Sunday, April 05, 2020

பைம்புலத்தார் - 1

”சொல்லாய்வு” முகநூற் குழுவின் மட்டுறுத்தரோடு ஒருமுறை முரணி விலகியபின்,  யாரோ ஒருவர் ”சொல்” எனும் குழுவில் என்னைச் சேர்த்தார். 1, 2  முன்னிகைகள் இட்டது தவிர பெரிதாய் அங்கு நான் எதுவும் பேசவில்லை. அண்மையில்,   “public health warrior என்பதைத் தமிழில் எவ்வாறு தரலாம்? ” என்று திரு. Sri Sridharan கேட்டார். பலரும் “public health ஐப் ”பொதுநலம்” என்றார். ”அது common good ஆ, public good ஆ, public health ஆ” என்று எனக்குப் புரியவில்லை. தமிழில் ஏன் இப்படி ஒப்பேற்றுகிறோம்? இம் மொழி எத் திறனும் இல்லாததா? - எனுங் கேள்வி என்னுள் எழுந்தது. “public ஐ ’பொது’ என்று கருதக்கூடாது மாறாக மக்களென்றே கருதல் வேண்டும். அவ்வகையில் ’மக்கள் நல காப்பாளர்’ என்றோ அல்லது ’மக்கள் நல அலுவலர்’ என்றோ அழைக்கலாம்” என இன்னொருவர் புகன்றார்.

“When are we going to differentiate general, common and public In Tamil? எல்லாவற்றிற்கும் பொது தானா?” என ஊடு புகுந்து கேட்டேன். ”public= மக்கள் எனலாம். மற்ற இரண்டையும் எப்படி வேறுபடுத்தலாமெனக் கூறுங்கள்” என Sundar Lakshmanan கேட்டார், 

ஏதுஞ் சொல்லுமுன் எனக்கு வாய்ப்பூட்டிடுவது போல், “general, common, public என்பனவற்றை வேறுபடுத்திக் காட்டுவது இங்கு நோக்கமில்லை. அவை பயன்படும் இடங்களில்,  இயல்பாய் அப்பொருளைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதே நோக்கம். 'பொது' எனும் சொல்லின் அடிப்படையில் பொது, பொதுமக்கள், பொதுமைய என அமைந்தாலோ ஒரே சொல்லாகப் பொதுவென இருந்தாலோ ஒருசிறிதும் கவலுறத் தேவையில்லை. நம் மொழியில் நமக்கு விளங்குமாறு பொருந்தியிருந்தால் போதும். 

நாம் public health என்பதைப் பொதுநலமென்றோ, public (referring to people), பொதுமக்களென்றோ, common ஐப் பொது என்றோ சொன்னால் போதும். செயற்கையாக வேறு சொற்கள் ஆக்கி ஆளத் தேவையில்லை. இயல்பாய் நல்ல சொற்கள் சில இடங்களில் பொருந்திவருமாயின், நன்றே, வரவேற்கலாம். ஆனால் வலிந்து ஆங்கிலத்துக்காக வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லை. நாம் ஆற்றங்கரை, கடற்கரை, ஏரிக்கரை என்றே சொல்கின்றோம், ஆங்கிலேயன் sea shore, river bank, lake shore என்கிறான். இவை யெல்லாம் மொழிக்கு மொழி மாறுபட்டு இருக்கும். அவரவர் தேவை, மரபைப் பொருத்தவை அவை” என்று மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர்  சொன்னார்.  

நான் மனங்குன்றினேன். ஆனால் நான் பேசக்கூடாதென அவர் விழைவது புரிந்தது,  ”ஆயிரம் பூக்கள் மலரட்டும்; ஆயிரம் கருத்துகள் பிறக்கட்டும்” என்றொரு சீனக்கிழவன் சில ஆண்டுகள் முன்னால் சொன்னான்.  அதெல்லாம் தேய்ந்து பழங்கதை ஆயின போலும்.  “வேறுபடுத்த் தேவையில்லை என்றபின் நானெதுவும் இங்கு சொல்வதாக இல்லை. உங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க முடியாமைக்கு மன்னியுங்கள். வேறு நொதுமலான இடத்தில் தொடர்பு கொள்க. அங்கு பேசுவோம். யாரோ என்பெயரை இக்குழுவில் இணைத்து விட்டார். நான் வேண்டிக்கேட்டு இங்கு இணையவில்லை. விலகி இருக்கலாம் என இப்போது எனக்குத் தோன்றுகிறது. மட்டுறுத்தர் என்பெயரை நீக்கலாம்” என சுந்தருக்குச் சொன்னேன். 

அப்புறம் சில சமதான முயற்சிகள் நடந்தன. இருப்பினும் கேளாது நகர்ந்தேன்.  இவ்விடுகை ஏன் எழுகிறது என்பதற்கான  விளக்கம் இது. ”மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்” என்றவொரு பழம் பாட்டியின் அறிவுரையைச் சிற்றகைவையில் படித்தேன். என் நடத்தையில் அது வெளிப்பட்டது. இனி இடுகைக்கு வருவோம்.

general knowledge and common sense என்ற என் இடுகையில் (http://valavu.blogspot.com/…/general-knowledge-and-common-s) ஏற்கனவே general = கண(ம்), common (பொது, குமுன்)  பற்றிப் பேசிவிட்டேன். public பற்றித்தான் பேசவில்லை. 16 ஆம் நூற்றாண்டுச் சூடாமணி நிகண்டில், கணம், (குழு, குழாம்), (கூட்டம், கோட்டி), சங்கம், (சமுதாயம், சமூகம், சமவாயம், சவை, அவை), திரள் எனத் திரண்டோர் பெயரும்,  ஆண்டையர், நரர், (மக்கள், மாக்கள், மனிதர், மனுடர், மானுடர், மானவர், மாந்தர்,மைந்தர்), மண்ணோர் என மனிதர் பெயரும், மன்பதை, பைஞ்ஞீல் என மக்கட் பரப்பின் பெயரும் வரும். இப்பட்டியலில் தமிழுமுண்டு; சங்கதமுமுண்டு, இருபிறப்பிகளுமுண்டு.  ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

https://valavu.blogspot.com/2018/09/general-knowledge-and-common-sense.html என்ற இடுகையில் கணம் பற்றிச் சொன்னேன். கூடுஞ் செயலைக் கணத்தல் எனலாம். (கள் எனும் கூட்ட வேரடியிற் பிறந்த சொல் கணம். குள்> கள்> கண்> கண> கணத்தல்.  குழு, குழாம் ஆகியவையும் ”குள்”ளில் பிறந்தவையே. குள்> குழு என்பதும் கூட்டச் சொல்லே. குழுவில் பெரியது குழாம். இக் காலத்தில் ”குழுமம், குழும்பு” என்றும் புதுச்சொற்கள் படைத்துள்ளோம். குள் வேரில். குள்> குடு> கூடு> கூட்டம் என்பதும் எழும். கூடு> கோடு> கோட்டி என்பது அடுத்த வளர்ச்சி. கோட்டியைச் சங்கதம் கோஷ்டியாக்கும். சகரச் சொற்களில் முதலில் வருவது சங்கம்.  சுல்> சுல்க்கு> *சல்க்கு> சக்கு என்பது வட்ட, உருண்டைப் பொருள்களைத் தரும். 

சக்கில் பெரியது சக்கம். சக்கத்தின் நீட்சியாய் சக்கடம். சக்கரம், சகடு, சகடை போன்ற வட்டச் சொற்கள் பிறக்கும். ”சக்கின்” மெல்லோசையில்  ”சங்கு”. சங்கிற் பெரியது சங்கம். சக்கு> சங்கு> சங்கம். வடிவியலில் 360 பாகையில் சுற்றி வருகையில் ஒரே ஆர நீளங் கொண்டால் கிட்டுவது வட்டம். சக்கரம் வட்ட வடிவமே. இதில் வளைச் செலுத்தம் (turning process) மட்டும் நடைபெறும். ஒவ்வொரு பாகைக்கும் வளைச் செலுத்தமொடு ஆர நீளமும் சீராகக் கூடின், இரு செலுத்தங்களால் புரிச் சுருவை (spiral curve) உருவாகும். முப் பரிமானப் புரிச்சுற்று நீட்சியில் சங்கு எழும். சங்கின் பொருளும் வட்டமே. (http://valavu.blogspot.com/2018/08/5.html) 70000 ஆண்டுப் பழங்குடி மிச்சமாய் இன்றும் தமிழரிடம் சங்குப் பயன்பாடும் விளக்கங்களும் விதப்பாய் உண்டு, சங்கொலி எழுப்பி இன்றும் தமிழர் கூடுகிறார். (எங்கள் ஊர்க் கோயிலில் உண்டு.) ஒருவேளை கூட்டக் கருத்தே சங்கு வழி  எழுந்ததோ என்னவோ?.

அடுத்து வரும் சகரச்சொற்கள். உம்மையில் கிளர்ந்தன. உம்முதல் = பொருந்தல், கூடுதல். ”அவனும் நானும், இனியனுமாய் பள்ளி சென்றோம்.” உம் எனும் உருபு கூட்டப் பொருளைக் குறிக்கும். உம்>அம் ஆகி, அம்முதலும் பொருந்தலைக் குறிக்கும். அம்>அமை; அமைதல்= பொருந்தல். தெலுங்கில் அம்முதல்= "பொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்". அம்-முதலில்  கிளைத்தது அங்காடி. தெலுங்கு தெரியாவிடின், ’அங்காடி’ எப்படி வந்தது எனத் தெரியாமல் போயிருக்கும். உம்முதலின் முன் சகரஞ் சேர்த்தும் சொல் அமையலாம். சும்>சும்மை என்பது மிகுதி குறிக்கும். சும்மைக்கு முந்திய ’சும்-’ வினைச் சொல் (கும்- போல்) மிகு-த்தலைக் குறிக்கும். [மிகு-த்தலில் இருந்து கூட்டப் பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக வரும்.] சும்முதல் தொடர்பான பெயர்களைப் பதிந்த நம் அகரமுதலிகள் ஏனோ வினைச்சொல் பதியவில்லை.] ஆனால், சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தல் போன்றவை அகர முதலிகளிற் பதிவாகியுள்ளன.

சும்மின் திரிவான சம்மிலிருந்து ”சமம்” எழும். சமம் எனும் அடிச் சொல்லைத் தமிழ் கடன் வாங்கியிருக்க வழியில்லை. சம்முதல், சமத்தல், சமலுதல்= ஒன்று போல் இன்னொன்று ஒருங்கிருத்தல். இதற்கான வினைச்சொல் இந்தை யிரோப்பியனிலும் நேரடியாயில்லை. same என்ற பெயர்ச்சொல் மட்டுமே  சுற்றி வளைத்துக் கூடுதல், உடனிருத்தல் பொருளில் எழுந்துள்ளது. உடன் இருப்பன ஒன்று போல் இருக்கவேண்டுமே என நாம் புரிந்து கொள்கிறோம். சம்-முதலில் சமுதாயம் எழும். இது வடசொல்லோ என எண்ணித் தனித்தமிழ் இயக்கத்தார் ”குமுகாயம்” படைத்தார். சமுகம்>சமூகம் என்பதும் சமுத்தல் = கூடுதல் பொருளில் எழுந்ததே. ஆட்கள் சமமாகிக் கூடிய ஆயம் சமவாயம். மகரமும் வகரம் இணைப் போலிகள் என்பதால் சமை>சவை என இன்னொரு சொல் எழும். இதேபோல் அமை> அவை என்பதும் உருவாகும். துல்> தில்> திர்*> திரள் என்பது திரட்சிப் பொருள் காட்டும். திரள்+ந்+து> திரண்டு> திரண்டோர் என்றும் ஆகும். 

மாந்தரிலா விலங்குகள், தாவரங்களின் மேல் ஆண்ட மாந்தரை, “ஆண்டையர்” எனக் குறித்துப் பின் வருக்கக் குமுகாயத்தில்  ஆண்ட வருக்கத்தைக் குறிப்பதாய்க் குறுகியது. நரர் என்பது நரலும் (ஓசையிடும், பேசும்) இயல்பு கொண்ட மாந்தரைக் குறித்தது. அடுத்து வரும் சொற்களை மன்-னுதல்= நிலைத்தல் பொருளில் கருத்துமுதல் வாதமாய்ப் பாவாணர் சொல்வார். நான் பொருள்முதல் வாதமாய்ப் பார்ப்பேன். ஒரு மாந்தன் இன்னொருவனை விதப்பாய் அறிய முகமே பயனுற்றது. முகம்> முகன்> மகன், முகள்> மகள் என்பவை அப்படி எழுந்தவை.  பலரைக் குறிக்கும் பெயராய் ”மக்கள்” எழுந்தது. மக்களில் பண்படாதோர் மாக்கள். மகன் நீண்டு மானாகிப் பின் மான்> மாந்து> மாந்தன் உருவானது,  மாந்து என்பது, மைந்து>மைந்தர் என்றும் ஆனது. மான்>மானவர் என்பது இயல்பு நீட்டம். பேச்சு வழக்கில் மாந்தர் என்பது மானிதர்/ மனிதர்> மானிசர்/மனிசர் ஆகி, வடக்கே மானிஷராகி, மீளக் கடன்வாங்கி , மானுடர் என ஆக்கியுள்ளோம். மண்ணில் நிலைத்த மாந்தர் எல்லோரும் மண்ணோர் எனக் குறிக்கப் பெற்றார்.

இனி மன்பதை, பைஞ்ஞீல், மாந்தப் பரப்பு என்பவற்றைப் பார்ப்போம். இவையே இத்தொடரின் அடிச் சொற்கள்.

அன்புடன்,
இராம.கி,

No comments: