Sunday, September 08, 2019

சிலம்பு ஐயங்கள் - 16

இப்பொழுது ”தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்ற கூற்றில் ”தீத்திறத்தார் யார்?” இக்கேள்வியைப் புரிந்துகொள்ள என் வஞ்சினமாலைப் பதிவைப் பாருங்கள் அதிலிருந்து சிலவற்றை வெட்டியொட்டி, சில வாதங்களைக் கூடச் சேர்த்து கீழே விடையளிக்கிறேன். (http://valavu.blogspot.in/2015/11/blog-post.html)  . .

சிலம்புச் சுவடியில் பெரும்பாலான காதைகளில் யாப்பு எதுவென வெளிப் படும். வஞ்சின மாலையில் மட்டும் அப்படியில்லை. ஆய்வின் மூலமே ஒற்றையடிகளில் நாற்சீரும், இரட்டையடிகளில் முச்சீர் தனிச்சீரும், கடையடியில் இருசீர், ஓரசைச்சீரும் பயிலும் நேரிசைக் கலிவெண்பாவை அறிகிறோம். ஆழ்ந்து பார்த்தால், 19 இடங்களில் அடிகள் சிதைந்திருப்பதும், சிலவிடங்களில் யாப்புத் தட்டுவதும் கூடப் புலப்படும். பிழைகளோடு இளங்கோ இவற்றை யாத்திருக்க முடியாது. வேறேதோ நடந்திருக்கலாம். ஓலைக்கட்டின் ஆயுள் 150/200 ஆண்டுகளெனில், உவே.சா.விற்குக் கிடைத்தது 10-14 ஆவது எடுவிப்பாக (edition) இருக்கலாம். இச்சிதைவுகள் அரும்பதவுரை எடுவிப்பிலேயே தென்படுவதால், பெரும்பாலும் 4/5 ஆவது படியெடுப்பில் ஓலைகள் செல்லரித்துப் போயிருக்கலாம். மிஞ்சியவற்றைத் தொகுத்து, தொடரறுந்த இடங்களிற் தோன்றிய சொற்களைப் பெய்து, புது ஓலைப்படி உருவாகியிருக்கலாம். ஆக வஞ்சினமாலையில் இடைச்செருகலுக்குப் பெரிதும் வாய்ப்புண்டு.] கீழ்வரும் 6 அடிகள் செல்லரித்துள்ளன. காட்சி நாடகத் தனமாயிருந்ததாலும், எதெல்லாம் இடைச்செருகலென்று சொல்ல முடியாதுள்ளோம். பொருள் சொல்கையில் குத்துமதிப்பாகவே சொல்ல வேண்டியுள்ளது.. 

  ......................................................................- வட்டித்த
  நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
  (---------------------------------------------------)-
  பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் - கோலத்து
  (----------------------------------------------------)
  மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி
  (-----------------------------------------------------)-
  மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
  (-----------------------------------------------------)-
  பாயெரி யிந்தப் பதியூட்டப் பண்டேயோர்
  (-------------------------------------------------------)
  ஏவ லுடையேனா கியார்பிழைப்பா ரீங்கென்னப்
  (-----------------------------------------------------)-

வானத்தில் நீலநிறம் கூடிப்போனது. ஆயினும் செக்கர் வானக்கீற்றுகள் அங்கங்கே இடைகாட்டுகின்றன.. அந்நேரத்தில் வெள்ளைப் பல்கொண்ட பால்நிறத்து பார்ப்பனன் போல் (பார்ப்பனன் = வெள்ளை நிறத்தவன். இந்தக் காலத்தில் மேலையரை வெள்ளைக்காரர் என்பது போல் அக்காலத்தில் பால் நிறத்தவரைப் பார்ப்பனர் என்று சொல்லியுள்ளார்.) அக்கினி தோன்றி, “பத்தினியே! பிழைநடக்கும் நாளொன்று வரும். அப்போது இந்நகரை எரியூட்ட வேண்டுமென முன்னே எனக்கோர் கட்டளையுண்டு. இதில் யார் பிழைக்க வேண்டுமெனச் சொல்” என்கிறான். இதில் அங்கியைப் பார்ப்பனனாய்க் காட்டும் ”பல்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பன” என்ற வரியை எடுத்துவிட்டு,

......................................................................-வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
----------------------------------------------  - கோலத்து
மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி

என்று பார்த்தாலும் குறைவில்லாத பொருள் கிடைக்கிறது. தேவையின்றி ல் அழனிக்கு (அங்கிக்கு/அக்னிக்கு) பார்ப்பனத்தோற்றம் கொடுக்கப் படுகிறதோ என்ற எண்ணம் எழாமலில்லை. (இப்படிப் பல தெய்வங்களுக்கும் பார்ப்பனத் தோற்றங் கொடுப்பது வேதநெறிப்பட்ட சிவ, விண்ணவ நெறியினரின் பழக்கம்.) ஐம்பூதங்களை உருவகஞ் செய்கையில் ஒரு சமண ஆசிரியன் நெருப்பைப் பார்ப்பனனாய்க் காட்டுவானா? இத்தனைக்கும் ஐம்பூதங்களை மெய்யியற் கூறுகளாய் ஆக்கியவை சாருவாகம்/பூதவாதம், (நிரீச்சுர) சாங்கியம், அற்றுவிகம், செயினம், புத்தம், விதப்பியம் (விஶேஷிஸம்) போன்ற வேதமறுப்பு மெய்யியற் பார்வைகளே. கி.மு.800-கி.பி.250 காலப் பருவத்தில் அவை வேதநெறியை ஆழமாய் எதிர்த்தன. குப்தர் காலத்திற்றான் வேதமறுப்புச் சமயங்கள் ஓய்ந்துபோய், வேதநெறி சார்ந்த சமயங்கள் புத்தாக்கம் பெற்றன. உபநிடதங்களுக்குளும் ஐம்பூதச் சிந்தனை வந்தது வெகுநாள் கழித்தாகும். இனி வஞ்சினமாலையின் கடைக்காட்சிக்கு வருவோம். இங்கும் பாட்டில் ஓரடியைக் காணோம். எதெது இடைச்செருகல் எனச் சொல்லமுடியவில்லை. ”பார்ப்பாரையும், பசுவையும் விட்டுவிடு” என்று புறனடை சொல்வது சங்ககாலத்தில் நடந்திருக்குமா? தெரியவில்லை.

  பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
  (------------------------------------------------------------)-
  மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
  தீத்திறத்தோர் பக்கமே சேர்கென்று - காய்த்திய
  பொற்றொடி யேவப் புகையழல் மண்டிற்றே
  நற்றேரான் கூடல் நகர்.

பசு என்பது காப்பற்ற வேண்டிய விலங்கென நான் படித்தவரை எந்தச் சங்க இலக்கியமுஞ் சொல்லவில்லை. கி.பி. 400 களுக்கப்புறம் வேதநெறி கலந்த சமயங்களால் புராணங்கள் எழுந்தபோதே அச்சிந்தனை வந்தது. ஆழ்ந்து ஓர்ந்துகாணின் பெரும்பாலும் இங்கு இடைச்செருகலுண்டு. எப்படி இத்தனை பேரை விட்டு மற்றவரை நெருப்புச் சூழமுடியும் என்பதும் பகுத்தறிவிற்குப் புறம்பாய்த் தெரிகிறது. ஏரண முறைப்படி ஓர்ந்துபார்த்தால் இந்த அடிகளிற் சில கேள்விகள் எழுகின்றன.

பார்ப்பார் முதலில் வருவதால், தீத்திறத்தோருக்கு ”வேள்வி செய்தோர்” என்று பொருள்கொள்ள முடியாது. அப்படிக் கொண்டால் கூறியது கூறலாகிவிடும். ”தீத்திறத்தார்” என்பதற்கு. இவ்விடத்தில் ”தீவினை செய்தோர்” என்று பொருள் கோடலே சிறந்ததாய்த் தோன்றுகிறது. தீவினையாளருக்கு எதிர் நல்வினையாளர் தானே? ”நல்வினையாளரைக் கைவிட்டுத் தீவினையாளர் பக்கம் சேர்க” என்ற பொருள் சரியாகவே பொருந்துகிறது. நல்வினையாளர் வகையை ”அறவோர், பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி”யென விரிப்பதும் சரிதான். ஆனால், மாந்தர் வரிசைக்குள் பசு ஏன் வந்தது? (தொல்காப்பிய மரபியலில் விலங்குவரிசையில் முன்னுக்குப்பின் முரணாய் வருண வரையறைகள் வரும். அவற்றையும் இடைச்செருகல் என்றே ஆய்வாளர் கணிப்பர்.) மற்ற விலங்குகள் இங்கு ஏன் வரவில்லை?

“காவிரியின் சோமகுண்டம், சூரிய குண்டம் எனும் பொய்கைகளில் (இப் பொய்கைகளை நினைவுறுத்தி இன்றும் காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் பட்டினத்தார் தலமான திருவெண்காட்டுச் சிவன்கோயிலில் சோம, சூரிய தீர்த்தங்கள் உண்டு.) நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவரோடு கூடி இன்புற்று, மறுமையிலும் போகபூமியிற் பிறந்து கணவனைப் பிரியாது இருப்பர்” என்று சொன்ன தேவந்திக்கு ”அப்படிச் செய்வது எமக்குப் பீடன்று” என்று சமயஞ் சார்ந்து மறுமொழி சொன்ன ஒரு சமணத்தி ”பசுவைக் காப்பாற்று” என்று ஒற்றையாய்ச் சொல்வாளா? அன்றி அதற்கு மாறாய், ”எல்லா விலங்குகளின் உயிரையுங் காப்பாற்று” என்பாளா?

தவிர, அறவோர், பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி என்ற பொதுப்படை மாந்தப் பிரிவு இருக்கையில் பார்ப்பனரென்ற வருணப்பிரிவு ஏன் உள்ளே வந்தது? பார்ப்பாரைக் காப்பாற்றச் சொல்லி எந்தச் சமண வழிகாட்டலும் இல்லையே? பொதுப் படைக்கும், வருணத்திற்கும் ஆன வேறுபாடு சிலம்பு ஆசிரியருக்குத் தெரியாதா, என்ன? வேதம் முறைசெய்யும் பார்ப்பனரோடு வேதமறுப்பு வழக்காடும் சமண ஆசிரியன் (காடுகாண் காதையில் கவுந்தி மாங்காட்டுப் பார்ப்பானோடு வழக்காடி வேறுபாதை எடுப்பதைக் கவனியுங்கள்) ”பார்ப்பனருக்கு விலக்குக் கொடு” என்பானா?

தவிரப் பெண்டிருக்குப் பெயரடையாய்ப் ”பத்தினி” வருகையில், அறவோருக்குப் பெயரடையாய் முதற்சீர் வந்ததை மாற்றி, இடைச்செருகலில் ”பார்ப்பாரெ”னப் பதமாற்றம் நடந்ததோ?.(புறம் 34 ஆம் பாடலைப் பதிப்பிக்கையில் “குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்ற சரியான பாடம் இருக்கையில், அதையெடுக்காது “பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்று பாடத்தை உ.வே.சா. பதிப்பித்த குழப்பங்களும் தமிழிலுண்டு. பதிப்பிப்பில் இரண்டும் இரு வேறு பார்வைகள். ”குரவருக்கு ஆன” சுவடியைக் கண்டுபிடிப்பதில் ஏராளம் தேடுதல்களும், வாக்கு வாதங்களும் நடந்துவிட்டன. ”அதுபோன்ற திருகல்கள் வேறிலக்கியங்களில் நடந்தனவா?” என இன்றுந் தெரியாது.)

பார்ப்பாரெனும் தேமாச்சீரை எடுத்து அறவோருக்குத் தேமாச்சீர் அடையையும், ”பசுப்” என்ற நிறையசையை எடுத்துவிட்டு பத்தினிப் பெண்டிருக்கு இன்னொரு நிரையசையை முன்னொட்டாய் இட்டாலும் பொருள் சீராகவே வரும். ஆகப் பார்ப்பார், பசு என்ற சொற்கள் இடைச் செருகல் எனும் ஐயம் என்னுள் வலுக்கிறது.  We should be true to the original authors. We cannot insert our individual religious perceptions into Ilango's mouth. ஆய்வின் படி பார்த்தால், இப்போதுள்ள வஞ்சின மாலையின் கடைசி 5 வரிகள் சமண நெறியாளரின் கூற்றை உணர்த்த வில்லை. ஏதோ ஒரு நுணுகிய மாற்றஞ் செய்யப்பட்டிருக்கிறது. நமக்குத் தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

No comments: