Sunday, January 19, 2020

பாசண்டச் சாத்தன் - 12

இனிப் பூரணை, பொற்கலை எனும் 2 மனைவியரைப் பார்ப்போம். இருவரும் இந்திரன் மக்களென முன்சொன்னது, பெரும்பாலும் பழன (புராண) வழிப் பட்ட  புனைவுத்தியாகவே தெரிகிறது. ஏனெனில் பெரும்பாலான பழனங்கள் சான்றிலாக் கற்பனையே பேசும். மற்கலி கோசாளர் ஒரு துறவியா என்பதும் ஆய்விற்குரியதே. கி.மு.800-600 களின் முனிவர் போல் அவர் தெரிகிறார். பழங்கால வேதமுனிகளுக்கு குருபத்தினிகள்/ மனைவிகள் இருந்தது போல் வேதமறுப்பு அறிவருக்கும் இருந்திருக்கலாம், வேதமறுப்பார் எல்லோருமே துறவிகள் என்பது ஒருபால் கோடுதல் ஆகும். மகாவீரர், புத்தரிடமிருந்து கோசாளரை வேறுபடுத்திக் காட்டுவது ”ஹாலாஹலா” என்ற பெண்ணோடு அவர் தொடர்புற்று வாழ்ந்ததே. அக்குயவர் பெண்ணை தாசியென்று கூடப் புத்த, செயின ஆவணங்கள் பழித்துரைக்கும்.

இந்நிலை ஏசு கிறித்துவிற்கும் எழுந்தது. கடைநாள் வரை ”மேரி மக்தலேனா” அவர் வரலாற்றில், ஏனென்று தெரியாதபடி வருவாள். அவளுக்கும் ஏசுவுக்கும் என்ன உறவு? - என்பதும் தெரியாது. பிற்றைக் கத்தோலிக்கமும், ஏசுவின் சீடரும், அவளைத் தாசியென்பர். ஆங்காங்கு அவளைக் கதையில் தொட்டு, அதே போது ஒதுக்கி, விவிலியப் புத்தாகமம் (New Testament) செல்லும். ( கி.பி 500 க்கு முந்தைய, கத்தோலிக்கம் வலிமை பெறுவதற்கு முந்தைய) பல்வேறு ஆவணங்களை ஆய்ந்து, ”மரபார்ந்த யூதத்தை மாற்ற விழைந்த  யூதகுரு (Rabbi) போல் ஏசு இல்லற வாழ்வு நடத்தினார்” என்று சில ஆய்வர் சொல்வர். மேரி மக்தலேனாவை சீடப்பெண், மனைவியென்றுஞ் சொல்வர். (கிறித்துவ உலகில் 100 க்கு 98 பேர் இதை ஏற்றதில்லை.) இயேசுவைக் குறுக்கில் (cross) அறைந்தபின் உரோமர், மரபுசார் யூதகுருமார் கையில் சிக்காது மேரி மக்தலேனாவும், ஏசுவின் குழந்தைகளும் தப்பி பிரான்சுக்கு ஓடியதாக ஒரு நுணவ (minority) மரபுண்டு.

மற்கலி வாழ்விலும் இதுபோற் கதையுண்டு. ”ஒழுக்கங் குறைந்து, தாசி ஹாலாஹலா வீட்டில் மற்கலி தங்கினார்” எனப் புத்த, செயின ஆவணங்கள் சொல்லும். ”புது நெறி போதித்தவர் ஒழுக்கக் குறைவோடு இருக்க வாய்ப்பு இல்லை” என்ற ஏரணத்தையும், அவரைநாடிப் பல்லாயிரவர் திரண்டாரென அதே ஆவணங்கள் கூறுவதையும் பார்த்தால், ஒரு வேளை ஹாலாஹலா மற்கலியின் மனைவியோ? - எனுஞ் சிந்தனை எழுகிறது. ஏனெனில் புத்தரோடும், மகாவீரரோடும் ஒப்பிடப்படும் ஒருவர் துறவு பூணாததே அவரின் பின்பற்றிகளுக்கும், எதிரிகளுக்கும் சங்கடம் விளைத்திருக்கும். (நம் காலத்தில் நடந்த பெரியார்- மணியம்மை திருமணமும் இதுபோல் ஒரு சிக்கலைப் பலருக்கும் உருவாக்கியது. அத் திருமணத்தால் பெரியாரைப் பழித்தோர் ஏராளம். அதில் பின்பற்றிகள், எதிரிகள் என இருவருமுண்டு.)

சரி, அது என்ன விந்தைப்பெயர் ஹாலாஹலா? - எனுங்கேள்வி அடுத்தெழும். நிலவின் வாகு நிலையைக் (phases of moon) கலை, திகழி>திதி என்று தமிழில்  சொல்வார். 30 திகழியில் முதற்கலை, அமையுவா (=அமாவாசை) என்றும், 15 ஆம் கலை பூரணை (=பௌர்ணமி) என்றும் சொல்லப்படும்.  முழுவொளி பெற்ற பூரணை நிலவு நாள், பொல்+ கலை= பொற்கலை ஆகும். இதைப் பால் நிலவென்றுஞ் சொல்வர். கன்னடப் பலுக்கில் ”பால்” ஹாலு ஆகும். (தக்கணப் பாதையின் தெற்குநீட்சி  கருநாடகவழி தான்.) தமிழியப் பலுக்கலில் ஈர் உயிருக்கு இடைப்பட்ட ககரம் இயல்பாய் மெலியும். எனவே இரு திரிவையும் சேர்த்துப்பார்த்தால் பொற்கலை= பால்கலை> ஹாலுகலா> ஹாலுஹலா> ஹாலாஹலா என்று வடக்கே சொல் போகையில் நடக்கக் கூடியதே. நான் புரிந்துகொண்ட வரை பொற்கலையும் பால்கலையும் ஹாலாஹலாவும் ஒன்றே.

பூரணை எனும் இன்னொரு தேவி பற்றி அறியப் பூரணகாயவர் பற்றி அறிய வேண்டும். மற்கலிக்கு மூத்தவரான பூரணர் மற்கலியின் அறிவர்பணியில் இரட்டை போலவே இயங்கினார். (புத்த நூலான சம்யுக்த நிகாய வழி இதை விளங்கிக் கொள்கிறோம்.) மற்கலியின் நியதி வாதமும், பூரணரின் இயல்பு வாதமும், பக்குடுக்கைக் கணியாரின் அணுவியமும் ஒன்று சேர்ந்தே அற்றுவிக நெறி எழுந்தது. மற்கலியின் பணிக்கால நடுவில் பூரணர் இறந்து போனார். ஆனால் அற்றுவிக முழுமைக்குக் காட்டு யாரெனக் கேட்டால், எல்லோரும் பூரணரையே அடையாளங் காட்டுவர். இது செயின ஆவணங்களின், புத்த ஆவணங்களின் வழி பெறப்படும் செய்தி. 

கி.பி. 450 இல் எழுந்த மணிமேகலையிலும், நீலகேசி (கி.பி.900) , ஹரி பத்ராவின் ”சத்தர்சன சமுச்சயம்” என்ற புத்தநூலின் உரையான குண ரத்னாவின் ”தர்க்க ரகசிய தீபிகா” நூலிலும் ( கி.பி1400 ) பூரணரின் நுண் மாண் நுழைபுலம் (பூரண அறிவு = எல்லாம் அறிந்த நிலை) விதந்து பேசப் படும். ஒருவேளை 96 வகை வேதமறுப்பு நூல்களை அவர் கரைத்துக் குடித்திருந்தார் போலும். அதனால் தான் இந்த இலக்கியங்களில் வரும் ஆசீவிக வாதங்களுக்கு அவரே முன்னவராகிறார். பூரணர், பழந்தமிழில் இயற்பெயராகத் தெரியவில்லை. காரணப் பெயராகவும் பட்டப்பெயராகவும் (title) தெரிகிறது,  குணமும் குணியும் (குணமுள்ளவர் குணி) பிரிக்க முடியாதன என ஆசீவகம் சொன்னதாய் ”மேகலை” சொல்லும். காயவர்> காசபர் (kAssapa) குடிப்பெயராகலாம்.  பூரணர் இருப்பிடமாய் குக்குடமாநகர் (குக்குடம் = கோழி. உறையூர் = கோழியூர்>சோழியூர்) சொல்லப்படும். முன்சொன்ன பிடவூருக்கு அருகில் இப்பெருநகர் உள்ளது.

குணம்/ குணி என்ற எடுகோளில் ”குணம் எவ்வகையிலும் ஆளுமைப் படுத்தப்படலாம்.” பிற்கால ஆசீவிகரிடம் பூரண ஆணாளுமை மறைந்து பெண்ணாளுமையாய் அது உருவகிக்கப் பட்டது போலும். பூரணை என்ற தேவி, கோசாளருக்கு அணிமையாய், பூரணத் தன்மையோடு உருவகிக்கப் பட்ட வடிவம். விண்ணவத்தில் பெருமாளை உருவகிக்கும் போது ஒரு பார்வையில் இலக்குமன், இராமன், சீதை எனவும்,  இன்னொரு பார்வையில்  (இலக்குமி என்ற) சீதேவி,  இராமன், பூதேவி எனவும் அமையும். (தென்னக விண்ணவத்தின் மறுபளிப்பான) வட பாகவத சமயத்தில் இராம, இலக்குவ சீதை பாவமே பலருக்கும் முன்வரும் வடிவு. சத்தியபாமா, கண்ணன், உருக்குமினி படிமம் அவரில் குறைந்திருக்கும். இதற்கு மாறாய்த் தெற்கே சீதேவி, பூதேவி, பெருமாள் சேர்ந்த படிமம் அதிகமாயும், இலக்குமன், சீதை, இராமன் சேர்ந்த படிமம் குறைவாயும் விரும்பப்படும்.

பொதுவாகத் தெற்கே, எப் படிமத்திற்கும் 2 தேவியர் என்ற கருத்தீடு ஊடுவருவது அதிகம்.. பிள்ளையாருக்குக் கூடச் சித்தி, புத்தி அடையாளங் காண்பர். எனவே பூரணரைப் பூரணையாகப் படிமங் கொள்ளும் கருத்தீடு தென்னகத் தாக்கம் கொண்டது. பூரணை, புட்கலை பற்றிக் கந்த புராணத்தில், கச்சியப்பர்,

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்பார். சில ஐயனார் கோயில்களில் 2 தேவியரின்றி ஐயனார் திருநிலை தனியாக உண்டு. சிலவற்றில் அகவை முதிர்ந்த தோற்றமும், சிலவற்றில் புனிற்றிளமைத் தோற்றமும் காட்டப்படும். பின்னால் 13/14 ஆம் நூற்றாண்டில் ஆசீவிக நெறி இடந்தெரியாமல் அழிந்தபின், புனிற்றிளம் தோற்றங் காட்டும் பந்தள நாட்டின் ஐயப்பன் கதை ஏற்றப்பட்டது போலும். அது எப்படி, ஏன் நடந்தது? - என்ற ஆய்வை நான் செய்ததில்லை. யாராவது செய்தால் சிறக்கும். கட்டாயம் அது பின்னால் வந்த கதை.

அன்புடன்,
இராம.கி.

No comments: