Thursday, September 13, 2018

சாத்தன் - 3

”விலை, நொடை எனும் 2 சொற்களும் விலைப் பொருளில் வரும்" என்றும், ”விலையை ஏற்கனவே Price-இற்கு நிகராக்கிவிட்டதால் நொடையை Cost-இக்கு நிகராக்கலாம்” என்றும் திரு.வேந்தன் அரசு சொற்களம் முகநூற் குழுவிற் கூறி, அப்பொருளில் வருவதாய் அவரெண்ணிய சங்கப் பாடல்களைச் சொன்னார். நொடை = Cost எனுங் கருத்தில் நான் வேறுபடுவேன். தவிர, (அவ்வளவு புழங்காத) பொருளறியாப் பழஞ் சொற்களுக்கு, தனக்குத் தோன்றியபடி இவ்வாறு பொருள்திரிப்பதையும் நான் ஏற்க மறுப்பேன். என் கருத்தை விவரிக்குமுன் ஏற்கனவே 2018 சூலையில் மடற்குழுக்களில் எழுதி என் வலைப்பதிவிற் சேமித்த ”சாத்தன்” எனுந் தொடரைப் படிக்கவேண்டுகிறேன். http://valavu.blogspot.com/2018/07/1.html. http://valavu.blogspot.com/2018/07/2.html

இப்போது அத்தொடரை நீட்டி நிகமம்/நியமம், நிகர்தல்>நேர்தல், நொடை, கொள்ளை (கொளுதை), பீடிகை, பகரல், பரிவட்டணை போன்றவற்றைப் பேச விழைகிறேன். அகரமுதலியில் நிகமத்திற்கு வணிகம், கூட்டம், நெடுந்தெரு, கடைவீதி, கோயில், இடம், மண்டபம், நகரமெனுங் கூட்டப் பொருள் சொல்வர். நியமத்திற்கு ஒழுக்கம். செய்கடன், விதி, அட்டயோக விதிமுறைகளில் வழுவாதொழுகல், வரையறுக்கை, வழக்கம். உறுதி, வேதம், முடிவெனக் நியதிப்பொருள் சொல்வர். சில அகரமுதலிகளிலோ இரண்டையும் குழப்புவர். முதலில் நிகமம் பார்த்துப் பின் நியமத்தைப் பார்ப்போம்.

தமிழிக் கல்வெட்டுக்களிற் பயிலும் நிகமத்தை (மாங்குளம் கல்வெட்டு எண் 3, 6 இல் “வெள்ளறை நிகமத்தார்” பற்றிய குறிப்பு வரும். வெள்ளரிப்பட்டி என்பது இற்றை மாங்குளத்திற்கு அருகிலுள்ளது.) என்ன காரணமோ, சங்க இலக்கியம் அச்சொல்லை நேரடியய்ப் பயிலவில்லை. ஆனால் நற்.17, 208, 209, அக.52 ஆகிய பாடல்களைப் பாடிய நொச்சி நியமங்கிழார் என்ற புலவர் இருந்துள்ளார். நொச்சி நியமம் என்பது நொச்சி படர்ந்த மதிலைக் குறிக்கும். பெரம்பலூர் வட்டத்திலுள்ள இற்றை நொச்சியமே அற்றை நொச்சி நியமம் என்பார். இது தவிர பொள்ளாச்சிக்கு அருகே பெரிய நெகமம், சின்ன நெகமம், சிவகங்கை மாவட்டத்தில் நிகமம்>நேமம், நேமத்தான்பட்டி எனும் ஊர்களுமுண்டு. ”நிகமம். நியமம்” என்ற சொற்கள் தமிழர்க்கு இயல்பானவையே! சங்க இலக்கியத்தில் ’நிகமம்’ என்ற சொல் நேரடியாய் வாராதலாலேயே அதைச் சிலர் பாகதமென்பார். இதற்குச் சான்றாய் நிகையம்>நிகாயத்தை துணைக்கழைப்பார். (சுத்த பிடகத்தின் தீக நிகாயம், மஜ்ஜிம நிகாயம், சம்யுக்தி நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்ற பெயர்களில் நிகாயம் வரும். அதுவே இந்நூற் பெயர்களுக்கும் சங்கநூற் பெயர்களுக்கும் தொடர்புண்டோ எனும் ஐயத்தையெழுப்பும். கீழே சொல்வேன்.)

முல்>முழு>முகு>முகுதல், நுல்>நுழு>நுகு>நுகுதல், துல்>துழு>துகு>துகுதல்> தொகுதல் என்ற தொழிற்பெயர்கள் தன்வினைக் கூட்டுப்பொருள் காட்டும். முகரமும் நுகரமும் தமிழிற் போலிகள். நுகரமும் துகரமும் பலுக்கலில் ஒன்றிற்கொன்று உறவானவை. முனி/நுனி, முதி/நுதி/துதி, முப்பது/நுப்பது, முடம்/நுடம் என்பன போல் முல், நுல், துல் வேரில் கிளைத்த நூற்றுக் கணக்கான சொற்களையும் எண்ணிப் பார்க்கலாம். இவ்வொலித் திரிவுகள் தமிழில் மிகச் சாத்தாரம். முகுத்தல், நுகுத்தல், துகுத்தல்>தொகுத்தல் என்பன பிறவினைக் கூட்டற் பொருள் காட்டும். yoke எனும் இந்தையிரோப்பியச் சொல்லின் நிகராய் பழங்கால வடமொழிகளில் yuga வரும். k>g ஆவது வடபால் மொழிகளிற் பெரிதுமுள்ள வழக்கம். நேரடிக் கூட்டப் பொருளில் தமிழில் உகம்>நுகம் எனலாம். இத்திரிவைப் பாகதம், சங்கதம், பாலி மொழிகள் காட்டமாட்டா. நுகமென்ற சொல்லே அங்கு கிடையாது.

வடவர் நிகமத்தை ni+gam எனவுடைத்துப் பொருள்சொல்வர். பாணினியில், யாஷ்காவின் நிருக்தாவில், இதுபோல் சொல்லுடைப்பது ஏராளம். புராணிகர் சொல்வது போல் வார்த்தைச் சித்து விளையாட்டுக்கள் அங்கு நிறைய வுண்டு. ni= own to, gam= ஏகுமிடம் (meeting place) என்றுசொல்வர். ”நி-கச்சேத்தி” என்ற வினைக்கு to go down to எனப் பொருள்சொல்வர். குறுஞ்சொல்லுடைப்பு என்பது தமிழில் மிக அரிதே நடைபெறும். (இதுபோல் உடைப்பைப் பாவாணரும் ஏற்கார். இக்காலத்தே சாத்தூர் சேகரன், ம.சோ. விக்டர் போன்றோரின் விளக்கங்களில் இதுபோலும் சொல்லுடைப்புகள் மிகுந்து பழகுவது என்னைப் பெரிதும் நெருடும். என் வழி வேறு. இணையத்தில் உலவும் குமரிக்கண்டக் கட்டுரைகள் / விழியங்கள் பலவும் இச் சொல்லுடைப்பு விதயத்தில் மிகவும் தடுமாறும். பாவாணரை ஆழப் படியுங்கள் என்று மட்டுமே இவர்களுக்குச் சொல்ல விழைவேன்.) நான் அறிந்தவரை நுகுதலை உடைக்காமலேயே கூட்டப்பொருள் சொல்லலாம். தலைசுற்றிக் காதுதொடும் மோனியர் வில்லியம்சு சொற்பிறப்பியலை விட உகம்> நுகம்> நிகம்>நிகமம் இயல்பாகும். இதற்கொரு கல்வெட்டுக் காரணமும் உண்டு. மாங்குளம் கல்வெட்டில், ஸ எனும் பெருமி பயின்றோர், நிகத்தைத் (nikam) ஏன் தமிழெழுத்தால் மட்டுமே எழுதினார்? ga எனும் பெருமியை அங்கு பயின்று nigam என ஒலிக்கலாமே?. பெருமி தெரிந்தவர் ஏன் அதைப் பயனுறுத்தவில்லை? எண்ணிப் பாருங்கள்.

இன்னொரு பொருளியற் காரணமும் நான்சொல்லலாம். பண்டமாற்றில் இருந்து வணிகம் வளர, ஒரு நாடு காசு, பணத்திற்கு மாறும். பொ.உ.மு. 600-200 இல் அக்கால மகதத்தில் அதற்கு வழியில்லை. எங்கோ அரசத்தானத்தில் (ராஜஸ்தானத்தில்) செம்பும், இங்குமங்குமாய் ஈயமும், சிற்றளவே சுல்லு/வெள்ளியும் கிடைத்தன. பரிவட்டணைச் சரக்குகள் (exchange goods) ஆன மதிப்புச் செறிந்த தங்கம், முத்து (=நித்தில்>நிதி), வயிரம், மணி, பவளம் போன்றவை (தமிழ் பேசிய) தெற்கில் மட்டுமே கிடைத்தன. இவற்றிற்காகவே தென்னகத்தின் மீது மகதர் படையெடுத்தார். (பொ.உ.மு.600- பொ.உ.400 வரை 1000 ஆண்டுகளுக்கு மகதர்-தமிழர் போட்டியிருந்தது.) அற்றைத் துணைக் கண்டத்தில் தென்னகப் பொருளாதாரமே மிக வலிது. பூகோளத் தன்னேர்ச்சி (geographical accident) காரணமாய்த் தென்னிந்திய வணிகச் சொற்கள், மரபுகள், பழக்க வழக்கங்கள் இறுதியில் வென்றன. கோதம புத்தர், வர்த்தமான மகாவீரருங் கூடத் தமிழ் கற்றாரெனப் பதிவுசெய்வர். நீர்நில வளம் மகதத்தில் சிறந்தும், மணி, முத்து, மாழை வளம் என்பது தெற்கேயே சிறந்ததால், ’நிகமம்’ என்பது தமிழ்ச்சொல்லாய் இருக்கவே வாய்ப்பதிகம். ஓரூரின் ”குறித்த தொழில்செய் நிகமத்தார்”. அல்லது ”வெவ்வேறு தொழில்செய் நிகமத்தார்” எனப் புரிந்துகொள்ளலாம்.

நிகமத்திற்கு மாறான சால்+த்+து = சாற்று>சாத்து என்பது ஊரூராய் நகரும் வணிகர் கூட்டமாகும். மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், சிறு தேர்கள், ஆயுதமேந்திய காவற் படைகளெனப் பல்வேறு உறுப்புகள் அடங்கியதாய்ப் பென்னம்பெரு வழிகளில் மாதக்கணக்கில் சாத்துகள் [சாரை சாரையான வேயனங்கள் (caravans - series of wagons; வேயனமே வேகனம்>வாகனம் ஆனது.) கொண்டதாய்ச்] செல்லும். பொ.உ.மு. 800-600 அளவில் மகதமே இந்தியாவின் பேரரசு. துணைக்கண்டத்தின் வடமேற்கு, தெற்கு மூலைகளிலிருந்து மகதம் போகும் பெருவழிப் பாதைகள், (தக்கசீலம் தொடங்கி மகதம் வரும்) உத்தரப் பாதையும் (தகடூர் தொடங்கி மகதம் போகும்) தக்கணப் பாதையுமே. இப் பாதைகளில் நகரும் சாத்துகளின் கவனம், தம் சரக்குகளைப் பேணல், பாதுகாப்பு, இலக்கிப்பு (logistic ஓரிலக்கைச் சென்றடைதல்) என்றேயிருந்தது. வழிப்பறி, கொள்ளை, எதிர்பாராத் தாக்கல் போன்றவை ஊடே இருந்ததால் பல்வேறு ஆள்-பேர்-அம்புகளுடன் தான் எல்லாவகைச் சாத்துகளும் இப் பாதைகளிற் பயணித்தன.

வடமேற்கில் தக்கசீலந் தொடங்கி, (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் எனும்) 4 ஆறுகளையுங் கங்கையையும் கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலிபட்டணம் வழி அரசகம் (முதல் இந்தியப்பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வந்துசேரும் பாதையை உத்தரப்பாதை என்பார். (கிட்டத்தட்ட நேபாள எல்லையிலுள்ள சாவத்தி கோசலத் தலைநகர். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

இதேபோல், கோதாவரியின் வடகரையின் படித்தானம் (patiththaana> prathisthana; patiththaana> payiththaana> paithan; இற்றை அவுரங்காபாதிற்கு அருகிலுள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழி வடக்குநகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையிலுள்ள மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப்பகுதியின் (Gond country) கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றுக்கரையில் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி/சாகேதம் (Fyzaabaad) வந்து சாவத்தியிற் சேருவதே தக்கணப் பாதையாகும்.

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டிப் பாடலியிலிருந்து மேற்கே வாரணசிவழி, கோசாம்பியடையும் பெருவழியும், தெற்கே (மதுரை, உறையூர், வஞ்சி போன்ற) தமிழக நகரங்களில் இருந்து குடகு, அதியர் (தலைநகர் தகடூர்), கங்கர்நாடு வழி (ஐம்பொழில் ஊடாக, வடுகவழி மேற்கு) கருநாடு கடந்து, படித்தானம் (கன்னரின் தலைநகர்) பிடிக்கும் நீட்சியும் முகன்மைப் பாதைகளே.

(இங்கோர் இடைவிலகல். பொ.உ.மு.600 இலிருந்து பொ.உ..300 வரை இற்றை ஆந்திரப்பிரதேசம், தெலிங்கானா, ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்றவிடங்களின் முழுதையும் இந்திய அரசுகள் ஆட்கொள்ள வில்லை. இவ்விடங்கள் எல்லாம் பெரிதுங் காடுகளே. காடுகுறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப்பிரதேசம், குசராத், மராட்டியம் போன்ற வழியே தான் வடக்கு/ தெற்கு வணிகம் நடந்தது. அற்றை உத்தர, தக்கணப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமின்றி, அரணம் (army) நகரவும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்யவுங் கூட முகன்மையானவை. இப்பாதைகளைக் கைக்கொள்ளாத எந்தப் பேரரசும் எளிதில் குலைந்து போகும். அதேபோல் எந்த எதிரியும், இவற்றையே கைக்கொள்ளத் துடிப்பான். இப்பாதைகளின் விளிம்புகளிற்றான் பேரரசுகளால் (வரிவாங்கும்) மாதண்ட நாயகர் பணி அமர்த்தப்பட்டார். (2200 ஆண்டுகளுக்கு முன் தமிழரின் நட்பரசரான நூற்றுவர் கன்னர்- சாதவா கர்ணிகள்- மகதத்தின் மாதண்ட நாயகராகவே தம் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். ஒருசிலர் முட்டாள் தனமாய் சிலம்பு நூலைப் புரிந்துகொண்டு, சாதவகர்ணிகளைக் குப்தர் காலத்தோடு பிணைப்பார். சிலம்பை “நாவல்/ புதினம்” என்பார். சிலம்பை ஒழுங்காய்க் காலங்கணித்துப் புரிந்துகொள்ளாத எவரும் தமிழர் வரலாற்றையும், மகத-தமிழகப் பிணைப்பையும் புரிந்துகொள்ள முடியாது. சிலம்பே தமிழர் வரலாற்றறியும் கருவி.)

மாடுகள்/குதிரைகள், வண்டி ஆகியவற்றைப் பிணைத்து நுகுக்கும் (நுகுத்தல் = சேர்த்தல், பூட்டல்) மரம் நுகமெனப்படும். இச்சொல்லுக்கு இணை பிற தமிழிய மொழிகளில் ம.நுகம்; க. நொக (g); வ.யுக (g); குட. நொக; து.நுக, நொக; தெ.நொக என்றமையும். கணையம் (கணுக்கும் மரம். கணுத்தல்= கட்டல், பூட்டல்) என்றுஞ் சொல்வர். (சிவகங்கைப்பக்கம் பெரிய வீட்டு வளவுகளை மூடுவதாய் முகப்பு நிலைக்கதவைப் பூட்டும் மரத்திற்கும் கணையப் பெயர் உண்டு. ஒருகாலத்தில் மதிற்கதவுகளை இணைக்கவும் கணையம் பயனுற்றது. மேற்கண்ட வண்டிகளிற் கணுக்கப்படும்/ பூட்டப் படும் விலங்குகள் 2, 4 ஆய் மட்டுமிருக்கத் தேவையில்லை. 7 குதிரைகள் பூட்டிய சூரிய ஒளி வண்டியின் முன்னுள்ளதும் நுகமே. இதற்கு முன்னிற்பது என்றும் பொருள் உண்டு. அதனாலேயே agency பொருளும் இச்சொல்லிற்கு வந்து சேரும். இதேபொருளில் இன்றும் ’முகவம்’ என்ற சொல்லை நாம் பயனுறுத்துகிறோம். முகவந் திரிந்து முகாம் என்றுமாகும்.

முகத்தல் தொடர்பான முகைக்கும் பிங்கலம் கூட்டப்பொருளே சொல்லும். முகைப்போலியான நுகைக்கும் தொகுதிப்பொருள் உண்டு. நுகையம்= பெருந் தொகுதி. (பாகதத்தில் நுகாயம்> நிகாயம் ஆகும்.) தமிழில் இதைத் தொகை என்போம். வினைத்தொகை, எட்டுத்தொகை..... என்று சொற்கள் உருவாகும். மேலே சொன்ன தீகநிகாயத்தைத் தமிழாக்கினால் நெடுந் தொகை என்றுதான் சொல்லமுடியும்.(நம் அகநானூறும் புறநானூறும் கூட நீண்ட அடிகள் இருந்தலால் நெடுந்தொகை எனப்படும்.) மஜ்ஜிமநிகாயத்தை நடுத்தொகை என்று மொழிபெயர்க்கலாம். (நம் நற்றிணையும் அதன் அடி அளவால் நடுத்தொகை எனப்படும்), குட்டகநிகாயத்தைக் குறுந்தொகை எனலாம். (நம்மூர்க் குறுந்தொகையும் குறுகிய அடிகளால் அப்படிச் சொல்லப் படும்.) ஆகச் சங்க நூல்களுக்கும் புத்த சமய நூல்களுக்கும் அடியளவால் இப்படிப் பெயர்வைக்கும் ஒப்புமை இருந்துள்ளது உண்மை தான். அதே பொழுது எது முந்தை வழக்கம், எது பிந்தை வழக்கம் என்று தமிழ், பாகதத்தில் பிரித்தறிவது ஆய்விற்குறியது. வேறிடத்தில் பார்ப்போம்.

முகத்தல்= நிறைத்தல். முகந்ததைச் சிவகங்கைப்பக்கம் மகுந்தது (=நிறைந்தது) என்பார். ”கரை மகுரக் காவிரியில் வெள்ளம் போகுது..”. முகவை= மிகுதியாய்க் கொடுக்கப்படும் பொருள். (”புகர்முக முகவை” புறநா. 371) நெற்களத்தில் சூடடிக்கும் போது முகக்கக் கிடக்கும் நெற்குவியல் முகவை ஆகும். முகவையிற் பாடும் பாட்டு முகவைப் பாட்டு. ஒருவிழாவில் நன்னேரம் கூடி வருவதை முழுத்தம்> முகுத்தம் என்பார். (காரணம் புரியாது அதைச் சிலர் முகூர்த்தமென நீட்டி முழக்கிச் சங்கதத் தோற்றந் தருவர்.)

வடபால் மொழித்திரிவில் நுகம் நிகமாகும். (தமிழிலும் இத் திரிவுண்டு.) agency, company, carporation என இந்தியில் பொருள் சொல்வார். தமிழிலும் நிகத்திற்கு நிறுவனப் பொருள் சொல்லலாம். நிகரம் என்பதற்கும் கூட்டம், குவியல், மொத்தப் பொருண்மைகளுண்டு. கூட்டப்பொருள் நீட்சியாய் இங்கே பொருந்தற் பொருள் வந்துசேரும். இதற்கு இது நிகம்/நிகல்/நிகர் (பொருத்தம்) என்பார். நுகத்தல், இதன் வழி நிக(ர்)த்தலாகும். (நிகர், நிகர்க்கும், நிகர்ப்பு, நிகரா, நிகரி, போன்றவை சங்க இலக்கியத்தில் பரவலாயுண்டு. நிகர், தெலுங்கில். நிகநிக, நிகாரிஞ்சு என்றும் துளுவில்.நிசாசு என்றும் மாறும்.) தொல்காப்பியத்தில் பல்வேறு உவம உருபுகளில் ’நிகர்ப்ப’ சொல்லப்படும். (உவ்வியது உவத்தலாகி ஒத்தலாகும். எங்கள் பக்கம் ”உள்ளது போல்” என்பார். இங்கு உள்ளது அங்கும் உள்ளும். உள்வு> உவ்வு என்றுந்திரியும். உவ்வலில் யகரஞ் சேர்ந்தும் பலுக்கப்படும். உவம்>யுவம்) ஒரேமாதிரி நிகரானவர், (காட்டாகப் பொன் வாணிகர், எண்ணெய் வாணிகர், வெளி நாட்டு வாணிகர், உழவர், வினைஞர் என்போர்) ஒரேவகைத் தொழில் செய்யும் ஆட்களாவார். இவர் சேரும் கூட்டமைப்பு நிகம். இக்காலத்தில் guild, society என்கிறாரே அது இதற்குச் சரிவரும். also gild, early 13c., yilde (spelling later influenced by Old Norse gildi "guild, brotherhood"), a semantic fusion of Old English gegield "guild, brotherhood," and gield "service, offering; payment, tribute; compensation," from Proto-Germanic *geldja- "payment, contribution" (source also of Old Frisian geld "money," Old Saxon geld "payment, sacrifice, reward," Old High German gelt "payment, tribute;" see yield (v.)).

”நிகமித்தல்” வடமொழி, தென்மொழி தெரிந்த மணிப்பவளரின் சொல்லாக்கம். (ஈடு.1.6) பல்வேறு வாதங்களை ஒன்று சேர்த்து இறுதியில் வரும் முடிவை நிகமென்பதாய் மேலேகூறினேன் அல்லவா? ”தருக்க சங்கிரகத்தில்” வரும் 5 அனுமான உறுப்புகளில் இறுதியானது ”நிகமனம்” எனப்படும். இதுதவிர, ’நிகவம்’ முகட்டுத்தேற்றில் (metathesis) நிவகமென்று ஆகிக் கூட்டப்பொருள் உணர்த்தும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: