Wednesday, January 15, 2020

பாசண்டச் சாத்தன் - 8

யா என்பது இருளைக் குறிக்கும். இற்றல்= போக்குதல்; யாயிற்றன்= இருளைப் போக்குகிறவன். யா>ஞா> நா திரிவில் யாயிற்றன், ஞாயிற்றன் ஆவான். யாயிற்றன்> ஆயிற்றன்> ஆதிற்றன்> ஆதித்தன்>ஆதித்த என்பது வடபுல மொழிகளில் சூரியனைக் குறித்தது.  ஆதித்தனின் முதற்குறை தித்தன். முதற்குறைப் பெயர்கள் சங்கத்தமிழிற் பரவலாயுண்டு. தித்தனே பட்டமேறும் போது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியெனும் பெயர்பெறுவான். புறம் 13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், இவனின் யானை மதங்கொண்டு கொங்குக் கருவூரில் தடுமாறி நகர்ந்ததை அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கு அடையாளங் காட்டுவார்.

சமகால அரசரைப் பார்த்தால் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி எனும் தித்தனே, செங்குட்டுவனின் தாத்தனான ”திகழொளி ஞாயிற்றுச் சோழன்” ஆவான். சிலம்பு அப்படியே புகலும். இவன் காலம்  பெரும்பாலும் பொ.உ.மு. 190-153 க்கு இடைப்பட்டது.  இக்கணிப்பை ஏற்றால்,  தலையாலங்கானத்து நெடுஞ்செழியன், இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஆகியோர் சிலம்புக் காலத்திற்குப் பின்னோர் ஆவர். பிடவூர்க்கிழான் மகன் பெருஞ் சாத்தனும்  சிலம்புக்காலத்தின் பின் வந்தவனே.  புறம் 395 ஆம் பாடலில் வரும் ”அறப்பெயர்ச்சாத்தன்” குறிப்பு  பாட்டிற்கு முந்தைய காலத்தைக் அதாவது தித்தனுக்கும் (பொ.உ.மு.190-153) முந்தைய காலத்தைக் குறிக்கும். பாண்டிநாட்டுப் புலவரான நக்கீரர், உறையூருக்கு அருகில் இருந்த பிடவூர் நாட்டுக் கிழானைப் பாடுகிறார். இவன் குடும்பம் வேளிர் குலமென்றும், இவன் முன்னோன், “அறப்பெயர்ச் சாத்தன்” என விதப்புப் பெயர் கொண்டதும் இப்பாட்டில் புலப்படுகிறது.

பாட்டின் முதற்பகுதி பெருஞ்சாத்தனிடம் நக்கீரர் உரைத்ததை விவரிக்கிறது. 2 ஆம் பகுதி பெருஞ்சாத்தனின் வள்ளண்மையை விதந்து, கூடவந்த  புலவரிடம் பேசுகிறது.  முதற்பகுதியில் மருதநில விவரிப்பு உயர்ந்து நிற்கிறது. ”பிடவூர் அறப்பெயர்ச் சாத்தனின் சுற்றமாய் நாங்கள் ஆனோம்” என்பதால் பிடவூர் முன்னோனான அறப்பெயர்ச் சாத்தன் இங்கு நினைவுகூரப் படுகிறான். ”அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம்” என்பது உறவினரைக் குறிக்காது. சாத்தனின் கூட்டத்தாரைக் காட்டுகிறது.  (சில ஏட்டுப்படிகளில் கிணை என்று வருவதை ஏற்றாலும் பொருள் பெரிதும் மாறாது) இந்த அறப் பெயர்ச் சாத்தன், அவனுடைய புகழைப் பாடும் பெருங்கூட்டத்தை பொ.உ.மு. 175 க்கு வெகுகாலம் முன்னே உருவாக்கினான் போலும். ஒருவேளை அக் கூட்டம் உருவாகத் தொடங்கியது பொ.உ.மு. 600 ஆக இருக்குமோ? - என்றும் ஐயுறுகிறோம்.

 உறந்தைக்குக் கிழக்கில் பிடவூரெனப் பாட்டில் அடையாளஞ் சொன்னதைச் சில ஆய்வாளர் கேள்வி கேட்பர். ஏனெனில் கோளப் பொதிப்புக் கட்டகம் (Global Positioning System GPS) வழியாக இன்று பார்த்தால் அது வடகிழக்கு என்று காட்டும். இதை வைத்து அவ் ஆய்வாளர் “இப் பிடவூரே அப்பாட்டில் குறிப்பிடப்பட வில்லை. அது வேறு ஏதோவொரு பிடவூர்” என்று சொல்வார். ஆய்ந்து பார்த்தால் அந்த ஆய்வரின் தருக்கம் சரியானது போல் தென்பட வில்லை. காரணம் எளிது. பொதுவாய்  ஓரிடத்தைப் புள்ளியாகக் கொண்டால் மட்டுமே எண்திசைக் குறிப்பு நடைமுறையில் தேவை. சங்க இலக்கியத்தில் எண்திசைக்  குறிப்புகளைக் காண்பது மிக மிக அரிது.  எனக்குத் தெரிந்தவரை சங்க இலக்கியத்தில் நால்திசைக் குறிப்பேயுண்டு.

வடிவியலின் (geometry) படி நாற்றிசை முறையில், குறித்த இடத்தில் கீழ்மேல் கோடிட்டுப் பின் (இதைச்செய்யச் சூரியநிழல் காட்டும் விழுவங்குச்சி - கடிகைநேரம் காண உதவுங் குச்சி- தேவை), அதன் குத்துச் செங்கோணத்தில் (90 degree) வடதென் திசையையும், இதேபோல் வடதென் கோடிட்டு, கீழ்மேல் திசைகளையும் குறிப்பார்.  அப்படித்தான் சங்க காலத்திலும் குறித்துள்ளார்.  இன்றுங் கூட அதிகார முறையில், பதியும் நம் வீட்டுமனை ஆவணங்களில் நால்திசை எல்லை அடையாளங்களே குறிப்பிடப்படும். எண்திசைக் குறியீட்டை நான் அதிலும் கண்டதில்லை. அற்றை நிலை வடிவியலின் வளர்ச்சி நிலையைப் புரிந்து கொள்ளாது, இற்றை வடிவியலின் வழி நாம் பெற்ற அதிக அறிவைக் கொண்டு, எண்திசைகளைத் தேடுவது போகாவூருக்கு வழி கேட்பதையே ஒக்கும்.  அது வரலாற்று ஆய்வாகாது.



சரி, ஊர்ப்பெயர் விளக்கம் பார்ப்போம். பிடவூரென்பது தொடக்கத்தில் பிடவம் பூவால் (Randia malabarica; பிடவு, பிடா) ஏற்பட்டிருக்கலாம். (பாடல் விவரிப்பு மருதத்தில் தொடங்கும். இன்றும் பிடவூரில் மருதம் ஓங்கியே நிற்கும். பூச்சிறப்பால் பெயரெழுந்தது வியப்பில்லை.) ஆனால் இன்று ஊரின் சிறப்பாய் யாரும் பிடவம்பூவைச் சுட்டுவதில்லை.  இன்னொன்றும் ஊகிக்கிறோம். பிடவம்> பிடகம் = கூடை என இன்னொரு பொருள் மக்களின் புரிதலுக்கு வந்திருக்கலாம்.  பிடகம்,= கூடை என்பது மூடப்பட்ட பெட்டகமாய்ப் புரிந்து கொள்ளலாம். பெட்டு> பெட்டகம் என்பதால் திருப்பிடவூர் திருப்பெட்டூர் ஆகி முடிவில்  இன்று திருப்பட்டூர் ஆகலாம். 

ஏனெனில் (எந்தப் பழங்கல்வெட்டும் இல்லாத, காலத்தால் மிகப்பிற்பட்ட) பிரமபுரீசர் கோயிலைத் தவிர்த்து, (கல்வெட்டுகள் பல நிறைந்த, குறைந்தது இரண்டாம் இராசேந்திரன் காலஞ்  சேர்ந்த) அரங்கேற்ற ஐயனார் கோயிலே ஊருக்குச் சிறப்புத் தரும் உண்மை நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இதுவும் தெரியாமல் ”உங்கள் தலையெழுத்தை மாற்றலாம்; ஓடிவந்து பிரமபுரீசரைத் தெரிசியுங்கள்; உங்களுக்கு எல்லாமே கிடைக்கும்” என்றுரைத்து ”சோதியம், அது இது” என மக்களை அலைக்கழிப்பதே இன்று அங்கு மிகுதி. பெருங் கூட்டம் கூடும் பிரமபுரீசர் கோயிலுக்குப் போகும் வழியில் அரங்கேற்ற ஐயனாரைப் பார்ப்பது ஏதோ உப்புக்குச் சப்பாணி போல் அமைகிறது. காலம் ‘கலிகாலம்’ இல்லையா? :-))).) பிடவூரின் மூலவர் ஐயனார் என்பதை இன்று பலரும் மறந்து விட்டார் போலும்.  இன்னொரு செய்திக்கு வருவோம்.

பிடவூர்ப் பெயர், வெறும் சிற்றிலக்கியம் சார்ந்த, சேரமான் பெருமாள் நாயனார் உரைத்த ”உலா” நூலை கி.பி. 728 க்கருகில் இங்குள்ள 18 கால் மண்டபத்தில் சாத்தனார் அரங்கேற்றினார் என்ற கருத்தும் சரிதானா? 96 வகைச் சமய நூல்களையும், 96 வகைச் சிற்றிலக்கியங்களையும் மாற்றிப் புரிந்து கொண்டு, நம்முன் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது. ஏனெனில் பிடவூர்ப் பெயர் சேரமான் பெருமாள் நாயனாருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னே கூட இருந்துள்ளது. ஒருவேளை 96 வகையான சாத்தனார் வழிச் சமயநூல்கள் இங்கு தொகுதியுற்றனவோ? புத்த நெறியின் தொகுப்புகளான தம்ம, வினய, அபிதம்ம பிடகங்கள் மகதத்தில் தொகுக்கப்பட்டது போல் 96 நூல்கள் சேர்ந்த தொகுப்பாய், அற்றுவிகப் பிடகம் ஒன்று இங்கு தமிழகத்தில் தொகுக்கப்பட்டதோ? தெரியாது.

அதே பொழுது, பிடவூர் என்பது ஐயனாரின் ஊர் தான் என உறுதிசெய்வதாய் சில கல்வெட்டு வாசகங்கள் ஐயனார் கோயிலில் உள்ளன. “திருப்பிடவூர் நாட்டுத் தேவதான பிரமதேயந் திருப்பிடவூர் உடைய பிள்ளையாற்கு” என்பது ஒரு வாசகம்.  “திருப்பிடவூருடைய பிள்ளையார்” என்பது ஐயனாரைக் குறிக்கிறது. (இன்னொரு செய்தியும் கல்வெட்டில் வெளிப்படுகிறது. புறநானூற்றுக் காலத்தில் வேளிர் குடும்பத்திற்குச் சொந்தமான ஊர்,  சோழப் பேரரசர் காலத்தில் பெருமானருக்குப் பிரமதேயமாய்க் கொடுக்கப் பட்டது போலும். இப்பெருமானர் 3001 பேர் என வேறொரு கல்வெட்டால் தெரியவரும். அப்படியெனில் முழுவூரும் பெருமானருக்குப் போய்ச் சேர்ந்தது. அதன்பின் அவர் பிரம்மபுரீசர் கோயிலை எழுப்புவது இயல்பு தான். ஆனாலும் ஐயனார் தொடர்பை முற்றிலும் ஒதுக்க முடியாது, சிவன் கோயிலோடு ஓட்டிவைத்துக் கொண்டார் போலும். 

அடுத்துச் சுந்தரபாண்டியன் 5 ஆம் ஆண்டுக் கல்வெட்டில், ”தேவதானம் பிரமதேயம் திருப்பிடவூர் உடையார் திருமண் தவமுடைய நாயனாரும்” என்றும், 3 ஆம் இராசராசன் கல்வெட்டில் “திருப்பிடவூர் நாட்டுத் தேவதானப் பிரமதேயம் திருப்பிடவூர் உடையார் திருமண்டபமுடையார் கோயில் கூத்தாடுந் தேவர்” என்றும், வீரபாண்டியன் கல்வெட்டில், ”திருமண் தவமுடைய நாயனார்” என்றும், இன்னொரு கல்வெட்டில், “திருமண் தவஞ்செய்த நாயனார்” என்றும் வாசகங்கள் பயில்வதைக் காணின், பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் பிரமதேயம் எழுந்தபிறகும், அவ்வூரில் சாத்தனார் பிறந்தது கொண்டாடப்பட்டே வந்துள்ளது. தவிர, ஒரு கல்வெட்டில் வரும் ”கூத்தாடும் தேவர்” ஐயனாரின் அடையாளங் காட்டும். இக்காலத்தில் நடவரசனை இது குறித்தாலும், சங்ககாலத்திலும், அதற்கு முன்னும் மற்கலியைக் குறிக்கும். இசை, நாட்டியம், பாடல் என எதையும் ”தான் சமய நிறுவனன்” என்பதற்காக மற்கலி நிறுத்தவேயில்லை. இறப்பிலும் கூட ஆட்டம், பாட்டத்தைத் தொடரச் சொன்னார். இப் பழக்கத்தாலும் கூட, மற்ற 2 சமண நெறிகளால் அற்றுவிகம் இழித்துரைக்கப்பட்டது.     

அன்புடன்,
இராம.கி.

No comments: