Thursday, September 26, 2019

சிலம்பு ஐயங்கள் - 29

கோட்டைக்குள் சொல்லப்படும் முதல் விவரிப்பு செல்வர் வீதியெனக் கொள்ளாமைக்குக் காரணமுண்டு. மதுரைக்குள் நுழைகையில் கோவலன் அகவை பெரும்பாலும் 21-23. (கண்ணகிக்கு 17 -19.) தான் கோவலன் இதுநாள் வரை ஏற்றுமதி/இறக்குமதி வணிகஞ் செய்தாலும், தந்தையின் உள்நாட்டு வணிகத்தில் மதுரை வாடிக்கையாளர், தொடர்பாளர் விவரங்கள் ஓரளவு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அப்படித் தெரிந்தவரிடஞ் செல்லக் கோவலனுக்கு விருப்பமிருந்தால், ”மன்னர் பின்னோரைக் கண்டு தங்க ஏற்பாடு செய்யும் வரை இவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று காவுந்தியிடம் கோவலன் சொன்னதின் பின், முறையாகக் கோட்டைக்குள் போனவுடன் விசாரித்துச் செல்வர் வீதிக்குப் போயிருப்பான். அப்படியின்றி அவன் ஊர் சுற்ற முற்பட்டதால், தெரிந்தவரிடம் அடைக்கலந் தேடுவது அவன் குறிக்கோள் அன்றெனப் புரிகிறது. தன்னிலை வெட்கம் பிடுங்கித் தின்றதால், மதுரையை நோட்டம் பார்க்க முற்படுகிறான். இப்பாவனை கொண்டவன் செல்வர் வீதிக்குப் போக மாட்டான். (யாரேனும் அடையாளங் கண்டுவிட்டால் என்ன செய்வது?) எனவே முதலிற் பார்த்தது கேளிக்கை யாடும் மருதந் துறையும், செல்வர் வந்து செல்லும் பொதுமகளிர் வீதி எனவும் பொருள் கொள்கிறோம்..

இனிக் கலை வல்லார் நிரம்பிய இரு வீதிகளைப் பார்க்கப் போகிறோம். மதுரையில் 2/3 வீதிகள் கணிகையரை ஒட்டி இருந்தன போலும். பரத்தை யென்ற சொல்லிற்குத் தமிழிற் இரு பொருள்கள் உண்டு. ஒரு பொருள் பரம் = மேடை; பரத்திலாடுபவள் பரத்தை; பரத்திலாடும் நாட்டியம் பர(த்)த நாட்டியம். (பரத்து நாட்டியத்தின் தமிழ்த்தோற்றம் அறியாது ”பரத முனிவர் அவரின் சாஸ்திரம், அது, இது” என்பது சிலர் பின்னாற் கட்டிய தொன்மம்.) இன்னொரு பொருள் பரர்/பலரைத் தழுவும் பரத்தை. இரு பொருளும் ஒரே மாந்தரிடம் இருக்கத் தேவையில்லை. அதேபோது சிலரிடம் சேர்ந்து இருக்கலாம். நம்மிற் பலரும் இப்பொருள் வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாது இருக்கிறோம். சங்க காலத்தில் இல்லக்கிழத்தி, இற்பரத்தை (concubines), பொதுப்பரத்தை (prostitutes) என 3 வகையாய்ப் பெண்கள் அறியப்பட்டார். எல்லாப் பரத்தைகளும் நுண்கலையாளரில்லை. எல்லா நுண்கலைப் பெண்களும் பரத்தைகளில்லை. .

இன்னொரு செய்தியை இங்கே சொல்லவேண்டும். ”ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன்” என்ற இல்லற ஒழுக்கம் சங்ககாலக் குமுகாயத்தில் பெரிதும் இருந்தாலும் செல்வரும், அதிகாரத்தில் இருந்தோரும் என ஆண் மக்கள் பலவகையில் ஒழுக்கத்தை மீறிய குறிப்புக்களுமுண்டு. இல்லை யெனில் இற்பரத்தையும், பொதுப்பரத்தையும் இலக்கியங்களிற் பேசப் பட்டிருக்க மாட்டார். ”சாத்தார மக்கள் இம்மரபை மீறினாரா?” என்பதற்கும், பெண்கள் இதை மீறினார் என்பதற்கும், ஒரு சான்று கூடக் கிடைக்கவில்லை. எனவே சங்ககாலக் குமுகாய உள்ளடக்கம், ஆணாதிக்கம் மிகுந்த வருக்கக் குமுகாயமாகவே (class soceity) தோற்றுகிறது. ஒருபக்கம் குறிஞ்சியிலும், முல்லையிலும் வேடுவச் சேகர (hunter-gatherer) வாழ்க்கை. இன்னொரு பக்கம், முல்லை, மருதம், நெய்தல் திணைகளில் வருக்கக் குமுகாய எழுச்சி எனக் கலவையாகவே சங்கக் குமுகாயம் இருந்தது.. கூடவே நகரஞ் சார்ந்த விழுமியங்களும் (city based values) தோன்றிவிட்டன. 

இன்றும் நாட்டுப்புறங்களில் சாத்தார மக்களிடையே இல்லற ஒழுக்கத்தை மீறியவர் முகத்திற் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவரைக் கழுதையிலேற்றி ஊரரங்கில் வலம்வர வைப்பது தண்டனையாய்க் கருதப்படுகிறது. (ஊரின் 4 வீதிகளும் அரக்கப்பட்ட காரணத்தால் அரங்காயிற்று. பிற்காலச் சோழர் காலத்தில் கோயிலைச்சுற்றி தேரோடும் நாற்பெரும் வீதிகளே ஊரின் அரங்காகும். இந்த அரங்கு, பொதியிலில் / அம்பலத்தில் முடியும். பொதியிலும் கோயிலும் அருகருகே ஒன்றைப்பார்த்து இன்னொன்று இருப்பதை இன்றும் பலவூர்களிற் காணலாம்.) இக்குற்றத்திற்கு இன்னொரு தண்டனையும் இருந்தது.

தமிழிற் சுடுமண் என்பது செங்கலைக் குறிக்கும். நாகரிகம் வளர்ந்த நிலையில் எல்லாக் கட்டுமானங்களுக்கும் செங்கல் பயன்பட்டதால், அறத்தொடு நிற்கும் (ஒழுக்கக்) கட்டுமானத்திற்கும் (”படி தாண்டாப் பத்தினி’ என்ற பழமொழிக்கும்) இதுவே குறியீடானது. ஒழுக்கத்தை மீறிப் படி தாண்டியோர் செங்கற் சுமந்து அரங்கைச் சுற்றி வருவது வடுவாக / தண்டனையாகக் கருதப்பட்டது. இதில் பரத்தைக் கொடி பறந்த வீட்டினர்க்கு மட்டுமே விதிவிலக்குண்டு. அதுவே அவர்க்குச் சிறப்புமானது. மணிமேகலை காப்பியத்தில் ”உதயகுமாரனின் பொற்றேரில் எல்லோரும் அறிய மணிமேகலையை ஏற்றேனாகில், என் சிறப்புப் போய்விடும். நான் சாத்தாரப் பெண்கள் போலாகி

சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகாஅ மரபினள்

ஆவேன்” என்று சித்திராபதி வஞ்சினம் சாற்றிப் போவாள். படி தாண்டும் வடு என்பது இற்கிழத்திகளுக்கானது. வடு நீங்கு சிறப்பென்பது பரத்தைகளுக்கு ஆனது. இதே கருத்தில் சிலப்பதிகாரத்தின் ஊர்காண் காதையில் 146 ஆம் வரியெழும். (இக்கருத்தை இதுவரை ஒழுங்காய் விளக்கிய எவ்வுரையையும் நான் பார்த்தேனில்லை.) அடுத்து உரைவீச்சில் வருவது ஆடல் மகளிரின் வீதி பற்றிய விவரிப்பாகும். ஆடற் கணிகையருக்கு உரிய சிறப்பையும், நாட்டியக் கூறுகளையும், இசைக்கூறுகளையும் கூறி இவ்வகைப்பெண்கள் மற்றோரைக் கவர்ந்திழுக்கும் பாங்கையும் கூறுகிறது. 

சுடுமண் ஏறாத,
வடுநீங்கு சிறப்புக்கொண்ட,
முடியரசு கூட ஒடுங்கிப்போகும் கடிமனை வாழ்க்கையில்,
”வேத்தியல், பொதுவியல்” என்ற இரு திற இயல்பினை அறிந்து,
சிறிதும் வழுவாத மரபில்,

ஆடல், பாடல், பாணி, தாளம், உடனுறும் குயிலுவக்கருவி ஆகியன உணர்ந்து,
(நிற்றல், இயங்கல், இருத்தல், நடத்தலெனும்) நால்வகை அவிநயக் களத்தில்,
[குரல் (ச), துத்தம் (ரி), கைக்கிளை (க), உழை (ம), இளி (ப), விளரி (த), தாரம் (நி) எனும்]
7 சுரத்தில் எய்தியதை விரிக்கும் பெருஞ்சிறப்புடைய,

தலைக்கோல் பெற்ற அரிவை (19-24 அகவை),
வாரம்பாடும் தோரிய மடந்தை (15-18 அகவை),
தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி
என 4 வகையாருமான நயத்தகு மரபைச்சார்ந்து,

1008 கழஞ்சை நாளுந் தவறாது பெறும், முறைமை வழுவாத,
தாக்கணங்கை ஒப்பியோரின் நோக்கு வலைப்பட்டுத் தவத்தோராயினும்,
நகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் இளையோரும்,
காமவிருந்தை முன்பறியாப் புதியோராயினும்,

தம் பெறுதற்கரிய அறிவு கெட்டழியும்படி,
நாள்தோறும் ஏமத்தின் இனிய துயிலில் வந்து கிடக்கும்,
பண்ணையும் கிளியையும் பழித்த தீஞ்சொல்லையுடைய,
64 கலைவல்லோரின் இருபெரும் வீதிகளும்

வையமும், பாண்டிலும், மணித்தேரில் பூட்டுங் கொடிஞ்சியும்,
மெய்புகும் கவசமும், விழைமணி பொருத்திய அங்குசமும்,
தோல்புனைச் செருப்பும், அரைப்பட்டிகையும் (waist belt),
வளைதடியும், மிகுந்த வெள்ளையான கவரியும்,
அம்பு தடுக்குங் கேடயம், வாள் தடுக்குங் கேடயம், பன்றிமுட் கேடயம், குத்துக்கால், என செம்பிற் செய்தனவும்,

வெண்கலத்திற் செய்தனவும், புதிதாய் முடிந்தவையும், பழுதிருந்து சரிசெய்யப்பட்டனவும் (reconditioned), வேதித்து வெளிவந்தவையும்,
தந்தம் கடையும் தொழில் சார்ந்தவையும்,
பல்வேறு வாசப்புகைப் பொருள்களும்,
மயிர்ச்சாந்திற்குத் தேவையானவையும்,
பூவால் புனையப்படுவனவும் என வேறுபட்டுத் தெரிவறியா அளவிற்கு வளங்கள் கலந்து கிடக்கும் (அரசன் கூட விரும்பக்கூடிய) அங்காடி வீதியும்

மேலே வேந்தரரங்கில் ஆடும் ஆட்டத்தை வேத்தியலென்பது தட்டையான விவரணையாகும். வேந்தர்க்கான அறங்களை உணர்த்தும் நாட்டியம் என்பதே சரியான பொருள். எல்லாப் பொதுவிடத்தும் பொதுமையாக ஆடக் கூடியதல்ல. சார்ந்தோர் கூடிய அரச களத்தில் அவனுக்கு மட்டுஞ் செய்வது வேத்தியலாகும். பொதுவரங்கில் எல்லோர்க்கும் பொதுவான அறங்களைச் சொல்வது பொதுவியல் ஆகும். “அரங்கேற்று காதை ஆராய்ச்சி” என்ற அரிய நூலை முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி எழுதி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இன்னும் விளக்கம் அதிற் கூறப்பட்டுள்ளது. (அவரைத் தமிழார்வலர் இதுவரை போற்றாதது பெருங்குறை,) பாணி என்பது பண்ணும் முறை. நட்டுவனாரின் விதப்பு அடவுகளைக் குறிக்கும். காட்டாகப் பந்த நல்லூர்ப் பாணியென்பர். ஒரே பாட்டிற்கு வெவ்வேறு விதமாய் அவிநயஞ் செய்து படைப்பாற்றலைக் காட்டுவர். இதில் நட்டுவனார், நாட்டியமாடுவோர் ஆகியோரின் படைப்பாற்றல் வெளிப்படும். தாளம் ஆடலுக்கு அடிப்படை. நுணுகிய அசைவுகளை நிருணயித்து  ஆடவேண்டும். குயிலுக்கருவி என்பது கூடச்சேரும் ”இசை வாத்தியங்களைக்” குறிக்கும். எந்த அவிநயமும் நிற்றல், இயங்கல், இருத்தல், நடத்தலென்ற 4 வகைகளுள் அடங்கும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் 7 சுரத்தில் எல்லா இசைகளும் அமைகின்றன. (இச்சுரங்களைச் ச, ரி, க, ம, ப, த, நி என்று இன்று அழைக்கிறோம்.) பார்க்க:

http://valavu.blogspot.in/2008/03/1.html
http://valavu.blogspot.in/2008/03/2.html
http://valavu.blogspot.in/2008/03/3.html
http://valavu.blogspot.in/2008/03/4.html

தலைக்கோலென்பது ஆட்டத்திற் சிறந்தவளைக் குறிக்க வேந்தன் தந்த பட்டம். தண்டமென்பது நட்டுவனாரின் கைக்கோலைக் குறிக்கும். தண்டியம் என்பது நாட்டியப் படிப்பைக் குறிக்கும். முதல், வாரம், கூடை, திரள் என்பன தாளத்தின் 4 நடைகள். முதல்நடை தாழ்ந்து செல்லும். திரள்நடை மிக முடுகியது. வாரநடையே பாட்டிற்குச் சிறந்ததென்பார். வாரநடை வேகம் முதல் நடையினும் 2 மடங்காகும். கூடைநடை 4 மடங்கு. திரள்நடை 8 மடங்கு. தோரிய மடந்தை = பாடல், பண், தாளம் போன்றவை அமைத்து ”எது எப்படிச் சேரவேண்டும்?” என்ற வரிசை முறையை அமைப்பவர் (இசையமைப்பாளர்). தோர் = வரிசை; தோரியம் = வரிசையொழுங்கு தோரணை = காரணகாரிய வரிசையொழுங்கு. தலைப்பாட்டுக் கூத்தி = நாட்டியந் தொடங்கையில், தலைவிக்கு மாற்றாய் நடுவிலாடும் மாற்றாளி (substitute dancer). இடைப் பாட்டுக் கூத்தி = தலைவிக்கும், மாற்றாளிக்கும் உடன்வந்து இடையாடும் கூத்திகள். இவரை அடுத்தாடிகள் (assistant dancers) என்றுஞ் சொல்வர்.

1 கழஞ்சு ஏறத்தாழ 5.2 கிராம் எடையைக் குறிக்கும். 1008 கழஞ்சுப் பொன் 5.2 கிலோகிராம் எடைகொண்டது. இதன் பொன்மை 9.625 மாற்றா (22 caret), அல்லது 7.875 மாற்றா (18 caret) என்று தெரியாது. ஒவ்வோராட்டத்திலும் இவ்வளவு பொன் பெறுமளவிற்குத் திறமையானவளென இங்கே குறிப்பிடப் படுகிறது. அணங்கு= ஒருவர் மேலேறிய ஆவி/பேய் (spirit). அணங்குதல் = மேலுறுதல்; தாக்கணங்கு = மோகினிப்பேய்; தன்னழகால் யாரையுந் தாக்கி ஆட்கொள்ளும் திறம் பெற்றதாய் எண்ணப்பட்ட தொன்மம் இங்கு சொல்லப் படுகிறது; நோக்குவலை = பார்வையாற் கட்டப்படும் வலை; நகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் இளையர் = பெண் குறுநகையைப் பதம் பார்த்து, தேன்குடி வண்டு போல் வந்துசேரும் இளையர்; ஏமம் = safety; 64 கலை வல்லோர் = 64 கலைகளிலுஞ் சிறந்த வல்லமையாளர்

வையம் = சுமையேற்றப்பயன்படும் கூடாரவண்டி (wagon, van). ”அந்த van ஐக் கூப்பிடப்பா” என்பதற்கு நல்ல தமிழில் “அந்த வையத்தைக் கூப்பிடப்பா” எனலாம். பாண்டில் = கிண்ணி போன்ற தட்டின்கீழ் அச்சும் சக்கரங்களும் பொருந்திய திறந்த வண்டி. சுமையேற்றாது, ஓரிருவர் வேகமாய்ப் போகப் பயன்படும். ஒற்றைமாட்டு வண்டிகள் இதிலடங்கும். மணித்தேர்க் கொடிஞ்சி = தேரோட்டும் துரவர் (diver) உட்காரும் ஒட்டுகை (attachment). We call this a driver seat. அம்புகளிலிருந்து துரவரைக் காக்க ஒரு பலகையும் முன்னிருக்கும். மெய்புகு கவசம் = தோலாலும், மெல்லிய மாழையாலும் ஆகி உடம்பின் மேல் அணியுங்க வசம். வீழ்மணித் தோட்டி= மணிகள் தொங்கும் அங்குசம். அதள் புணை அரணம் = தோலாற் செய்த கைத்தாளம் (hand clove). "ஏய், அக் கைத்தாளங்களை எடுத்து வா” என்று ”குளோவ்ஸிற்கு” மாறாய் ஆளலாம்.

அரியா யோகம் = அரைப் பட்டிகை (waist belt). இதையும் தொலைத்தோம். வளைதரு குழியம் = வளைதடி. குழித்தல் = குத்துதல். வால் வெண் கவரி = இமையத்திற்கு அருகிலுள்ள கவரிமா எருமையின் மயிராலான வெண்கவரி. காற்றுவீசப் பயன்படுத்துவது. சாமரமென்றுஞ் சொல்வர். இனிப் புதிதாகவும், பழுதைச் சரி செய்தாகவும், கொல்லன் பட்டறையில் உருவான செப்புக் கேடயங்களையும், வெண்கலக் கருவிகளையும், வேதித்து உருவானவையும் (chemicals; chemistry இன் நேர்குறிப்பு பழந்தமிழ் இலக்கியத்த்தில் இதுவே முதல்.முறையாகும்), கடைந்த தந்தப் பொருட்களையும், பல்வேறு வாசனைப் புகைப் பொருட்களும், மயிர்ச்சாந்திற்குத் தேவை ஆனவையும், பூவால் புனையப்படுவனவும் என வேறுபட்டுத் தெரிவு அறியா அளவிற்கு வளங்கள் கலந்து கிடக்கும் (அரசனும் விரும்பக்கூடிய) அங்காடி வீதியும்

என்று சொல்கிறார். ஊர்காண்காதையின் அடுத்த 30 ஆ, பகுதியில் மணிகளைப் பற்றியும், பொன்னைப் பற்றியும் பார்ப்போம். நான் பதிவிடப் பல நாட்களாகலாம்,

அன்புடன்,
இராம.கி.

No comments: