பொருள் சுட்டுகிறது. [தில்லைச் சிதம்பரத்தை சித்+அம்பரம் என்று பிரித்துச் சில பண்டிதர் வானம், ஆகாயம் என்றெலாம் சொற்சிலம்பம் விளையாடுவார். அது ஓர் ஏமாற்றுப் பாடம். உண்மையில் அக்கோயில் சிறு+அம்பலம்= சிற்றம்பலமாய் முதலிலிருந்தது. பின், சிற்றம்பலம்> சித்தம்பரம்>சிதம்பரம் என்று வடபுலத்தார் வாயில் திரிந்து, இன்று நம்மவரே சிதம்பரமென்று சொல்லி அமைகிறோம். நடவரசத் திருமேனிக்கும் முன்னால் அங்கே ஒரு மூலத்தானம் உண்டு. பெரும்பற்றப் புலியூர் என்பது தில்லை ஊரின் முந்நாட் பெயர்.]

அடுத்தது அரிதம். இதை harit = point of compass என்று சென்னைப் பல்கலைக் கழகக் கலைக்களஞ்சியம் (lexicon) குறிக்கும். ஆனால் வடமொழிச் சொற் பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் இதற்குச் சரியான விளக்கமும், ஊற்றுகையும் (source) கிடைக்கவில்லை. காந்த ஊசி என்ற பொருளை எங்கிருந்து சொன்னார் என்று விளங்கவில்லை; ஒருவேளை மூல நூல்களைப் பார்த்தாற் கிடைக்குமோ, என்னவோ? தமிழில், அரிதல் என்பது வெட்டுதல், நறுக்குதல் என்ற வினைகளைக் குறிக்கும். அரி என்பது ஒரு பயன்பாட்டில் அரிந்தெடுத்த, மிகத் தட்டையான, திண்ணம் (thickness) குறைந்த, ஒரு தகட்டுக் கூர்ப்பொருளைக் குறிக்கும். இதுவே கொஞ்சம் பொருள்நீண்டு அம்பு என்னும் பொருளையும் குறிக்கும். கூர்ச்சரத்தில் (Gujarat) தோலவீராவில் அம்புக்குறி போட்ட பெருங் கற்பலகை ஒன்று சிந்துவெளி நாகரிக அடையாளமாய்க் கிடைத்தது. இன்றும்கூட ஒரு சதுக்கத்தில் அம்புக் குறிப் பலகைகள் வைத்து, அங்கிருந்து விலகும் வெவ்வேறு மறுகுகளைக் குறிக்கிறோம் அல்லவா? ஒவ்வோர் மறுகும் [மறுகு>மறுகம்>மார்க்கம் எனும் வடமொழிச்சொல்.] ஒவ்வோர் திசையைத் தானே குறிக்கிறது? ஆக, அம்பு காட்டும் திசை அரிதமானது போலும். [அரியின் தொடர்புள்ள இன்னொரு சொல் ஆரம்; சக்கரத்தில் வரும் ஆரம் - radius. இதை விளக்கப் போனால் இன்னும் விரியும், எனவே விடுக்கிறேன்.]

அடுத்தது ஆசை. அகலமான மரம் ஆலமரமெனத் தமிழிலானது போல், அகுசை>அகசை என்பது இங்கு ஆசையாயிற்று. உள்ளே பொதிந்திருக்கும் வினைச்சொல் அல்குதலாகும். இது, அல்குதல்>அஃகுதல் = சுருங்குதல், குவிதல், கூராதல் என்று பொருள்கொள்ளும். [பொதுவாக ஒவ்வொரு பெயர்ச் சொல்லிற்குள்ளும் வினைச்சொல்லைத் தேடுவது நல்ல பழக்கம். அது நம் மொழிநடையைச் சிறக்க வைக்கும். பல்வேறு சொற்களுக்கு இடையே உள்ள பொருந்துமை அல்லது பொருந்தாமையும் புலப்படும்; விதப்புமை (specificity) என்பதும் விளங்கும்; நம்முடைய சொற்றொகுதியும் நாளடைவிற் கூடும்.]

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

எனும் 175 ஆம் குறளில் ’அஃகுதல்’ கூர்மைப் பொருளைக் குறிக்கிறது. அஃகை> அஃசை> அகுசை> அகசை> ஆசை என்பது தமிழில் ஏற்படக்கூடிய இயல்பான திரிவே. கூர்ப்பொருள் இங்கே திசை குறித்தது. இருந்தாலும் இற்றைத்தமிழில், ஆசையின் வேறு பொருட்பாடுகளைக் கருதி, அகுசை என்றே திசைப்பொருளைச் சொல்லிப் பயிலலாம்.

மூன்றாம் சொல் உலகு. இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு பாதையில் நாம் நடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். நம் கண்களுக்கு நேர்வருவது ஒரு திசை. சற்று திரும்பி, வேறு பக்கம் பார்த்தால், ”இன்னொரு திசையை நோக்குகிறோம்” என்கிறோம் அல்லவா? இப்படி ஒவ்வோர் திரும்பலும் ஒவவோர் திசையை நோக்குவதே. [திரும்பல் என்பதே வட்டப் பொருளின் வளர்ச்சி தான். ஒவ்வோர் பாகையும், அதன் நுணுத்தமும் (minute), ஒரு திசை தானே?] மேலை மொழிகளில் to turn இக்கு இணையான சொற்கள் எல்லாம் திரும்பலைக் குறிக்கும். மேலைமொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் உள்ள உறவு turn எனுஞ் சொல்லிலும் தென்படும். திரும்பலின் இன்னொரு தோற்றம் திரிதல்; மலையாளத்தில் "திரிஞ்ஞு வரு" என்பார். இப்படித் திரிந்து வரும் செயல் உலவுதல் (to go around) என்றும் தமிழில் சொல்லப் படும். உலத்தலும் வட்டமாய் வருவது தான். உலவுதல் எனும் வினை, உலா என்ற பெயர்ச்சொல்லையும் உருவாக்கும். கோயில்களுக்கு வெளியே உலவிச் சுற்றிவரும் திருமேனியை உலாத் திருமேனி (=உற்சவ மூர்த்தி; உலாத் திருமேனி போய், உற்சவ மூர்த்தியே இப்பொழுது ஊரெங்கும் புழங்குகிறது.) என்பார்கள். உலவெனும் பெயர்ச்சொல் உலகென்றும் திரியும். உலகெனும் சொல் திசையைக் குறித்தது இத் திரும்பலால் தான்.

அடுத்தது ககுபம் என்னும் இருபிறப்பிச் சொல். தமிழில் கழு என்பது கழி. [கழுவேற்றப் பட்டான் என்பது he was spiked என்ற பொருள்படும். நண்ணிலக் கடல் (நள் + நிலம் = நண்ணிலம் = mediteranian) நாடுகளில் வேண்டாதவரைக் குறுக்கையில் (cross) அறைவது ஒருகாலத்தில் பரவலாய் இருந்தது போல், நாவலந்தீவில் கழுவேற்றும் தண்டனை் பரவலாய் இருந்தது.] பல வட்டாரங்களில், பெரிய பாதைகள் பிரியும் இடத்தில், குச்சி, கழிகளை நாட்டுப்புறங்களில் நட்டு வைத்திருப்பார்; பக்கத்தில் ஒரு சுமைதாங்கிக் கல்லும் இருக்கும்.

கழுவிற் பெரியது கழுவம். ழகரமும், ககரமும் ஒன்றிற்கொன்று போலியாய் வடபால் திரியும். முழுத்தம் (=3 3/4 நாழிகை =1 1/2 மணி) என்ற கால அளவுச் சொல், முழுத்தம்> முகுத்தம்> முகூர்த்தம் என்று வடமொழியிற் திரிவது போல, கழுவம் என்ற தமிழ்ச்சொல்லும் கழுவம்> கழுபம்> ககுபம் எனத் திரிந்து நமக்கு வடமொழித் தோற்றம் காட்டுகிறது. (சிவகங்கை மாவட்டப் பெண்கள் மட்டும் இல்லையெனில் முழுத்தம் என்றசொல் தமிழில்  மறைந்து இருக்கும் எனலாம்; நாமும் முகூர்த்தத்தின் தலைகீழ் கதையை படித்துக் கொண்டு இருப்போம்.) (ஒரு திருமணத்தில் நடக்கும் முகனச் சடங்குகள் எல்லாம் ஒரு முழுத்தத்துள் முடியவேண்டும் என்பது நம் முன்னோர் மரபு. இதை அறியாத பலர் 3/4 மணி நேரம், 1 மணி நேரம் என்றெலாம் குறிப்பது அறியாமற் செய்கின்ற செயலே.)

அடுத்தது காட்டை என்னும் சொல். நம் நாட்டுப்புறங்களில், முன் சொன்னது போன்ற கழி, அதாவது திசை காட்டும் குச்சி, காட்டை எனப்படும். கோயில், அரண்மனை, நகரம் ஆகியவற்றைச் சமைப்போர், அவ்விடத்தில் சரியான கிழக்குத் திசையை அறிவதற்காகவும், கதிரவன் செவ்விய உச்சிக்கு (right zenith) வரும்நாளை அளப்பதற்கும், நட்டுவைக்கும் குச்சிக்குக் காட்டை - காட்டுத் துரும்பு - என்றுபெயர். வடமொழியில் kaas'ta என்பார். (தமிழக அரசு வெளியிட்டுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலியில் இதற்கான விளக்கமுள்ளது.) பேச்சு வழக்கில் கைகாட்டி மரம் என்கிறோம் அல்லவா? அந்தக் காட்டியும், இந்தக் காட்டையும் ஒன்றுதான். இது எல்லை என்ற பொருளும் கொள்ளும்; தவிர ஒரு பழைய கால அளவும் காட்டை எனப்படும். அந்த அளவைக் கீழே கொடுத்துள்ளேன். (இதுவும் முன்சொன்ன செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் எடுத்தது.)

1 கணம் = இமையளவு
4 கணம் = 1 உயிர்
4 உயிர் = 1 நொடி = மாத்திரை
12 நொடி = 1 காட்டை
2 காட்டை = 1 வினாழி
60 வினாழி = 1 நாழிகை (24 நுணுத்தம் = 24 minutes)
3 3/4 நாழிகை = 1 முழுத்தம்
2 முழுத்தம் = 1 யாமம்
4 யாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்

மேலுள்ள கால அளவுத் தொகுதியில் ’முழுத்தம்’ இருப்பதையும் காணுங்கள்.

அடுத்த சொல் கோ. இது cardinal points, direction என்ற பொருட்பாடுகளைக் குறிப்பதாக அகரமுதலிகள் சொல்லும். குவ்வுதல் என்பது குவியும் வினையைக் குறிக்கும் சொல். குவ்வியது, குவளியது ஆகிப் பின் குவடு>கோடு என்ற பெயர்ச்சொல் வழி, குன்றைக் குறிக்கும். குவியல் (heap), குவியம் (focus) என்ற பெயர்ச்சொற்கள் நம் எல்லோருக்கும் தெரியும். புவ்வியது (=மலர்ந்தது) புவ்வு>பூவு ஆகிப் பின் பூ ஆனது. (இன்னமும் தென்பாண்டி மக்கள் பூவு என்றே சொல்வர்; பூ என்று நிறுத்த அவருக்குத் தெரியாது; அவர் பலுக்குவதைக் கேட்காவிட்டால் பூவின் சொற்பிறப்பு யாருக்கு விளங்கியிருக்கும்?) இதுபோல குவ்வு>கோவு>கோ என்று ஆகும். மீண்டும் கூர்ப்பொருள் உள் னிப்பதை உணரலாம். ஓரிடத்தில் நம் பார்வை குவ்வி, அதை நோக்கிப் பார்க்கும் போது அத்திசை கோ என்ற சொல்லால் புரிந்து கொள்ளப் படுகிறது.

இனி திக்கு, திகை, திசை என்று மூன்று சொற்களை ஒரு தொகுதியாகப் பார்க்கலாம். திரும்புதல் என்று முன்பார்த்த வினையின் அடிவேர்ச்சொல் துல்>தில் என்பதே. தில்> திர்> திரு> திருக்கு, தில்> திர்> திரு> திரும்பு, தில்> திர்> திரு> திருத்து எனப் பல்வேறு ஈறுகள் கொண்ட சொற்களை இங்கு எண்ணிப்பார்க்கலாம். அதேபோல தில்> தில்க்குதல்> திக்குதல் என்பதும் to turn என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு திக்கும் ஒரு turning தான். இன்னொரு வளர்ச்சியில், தொடர்ந்து சீராய்ப் பேசிவந்த ஒருவன் மேற்கொண்டு அதேபடி போகமுடியாமல் தடுமாறுவதையும் திக்குதல் என்றே திசைப்பொருளில் (ஆனால் சிந்தனை ஒட்டத்தைக் குறிப்பது போல்) ஆள்கிறோம் அல்லவா? திரிகை என்பது change என்ற பொருளைக் குறிக்கும். திருகு என்ற சொல் கன்னடத்தில் turning, திசை என்பதைக் குறிக்கும்.

திக்கு என்பது திக்கை என்ற பெயர்ச்சொல்லை மேலும் உருவாக்கி, மீண்டும் திகைதல் என்ற வினைச்சொல்லை உருவாக்கும். சில இடங்களில் திக்கை என்பது, ஒரு ‘முட்டுத் திக்கை’ ஆகிவிடும். அதனால் திகை என்பதற்கு முடிவு, எல்லை என்ற பொருளும் அமையும். திகைதல் = முடிதல், தீர்தல்.(தீர்தல் என்பது கூடத் தில் என்னும் வேரில் தோன்றிய சொல் தான்.) "அதன் விலை இன்னும் திகையவில்லை" என்பது தென்னாட்டு வழக்கு. திகையம்> தெகையம்> தேயம்> தேசம் என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம், மக்கள் கூட்டம்.

ஆகத் தேசம் என்றசொல்லின் பிறப்பு தமிழில் உள்ளது. அதை அடையாளம் காணத்தான் ஆட்கள் இல்லை. பெருமை தெரியாமல் நாம் வெறுமையாய்க் கிடக்கிறோம். தேசத்தில் கிளைத்த சொற்கள் பல இந்திய மொழிகளில் உண்டு. இன்றைக்கு தேசம் என்பது nation என்றும், நாடு என்பது country என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது. இந்தியா என்பது ஒரு பல்தேச நாடு. இதில் ஒரு காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாய்ச் சொல்வது தொன்மம்.

தயக்கம்>தியக்கம் எனும் சொல் கூட திகு>தி்க்கு எனும் இச் சொற் குடும்பத்திற் சேர்ந்ததே. செய்வதறியாது நிற்கும் நிலையைக் குறிக்கும்.

ககர/சகரப் போலியில் திகை, திசையாகும். இற்றைத்தமிழில் பரவலாய்  திசை அறியப்படும். திசையன்விளை =  தென்பாண்டி நாட்டில் ஓர் ஊர்.

அடுத்த சொல் புலம். புல்>புலம் என்பது சொல்வளர்ச்சி. நாம் ஏதோ ஓர் இடத்தில் நிற்கிறோம்; அதற்கப்புறம் போகும்வழி நமக்குத் தெரியவில்லை; இருந்தாலும் தூரத்தில் ஏதோ ஒன்று புலப்படுகிறது. இப்படிக் கண்ணுக்குப் புலப்படுவதாலே புலம் எனும் சொல் திசையைக் குறித்தது. (கண்ணுக்கும், பார்வைக்கும், திசைக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

என்று சொல்கிறதல்லவா, 43-ஆவது குறள்? இங்கே தென்புலத்தார் என்பது நம் முன்னோரைக் குறிப்பது. நம் முன்னோர் இறப்பிற்குப் பின் தென்திசை சேருகிறார் என்பது தமிழரின் தொன்மம். ஆண்டில் ஒரு நாள் பிண்டம் கொடுத்து தென்புலத்தாரை வணங்குவது தமிழர் மரபு. இன்றும் கூடக் குமரி மாவட்டத்தில் இப்பழக்கம் இடையறாது நீர்நிலைக் கரைகளில் கடைப் பிடிக்கப் படுகிறது. மற்றவர், முன்னோர் இறந்த திகழி(=திதி)யில் பிண்டம் கொடுப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறார். பிண்டம் கொடுப்பதன் பெயர்கூட வடசொல்லாய்த் திரிந்து தர்ப்பணமாகிப் போனது. (உண்மையில் அது தருப் பிண்டம்> தர்ப்பண்டம்> தர்ப்பண்ணம்> தர்ப்பணம் என்ற திரிவில் புரிந்துகொள்ள வேண்டிய சொல். எப்படி எல்லாம் தமிழ்மூலம் அழிந்தது, பாருங்கள்?) புலம் என்ற சொல் திசைக் குறிப்பது இப்படித்தான். கிட்டத்தட்ட region எனும் பொருள். வடபுலம், தென்புலம், மேம்புலம், கீழ்ப்புலம் என்ற சொற்கள் இப்படித்தான் பயிலுகின்றன.

அடுத்தது மாதிரம். மறுதல் வினை திரும்பற் செயலைக் குறிக்கும். மறித்தல்  பிறவினையாகி திருப்புதல் பொருளைக் கொடுக்கும். முன்னே சொன்னது போல் மறுதல் > மறுகுதல் ஆகி அங்குமிங்கும் திரும்பி நடைபோடுவதைக் குறிக்கும். "என்ன இவன் ஒன்றுஞ்சொல்லாது மறுகிக் கொண்டே உள்ளான் ?" மறுகு>மறுகம் என்ற தமிழ்ச்சொல் மார்க்கமென வடபால் திரிந்து தில்லி நகரெங்கும் Marg என்று அடையாளம் காட்டி நிற்கிறது. நாம் தான் மூலம் தெரியாது உள்ளோம். மறுதல் வினை இன்னோர் ஈற்றில் மறுதம்>மாறுதம் ஆகிப் பின் (பொக்குளம் கொப்புளம் ஆவது போல்) metathesis முறையில் திரிந்து, றகரம் ரகரமாய் மெலிந்து, மாதிரம் ஆகும்.

அடுத்தது வம்பல். எந்த ஓர் இடத்திலும் முன்வந்து தெரியும் பொருளை அடையாளம் காட்டியே திசை காட்டுகிறோம். "உங்கள் இடத்தை அடையக் கவனிக்க வேண்டிய Land mark என்ன?" முன்தள்ளி இருப்பதை எப்படிச் சொல்லுகிறோம்? "அதோ, அந்தத் தொலைவில் பொம்மிக் கொண்டு ( = பொம்பிக் கொண்டு), பம்மிக் கொண்டு (= பம்பிக் கொண்டு) தெரிகிறது பார் அம்மரத்திற்கு அருகில் நாம் போக வேண்டும்" பம்பல் (=to show prominent) என்ற சொல் வம்பல் என இயல்பான பகர/வகரப் போலியில் மாறுகிறது. (Landmark =  பொம்பல் என்று சொல்ல எத்தனை பேர்  முன்வருவோம். லாண்ட்மார்க் என்றோ இடக்குறி என்று சொல்வதற்கே பலரும் முயலுவார்.) பரன் என்பது மேல் என்னும் பொருளில் வரன் என்றும் திரிகிறது அல்லவா?

வம்புதல் என்பது முன்வந்து தெரிந்த காரணத்தால் புதிதாதல் என்றும் பொருளுங் கொள்ளும். "வம்ப மோரியர்" என்ற சொல்லால் மகதத்தில் நந்தருக்கப்புறம் புதிதாக எழுந்த கூட்டத்தைச் சங்கத்தமிழர் அழைத்தனர். இன்னொருவரை வம்பரென்று யார் அழைப்பார்? நாட்பட இருந்த பழையவர் தானே புதியவரை அப்படி அழைக்க முடியும்? அப்புறம் எப்படி, மோரியர்கள் சங்க காலத்திற்கு முன்னவர் ஆனார்? என்ன, கந்தர கோளம், பாருங்கள்? வம்பரெனும் தமிழ்ச் சொற்பிறப்பைச் சரியாகப் புரிந்து கொண்டால், சங்க காலம் மோரியருக்கும் முந்திய நிலையில் தொடங்கியிருக்கக் கூடிய ஒன்று என்று புரிந்துபோகாதோ? இதைவிடுத்து, இன்று நாம் கற்றுக் கொள்ளும் வரலாறு தலைகீழ்ப் பாடமாய் அல்லவா உள்ளது? தாத்தனைப் பேரன் என்று சொல்லும் நடைமுறையில் வம்பரை முந்தையராக்கி், பழையரைப் பிந்தையராக்கி, இந்திய வரலாற்று ஆசிரியர் குழப்படியல்லவா பண்ணிக் கொண்டு இருக்கிறார்? நாமும் அவரோடு சேர்ந்து ஊம் கொட்டி ”ஆமாம் சாமி” போடுகிறோமே?. ஒரு முட்டாள்தனமான புரிதலுக்கு தமிழரும் துணை போகிறோமே? (என்செய்வது? அவ்வளவு ஏமாளியாகத் தமிழர் இருக்கிறோம், சரியாக ஆய்ந்தால் நந்தர் காலத்திலேயே சங்க காலம் தொடங்கிவிடுகிறது. இருந்தாலும் தமிழரைப் புறந்தள்ளியே இந்திய வரலாறு எழுதப்படுகிறது.)

திசைபற்றிய 14 ஆவது சொல் விசும்பு இது areal region, sky என்பதைக் குறிக்கிறது. ஒருகுன்றின் மேட்டுநிலையில் இருந்து கீழ்நோக்கிப் பார்த்த நிலையில், "அதோ அங்கு வியல்ந்து விரிந்து தெரிகிறதே சமவெளி அதைநோக்கி நாம் போகவேண்டும்." என்று சொல்லலாம் தானே?

மேலே மலையின்மேல் பரந்து கிடந்து மக்கள் வாழும்படி ஒரு மிசைநிலமாய் [ = table land like in Cape town, S.Africa, அல்லது புனைக்கு (Pune) அருகில் சகயத்திரி மலையில் பார்க்கும் மிசைநிலம் போன்றது] இருக்கும் இடம் பரம்பு> பறம்பு. பறம்பு இருக்கும் மலை பறம்பு மலை. பறம்பு மலையில் தன்னைத் தானே புரந்து கொள்ளும் நிலையில் விளைபொருட்களும், மற்றவையும் கிடைத்தமையாலே ஒரு மாதத்திற்கு மேல் மூவேந்தர் முற்றுகையிட்டும் வள்ளல் பாரியால் தாக்குப்பிடிக்க முடிந்தது என்று புறப்பாட்டுக்களால் அறிகிறோம். ஆக விரிந்துபரந்து மிசைநிலமாய்க் கிடந்தது பறம்பு. அப் பறம்பு மலை இன்று பிரான் மலை எனப்படுகிறது. பறம்பக்குடி>பரமக் குடி ஆனது வேறு விளக்கத்தைக் காட்டும். [அந்த மாற்று விளக்கத்தை இங்கு தவிர்க்கிறேன்.]

பறம்பைப் போல இங்கு வியல்ம்பு>வியம்பு>விசும்பு என்பது விரிந்து கிடக்கும் இன்னொரு வகை நிலம். பின்னால் இதே சொல் நிலத்திற்கு மாறாய் விண்ணைக் குறிக்கவும் பயன்பட்டது.

திசைகள் பற்றி பிங்கல நிகண்டு உரைத்த 14 சொற்களைச் சொன்னதோடு, முன்னே சொன்னது போல் நேரி, நெறி என்ற சொற்ளைப் புறனடையாகச் சொல்லுகிறேன். இவையும் தமிழில் திசையைக் குறிப்பனவே.

திருநெல்வேலி தாண்டி நாகர்கோவில் போகும் வழியில் 4 திசைகளாய்ப் பிரியும் ஓரிடத்திற்கு நான்குநேரி என்று பெயர் (விண்ணவத் தலம்); இதே போல தூத்துக்குடி/நெல்லையில் இருந்துவரும் சாலைகள் சேர்ந்து திருச்செந்தூரை நோக்கி (ஆறுமுகனை நோக்கி) இட்டுச் செல்லும் திசையைக் காட்டும் ஊர் ஆறுமுக நேரி. இது போலப் பல்வேறு நேரிகள் தென்பாண்டி நாட்டில் உண்டு.

நேரி, பருப் பொருட்திசையைக் காட்ட, நெறி, சிந்தைப் பொருட்திசையைக் காட்டும். அற நெறி, அன்பு நெறி, நெறிபிறழ்தல் என்றெலாம் சொல்கிறோம் அல்லவா? இதிலெலாம் சிந்தைப் பொருள் திசையைக் காட்ட நெறியே பயன் படுகிறது. இச்சொல்லை திரைப்பட நெறியாளர் தங்கர் பச்சான் கூட, தன் ஆக்கங்களில் கையாளுகிறார்; நெறியாள்கை = direction என்று அவர் போட்டுக் கொள்கிறார். திரு. சீமானும் இதேபோலப் போட்டுக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். (நானும் கூட என் அலுவல் பொறுப்பில் தமிழில் எழுத வேண்டிய இடங்களில் செயல் நெறியாளர் (executive director), நுட்பியல் நெறியாளர் (technical director), புறத்திட்ட நெறியாளர் (project director), நிர்வாக நெறியாளர் (managing director) என்று வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். (நிர்வாக நெறியாளர் என்று சொல்ல விழையாத இடங்களில் மானகை நெறியாளர் எனலாம்.) ஒரு நிறுவனம் (corporation) தொடர்பான எல்லாப் பயன்பாடுகளுக்கும் நெறியாளர் என்பதே சரியாக வரும். இயக்குநர் என்ற சொல்லாக்கம் சரியாக அமையாது. ஒரு நிறுவனத்தில் director, operator என்ற இருவரும் உண்டு. முதலாமவரை நெறியாளர் என்றும் இரண்டாமவரை இயக்குநர் என்றும் சொல்வதே பொருள் பொதிந்து இருக்கும்.)

இனி அடுத்த பகுதியில் விதப்பான திசைகளைப் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 02, 2008

திசைகள் - 1

"பழங்கால, இடைக்கால இந்திய வடிவியல்" எனனும் பொத்தகத்தை (Geometry in Ancient and Medieval India - Dr.T.A.Sarasvati Amma, Motilal Banarsidass Publishers, Delhi, First Edition 1979, Second Revised Edition, 1999, Reprint 2007.) படித்துக் கொண்டிருந்தேன். [அந்த நூலைப் பற்றியும், அதில் வரும் செய்திகள் பற்றியும் இன்னொரு இடுகையில் பேசலாம்.] அந்தப் பொத்தகத்தில் வரும் ”ப்ராசி” என்ற சொல் இத்தொடரை எழுத எனக்குத் தூண்டுகோலாய் அமைந்தது.

வடிவியற் கணிதம் நாவலந்தீவின் பல பகுதிகளில் எழுந்திருந்தாலும், அதன் நூல்கள் வட்டார மொழிகளிலன்றி, சங்கதத்திலேயே ஒருகாலம் எழுதப் பட்டன. (இது இரோப்பாவில் இலத்தீனிலும், கிரேக்கத்திலும் ஒரு காலத்தில் எழுதியதைப் போன்றது.) ஆனாலும் வடிவியற் கலைச்சொற்கள் பலவும் சங்கதத்திற் கிளைத்தவை அல்ல. அவற்றின் வேர்கள் தமிழ் போன்ற வட்டார மொழிகளில் இன்றுமுள. ஆழ்ந்துபார்த்தால், தமிழில் இவை மிகுதியாகவே உள்ளன.

வடிவியலைப் பயனாக்கிய நம்மூர்த் தச்சர், கொல்லர், சிற்பிகள், தாவதிகள் (>ஸ்தபதிகள்) ஆகியோர் தமிழ்வழி தான் தம் தொழில்களைப் புரிந்தார். அந்நிலையில், அவர் பயன்படுத்திய கலைச்சொற்கள் உள்ளார்ந்த தமிழ் மூலம் காட்டாது இருக்கமுடியுமோ? தவிர, வடமொழிக் கணித நூல்களை எழுதிய பலரும் தென்னகத்தைச் சேர்ந்தவர் எனும் போது, இவர் தமிழை அறியாது இருந்திருப்பாரோ? (தியாகையர் தெலுங்கிலே இசைப்பாட்டு எழுதினாலும், தமிழை அறியாமலா, திருவையாற்றில் வாழ்ந்திருப்பார்? தமிழிசை ஓட்டம் அவருக்குத் தெரியாது இருந்திருக்குமோ? “கர்நாடக இசை”  தமிழிசை வழியன்றி, அந்தரத்தில் டங்கென்று  குதித்திருக்குமோ? ஏன் நாம் இதை ஓர்ந்து பார்க்க மாட்டேம் என்கிறோம்?)

பொதுவாகச் சங்கதம் எனும் கலப்புப் பேச்சு ( ஆம், அது சம்+கதம் = கலந்த பேச்சு; இருந்தாலும் கலப்புப் பேச்சு என்று ஏற்பதற்குப் பலரும் தயங்குகிறார். அது ஏதோ ஒரு சொயம்பு போலவும், மற்றவை அதன் மடியில் உதித்தவை என்றே ஒரு தொன்மம் இந்நாட்டில் வலிந்து பரப்பப்பட்டு வருகிறது.) இக் காலத்து ஆங்கிலம் போலவே, ஒரு செந்தரப் படுத்தலுக்கும், மண்டலங்கள் இடையே உள்ள பரிமாற்றத்திற்கும் ஆக, அக்காலப் படித்தவரிடையே சங்கதம் எனும் கலப்புப்பேச்சுப் புழங்கியிருந்தது. இதனால், இந்திய அறிவியற் கலைச்சொற்களின் ஊற்றுக்கண்கள் வட்டார மொழிகளில் இருந்தும் கூட, அவற்றை ஒதுக்கிச் சங்கதப் பெருந்தெய்வத்திற்கே பல அறிவாளர்களும் படையலிட்டிருக்கிறார்; ஏன், "மற்ற இந்திய மொழிகளில் ஒன்றுமே இல்லை"யென்று கூட சிலர் சல்லியடித்திருக்கிறார். இப்படி, வட்டார மொழிகளில் இருந்த முதல்நிலை உசாக்கள் (references) எல்லாம் ஆவணமாகாமல், இன்றுள்ள வழிநிலைச் சங்கத நூல்களே, பெருவுதியாகக் (priority) கொள்ளப்பட்டன. பெரும்பாலும் (சங்கதத் துபாசிகளாலேயே) இந்திய மரபுகளை 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் அறிந்த மேலையாய்வாளரும் கூட இத்தோற்றத்தில் தடுமாறிப் போயிருக்கிறார்; ”எல்லாமே சங்கதம்” என்ற வலைக்குள் அவர்களும் விழுந்திருக்கிறார்.

இன்றுவரை அதுவே பழக்கமாய் இருக்கிறது. காட்டாக, இன்றைக்கு உலகு எங்கும் பயனாகும் பதின்ம (decimal) எண்களின் வரலாற்றை ஆய்ந்து, The Universal History of Numbers என்ற அருமையான 3 தொகுதி நூலை (Penguin Books Limited; 1st Indian edition 2005; பலரும் படிக்க நான் பரிந்துரைக்கும் பொத்தகம்.) வெளியிட்ட Georges Ifrah கூடத் "தமிழர் தம் எண்முறையில் சுழியை (zero) பயன்படுத்தியதில்லை, அவருடைய எண்மானம் தான-மதிப்பு கட்டகத்தைச் (place-value system) சாராமல், கூட்டல், பெருக்கல் ஆகிய இரண்டும் விரவிய ஒரு கலவைக் கட்டகத்தையே (hybrid system) சார்ந்தது" என்று தன் பொத்தகத்தில் சொல்வார். [zero, சூன்யம் ஆகியவற்றின் சொற்பிறப்பு ’சுழி’க்குள் சுருண்டு கிடக்கிறது என்ற சூழ்க்குமத்தை யார்  சூல்ந்து (=தோண்டிப்) பார்க்கிறார், சொல்லுங்கள்? அதுவும், சுழியை மறக்கடித்து ”பூஜ்யம்” என்றே எல்லா இடத்தும் பரப்பிவிட்ட நிலையில்......:-). பாழைச் சுட்டும் பரிபாடல்.....?]

7659 என்று, தான-மதிப்புக் கட்டக முறையில் எழுதாமல், 7  6 ௱ 5  9 என்று ௲/1000, ௱/100, ௰/10 ஆகிய குறியீடுகளைச் சேர்த்து அண்மைக்காலம் வரை, எண்களைத் தமிழர் எழுதி வந்ததாகவும், "சுழிக் கருத்தீட்டை அவர் அறிந்திருக்கவில்லை" என்றும் இர்வா சொல்லும்போது,  சட்டென மறுக்க முடியாது, நாம் தடுமாறித் தான் போகிறோம்.

[ஏனெனில், அவர்கூற்றில் உண்மையில்லை எனினும், ஓர் உள்ளமைத் (reality) தோற்றம் தெரி்கிறது. 1950 களின் தொடக்கத்தில் கூடத் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ” 7  6 ௱  9” என்றே, என்போன்றோர் எண்களை ஏடுகளிலும், கரும்பலகைளிலும், மணலிலும் எழுதிப் படித்துவந்தோம். (அப்பொழுது எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்களே மிகுதி; அரசு வாரியத் தொடக்கப் பள்ளிகள் மிகமிகக் குறைவு) ஆயிரம், நூறு, பத்து ஆகிய குறியீடுகளோடு் தான் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை நாங்கள் போட்டு வந்தோம். தான மதிப்பு முறை, எம்போன்றோருக்குத் திண்ணைப் பள்ளிப் படிப்பின் 2 ஆம்/ 3 ஆம் ஆண்டுகளில் தான் சொல்லித் தரப் பட்டது. தான-மதிப்பு முறையில் அல்லாத பழங்கணித முறை வழக்கம் தமிழ்நாட்டில் நீண்ட நெடுநாட்கள் இருந்தது. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மறைந்து, அரசின் கல்விவாரிய மெக்காலேமுறை பரவிய பின்னரே, தான மதிப்பு முறை தமிழ்நாட்டிற் விரிவாகச் சொல்லித் தரப்பட்டது.]

இந்த உள்ளமை நிலையைக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பழைய ஆவணங்கள் வழி அறியலாம். தமிழ்த் தடவரைகளில் (Tamil texts) தான மதிப்பு முதன்முதலில் தோற்றம் காட்டுவது 16/17ஆம் நூற்றாண்டுக் கொங்கு மண்டலச் செப்பேடுகளில் தான். அவற்றிற்கு முன், ஆயிரம், நூறு, பத்து ஆகிய தானங்களுக்குக் குறியீடிட்டே தமிழில் கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அப்படியானால், தான-மதிப்பு முறையை 16-ஆம் நூற்றாண்டிற்கு முன் தமிழர் அறியாதவரா, என்ன? - இது வருங்காலக் கல்வெட்டு ஆய்வாளர் ஆழமாய் ஆய வேண்டிய கேள்வி. [அதேபொழுது, வருந்தத்தக்க வகையில் இந்த ஆய்வு இன்னும் நம்மூரில் நடைபெறவேயில்லை. இதையெலாம் செய்ய யார் முன்வருகிறார், சொல்லுங்கள்? :-( ]

அதேபொழுது, இதுவரை கிடைத்த ஆவணங்களில், தான மதிப்பைப் பயன் படுத்திய, ஆகப் பழமையான இந்தியத் தடவரை ஆவணமாய், "லோக விபாக ( = உலகின் பாகங்கள்)" எனும் செயினக் காயவியல் தடவரையை (Jaina cosmological text) Georges Ifrah நூலில் எடுத்துரைப்பார்; மிகத் துல்லியமாக அத் தடவரைக் காலத்தைத் "திங்கள், 25 ஆகசுடு, கி.பி.458" என்றும்  குறிப்பார். இப்படிப் பெருமைபெற்ற "லோக விபாக" என்ற செயின நூல் எங்கு எழுந்தது என்றெண்ணினால், நீங்கள் வியந்து போவீர்கள்! வேறெங்கும் இல்லை, நம் "நகரேஷு காஞ்சி"யில் தான். [மறவாதீர், அக்காலத்திற் செயினத்தை உச்சப் புரந்தது இங்கிருந்த பல்லவப்பேரரசே.  சிவநெறியும், அப்பரும், செயினத்தை இங்கிருந்து தொலைத்தெறியாக் காலத்தை நான் குறிக்கிறேன்.]

இவ்வேடிக்கையைப் பார்த்தீர்களா? எண்முறை பற்றிய, இந்தியாவிலே எழுந்த, ஓர் அறதப்பழைய ஆவணம், சுற்றிலும் தமிழ்புழங்கும் ஓரிடத்தில் எழுகிறது; அதுவும் தமிழில் எழாமல், பாகதத்தில் எழுகிறது; இருந்தாலும், தண்ணீர் ஒட்டாத் தாமரையிலை போல், அக்காலத் தமிழ்வழக்கில் தான மதிப்பு இல்லையாம், சுழிக்குறியீடும், கருத்தீடும் கூட இங்கு இல்லையாம். எப்படி ஒரு முரண்நகை? ”கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பாருக்கு எங்கே புத்தி போனது?” என்பார் எங்களூர்ப் பக்கம். "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற சொலவடையும், சிரிப்பும் கூட என்னுள் எழுகின்றன.

"சுற்றியிருக்கும் சூழலை மீறி ஓர் அறிவு நூலும், அதிற் பயிலும் கலைச் சொற்களும் எழ முடியும்" என்று அறிவியற் சிந்தனையாளர் எப்படி ஒரு முடிவிற்கு வருகிறாரோ? "சகலம் சமஸ்க்ருதாய நமக" என்ற பாராயனமும் எப்பொழுது நிற்குமோ, தெரியவில்லை? - இது போன்ற கேள்விகளைச் சற்று அந்தரத்தில் விட்டுவிட்டு, திசைகள் பற்றிய கலைச்சொற்களுக்கு  வருவோம்.

மேற்சொன்ன வடிவியற் நூல், மகாவேதி, யஞ்யம் போன்ற குண்டங்களை வேத விற்பன்னர்கள் அமைக்கும் வழிமுறைகளைச் சொல்லும், கி.மு.800-500 -ஐச் சேர்ந்த, "சுல்ப சாஸ்த்ரத்தில்" இருந்து தொடங்கும். இக் குண்டங்களின் அளவீடுகள் பித்தகோரசின் எண்களாகவே இருப்பதையும், அதே நேரத்தில் ஒரு செங்கோண முக்கோணத்தின் குறுனச் சதுரத்திற்கும் (குறுனம்> கரணம் = hypotenuse; கரணம் என்று திரிந்த சொல்லையே புழங்கிக் குறுனம் என்ற பொருள்விளங்கும் முதற்சொல்லை நாமெல்லோரும் மறந்தாயிற்று. குறுனச் சதுரம் = square of the hypotenuse) பக்கச் சதுரங்களுக்கும் (squares of the sides) இடையே உள்ள உறவைப் பித்தகோரசிற்கு முந்திய காலத்திலேயே புரிந்து வைத்திருந்தனர் என்றும் அந்த வடிவியற் பொத்தகம் சொல்ல முற்படும்.

பொதுவாக வேதியர் தம்முடைய வேதி, யாகக் குண்டங்கள் அமைப்பதற்கு முன்னால் கிழக்கு-மேற்குக் கோட்டை வரையறுத்துக் கொள்வார். [இக் கோட்டை வரையறுப்பதற்கு, சூரியன் நகர்வதுபோல் தோற்றங்காட்டும் பாதை, அந்நகர்ச்சியால் பகற்பொழுதில் புவியின் மேல்விழும் குச்சி நிழலின் பாகை (degree), வானியல் நகர்ச்சி போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.] எல்லா வடிவியற் கணக்குகளிலும், இக் கிழக்கு-மேற்குக் கோட்டை ஒரு சம-அளவீட்டுக் கோடாக்கி (symmetric line), ப்ராசி என்ற சொல்லால் இந்திய வடிவியல் அழைக்கும்.

இச் செய்தி படித்தவுடன், எனக்குப் புறநானூறு 229 ஆம் பாடல் நினைவிற்கு வந்தது. அதில் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறப்பைக் குறித்த செய்தியைக் கூடலூர் கிழார் வானிலையோடு பொருத்தி, எரிமீன் போகும் பாதையையும், அற்றை மூட நம்பிக்கையையும் தொட்டுக் காண்பிப்பார்; அந்தப் பாட்டை முழுக்கவும் சொல்லாது, அதில் வரும் "பாசிச் செல்லாது, ஊசி முன்னாது" என்ற ஒரு தொடரை மட்டும் (கிழக்கிலும் போகாது, வடக்கிலும் நகராது - என்பது இத்தொடருக்கான பொருள்) நினைவு கூருகிறேன். தொடரில்வரும் பாசி (=ப்ராசி) என்பது கிழக்குத் திசையைக் காட்டும்; இதே போல (உகசி>) ஊசி என்பது வட திசையைக் காட்டும்.

பொதுவாக இக்காலத் தமிழர் திசைகள் பற்றிச் சொல்லும்போது, 'கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு' என்ற சொற்களை மட்டுமே சட்டென்று தம் சொற் தொகுதியில் இருந்து வெளியெடுத்தி நினைவு கொள்கின்றனர். இன்னும் கொஞ்சம் தமிழ் இலக்கியம் தெரிந்தவர் குணக்கு (=கிழக்கு), குடக்கு (=மேற்கு) போன்றவற்றை அடையாளம் காட்டுவர். சற்றே வடமொழிப் பயிற்சி உள்ளவர் உத்தரம், தக்கணம் என்ற இருபிறப்பிச் சொற்களை முன்னெடுத்து வைப்பார். (உத்தரப் ப்ரதேஷ் என்பது வடக்கில் உள்ள பெரிய தேசம்; தக்ஷிணப் ப்ரதேஷ் என்பது இன்று நான்கு மாநிலங்களாய்ப் பிரிந்து கிடக்கும் தக்கணப் பெருந் தேசம்.)

ஆனால், திசைகளைப் பொதுவாய்க் குறிக்கவும், விதப்பாக 4 திசைகளைக் குறிக்கவும் இன்னுஞ் சில சொற்கள் தமிழாயும், சில இருபிறப்பியாகவும் உள்ளன. அவற்றை விவரித்து உரையாடுவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கமாகும். (தம் சொற்றொகுதிகளைக் கூட்டிக் கொள்ளாமல், குண்டு சட்டிக்குள்ளே குதிரையோட்டிக் கொண்டிருக்கும் நண்பர் இனிமேலாவது சற்று உகந்து, பழம் இலக்கியங்களுக்குள், ஆழவும், அகலவும் உழுவாரோ?)

அன்புடன்,
இராம.கி.