Friday, September 20, 2019

சிலம்பு ஐயங்கள் - 23

பலருமெழுப்பிய குறுக்குவினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டு, "காட்சிக் காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரியமன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாங் கேள்விக்கு ஆன நீளவிடையில் தோய்ந்து விட்டேன். படித்தோரின் பொறுமைக்கு நன்றி. அடுத்த கேள்விக்கு வருவோம். ”கானல்வரியில் மாதவி மாலையைப் பாடுவதில் ஏதேனுங்குறிப்புண்டா? ’மாலை’ வசந்தமாலையைக் குறிக்குமா?” என்று திரு.முகுந்தன் ஐயப்பட்டது சரிதான். வசந்தமாலையெனும் முழுப்பெயரன்றி, மாலையெனும் விளிப் பெயர் சொல்லி கானல்வரி முழுக்கச் சிலேடையாய் ”பேறு காலத்தில் நம் வீட்டில் நடந்த கள்ளங்கள் எனக்குத் தெரியும், நீ இப்படிச் செய்யலாமா?” என்று கோவலனுக்குச் சுருக்கென உறைக்கும்படி மாதவி உணர்த்துவாள்.

”மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்பதன் பின்வரிகளில், எத்தனை மாலைகள் வரும் தெரியுமா? தவிர, கணவன் எனத் தான் நினைத்தவன் செய்ததைக் குத்திக் கேட்பாள். குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, கோவலன் முணுக்கெனச் சினந்து போவான். புகார்க் காண்டத்தில் வசந்த மாலையின் சூழ்க்கும இருப்பு மேலோட்டமாய்ப் படிப்போருக்கு விளங்காது. ஆழ்ந்தோருக்கே விளங்கும். இச்சுருக்க மறுமொழியோடு நகர்வதற்கு என் மனம் ஒப்பவில்லை கானல்வரியின் பின்பகுதி விளக்காப் படாவிடில் சிலம்பின் முகனக் காதை புரியாது. அது ஏதோ பாட்டுங் கேளிக்கையுமான பகுதியென்றே பலரும் எண்ணுகிறார். கிடையாது. நெய்தலின் சோகம் அதனுளுண்டு. முன்சொன்ன தமிழாசிரியர் திரு.பழநியைத் தவிர வேறு யாரும் கானல்வரிக்குப் பொருள் எழுதி நான் கண்டது இல்லை. அவர் நூலைப் பார்த்தே நானும் புரிந்தேன். இப்பொருளை நானும் வேறிடத்தில் எழுதியதில்லை.   

வசந்தமாலை, மாதவி என்ற இரு பெயர்களுமே தமிழரை மயங்கடித்த குருக்கத்தியைக் குறிக்கும். 2009 இல் எழுதிய ”கண்ணகி. கோவலன், மாதவி - பெயர்ப்பின்புலம்” என்ற என் கட்டுரைத் தொடரைப் படியுங்கள். (இதுவும் திரு.நா.கணேசனை மறுத்தெழுதியது தான். சிலம்பு பற்றிய கணேசன் மடல்களைப் படித்தால் ஒன்று புலப்படும். சிலம்பை இழித்துரைப்பதில் அவருக்கென்னவோ அவ்வளவு விருப்பம். தான் சொன்னதைச் சரியென நிறுவ, எந்த வானத்தையும் வில்லாய் வளைப்பார். அதிற் பட்டகை (fact), இயலுமை (possibility), ஏரணம் (logic), ஒத்திசைவு (consistency) என எதுவும் பாரார்.)

http://valavu.blogspot.in/2009/03/1.html
http://valavu.blogspot.in/2009/03/2.html
http://valavu.blogspot.in/2009/03/3.html
http://valavu.blogspot.in/2009/03/4.html
http://valavu.blogspot.in/2009/03/5_29.html
http://valavu.blogspot.in/2009/03/6.html

பசந்தத்தில்/வசந்தத்தில் மாலுவது (மலர்வது/மயங்குவது) வசந்த மாலை. இக்கூட்டைச் சுருக்கி வசந்தாள், வசந்தி, வாசந்தி என்றெல்லாம் இன்று பெயர்வைத்துக் கொள்வார். ஆனாற்பலரும் அச்சொற்கள் குருக்கத்தியைக் குறிப்பதை உணரார். வசந்த காலத்தைக் குறித்ததெனக் குறைப்படப் பொருள் சொல்வார். ”ஜலசமுத்ரத்தைச்” சுருக்கி சமுத்ரமென்பார் பாருங்கள். அதுபோற் குறைப்புரிதல் அதுவாகும். மயக்கந்தருபவள் மாதவி; வசந்தத்தில் மால்க்குபவள் வசந்த மாலை. வசந்தாள், வசந்தி, வாசந்தியென்று சுருக்கி விளிப்பது போல் மாலையென்றும் அவள் பெயரைச் சுருக்கலாம். ”மாலை” யெனும் விளிப் பெயரைத் தன் கானல்வரியினூடே இருபொருள் படப் பலவிடங்களிற் பொருத்தி மாதவி கோவலனைக் குத்திக்காட்டுவாள்.

கானல்வரிப் பாட்டிற்கான உரையாசிரியர் விளக்கங்களை வேங்கடசாமி நாட்டார் நூலிற் பார்த்துக்கொள்ளலாம். வசந்தமாலை குறித்தெழும் உட்பொருளை மட்டுமே இங்கு குறிக்கிறேன். குரல்(ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி(ப), விளரி(த) தாரம்(நி) பொருந்திய தமிழிசை அடிப்படை அறிய எழுசுரங்கள் பற்றிய என்தொடரைப் படிக்கப் பரிந்துரைப்பேன்
.
http://valavu.blogspot.in/2008/03/1.html
http://valavu.blogspot.in/2008/03/2.html
http://valavu.blogspot.in/2008/03/3.html
http://valavu.blogspot.in/2008/03/4.html

கோவலன் முதலில் கானற்பாணியில் (முல்லையந்தீம்பாணி -மோகனம்- போல் இதுவும் ஒரு திறப்பண் தான். ச க1 ம1 த1 நி1 என்ற 5 சுரங்களில் இப்பண் அமையும்.) யாழால் கருவியிசை எழுப்பி, பின் “திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுவோச்சி” என்று கானல்வரிப் பாட்டை இசையோடு தொடங்குவான். தன் வரிகளின் உள்ளடக்கமாய், ”என் நடத்தையைக் கண்டு கொள்ளாதே! அப்படி இப்படித்தான் நான் உன்னோடு இருப்பேன்” என்று சொல்வான். அவன் பகுதி வரிகளைத் தவிர்த்து மாதவியின் கானல்வரி மறுமொழிக்கு மட்டுமே இங்கு பொருள் சொல்கிறேன்.

இதுபோல் இரண்டாம் பொருள் (இறைச்சிப் பொருள்) கொள்ளலில் ”காவேரி வழியே மாதவி மனச்சான்றோடு பேசுகிறாள்” என்றே கொள்ள முடியும். அதைக் கோவலனும் புரிந்து கொள்வான். அப்புரிதலில் தான் கோவலனுக்குக் கோவமெழும். கானல் வரி படிக்கும் நாம் உள்ளிருக்கும் உருவகத்தை விடாது பிடித்துக்கொள்ள வேண்டும். முதலில் வருவது 3 தாழிசையால் ஆகும் ஆற்று வரி யென்பர். ஆற்றைப் பாடுவது போல், மாதவி தனக்குத் தெரிந்தவற்றைப் பொதுவிற் போட்டுடைப்பாள். (முந்தைக் கடலாடு காதையின் கடைசி அடிகளின் படி) காட்சியோரத்தில் அமளிக்கு (படுக்கைக்கு) அருகில் வசந்த மாலை வருத்தத்தோடு நிற்கிறாள். (ஏதோ, நடக்கப்போகிறது என்று குறு குறுத்த அவள் நெஞ்சம் வருத்தபடாது என்செய்யும்?

கீழேவரும் தாழிசைகளில் இரு பொருள்கள் உள்ளன. ஒன்று இயற்பொருள். இன்னொன்று இறைச்சிப் பொருள். இயற்பொருள் மாலை நேரத்தையும். இறைச்சிப் பொருள் வசந்தமாலையையுங் குறிக்கும். பாடுவோளுக்கும், கேட்போனுக்கும், அருகிலிருந்து கவனிப்போளுக்கும் புரிந்து தான் பாட்டு வெளிப்படுகிறது. மூவரிடையே நடப்பது ஒரு நாகரிகமான சண்டை. இருவர் தம் கருத்தைச் சொல்கிறார். ஒருத்தி உம்மென்று வருந்திநிற்கிறாள். என்ன இருந்தாலும் மாதவி வசந்தமாலைக்கு இயமானியல்லவா? இனிப் பாட்டினுள் வருவோம்.

வேறு
25.
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

26.
பூவார்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி
காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி

27.
வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி

”ஏ, காவேரி (மாதவியின் மனச்சான்று), வண்டுகள் பக்கத்தில் வந்து சிறக்க ஒலிசெய்ய, மணிகளையும், பூவாடைகளை போர்த்துக்கொண்டு, கருங்கயற் கண்ணை (இக்கண்தான் முதலிற் கண்ணகியிடமும், பின் மாதவியிடமும் கோவலனைக் கவிழ்த்தது.) விழித்து, அசைந்து, நடந்து வந்தாய். ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன்கணவனின் செங்கோல் (அதாவது நேரொழுக்கம்) வளையாதென்று அறிந்தே..

ஏ காவேரி, பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்களாட, அதுபுரிந்து குயில்கள் இசைபாட, விரும்பத்தக்க வசந்தமாலை (காமர் மாலை) உடன் வந்து அருகே அசைய நீ நடந்தாய், ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன் கணவனின் நாமவேற்றிறங் (புகழ்பெற்ற வேற்றிறம்; வேறொன்றும் இல்லை சொல்தவறான் என்று ஊரில் கோவலனுக்கிருந்த மதிப்பு) கண்டு அறிந்தே.

ஏ காவேரி, அவன் குலமகவை வளர்க்கும் தாயாகி (மேகலை பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனபின் கானல்வரி நடந்தது) அவர்குலம் வாழவைக்கும் பேருதவியில் ஒழியாதிருந்தாய். (கண்ணகிக்குப் பிள்ளையில்லை. மேகலையே கோவலன் குடிக்கு முதற்பிள்ளை, இனியும் பிள்ளைகள் பிறந்து குடி தழைக்கலாம் என உணர்த்துகிறாள்). ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? ஆழியாளும் வெய்யோன் போன்ற அவன் அருளால் தன் உயிரோம்பும் என்றே.

அன்புடன்,
இராம.கி.

No comments: