Wednesday, April 01, 2020

Dinosaur

ஆங்கிலத்தில் dinosaur (n.) என்பதற்கு one of the Dinosauria, a class of extinct Mesozoic reptiles often of enormous size, 1841, coined in Modern Latin by Sir Richard Owen, from Greek deinos "terrible" (see dire) + sauros "lizard" (see -saurus) என்று வரையறுப்பர்.

இதில்   terrible என்பதைக் குறிப்பதற்குத் ”துணுக்” என்னும் ஒலிக்குறிப்புண்டு. இதை ”திடுக்” என்றுஞ் சொல்வோம். துணுக்கெனல் என்பதுமுண்டு. துணுக்குற்றான்/ திடுக்குற்றான் எனில் அச்சமுற்றான் என்று பொருள். இது துணுக் எனபதை அடுத்துவரும் வல்லொலிக்கு ஏற்ப துணுச், துணுப் என்று மாற்றிக்கொள்ளலாம். அந்த மெய்மயக்கம் தமிழில் உண்டு.

துணுக்கம் = நடுக்கம். trembling, palpitation of the heart through fear. ”அறிவனுந் துணுக்கங் கொண்டான்” - கம்பரா. ஊர்தேடு.57.2 அச்சம் fear. 3 நெஞ்சு படபடப்பு palpitation of the heart. துணுக்கிடுதல் திடுக்கிடுதல் to be startled.

அடுத்துச் சூர் என்ற சொல்லுக்கும் அச்சம், கொடுமை, துன்பம் என்ற பொருள்கள் உண்டு. சூர்த்தல் = அச்சுறுத்தல்; சூர்ப்பு/சூரம் = அச்சம்; சூரன் = சூரபன்மன் (அச்சம் தருபவன்); சூரிக்கத்தி = கூர்மையான கத்திவகை. (சில dinosaur வகைகள் கூர்நகம் கொண்டவை.)

அடுத்து சுள்>சள்>சரு>சருவு = சாய்; சரு>சார் = சாய்தல். என்ற வளர்ச்சியில் சார்தலென்ற தொழிற்பெயர் எழும். சார்தல்= அடுத்தல், அணுகல், பொருந்தி யிருத்தல்  சார்தலும் பற்றுதலும் கூட ஒரே பொருள் கொண்டவை தான். சார்பு/சார்வு = பற்று. சாரச் செய்தல் = சேரச் செய்தல், நெருங்கச் செய்தல். சாரம் = அருகு, அண்மை,  ஒரு கட்டடம் கட்டுகையில் சாரங் கட்டுகிறோமே? அதில், முதலில் சுவருக்குச் சாரம் ஆதரவு. பின் சாரத்திற்குச் சுவர் ஆதரவு. சாள்>சார் என்றாலே ”சுவர்” என்ற பொருள் உண்டு.  “தச்சன் அஞ்சிச் சார் அகழ் கள்வன் என்கிற தன்மையினாய்” என்று நீலகேசி 510 ஆம் பாடலின் 4 ஆம் அடி சொல்லும். இதில் ”சார் அகழ் கள்வன்” என்பது “சுவரைத் துளையிடுகிற கள்வனைக்” குறிக்கும். ஆகச் சார் = சுவர்.

பல்லி என்ற  lizard பல்லும் தொழில் செய்வதால் அப்பெயர் பெற்றது. பல்+து = பற்று. பல்லியானது ஓர் அறையின் கிடைத்தளம், குத்துச் சுவர்கள், மேற் கூரை என முப்பரிமானத்திலும் பற்றிக் கொள்ளும். dinosaur முப்பரிமானம் நகர்ந்ததாய் அறிவியல் சொல்வதில்லை. ஆனால் நடக்கும் போது புவியை நன்கு பற்றிக்கொள்ளும் என்கிறார். பல்லிக்கு கௌளி, கோகிலம் என இன்னும் இரு சங்கதவழி இருபிறப்பிச் சொற்களை சூடாமணி நிகண்டு காட்டும். கூளி>கௌளியானது. பல்லி கூளுகிறது (விந்தை ஒலி எழுப்புகிறது). அதேபோல் கூவுகிறது>கோகுகிறது. எனவே கோகிலம். 

”சாரி” என்ற சொல்லிற்கு  ”நடை” என்றும் பொருளுண்டு. பல்லி தரையிலும், சாரிலும், கூரையிலும் நடப்பதால் அதைச் ”சாரை” எனலாம்.  தவறில்லை இது இராம.கி.யின் புத்தாக்கச் சொல் தான். இற்றை அகரமுதலிகள் இப் பொருளைக் காட்டாது.  ”ஆங்கில ஒலியமைப்புக் கருதி இராம.கி சொல் படைக்கிறான்” என்பது வழக்கமான உளுத்துப்போன குற்றச்சாட்டை நண்பர்களிடங் கேட்டுக்கேட்டுப் புளித்துப் போயிற்று. அதற்கு நான் மறு மொழி சொல்லிப் பல காலமாயிற்று. மீண்டும் மீண்டும் கீற்று விழுந்த இசைத்தட்டுப் போல் அதைச் சொல்வதன் பொருள் எனக்குப் புரிவதில்லை. என்னை இனங்காட்டி ஒதுக்குங் குறியீடா, இது? நான் சொல்லாய்வை ஒட்டி வாய் மூடி இருக்கவேண்டுமா? என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள். நான் நாசுதிராட்டிக் கொள்கையாளன் என்பதும், தமிழிய மொழிகளுக்கும் இந்தை யிரோப்பியத்திற்கும் உறவுள்ளதென உறுதியாய் நான் எண்ணுவது பலருக்கும் தெரியுமே? நானொன்றும் என் கருத்தை ஏற்கவேண்டுமென யாரையுங் கட்டாயப் படுத்தவில்லையே? என் கருத்தை ஏரணங் கருதி ஏற்பவர் ஏற்கட்டுமே?.

extinct Mesozoic reptiles என்றே மேலுள்ள வரையறை குறிப்பதால், சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.  தமிழில் சரசர என்று வேகமாய்ப் போகும் பாம்பைச் சாரைப்  பாம்பு என்கிறோம். பல்லியும் சரசர என வேகமாய்ப் போகும்.  dinosaur உம் அதன் எடையைப் பார்க்கையில் வேகநடை கொள்ளும் என்றே அறிவியலார் மதிப்பிட்டிருக்கிறார். தவிர, சாரை = நீளமான கோடு என்ற பொருளும் தமிழிலுண்டு.

எனவே ”துணுச்சாரையை” dinosaur க்கும் ”சாரையை” வெவ்வேறு  saurகளின் முடிவுப் பகுதிக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் ”tamil.net இல் அதன் நிறுவனர் பாலாப்பிள்ளை கேட்டதற்காகப் பரிந்துரைத்தேன். இன்று அதை யாரிடமோ நீங்கள் கேள்வியுற்று என்னை இப்போது வினவியதற்கு மகிழ்ச்சி. 20 ஆண்டு காலத்தின் பின்னும் என் பரிந்துரை எங்கேணும் உங்களுக்குப் பயன்பட்டால் சரி. இச்சொல்லைக் காண்பது பெற்ற பிள்ளையைக் காண்பது போன்ற மகிழ்ச்சி.

நான் தொன்மா, மீமா என்றெல்லாம் dinosaurக்கு இணையாய்ச் சொல்வது இல்லை. தொன்மா என்பது தொன்மையான விலங்கு என்று பொதுப்பொருள் கொள்ளும். பல்வேறு -saur களை விதப்பாகச் சொல்ல இச்சொல் பயன்படாது என்பது என் புரிதல்.  தொன்மா என்பது பொதுவிளக்கம். ஒரு குறிப்பிட்ட விதப்பான இனப்பெயராக அது அமைய வாய்ப்பில்லை. துணுச்சாரைகள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மற்ற, அழிந்துபோன விலங்கு இனங்களும் கூடத் தொன்மாக்கள் தாம். அப்புறம் நான் என்ன சொல்ல? அவரவருக்கு அவரவர் பார்வை





No comments: