Monday, October 01, 2018

மறைக்காடு - 8

இனி மறைக்காடு பற்றிய சுந்தரரின் 7 ஆம் திருமுறை 71 ஆம் பதிகம் பார்ப்போம்.. சுந்தரர் இரண்டாம் நரசிம்ம பல்லவனான இராசசிம்மன் (கி.பி.700-728) காலத்தவர். 18 அகவையில் நடக்கப் போன திருமணத்திற்குச் சற்று முன்னால் தடுத்து இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர். அப்பர், சம்பந்தர் காலத்திலிருந்து 80 ஆண்டுகள் (ஏறத்தாழ 3 தலைமுறைகள்) கழித்து சுந்தரர் கி.பி. 712 அளவில் மறைக்காடிற்கு வந்தாரெனலாம். இந்த 80 ஆண்டுகளில் கோடிக்கரைப் பக்கம் பெரும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதனாற்றான் சுந்தரர் பதிகம் நமக்கு முகன்மையானது.   .

719 தாழைப்பொழில் ஊடே சென்று பூழைத்தனல் நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே (தாழை நிறைந்த பொழிலினூடே சென்று, புழைப் பொருத்தில் நுழைந்து குட்டிக்குரங்கு வாழைக்கனி உண்ணும் மறைக்காடே. 80 ஆண்டு காலத்தில் மறைக்காடு மாறிவிட்டது. காட்டினளவும் சுருங்கியது. சிற்றளவு முல்லைநிலம் மருதமாகியிருக்கலாம். ஊர்மக்கள் தொகை கூடியிருக்கலாம். அடுத்துவரும் திருக்கோடிப் பதிகத்தில் கோட்டை பற்றிய பேச்சேயில்லை. ஏதோவோர் அரசியல் மாற்றம் அங்கு நடந்தது போல் தோற்றுகிறது. துறைமுகத்தின் முகனத்தன்மையும் மாறிப்போயிற்று. குழகர் கோயிலை அடுத்து ஓர் ஈ,காக்கை கூட இல்லை. அதனருகில் ஆட்கள் குறைந்தாரோ, என்னவோ? ”இங்கே ஏன் தனியாக உள்ளாய்? ஒற்றியூருக்கும் ஆரூருக்கும் வந்துவிடக் கூடாதா?” என்றெலாம் சுந்தரர் இறைவனிடங் கேட்கிறார். மறைக்காடு புறஞ்சேரியாகவன்றித் தனியூராகவே மாறியது போலும். வாழைகள் அங்கு பயிரிடப்பட்டன. பொதுவாய் ஓரூரில் நிறையப் பேர் வாழத் தொடங்கினால் வாழைகள் கூடும். மாந்தர் எண்ணிக்கையும் வாழை எண்ணிக்கையும் நேர்விகிதங் கொண்டவை. கூடவே மாந்தர் இருக்குமிடத்தில் கூழைக்குரங்குகள் மண்டுவதும் இயல்பு. தன்னுதல்= பொருத்தல். தனல்= பொருத்து. கூழைக்குரங்கு = குட்டைக்குரங்கு )

720 முகரத்திடை முத்தின்ஒளி பவளத்திரள் ஓதத் தகரத்திடை தாழைத்திரள் ஞாழல்திரள் நீழல் மகரத்தொடு சுறவங்கொணர்ந்து ஏற்றும் மறைக்காடே (சங்குகளிடையே முத்து ஒளிதர, பவளங்கொண்ட திரள் ஊத, தகர வாசனைக்கு நடுவே தாழையின் மணத்திரளும், ஞாழலின் மணத்திரளும் சேர, கழியில் கிடக்கும் முதலையொடு, சுறாமீனையுங் கொண்டுவந்து ஏற்றும் மறைக்காடே. முகரம் = சங்கு;  ஓதம், ஊதிப்பருத்தலைக் குறிக்கும். bulging of seawater. ஊது>ஓது>ஓதம், தகரம்/தகரை என்பது இக்காலக் கரிசலாங் கண்ணியைக் (Eclipta alba) குறிக்கும். பொன்னாங் கண்ணிக் கீரை, கரிசலாங் கண்ணியிலை, கறிவேப்பிலை, செம்பருத்தியிலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து நாட்டுப் புறங்களில் எண்ணெய் காய்ச்சுவார். இதைத் தலையில் விடாது தேய்த்து வந்தால், முடியடர்த்தியும், நீளமும் கூடும். தகரக்கூந்தல்= மயிர்ச்சாந்து பூசிய கூந்தல்; தகர்=பொடி; தகரம்= விதப்புப்பொடி; தலைமயிர்க்கிடும் ஒருவகைச் சாந்து. சங்ககாலப் பெண்கள் தகரச்சாந்தைத் தலையிற்பூசி நீராடியிருக்கிறார். பார்க்க: http://mymintamil.blogspot.com/2016/11/Sanga-Ilakkiyangalil-Ariyar-by-Ramaki-4.html. ஞாழல் = Cassia sophera. மகரம் = முதலை. இங்கே உப்புநீரில் கிடப்பதைச் சொல்கிறார். சுறவம் = Shark. சில சுறவங்கள் ஆழ்கடலில் மட்டுமில்லாது உப்பங்கழிகளிலும் உலவும்.  .
 
721 தெங்கங்களும் நெடும்பண்ணையும் பழம்வீழ் மணற் படப்பைச் சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடரி வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே (தென்னை மரங்களும், நெடிய பனை மரங்களும், பழம்விழும் மணல்கொண்ட படப்பைகளின் சங்குகளும், இலங்குஞ் சிப்பியும், வலம்புரிகளும், இடர, உயர்ந்த பாய்மரங்களோடு கப்பல்களும் வணங்கும் மறைக்காடே. கழிக் கானல் தோற்றம் சற்று மாறி யுள்ளது. தென்னையும், பனையும் முன்னால் சொல்லப்படவில்லை. இப்பொழுது வருகின்றன. மாந்தர் கூடினால் தென்னை கூடும். பாய்மரக் கப்பல்கள் கி,பி. 712 இலும் வந்துபோய்க் கொண்டிருந்தன. ஒரு கடற்கரையில் 1000 இடம்புரிச் சங்குகளுக்கு 1 வலம்புரிச் சங்கு கிட்டுமென்பது பட்டறிவுப் புள்ளிக்கணக்கு. இங்கே வலம்புரிகளெனப் பன்மையில் சொல்வதால் சங்குத் தொழில் வளமாக நடந்தது போலும். பொதுவாக முத்துக்குளித்தல் குறைந்த பின்னும் சங்குகுளித்தல் நடைபெறும். சம்பந்தர் முத்து பற்றிச் சொன்ன அளவு சுந்தரர் சொல்லவில்லை. (முத்துக் குறைந்துபோன தூத்துக்குடியில் இன்னும் சங்குக் குளிப்பு நடைபெறுகிறதே?) காலம் மாறிவிட்டது. முத்துவாங்க ஆள் இல்லையெனில், அப்புறம் சங்கு குளிப்பது தானே போக்கிடம்?
 
722 குரைவிரவிய குலைசேகரக் கொண்டல்தலை விண்ட வரைபுரைவன திரைபொழுதிழிந் தேற்றும்மறைக் காடே. (குரை விரவிய, குலை சேர்ந்தாற் போலிருக்கும் மேகங்கள் பிளக்க, மலைபோலும் திரை நாளும் இழிந்து ஏற்றும் மறைக்காடே. குரை = இடிச்சத்தம். மேகங்கள் குலை போன்றிருக்கிறதாம். விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்; இந்தியாவை வடக்கு, தெற்கெனப் பிரிக்கும் மலை விண்டமலை. அதை விந்தமலை>விந்திய மலை என்று இக்காலத்தில் திரித்துச் சொல்கிறோம். அது தமிழ்ப்பெயர். (விவரந்தெரியாது பல தமிழர் இருக்கிறார். இந்திய ஆறுகள். மலைகளின் பெயர்களில் பலவும் தமிழே. (வேறு ஒருநாள் பார்ப்போம். அது பெரியகதை.) பொழுது=நாள்; இழிந்து ஏறுதல்=தாழோதம், உயரோதம் என்று மாறிமாறி ஏற்படுதல். இடியோடுகூடிய மழைநாளில் சுந்தரர் மறைக்காடு வந்திருக்கிறார்.

723 பரவை அங்கைக்கடல் அருமாமணி உந்திக்கரைக் கேற்ற வங்கத்தொடு சுறவங்கொணர்ந் தேற்றும் மறைக்காடே (பரந்த அங்கைக்கடல் அரிய மணிகளை உந்திக் கரைக்கேற்ற, (புறங்கைக்கடல்) கப்பலோடு சுறாவையும் கொண்டுவந்து ஏற்றும் மறைக்காடே. கழிக்கானலில் உட்கடல் வெளிக் கடலென 2 பகுதிகளுண்டு. உட்கடல், கழிக்கரைகளுக்கு உட்பக்கமாயும், வெளிக்கடல், திறந்த கடலாயும் இருக்கும். முன்னது அகங்கை>அங்கைக் கடல்; inner harbour; பின்னது புறங்கைக் கடல். outer harbour. அங்கைக்கடலில் அருமாமணிகள் கிடைக்க, புறங்கைக்கடலில் வங்கங்களும் சுறவங்களும் இருக்கின்றன. புறங்கைக் கடலில் கப்பல்கள் நிற்கப் படகு மூலம் எல்லா மாற்றமும் நடக்குமென முன்னாற் சொன்னேனே? சுந்தரர் காலத்தில் 2,3 கப்பல்களாவது வாராதில்லை; ஆனால் கோட்டையிற் கட்டுப்பாடு செய்யும் அளவிற்கு இல்லாது கப்பல்கள் வெகுவாய்க் குறைந்துவிட்டன என்று கொள்ளலாம். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குள் வரலாறு இப்படி மாறி விட்டது.) 

724 பரவை கடலிடையிடை கழியருகினில் கடிநாறுதண் கைதை மடலிடையிடை வெண்குருகெழு மணிநீர் மறைக்காடே (பரந்த கடலின் இடைப்பகுதியில் கழியருகினில் வலிய மணம் கமழும் தண் தாழைமடலின் இடையே வெண்நாரை எழுகின்ற நீலநீர் மறைக்காடே. கழிக்கரையை ஒரு விரல்போலக் கொண்டால் கழியின் நுனியென்பது கடலுக்கு இடைப்பகுதி. தாழை அங்கிருக்கிறது. நீலநீருக்கு மேல் பறந்திருக்கும் வெண்நாரை தாழை மடலின் இடையேவந்து எழுகின்றது.)

725 செந்நெல் வளைவிளைவயல் கயல்பால்தரு குணவார்மணற் கடல்வாய் வளைவளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும்மறைக் காடே (செந்நெல் கதிர்கள் வளைந்து விளைந்து கிடக்கும் வயலும், கயல்மீனை நமக்குத்தரும் கிழக்கு நீர்ப்பரப்பும், கடல்வாய் மணலில் வளைந்த சங்குகளொடு, சலஞ்சலமும் கொண்டு தந்து எற்றும் மறைக்காடே. இங்கே கழிக்கானலின் கடற்பகுதி முடிவடையும் இடத்தில் வயலும் அதையொட்டி நந்நீர்க் குட்டையும் இருப்பது தெரிகிறது. கழிக்கரையின் மணலில் சங்குகளும் சலஞ்சலமும் கிடைக்கின்றன. சலஞ்சலம் என்பது பத்திலக்கம் இடம்புரிச் சங்குகள் கிடைத்தால் பெறக்கூடிய ஒரு பெரிய சிறப்பு வலம்புரிச்சங்கு. அதாவது 1000 வலம்புரிச்சங்குகளுக்கு 1 சலஞ்சலம் கிடைக்கும். சலஞ்சலம் இங்கு ஒருமையிற் குறிப்பிடப்படுகிறது.)
     
726 கலம்பெரியன சாருங் கடற்கரைபொருது இழிகங்கைச் சலம்புரிசடை முடியுடையவர்க்கு இடமாவது பரவை வலம்புரியொடு சலஞ்சலம்கொணர்ந் தேற்றும்மழைக் காடே (கங்கை இழியும் புரிசடையாருக்குப் பெருங்கலங்கள் சாருங் கடற்கரையை பொருதி, கடலின் வலம்புரியொடு சலஞ்சலம் கொண்டு வந்து ஏற்றும் மறைக்காடே. பெருங்கலங்கள் இங்கு வாராதில்லை. ஆனால் பின்வரும் பதிகத்தைப் படித்தால் கோடிக்கரையின் சிறப்புக் குறைந்துவிட்டது போலவே தோற்றுகிறது.)

727 அறுகால் வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிநீர்மறைக் காடே. (அறுகால் வண்டு ஆடுகின்ற தண்பொழில் சூழ்ந்து எழுகின்ற நீலநீர் மறைக்காடே.)

728 மறைக்காடு

அன்புடன்,
இராம.கி.

No comments: