Tuesday, January 21, 2020

பாசண்டச் சாத்தன் - 14

இதுவரை ஐயனார் கோயிலின் பல்வேறு உறுப்புகளைப் பார்த்தோம். இனிப் பிடவூர் ஐயனார் கோயில் கல்வெட்டுகளுக்குள் போகவேண்டும். அதற்கு முன்,  பிரமபுரீசர் கோயிலையும் அதிலுள்ள பிரமன் படிமம் பற்றியும் பார்க்கும் தேவையுள்ளது. ஏனெனில் அங்குள்ள பெருமாண்ட பிரமன் சிலைக்குள் விடை தெரியா சூழ்க்குமம் ஏதோ இருப்பதுபோல் தோற்றுகிறது.  திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லூர் வட்டம் சமய புரத்திலிருந்து 15 கி.மீ. இலும், சிறுகனூருக்கு 4 கி.மீ. வட மேற்கிலும் திருப்பட்டூர் என்ற திருப்பிடவூர் உள்ளது. ஊரின் வடகிழக்கில் மிகப் பிற்காலத்தைய, சிற்பத் தோரணை பார்க்கின் விசயநகரக் காலம்போல் தோற்றும், பிரமபுரீசர் கோயிலே ஓங்கி நிற்கும்; முகனமாய்க் காட்சி யளிக்கும்

அருகே தென்கிழக்கில் சிறுகனூர்ப் பாதையில்  அரங்கேற்ற ஐயனார் கோயிலும், வடமேற்கில் பிடாரி கோயிலும், அருகே காசி விசவநாதர் கோயிலும், மேற்கில் வரதராசப் பெருமாள் கோயிலும் உள்ளன.  பிரமபுரீசர் சுற்றாலைக்குள் (ப்ரகாரத்தில்) காலத்தால் முற்பட்ட கயிலாசநாதர் கோயிலும் உண்டு. பதஞ்சலி, வியாக்ரபாதர், காசியபர் ஆகிய முனிவரின் முத்தித் தலமென முனைந்து மருட்டும் சுற்றுலாக் கையேடுகள் ”இது சாத்தன் பிறந்த ஊர்” என்று பெருமிதத்தோடு ஒருபோதுஞ் சொல்லா.  ”பிரமனை வழிபடின், உமக்கு மங்கலவாழ்வு தருவான்; உங்கள் தலையெழுத்தையே அவன் மாற்றிவிடுவான் ” என்ற பரப்புரையில் மக்கள்கூட்டம் பெருக்கு எடுத்து நிறையும் பிரமபுரீசர் கோயிலை முதலிற் பார்ப்போம்.

தன்னை மதியாப் பிரமன் தலையைச் சிவன் கொய்து தண்டித்தபின், பிரமன் சிவனிடமே கழிபேற்று வழிகேட்க, திருப்பட்டூரில் கிட்டுமெனப் பணிக்கப் பெற்றபின், உரிய காலத்தில் பிரமபுரீசர் பிரமனுக்கு அருள்செய்தாரெனத் தலப்பழனம் சொல்லும். இத்தொன்மத்தால், பிரமபுரீசரோடு, பிரமனும் இங்கு  முகனமுறுவான். கருவறை சுற்றும் கோட்டத்தில் ( = கன்னத்தில் இடுக. கோட்டமென்று தமிழில் சொல்லிவிட்டேன். ”சாமி கோச்சுக்கப் போறார்”. கோஷ்டமென்று சங்கதத்தில் சொன்னால்தான் அவருக்கே புரியுமாம்) தக்கண மூர்த்தி, தனித் திருநிலை (=சந்நிதி)ப் பிரமன்,  விண்ணவன் ஆகியோரைக் கும்பிட்டு, பின் மூலவரைத் தெரிசிக்க வேண்டுமென்பார். பங்குனி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் சூரியக் கதிர்கள் பிரம்மபுரீசர் மீது படும்படி இங்கு கருவறை அமைப்பு உள்ளது. ”குருக்”கோளின் தேவதை பிரமன் என்பதால், வியாழக்கிழமை இக்கோயிலில் விதப்பானது.


இங்குள்ள 6 1/4 அடி உயர, பெருமாண்ட பிரமன் சிலை நம்மை வியக்க வைக்கும். ஏனெனில் எந்தச் சிவன்கோயிலிலும் அவ்வளவு உயரச்சிலை காண்பதரிது. அதேபோது ஆழ்ந்து காணின், கருங்கல்லாலான பிரமன் நெஞ்சின் கீழ்ப்பகுதி அப்படியே ஒரு புத்தன், செயினன், சாத்தன் உருவை ஒக்கும். (முழுச் சம்மணமிட்ட ஐயனார் உரு அரிதாகச் சிலவூர்களில் மட்டுமே உண்டு. பெரும்பாலான ஐயனார் கோயிலிற் சாத்தன் திருமேனி இட/வலக் காலை மடித்து பாதிச்சம்மணம் இட்டபடியும், இன்னொரு வல/இடக் காலைப் பீடத்திலிருந்து தொங்கவிட்ட படியுமிருக்கும் . இடம்/வலம் என்பது ஊருக்கு ஊர் வேறுபடலாம். )  தவிர, பிரமனுக்கு நாலு தலை காட்டும் அமைப்பும், தலைமுடிச் சடைமகுடமும், கருங்கல்லோடு இழைத்த சுதையுரு போலவே காட்சியளிக்கும்.  பிரமனை வழிபடுவோர் யாரும் இதுவரை அவன் உருவை நெருங்கிப் போய்ப் பார்த்ததேயில்லை.  சற்று தள்ளியே நிற்கும்படி அங்கு நடைமுறையுள்ளது. உண்மை அங்குள்ள குருக்களுக்கு மட்டுமே தெரியும். 

சுதைவேலையை மூடுமாப் போல் , ஒவ்வொரு வியாழக்கிழமை பூசையிலும் பிரமனுக்கு மஞ்சள் காப்பிட்டு ஒருவாரம் அது தொடர்ந்திருக்கும். பிரமனுக்கு புளியோதரை படைத்து, வந்தோருக்கு மஞ்சள் பெருஞ்சோறும் (ப்ரசாதமும்) தருவார். பிரமன் வழிபட்ட பழமலை நாதர், கந்தபுரீசர், பாதாள ஈசர், மண்டூக நாதர், தாயுமானவர்,  ஏகாம்பரேசர், அருணாசலேசர், கயிலாச நாதர், சம்பு கேசர், காளத்தீசர், எழுமுனியீசர், தூய மாமணி ஈசர்  போல் 12 இலிங்கங் களுக்கும், பிரமபுரீசருக்கு எதிரிலுள்ள நந்திக்கும், கோயிலின் மற்ற பரி வாரங்களுக்கும்  மஞ்சள் வட்டுடைகளையே (வஸ்திரங்களையே) அணிவிப்பார். கோயில் முழுதும் மஞ்சள்நிறம் தெறித்து நிற்கும்.

[வட்டுடை பற்றிய இடைவிலகலுக்குள் போகவேண்டியுள்ளது. வள்ளெனும் வேரில் சாய்வு, வளைவுச் சொற்கள் பிறக்கும். வள்+து= வட்டு= சுற்று.  உடலைச் சுற்றிக் கட்டும் துணியை வட்டு என்பது தஞ்சை வழக்கு,  வட்டம்= சுற்றாடை; “வாலிழை வட்டமும்”- பெருங்கதை. உஞ்சைக் காண்டம் 42, 208.   வட்டுடை= முழந்தாளவு சுற்றிக்கட்டும் உடை.. “அந்நுண் மருங்குல் இகந்த வட்டுடை ”- மணிமே. 3, 122.  அரைக்காற் சட்டையையும் கூட வட்டுடை என்பார். வட்டின் நீட்சியான வாட்டு என்பது வளைவு, சாய்வு. gradient ஐக் குறிக்கும். (”நீர்வாட்டுச் சரியாய் உள்ளதால் நீரிங்கே தேங்காது, ஓடிவிடும் ”) உடலைச் சுற்றி வாட்டிக் (=வளைத்துக்) கொள்ளும் துணி வாட்டியாகும்  அகரச் சொற்கள் பேச்சுவழக்கில் எகரமாவது உண்டு. கட்டு>கெட்டு, பலம்> பெலம், பருத்தல்>பெருத்தல். இது நெல்லை வழக்கு. இதுபோல் வாட்டியும் பேச்சுவழக்கில் வேட்டியாகலாம். சுற்றிக் கட்டுவது வேட்டி. (வெட்டப்பட்டது வேட்டி என்பது சரியல்ல. நானும் அறியாது ஒருகாலம் சொன்னதுண்டு.)

இன்னொரு வகையில் வட்டம், பாகதத்தில் ”வட்ட”வாகிச் சங்கதத்தில் வத்த> வஸ்த>வஸ்த்ர ஆகும்.  vest என ஆங்கிலத்தில் சொல்கிறாரே அதுவும் இதன் தொடர்புடையதே. ஆங்கிலத்தில் அகரம் எகரமாகியதைப் பாருங்கள். “என் ஜன்னலுக்கு வெளியே” என்றுவரும் குமுதத்தொடரில்  எழுத்தாளர் மாலன் , வஸ்திரம்> வேட்டி எனத் தலைகீழாய்ச் சொல்வார்.  ”வேட்டி தமிழில்லை. கடன் வாங்கியது” எனும் ஓட்டல்கள் நாம் ஏமாறும் வரை இப்படி எழத் தான் செய்யும். காரணம்,  நம்மில் பெரும்பாலோர் நம் சமயங்களின் தமிழ்மையை மறுத்துக் கோயில்களை விட்டேநகர்ந்து, ”திராவிடமென” ஒதுங்க முற்படு வதால், அதன் வெற்றிடத்தில் ”இந்துத்துவச் சங்கதச் சாயல்” ஓடிவந்து உட்காரவே செய்யும். நண்பர்களே! நம் சிவ, விண்ணவ நெறிகளின் தமிழ் ஆழத்தை அருள்கூர்ந்து உணர்க. நம் கோயில்களைச் சங்கதத்திற்குத் தாரை வார்க்காதீர்.  அற்றுவிகம் பற்றி நானிங்கு எழுதுவதும் இதன் தொடர்பாகவே.

பிரமபுரீசர்  வளாகத்திலுள்ளேயே இருக்கும் கயிலாசநாதர் கோயில் பிரமபுரீசர் கோயிலுக்கும் முந்தையது போல் தெரிகிறது. ஏனெனில் அது 2 ஆம் நரசிம்மவர்மன் (கழற்சிங்க நாயனார்; கி.பி 695 - 722) உருவாக்கிய காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் போல் தோற்றங் காட்டுகிறது,  மகேந்திரவர்மனால் எழுப்பப்பட்ட திருச்சி லலிதாங்குரன் குடவரையையும், தந்திவர்மன் காலம் (கி.பி. 795-846) எழுந்த. திருவெள்ளறைக் கோயிலையும், வெள்ளறையிலுள்ள முற்றுப்பெறாத பல்லவர் குடவரையையும். திருச்சி புள்ளம்பாடி வட்டம் ஆலம்பாக்கத்தில் தந்தி வர்மன் நினைவாய் உருவாக்கப் பட்ட சதுர்வேதி மங்கலத்தையும் ஓர்ந்து பார்க்கையில்,  பெரும்பாலும் திருப் பிடவூர் தேவதானப்  பிரமதேயம் என்பது 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்மனுக்குச் சற்றுமுன் எழுந்திருக்கலாமென்று தோன்றுகிறது. இச் சதுர் வேதி மங்கலத்தில் 3001 பேர் உறுப்பினரென இங்குள்ள கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. 

திருப்பிடவூர் என்ற ஊர் போக, குறுக்கை (இப்போது பெரிய குறுக்கை) திங்களூர், பெருங்கோனூர் எனும் பிடாகை (பெருங்கனூர்; பிடாகை = ஒரு பெரியவூரின் நீட்சி/suburb), பெருமக் குறிச்சி/பிரமக் குறிச்சி, மூவாயிர நல்லூர், பெருமா நத்தம், சிறுகோனூர் (சிறுகனூர்), மழவரையக் குறிச்சி யான நரசிங்க நல்லூர், குமரன் குடி, சனநாத நல்லூர், (கல்பாளையம்), பாதங் குளத்து ஏந்தல், சனமங்கலம் (சனமங்கலம்), தெற்றி குறிச்சியான அநபாய தேவ அரசநல்லூர், பாலையூர் (எதுமலைப் பாலையூர்), ஆகாரவல்லி (ஆவார வல்லி), மாங்குடி (ரெட்டிமாங்குடி) போன்ற பல ஊர்கள் அடங்கிய பிடவூர் நாடு என்ற தொகுதியும் கல்வெட்டுகளில் பேசப்படுகிறது. (பிடவூர் நாட்டைச் சேராப் பலவூர்களும் இவற்றில் வருகின்றன.) பிடவூர்நாட்டு ஊர்களில் பலவும் கி.பி. 700க்கு அப்புறமான பெருமானர் தொடர்பைக் காட்டுகின்றன. 

அதேபொழுது இவ்வூர்க் கோயில்களில் எதிலும் பல்லவர் கல்வெட்டுகளைக் காணவில்லை.  ஆனால், அப்பர் தேவாரமும் [”தெய்வப் புனற்கெடில  வீரட்டமும் செழுந்தண் பிடவூரும் சென்று” என்ற (6-7-6) ஆம் பாடல் வரி; ”ஆரூர் மூலத்தானம்  ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும்” என்ற (6-70-2) ஆம் வரிகள்] , சுந்தரர் தேவாரமும் [“அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேரருளாளன் பிடவூரன் தம்மானே தண்டமிழ் நூற் புலவாணர்க்கு ஓர் அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே” என்ற (7-96-6) ஆம் பாடல்] தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாய்ப் பிடவூரைக் காட்டும். தேவாரத்தால் இறைவன் பெயர் பிடவூரன் என்று தெரிகிறது. எனவே பிடவூர்ச் சிவன் கோயில் தோற்றத்தை மகேந்திர வர்மன் I காலத்திற்கு (கி.பி. 600–630) அருகிலும் கொண்டுபோகலாம்.

ஒருவேளை கயிலாசநாதர் கோயிற்கருகில் பிடவூரன் கோயில் சிறு மண் தளியாய் இருந்து, பின் சோழர் காலத் தொடக்கத்தில் திருவனந்தீசன் கோயிலாகி, அடுத்துக் குலோத்துங்க சோழன் காலத்தில் அநபாய ஈசன் கோயிலாகி, விசயநகரக் காலத்தில் பிரமபுரீசர் கோயிலாய் மாறியது போலும். பிரமபுரீசர் கோயிலுக்குள் எந்தப் பழங்கல்வெட்டும் இதுவரை  காணவில்லை. பிரமபுரிசர் கோயில் குளத்தருகேயுள்ள எழுமுனி ஈசர் (சப்தரிஷீயீசர்) திருநிலை வாயில் நிலைக்கல்லிலுள்ள விக்கிரமசோழன் கல்வெட்டில், , “இவ்வூர் திருவனந்தீஸ்வரமுடைய மகா தேவர்க்கு” என வருவதால், ஈசன் பெயர் தெரிகிறது. அனந்தீசன்= எல்லையற்ற ஈசன். பிரம்மம் எல்லையற்றது என்பதால், பிற்காலத்தில் பிரமபுரீசரென்று பெயர் மாற்றினார் போலும். எல்லா இடங்களில் தேடினாலும் பெரிய பிரமன் சிலை விசயநகர காலத்திற்கு முன்னால் இக்கோயிலுள் இருந்ததற்கு  எந்தச் சான்றுமில்லை.  இனி ஐயனார் கோயில் கல்வெட்டுகளுக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: