Friday, March 13, 2020

ஈசன்

ஈசன் என்றசொல் எப்படியெழுந்தது என்று திருவாட்டி Ashly sky ஒருமுறை கேட்டிருந்தார்.  இதற்கு விடை வேண்டுமெனில், தஞ்சைப் ”பிரகத ஈசர்” என்ற இருபிறப்பிச் சொல்லுக்கு நேராய்த் தஞ்சைப் ”பெருவுடையார்” என்பதன் பொருள் புரியவேண்டும். தவிர, ஏன்  சிவன்கோயில்களில் ஈசனின் நேர் பொருளாய் உடையார் என்கிறார் என்றும் ஓர்ந்துபார்க்கவேண்டும். திசைகள் பற்றிய 6 பகுதிகள் கொண்ட தொடரை 2008 இல் எழுதியிருந்தேன்.  அதில் http://valavu.blogspot.com/2008/04/3.html என்ற மூன்றாம் பகுதியில்

குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி
கிழக்கின் பெயரே கீழ்த்திசையு மாகும்

என்ற பிங்கலத்தின் 13 ஆம் நூற்பாவைச்சொல்லி. ஐந்திரம், கிழக்கு, குணக்கு, ப்ராசி, பூருவம் என்ற வரிசையில் அமையும் சொற்களை விவரித்திருப்பேன். ஈசனைப் புரிந்துகொள்ள ஐந்திரமெனும் இருபிறப்பிச் சொல்லுக்குப் போக வேண்டும்.  அது தொடர்பான விவரங்களை இங்கு வெட்டியொட்டுகிறேன்.

திசைகள் பற்றிய விதப்பான சொற்களுக்குப் போகுமுன், பலமுறை நான் உரைக்கும் அடிக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் இங்கே சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" எனும் அருமையான நூல். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழி வகுத்தது.] ”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி அவர்நூலிற் சொல்வார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.)

நெய்ப் பயன்பாட்டை, விலங்குக்கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்தெடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிட்டான். பின், மற்ற வித்துக்களில் நெய்யெடுக்க முடிந்தபோது, எள்நெய், எண்ணெயெனும் பொதுச்சொல்லாகி, எள் அல்லாதவற்றில் கிட்டிய எண்ணெய்களையும் குறித்தது. இதேபோல் "கீழிருக்கும் நிலம்" எனும் விதப்பான இந்தியப் புவிக்கிறுவ (geography) உண்மை "கிழக்குத் திசையைப்" பொதுமையாய்க் குறித்தது.  அதாவது, விதப்பான இடப்பொருள் குறித்த கீழ் எனும் சொல், நாளடைவில கிழக்குத் திசை எனும் பொதுப் பொருளை பழக்கத்தாற் குறிக்கிறது. (எந்த மாந்தக்கூட்டத்தாரும் தாம்வாழும் புவிக் கிறுவின் கூறுகள், சூரியன் எழும்/சேரும் நகர்ச்சிகள் ஆகியவற்றை வைத்தே, திசைபற்றிய விதப்பான குறியீடுகளைத் தம்மிடை புரிந்து கொள்கிறார்.)

நாவலந்தேயத்தின் புவியமைப்பு சற்றே விதப்பானது; இதன் வடக்கே இமயம், மேற்கே தொடர்ச்சி மலை (மராட்டியத்தில் இது சகயத்திரி எனப்படும்; தெற்கே வரவர, வெவ்வேறு பெயர்களைப் பெற்று, ஆகத் தெற்கில், பொதிகை எனப் பெயர்கொள்ளும்.) என்பவை இருக்க, வட இந்திய நிலம், வடக்கிருந்து தெற்கே சரிந்தும், அதேபோல தென்னிந்திய நிலம், மேற்கிருந்து கிழக்கில் சரிந்தும் உள்ளது. (பெரும்பாலான பேராறுகளும் கிழக்குக் கடலில் கலக்கின்றன. நருமதையும், தபதியும் புறனடைகளாய் (exceptions) மேற்குக் கடலிற் கலக்கின்றன. சிந்தாறோ வடக்கிருந்து தெற்கே ஓடிப் பாய்ந்து பின் அரபிககடலில் கலக்கிறது; ஆனாலும் அதன் ஓட்டம் மேலுரைத்த நில அமைப்பிற்கு ஏற்றதாகவே அமைந்திருக்கிறது.)

இப் புவியமைப்பு, வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ்மாந்தர் மனத்திலும் ஆழப்பதிந்து போயிருக்க வேண்டும். மீவுயர்ந்த மேடு west - இலும், கீழ்ந்து கிடக்கும் பள்ளம் east - இலும் இருந்ததால், மேட்டின் அடிச்சொல்லான மேல்,  மேற்கெனும் சொல்லையும், கிள்>கிழ் எனும் அடிச்சொல் கிழக்கெனும் பெயர்ச்சொல்லையும், தமிழரிடை உருவாக்கியது. இதேபோல் உயர்ந்து கிடந்தது உத்தரமாயும் (வடக்கு), தக்கித் தாழ்ந்துகிடந்தது தக்கணமாயும் ஆனது.

தமிழின் விதப்பான திசை பற்றிய சொற்களெலாம், வியக்கத்தக்க வகையில், நாவலந்தேயத்தின் புவிக்கிறுவ (geographical) உண்மையைச் சுட்டிக்காட்டும். அந்த உண்மையே, மொழி தோன்றிய போதில், தமிழன் நாவலந்தீவினுள் நுழைந்து விட்டான் என்ற தேற்றத்தை அழுத்தந் திருத்தமாகக் காட்டும். ஒருவேளை வேறிடத்தில் அவனிருந்து, மொழி உருவான பிறகே, நாவலந் தீவினுள் நுழைந்திருந்தால், மேற்கு, கிழக்கு சொற்கள், மேல் (up), கீழ் (down) பொருளில் எழ வாய்ப்பேயில்லை. (அப்புறமும் ஈரான் எலாமைட்டுகளிடம் இருந்து தமிழர் பிரிந்து வந்தார் என்று சிலர் சொல்வது முரண்நகை.) மேலும், கீழுமென்ற இடச்சொற்கள் திசைகளைக் குறிப்பது நாவலந்தீவில் நம் முன்னோருக்கு அமைந்த இயற்கை நேர்ச்சிகள் ஆகும்.

ஆதிமாந்தன் ஆப்பிரிக்காவில் தோன்றி 70000 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து நகர்ந்து, சிச்சிறிதாய் மற்ற கண்டங்களை, அடுத்த 65000 ஆண்டுகளில் நிறைத்தானென்று பெரும்பாலோர் சொல்லும் மேவுதி தேற்றமானாலும் (majority theory) சரி, மாறாக ஆப்பிரிக்கா, ஆசியா என்ற இரு கண்டங்களிலும் 100000 ஆண்டுகளுக்கு முன்தோன்றி, பின் நகர்ந்து, சிச் சிறிதாய் மற்ற கண்டங்களை நிறைத்தான் எனச் சிறுபாலோர் சொல்லும் நுணுதித் தேற்றமானாலும் (minority theory) சரி, "தமிழ்மொழி ஏற்பட்டபோது, நாவலந்தீவினுள் தமிழன் இருந்தான்" என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியும். ஏனெனில், தமிழின் திசைச்சொற்கள் எல்லாம் உலகின் வேறு  புவிக் கிறுவைக் குறிக்காது, இந்தியப் புவிக்கிறுவையே குறிக்கின்றன. இந்த உண்மை, தமிழ்ச் சொற்பிறப்பு ஆய்வால் பெறப்படும் உண்மையாகும்.

தமிழில் இல்தல் / இல்லுதல் வினைச்சொல் குத்தல், குடைதல், குழித்தல், தோண்டல், உள்ளீடிலாது செய்தல், இறங்கல் என்ற பொருள்களைப் பெறும். மலையில் குடையப்பட்ட குகைகளில் தான் விலங்காண்டி மாந்தன் முதலில் வாழ்ந்தான் என மாந்தவியலார் கூறுகிறார். மலைகளில் இயற்கையாலோ, மாந்தனாலோ, இல்லப்பட்டது இல்; இல்லிற் பெரியது இல்லம். இன்றைக்கு குகை எனும் தோற்றம் இல்லாவிடினும், அதன் நீட்சியாய் நாம் வாழும் வீட்டை இல் /இல்லம் எனும்சொல் குறிக்கிறது. இல்லின் சொற்பொருள் அறிந்தால், வரலாற்றிற்கும் முந்தை நிலையில், குகையில் வாழ்ந்தகாலத்தில், தோன்றிய இயல்மொழி தமிழ் என்பது முற்றும் விளங்கும். So Tamil is definitely one of the oldest languages of the world. We don't say this arbitrarily; the etymology of the word "il" indicate so.

அடுத்து உள்ளீடுகாணா நிலையை "இல்லா நிலை" என்று "இல்லை" எனக் குறிக்கிறோம் அல்லவா? [இல்லப்பட்ட இடத்தில் பருப்பொருளை வைப்பது, அல்லது நாம் அமைவது இருத்தல் எனப்படும். வெறும் இடத்தில், பருப் பொருள் இல்லாத நிலை “இல்லை” எனப்படுகிறது. இது ஒரு வழிப் பொருள். எனவே இருத்தல் வினை ஓரிடத்தில் பருப்பொருள் குத்தி இருப்பதை உணர்த்தும் சொல்லாகும். "அவள் அங்கு இருக்கிறாள்." இல்-லில் விளைந்த நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்களை இங்கு விரித்தால் அவை பெருகும். ஆயினும் அவற்றை ஆழ்ந்துணர்வது மிகவும் தேவையாகும்.

இங்கே தொடர்புடைய பயன்பாடுகளைச் சொல்கிறேன். காட்டாக, இலந்தது இலந்தி; இலஞ்சியாகிக் குளப்பொருளைக் குறிக்கும். இலஞ்சிமன்றம் என்று சிலம்பிலும், மணிமேகலையிலும் வருகிறது அல்லவா? இலந்தது வேறு வகையில் திரிந்து இலவந்தி> இலவந்திகை ஆகி வெந்நீர் நிறைத்துக் குளிக்கச் செய்யப்பட்ட குளத்தைக் குறிக்கும். "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்" என்று ஒரு பாண்டிய மன்னனை புறநானூறு (55, 56,57,61,196,198) பேசும் (வெந்நீர்ச் செய்குளம் இருந்த ஊர்; இலவந்திகைப் பள்ளி எதுவென இன்னும் சரியாக அடையாளம் காண வில்லை; ஆனால் பல்வேறு ஊகங்கள் ஆய்வுக்களத்தில் இருக்கின்றன.)

இனி இலந்தது இல்> இள்> இளி> இழி என்னும் திரிவில் இறங்கல் பொருளை உணர்த்தும். இறங்கல் என்பதும் கீழாதலே. தவிர, இல்> இள்> (இழு)> இகு என்ற திரிவில் தாழ்தல், தாழ்ந்துவிழல் என்ற பொருட்பாட்டைக் காட்டும். இகுத்தல் எனும் பிறவினை தாழ்த்தல் என்றும் பொருள் கொள்ளும். இகழ்தல் என்ற வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.

"மழை கீழிறங்குவது போலப் பகைவரின் வில் சொரியும் அம்புகள்" என்ற பொருளில் மலைபடுகடாத்தின் 226 ஆம் வரி "மாரியின் இகுதரு வில்லுமிழ் கடுங்கணை" என்று வரும். இதில் இகுதரல் என்பது கீழிறங்கும் பொருளையே கொடுக்கும். அதே மலைபடுகடாத்தின் 44 ஆம் வரியில், மயில் தோகையைத் தாழ்த்தும் காட்சியை விவரித்து "கணங்கொள் தோகையிற் கதுப்பு இகுத்து அசைஇ" என்ற வரிவரும். இகுத்தல் (=இறக்குதல்) என்ற பிறவினை இங்கே ஆளப்படுவதைப் பார்க்கலாம். இதே போல "நீர் இகுவன்ன நிமிர்பரி நெடுந் தேர்" என்ற ஐங்குறு நூற்றின் 465 ஆம் பாடல்வரி நீர்வீழுங் காட்சி உணர்த்தும்.

இகுதல் = மேலிருந்து கீழ்வரல், இறங்கல் என்ற இவ்வினையின் நீட்சியாய் இகுதல்>ஈதல் தமிழிலெழும். செல்வம் இருப்பவர் இல்லாதார்க்குக் கொடுக்கும் போது கை இறங்குகிறது. அதை இகுதல் என்கிறோம். இகுதல், ஈதலென்றும் நீளும். இகுதல்>ஈதலின் பெயர்ச்சொல் ஈகை என்றாகும். வாயிலிருந்து இகுந்துவரும் வாய்நீர் நாட்டுப்புறங்களில் ஈத்தா/ ஈத்தை எனப்படும். பிள்ளை பெறுவதும் இகுதற்செயலே. தாயின் கருப்பை வாயில் இருந்து பிள்ளை இறங்குகிறதல்லவா? ஒவ்வோர் பிள்ளையிறக்கமும் (=பிறப்பும்), ஈத்து எனப்படும். "அவள் இவனை ஈன்றாள். இது எத்தனையாவது ஈத்து?". பிறப்பு பிள்ளையின் பார்வையில் சொல்லப்படுவது. ஈத்து, தாயின் பார்வையில் சொல்லப்படுவது. ஈனியலென்று இன்று genetics ஐக் குறிக்கிறோமே? ஆங்கிலம்போல் மேலைமொழிகளில் சொல்லப்பெறும் நிலத்திணை yield-களும் கூடத் தமிழில் ஈத்து என்றே சொல்லப்படுவதை அகரமுதலிகள் வழி அறிந்துகொள்கிறோம்.

இகுந்தது (=தாழ்ந்தது) என்பது ஈந்ததென்றும் வடிவங் கொள்ளும். இறங்கிய இடம் (=இறக்கமான இடம்), ஈந்து>ஈந்தமென்ற பெயர்ச் சொல்லை தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், அச்சொல் பதிவு இக்கால அகர முதலிகளில் இல்லை. இருந்த இடத்தைக் குறிக்கும் ’இருத்தம்’தமிழ் அகர முதலிகளில் உள்ளபோது, ’ஈத்தப்’ பதிவு இல்லாதது வியப்பாகவுள்ளது. அதே பொழுது, மனையடி சாற்றத்தில் மனைநில அமைப்பை விளக்கையில், தென் மேற்கு மூலை இருப்பதிலேயே உயரமாயும், வடமேற்கு மூலையும், தென் கிழக்கு மூலையும் அதற்கடுத்த உயரத்திலும், வடகிழக்கு மூலை இருப்பதிலேயே பள்ளமாயும் இருக்கவேண்டுமென்று சொல்லி, வடகிழக்கு மூலையை ஈசான மூலை என்பார்.  ஈத்து என்ற சொல், கிழக்கைக் குறித்தால் தான், ஈத்தானம்>ஈதானம்> ஈசானம், ஆகப் பள்ளமான வடகிழக்கைக் குறிக்கமுடியும். [இதுபற்றி மேலும் ஆய வேண்டும்; என்னால் உறுதியாக இப்போது சொல்ல இயலவில்லை.] [தமிழ் அகரமுதலிகளில் இல்லாத, அதேபொழுது இருப்பவற்றிலிருந்து தருக்கவழி உன்னிக்கக்கூடிய சொற்கள் பலவும் உண்டு. ஈந்தம்/ஈத்தம் அப்படிப்பட்டது.]

ஈந்தம், ஈத்தம் என்ற சொற்கள் தமிழ் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படாது இருக்க, வடபுலப் பலுக்கல் திரிவுமுறையில் உருவான ஈந்தம்>ஐந்தம்> ஐந்த்ரம்> ஐந்திரம் என்பது மட்டும் எப்படியோ தமிழ் அகரமுதலிகளில் பதிவாகியுள்ளது. எப்படிச் சிவம், சைவமென வடபுலமுறையில் திரிவு பெற்றதோ, அதைப்போல, ஈந்தம் எனும் பள்ளச் சொல், ஐந்தம் எனத் திரிந்து ரகரத்தை வழக்கம்போல் உள்நுழைத்து ஐந்திரத்தோற்றம் காட்டும்.. [மேலை மொழியின் east உம் அப்படியே ஈத்துக்கு இணையாய் ஆவதை என்னால் வியக்காதிருக்க முடியவில்லை. (பொதுவாய் "த்து" எனும் மெய்ம்மொழி மயக்கம் "st" என்றே மேலை மொழிகளில் உருப் பெறுகிறது. இதற்குக் கணக்கற்ற எடுத்துக் காட்டுகள் உள்ளன.)]

இதற்குமேல் மற்ற கிழக்குச்சொற்களைத் ”திசைகள்” தொடரில் விவரித்து இருப்பேன்.  தேவையானவர் அங்குபோய்ப் படியுங்கள். இனி ஈசனுக்கு வருவோம். பலநேரம் சிவன் கோயில்கள் ஈச்சுரம் என்றே சகரத்தை அழுத்திச் சொல்லப்படும். பெரும்பாலான கோயில்களில் ஈசன் திருநிலை கிழக்குத் திசை பார்த்தே இருக்கும். ஈத்தம்>ஈச்சம்>ஈசம் என்பது வடகிழக்குத் திசையை விதப்பாகவும், கிழக்குத் திசையைப் பொதுவாகவும் குறிக்கும். வடகிழக்குத் திசையிலிருப்பவன் ஈசனென்றே தமிழ்த் தொன்மம் கூறும். ஈசத்தில் இருப்பவன் ஈசன், ஈசானன்.  அங்கொரு பள்ளமும், அதில் ஏரியும், அருகில். சிறு சிகரமும் இருந்ததாய்த் தமிழ்த் தொன்மம் கூறும்.   குளிர் பொருந்திய அம்மலைத்தொடர் இமயமலை எனப் படும். சிகரம் குயிலாலுவம் (குயில் = பள்ளம், ஆழம்.  ஆல்-தல் = நிறைதல். உவம் = ஏரி; குயிலாலுவம் = ஆழம் நிறைந்த ஏரி இங்கே ஏரியையும் ஏரிக்கு அருகில் இருக்கும் சிகரத்தையும் குறிக்கிறது) > கயிலாலம்> கயிலாயம்> கயிலாசம் என்று பேச்சு வழக்கில் அமைகிறது. குயிலாலுவம் என்று சிலம்பில் வரும் சொல்லாட்சி பலருக்கும் மறந்துவிட்டது. கயிலாயமே எல்லோருக்கும் இன்று நினைவிற்கு வருகிறது.

அந்த ஏரி, மனஞ்சேர் உவளம்> மானசரோவர எனச் சங்கதத்தில் சொல்லப் படும்.  மனம் = மூளையிலிருக்கும் எண்ணங்களின் உள்ளடக்கம்.  உவளம் = ஏரி, பள்ளம், நீர்நிலை. பிற்காலத்தில் எழுந்த சொல் இது.  சங்கதத்தில் அப்படியே மொழிபெயர்க்கப் படும்.  இந்த உறை ஏரியின் ஆழமறிந்தோர் அன்று யாருமில்லை. அதனால் இவ்வேரியின் சிறப்பு மனத்தால் அறியப் பட்டது. அறிவியலும், நுட்பியலும் வளர்ந்து வாய்ப்புகள் பெருகியபின் இன்று பலரும் போகிறார். அப்பராலும், காரைக்கால் அம்மையாலும் போகமுடியாத, சுந்தரராலும், சேரமான் பெருமாளாலும் வெள்ளானை, வெண்குதிரை போன்றவற்றால் மட்டுமே பறந்துசெல்ல முடிந்த இவ்விடத்திற்கு, இன்று எளிதில் போகிறார். சுற்றுலாப் பயணங்கள் இலக்கங்களில் இழைகின்றன.

கயிலாயம் போகிறவரில் சிலர் ஏரியையும், கயிலாயத்தையும் சுற்றி 16 கி.மீ. நடப்பதுண்டு. அந்த வெதணத்தில் (climate) நடக்கும்போது பலருக்கு உடலும் உணர்வும் சிலிர்த்துப் போவதுண்டு. மாந்தருக்கு மீறிய உணர்வாய் அதைச் சொல்வார். மனம் அமைதியாகும் என்பார். இன்னதென்று சொல்லமுடியாத மோனம் என்பார். The Sanskrit word "Manasarovar" (मानसरोवर) is a combination of two Sanskrit words; "Mānas" (मानस्) meaning "mind (in its widest sense as applied to all the mental powers), intellect, intelligence, understanding, perception, sense, conscience" while "sarovara" (सरोवर) means "a lake or large pond".

இமையமலையும், கயிலாயமும், மனஞ்சேர் உவளமும் சிவனைச் சேர்ந்தது, சிவனுலகம் அது. அதை உடையவர் சிவன் என்பதும் தமிழர் தொன்மமே. இன்று இத்தொன்மம் இந்தியா முழுதும் பரவிவிட்டது. இந்திய வட கிழக்கு மூலையிலுள்ள இம்மூன்றையும்  உடையார்  என்பதே பெருவுடையாரின் பொருள். ஈசன், ஈசத்தை உடையார் எனும் தொடர்புடைய பொருள்கள் ஒன்றில் இன்னொன்றாய்ப் பிணைந்து போயின.

ஓம் சிவசிவ.
      

No comments: