Friday, October 29, 2021

கேட்பு

quote (v.)

late 14c., coten, "to mark (a book) with chapter numbers or marginal references," from Old French coter, from Medieval Latin quotare "distinguish by numbers, number chapters," from Latin quotus "which in order? what number (in sequence)?," from quot "how many," from PIE *kwo-ti-, from pronominal root *kwo-. The sense development is via "to give as a reference, to cite as an authority" (1570s) to "to copy out or repeat exact words" (1670s). Modern spelling with qu- is from early 15c. The business sense of "to state the price of a commodity" (1866) revives the etymological meaning. 

தமிழில் ”விலை பகர்”, ”விலை கூறு”, ”விலை என்ன?” என்று விதம் விதமாய் ஒன்றின் பொருள் விலையை விற்பனையாளரிடங் கேட்போம். இதைக் கேட்பு விலை (asking price) என்பர். இங்கு நடக்கும் வினை கேட்பது/வினவுவது.. ஆங்கிலத்தில் quote, ask, query, வாங்குகிறவர் கேட்கிறார். விற்பவர் கூறுகிறார். நடப்பது இருவர் தொடர்பான ஒரு வினை. இது போன்ற வினைகளுக்குத் தமிழில் இரு வேறு சொற்கள் கருத்தாவின் பார்வை கருதிப் பயனுறும். பெயர்ச் சொல்லின் வழி வாங்குவோர் செய்வது கேட்பு. விற்போர் செய்வது கூற்று. ஆங்கிலத்திலோ quote என்பது கேட்பு, கூற்று என்ற இரண்டிற்கும் பொதுவாய் வரும். மொழிமரபு கருதி நாம் சொற்களைப் பயனுறுத்த வேண்டும். ”எங்களின் கேட்பிற்கு உங்கள் கூற்று என்ன?” என்பது வாங்குவோரின் தமிழ் வாக்கியம். “உங்கள் கேட்பிற்கு எங்கள் கூற்று இவ்வளவு” என்பது விற்போர் வாக்கியம். ஆங்கில மரபைத் தமிழ் மரபில் கலந்து சிலர் சொல்வது குழப்பத்தையே ஏற்படுத்தும்.  

இன்னொரு விதமாயும் கேட்பு என்ற சொல் நம் வாழ்விற் புழங்குகிறது. பெரிதாய் எழுத்துப் பரவாத காலத்தில் படிப்பறியாப் பொது மக்கள் தங்களிடை பேசிக் கொள்கையில், ”இப்படிக் கேட்டேன்/ கேள்விப் பட்டேன், அது சரியா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று அச் சூழ்நிலை அமையும். இங்கும் quote = கேட்டது, கேட்டிகை. இதைக் கேட்பு என்றாலுஞ் சரி தான். இதைச் சங்கத் தமிழில் பலவிடங்களில் பயனுறுத்தியுள்ளார். பதிற்றுப்பத்து 52. “மலர்மறி யாவெனக் கேட்டிகும்” கேட்டிகுத்தல் = கேட்டிருத்தல்; கேட்டிகுத்தலின் பெயர்ச் சொல் கேட்டிகை. கேட்டிகுத்தல் என்பது கேட்டிசித்தல் என்றும் வரும். “பிறர்பிறர் கூறவழிக் கேட்டிசினே” புறம் 150, 2. ”அடுபோர் அண்ணல் கேட்டிசின் வாழி” மதுரைக் காஞ்சி 208. நானிங்கே கொடுத்தது 3 காட்டுகள். இதுபோல் பல காட்டுகளை சங்க நூல்களில் காண முடியும். விலை கேட்டலுக்கும் முன்கேட்ட பேச்சிற்குமான பொருள் நீட்சி ஏற்படுவது இயற்கையே. இதே பொருளிற்றான் question = கேள்வி. கேட்டம் என்ற சொல்லை நாம் ஆள்கிறோம். வினவு/வினா என்ற சொல்லும் இதற்குண்டு. querry என்பதும் கேள்வி தான் கேட்டிகை என்ற சொல்லை மேற்கோள் தொடர்பாகக் கையாளலாம். 

அதே பொழுது ”உங்கள் quote என்ன?” என்பதற்கு ” உங்கள் கூறுவிலை என்ன?” என்று,  quote செய்வோர் “உங்களுக்கான எம் கூறுவிலை இது” என்றும் பயிலலாம். கூறுதல். கேட்டல் என்பது யார் என்பதைப் பொறுத்தது. தமிழ்ப் பழக்கம் மறவாதீர்.

ஒரு சங்கச் சொல்லை விடுத்து மேற்கோள் என்ற சொல் பரவியது, ’அருவி’ இருக்க ’நீர்வீழ்ச்சி’ பரவியது போலத் தான். நம்மை அறியாது தமிழை ஆங்கில மரபிற்கு உகந்ததாய் நாம் ஆக்கிக் கொண்டுள்ளோம். அதே பொழுது தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவை நான் அழுந்தச் சொல்வேன். என்னை எத்தனை முறை சிலர் இழித்துப் பேசினாலும் இது உண்மை. இதெல்லாம் accidental coincidence ஆக இருக்க முடியாது. ஒரு சொல்லிற்கான இரு வேறு பொருள்கள், மூன்று நான்கு பொருள்கள் இரு வேறு மொழிக் குடும்பங்களிலில் இருக்குமெனில் அது தன்னேர்ச்சியாய் இருக்க முடியாது. ஒரு பொருள் மட்டும் ஒத்திருந்தால் அப்படிச் சொல்லலாம். இன்னதென்று சொல்ல முடியாத பழங்காலத்தில் (வரலாற்றுக் காலத்திற்கு முன்னும் இருக்கலாம்.) இரு மொழிக் குடும்பங்களுக்கும் இடையே ஏதோவொரு உறவு இருந்திருக்கலாமோ என ஐயுறுகிறோம். ஐயுறுவதில் என்ன தடை? நான் இப்பொழுது எந்தத் தேற்றையும் முன்வைக்க வில்லை. இணைச்சொற்களை மட்டுமே தேடுகிறேன். இவற்றின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாகிறது. . 

சங்கதத்திற்கும் மேலை மொழிகளுக்கும் இடையே தான் கண்ட 200,300 சொற்களை வைத்தே வில்லியம் சோன்சு இந்தையிரோப்பியன் என்ற மொழிக்குடும்பத்தை உரைத்தார். ”எப்படி இந்த 200 சொச்சம் சொற்கள் ஒன்றாகின? எனற விளக்கத்தையோ, தேற்றையோ அவர் சொல்ல வில்லை. ஆனாலும் அவர் சொன்ன ஏரணத்தை மொழியாளர் உணர்ந்தார். கொஞ்சங் கொஞ்சமாய் அவர் கருத்து வலுப்பட்டது. இன்று அச்சொற்றொகை 2000, 3000 ஆக விரிந்து நிற்கிறது. இது போல் தான் பாவாணர் வழிப்பட்ட எம் போன்றோர் இந்த இணைச்சொற்களை எடுத்து வைக்கிறோம். கேட்பவர் கேட்கட்டும். கேட்காதவர் விலகி நிற்கட்டும். ஆனால் ”மேலையரை மதிப்போம், இன்னொரு உறவு சொன்ன பாவாணரைப் பழிப்போம்” என்பது ஏரணம் இல்லாத பேச்சு. பாவாணரின் சொற்பிறப்பியல் கூற்றும். ”தமிழன் பிறந்தகம் குமரி நிலமே” என்பதும், ”தமிழே முதற்றாய்மொழி: என்பதும் அருகருகே நிற்கும் வெவ்வேறு கூற்றுக்கள். ஒன்றை ஏற்பதால் இன்னொன்றையும் ஏற்பதாய்ச் சொல்ல முடியாது. பூதியல் பற்றி ஏராளஞ் சொன்ன ஐசக் நியூட்டன், அல்கெமி என்னும் மாழைமாற்று வேதியலில் 16 ஆண்டு காலம் பற்றுக் கொண்டிருந்தார். இதனால் நியூட்டனின் பூதியல் விளக்கங்களைத் தூக்கியா எறிந்தோம்? நியூட்டனின் மாழைமாற்று வேதியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு நாம் முன்னகர வில்லையா? பாவாணர் காட்டிய வழியில் நம் தேடல்களைத் தொடர வேண்டியது தான்.   


No comments: