Tuesday, September 10, 2019

சிலம்பு ஐயங்கள் - 18

 இனி மகதத்தின் பல்வேறு அரசர் காலங்களுக்கு வருவோம்.

அலெக்சாண்டர் இந்தியாவின்மேற் படையெடுத்தது பொ.உ.மு.327/326 என்பர். (இது ஒரு வரலாற்று முற்றைப் புள்ளி (absolute marker). இதை வைத்தே வரலாற்று ஆசிரியர் இந்திய வரலாற்றைக் கணிக்கிறார்.)

சந்திரகுத்த மோரியன் காலம் பொ.உ.மு.321 - 297 (இவனுக்கு முந்தைய நந்தர் காலத்தைக் குறிக்கும் சங்கப் பாடல்களும் உண்டு. குறிப்பாய் மாமூலனார் பாடல்கள். சங்க இலக்கியத்தை ஒழுங்காகப் பொருத்தாத காரணத்தால் சங்ககாலத் தமிழர் வரலாற்றை, இன்றுங்கூடத் தப்பும் தவறுமாய்ப் புரிந்து கொள்கிறோம். கமில் சுவலபில் கணிப்பிலிருந்து வெளியே வந்தாலொழிய இது புரியாது.)

பிந்துசார மோரியன் காலம் பொ.உ.மு. 297 - 273 (இவனே தென்னகத்தின்மேல் படையெடுத்தவன். இவன் படையெடுப்பைப் பற்றியும் சுற்றிவளைத்துச் சங்கப்பாடல்கள் உண்டு. தமிழ் மூவேந்தரைத் தோற்கடிக்க முடியாமல் இவன் படைகள் திரும்பிப் போயின.)

தேவானாம்பியதசி அசோகன் காலம் பொ.உ.மு. 268 - 232 (இவன் ஆட்சிக்கு வருவதற்கு முன் 4 ஆண்டுகள் ஒரே குழப்பம். மகதநாடு வேந்தனில்லாது இருந்தது. கணக்கின்றித் தன்னுடைய பல சோதரரைக் கொன்றே அசோகன் பட்டத்திற்குவந்தான். இந்தியவரலாற்றில் இவன் முகன்மை மன்னன். தவிரத் தமிழ்மூவேந்தரின் இருப்பையும் அதியமான்கள் இருப்பையும் தன் கல்வெட்டுக்களிற் பதிவு செய்தவன். இவன்செய்த கோத்தொழில் தமிழ் மூவேந்தரால் பாராட்டப்பட்டது போலும். ஏனெனில் தேவானாம்பிய தசி என்றபட்டம் அப்படியே தமிழாக்கப்பட்டுச் சேரருக்கு முன்னொட்டு ஆக்கப் பட்டதென்பார். மயிலை சீனி வேங்கடசாமியார்.

”இமையவர் அன்பன்” என்பதே திரிந்து இமையவரம்பனாகி ”இமையத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது. அதே போல் வானவர் அன்பன் வானவரம்பனாகி ”வானத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது. இமையவரம்பனும், வானவரம்பனும் மாறி மாறிச் சேரருக்கு முன்னொட்டு ஆயின. தேவானாம்பிய என்ற பாகத முன்னொட்டை இலங்கையரசன் தீசனும் அப்படியே வைத்துக்கொண்டான். சேரரோ அதைத் தமிழ்ப்படுத்திச் சூடிக் கொண்டார். There must have been a mutual admiration society. வேத, சிவ, விண்ணவ நெறிகளும், வேதமறுப்பு நெறிகளும், பல்வேறு மெய்யியல்களும் விரவிக் குடவஞ்சியில் சமயப்பொறை இருந்தது சிலம்பு/மேகலையால் தெரிகிறது. வேதமறுப்புச் சமயங்களை ஆய்ந்தால் ஒழிய தமிழர் வரலாறு புரிபடாது.)
   
தசரதன் காலம் பொ.உ.மு. 231 -224 (இவன் அசோகனின் முதல் மகனல்லன். அடுத்த மகன். அசோகனின் இரண்டாவது அரசி முதல் மகனைச் சதி தீட்டிக் கொன்றுவிடுவாள். எப்படி இராசேந்திர சோழனுக்கு அப்புறம் அவனுடைய ஒவ்வொரு மகனும் ஏதோவகையில் கொல்லப்பட்டு சோழர் குடிவழி முற்றிலும் அழிந்து தெலுங்குச் சோழராட்சி இங்கு ஏற்பட்டதோ, அதேபோல ஆழமான சூழ்ச்சி அசோகனின் மகன்களுக்கும் நடந்திருக்கிறது. கொல்லாமைக் கொள்கை பரப்பிய இவ்வளவு புத்த, செயின, அற்றுவிக நெறிகளுக்கு நடுவே இவ்விதக் கொலைகளும், அசோகனுக்குப்பின், நடந்தன. ஆழ்ந்து பார்த்தால் வரலாறு என்பது மிகவும் மருமமானது.)

சம்பாதி காலம் பொ.உ.மு. 224 - 216 (இவனும் அசோகனின் மகனே. தசரதன் இருக்கும் போதே இவன் ஒருபக்கம் ஆளுநனாய் இருந்து பின்னால் அரசப் பொறுப்பை ஏற்றுக்கொள்வான்.)

சலிசுகா காலம் பொ.உ.மு. 215 - 202 (இவன் சம்பாதியின் மகன்)
தேவ வர்மன் காலம் பொ.உ.மு.202-195
சடா தன்வன் காலம் பொ.உ.மு.195-187

பெருக தத்தன் காலம் பொ.உ.மு.187-185 (இவனைத்தான் சேனை அதிபதி சுங்கமித்திரன் கொலைசெய்து தன்குடியை மகத அரசிலேற்றினான். இப் பிரகதத்தனுக்குத் தான் பெரும்பாலும் கபிலர் குறிஞ்சிப் பாட்டைச் சொல்லி யிருக்கலாமென நாம் ஊகிக்கிறோம். கபிலர் போன்றவர் ஒரு குறுநில மன்னனுக்காகக் குறிஞ்சிப்பாட்டை பாடினாரென்பது ஐயமாக உள்ளது. சேர, சோழ, பாண்டியருக்கு இணையான வேந்தர் அக்காலத்திற் சிலரே இருந்தார். மகதமே எல்லாவற்றிற்கும் தலைமையானது. அப் பெருகதத்தனுக்குக் குறிஞ்சிப்பாட்டு சொல்லுவது கபிலருக்கு நன்மை பயக்குமல்லவா?)

இனிச் சுங்கருக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: