Wednesday, September 11, 2019

சிலம்பு ஐயங்கள் - 19

"காட்சிக்காதை 163 ஆம் வரியில்வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று 4 ஆவதாய் ஒரு குறுக்குக் கேள்வி எழுந்தது: முன்கொடுத்த விடையின் தொடர்ச்சியிது. இதில் சுங்க அரச குடியினரையும் கனக அரச குடியினரையும் பார்க்கப் போகிறோம்.

புஷ்யமித்ர சுங்கன் காலம் பொ.உ.மு. 185-149 (பெருகதத்த மோரியன் ஒரு படை அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த போது, சூழ்ச்சியால் அவனைக் கொன்று, அவனிடம் சேனைத்தலைவனாய் இருந்த புஷ்ய மித்திரன் ஆட்சிக்கு வந்தான். அவந்தியின் பெருமானர் குலஞ் சேர்ந்த இவனே இந்தியாவில் வேதமறுப்புச் சமயங்களின் ஆளுமையைத் தடுத்து நிறுத்தி, வேதநெறிக்கு முன்னுரிமை கொடுத்து, மீண்டும் தழைக்க வைத்தவன். இவனையும், இவன் மகனையும் வேதநெறியார் சிறப்பாகவே கருதியிருக்க வேண்டும். ஏனெனில் குப்தர் காலத்திய அரசவை இவரைப் போற்றியுள்ளது. புஷ்யமித்ரன் காலத்தில் புத்தமதம் ”மத்திய தேசத்தில்” இல்லாது போய், வடமேற்கே இற்றை ஆப்கனித்தானுக்குத் துரத்தப்பட்டதெனவும் ஆய்வாளர் சொல்கிறார். ஆனால் அதே பொழுது வேதமறுப்புச் சமயங்களுக்கான ஆதரவை இவன் முற்றிலும் நிறுத்தி விடவில்லை. இந்த அரசனின் ஆளுமை நருமதையாறு வரைக்கும் இருந்தது.)

அக்னி மித்ரன் காலம் பொ.உ.மு. 149-141 (இவன் புஷ்யமித்ரனின் மகன். வேத நெறியைத் தூக்கிப்பிடித்த பிற்காலக் குப்தர்களின் அவை சேர்ந்த காளிதாசர் எழுதிய ”மாளவிகாக்னிமித்ரம்” என்ற நாடகத்தின் நாயகன் இவனே. புஷ்ய மித்ரனின் நடவடிக்கைகளுக்கு இவனும் பொறுப்பானவன். வேதநெறிக்கு மறுமலர்ச்சி கொடுத்தவன் என்பதால் இவன் காளிதாசனின் நாயகன் ஆனானோ, என்னவோ? )

வசுஜ்யேஷ்டன் காலம் பொ.உ.மு. 141-131
வசுமித்ரன் காலம் பொ.உ.மு. 131-124
பத்ரகன் காலம் பொ.உ.மு. 124-122
புலிந்தகன் காலம் பொ.உ.மு. 122-119

வஜ்ரமித்ர பாகபத்ரன் பொ.உ.மு. 119-83 (இவன்காலத்தில் மகதம் ஆட்டங் கொள்ளத் தொடங்கியது. பாடலிபுத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (Beznagar. இற்றை ம.பி. மாநிலத்திலுள்ளது. இங்கே அசோக மோரியன் முதற்கொண்டு மகத இளவரசர் ஆட்சி புரிந்தார்.) தலைநகர் மாற்றப் பட்டது. மகதம் சிறிது சிறிதாகச் சுருங்கியது. மகதப் பகுதிகளைக் கவர்ந்து கொள்ள கலிங்கர், நூற்றுவர் கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசர் என்று பலரோடு சண்டைகள் தொடங்கி விட்டன. இக்காலத்தில் பாணினியின் ”அட்ட அத்தியாயி” இலக்கணத்திற்கு பதஞ்சலி மாபாடிய (மகா பாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்த சூத்ரம்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். பாகபத்ரன் ஆட்சி முடிவில் நூற்றுவர் கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார். மகதம் வலியிழந்தது இந்தியாவெங்கணும் அன்று தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறுத்தது இயற்கையே. இக்காலத்தில் தான் தன் தந்தையின் சார்பாக முதல் முறை வடக்கே சேரன் வந்துள்ளான். அவன் தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்புக் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். சிலம்பில் 2 படையெடுப்புகள் குறித்துச் செய்திகள் காட்டப்படுகின்றன.

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை யாட்டிய அந்நாள்”

இங்கே கோமகளென்றது இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனின் மனைவி நற்சோணையை. அவள் கங்கையிலாடியது பெரும்பாலும் வாரணாசி ஆகலாம். இன்றும் தெற்கிலிருந்து அலகாபாத், கயை, வாரணாசி போய் ஆடுவதில் தமிழர் பலரும் அளவற்ற ஆர்வங் கொள்கிறாரே? அது அன்றும் நடந்திருக்கலாம். சேரன் சிவநெறியாளன். விண்ணவப் பெருஞ்சோற்றை (ப்ரசாதம் என்று சங்கதப் படுத்துவர். அதையே சொல்லி நம் தமிழ்ப்பெயரை மறந்துவிட்டோம்.) தலையில் வாங்க மறுத்தவன். ஆனால் தோளிலேற்க ஒருப் பட்டவன். மகதக் குழப்பதிற் தானும் புகுந்து விளையாட முடியும் எனுங் காரணத்தால் கண்ணகி கதையை தன் அரசமுயற்சிக்குச் சேரன்  பயன் படுத்தினான். (வடக்கிலிருந்து intelligence info வந்தது வஞ்சிக் காண்டத்திற் சொல்லப்படும்.) There must have been an empire building politics with these expeditions. We should not be very naive to these aspects. Cheran was as intelligent as our modern leaders are. 

தேவபூதி காலம் பொ.உ.மு. 83-73 (இவனே கடைசிச் சுங்க அரசன். அளவுக்கு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்ட இவ்வரசனை இவன் முதல் அமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொல்வான். அதற்கப்புறம் கனகரே ஆட்சி செய்வார். தேவபூதிக்குத் தனுத்ரபூதி என்ற பெயரும் இருந்திருக்கலாம். பாகதச் சான்றுகள் கொண்டு இதை உறுதிசெய்ய வேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப்பெயர், எவை இயற்பெயர்?” என்று சொல்ல முடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரன் ஆகலாமோ?” என்ற ஐயம் கட்டாயம் எழுகிறது.

செங்குட்டுவன் பொ.உ.மு.80 இல் படையெடுத்தபோது பெரும்பாலும் இவ் அரசனுடன் போர்புரிந்திருக்கலாம். மகதம் தமிழர்க்குப் பகைநாடு என்பதை இந்திரவிழவு ஊரெடுத்த காதையில் “மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்” என்ற வரிகள் தெளிவாக வெளிப் படுத்தும். அதன் பின்னரே ”யாரின்மேல் செங்குட்டுவன் படை எடுத்தான்” என்பது எனக்கு விளங்கியது. மகதம் பற்றிப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கட்டமாய்ச் செருகி உராய்ந்து பார்க்கப் பார்க்க, உள்ளிருக்கும் படம் விளங்கிற்று. செங்குட்டுவனின் படைபலம் தெரிந்து அவனைத் தம் கைக்குள் வைத்து அவன் மூலம் மகத அரசிற்கு ஊறு விளைவித்துப் பின் தாம் கைப்பற்றிக் கொள்ள முற்பட்டே நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனுக்கு உதவியிருக்கிறார்.

”இமயத்திலிருந்து பத்தினிக்குக் கல்லெடுக்க நீங்கள் போகவேண்டுமா? நாங்கள் செய்யமாட்டோமோ?” என்பதெல்லாம் சரியான அரச தந்திரம் (tactics). தடந்தகை (strategy). தவிர நூற்றுவர் கன்னருக்கும் சேரருக்கும் நெடு நாள் உறவு இருந்திருக்கலாம். புறம் 2 இல் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடியது, ”ஈரைப்பதின்மரும் பொருதுகளத்து ஒழிய” என்பது பாரதப் போர்க்களத்தைக் குறிக்காது நூற்றுவர்கன்னர் போர்க்களத்தைக் குறித்திருக்கலாமோ? - என்ற ஐயப் பாடும் எனக்குண்டு. புறம் 2 பற்றிய கட்டுரையை என் வலைப்பதிவில் பாதிவரை எழுதிப் பின் முடிக்காது விட்டேன்.   

தவிர, செங்குட்டுவன் படையெடுப்பின்போது பெயருக்கு தேவபூதி மகத அரசனாயிருந்து கட்டுப்பாடு முதலமைச்சனிடமே கூட இருந்திருக்கலாம். சேரன் போரிறுதியில் பிடித்துப்போனது வசுதேவக் கனகனா, அன்றி அவன் தந்தையா என்பது தெரியவில்லை. ஆரிய அரசர் என்போர் மகதங் காக்க இவனுக்குப் பின்னிருந்தோராவர். அவர் ஆயிரம் பேர் என்பது ஒருவிதப் பேச்சு வழக்கு. “இவனுக்குப் பின்னால் ஆயிரம் பேர் நின்றார் தெரியுமா?” என்று இன்றும் உரையாடலிற் சொல்கிறோம் இல்லையா? அதைப் போல் இதைக் கொள்ளவேண்டும். உறுதியான எண்ணிக்கையென்று கொள்ளக் கூடாது.)  கனக அரச குடியினர் (இவரைக் கனவர் என்றுஞ் சொல்லலாம். பொதுவாக வடவரின் பெயர் அப்படியேவா நமக்கு மட்டுப்படுகிறது? கன்வன் என்று பிராமியில் எழுதுவது கனவன் என்றே தமிழியிற் படிக்கப்படும். வகரமும் ககரமும் தமிழிற் போலிகள் நாவற்பழம் நாகற்பழம் ஆகிறதே? எனவே கனவன் கனகனாவது இயற்கையே.)

வசுதேவன் காலம் பொ.உ.மு.75-66 (விசயன், வசுதேவனென்று பெயர் வைப்பது மகாபாரதத் தாக்கத்தால் இயல்பாயிருந்தது. கனக அரசர் விண்ணவப் பெயரையே கொண்டிருந்தார். சிங்கள அரசன் விசயனின் மகன் வசுதேவன் என்பதை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். சிலம்பில் கனகன் விசயன் என்பது பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் என்பது போல், இனக்குழுப் பெயர் முதலிலும், இயற்பெயர் முடிவிலும் வந்திருப்பதாய்க் கொள்ளவேண்டும். பல தமிழாசிரியர் இது புரியாது கனகன், விசயன் என்று இரு பெயராகவே சொல்லித் தருவர். இவை என்ன குப்பன், சுப்பன் போலவா அமைந்த பெயர்கள்? சேரன் ஒருவன், செங்குட்டுவன் இன்னொருவனா? சிறைப்பிடித்த ஆரிய அரசர் எல்லோரையும் கண்ணகி கோயில் குடமுழுக்கில் சேரன் விட்டுவிடுவான். அதற்கு அப்புறம் வசுதேவக் கனகனோ, அன்றி அவன் தந்தையோ வடக்கே விதிசா/பாடலிபுத்தம் போய் தேவபூதியைக் கொன்று கனக அரசை நிறுவ முயற்சி செய்திருக்கலாம்.

பாகதச் சான்றின்றிச் சிலம்பாற் கொண்ட கருதுகோள்களை நாம் நிறுவிக்க இயலாது. சுங்க, கனக அரசரின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னுங் கிடைக்கவில்லை. பாகத நூல்கள் குறைந்தே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் படுகின்றன. சங்கத நூல்களே எங்கு பார்த்தாலும் இழைகின்றன. மோரியர் வரலாறு எழுதினால், அதன்பின் குப்தர் வரலாற்றிற்கு, பொதுவான வரலாற்றாசிரியர் ஓடிவிடுகிறார். இடையில் பெருத்த இடைவெளி இருப்பது யாருக்கும் தோன்றவில்லை. சங்ககால வரலாறு எழுதவேண்டுமெனில்  இது போன்ற இடைவெளி பாகத வாயிலாய் நிரப்பப்பட வேண்டும். அன்றேல் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்கவேண்டும்.

பூமிமித்ரன் காலம் பொ.உ.மு.66-52
நாராயணன் காலம் பொ.உ.மு.52-40

சுசர்மன் காலம் பொ.உ.மு.40-30 [பஞ்சதந்திரம் எழுந்தகாலம் இவன் காலமே. “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற கட்டுரைத்தொடரை என் வலைப் பதிவிற் படியுங்கள். பஞ்சதந்திரத்தை வைத்தும் சிலம்பின் காலத்தைக் கீழிழுத்தால் தமிழர் வரலாறு “காலி” என்றெண்ணி திரு நாகசாமியும் அவர் சீடரும் முயல்கிறார் போலும். ”சிலம்பு 6 ஆம் நூற்றாண்டு நூல்” என்ற தன் கருத்தை வலியுறுத்தி, ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என வழக்கம் போல் இலக்கியக் காணிப்பை மட்டுமே தொகுத்துத் தற்குறிப்பேற்றஞ் செய்யாது ஏரண வரிதியோடு (with logical flow) ”இவ்விவற்றால் இப்படி, இதுபோல் அமைகிறதென்று” தானே அலசிச் சான்றுகள் கொடுத்து ஒரு கட்டுரையை நண்பர் நா.கணேசன் என்றெழுதப் போகிறார்? தெரியாது]

http://valavu.blogspot.in/2013/02/1.html
http://valavu.blogspot.in/2013/02/2.html
http://valavu.blogspot.in/2013/02/3.html

இனி சேரர் குடிக்கும், காட்சிக்காதை 156-164 வரிகளுக்கும் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: